news-details
ஆன்மிகம்
“மிலானுக்குப் போ!” (கண்டனையோ, கேட்டனையோ! – 25)

கடந்த டிசம்பர் 7-ஆம் நாள் உரோம், புனித பேதுரு பேராலயத்தில், போப் பிரான்சிஸ் புதிதாக 21 கர்தினால்களை உருவாக்கினார். தெஹ்ரான், டோக்கியோ, டொரோன்டோ என்று உலகின் பல்வேறு இடங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் புதிய உறுப்பினர்களில் கர்தினால்கள் அவையின் மிக வயதான கர்தினாலும் (ஆஞ்செலோ அச்செர்பி), மிக இளமையான கர்தினாலும் (மிக்கோலா பைச் சோக்) அடங்குவர். அச்செர்பிக்கு வயது 99. வத்திக்கானின் தூதராகப் பல நாடுகளில் பணியாற்றிவிட்டு, 2001-இல் ஓய்வுக்குப் பின், வாசிப்பு, இறைவேண்டல் என்று இருந்தவரை கார் அமர்த்தி அழைத்து வந்து, கர்தினால் பட்டம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். 99 வயதில் ஒரு மனிதரின் அதிகபட்ச ஆசை, ‘இன்னும் ஒரு நாள் உயிரோடு இருப்பதுஎன்பதாகத்தான் இருக்கும். அச்செர்பிக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த ஆச்சர்ய கர்தினால் பட்டம், அவர் திரு அவைக்கு ஆற்றிய மிக நீண்ட கால தூதரகப் பணிகளுக்கான ஓர் அங்கீகாரம் என்று வத்திக்கான் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

கர்தினால் மிக்கோலாவிற்கு வயது 44 (நான் அந்த வயதில்தான்பங்குத்தந்தைஆனேன்). அவர் உரோமன் கத்தோலிக்கத் திரு அவையோடு முழு ஒன்றிப்பில் உள்ள உக்ரேனியன் கிரேக்கக் கத்தோலிக்கத் திரு அவையைச் சார்ந்தவர். உக்ரைன் நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அங்கு அருள்பணியாளராகப் பணியாற்றியவர். நான்கு வருடங்களுக்கு முன்புதான் பிரான்சிஸ் அவரை ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் நகருக்கு ஆயராக நியமித்தார். இப்போது கர்தினால் பட்டம். “இது எனக்கான பெருமை அல்ல; என்னுடைய துன்புறுத்தப்படும் திரு அவைக்குக் கிடைத்த பெருமைஎன்று மிக்கோலா கூறுகிறார். அவரின் கர்தினால் நியமனத்திற்கு ஓரங்களிலும், தூரங்களிலும் உள்ள திரு அவை மீது பிரான்சிஸ் கொண்டுள்ள கரிசனையே காரணம்  என்று சொல்லப்படுகிறது

ஒரு காலத்தில் கர்தினால்கள் அவையில் இத்தாலி நாட்டவரே ஆதிக்கம் செலுத்தினார்கள். திருத்தந்தையர்களில் நிறையப் பேர் இத்தாலி நாட்டவரே. பிரான்சிஸ்  இதை உத்திரவாதமாக மாற்றி அமைத்துள்ளார். கடந்த பதினோரு ஆண்டுகளில், அவர் உருவாக்கிய 142 கர்தினால்கள், 70 நாடுகளிலிருந்து வந்துள்ளார்கள். ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற கண்டங்களின் மிஷனரி திரு அவைகளுக்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கின்றன. கர்தினால்கள் அவை உண்மையிலேயே ஓர் உலகளாவியத் தன்மை பெற்றுள்ளது. A truly global College of Cardinals!

தற்போது கர்தினால்கள் அவையில் மொத்தம் 253 பேர் இருக்கிறார்கள். இதில் 80 வயதுக்கு உள்பட்டவர்கள் 141 பேர். பிரான்சிசுக்கு அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வாக்குரிமை பெற்றவர்கள் இவர்களே. இந்த 141 கர்தினால்களில், 111 பேர், அதாவது, நாளையே ஒரு கான்க்ளேவ் (conclave) கூட்டப்படுமானால், அதில் பங்கெடுக்கும் தகுதி பெற்ற கர்தினால்களில் 79% பேர் பிரான்சிஸால் நியமிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். எனவே, பிரான்சிஸ் அவர்களின் சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று நம்பலாம்.

கர்தினால்கள் பற்றி சில பொதுவான தகவல்கள் இங்கே:

கர்தினால்கள் திரு அவையின்இளவரசர்கள்என்று குறிப்பிடப்படுகிறார்கள் (Princes of the Church). திரு அவையின் நிர்வாகத்தில் மிக முக்கியப் பங்கு  வகிப்பதாலும், அரசரைத் (திருத்தந்தையை) தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதாலும் இந்தப் பட்டம். ‘Cardinalஎன்ற ஆங்கில வார்த்தைcardoஎன்ற இலத்தீன் வேர்ச் சொல்லிலிருந்து வருகிறது. ‘Cardoஎன்றால்  ‘கீல்என்று அர்த்தம்கதவை நிலைச்சட்டத்தோடு இணைக்கின்ற hinge. உண்மையில் அதுதான் கர்தினால்களின் பணி. இணைப்பாளர்களாகவும் தாங்கிப் பிடிப்பவர்களாகவும் இருந்து அவர்கள் திரு அவையை இயக்கப் பணிக்கப்படுகிறார்கள்

கர்தினால் என்பது ஒரு கூடுதல் பொறுப்பு. அது ஓர் அருளடையாளம் கிடையாது. கர்தினால்கள் புதிதாக அருள்பொழிவு செய்யப்படுவதில்லை; நிறுவப்படுகிறார்கள். எல்லாக் கர்தினால்களும், ஏன் திருத்தந்தையும் கூட ஆதாரமாக ஆயர்களே

பதவியேற்கும் நிகழ்வில் திருத்தந்தை கர்தினால்களுக்கு மூன்று பொருள்களைக் கொடுக்கிறார்.

கணையாழி:இந்தக் கணையாழியைப் பேதுருவின் கரங்களிலிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். அவரு டைய அன்பில்  இணைந்து, திரு அவை மீதான உங் கள் அன்பு பலப்படுத்தப்படுவதாகஎன்று கூறி திருத்தந்தை ஒரு புதிய கணையாழியைப் பட்டம் பெறும் கர்தினாலின் கரத்தில் அணிவிக்கிறார்.

தலைப்பாகை: ஆயர்களின் நிறம் மென்சிவப்பு என்றால், கர்தினால்களின் நிறம் கருஞ்சிவப்பு. இது மறைச்சாட்சிகளின் அடையாளம். திரு அவை முன்னேற்றத்திற்காகவும், கிறித்தவ நம்பிக்கையின் பரவலுக்காகவும், கர்தினால்கள் இரத்தம் சிந்தி உயிர் துறக்கும் அளவுக்குத் தைரியத்துடன் உழைக்க வேண்டும் என்பதன் அடையாளமாக திருத்தந்தை அவர்களுக்குக் கருஞ்சிவப்பு நிறத் தலைப்பாகையை அணிவிக்கிறார். கர்தினால்கள் அணியும் கறுப்பு அல்லது வெள்ளை நிற அங்கியிலும், கருஞ்சிவப்புத் தீற்றல்களைப் பார்க்கலாம்.

ஆணை: கர்தினால் பணி நியமன ஆணை ஒரு சுருளேடாக அளிக்கப்படுகிறது.

கர்தினால்கள் ஒவ்வொருவருக்கும் உரோம் நகரில் இருக்கும் ஒரு கோவில் ஒதுக்கித் தரப்படுகிறது.  ‘Titular Churchஎன்று கூறுவார்கள். அந்தக் கோவிலுக்கு அந்தக் கர்தினால்தான் பொறுப்பாளர். பங்குத்தந்தை மாதிரி. உலகின் எந்த முனையில் ஒரு கர்தினால் பணி செய்தாலும் உரோம் நகரோடும், திருத்தந்தையோடும் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த பிணைப்பை இந்தTitular Churchமுறை எடுத்துக் காட்டுகிறது.

தற்போது இந்தியாவில் ஏழு கர்தினால்கள் இருக்கிறார்கள். எல்லாரும் நன்கு அறிந்த மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியசுக்கு 79 வயதாகிவிட்டது. அவருக்கு வாரிசு ஆயரும் நியமித்துவிட்டார்கள். அடுத்த கான்க்ளேவில் அவர் பங்கெடுக்க வாய்ப்பில்லை. ஹைதராபாத் பேராயர் கர்தினால் அந்தோணிக்கும் (63 வயது),  கோவா பேராயர் கர்தினால் ஃபிலிப் நேரிக்கும் (71 வயது) வாய்ப்பிருக்கிறது. ஓட்டுப் போட போவார்கள். திருத்தந்தை ஆவார்களா? தெரியவில்லை. மற்ற நால்வரும் கேரளத்தவர்கள். பெரும்பாலும் கீழைத் திரு அவையைச் சார்ந்த பேராயர்கள். தமிழ்நாட்டிலிருந்து யாரும் இல்லை. இதுவரை தமிழ்நாட்டிலிருந்து ஒரே ஒரு கர்தினால் மட்டுமே உருவாகியிருக்கிறார். மேமிகு கர்தினால் லூர்துசாமி அவர்கள். தற்போது பொறுப்பேற்றிருக்கும் புதிய தலைமுறை ஆயர்களிலிருந்து யாரேனும் கர்தினாலாகத் தேர்வு பெற்று, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று பெரிய நாயகியை வேண்டுகிறேன்.

மிலான் மறைமாவட்டத்தின் மேனாள் பேராயர் கர்தினால் கார்லொஸ் மரிய மர்த்தினி, நான் மிகவும் வியந்து வாசிக்கின்ற, நேசிக்கின்ற ஒரு திரு அவைத் தலைவர்.

மர்த்தினி ஓர் இயேசு சபை அருள்பணியாளர். திருவிவிலிய வல்லுநர். 1979-ஆம் ஆண்டு உரோம் நகரில் உள்ள கிரகோரியன் பல்கலைக்கழகத்தின் அதிபராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அது இரண்டாம் ஜான்பால் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற முதல் வருடம். அப்போது இத்தாலி நாட்டின் மிக முக்கிய மிலான் உயர் மறைமாவட்டம் காலியாக இருந்தது. ‘யாரை அங்கு நியமிப்பது?’ என்று திருத்தந்தை யோசித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் ஒரு நிகழ்வில் பங்கெடுக்க கிரகோரியன் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற போப் ஜான்பாலுக்கு அந்த நிகழ்வை ஒருங்கிணைத்த அதிபர் மர்த்தினியைப் பிடித்துப்போனது. அவரைப் பற்றி விசாரித்தார். மர்த்தினி பற்றிக் கிடைத்த தகவல்கள் அனைத்தும் திருத்தந்தைக்கு மகிழ்வூட்டின. அவரையே மிலான் மறைமாவட்டப் பேராயராக நியமிப்பது என்று முடிவெடுத்தார். செய்தி மர்த்தினிக்குத் தெரிவிக்கப்பட்டது. மர்த்தினிக்கு இதில் சிறிதுகூட விருப்பம் இல்லை. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திருவிவிலிய ஆய்வு சம்பந்தப்பட்ட அறிவுத்துறையிலேயே தன் வாழ்வைச் செலவழித்திருந்தார். ஒருமுறை கூட பங்குத்தந்தையாகப் பணியாற்றியதில்லைகல்விப் புலம் வேறு, மேய்ப்புப் பணிச்சூழல் வேறு. ஐரோப்பாவின் மிகப்பெரிய உயர் மறைமாவட்டத்தை வழிநடத்திச் செல்லக் கூடிய pastoral leadershipதன்னிடம் இருக்கிறதா? என்று அவருக்குச் சந்தேகம். எனவே, தான் ஏன் இந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது? என்று பல்வேறு காரணங்களை அடுக்கி, ஒரு நீண்ட கடிதத்தை எழுதி எடுத்துக்கொண்டு போய் போப்பைச் சந்தித்தார். திருத்தந்தையின் முன் முழந்தாளிட்டு கடிதத்தைக் கொடுத்தார்.   ஜான்பால் அவர்கள் மர்த்தினியின் கடிதத்தைப் பொறுமையாக வாசித்தார். பின் அதை மடித்து, தன் பையில் வைத்துவிட்டு, மர்த்தினியை நோக்கி, “Thank you for the letter, Fr Martini. But go to Milanஎன்று கூறினாராம். அதன் பிறகு நிகழ்ந்தது வரலாறு. திருத்தந்தை ஜான்பால் அவர்களே மர்த்தினியை ஆயராக அருள்பொழிவு செய்தார். 1983-ஆம் ஆண்டு அவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 22 ஆண்டுகள் மிலான் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி, 2001-இல் ஓய்வு பெற்றார்.

மிலான் கத்தீட்ரலில் அவர் எடுத்த விவிலிய வகுப்புகளுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்தனர். கடவுளை நம்பாதவர்களைக் கூட மர்த்தினி கவர்ந்தார். மிலான் மறைமாவட்டத்தின்  தலைசிறந்த பேராயராக மட்டுமல்ல, திரு அவையைச் சீர்திருத்தப் பாதையில் வழிநடத்திச் சென்ற ஓர் உலகத் திரு அவைத் தலைவராகவும் அவர் உருவெடுத்தார். இரண்டாம் ஜான்பாலின் இறப்புக்குப் பின் நடந்த கான்க்ளேவில் முதல் சுற்றில் ஜோசப் ராட்சிங்கரைவிட மர்த்தினிக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன என்று சொல்லப்படுகிறது.

2012, ஆகஸ்டு 31 அன்று அவர் இறந்த போது, மிலான் நகர மேயர், “Carlo Maria Martini illuminated the way for the entire city, not just for part of it. For this reason, today more than ever, Milan mourns its Archbishopஎன்று கூறினாராம்.

உண்மையில் இதுதான் ஒரு திரு அவைத் தலைவரின் பணி. ஓர் இடத்துக்காக மட்டுமல்ல, ஒரு குழுவுக்காக மட்டுமல்ல, ஓர் இனத்துக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் திரு அவைக்காகவும் ஒளி வீசுவது.

அப்படித்தானே?

(இந்த வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்).