தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்களின் இறுதிப்பயணத் திருப்பலியில் தஞ்சை மறைமாவட்ட மேதகு ஆயர் த. சகாயராஜ் ஆண்டகை அவர்கள் ஆற்றிய மறையுரை:
அன்புக்குரிய
சகோதரர்களே,
சகோதரிகளே!
சொல்லொண்ணா
மனத்துயர், விவரிக்க முடியாத மனநிறைவு; இரண்டும் ஒருசேரக் கலந்து இருக்கிற தருணம் இது. ஒரு பக்கம் பிரிவாற்றாமை; மற்றொரு பக்கம் நன்றி நிறைந்த மனநிலை. கண்ணீர் கலங்குகிறது; ஆனாலும்கூட கரங்கள் நன்றி சொல்ல இணைந்து உயர்கின்றன. நமது பாசமிகு தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்களை நினைத்து அவர்களுக்கு முன்னால் நின்று, ‘நன்றி’ என்று சொல்லக்கூடிய தருணமாக இருக்கிறது. திரு அவைக்கும் இந்தச் சமூகத்திற்கும் தந்தை அவர்கள் தனது நெடிய 76 வயதில் செய்திருக்கிற எல்லா மேலான பணிகளுக்காக இவரை நமக்கு மிகப்பெரிய கொடையாகக் கொடுத்த திரு அவைக்கும் சமூகத்திற்கும் கடவுளுக்கு முன்னாலும் இன்று கரங்களை உயர்த்தி நன்றி சொல்லி மனம் நிறைந்திருக்கிறது.
திருவள்ளுவர்
கூறுவார் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று.
ஒன்றைச் சொல்ல மறந்தார், ‘இறப்புக்கா எல்லா உயிருக்கும்’ என்று.
பிறக்கிற போது எல்லாரும் சமநிலையிலேயே பிறக்கிறோம். உயர்வு-தாழ்வு இன்றி. ஆனால், இறக்கிறபோது ஒரு சிலர் உயர்ந்த மனிதர்களாய், சிறந்த மனிதர்களாய், சான்றோராய் வாழ்ந்து இறக்கிறார்கள். அவர்கள் மேன்மக்களே! அந்த வகையில் ஒரு மிகப்பெரிய சான்றோராய் வாழ்ந்து மரித்திருக்கிறார் நம்முடைய தந்தை பெலிக்ஸ் வில்பிரட் அவர்கள். ஒருசிலரைக் குறித்து மட்டுமே நாம் சொல்ல முடியும், ‘God does not create many of his kind’ என்று. தந்தை அவர்களைப் பார்த்து நாம் எப்போதுமே தயக்கமின்றி சொல்லலாம் ‘God does not create many of your kind’ என்று.
இரவீந்திரநாத்
தாகூர் ‘கீதாஞ்சலி’
என்கிற தன்னுடைய கவிதை நூலில் ஒரு சிறு கதையைக் கவிதையாக வடித்து இருப்பார். மாலை நேரம், சூரியன் மறையப் போகிற நேரம். சூரியனுக்குக் கவலை, நான் மறைந்த பிறகு யார் இந்தப் பூமிக்கு ஒளி தருவார் என்று. படைப்பு அனைத்தையும் பார்த்துக் கேட்கிறது, ‘எனக்குப் பின்னால் ஒளி கொடுக்க யார் முன்வருவீர்கள்?’ என்று. அமைதி! யாரும் பேசவில்லை. ஒரு சிறு அகல் விளக்கு சொன்னது: ‘நான் இருக்கிறேன், நீ போய் வா.
நீ வருகிற வரை ஒளி கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். என்னால் இயன்ற அளவு, இயன்றவரை ஒளி கொடுத்துக் கொண்டே இருப்பேன்’
என்று. எரிந்துகொண்டிருக்கிற இந்தப் பாஸ்கா திரிபோல, எரிந்து ஒளி கொடுத்து, அணைந்திருக்கிற ஒரு தீபமாக தந்தை அவர்களை நாம் பார்க்கலாம். ஆசியத் திரு அவையில் வானில் ஜொலித்த ஒரு நட்சத்திரமாய் இவர் ஒரு பேராளுமை. அறிவுநிறை பேராளுமை. அதேபோல் ஆசிய இறையியல் என்றால் அதற்கான ஒரு தனிச் சிறப்பு மிகுந்த, ஆகச்சிறந்த திசை காட்டியாக வாழ்ந்திருக்கிறார்.
குறைந்தபட்சம்
கடந்த 40 ஆண்டுகளாக, ஆசிய இறையியல் குரலாக, இந்திய இறையியலின் குரலாக, தமிழ்நாட்டு இறையியலின் குரலாக, ஏழைகளது இறையியல் குரலாக, விடுதலை இறையியலின் குரலாக, பெண்ணியத்தின் இறையியல் குரலாக, ஒடுக்கப்பட்டோரின் இறையியல் குரலாக, விளிம்புநிலை மக்களின் இறையியல் குரலாக, தலித் மக்களின் இறையியல் குரலாக ஓங்கி ஒலித்த இந்தக் குரல் இன்று அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
தந்தை
அவர்கள் என்னிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன், “இறையியல் மொழி என்பது அறிவு சார்ந்ததல்ல; அது அறிவு மொழி அல்ல; அது இதயத்து மொழி” என்று. இதயத்தோடு இதயம் பேசுவதே சரியான, முறையான இறையியல் மொழியாக இருக்கும். அப்படி இதயத்தால் நம்மோடு இறையியல் மொழி பேசிய இந்த இதயம் இன்று அமைதியாக இருக்கிறது. ஓர் இறையியல் இயக்கமாகவே இயங்கிக் கொண்டிருந்த இந்த மாபெரும் இறையியல் இயக்கம், இன்று தனது இதயத்துடிப்பை நிறுத்தி இருக்கிறது என்பது நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் கொடுக்கிறது.
ததும்பாத
நிறைகுடமாய், ஆர்ப்பாட்டம் இல்லாது, ஆரவாரம் இல்லாது, நெடும் ஆழத்தோடு அமைதியாகப் பயணித்துக் கொண்டே இருக்கும் வற்றாத நதியாகப் பயணித்தவராக தந்தை அவர்களை நாம் பார்த்து உணர முடியும்.
தந்தை
அவர்களது வாழ்வு நேற்று முன் தினம் மாலை எட்டு நாற்பது போல அடங்கியது என்று கூறக் கேட்டேன். என்னால் உறுதியாய்க் கூற முடியும், அவரை அறிந்தவரை அந்த மாலை 8:39 மணி வரைக்கும் இந்த இதயம் இறையியலையே சிந்தித்து இருக்கும். இறையியலை யாரோடாவது உரையாடி இருக்கும். அந்த இறையியல் கருத்துகளையே எழுத்தாகவோ, கணினியிலோ அது பதிவு செய்து கொண்டிருக்கும் என்று. ஆக, எப்போதுமே இயங்கிக் கொண்டிருந்த ஓர் இயக்கம் என்று பார்க்கிறோம்.
அருள்பணியாளர்களின்
வாழ்வு என்று பார்க்கிற போது சிந்தனைத் தளம், செயல்பாட்டுத் தளம் என்று இரண்டுமே அவசியம் என்று உணர்வோம். பல நேரங்களில் நானும்
உணர்ந்திருக்கிறேன். உங்களில் பலர் உணர்ந்திருக்கலாம். பெரும்பாலும் சிந்தனைத் தளத்திலேயே தனது பெரும் வாழ்வை இவர் நடத்தி இருக்கிறாரோ என்று. ஆனால், என்னைப் பொருத்தவரை நம்மையெல்லாம் சிந்திக்கத் தூண்டிய ஓர் இறையியல் அனுபவத்தை நமது மக்களுக்குக் கொடுக்கக்கூடிய சிந்தனைத் தளத்திலும் செயல்பாட்டுத் தளத்திலும் ஒருசேரக் கடுமையாக உழைத்த ஒரு மனிதராக இவரைப் பார்க்க முடியும்.
இப்படிச்
சொல்வார்கள் ‘Work ethics’ என்று;
‘Mission ethics’ என்று.
அவரிடம் நான் கற்றுக் கொண்ட அருமையான வாழ்க்கைப் பாடம். எந்த ஒரு காரியத்தையும் முழுமையான, நூறு விழுக்காடு அர்ப்பணத்தோடு, ஆரவாரமின்றி செய்யக்கூடிய பணிகளாக அவரை நான் பார்த்திருக்கிறேன்.
இந்த
நாளில் மறையுரை சிந்தனைகளாக தந்தை அவர்களது சிந்தனைகளையே மூன்று சிறு கருத்துகளாக உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஒன்று, தலத் திரு அவைகள் உருவாக வேண்டும் என்பது; இரண்டாவது, இந்தத் தலத் திரு அவைகள் மக்களை மையப்படுத்திய திரு அவைகளாக வளர வேண்டும் என்பது; மூன்றாவது,
இந்தத் தலத் திரு அவைகள் விளிம்பு நிலை மக்களை நோக்கிய திரு அவையாக இருக்க வேண்டும் என்பது.
முதலாவது,
தலத் திரு அவைகள் உருவாக்கப் பட வேண்டும் என்பது
தந்தை அவர்களது நெடிய கனவு, நெடிய ஆசை. ஆக, மேற்கத்திய அந்தப் பண்பாட்டு மேலாதிக்கத்திலிருந்து, அந்த மேலாண் மைத்தனத்திலிருந்து, மேட்டிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைந்து ஆசியத் திரு அவைகளாக, இந்தியத் திரு அவைகளாக, தமிழ்நாட்டுத் திரு அவையாக, கன்னியாகுமரி திரு அவையாக, தஞ்சாவூர் திரு அவையாக திரு அவைகள் வளர வேண்டும் என்று விரும்பியவர் தந்தை அவர்கள். தங்களது பண்பாட்டில் வேரூன்றி, தங்கள் தாய்மொழி பேசி, அந்தத் திரு அவைகள் எல்லாம் வளர வேண்டும் என்று விரும்பியவர் அவர். தமிழ்நாடு என்றால் குறிஞ்சியும் முல்லையும் மருதமும் நெய்தலும் பாலையும் ஆன இந்தப் புழுதி
மண்ணிலிருந்து (From the dusty soil) அந்த
இறையியல் உருவாக வேண்டும், அந்தத் தலத் திரு அவைகள் உருவாக வேண்டும் என்று சொல்வார். ஆக, நாம் பேசுவது எல்லாம் மனுவுரு இறையியல் எனில், அந்த மண் வாசனையோடு, அந்த மண்ணின் நிறத்தோடு அந்த இறையியல் மகிழ்ந்து திரு அவையாக வளர்வது தானே முறையாக இருக்க முடியும் என்று வாதிடுவார் தந்தை அவர்கள்.
இரண்டாவதாக,
மக்களை மையப்படுத்திய தலத் திரு அவைகளாக அவையெல்லாம் வளர வேண்டும் என்று சொல்வார். அவர் சொல்வார் ‘The Laity are the primary stakeholders of the Catholic Church’
என்று. ஆக, கத்தோலிக்கத் திரு அவையின் அடிப்படை உரிமைதாரர்களும் பங்குதாரர்களும் இந்தச் சாமானிய இறை மக்களே. இவர்களுக்குப் பணி செய்வதற்காகத்தான் இங்கு ஆயர்கள் இருக்கிறார்கள், அருள்பணியாளர்கள் இருக்கிறார்கள், துறவியர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் ஆதிக்க மனநிலையில் இருந்து, தங்களது மேட்டிமைத்தன்மையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு, மக்களுக்கான பணியாளர்களாகவே அவர்கள் எந்நாளும் திகழ வேண்டும் என்பதை எப்போதுமே சொல்வார். The clericalism என்பதற்கு
எதிராக எப்போதுமே குரல் கொடுத்த ஒரு கலகக்காரராகவே தந்தை அவர்களை நாம் எப்போதுமே பார்க்க முடியும்.
மூன்றாவதாக,
விளிம்புநிலை மக்களை நோக்கிய இறையியலாக இது மிளிர வேண்டும் என்று விரும்பியவர்கள் தந்தை அவர்கள். அவர்களது எழுத்துகளைக் குருமாணவராக இருந்த போது ஓடி ஓடி படித்த காலத்திலும் சரி, அவருக்குக் கீழே ஓர் ஆய்வு மாணவனாகப் படித்த காலத்திலும் சரி, அவரது பேச்சுகளில் இருந்து, அவரது எழுத்துகளிலிருந்து நான் அதிகமாகக் கேட்ட இரண்டு வார்த்தைகள்: ஒன்று, The Subaltern; மற்றொன்று the people at the
periphery. மிக
அதிகமாக உச்சரித்த இரண்டு வார்த்தைகள். ஆக, அதிகாரம் பெற முடியாத சமுதாயத்தின் அதிகார நிலையில இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிற சாமானிய மனிதர்கள் அவர்களது முதல் நோக்காக இருந்தார்கள். இரண்டாவது, விளிம்புநிலையில் இருக்கக்கூடிய மக்கள் பல நூறு காரணங்களுக்காக
விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது - மக்கள் குறித்து எப்போதும் பேசுவதாக அவரது குரல் ஒலித்தது என்று நாம் பார்க்கிறோம்.
அவரைப்
பொறுத்தவரை நம் கடவுள் விடுதலை அளிக்கிற கடவுள். நமது திருவிவிலியம் ஒரு விடுதலை உடன்படிக்கையின் ஏடு. அவரைப் பொறுத்த வரை நாம் பேச வேண்டிய மொழியெல்லாம் விடுதலை மொழியாகவே இருக்க வேண்டும். ஏனெனில், நாம் பேசுகிற இறையியல் விடுதலையை முன்வைக்கக்கூடிய இறையியலே என்று பேசுவார். இந்த இறையியலைப் பேசுவதற்காக எந்த ஒருவரையறைகளையும் எல்லைகளையும் தாண்டிச் செல்ல தயங்காத ஓர் ஆளுமையாக அவர் இருந்தார்.
அவரைப்
பொறுத்தவரை இறையியல் கலந்துரையாடல்கள் எல்லாம் இறையியல் வகுப்பறைகளிலோ அல்லது இறையியலாளர் ஒன்றுகூடி அமர்ந்து பேசக்கூடிய அரங்குகளிலோ அமைந்து போவது கிடையாது. அவரைப் பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரைகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கக் கூடிய அந்தப் படகுகளில் அந்த இறையியலாக்கம் நடைபெற வேண்டும்; அவர்களது உரையாடல் இறையியல் உரையாடல்களாக இருக்க வேண்டும். அந்த இறையியலின் கரு அந்த மக்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சொல்வார். ஆக, கன்னியாகுமரியின் கடற்கரையிலே மீன்களை உலர வைத்துக் கொண்டிருக்கிற மீனவர்களும், தங்கள் வலைகளைக் காய வைத்துக் கொண்டிருக்கிற மீனவர்களும் பேசக்கூடிய ஒன்றாக நமது இறையியல் வளர்ந்து போக வேண்டும் என்று சொல்வார்.
எனது
மறைமாவட்டத்தை அவரது சிந்தனையில் எடுத்துக்கொள்வது என்றால் தஞ்சை தலத் திரு அவை அல்லது தஞ்சை தலத் திரு அவையில் இறையியல் என்றால் அது அந்தக் கழனிகளில், நெல் வயல்களில், நெல் நாற்றுகளை நடுகிற போதும், களை பறிக்கிற போதும், அறுவடை செய்கிற போதும் விளைந்த நெல்லை சந்தைப் படுத்துகிற போதும் அந்த மக்களது உரையாடலாக அந்த இறையியல் இருக்க வேண்டும். அந்த இறையியல் கரு என்பதும், உள்ளீடு என்பதும் மக்களது வாழ்வு சம்பந்தமானதாக இருக்க வேண்டும். அது போன்றே எப்போதும் விரும்பி வாசித்து, அதையே தனது இறையியல் முன்மொழிவாகக் கொண்டிருந்த தந்தையாக அவர்களை நாம் பார்க்க முடியும்.
அவர்
கடைசி காலத்தில் அதிகமாகப் பேசிய சூழலியல் இறையியல் ஆக இருக்கட்டும் அல்லது
பொதுவெளி இறையியலாக இருக்கட்டும் அத்தனையும் இறையியலாக விவாதிக்கப்பட வேண்டும், வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்பிய தந்தையாக நான் அவரைப் பார்க்கிறேன். ஆக, இந்தத் தந்தை அந்தக் கடவுளுக்கு முன்னால் இப்படித்தான் சொல்லி இருக்க வேண்டும்; ‘எனது பிறப்பில் கடவுளே எனது வாழ்வு நீ கொடுத்த ஒரு
கொடை. இப்போது எனது இறப்பில் எனது வாழ்வு நான் உனக்குக் கொடுக்கிற காணிக்கை.’
ஓர்
அழகிய காணிக்கையாகக் கடவுள் முன் சென்றிருக்கிறார் நம்முடைய தந்தை என்று என்னால் உணர முடிகிறது. யோவான் நற்செய்தி 16 -ஆம் அதிகாரம் 22-ஆம் இறைவார்த்தையில் வாசிக்கிறோம், இயேசு தமது இறப்பு குறித்து பேசும்போது சொல்வார்: “நான் தந்தையிடமிருந்து வந்தேன், இப்போது மீண்டும் தந்தையிடம் போகிறேன்.” அந்தத் தந்தையிடமிருந்து வந்த நம் தந்தை இப்போது நம் தந்தையாம் கடவுளிடமே திரும்பப் போய் இருக்கிறார் என்று உணர முடிகிறது. அதே இயேசு தமது இறப்புக்கு முன்னால் பேசிய மற்றோர் இறைவார்த்தை யோவான் நற்செய்தி 16- ஆம் அதிகாரம் 33-ஆம் இறைவார்த்தையில் வாசிக்கிறோம்: “நான் உலகின் மீது வெற்றி கொண்டு விட்டேன்”
என்று. ஆக, நம் தந்தையின் இறப்பு என்பது இந்த உலகின்மீது, உலகின் தீமையின்மீது, நமது இயலாமையின்மீது, நமது பாவ இயல்பின் மீது நாம் கொண்டிருக்கக் கூடிய வெற்றி என்று உணர்கிறபோது இயேசுவைப் போல வெற்றி அடைந்த மனிதராய் அந்தக் கடவுளிடம் சென்றிருக்கிறார் என்று உணர முடிகிறது. புல்டன்ஷீன் சொல்வார்: “இவ்வுலகில் வாழ்கிறபோது கடவுள் நம்மோடு இருக்கிறார். நமது இவ்வுலக வாழ்வுக்குப் பிறகு நாம் அந்தக் கடவுளோடு இருக்க போகிறோம்”
என்று. எப்போதும் வாழ்க்கை என்றால் அது கடவுளும் நாமும் இணைந்த, இயைந்த வாழ்வு என்று. தந்தை அவர்கள் தந்தையாம் கடவுளிடம் சென்று இருக்கிறார். சென்று வாருங்கள் தந்தையே. bye…bye…till we meet again……-