இருநூறு ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேய ஆதிக்கச் சக்தியால் அடிமைச் சக்கரத்தில் சுழன்ற இந்தியா, பலரது அகிம்சைவழித் தொடர் போராட்டங்கள், எதிர்ப்புகள் வழியாக 1947, ஆகஸ்டு 15-ஆம் நாள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியது. மக்களே தங்கள் நாட்டை ஆளப்போகிறவர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் பெற்றது - தன்னாட்சி நிலையை அடைந்தது. அப்பொழுது சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகளுக்கிடையேயும், நல்லுள்ளம் கொண்டோர் மனத்திலும் எழுந்த கேள்விகள் பற்பல. யார் இந்த நாட்டை ஆள்வது? அவர்களை எப்படித் தேர்வு செய்வது? அவர்களுக்குரிய அதிகாரங்கள், கடமைகள் என்னென்ன? மக்களுக்கும் அரசுக்கும் உள்ள உறவுகள், உரிமைகள், கடமைகள் என்ன? இந்திய மக்களிடையே நிலவும் சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்து, சமத்துவத் தன்மையை எப்படி நிலைநாட்டுவது? சிறுபான்மை மக்களின் நிலை என்ன? அவர்களை எவ்விதப் பாகுபாடுமின்றி பாதுகாப்பது எப்படி?
இதுபோன்ற
பல கேள்விகளுக்குப் பதிலாக உதயமானதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட ஆவண நூலாகும். இது உலகிலேயே நீண்டு எழுதப்பட்ட சட்ட ஆவணமாகும். இது 22 பகுதிகளையும் 395 பிரிவுகளையும் உள்ளடக்கியது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின்
வார்த்தையில் கூற வேண்டுமென்றால், “இது வெறும் ஒரு சட்டப்பூர்வ ஆவணம் மட்டுமல்ல; மாறாக, ஒரு யுகத்தின் உணர்வையே உள்ளடக்கிய வாழ்க்கை வழிகாட்டியாகும்.”
இது
இந்திய அரசியலுக்கு அடித்தளம் அமைத்துத் தந்திருக்கிறது. உலகில் வேறு எந்த ஓர் அரசியலமைப்பும் தராத பொதுநலன் மற்றும் சமூகச் சீரமைப்பிற்கான முக்கியத்துவத்தை இது தந்திருக்கிறது என்றால், இது எவ்வளவு முக்கியமான ஆவணம் என்பதை ஒவ்வொரு குடிமகளும் / குடிமகனும் புரிந்து கொள்ள வேண்டும்.
இது
‘இந்தியாவின் ஆன்மா’ என்று அழைக்கப்படுகிறது. இது சட்டத்தின் ஆட்சியின் முறைப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்று
வலியுறுத்துகிறது. இந்தியாவின் முதல் குடிமகனாக/மகளாகக் கருதப்படும் குடியரசுத் தலைவரும், நாட்டின் பிரதமரும், மற்ற எல்லா அதிகாரத்திற்குள்ளவர்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கீழ்தான் வருகிறார்கள்; அதற்கு மேல் அல்ல. இதுதான் இந்திய நாட்டின் குடியாட்சி முறைக்கு முதுகெலும்பாகும். இது முறிக்கப்பட்டால், மாற்றப்பட்டால் நாடு சிதறும்.
இது
300-க்கும் மேற்பட்ட பல்வேறு தரப்பினரைச் சரிசமமாக உள்ளடக்கிய இந்திய அரசியல் சாசன உருவாக்கக் குழுவின், அயராத மூன்று ஆண்டுகள் கடின உழைப்பால், சனநாயக முறையில் கலந்துரையாடல் செய்து, வாக்குவாதம், வாக்கெடுப்பு நடத்தி, ஒப்புதல் பெற்று உருவாக்கப்பட்ட ஆவணம். இது முறைப்படி ஆழ்ந்து சிந்தித்து, அர்ப்பணிப்புணர்வுடன் உருவாக்கப்பட்ட ஆவணம். இக்குழுவின் அச்சாணியாகச் செயல்பட்டவர் டாக்டர். அம்பேத்கர் அவர்கள். இன்று அவரை அவமானப்படுத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அவமானப்படுத்துவதற்குச் சமம். இது 1949, நவம்பர் 26-ஆம் நாள் உருவாக்கப்பட்டு, 1950, சனவரி 24-ஆம் நாள் பாராளுமன்ற உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்டு, 1950, சனவரி 26-ஆம் நாள் சட்டப்படி நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நாளைத்தான் நாம் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
2025, சனவரி 26, 75-வது
குடியரசு தினமாகும். அப்படியென்றால், இந்திய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவுபெற்ற தினமாகும்.
இந்திய
மக்களாகிய நமக்கு இந்த ஆவணம் பற்றிய போதிய அடிப்படை அறிவு இருக்கிறதா? இது தருகின்ற சனநாயக விழுமியங்கள் சாமானியர்கள், சமூகத்தின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கும் பெண்கள், குழந்தைகள், தலித் மற்றும் பழங்குடி மக்களைச் சென்றிருக்கிறதா என்றால்... சென்றடையவில்லை என்பதுதான் சற்றுக் கடினமான உண்மை நிலையாகும். இதனைத் தெரிந்துகொள்வது என்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
இந்திய
அரசியலமைப்பின் ஆன்மாவாக / மையமாகத் திகழ்வது அதன் முகவுரையாகும். இதுதான் இந்தியா எந்த இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும்? எப்படிப் பயணிக்க வேண்டும்? என்பதை வரையறுக்கிறது. இப்பயணத்தில் இந்தியக் குடிமக்கள் அனைவரும் இந்தியாவின் கனவான இறையாண்மை, சனநாயகம், குடியாட்சி, சோசலிசம், சமயச்சார்பின்மை மதிப்புகளை உள்வாங்கி சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவக் கோட்பாடுகளை வாழ்வாக்க வேண்டுமென அழைக்கிறது. இக்கட்டுரையின் மூலம் குடியாட்சி என்றால் என்ன? அது எப்படி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது? இவை பற்றிய சில அரசியல் சிந்தனைத் துளிகளை வழங்க முயற்சிக்கிறேன்.
அரசியல் சாசனம்
என்றால்
என்ன?
ஓர்
அமைப்பு அரசு நிறுவப்பட வேண்டிய முறைகளைப் பற்றியும், அதன் அதிகாரங்களைப் பற்றியும், குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும், அரசுக்கும் குடிமக்களுக்குமுள்ள உறவுகள் மற்றும் இணைந்த செயல்பாடுகள் பற்றியும் விளக்கிக் கூறும் சட்டம் மற்றும் வழிகாட்டும் நெறிமுறை ஆவணமாகும். இதுதான் அந்நாட்டில் உருவாக்கப்படும் மற்ற சட்டங்களுக்கெல்லாம் அடித்தளமாகவும் மையமாகவும் அமைகிறது.
அரசியல்
அமைப்புச் சட்டத்திற்கு நேர்மாறான சட்டத்தை இயற்ற முடியாது. இயற்றினாலும் சட்டமாகாது. இதைக் கண்காணிக்க வேண்டிய தலையாயப் பொறுப்பு நீதிமன்றத்திற்கும் குடிமக்களுக்கும் உள்ளது. அரசு சமயத்தின் அடிப்படையில் செயல்படக் கூடாது என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். அதன்படி செயல்பட்டால் அதனை நெறிப்படுத்தும் பொறுப்பு மக்களுக்கும் நீதிமன்றத்திற்கும் உண்டு.
(தொடரும்)