news-details
சிறப்புக்கட்டுரை
ஒரே வழி இயேசு மட்டுமே!

இறை இயேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் இறை அமைதி உரித்தாகுக!

கடவுள் நம்மோடு உள்ளார்என்பதை நமக்கு உணர்த்தும் இம்மானுவேலும் இறைமைந்தனுமான இயேசு பாலனின் பிறப்பைக் கொண்டாடி நாம் தொடங்கியிருக்கின்ற யூபிலி - 2025 ஆண்டினை மையப்படுத்தி மூன்று கருத்துகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.

1. இயேசுவே எதிர்நோக்கு

நம்மைச் சுற்றியுள்ள எண்ணற்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் வருகின்ற யூபிலி ஆண்டின் மையக்கருத்தாகஎதிர்நோக்குஎன்ற பொருளையே நம் திருத்தந்தை பிரான்சிஸ் தேர்ந்தெடுத்துள்ளார். உரோமை நகரில் 2024 -ஆம் ஆண்டு மே மாதம் நம் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவின்போது கொடுக்கப்பட்டSpes non Confunditஎன்ற தனது அதிகாரப்பூர்வத் திருப்பீடச் சுற்றறிக்கையில், “நம்பிக்கையோ, எதிர்நோக்கோ பொய்க்காது (உரோ 5: 5) என்னும் தூய பவுலடியாரின் வார்த்தையோடு தொடங்குகிறார். இந்தக் கிறித்தவ எதிர்நோக்கு என்பது நம்முன் நிற்கும் கணக்கிலடங்காச் சவால்களுக்கு மத்தியிலும், எதிர்காலத்தைக் குறித்த நம்பகமற்ற எதார்த்தத்திற்கு மத்தியிலும் நல்லதே நிகழும் என்னும் எதிர்பார்ப்போடு காத்திருப்பதைக் குறிக்கிறது.

கிறித்தவ எதிர்நோக்கு என்னும் புண்ணியம் நம்பிக்கை, அன்பு என்ற ஏனைய பிற புண்ணியங்களோடு உள்ளூறக் கலந்ததாக உள்ளது. இவை நாம் எதை எதிர்நோக்கியிருக்கிறோமோ அதன்மீதே கட்டமைக்கப்பட்டுள்ளன. எதிர்நோக்கே நமக்கு மீட்பை அருள்கிறது (உரோ 8: 24).

கிறிஸ்துமஸ் விழாவைப் பொருளுள்ள வகையில் கொண்டாட நாம் திருவருகைக் காலத்தில் பயணித்தோம். இந்தத் தயாரிப்பு வார்த்தை மனுவுரு ஏற்ற மெசியாவின் வருகையை ஒட்டிய நமது எதிர்நோக்கின் காத்திருப்பை அடையாளப்படுத்தியது. இந்த மனுக்குலத்தின் ஒரே எதிர்நோக்கும் நம்பிக்கையுமான அந்த ஒரே மெசியாவைப் பற்றி பழைய ஏற்பாட்டின் இறைவாக்கினர்கள் தொடங்கி, தூய திருமுழுக்கு யோவான் வரை அனைவரும் அறிவித்தனர். அந்த ஒரே மனிதரோடு, நம் மீட்பின் காரணரும் ஊற்றுமான இறைமகனோடு நாம் யூபிலி ஆண்டு 2025-இல் நுழைகிறோம். இது வரவிருக்கின்ற 2033 -ஆம் ஆண்டு ஆண்டவர் இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட நமது மீட்பின் 2000 -ஆம் யூபிலியை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. உயிர்த்த இயேசுவே நம் எதிர்நோக்கு (காண். 1 கொரி 15:12). நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கும் உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் இருள் நிறைந்த போராட்டங்களுக்கு இடையே, இயேசுவின் தோழமையில் நாம் மேற்கொள்ளும் இந்தத் திருப்பயணம் எதிர்நோக்கோடு எதிர்காலத்திற்குள் நுழைய நம்மை அழைக்கிறது.

2. இயேசுவே வாயில்

கடந்த 2015-இல் நாம் கொண்டாடிய சிறப்பு யூபிலி ஆண்டினைப்போல் அல்லாமல், வரவிருக்கும் 2025-ஆம் ஆண்டு யூபிலிக்கு உரோமையில் உள்ள புனிதக் கதவுகள் மட்டுமே திறக்கப்படும் என்பதை வத்திக்கான் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவற்றைத் திறந்து வைப்பார். முதலாவதாக, உரோமையில் உள்ள தூய பேதுரு பேராலயத்தின் யூபிலி புனிதக் கதவினை டிசம்பர் 24 -ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருவிழிப்புத் திருப்பலியின்போது திறந்து வைத்துள்ளார். இதனால் 1500-ஆம் ஆண்டு தொடங்கி தொன்றுதொட்டு திரு அவை வரலாற்றில் திருத்தந்தையர்கள் அறிவித்த 25 -ஆம் அல்லது 50 -ஆம் யூபிலி ஆண்டுகளின் வரிசையில், 2025-ஆம் யூபிலி ஆண்டும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுவதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 29 -ஆம் தேதி புனித யோவான் இலாத்தரன் பேராலயத்திலுள்ள புனிதக் கதவைத் திறந்துள்ளார். அதே நாளில், உலகளாவியத் திரு அவையின் அனைத்து மறைமாவட்டங்களிலும் அந்தந்தத் தல ஆயர் மறைமாவட்டப் பேராலயத்திலும், இணைப் பேராலயத்திலும் திருப்பலி நிறைவேற்றி யூபிலி ஆண்டினைத் தொடங்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார் (ஆயினும் இது அந்தந்தத் தலத்திரு அவையின் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாம்).

அன்னை மரியா - இறைவனின் தாய்என்ற மாபெரும் பெருவிழாவைக் கொண்டாடும் ஜனவரி 01-ஆம் தேதி உரோமையிலுள்ள மரியன்னை பேராலயத்திலும், ஜனவரி 05 -ஆம் தேதியன்று புனித பவுல் பேராலயத்திலும் புனிதக் கதவு திறக்கப்படும். இந்த நான்கு புனிதக் கதவுகளையும் தாண்டி, உரோமையிலுள்ள ரெபிப்பியா சிறையிலும் புனிதக் கதவு திறக்கப்படும்.

சரி, திரு அவையின் பாரம்பரிய முறைப்படி யூபிலி ஆண்டில் புனிதக் கதவைத் திறப்பதன் நோக்கமும் காரணமும் என்ன? யோவான் நற்செய்தியில், இயேசுகதவுஎன்று அடையாளப்படுத்தப்படுகிறார். “நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டு கொள்வர் (யோவா 10: 9). இந்தநானே வாயில்என்னும் கூற்று, யோவான் நற்செய்தியில்நானே…’ என்று இயேசு மொத்தமாக ஏழு முறை அறிவிப்பதில் மூன்றாவது அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தநானே…’ அறிவிப்புகள் இயேசுவின் தனித்தன்மைக்கும் அடையாளத்திற்கும் குறிக்கோளுக்கும் சான்றாகக் கருதப்படுகின்றன. இதன் வழியாக மீட்பின் கருவூலமாகவும் அடித்தளமாகவும் விளங்கும் இயேசு, காணப்படுகின்ற கதவுகளுள் ஒருவராக அல்ல; மாறாக, ‘ஒரே ஓர் ஒப்பற்ற கதவுஅவர் மட்டுமே என்னும் கூற்று புலப்படுகிறது. மேலும், பசும்புல் வெளிக்கு நம்மை அழைத்துச் செல்லும் நல்ல ஆயனாக மட்டுமல்ல, மீட்பு என்னும் ஆட்டுக் கொட்டிலுக்குள் நுழைவதற்கான ஒரே கதவும் அவரே என்பதும் இதனால் வெளிப்படுகிறது (யோவா 10: 9).

முடிவில்லாத வாழ்வை நாம் பெறுவதற்கான ஒரே வழி இயேசு மட்டுமே (யோவா 3:16). மாற்று வழி வேறு ஒன்றும் இல்லை. ‘நானே கதவுஎன்று அவர் சொல்வதிலிருந்து அவரே நம் மீட்பின் அடித்தளம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். நற்செய்தியை நம்பி ஏற்றுக்கொள்பவரும் (எபி 11: 6), பாவங்களிலிருந்து மனந்திருந்துபவரும் (லூக் 13:3) அவருடையமந்தையில்பங்கேற்று, இயேசு என்னும்கதவின்வழியாக நுழைந்து மீட்பினைக் கண்டுகொள்வார். கிறிஸ்துவின் சீடர்களான நமக்கு அவரே ஆயனாகவும் ஆட்டுக் கொட்டிலின் வாயிலாகவும் விளங்கி, நம்மை அனைத்து நன்மைகளாலும் நிறைக்கின்றார்.

எனவே, கிறிஸ்துமஸ் திருவிழிப்புத் திருநிகழ்வில் திறந்து வைக்கப்பட்டுள்ள புனிதக் கதவு, 2025-ஆம் யூபிலி ஆண்டில் கிறிஸ்து என்னும் இம்மானுவேலோடு நாம் புனித ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்பதையும், இறையருளின் மீட்பின் ஆதாரமான இயேசுவோடு புனித வாழ்வுக்குள் நுழைகிறோம் என்பதையும், நம் அழைத்தல் வாழ்வுக்கு அடித்தளமான புனிதக் கதவாகிய இயேசுவோடு நுழைகிறோம் என்பதையும் இது எண்பித்துக் காட்டுகிறது. எனவே, இந்த யூபிலி ஆண்டு இறை இரக்கத் தையும், இறை ஆசிரையும் நம்மீது அபரிமிதமாகப் பொழியும் தருணம் என்றால் அது மிகையாகாது.

3. இயேசுவே அகரமும் னகரமும்

தாமேஅகரமும் னகரமும்என்று இயேசு திருவெளிப்பாட்டு நூலில் 1: 8, 21: 6 மற்றும் 22: 13 ஆகிய பிரிவுகளில் தம்மைத்தாமே அடையாளப்படுத்துகிறார்.           A மற்றும் ஆகிய எழுத்துகள் கிரேக்க மொழியின் எழுத்து வரிசையில் முதலும் முடிவுமாக விளங்குகின்றன. ஒரு பொருளின் முழுமையைக் குறிக்கவும், தொடக்கத்தையும் முடிவையும் அடையாளப்படுத்தவும் யூத சமய குருக்களிடையே கிரேக்க எழுத்துகளான     மற்றும் ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் இயற்கையாகவே இருந்தது. இதைத் திருவெளிப்பாட்டு நூல் 22:13-இல், “அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானேஎன்று இயேசுதாமே சொல்வதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

ஒவ்வோர் ஆண்டும் நாம் கொண்டாடும் திருவருகைக் காலம், நாம் தொடங்குகின்ற புதிய திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கப்புள்ளியாக அமைகிறது. அத்தோடு, பாஸ்கா மறைநிகழ்வுகளைக் கொண்டாடி தியானிக்கும் புதிய சுழற்சியை நாம் தொடங்குகின்றோம். சிறப்பாக இந்த யூபிலி ஆண்டில், கிறிஸ்துமஸ் விழாவின்போது நம் திருப்பயணத்தைத் தொடங்கி, கிறிஸ்து என்னும் புனிதக் கதவின் வழியாக யூபிலி ஆண்டில் நுழைந்து, அகரமும் னகரமுமான கிறிஸ்துவில் நம் நிறைவைக் காண்பது சாலச்சிறந்த அம்சமாக அமைந்துள்ளது.

ஏதென்ஸ் நகரின் அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று  “அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம் (திப 17: 28) என்றுரைத்த வார்த்தைகள் மேற்கூறிய கருத்தை உண்மையாக்குகின்றன. இயேசுவே தொடக்கமும் முடிவும்; அவரே மீட்பும் அனைத்தும்; அவரே கடவுள்முன் நமக்குத் தீர்வு அளிப்பவர்; அவரே நம்மைப் புனிதப்படுத்தி அர்ச்சிப்பவர். இந்த 21-ஆம் நூற்றாண்டின் சவால்களின் பின்புலத்தில், இதுவே நம் சான்று வாழ்வுக்கான அழைப்பும் அறைகூவலும்! எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இருக்கவும், கிறிஸ்து என்னும் புனிதக் கதவுக்குள் நுழையவும், ‘அகரமும் னகரமுமாகக்கிறிஸ்துவில் நமது மண்ணகப் பயணத்தின் நிறைவை எய்திடவும் நாம் அழைக்கப்படுகிறோம்.

மனுவுரு ஏற்றுள்ள கிறிஸ்து இயேசு என்னும் எதிர்நோக்கு, புனிதக் கதவு என்னும் நல்ல ஆயன், ‘அகரமும் னகரமுமானஇறைமகன் 2025-ஆம் ஆண்டின் புதிய தொடக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்வாராக! உங்கள் அனைவருக்கும் 2025-ஆம் ஆண்டு ஒளிமயமான ஆண்டாக அமையட்டும்!

+ ஜார்ஜ் அந்தோணிசாமி, சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்