news-details
சிறப்புக்கட்டுரை
பொய் பொம்மைகள்! (வலையும் வாழ்வும் – 06)

காலை நேரம் வாசலிலே போட்ட கோலம், மாலை நேரம் அடையாளமே இல்லாமல் காணாமல் போவதுபோல ஒருசில நினைவுகள் மங்கி மறைந்து போய்விடுகின்றன. நினைவுகள் சில எப்போதுமே பசுமையானதாக இருக்கும். அப்படி மனத்திலிருக்கும் ஒரு நினைவுக்குறிப்பு இது.

அன்று அந்தக் கிராமமே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. பெரியவர் ஒருவரின் இறப்பு ஊரில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இறந்துபோன பெரியவருக்கு இரண்டு மகன்கள். இரண்டாண்டு கழிந்து பிறந்தாலும், இருவரும் பார்ப்பதற்கு ஒன்று போல் இருப்பர். சிறு வயதில் இருவரும் ஒரே ஆடை அணிந்து கைக்கோர்த்து விழாக்களுக்குச் செல்வர். ஒன்றுபோல முடித்திருத்தம் செய்துகொள்வர். சில ஊர் பெருசுகளுக்கு இவர்களில் யார் மூத்தவன்? யார் இளையவன்? என்று கண்டுபிடிப்பதில் கூட சிக்கல் இருந்தது. இரண்டு பேரையும் பார்த்தால் அச்சு அசலாக ஜவுளிக்கடை பொம்மைகளைப் போலவே இருந்தனர்.

வளர்ந்த பிறகு மூத்த மகன் ஒரு பெண்ணைக் காதலித்து, வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டான். இது வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. “இனி இந்த வீட்ல கால் வச்ச, கால வெட்டிப்புடுவேன்என்று கோபத்தில் எச்சரித்திருக்கின்றார் பெரியவர். அதன் பிறகு பல ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும் இரு வீட்டாரும் சமாதானம் ஆகவில்லை.

இளைய மகனுக்குத் திருமணம் முடிந்திருந்தது. இந்த நிலையில்தான் பெரியவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். “உங்கப்பன் தவறிட்டாரு. என்ன இருந்தாலும் உன் அப்பன்ல, ஓர் எட்டு வந்து பார்த்துட்டுப் போயிடு டே, என்ன நடந்தாலும் பாத்துக்கலாம். நீ வாஎன்று ஊர் தோழனிடமிருந்து வந்த அலைப்பேசி அழைப்பைக் கேட்டு மூத்த மகன் செய்வது அறியாது உறைந்து நின்றான். “நீ வேணும்னா போய்ட்டு வா, நான் வரல  என்று செய்தியறிந்து போய்வரக் கூறினாள் மனைவி. ஊருக்குள்மூத்த மகன் நுழைந்துவிட்டான்என்ற செய்தி காட்டுத் தீயைப்போல வேக வேகமாகப் பரவியது. ஊர் மக்கள் குழுக்களாக இங்கொன்றும் அங்கொன்றுமாக மழைக்கால காளான் கூட்டம்போல முளைத்து, ஏதோ முக்கிய உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள். மூத்த மகன் ஊருக்குள் வந்த நேரம் பெரியவரின் பூத உடல் சவப்பெட்டியில் வீட்டிற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது. அடக்கம் செய்ய பெட்டியைத் தூக்கிய நேரமும், மூத்த மகன் ஆட்டோவில் வீட்டிற்கு முன்பாக வந்திறங்கிய நேரமும் ஒன்றாயிருந்தது.

எவனப் பாக்க நீ இங்க வந்த? காம்பவுண்டுக்குள்ள கால் வச்ச, தொலைச்சிடுவேன்என்று கையில் மரச்சிலுவையை வைத்துக்கொண்டே கோபத்தில் கொப்பளித்தான் இளைய மகன்.

தனக்காகத் தாய் பேசுவாள் என்று தன் தாயைத் தேடினான் மூத்த மகன். அவள் எங்கோ ஓரத்தில் அழுதுகொண்டே சேலை நுனியால் மூக்கைச் சிந்திக்கொண்டு செய்வதறியாது நின்றிருந்தாள்.

வழக்கப்படி மூத்த மகன்தான் மரச்சிலுவையைத் தூக்கணும். நீ ஏம்ல தூக்குற? மூத்தவன்தான் வந்துட்டானுல, இனி அத அவனுக்கிட்ட குடுஎன்று ஊர்க்காரன் ஒருவன் சொன்ன உடனேயே, விசில் ஊதிய குக்கர் நாலாப்பக்கமும் வெடித்துச் சிதறியது போல இரு அணியினரும் ஒருவர் மற்றொருவரை ஏசியும் கெட்ட வார்த்தை பேசியும் சண்டையில் ஈடுபட்டனர். மரச்சிலுவையைத் தூக்குகின்ற உரிமை தனக்குக் கொடுக்கப்படவில்லை என்பது மூத்த மகனின் கோபம்.

இத்தன வருசம் நோய் வந்து கிடையில கிடந்தவரை ஒருநாள் கூட வந்து பாக்கல, இப்ப மட்டும் ஏன் வந்தான்? இப்ப வருவான், மரச்சிலுவையைத் தூக்கிச் சவப்பெட்டிக்கு முன்னாடி போவான். நாளைக்குச் சொத்தில் எனக்குப் பங்கு கொடுனு கேட்பான். அத எப்படிக் கொடுக்க முடியும்?” என்பது இளைய மகன் அணியின் கேள்வி.

நான்தான் இவருக்கு மகன், மூத்தவன் செத்துப் போனான். எனக்குதான் அந்த உரிமைஎன்று இளைய மகன் பலமுறை அல்லது பல்லாயிரம் முறை கத்தினாலும் கதறினாலும் ஊர்க்காரர்கள், உறவினர்கள் என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தது இளையவன் பொய் பொம்மைதான் என்று.

இளையவன் மூத்தவனுக்கான அடையாளத்தை ஒருபோதும் பெற முடியாது என்பது நமக்குத் தெரியும்; ஆனால், இன்றைய சைபர் உலகிலே அடையாளங்கள் களவாடப்படுகின்றன. ஆள் மாறாட்டப் பித்தலாட்டம் தினந்தினம் அரங்கேறுகிறது. தன் முகத்தை மறைத்துக்கொண்டு பிரபலமான மற்றொருவரின் அடையாளத்தை முகத்தில் தைத்துக்கொண்டு வலம் வரும் இணையதளங்கள் இன்று நிறைய இருக்கின்றன. எது போலி? எது உண்மையானது? என்று கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அது ஒத்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பலர் இணையம் வழியாக ஏமாற்றப்படுகின்றனர்.

இந்த ஏமாற்று மோசடியினைபாமிங் (Pharming) என்கின்றனர். எடுத்துக்காட்டாக கூகுள் தேடல் பக்கத்தில் நமது வங்கி இணையதளப் பக்கத்தைத் தேடிக் கண்டுபிடிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம்; அதன் பெயர் சரியாக இருக்கின்றது; அதன் இலட்சினை (logo) சரியாக இருக்கின்றது; கிளிக் செய்து உள்செல்லும்போது அதன் முகப்பக்கமும் சரியாக இருக்கின்றது; எனவே, இது நமது வங்கியின் ஒரிஜினல் பக்கம்தான் என்று எண்ணிப் பணபரிவர்த்தனை செய்கிறோம். ஆனால், இந்தச் சரிபார்ப்பு மட்டும் போதுமானது இல்லை. உரலி அல்லது இணையதள முகவரி (URL - Uniform Resource Locator) சரியாக உள்ளதா? என்பதைச் சரிபார்ப்பது அவசியம். இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியில் எது சரி? எது தவறு? www.google.com அல்லது www.goople.com. இரண்டும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருக்கலாம். ஆனால், இரண்டும் ஒன்றல்ல; இரண்டும் வெவ்வேறு.

பாமிங்என்ற இணையதள மோசடி பல விதங்களில் நடைபெறுகின்றது. ஓர் இணையத்தளத்தைகிளிக்செய்தால் அதேபோன்ற மற்றொரு போலி இணையதளத்திற்குக் கொண்டு சேர்க்கின்றது. ஓர் இணையதள லிங்கைகிளிக்செய்யும்போது தேவையில்லா Poisoned cache குறியீடு (codeதரவிறக்கம் செய்யப்பட்டு நம் கணினியின் கோஸ்டு (Host) பைலுக்குள் சென்று ஒட்டிக் கொள்வதால் எந்த ஹைப்பர் லிங்கைகிளிக்செய்தாலும், அது போலியான இணையதள முகப்பக்கத்திற்கே கொண்டு செல்கின்றது.

ஓர் இணையதளத்தில் டி.என்.எஸ். (DNS -Domain Name System) மிக முக்கியமானது. இதுதான் ஓர் இணையதள முகவரியைக் கணினி புரிந்துகொள்ளும் .பி. (IP) முகவரியாக மாற்றித் தருகின்றது. ‘பாமிங்என்னும் இவ்வித மோசடி வழியாக டி.என்.எஸ். (DNS) பிழைப்படுத்தப்பட்டு .பி. (IP) முகவரி மாற்றப்பட்டு, போலியான இணையதளத்திற்கு நாம் தள்ளப்படுகின்றோம். இங்கு இளையவன் மூத்தவனாக மாறுவதற்கான ஒரு முயற்சி எனலாம்.

இணையம் என்பது எப்போதும் நன்மையும் உண்மையும் விளைவிக்கச் செய்யும் விளைநிலம் அல்ல; தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளைப் போல நமது அடையாளங்களும் அந்தரங்கங்களும் நமது இயல்பும் இருப்பும் இணையதள சந்தைக் கிடங்குகளில் விற்பனைக்காகத் தூக்கி வீசப்படுகின்றன. பொய் பொம்மைகளை இனம் கண்டுகொண்டால் மட்டுமே உண்மையும் நம்மையும் இணையதளங்களில் தொடர்ந்து முளைவிடும்.