news-details
சிறப்புக்கட்டுரை
கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் அவர்கள் ஆற்றிய மறையுரை (கச்சத் தீவும் கடவுளின் அருளும்!)

என் அன்பிற்கினிய சகோதரர்களே, சகோதரிகளே! உங்கள் ஒவ்வொருவருக்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நல்வாழ்த்துகள்!

இலங்கை - இந்திய நாடுகளின் நட்புறவுக் கொண்டாட்டமாக இந்தக் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இறைவனுடைய ஆசிரின் அடையாளமாக இருப்பதோடு, இரண்டு நாட்டு மக்களையும் ஒன்று கூட்டுகிற நபராகப் புனித அந்தோணியார் திகழ்கிறார். இராமேஸ்வரம் பகுதியில் வாழ்ந்த சீனிகுப்பன் படையாட்சி என்பவரால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் அன்றிலிருந்து விழா கண்டு வருகிறது. தற்போது, தவக்காலத்தின் இரண்டாவது வாரத்தில் இந்தத் திருவிழா இங்குச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இவ்வேளையில், நம் எல்லா மக்களும் குறிப்பாக, இலங்கை - இந்திய நாட்டு மக்களும் இதன் கடற்கரைப் பகுதிகளிலே வாழ்கிற மீனவர்களும் எல்லா நலன்களும் பெற்று வாழ வேண்டும், ‘இல்லாமை இல்லாத நிலை வேண்டும், எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்என்ற செபத்தோடு புனித அந்தோணியார் நமக்குத் தரும் செய்தியை உங்களோடு நான் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தக் கூடுகை என்பது தவக்காலத்தினுடைய திருப்பயணமாக அமைகிறது. இவ்விழாவை இந்தத் தவக்காலத்தில் கொண்டாடுவது பெரிதும் பொருத்தமானதாக அமைகிறது. எபேசியர் 1:4-இல் புனித பவுல், “நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்என்று குறிப்பிடுகிறார். எனவே, கிறித்தவ வாழ்வுக்கான அழைப்பு என்பது புனிதத்திற்கான அழைப்பு; அதனால்தான், தொடக்க மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒவ்வொரு கிறித்தவரும்புனிதர்என்றே அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு கிறித்தவரும் இறந்தவுடன் அவரிடம் மற்ற கிறித்தவர்கள் செபித்தார்கள். ஆனால், கி.பி. 313-ஆண்டிலேயே கான்ஸ்டான்டைன் மன்னர் திரு அவைக்குச் சுதந்திரம் கொடுத்த பிறகு, நமது ஆடம்பர வாழ்வின் காரணமாகப் பல்வேறு பாவங்கள், பலவீனங்கள் கிறித்தவர்களை ஆட்கொண்டன. ஒரு கிறித்தவர் இறந்தார் என்றால், அவருக்காக, அவருடைய பாவ மன்னிப்புக்காகச் செபிக்கிற வழக்கம் திரு அவையிலே ஆரம்பமானது. எனவே, நாம் அனைவரும் புனிதர்களாக வாழ்வதற்கும் இறுதியாக, புனிதத்தின் உச்சமான இறைவனை மறுவுலகில் சென்று தரிசிப்பதற்கும் அழைக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான் நம்முடைய நம்பிக்கை அறிக்கையிலேபுனிதராம் கடவுள் மனிதரைப் புனிதராக்க மனிதரானார்என்று நாம் பாடுகிறோம். மனிதரைப் புனிதராக்கப் புனிதராம் கடவுள் மனிதரானார். எனவே, நாம் புனிதத்திற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இந்தப் புனிதம் என்பது என்ன? இறைவனை நெருங்கி வருவதாகும். இறைவனை நெருங்கி வருவது என்பது கடினமான ஒன்றாக எப்பொழுது இருக்கும்? என்று சொன்னால், பாவங்கள் நம்மைச் சூழ்ந்தபொழுது நாம் இறைவனை நெருங்க இயலாது. இந்தப் பாவம் என்பது இருளுக்குச் சமம். இருளில் இருந்துகொண்டு நாம் ஒளியைக் காண இயலாது. ஒளிக்கு வருகிறோம் என்று சொன்னால், இருள் மறைந்துவிடும். எனவே, நாம் இருளைத் துறப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். இந்த இருள் என்பது என்ன? பாவத்தின் ஆட்சியே! பல்வேறு ஆசைகளே இதற்குக் காரணம் என்கிறது புத்த சமயம். “எல்லாப் பாவங்களுக்கும் ஆசையே காரணம்!” என்று கூறினார் புத்தர் பெருமான். “ஆசை அறுமின், ஆசை அறுமின், ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்என்றார் புத்தர். ஆகவே, இந்த ஆசைதான் மனிதனுடைய பாவங்களுக்குக் காரணமாக இருக்கின்றது.

ஆசை மட்டுமல்ல, பேராசைப்படுகின்ற மனிதர்களும் இருக்கிறார்கள். தங்கள் வாழ்வுக்குத் தேவையானது மட்டுமல்ல, அதற்கு மேலும் மேலும் வசதிகள் குவிய வேண்டும் என்று மனிதர்கள் நினைக்கிறார்கள். கவிஞன் பாடுகிறான்மேகங்கள் மோதி வானங்கள் காயம் அடைவதில்லை; வண்டுகள் மோதி மலர்கள் காயமடைவதில்லை. அலைகள் மோதி பாறைகள் காயம் அடைவதில்லை. பனித் துளிகள் மோதி புற்கள் காயம் அடைவதில்லை! அந்தோ பரிதாபம், மனித மனத்தை ஆசைகள் மோதும்போது, மனிதன் காயப்பட்டுப் போகிறான்என்று பாடுகிறான். இதில் ஆசை என்று சொல்லுகிற பொழுது கெட்ட ஆசை இருக்கிறது, நல்ல ஆசையும் இருக்கிறது. நல்ல ஆசை நல்லதுதான்; நான் நல்லவனாக இருக்க வேண்டும், உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும், என் மனைவிக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் பிரமாணிக்கம் உடையவனாக இருக்க வேண்டும், கடினமாக உழைப்பவனாக இருக்க வேண்டும், எல்லாரிடமும் நல்லவன் என்று பெயர் பெறுபவனாக இருக்க வேண்டும், கடவுளுடைய ஆசைக்கு உகந்தவனாக இருக்க வேண்டும்...… என்பன போன்ற நல்ல ஆசைகள் இருப்பதில் தவறில்லைஆனால், நம்மிடம் தீய ஆசைகள்தான் அதிகமாக நம்மை வந்து சூழ்ந்துகொள்கின்றன. இந்தத் தீய ஆசைகள்தான் ஒரு கெட்ட சக்தியாக நம்மில் இருந்துகொண்டு பாவங்களைச் செய்ய வைக்கின்றன.

இளங்குருவாக நான் இருந்தபொழுது சிறைச்சாலைகளிலே சென்று கைதிகளுக்கு உதவி செய்வதுண்டு. அவர்களுடைய குறைகளைக் கேட்டு அவர்களுக்குகவுன்சிலிங்கொடுப்பதுண்டு. அப்பொழுது ஒரு கைதி சொன்னார், “ஒரே ஒரு நிமிடம் வந்த கோபத்தின் காரணமாக நான் என்னுடைய நண்பனையே கொன்றுவிட்டேன் ஃபாதர். அதனால் இப்பொழுது இருபது வருடங்களாக இந்தச் சிறைச்சாலையில் வாடுகிறேன்என்று. ஒரு நிமிடம் வந்த கோபத்தின் காரணமாக, நம்முடைய தீய குணங்கள், தீய இச்சைகள் தீய சக்திகளாக மாறிவிடுகின்றன. அவைதான் நம்மைப் பாவம் செய்ய வைக்கின்றன. எனவே, இந்தப் பாவத்திலிருந்து நாம் விடுபட வேண்டும்.

இனி நான் இந்தப் பாவத்தைச் செய்ய மாட்டேன்என்று பலமுறை உறுதியெடுக்கின்றோம்; ஆனால், மறுநாளே அதே பாவத்தைச் செய்வதுண்டு. பாவச் சூழல் என்பது இயல்பாக நம்மைத் தொடர்கிறது. எனவேதான், இந்தப் பாவங்களால், தீய நாட்டங்களால் நாம் கவரப்படுகிறோம்.

ஏன் இப்படித் திரும்பத் திரும்ப நாம் பாவம் செய்கிறோம்? என்று சொன்னால், அதற்கு இந்திய மரபில் வருகிற ஒரு கதை உண்டு. ஒரு மனிதரை முனிவர் ஒருவர்நீ பன்றியாகப் போவாய்…” என்று சபித்து விடுகிறார். அவர் வீட்டிற்கு வந்ததும் தன் மகனிடம், “நான் பன்றியாக மாறிவிட்டால்,நீ என்னைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடு. ஏனென்றால், மனிதனாக வாழ்ந்த நான் பன்றியாக வாழ விரும்பவில்லைஎன்று சொன்னார். ஆகவே, மகன் ஒரு பெரிய வாளை எடுத்துக்கொண்டு அப்படியே சுற்றி வருகிறான். சென்னை கூவம் சாக்கடைக்கு வந்தபோது, அப்பா பன்றி ஒரு பெண் பன்றியுடன் 10 குட்டிகளை அழைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக நீந்திக்கொண்டிருந்தது. மகன் உடனே வாளை எடுத்து வெட்ட வருகிறான். அப்போது அந்த அப்பா பன்றி, “என்னை வெட்டாதே!” என்றது. அதற்கு மகன், “மனுசனா வாழ்ந்த நான், பன்றியா மாறி வாழ விரும்பல, கொன்னுடுன்னு சொன்னியே? இப்ப என்னடான்னாகொல்லாதேஎன்று சொல்கிறாயேஎன்று மகன் கேட்டான். அதற்கு அப்பா பன்றி, “அப்போ கூறியது உண்மைதான். ஆனால், இப்போ இந்த வாழ்க்கை எனக்கு ரொம்பப் புடிச்சுப் போச்சு. அது மட்டுமில்ல, இது உங்க சித்தி, இதெல்லாம் உன் தம்பி, தங்கைகள்என்று கூறியது.

ஏன் நாம் திரும்பத் திரும்ப பாவம் செய்கிறோம்? என்று சொன்னால், இந்தப் பாவம் ஒரு கெட்ட சுவையை நம்மிடம் விட்டுச் செல்கிறது. பாவத்திற்கு என்று ஒரு சுவை இருக்கிறது. அந்தக் கெட்ட சுவையின் காரணமாகத்தான் நாம் திரும்பத் திரும்ப பாவம் செய்கிறோம். எப்படி இந்தக் கெட்ட சுவையை மாற்றுவது? நல்ல சுவையை நாம் நாட ஆரம்பித்து விட்டோம் என்றால், இந்தக் கெட்ட சுவை காணாமல் போய்விடும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

என்கிறார் வள்ளுவர். கெட்ட பற்றுகளான ஆசைகளை விடுத்து, பற்றற்றவரான கடவுளை நாம் பற்றிக்கொண்டோம் என்று சொன்னால், நாம் நிச்சயமாக நன்றாக வாழ்வோம். குறிப்பாக, நம்முடைய தீய நாட்டங்கள், தீய இச்சைகள், தீய பாவங்கள் நம்மை அணுகாமல் தூரமாகப் போய்விடும். நாம் கடவுளைப் பற்றிக்கொண்டோம் என்றால், நல்லவரைப் பற்றிக் கொண்டோம் என்றால் அல்லவை எல்லாம் அழிந்துவிடும், தூரமாகப் போய்விடும். ஆகவேதான், இத்தகைய ஒரு புனிதத்தை அடைபவர்கள் எப்பொழுதும் பாவத்திலிருந்து விடுபட்டவர்களாக இருக்கிறார்கள். அது மட்டுமல்ல,… புனிதம் வந்த பிறகு புனிதத்தின் அடையாளங்களைச் செய்ய ஆரம்பிக்கிறார்கள். அவைதான் புதுமைகள்!

எத்தனையோ புனிதர்கள் இருக்கிறார்கள்; எத்தனையோ பேர் நிறைய புதுமைகள் செய்திருக்கிறார்கள். ஆனால், இறந்தும் ஆயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் பதுவை புனித அந்தோணியார் மக்கள் மனம் கவர்ந்தவராக இருக்கக் காரணம் என்ன? இவரிடம் அவ்வளவு ஓர் ஆழமான இறைநம்பிக்கை காணப்பட்டது. இவருடைய உணர்வு நாளங்கள் முழுவதும் இறை நாளங்களாக மாறிவிட்டன. அதனால்தான் அவர் வாழும் காலத்திலேயே நிறைய புதுமைகள் செய்தார். அவருடைய வார்த்தைக்கு ஆற்றல் இருந்தது. அந்த ஆற்றல் எங்கிருந்து வருகிறது என்றால், இறைவனிடமிருந்து வருகிறது. புனித அந்தோணியார் செபத்திலே இறைவனோடு முழுமையாகக் கலந்திருந்த காரணத்தினால், அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் ஆற்றல்கள் கிடைத்தன. அதன் காரணமாகத்தான் அவர் நிறைய புதுமைகள் செய்தார்.

துறவு வாழ்வில் கடினமான ஒன்று இருக்கிறது என்று சொன்னால், குருக்களுக்கு, துறவிகளுக்குத் தெரியும்... பொறுப்பில் இருப்பவர்களுக்குக் கீழ்ப்படிவது என்பதுதான். அந்தோணியார் புதுமை செய்து மிகவும் அறியப்பட்ட காரணத்தினால் அப்பொழுதுஒரு நாளைக்கு ஏழு புதுமைதான் செய்ய வேண்டும். அதுக்கு மேல் செய்யக்கூடாதுஎன்று இல்ல அதிபர் கட்டளையிட்டார். ஒருநாள் காலையிலேயே ஏழு புதுமைகளையும் செய்துவிட்டார். அன்று மாலை அவர் இல்ல வளாகத்தில் நடந்து கொண்டிருந்தார். அந்தத் துறவு மடத்தின் மேல் மாடியில் ஒரு கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் அந்தச் சாரம் சரிந்து விழுவதைப் பார்க்கிறார். அவரை அப்படியே ஆகாயத்தில் நிறுத்திவிட்டு, இல்ல அதிபரிடம் சென்று அந்தக் கொத்தனாரைக் காப்பாற்ற எட்டாவது புதுமை செய்ய அனுமதி கேட்கிறார். அப்போது அந்த இல்லத்தின் அதிபர், “நீங்கள் ஏற்கெனவே எட்டாவது புதுமை செய்துவிட்டீர்கள். அவரை அங்கேயே நிறுத்திவிட்டீர்களே!… இருந்தாலும், நீங்கள் கீழ்ப்படிந்து அனுமதி கேட்க வந்தது மிக்க மகிழ்ச்சி. இனிமேல் உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லைஎன்று கூறினார்.

இப்படியாக புனித அந்தோணியார் மிகச்சிறந்த ஒரு நபராக, நல்ல புனிதராக வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாழ்வில் நல்லவராக இல்லாதவர்கள், கடவுளுக்கு நல்லவராக இருக்க முடியாது. கடவுளுக்கு நல்லவராக இல்லாதவர்கள் தங்கள் வாழ்வில் ஆற்றல்மிகுந்த செயல்களைச் செய்ய முடியாது.

நீங்கள் எந்த அளவிற்குக் கடவுளுக்கு அருகாமையில் இருக்கிறீர்களோ, கடவுளுடைய அனுக்கிரகத்தைப் பெற்றிருக்கிறீர்களோ அவர்களுக்குத் தொட்டதெல்லாம்  துலங்கும்; நினைத்ததெல்லாம் கைகூடும். எனவே, அத்தகைய ஒரு புனிதராக நம்முடைய புனிதர் இருந்த காரணத்தினால், புனித அந்தோணியார் என்றும் மிகச்சிறந்த புனிதராகப் போற்றப்படுகிறார். புனித அந்தோணியாரிடம் வந்து மன்றாடிய மன்றாட்டுகள் வீண்போனதே இல்லை. எனவே, கோடி அற்புதர், புதுமை வள்ளல், அழியா நாக்கு படைத்த மாமுனி என்றெல்லாம் பெயர் பெற்றிருக்கக் கூடிய புனித அந்தோணியாரின் பக்தர்களாகிய நாம், இரண்டு நாடுகளின் பிரதிநிதிகளாக இவ்விழாவில் கலந்துகொள்வது தொடர வேண்டும். நமது நல்லுறவு தொடர்ந்து வளர வேண்டும். இரண்டு நாடுகள் மட்டுமல்ல, உலக நாடுகள் முழுவதும் சமாதானமாக இருக்க வேண்டும். போர்கள் ஒழிய வேண்டும். நட்புறவு திகழ வேண்டும். வறுமை, வேலையின்மை ஆகிய தீமைகள் அகல வேண்டும். இளம் பருவத்தில் வேலைவாய்ப்பை, திருமணத்தைத் தேடி நிற்கிற பிள்ளைகளுக்கு அவை விரைவிலே கைகூட வேண்டும். பெரியவர்கள் உடல் சுகம், மன சுகம் பெற்று வாழ வேண்டும் என்று புனித அந்தோணியார் வழியாகத் தொடர்ந்து மன்றாடுவோம்!