முற்காலத்தில் மனிதர்கள் கூட்டங்கூட்டமாக, வாழ்விற்கான அடிப்படை ஆதாரங்களைத் தேடி இடம் மாறினார்கள். வாழ்விற்கான போராட்டத்தால் நாடோடிகளாகப் புலம்பெயர்ந்தார்கள். ஆடு, மாடுகளோடு மேய்ச்சல் தேடிய ஒரு கூட்டம் இந்துகுஷ் மலை வந்து சேர்கிறது. அம்மக்கள் பள்ளத்தாக்குகள் வழி கைபர், போலன் கணவாயை வந்தடைகிறார்கள். இது நாம் பள்ளியில் படித்த ஆரிய வருகை குறித்த பாலப்பாடம். மானுடவியல் ‘இனம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பு’ என்கிறது. மத்திய ஆசியாவிலிருந்து கி.மு. 1500-ஆம் ஆண்டுகளில் வந்த அந்தக் கூட்டம் சமய, சமூக, அரசியல், பொருளாதார நிலைகளைப் படிப்படியாகக் கைப்பற்றினார்கள். அவர்கள் இன்று மண்ணின் மைந்தர்களான பூர்வீகக் குடிகளை ‘அடிமைகள்’ என்கிறார்கள்.
மனுதர்மம்
உள்ளிட்ட வர்ணாசிரமச் சாத்திரங்களை ‘ஆரியம்’ என்கிறோம். ஆரியம் என்பது பிராமணியமாக உருப்பெற்றுள்ளது.
மனுதர்மம் சமூக அமைப்பை நான்காகப் பிரிக்கிறது. தலையிலிருந்து பிறந்த
பிராமணர் படிப்பு, அரசருக்கு ஆலோசனை சொல்லுதல், இறை வழிபாட்டை நடத்துதல் என அறிவால் முழு
தகுதியை உருவாக்கிக் கொண்டனர். அவர்களின் யஜூர் வேதம் மனிதர்களை வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களின் அடிப்படையில் இரண்டு குழுக்களாகப் பிரிக்கிறது. இதை இராமாயண கதை சார்ந்து, ‘இது ஆரிய-திராவிட போராட்டம்’
என்கிறார் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு.
“இந்திரனே, நாகர்களின் நகரங்களை எரித்து தரைமட்டமாக்கு; நீர்த் தேக்கங்களை உடைத்தெறி; எங்களுக்கு நிறைந்த
செல்வங்களைக் கொடு; குதிரைகளை, பசுக்களை மந்தைகளாகக் கொடு; நல்ல மேய்ச்சல் நிலங்களை எங்களுக்கு வழங்கு; நாகர்களின் நிலங்களை எங்களுக்கு வழங்கு; நாகர்களின் இனத்தைக் கூண்டோடு ஒழித்துக் கட்டு” என்று
வேதங்கள் பாடுகிறது. இந்த நாகர்களே தேசத்தின் பூர்வீகக் குடிகளான திராவிடர்கள். வேதம் சொன்னபடி செய்தார்கள். தமிழீழ விடுதலைப் போரில் அன்றைய இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகரான எம். கே. நாராயணனும், அன்றைய இந்திய அமைதிப்படைச் செயலாளரும், இன்றைய வெளியுறவு அமைச்சருமான ஜெயசங்கரும் தமிழ் மக்களை அழித்தொழித்தார்கள். அக்காலக் கட்டத்தில் இந்தப் பிராமணர்கள் செய்ததை யாரும் எளிதாக மறந்துவிட முடியாது.
“ஆரியர்கள் போர் செய்து, திராவிடர்களை வெல்ல முடியாது. ஆனால், ஆரியப் பண்பாட்டை நம் மக்களிடையே புகுத்தியே
வெற்றி கொண்டனர்”
என்று குறிப்பிடுகிறார் தந்தை பெரியார் (விடுதலை - 23.03.1950). மத வழிபாட்டில், அரச
அவையில் ‘சடங்கு, சம்பிரதாயங்கள்’ என
எளிய மக்களை ஏமாற்றி உச்சம் பெற்றனர்.
1927-ஆம் ஆண்டின்
பிற்பகுதியில் சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமை எதிர்ப்பு மாநாடுகள் நடைபெற்றன. அங்கு பாபாசாகிப் அம்பேத்கர் ஆயிரக்கணக்கான தன்
ஆதரவாளர்களுடன், சாத்திரம் இவைகளை நியாயப்படுத்துவதாகக் கூறி, மனுதர்ம சாத்திரப் பிரதிகளை எரித்தார். இருப்பினும் மனுதர்மம் உயிர் பெற்றது.
தேசச்
சுதந்திரத்தைவிட, சாதிக்க வேண்டியது வேறு உண்டு எனச் சாதிய வெறியில் உருப்பெற்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. இவ்வமைப்பு
சுதந்திர இந்தியாவை மனுதர்ம அடிப்படையில், சாதியைக் கையிலெடுத்து வென்றது. அதன் அரசியல் பிரிவான பா.ச.க.-வை ஆட்சிக்கும் கொண்டு
வந்துவிட்டது. இவர்கள் இடஒதுக்கீடு முறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் காலங்காலமாக - நீதிக்கட்சி காலம் தொட்டே ஆயிரமாயிரம் வழக்குகளைப் போட்டவர்கள். இன்று பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கான
‘இ.டபிள்யூ.எஸ். இடஒதுக்கீடு’ என
மத்திய அரசில் 10 சதவிகித இடஒதுக்கீட்டைப் பின்வாசல் வழியாகப் பெற்றுவிட்டார்கள். தமிழ்நாட்டில் ‘இ.டபிள்யூ.எஸ்.
இடஒதுக்கீடு இல்லை’ எனத் தமிழ்நாடு அரசு அறிவித்து விட்டதால் கொதிக்கிறார்கள்.
ஒரு
விவாத மேடை நிகழ்ச்சியில் பேசிய ஒருவர்,
“தமிழ்நாடு ஆட்சி அதிகாரத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையிலும் எங்களை மேல் சாதி எனக் கூறுகிறது. ஆனால், எங்களுக்கு அதற்குரிய பிரதிநிதித்துவம்
இல்லையே?” எனக் கேட்டார். அதற்குப் பதில் அளித்தவர், “கோடிக்கணக்கான மக்கள் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் போடும் சட்டம், தமிழ்நாடு ஆளுநரால் நிறுத்தப்படுகிறது அல்லது உச்ச நீதிமன்றத்தில் செல்லாது எனச் சொல்லப்படுகிறது. அவர்கள் யார்? உங்கள் மேல்தட்டு சாதியினர்தானே?” என்று கூறுகிறார்.
சிறுபான்மைப் பள்ளிகள்
குறித்த ஓர் அரசாணை நீண்ட நாள்களாகக் கிடப்பில் வைக்கப்படுகிறது. “இந்த அரசாணை வெளியிட, கல்வி அமைச்சருக்கும் அரசிற்கும் ஆர்வம் உள்ளது. உயர் அதிகாரிகள் பல சாக்குபோக்குக் கூறித்
தள்ளிவிடப் பார்க்கிறார்கள்” என்கின்றனர்
அங்கிருக்கும் இரண்டாம் நிலை அதிகாரிகள். அவர்கள் யார்? என்றும், எந்தச் சாதியைச் சார்ந்தவர்? என்றும் ஊர் அறியும்!
ஐந்து
விழுக்காடு மக்கள்தொகை கொண்ட உயர் வகுப்பினர், 50 விழுக்காடு ஆளுநர்களாகவும், மாநில அரசின் தலைமைச் செயலாளர்களில் 62 விழுக்காடாகவும், உச்ச நீதிமன்றத்தில் 56 விழுக்காடாகவும், வெளிநாட்டுத் தூதர்களில் 41 விழுக்காடாகவும், பாராளுமன்றத்தில் 48 விழுக்காடாகவும், மாநிலங்களவையில் 36 விழுக்காடாகவும், பொதுத் துறை நிறுவனங்களில் 57 விழுக்காடாகவும், மாநில அரசுகளில் 82 விழுக்காடாகவும், ஏர்லைன்சுகளில்
61 விழுக்காடாகவும், ஐ.ஏ.எஸ்.-சில் 72 விழுக்காடாகவும், ஐ.பி.எஸ்.-சில் 61 விழுக்காடாகவும், தொலைக்காட்சி மற்றும் பாலிவுட்டில் 83 விழுக்காடாகவும்
கோலோச்சுவது அவர்களது தந்திரமே தவிர, அறிவல்ல!
இன்று
ஊடகத்துறையும் இவர்கள் கைக்கு மாறிவிட்டது. தமிழ்நாடு பத்திரிகை வரலாற்றில், தினம் பேருந்தில் செய்தி எழுதி
அனுப்பிய பத்திரிகையாளர்களைப் பார்த்திருக்கிறேன். பிரதமர், முதல்வர் போன்ற முக்கியஸ்தர்களின் கூட்டச் செய்திகளைப் புகைப்படம் கழுவி, பிரிண்ட் போட்டு காத்திருக்கும் பக்கம் வைத்து, கணினி தட்டச்சு செய்த காலம் இருந்தது. தமிழே படிக்காமல், தமிழ் எழுத்துகளே தெரியாமல் சாதியை வைத்து தமிழ் நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தவர்கள்
இவர்கள். மாலை வேளைகளில் அந்தப் பத்திரிகையாளர்களே செய்தி வாசிப்பாளர்கள்போல செய்தி தருவார்கள்.
நாம் இதைக்
குறை கூறுவதற்குப் பதிலாக, குடிமைத் தேர்வுகளுக்கு, தேசிய, மாநில, அரசுப் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு நாமும் நம் பிள்ளைகளைத் தயார்செய்ய வேண்டும். நமது குழந்தைகளும் அதற்கான தகுதியும் திறமையும் பெற்றவர்களே. நாம் அடிக்கடி பொதுவெளிகளில் பேசுவதுபோல, தமிழினமே உலகில் யூதர்களுக்கு நிகரான, அவர்களை மிஞ்சும் ஆற்றல் படைத்த அறிவார்ந்த இனம் என்பதில் ஐயமில்லை. வாருங்கள்! உலகச் சமுதாயத்திற்காக, தமிழ்ச் சமூகமாக மானிட தர்மம் காப்போம்.