news-details
சிறப்புக்கட்டுரை
உணவு அரசியல் – கார்ப்பரேட்டின் கனவு! (அரசியல் இல்லாத வாழ்வியலா? – 03)

உணவு முறை என்பது கடந்த 10,000 ஆண்டுகளை விடவும், கடைசி 50 ஆண்டுகளில் பெரிதும் மாறிப்போயிருக்கிறது என்ற கசப்பான உண்மைக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கிறது, ஓர் உணவு அரசியல். இந்த அரசியலைக் கையிலெடுத்து, தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறது  கார்ப்பரேட் வேளாண்மைஎன்ற கருத்தை  வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவில் வெளியான ஓர் ஆவணப்படம்.

விவசாயிகளை அடிமையாக்கி, சந்தையில் மக்களின் உடல் நலனுக்குக் கேடுதரும் உணவு வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் தேவையைச் செயற்கையாக உருவாக்கி, ஓர் எளிய மனிதனின் வாழ்வியல் தேவையான ஒரு கைச்சோற்றைத் தட்டிப் பறித்துக் கொண்டிருக்கிறது கார்ப்பரேட் புத்தி.

பிறகு ஏன் விவசாயிகள் இவர்களுக்காகத் தங்கள் நிலத்தில் விளைவிக்கிறார்கள்? அவர்களுக்குப் புத்தி இல்லையா? என்று நாம் நினைக்கலாம். இந்தக் கேள்வியை விவசாயியிடமே கேட்டுப் பார்க்கலாம் என்று எண்ணினால், அவர்கள் பதில் என்ன தெரியுமா? “இதைத்தான் நாங்கள் விளைவித்துத் தரவேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறோம்; இயற்கை விதைகள் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, பன்னாட்டு  நிறுவனங்களின் கைகளுக்குள் போய்விட்டன; இவர்களின் பிடியில் மொத்த அரசும் சிக்கியிருக்கிறதுஎன்கிறார்கள். இதைக் கூறியவர் ஓர் அயல்நாட்டு விவசாயி. அவர்களுக்கே  நிலைமை இப்படி என்றால், ஓர் எளிய இந்தியக் கிராமத்து விவசாயியின் நிலைமையை என்னவென்பது?

உணவு ஓர் அரசியல் ஆகிப்போனது பற்றிய எந்த உண்மையும் தெரியாமல் நாமும் விழிப்பற்றுத் தூங்கிக் கொண்டிருக்கிறோம். அன்றாடம் தாம் குடிக்கின்ற கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள வெங்காயம் இருந்தால் போதும் என்ற மனநிலையோடு கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், உணவரசியல் செய்யும் பன்னாட்டுச் சந்தைச் சூதாடிகள், எளிய மனிதர்களின் உணவு உரிமையைப் பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலக அளவில் சந்தைச் சூதாடிகளின் உணவரசியல் ஒரு பக்கம் என்றால், உள்ளூர் அளவில் மாட்டுக்கறியை வைத்து அரசியல்  செய்கிறது மற்றொரு கூட்டம். இரண்டுக்கும் இடையில் சிக்கித் தனிமனிதனின் உணவு உரிமை சந்தி சிரித்து நிற்கிறது.

உணவு என்பது அவரவர் விருப்பம். என்ன சாப்பிடுவது? எதைச் சாப்பிடுவது? சாப்பிடாமல் இருப்பது என்பது எனது விருப்பம்; அந்த விருப்பத்தை, உரிமையைத் தடுத்து நிறுத்தி, அதில் ஒரு வக்கிரத் திருப்தி அடைவதற்கு, அனைத்து வகையிலும் முயன்று கொண்டிருக்கிறார்கள்  அதிகாரம் படைத்தவர்கள் சிலர்.

வட மாநிலங்களில் உள்ள பல நகரங்களில் அப்பாவி மனிதர்கள் உண்ணும் உணவைக் குறிவைத்து நாள்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தியாவின் உணவரசியல். மறக்க இயலாத அளவுக்குக் காணொளியில் சாட்சிகள் குவிந்து கிடக்கின்றன. நல்லவேளை, தமிழ்நாட்டில் பிறந்துவிட்ட காரணத்தால், நாம் தப்பிப் பிழைத்து விட்டோம் என்று இதயம் கூறுகிறது. இப்படிப்பட்ட அநீதிகள் இந்த மண்ணில் நிகழ்ந்துவிடாத அளவிற்கு நமது கலாச்சாரப் பண்புகள் நம்மை வளர்த்தெடுத்திருக்கின்றன.

ஆனாலும், தமிழ்நாட்டின் மீது கார்ப்பரேட்டுகளின் கவனம் இன்றும் அதிகரித்திருக்கிறது. ஏனென்றால், நாம் உணவை மருந்தாக உண்டவர்கள். மருந்தை விஷமாக்கினால்தானே காசு பார்க்க முடியும் என்பது அவர்களின் கணக்கு.

உணவும் உடலும் ஒன்றோடு ஒன்றாக இணைந்து இயங்கும் வாழ்வியலைக் கொண்ட நமது நாட்டில் இன்று உணவைத் தனியாகவும், உடல்நலத்தைத் தனியாகவும் பிரித்து வணிகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் பல பன்னாட்டு நிறுவனங்கள்.

இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்காகச் சொந்த நாட்டின் வளத்தைச் சூறையாடி, உழைக்கும் மக்களின் உணவை அரசியலாக்கி, உழைப்பைச் சுரண்டி, அவர்களின் நலனைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகுவைத்து, மேட்டுக்குடி நலனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போக்கு உலகெங்கிலும் இன்று நடந்து கொண்டிருக்கிறது. நமது நாடும் இதற்கு விதிவிலக்கல்ல.

என்றைக்கு உலகமயமாக்கல் என்ற மாயக்கரம், நம் நாட்டு மக்களுக்குப் பீட்சா, பர்கர், KFC, டோமி னோஸ் என்ற மோகத்தைக் காட்டி வீழ்த்தியதோ, மேட்டுக்குடியினரின் சமையலறைக்குள் வெளிநாட்டு உணவு வகைகளை உலவவிட்டு பரவலாக்கியதோ, அன்றே உணவுக்கான அரசியல் இங்கே வந்து அமர்ந்து விட்டது. ‘உணவே மருந்துஎன்பது, ‘உணவே விஷம்என்றாகிவிட்டது. விளைவு, இதற்கு விலையாக வளரும் நம் இளைய சமுதாயம் வலுவற்ற, நோயுற்ற புதிய தலைமுறையாக உருவாகிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை சர்க்கரை நோய், இதயநோய் இன்னும் பல நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றிருக்கும் இந்த உணவுதான் காரணம் என்றால் நம்ப மறுக்கிறது அவர்களின் மூளை. நம்ப விடாமல் செய்கிறது அவர்களின் நாக்கு. அறிவியலை உணவியலுக்குள் புகுத்திவைத்து, பணமுதலைகளும் சுயநலச் சக்திகளும் ஆடும் இந்த அரசியல் ஆட்டம், நம் கிராமங்கள் வரை ஊடுருவி இருக்கிறது

இன்று பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், பன்னாட்டுக் குளிர்பானங்கள், இறக்குமதி செய்யப்படும் செயற்கை உரங்கள், பயிர்களை நாசமாக்கும் பூச்சிக்கொல்லிகள் என்று அனைத்தும் வரிசை கட்டி நின்று, நம் அன்றாட வாழ்வியலைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த உணவரசியல் சங்கிலித் தொடர் உலகைச் சுற்றி இறுகக் கட்டப்பட்டிருக்கின்றது.

கார்ப்பரேட்டுகளின் பிடியில் அகப்பட்டுள்ள நம் உணவு தானிய உற்பத்தியும் விநியோகமும் மீண்டும் நம் உலகத்தைப் பஞ்சத்தை நோக்கியும் பட்டினிச் சாவை நோக்கியும் இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள் உணவு ஆராய்ச்சியாளர்கள். ஆனால், நீண்ட கால இலாபத்தை, ஒட்டுமொத்த உணவுச்சங்கிலியைக் கைப்பற்றுவதன் வழியாக அறுவடை செய்துகொள்ளலாம் என்ற கனவைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ABCD நிறுவனங்கள்.

யார் இந்த ABCD   நிறுவனங்கள்?’ என்கிறீர் களா? உலக அளவில் எண்ணெய் வித்துகள், உணவு தானிய வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்கள், Archer Burge Cargill  Daniels Midland Dreyfus ஆகியவைதான் இந்த நிறுவனங்கள்.

ஒட்டுமொத்த விவசாயத்தையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வருவதுதான் இவர்களின் இலக்கு. நிலத்தின் மீதான சொத்துரிமை, இரு பொருள்கள், அறிவியல் அறிவுரைகள், காப்பீடு, ஒப்பந்த விவசாயம், கொள்முதல், சேமிப்பு, பதப்படுத்துதல், போக்குவரத்து, சில்லறை விற்பனை அனைத்தையும் அதன் உரிமைகளையும் தங்களின் கீழ் இணைத்துக்கொள்ளப் போகிறார்கள்.

என்னென்னவோ கூறுகிறீர்கள், இதற்கும் நான் உண்ணும் உணவிற்கும் என்ன சம்பந்தம்?’ என்று இனி நீங்கள் கடந்து போய்விட முடியாதுஎளிய மனிதனின்  விருப்பமான மாட்டுக்கறி தொடங்கி, உயர்தர நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் மட்டுமின்றி, கணிசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கீழ் நடுத்தர வர்க்கம் வரை, தங்களின் சங்கிலித்தொடர் விற்பனைக் கூடங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள் இந்தப் பன்னாட்டுச் சந்தைச் சூதாடிகள்.

ஒரு தனிநபர் என்கின்ற வகையில், அமெரிக்காவிலேயே அதிகமான விவசாய நிலங்களை வாங்கி, அவற்றின் சொந்தக்காரராக இருப்பவர் யார் தெரியுமா? கணினி உலகின் கதாநாயகன் பில்கேட்ஸ்!

நம்ப முடிகிறதா? உணவரசியல் எங்கிருந்து தொடங்கி இருக்கிறது என்பது!

இப்போது ஓரளவுக்கு நீங்கள் யூகிக்க முடிந்தால், நீங்கள்தான் அறிவாளி!

(வாழ்வியல் அரசியல் தொடரும்)