news-details
சிறப்புக்கட்டுரை
உள்ளங்கவர் நண்பர்!

எங்கள் வகுப்புத் தோழர்கள் 24 பேர். ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலையில் உயர்ந்தவர்களாக, சிறந்தவர்களாக, பன்முகத் திறமைகள் கொண்டவர்களாக இருந்து, தாயாம் திரு அவைக்குப் பல்வேறு இடங்களில், பல்வேறு பணிகளில் உயர்ந்து, சிறந்து விளங்கிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்கள் வகுப்புத் தோழர்களில்  முதலாவதாக, தற்போதைய அந்தமான் போர்ட்பிளேயர் ஆயர் மேதகு விசுவாசம் செல்வராஜ் அவர்கள் 21.08.2021 அன்று ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.

எங்கள் வகுப்புத் தோழர்களின் குழுவின் மற்றொரு மணிமகுடம் வேலூர் மறைமாவட்டப் புதிய ஆயர் மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள்.

1981-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து ஆயர் அவர்களோடு தோழராகப் பயணித்தது உண்மையிலேயே மறக்க முடியாத நாள்கள், வருடங்கள் நல் அனுபவங்கள்!

சென்னை திரு இருதயக் குருகுலத்தில் இருக்கும்போதிலிருந்தே பல முக்கியப் பொறுப்புகளையும், பதவிகளையும் ஏற்று, சீரும், சிறப்புமாய்ப் பணியாற்றி, தனது தனித்துவத்தை, தலைமைப் பண்பை உயர்த்திப் பிடித்தவர் நண்பர் மேதகு ஆயர் முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள். அந்தக் காலகட்டத்தில் நண்பராம் இவரது சொல், செயல்பாடுகளைக் கண்டு, அனுபவித்து, பெருமைப்பட்டு, பாராட்டி மகிழ்ந்த காலங்கள், நேரங்கள் என்னால் மறக்க முடியாதது.

மேதகு ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் எளிமையை விரும்புகிறவர். அத்துடன் பொறுமையோடு, சீரிய சிந்தனையோடு காரியங்களைத் திட்டமிட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிகரமாக முடிக்க வல்லவர். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். பல இடங்களில் கருத்தரங்குகளை, வகுப்புகளை, கலந்தாய்வுகளை வழிநடத்தியவர்தத்துவவியலில்  அதிக நாட்டமும், ஆர்வமும்  கொண்ட இவர், தனது முனைவர் பட்டத்தை முடித்து, தனது சிந்தனையைச் சீரிய சிந்தனையாகக் கூர்மைப்படுத்திக் கொண்டு சிந்திப்பதோடு மட்டுமல்லாது, குருமடத்திலும், மறைமாவட்ட மக்கள் பணியிலும் அனைவரையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்ற, உரிய ஆலோசனைகளை, வழிகாட்டுதல்களை அளிப்பவர். அதனால் பலன் பெற்ற பலருள் நண்பராகிய நானும் ஒருவன்.

குடும்பத்திலும் சரி, பங்குத்தளங்களிலும் சரி, பாராட்ட வேண்டிய நேரங்களில் பாராட்டியும், உற்சாகப்படுத்தியும், கண்டிக்க வேண்டிய சமயங்களில் திருத்தம் செய்து பலரது உள்ளங்களையும் கவர்ந்தவர் நண்பர் மேதகு ஆயர் முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள். ‘அன்பு இருக்கும் இடத்தில் கண்டிப்பு இருக்கும்என்பது உண்மையே! சில நேரங்களில் தனிப்பட்ட என் வாழ்வில் நண்பர் என்ற நிலையில் நான் இதை அனுபவித்திருக்கின்றேன்.

வேலூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்கும் மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களோடு 1981-ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை 43 ஆண்டுகள் நண்பராகப் பயணிப்பது மறக்க முடியாதவை. பல நற்குணங்களை, பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள ஆயர் அவர்கள் நிச்சயமாக வேலூர் மறைமாவட்டத்தில் குருக்கள், துறவறத்தார், இளைஞர் மற்றும் இறைமக்கள் உயர்வுக்காகஇரக்கமும் எதிர்நோக்கும்என்னும் குறிக்கோளோடு தன் ஆயர் பணியை ஆரம்பித்து ஆண்டவர் அருளோடும், மறைமாவட்டப் பாதுகாவலி கிறித்தவர்களின் சகாய அன்னையின் பாதுகாவலோடும் சீரும் சிறப்புமாய் பணியாற்றிட வகுப்புத் தோழர்கள் நாங்கள் உளமார வாழ்த்தி செபிக்கிறோம்!