news-details
ஆன்மிகம்
கிறிஸ்து என்னும் ஆற்றல் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 7)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச் செல்வன்:தந்தையே, சென்ற வாரம் நீங்கள் ஆன்மிகம் தொடர்பான காரியங்களை அறிவின் பின்னணியில் புரிந்துகொள்ள முயற்சிப்பது சரி என்று சொன்ன அதேவேளையில், அறிவை அதீதமாகத் தூக்கிப்பிடிப்பது எவ்வளவு தவறானது என்பதையும் சிறப்பாக விளக்கினீர்கள். எனினும், இன்றைக்கு இருக்கின்ற பல இளைஞர்களின் பிரச்சினை என்னவென்றால், தங்களின் அறிவுக்கு ஒன்று எட்டவில்லை என்றால், அத்தகைய காரியம் ஒன்றே இல்லை என்கின்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். எனக்கு ஓர் உதாரணம் நினைவிற்கு வருகிறது. ஒரு நபர் கண்தெரியாத மனிதர் ஒருவரிடம், ‘அதோ! தூரத்தில் உள்ள மலை எவ்வளவு அழகாக இருக்கிறது!’ என்றாராம். அதற்கு அந்தக் கண் தெரியாதவர், ‘மலையா? அத்தகைய ஒன்றை என்னால் பார்க்க முடியவில்லை. நீங்கள் என்னிடம் பொய் சொல்கிறீர்கள்என்றாராம்.”

அருள்பணி:மிகவும் சரியாகச் சொன்னீர்கள். தனக்குத் தெரியவில்லை அல்லது புரியவில்லை என்றால், அத்தகைய ஒன்றே இல்லை என்று சொல்வது அபத்தமானது.”

அகஸ்டின்: அப்படியென்றால், ஆன்மிக வாழ்வைப் பொறுத்தமட்டில் எங்களுக்குச் சொல்லப்படுகின்றவற்றை நாங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டுமா?”

அருள்பணி:அப்படிச் சொல்லவில்லை. நம் ஆன்மிக வாழ்வின் அங்கங்களைப் புரிந்துகொள்ள அறிவைப் பயன்படுத்துவது தவறில்லை என்றாலும், அறிவின் எல்லைக்குள்ளேயே நாம் சிறைப்பட்டுவிடக்கூடாது என்றுதான் சொல்கின்றேன். இன்னும் சொல்லப்போனால் இன்றைய சூழ்நிலையில் ஆன்மிகத்தைப் பற்றிய ஏராளமான ஆய்வுகளை உளவியலும் அறிவியலும் மேற்கொள்கின்றன. இவை அனைத்துமே  ஆன்மிகத்தை அறிவின் கண்கொண்டு அணுகுவதற்கான முயற்சியே! அறிவின் கண்கொண்டு ஆன்மிகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்லது என்றாலும், அது போதுமானது அல்ல; அது நம் வாழ்வை உயர்த்தப்போவதில்லை. ஆன்மிகத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, கொஞ்ச நேரமாவது அமைதியாக இருந்து நம் அறிவையும் தாண்டிச் செல்ல முனைவது மிகவும் அவசியமானது. அத்தகைய முயற்சியே ஆன்மிகம் சுட்டிக்காட்டும் அனுபவத்தை நாம் நமதாக்குவதற்கு உதவியாயிருக்கும். இத்தகைய ஆன்மிக அனுபவமே நம் வாழ்வின் ஆழத்தையும் மகிழ்வையும் கூட்டும்.”

மார்த்தா:பாதர், நான் ஓர் உதாரணம் சொல்லலாமா? பிரியாணி பற்றிய எல்லாச் செய்திகளையும் பிறரிடமிருந்தும் இணையத்திலிருந்தும் சேகரிப்பதால் நம் வயிறு நிரம்பிவிடாது. பிரியாணி பற்றிய தகவல்கள் நமக்குத் தேவை என்றாலும், அதைத் தயாரித்து உண்பதே சிறந்ததாகவும் பயன்தருவதாகவும் இருக்கும்.”

கிறிஸ்டினா: தந்தையே, ஆன்மிகத்தைப் பற்றி இன்று உளவியலும் அறிவியலும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்வதாகச் சொன்னீர்கள். நாங்கள் சென்ற வாரம் கேட்ட கேள்வியைக் குறித்து, அதாவது 2000  ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிறிஸ்து எவ்வாறு இப்பொழுது ஆலயத்தில் பிரசன்னமாயிருக்கிறார் என்பது குறித்து இன்றைய அறிவியல் பின்னணியில் நாம் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பு உண்டா தந்தையே?”

அருள்பணி: நம் ஆலயங்களில் கிறிஸ்துவின் பிரசன்னம் உண்டு என்பதைப் புரிந்துகொள்ளும் பொருட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வை நாம் நம் கண்முன் கொண்டு வரலாம். ஆய்விற்குச் செல்வதற்கு முன்பாக ஓர் உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களாகிய நமக்கு இருவகையான உடல்கள் உள்ளன. ஒன்று சதை உடல் (gross body); மற்றொன்று ஆற்றல் உடல் (enegry body). சதை உடலை உயிரோடும் உயிர்ப்போடும் வைத்திருப்பது ஆற்றல் உடலே! ஆற்றலை உடலில் அதிகமாக ஆக்குகின்றபோது, வெறுமனே உயிரோடு இருக்கிற உடல், உயிரோட்டமானதாக மாறிவிடுகிறது. குழந்தைகள் உயிரோட்டத்துடன் இருப்பதற்கான காரணம் அவர்களது உடலில் ஆற்றலின் அளவு அதிகமாக இருப்பதே!”

கிறிஸ்டினா:இதற்கும் இயேசுவின் பிரசன்னத்திற்கும் என்ன தொடர்பு தந்தையே?”

அருள்பணி:இராபர்ட் தே கிராண்டிஸ் என்கின்ற அமெரிக்காவைச் சேர்ந்த அருள்பணியாளர் தனதுHealing Through the Eucharistஎன்ற புத்தகத்தில் குறிப்பிடும் நிகழ்வு இது. அமெரிக்காவின் விண் வெளித்துறை நாசா! (NASA - The National Aeronautics and Space Administration). அங்கு ஆராய்ச்சி அறிவியலாளராக (research scientist) ஒரு நபர் பணி செய்து வந்தார். அவரது ஆராய்ச்சியின் ஒரு முக்கியப் பகுதி, விண்வெளிக் கலன்களில் பயணம் செய்யும் மனிதர்களின் ஆற்றல் உடலைப் பூமியிலிருந்தபடியே ஆய்வு செய்வது. அதன் மூலம் அவர்கள் எத்தகைய மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது. தன் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக அவர் மருத்துவமனைக்குச் சென்று அங்கிருந்த நோயாளிகளின் ஆற்றல் உடல் சார்ந்த பரிமாணங்களை ஆய்வு செய்து வந்தார். இந்த ஆற்றல் உடலை Kirlian கேமரா வழியாகப் புகைப்படம் எடுக்க முடியும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தனது ஆராய்ச்சியில்   மனிதர்களது சதை உடல் இறப்பதற்குச் சில மணித்துளிகள் முன்பாக ஆற்றல் உடல் முழுவதுமாக மறைவதைக் கண்டுபிடித்தார். அதாவது, ஆற்றல் உடல் மறைந்த சில நிமிடங்களில், ஒரு மனிதர் முழுவதுமாக இறக்கிறார் என்பதே அவரது கண்டுபிடிப்பு. இதைப் பல்வேறு ஆய்வுகள் வழியாக உறுதிப்படுத்தினார். ஒருமுறை ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் தன் உதவியாளரோடு, மரணப்படுக்கையில் இருந்த நோயாளி ஒருவர்மீது தன் பரிசோதனையை மேற்கொண்டிருந்தார். நோயாளி இருந்த அறைக்கும், தான் இருந்த அறைக்கும் இடையே கண்ணாடி தடுப்பு வைத்துக்கொண்டு அந்நோயாளியின் ஆற்றல் உடல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அந்நோயாளியின் ஆற்றல் உடல் முழுவதுமாக மறைவதைக் கண்டார். இன்னும் ஒருசில நிமிடங்களில் அந்த நோயாளி இறந்து விடுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால், அந்த இடைவெளியில் அந்நோயாளியின் அறைக்கு ஒருவர் வருவதைப் பார்த்தார். அவரது சட்டைப் பையிலிருந்து அதீதமான ஒளி வருவதை அவரது கேமரா பதிவு செய்தது. அந்நபர் தன் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தபோது, வேறொன்றும் தெரியாத அளவிற்கு ஒட்டுமொத்த அறையே மிகப் பிரகாசமான ஒளியினால் நிரம்புவதை அவரது கிர்லியன் கேமரா பதிவு செய்தது. மேலும், நோயாளியின் மறைந்த ஆற்றல் உடல் மீண்டும் வளர ஆரம்பிப்பதையும் பார்த்தார்.”

மார்த்தா: என்ன ஆச்சரியம்! அங்கு என்ன நடந்தது பாதர்?”

அருள்பணி:அந்த அறிவியலாளர் நோயாளியின் அறைக்குச் சென்றபோது, ஒரு குருவானவர் கிறித்தவரான அந்த நோயாளிக்கு நற்கருணை வழங்கியதை அறிந்துகொண்டார். அங்கு மிக ஆற்றலோடு ஒளிவீசுவதற்குக் காரணமாய் இருந்தது அவர் கொண்டு வந்த நற்கருணையே என்பதையும் புரிந்துகொண்டார். இத்தகைய ஆய்வுக்குப்பின் அந்த அறிவியலாளரின் வாழ்வே மாறிவிட்டது. ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அவர் குருவாக மாறுவதற்காகக் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாராம்.”

அகஸ்டின்:நற்கருணையில் இயேசுவின் ஆற்றல் உடல் மிகவும் வலிமையோடு பிரசன்னமாய் இருந்து, நம் ஆற்றலையும் வல்லமையையும் அதிகமாக்குகிறது என்பதை மிகத் தெளிவாக இந்நிகழ்வு எடுத்துரைக்கிறது தந்தையே!”

(தொடரும்)