news-details
சிறப்புக்கட்டுரை
யூபிலி ஆண்டின் கிறிஸ்துமஸ்!

காரிருள் மறைய பேரொளி உதித்தது!

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளதுஎன்னும் எசாயாவின் இறைவாக்குப் பகுதி (எசா 9:2) கிறிஸ்துமஸ் நள்ளிரவன்று எல்லாத் திருவழிபாடுகளிலும் அறிவிக்கப்படும். அன்றைய இஸ்ரயேல் மக்களின் இருண்ட காலச்சூழல் போன்றே நம்முடைய இன்றைய உலகச் சூழலும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. அடிமைத்தனமும் சந்தர்ப்பவாதங்களும், நாடுகளிடையே போர்களும் ஒடுக்குமுறைகளும் வன்முறைகளும், பேரழிவுகளும் அவற்றினால் புலம்பெயர்ந்து வாழ்வோரின் அடிமைத்தன வாழ்க்கை நிகழ்வுகளும், எதார்த்தங்களும் இவ்வுலகைச் சூழ்ந்திருக்கும் காரிருளாக, இருண்ட மேகங்களாக அமைந்திருப்பதாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்அனைவரும் உடன்பிறந்தோர்என்னும் சமூகச் சுற்றுமடலில் குறிப்பிடுகிறார்.

எசாயாவின் இறைவாக்கு இஸ்ரயேல் மக்களின் இருளான, நம்பிக்கையற்ற, சோர்வான, மகிழ்ச்சியற்ற வாழ்விற்குப் புதிய விடியலைக் கொணர்ந்தது. ‘இருள்என்றாலே நம் அனைவருக்கும் மிகுந்த பயத்தை உருவாக்கும் சூழலில்காரிருள்என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் எசாயா, இஸ்ரயேல் மக்கள் மிகவும் துன்பமான வேதனை மிகுந்த சூழலில் வாழ்ந்தனர் என்றே உருவகப்படுத்துகின்றார். காரிருளை மறைக்க, பேரொளி அவசியமாகின்றது. அது சாதாரண ஒளி என்று குறிப்பிடாமல்பேரொளிஎன்று குறிப்பிட்டு மெசியாவின் மீட்பின் செயலானது இஸ்ரயேல் விரும்பும் விடுதலையை, நம்பிக்கையை, முழுமையான, நிறைவான வாழ்வை வழங்கிடும் என உறுதிப்படுத்துகிறார்.

காரிருள் இவ்வுலகின் இருண்ட சூழல்கள்

காரிருள் நம்மைச் சூழும்பொழுது நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதை நாம் அறிவதில்லை. அச்சூழல் நமக்கு மிகுந்த அச்சத்தைத் தருகின்றது. உள்ளத்தில் பதைபதைப்பும், அமைதியற்ற சூழலும் உருவாகின்றது. வாழ்வின் அடுத்த நகர்வை எப்படி அமைப்பது எனக் குழப்பமும் தெளிவின்மையும் உள்ளத்தை ஆட்கொள்கின்றது. குற்றங்களும், வன்முறைகளும், போர்க் குண்டுகளின் வீச்சுகளும் காரிருளில்தான் நடந்தேறுகின்றன. போர்ச்சூழலில் சிக்கியிருப்போர், புலம்பெயர்ந்தவர்கள், வீடுகளின்றித் தவிப்போர், சாலைகளில் உறங்குவோர், அடுத்த உழைப்பினை எதிர்நோக்கி உறங்குவோர் என அனைவரும் இவ்விருள் எப்பொழுது கடந்து செல்லும் எப்பொழுது வாழ்வு விடியும் எனக் காத்திருப்பது நிதர்சமான உண்மையே. காரிருள் எதிர்நோக்கைத் தருகிறது.

பேரொளி-இயேசு நம்பிக்கையின் கீற்று

யோவான் நற்செய்தியாளர் தன்னுடைய முன்னுரைப் பாடலானவாக்கு மனிதரானார்என்னும் இறைவார்த்தைகளில், இயேசுவை உண்மையான ஒளியாகப் பின்வருமாறு அடையாளப்படுத்துகின்றார். “அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்து கொண்டிருந்தது. ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால்தான் உண்டாயிற்று (யோவா 1:9-10). உண்மையான ஒளியான இயேசுதாம் நம் கடவுள் யார் என்பதை நமக்குக் காட்டுகிறார்.

இறைவனின் முகம் இரக்கத்தின் முகம் என அறிவிக்கின்றார்; கடைநிலையில் இருப்போரைக் கண்ணுற்று, மனிதப் பார்வையை ஒளியேற்றி, எல்லா மனிதர்களையும் இறைவனின் சாயலாகக் காணும் உள்ளொளியை  வழங்குகின்றார். காரிருள் சூழ்ந்த இடத்தில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக, இரவின் இருளை அகற்றிட இயேசு கன்னி மரியின் மகனாக மனுவுடல் எடுக்கிறார் என்கிறார்எத்தகைய இருள் சூழ்ந்த நிலையிலும் நாம் தனியாக இல்லை, கடவுள் நம்மோடு உள்ளார் என்னும் நம்பிக்கையை விதைக்கிறார்.

இவ்வுலகின் காரிருளில் உள்ள பிரிவினைகளைவிட கிறிஸ்துவின் ஒளி மிகவும் பிரகாசமானது; இவ்வுலகை ஒளிர்விக்கக் கூடியதுஎனக் குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். நம் அனைவரின் உள்ளத்திலும் சமூகத்திலும் இருள் சூழ்ந்திருந்தாலும், இயேசுவின் ஒளியானது அவற்றினை முற்றிலும் வெல்லும். நமது குடும்ப உறவுச் சிக்கல்களினால், பொருளாதார ஏற்றத்தாழ்வினால், அரசியல் சூழ்நிலைகளால், சுற்றுச்சூழல்களின் சீரழிவினால் ஏற்படும் இருள் சூழ்ந்த சூழமைவைவிட இயேசுவின் ஒளி பிரகாசமானது என நம்பிக்கைகொள்வதுதான் கிறிஸ்து பிறப்பின் செய்தியாக அமைகிறது. எல்லாக் கருமேகங்களுக்கு இடையேயும் வெள்ளிக் கோடு  ஒன்று உண்டு என்னும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவோம். இவ்விருள் சூழ்ந்த போராட்டங்களும், பிணக்குகளும், அச்சுறுத்தல்களும் அகன்றிட, அகற்றிட முயற்சி மேற்கொள்வோம். யூபிலி ஆண்டில் இயேசுவின் பேரொளியைத் தேர்ந்தெடுப்போம், வளர்த்திடுவோம், வழங்கிடுவோம்.

இயேசுவின் பேரொளியே இவ்வுலகின் இருளை அகற்றிவிடும் மாபெரும் சக்தி. அப்பேரொளியின் பாதை உண்மையை, அமைதியை, மகிழ்ச்சியை, நம்பிக்கையை, மன்னிப்பை, இரக்கத்தை, சகோதரத்துவத்தை வழங்கும் வாழ்வின் பாதையாக விளங்கிடும். ஆகவே, இறைநம்பிக்கையின் மகிழ்ச்சிக்கு இட்டுச்செல்லும்.

நாம் எதிர்நோக்கின் திருப்பயணிகளாகக் கொண்டாடவிருக்கும் யூபிலி 2025 -ஆம் ஆண்டில் நாம் அனைவரும் கிறிஸ்துவின் ஒளியைத் தாங்கியவர்களாக அதனை இறுகப்பற்றியவர்களாகப் பிறரையும், இவ்வுலகையும் ஒளிர்விப்போம்.

இருள் சூழ்ந்த சூழலிலும் இயேசு என்னும் நம்பிக்கையின் ஒளி நம்மைத் தேடி வருகின்றது. அவரை வரவேற்போம். நம்முடைய வாழ்வு  புத்தாக்கம் பெறவும், இக்கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பொருள்படவும், இயேசு என்னும் பாலகனை மையப்படுத்துவோம். அவரின் பேரொளியினால் ஒளிர்விக்கப்பெற்று, சகோதரத்துவத்தினால், சமத்துவத்தினால், அமைதியினால் நிரப்பிடுவோம்!