வேலூர் மறைமாவட்டப் புதிய
ஆயர்
மேதகு முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களுடன்
ஒரு
நேர்காணல்:
அருள்முனைவர்
செ. இராஜசேகரன்
• அன்பு ஆயர் அவர்களே! இறைவன் தங்களை ஆயர் நிலைக்குத் தேர்ந்துகொண்டு, வேலூர் மறைத்தளத்தில் பணியமர்த்தியுள்ளது கண்டு ‘நம் வாழ்வு’ வாசகர்கள் சார்பாகத் தங்களை மனதார வாழ்த்துகிறோம்! இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்! வேலூர் மறைமாவட்டத்தின் ஆயராகத் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டது குறித்து தங்களுக்கு ஏற்பட்ட உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்!
“முதலிலே ‘நம் வாழ்வு’ ஆசிரியர் குழுவிற்கும், வாசகர்களுக்கும், உங்களுடைய உடன் பணியாளர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் செய்தி அறிந்தவுடன் என்னில் இருந்ததெல்லாம் ‘நன்றி உணர்வே!’ பெரிதும் வியக்கும் பல தருணங்களை, நிகழ்வுகளைக்
கடவுள் எனது வாழ்வில் ஏற்படுத்தியிருக்கிறார், ஏற்படுத்துகிறார். இந்தப் பெரும் வியப்பு எனக்கு மட்டுமல்ல, பிறருக்குமானதாகவும் இருக்கும். இந்தக் குறிப்பிடத்தக்க வியப்பையும் கொடுத்த கடவுளுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். என்மீது நம்பிக்கை கொண்ட திருத்தந்தைக்கு என் நன்றி உணர்வினைச் சமர்ப்பிக்கின்றேன். இந்த நிலைக்காக என் தகுதி குறித்து அலசி ஆராய்ந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வேலூர் மறைமாவட்டத்தில் ஆயர் வேண்டும் என்று ஆசித்து செபித்த நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றியைச் சமர்ப்பிக்கின்றேன். எனவே, நன்றி உணர்வே என்னைப் பற்றிக்கொண்டது, ஆட்கொண்டது.
இரண்டாவதாக,
ஒருவித ‘பொறுப்புணர்வை’ உணர்கின்றேன்.
ஆயர் பணி என்பது ஏதோ படிநிலை உயர்வு என்றில்லாமல், மாறாக எனக்குக் கூடுதலான பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்கின்ற உணர்வு என்னை ஆட்கொண்டிருக்கின்றது.
மூன்றாவதாக,
‘செப உணர்வு’.
இது என்னாலான ஒரு செயல் அல்ல; மாறாக, இது கடவுளுடைய திட்டம். கடவுளுடைய இத்திட்டத்திற்கு என்னையே முழுவதும் உட்படுத்த வேண்டும் என்ற உணர்வு என்னில் மேலோங்குகிறது. “ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியுமன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களேயன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல’ என்கிறார் ஆண்டவர்”
(எரே 29:11). இந்த ஓர் இறைத்திட்டம் இன்னும் என் நிலை மறந்து கடவுளின் துணையையே நம்ப வேண்டுமென்று இட்டுச் செல்கின்றது. கடைசியாக, ஒருவித கூட்டு உணர்வு; அதாவது, நான் தனியாக இல்லை; மற்றவர்களும் என்னோடு இருக்கின்றார்கள், மக்கள் என்னோடு இருக்கிறார்கள், அருள்பணியாளர்களும் துறவியரும் என்னோடு இருக்கின்றார்கள் என்கின்ற ஒருவித எதிர்நோக்கோடு கூடிய கூட்டுறவு,
கூட்டுணர்வு என்னை ஆட்கொண்டிருக்கிறது. எனவே, தோழமையில் ஆண்டவரின் திட்டத்தைச் செயலாக்கம் செய்ய முடியும் என்கின்ற நம்பிக்கை என்னிலே இருக்கின்றது.”
•
அன்பு ஆயர் அவர்களே, தங்களுடைய
குடும்பம் மற்றும் பள்ளிப்
படிப்பைப்
பற்றிக்
கூறுங்கள்...…
1966 -ஆம் ஆண்டு,
மே மாதம் 3 -ஆம் தேதி செய்யூரில்
பிறந்தேன். என் பெற்றோர் திருவாளர் பிச்சைமுத்து - திருமதி லூர்துமேரி. மிகவும் இயல்பான, ஆரவாரம் இல்லாத ஓர் அமைதியான குடும்பம். ஒரு குருவுடைய பெற்றோர் என்று பலரும் அறிய இயலாத வகையில் ஒரு சாதாரணமான, மிகவும் எதார்த்தமான குடும்ப வாழ்வை நடத்தியவர்கள். உறவுகள், சுற்றம் என்று பார்க்கின்றபோது, இது ஒரு பெரிய குடும்ப உணர்வை என்னிலே தந்தது. அதுவே மிகப்பெரிய அனுபவங்களைத் தந்தன. இந்துகள் மத்தியில் வாழும் இடமாக எனது வீடு இருந்தாலும், குடும்ப உணர்வில்தான் மற்றவரோடு வாழ்ந்தோம் என்கின்ற அந்த ஓர் எதார்த்தச் சூழல். இப்போது இரண்டு அண்ணன்களின் குடும்பமும், என் அக்காவின் குடும்பமும் பல்வேறு இடங்களில் வாழ்கிறார்கள்.
எனது
ஊர் பல பள்ளிகளைக் கொண்டிருக்கின்றது.
அதனால் என்னவோ படித்தவர்கள் அதிகம். அதனுடைய தாக்கம் இந்தச் சமூக சூழ்நிலையைச் சரியான விதத்திலே கொண்டு செல்ல மக்களுக்கு ஏதுவாக இருந்தது, இருக்கின்றது. ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் களையக்கூடிய சூழலைக் கொண்டு மக்கள் முழுமூச்சோடு இருப்பதை என்னால் உணர முடிகிறது. தனிப்பட்ட விதத்தில் இந்தச் சமூகச் சூழலுக்கு, அதனுடைய தீமைகளுக்கு ஆளானேன் என்று சொல்கின்ற அனுபவம் எனக்கு இல்லை. இது கல்வியினுடைய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
எனது
எட்டாம் வகுப்பு வரை (1971 முதல் 1979 வரை) ஆலய வளாகத்தில் அமைந்திருக்கின்ற தூய மரியன்னை பள்ளியிலே பயின்றேன். அந்த ஆசிரியர்களுடைய முழு மனித வளர்ச்சிக்கான பயிற்சி என்னை உருவாக்கியது. முதலாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை எனக்குப் பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்களின் பெயர்களெல்லாம் இன்னும் பசுமையாகவே இருக்கின்றது. அதில் குறிப்பாக, இரண்டு தலைமை ஆசிரியர்கள் திருவாளர் பத்திநாதன், திருவாளர் லூர்துசாமி. இருவரும் அந்தக் காலத்திலேயே முதுகலைப் படிப்பு முடித்தவர்கள். ஒரு நடுநிலைப் பள்ளியாக இருந்தாலும், மிகத் தகுதி வாய்ந்த தலைமை ஆசிரியர்களை எங்கள் பள்ளி கொண்டிருந்தது. அவர்களை இந்த நேரத்தில் நன்றியோடு நினைவுகூர்ந்து, அவர்களுக்காகவும் செபிக்கின்றேன். பிறகு செய்யூரிலே அமைந்திருக்கின்ற அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாவது, பத்தாவது பயின்றேன். அது மற்றொரு பரிணாமத்தை என்னிலே புகுத்தியது. பிற ஊர்களிலிருந்து வருகின்ற சக மாணவர்களோடு பழகக்கூடிய
வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அன்றைய நாள்களில் ஓர் அரசுப் பள்ளி எப்படி இருந்திருக்கும் என்று உங்களால் எண்ணிப்பார்க்க முடியும். அதுவும் சவாலான ஒரு காலம். ஆயினும், ஒரு நல்ல அனுபவமாக எனக்கு அது இருந்தது!
பிராட்வேயிலுள்ள
புனித கபிரியேல் மேல் நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 -ஆம் வகுப்பிற்காகச் சேர்ந்தேன். அதுவும் குருமாணவர் பயிற்சி இல்லம். எனது சக தோழர்களோடும் குருமாணவர்களோடும்
சேர்ந்து படித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. இப்போதும் கூட எனது வகுப்புத் தோழர்களான அருள்பணியாளர்கள் ராக் சின்னப்பா, லூர்துசாமி, ஜேம்ஸ் ஆகியோர் மிகச் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றனர். அங்குதான் எனக்கு முதன் முதலில் சலேசியர்களுடைய வழிகாட்டுதல் கிடைத்தது.”
•
தங்களுடைய இறை அழைத்தல்
மற்றும்
குருத்துவப்
பயிற்சி
பற்றிக்
கூறுங்களேன்......
“எனது பங்குத்தந்தை நினைவில் வாழும் அருள்பணி கே.எம். தாமஸ் அவர்கள். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போது அவர் பங்குத்தந்தையாக நியமிக்கப்படுகின்றார். அதிலிருந்து எனது வாழ்வில் முக்கியப் பங்குவகித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அதேசமயம், குளூனி அருள்சகோதரிகளுடைய அணுகுமுறையும் எனக்கு உறுதுணையாக இருந்தது. ஆலய வளாகத்தில் அதிக நேரம் செலவிட்ட காலம். பீடச்சிறுவனாகத் திருவழிபாட்டிலும், மாலை செபங்களிலும் கலந்து கொண்ட அந்த அற்புதமான காலம். பத்தாம் வகுப்பில் இருந்தபோது எங்கள் பங்குத்தந்தை இறையழைத்தல் முகாமிற்கு அனுப்பி வைத்தார். எல்லாமே இயல்பாக நடந்தது. பிறகு அந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்டு, சாந்தோம் புனித தோமா இளங்குருமடத்தில் 1981 -இல் இணைந்தேன். முழுமையான உருவாக்கப் பயிற்சியின்போது அருள்பணியாளர்கள் இன்னையா, அருள்ராஜ் அவர்களின் பயிற்சி கடினமாக இருந்தாலும், மிகவும் தேவையானது என்பதைப் பிறகு புரிந்து கொள்ள முடிந்தது. தினமும் மாலை செபம் முடித்து பேராயர் அருளப்பா அவர்களுடைய வகுப்புகள் இன்னும் பல தெளிவுகளைத் தருபவையாக
இருந்தன. அவரது கண்டிப்பு கலந்த அன்பு இன்றும் மறக்க முடியாத ஒன்று.
பிளஸ்
டூ முடித்து ஆயத்தப் பயிற்சியில் (Orientation Course) நுழைந்தேன்.
அந்த நேரத்திலே ஒரு வித்தியாசமான பயிற்சி எனக்குக் கிடைத்தது. அருள் பணியாளர் D. வின்சென்ட், பால்
ஜூலியன், லாரன்ஸ்ராஜ் தங்களையே முழுமையாக ஈடுபடுத்தி எங்களுக்குப் புதிய சூழலுக்கு ஏற்ற ஒரு பயிற்சிப் பாசறையாக இளங்குருமடத்தை அமைத்திருந்தனர். மெய்யியல் பயில
பூவிருந்தமல்லி குருமடத்திற்குச்
சென்றோம். 1988-89-களில் களப் பணிக்காகக் கோவளம் பங்குத்தளம் அமைந்தது. குறிப்பாக, அங்குப் பங்குத்தந்தையாக
இருந்த பி.கே. மேத்யூ
என்னை ஊக்குவித்து சுதந்திரமாகப் பணி செய்யத் தூண்டியதால் அது எனது வாழ்வில் ஒரு திருப்பத்தையும் ஏற்படுத்தியது. அவரது தாராள மனது, உபசரிக்கும் குணம் என் மனத்தில் இன்றும் ஆழமாகவே இருக்கிறது. அதுவும் இயல்பாக நான் மாறுவதற்கு உறுதுணையாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
1989 முதல் 1993 வரை கிராமச்சூழலில்
மக்களின் மனநிலையை இறையியலாக்கும் ஒரு தெளிவோடு நாங்கள் எங்களது இறையியல் பயிற்சியை மேற்கொண்டோம். அப்பொழுது இருந்த பேராசிரியர்களுடைய சமூகக் கண்ணோட்டம், எதிர்காலத் திரு அவைக்கான ஒரு நீரோட்டமாகவும் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. வார இறுதி நாள்களில் ஆவடி, தி.நகர் - சீனிவாச
நகர், பிராட்வே-செயின்ட் மேரிஸ் போன்ற பங்குத் தளங்களிலே பணிபுரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. திருத்தொண்டர் பயிற்சியின்போது சாஸ்திரி நகர் பங்குத்தந்தையாக இருந்த அருள்பணி. அருள் தேவதாஸ் அவர்களுடைய புரிதல், ஊக்குவிப்பு மிகச் சிறப்பானதாகவே அமைந்தன. அந்த மக்களுடைய அன்பும், அவருடைய பாசமும் எனது குருத்துவ வாழ்க்கைக்கு ஓர் அடித்தளமாக அமைந்தன.”
• தங்களுடைய அருள்பணி
வாழ்வு
பற்றிப்
பகிர்ந்துகொள்ளுங்கள்...…
“1993 -ஆம் ஆண்டு, மார்ச் 25 -ஆம் தேதி - கிறிஸ்து பிறப்பு அறிவிப்புப் பெருவிழா நாள் அன்று நாங்கள் ஆறு பேர் குருத்துவ அருள்பொழிவு பெற்றோம். அப்போது பேராயர் கஷ்மீர் ஞானாதிக்கம் சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயராக இருந்தார். அன்றைய நாள் சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்திற்கு மிகச்சிறப்பான நாள். பேராயர் அவர்கள் தங்கள் குருத்துவ அருள்பொழிவின் நாற்பதாம் ஆண்டு நாளைக் கொண்டாடினார்கள். அன்றைய நாளில் பேராயர் அருளப்பா அவர்கள் பணி ஓய்வு பெற்றார். அன்றைய நாளில்தான் பேராயர் கஷ்மீர் அவர்கள் பேராயர் பொறுப்பையும் ஏற்றார்கள். இவ்வாறு பல்வேறு முக்கியமான சிறப்புகளைக் கொண்ட ஒரு நாளாக சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட வரலாற்றில் அமைந்தது. காரணம், வழக்கமாக உயிர்ப்புப் பெருவிழாவுக்குப் பிறகு இரண்டாம் வாரத்தில்தான் குருத்துவ அருள் பொழிவு நிகழும். ஆனால், எங்களுக்குச் சிறப்பான நாளைத் தேர்ந்தெடுத்திருந்தனர்.
குருவாகத்
திருநிலைப்படுத்தப்பட்டபின்,
முதலாம் ஆண்டு சாந்தோம் பேராலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டேன். தந்தை சத்தூர் அவர்கள் எனக்குப் பங்குத்தந்தையாக இருந்தார். அவருடைய உடல்நலக் குறைவின் காரணமாக அருள்பணி. இராயண்ணா அவர்கள் என்னை வழி நடத்தினார். முதலாம் ஆண்டு பங்குப்பணி என்னில் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.
நீங்கள் அறிந்த படி, சாந்தோம் பேராலயம் பலதரப்பட்ட மக்களையும் உள்ளடக்கிய ஓர் இறைச்சமூகம். புனித தோமையாரின் புனித இடம், தூய மயிலை மாதாவின் பிரசன்னம், முன்னாள் பேராயர்களின் கல்லறைகள் என அனைத்துமே வாழ்வின்
எதார்த்தத்தையும், கடவுளின் திட்டத்தையும் எனக்கு எண்பித்தன. அதன் பிறகு 1994-95 -ஆம் ஆண்டில், பல்லாவரம் - தூய சவேரியார் ஆலயப் பங்கிற்கு உதவிப் பங்குத் தந்தையாகச் சென்றேன். தந்தை பிரிட்டோ அவர்கள் பங்குத்தந்தையாக இருந்தார். அந்தப் பங்கு ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த, விசாலமான இறைச்சமூகம். இராஜாஜி நகர், பொழிச்சலூர் போன்ற பங்குகள் அப்போது இதன் கிளைப் பங்குகளாக இருந்தன. ஒரு பாசமான இறைச்சமூகத்தையும், அந்தப் பங்கில் வளரும் நிலையிலிருந்த ஒரு பள்ளியையும் கொண்ட பங்கு. அருள்பணி. பிரிட்டோ அவர்களின் சகோதர பாசத்தையும், புதிய பணிகளை முன்னெடுக்க ஊக்குவிக்கும் விதத்தையும், அதிலும் குறிப்பாக, பிரிஜிடைன் தலைமை அன்னை எமல்டாவின் ஆன்மிக வழிகாட்டுதலையும் என்னால் மறக்க இயலாது. காரணம், நான் குருமடம் அழைக்கப்பட்டபோது அதற்கான ஆயத்தப் பணிகளில் அவருடைய வழிகாட்டுதல் எனக்குத் துணையாக இருந்தது.
குருமடத்திற்குப்
பேராசிரியராகச் சென்றபோது இராமாபுரம், போரூர் பங்குகளுக்குப் பணிசெய்ய வாய்ப்பு கிடைத்தது. பேராசிரியர் பணி மற்றும் உயர் படிப்புக்குச் சென்ற பிறகு நேரடியான ஒரு பங்கு அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கிலே என் விருப்பத்தை ஆயரிடம் தெரிவித்தபோது, செங்கை மறைமாவட்டப் பேராலயத்தின் பங்குத் தந்தையாகவும், மறைமாவட்ட முதன்மைக் குருவாகவும் நியமிக்கப்பட்டேன். அறிமுகம் இல்லாத நபராகப் பங்கிற்குச் சென்றேன். முதலிலே சற்று தயக்கம் எனக்கும், இறைச்சமூகத்திற்கும். ஆனால், நாளடைவில் எல்லாமே நன்றாக அமைந்தன. பல்வேறு
பணிகளை உதவிப் பங்குத்தந்தையரோடு மேற்கொண்டதில் ஐந்து ஆண்டுகள் மிக வேகமாகவே சென்றன. அதுவும் ஒரு மகிழ்ச்சியான தருணமாகவே இருந்தது.
அதன்
பிறகு ஒரகடம் என்னும் மறைத்தளம். எனது பணிவாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திய மக்கள். சாதாரண, எளிமையான, அன்புள்ள, பக்தியுள்ள மக்கள்; இறைவார்த்தையைக் கையிலும் நெஞ்சிலும்
சுமந்திருக்கும் மக்கள். பல திறமைகளைக் கொண்ட
சிறார்கள், நற்செய்திப் பணிக்கான கிளைப்பங்குகள் யாவும்
ஓர் அனுபவமே! அங்கே கிளைப்பங்காக ஆரம்பாக்கம் இருந்தது. அன்பான
மக்கள், அதிலும் குறிப்பாக ஆலயப் பணிகளில் ஆர்வமிக்க பெண்கள் மற்றும் சிறுவர்களுடைய முழு ஈடுபாடு கொண்ட ஓர் இறைச்சமூகம்.
அதன்
பிறகு பங்குப் பணியாளனாக பல்லாவரம் - தூய சவேரியார் ஆலயத்திற்குச் சென்றேன். அந்த நேரத்தில்தான் எனக்கு மற்றொரு பொறுப்பும் தரப்பட்டது. அதாவது, திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் இயக்குநராகப் பணியமர்த்தப்பட்டேன். பங்குப் பணியில் முழுமையான கவனம் செலுத்த முடியாவிட்டாலும் ஓராண்டு காலம் என்னால் முடிந்த அளவுக்கு எனது பணிகளை ஆற்றினேன். தலத் திரு அவையின் இறைச்சமூகம் எத்தனை முக்கியமானது, ஒவ்வொரு சகோதரனும்-சகோதரியும், பெற்றோரும்- பெரியோரும், இளையோரும்-சிறுவர் சிறுமியரும் குழந்தைகளும் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து கொண்டேன். இறைப்பணி
என்பது மக்களுக்கானது; மக்கள் மிக மிக முக்கியமானவர்கள்; அவர்கள் இல்லையேல் நம் பணிக்கு அர்த்தமே இல்லை என்ற உணர்வு எனக்குப் புரிந்தது. அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன். சுருக்கமாகச் சொல்லப் போனால், மக்கள் இல்லையேல் என் பணிக்கு அர்த்தம் இல்லை என்ற ஓர் உணர்வு.
உதவிப்
பங்குத்தந்தையாக ஏறக்குறைய 16 இளங்குருக்கள் என்னோடு பணியாற்றியுள்ளனர். அவர்களுடைய திறமைகளைக் கண்டுணர்ந்து, முறையாக அவர்களை ஊக்கப்படுத்தினால் பல அற்புதங்களை அவர்கள்
புரிவார்கள் என்ற அனுபவத்தையும் நான் பெற்றேன். மக்களை மையப்படுத்திய ஆன்மிகம், அதிலும் குறிப்பாக, பக்த சபைகள் எவ்வளவு முக்கியம் என்பதை அனுபவப்பூர்வமாகக் கண்டுணர்ந்தேன். இளையோர், சிறுவர் - சிறுமியர் இவர்கள் நாளைய திரு அவைக்கு அல்ல; மாறாக,
இன்றைய திரு அவைக்கு அவர்கள் தேவை! இன்றைய பங்குப் பணிகளுக்கு அவர்கள் தேவை என்பதை உணர்ந்தேன். அருள்பணியாளர்களும் துறவியரும் இணைந்து பணியாற்றினால் மக்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என உணர்ந்தேன். இயேசுவை
மையப்படுத்திய ஆன்மிகமே மக்களை மையப்படுத்திய அன்புப்பணிக்கு நம்மைத் தூண்டும் என்பதே எனது அனுபவம்.”
•
குருமாணவர் உருவாக்கப் பணியில்
தங்களுடைய
பங்களிப்பு
சிறப்பாக
அமைந்திருந்தது.
அது
பற்றிக்
கூறுங்களேன்...…
“1996-இல் எனது மேற்படிப்பிற்குச் செல்வதற்கு முன் ஓராண்டு பணிமுன்னோட்டக் காலம் எனப்படும் (Probation Period) பேராசிரியராகக்
குருமடம் சென்றேன். அங்கு சலேசியக் குருக்கள் மற்றும் மறைமாவட்டக் குருக்கள் பேராசிரியராக இருந்தார்கள். அப்பொழுது அருள்பணி. மரிய கனகா இல்லத்தந்தையாக இருந்தார். அருள்பணி.
லாரன்ஸ் பயஸ் (தற்போது தருமபுரி ஆயர் அவர்கள்) மெய்யியல் துறைத் தலைவராக இருந்தார்கள். இருவரும் மற்றப் பேராசிரியர்களும் சிறப்பாக வழி நடத்தினார்கள். என்னை உருவாக்குவதிலும் மேற்படிப்புக்கான தயாரிப்பிலும் மிகவும் எனக்கு வழிகாட்டியவர்கள் இவர்களே! அவர்களை நன்றியோடு நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போதைய குருமாணவர்களையும் உள்ளன்போடு நினைத்துப் பார்க்கிறேன். பிறகு இரண்டு ஆண்டுகள் பெல்ஜியத்திலும், மூன்றாண்டுகள் உரோமையிலும் உயர் படிப்பை முடித்தேன். 2001 முதல் 2008 வரை பூவிருந்தவல்லி - திரு இருதயக் குருமடத்தில் குருமாணவர்களோடும் பேராசிரியர்களோடும் அங்குப் பணிபுரிகின்ற பணியாளர்களோடும் பெரும் மகிழ்வோடு பணியாற்றினேன். மகிழ்ச்சியான
நாள்கள் அவை. அருள்பணி. S.J. அந்தோணிசாமி,
அருள்பணி. Y.J. இக்னேசியஸ்
பிரசாத் இருவரும் இல்லத் தந்தையர்களாக இருந்த காலகட்டத்தில் நான் உதவி இல்லத்தந்தையாக இருந்தது மகிழ்ச்சிக்குரிய தருணமாக அமைந்தது. நூலகம் மற்றும் பதிவாளர் பொறுப்பையும் மேற்கொண்டிருந்தேன். நூலகத்தைக் கணினி மயமாக்கியதில் பெரும் மகிழ்ச்சி. அப்போது இருந்த சகோதரர்கள் குறிப்பாக, தஞ்சை மறைமாவட்டத்தைச் சார்ந்த சகோ. குழந்தை எனக்குச் செயலராக இருந்து மிகவும் உதவி புரிந்தது குறிப்பிடத்தக்கது.
‘Self-formation is the best formation!’ - இதுதான் எனது தாரக மந்திரமாக இருந்தது. ‘The candidate is the AGENT of the formation’ என்கின்ற
கருத்தை அடிக்கடி வலியுறுத்துவேன். வெளியிலிருந்து வகுப்பிற்கு வரும் மற்ற துறவற சபை குருமாணவர்கள் உள்பட தொடக்கத்தில் எனது மனநிலையோடு குருமாணவர்கள் போராடினாலும், எல்லாம் அவர்கள் மீதுள்ள அன்பினாலும், அக்கறையினாலும் என்பதனை நாளடைவில் உணர்ந்தவர்களாக, பிறகு என்னை முழுமையாக நேசிப்பவர்களாக இருப்பதை நான் கண்கூடாகக் காணமுடிந்தது. அது பெருமையாகவே இருந்தது.
எனது
25 -ஆம் ஆண்டு குருத்துவ வெள்ளி விழாவை நான் சிறப்பாகக் கொண்டாடவில்லை. ஆனால், படப்பை பங்கில் இருந்தபோது என்னுடைய குருமாணவர்களை, அதாவது ஏழு, எட்டு ஆண்டுகள் என்னோடு குருமடத்தில் இருந்தவர்களை அழைத்திருந்தேன்.
வெளிநாட்டில் இருந்த மாணவர்கள் வாழ்த்துத் தெரிவித்ததோடு இங்கு இந்தியாவில் இருந்த பல்வேறு மறைமாவட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களில் 93 குருக்கள் (என் குருமாணவர்கள்) கலந்துகொண்டார்கள். இது குருமாணவர் உருவாக்கப் பணியில் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசாகவே கருதுகிறேன். அவ்வாறே, என்னோடு மிக நெருக்கமாகப் பணிபுரிந்த அருள்பணி. பீட்டர் சூசைமாணிக்கம், அருள்பணி. கிறிஸ்டோபர் ஆகியோருடைய நட்பையும், தோழமையையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இளம்
குருமாணவர்களை வழிநடத்துவது என்பது ஓர் உன்னதமான பணி. அதேசமயம் இது ஒரு கூட்டுப்பணி என்பதை நான் உணர்ந்தேன். பேராசிரியர் அனைவரும் இணைந்து கூட்டு முயற்சியில் இவ்வுருவாக்கப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது எனது அனுபவம். குறிப்பாக, ஏழை குருமாணவர்களை நாமே அடையாளம் கண்டு அவர்களுக்கு எந்தவிதக் குறையும் இல்லாமல் பேண வேண்டும் என்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். அவர்கள் நம்மிடம் வருவதைவிட, நாமே அவர்களை அடையாளம் கண்டு இத்தகைய உதவிகளைச் செய்ய வேண்டும் என உணர்ந்தேன். ஒரு
பேராசிரியர் பணி என்பது வெறும் பாடம் எடுப்பது மட்டுமல்ல; மாறாக, அவர்களுடைய வாழ்க்கையில் நாம் தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும் என விரும்பினேன்.
சமூக
விடுதலை பற்றி அதிகமாகப் பேசிய தருணத்தில் எனது எண்ணமெல்லாம் தனிமனித விடுதலையை ஒவ்வொரு குருமாணவனும் அனுபவிக்க வேண்டும் என்பது எனக்கு முக்கியமானதாகத் தென்பட்டது. அதே வேளையில், அவர்களுடைய குழந்தைப் பருவ மனக்காயங்களிலிருந்து அவர்கள் விடுதலை பெற பேராசிரியர்கள் ஆற்றுப்படுத்தும் வழிமுறைகளையும் கண்டுணர வேண்டும் என்பதும் முக்கியமானதாகத் தென்பட்டது. கண்டிப்பாக அதுவே சமூக விடுதலைக்கு அடித்தளமாகவும் கூர்மை நோக்குடைய மேய்ப்புப் பணிக்கு உரமாகவும் அமையும் என்பதையும் நான் உணர்ந்தேன்.”
•
திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப்
பணியின்
பொறுப்பாளராகப்
பணியாற்றியது
பற்றி
உங்களுடைய
அனுபவங்கள்...…
“இதுவும் திடீரென எனக்குக் கிடைத்த ஒரு வியப்பு. இது முற்றிலும் வேறுபட்ட ஒரு புது வகையான பணி. எனக்கு அதிக அனுபவம் இல்லாத ஒரு பணி. ஆனால், பின்னாளில் மிகப்பெரிய அனுபவமாக அது அமைந்தது. இந்தியாவில் உள்ள அனைத்துக் கத்தோலிக்க மறைமாவட்டங்களுக்கும் குறிப்பாக, இலத்தீன் வழிபாட்டு முறையில் 132 மறைமாவட்டங்களுக்கும் நேரடியாகவும் மற்ற வழிபாட்டு முறையில் உள்ள மறைமாவட்டங்களுக்குக் கூடுதல் வழிகாட்டியாகவும் பணியாற்றக்கூடிய ஒரு களம் அது. நல்லதொரு தளம் இது. இப்பணி ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. இந்தியச் சூழலில் - பல்வேறு கலாச்சார பண்பாடுகள், சமுதாய
வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள ஒரு சிறப்பான வாய்ப்பாக இது இருந்தது.
இந்தியாவைப்
பொருத்தவரையில், மறைப்பணிக்கான களம் இன்னும் அதிகமாகவே இருக்கிறது என்கின்ற ஓர் எதார்த்தச் சூழலைக் காணமுடிகிறது. இந்திய ஆயர் பேரவையோடு பணிபுரிய சிறந்த வாய்ப்பாக அமைந்தது. உரோமைக்கும், இந்தியத் தலத்திரு அவைக்கும் இடையே ஓர் உறவுப் பாலமாகப் பயணிக்கக்கூடிய ஒரு வாய்ப்பையும் இந்தப் பொறுப்பு வழங்கியிருக்கிறது. புதிய திட்டங்கள், அணுகுமுறைகள், அமைப்பு முறைகள் என அனைத்து முயற்சிகளையும்
மேற்கொண்டோம். இந்திய ஆயர் பேரவை நிர்வாகிகளிடமிருந்து பெரும் ஒத்துழைப்பும், அரவணைப்பும் கிடைத்தது. அனைவருக்கும் இவ்வேளையில் என் நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னோடு
இணைந்து Pontifical Mission Organization (PMO) - இல் பணியாற்றியவர்கள் குறிப்பாக, மண்டலப் பொறுப்பாளர்களாகவும் (Region PMO), மறைமாவட்டப்
பொறுப்பாளர்களாகவும்
(Diocesan PMO), பணியாற்றியவர்களையும்
மற்றும் இந்தப் பணித்தளத்தோடு தொடர்பு கொண்ட அத்தனை உடன் உழைப்பாளர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இவ்வேளையில்,
திருத்தந்தையின் மறைத்தூதுப் பணியகம் மற்றும் மறைத்தூதுக் கழகங்களைப் பற்றி ஒருசில கருத்துகளையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதாவது, திருத்தந்தையின் மறைத்தூதுக் கழகங்கள் (அ) பணியகம் (known as Pontifical Mission Societies (PMS) in
worldwide) நான்கு
கிளைகளைக் கொண்டது.
1. Pontifical
Society for the Propagation of the Faith (PSPF): மறைபரப்பு ஞாயிறு வாயிலாக மக்கள் மத்தியில் மறைபரப்புப் பணியின் அவசியத்தை உணர்த்திச் செபிக்கவும் பொருளுதவி செய்யவும் பணிகளை மேற்கொள்ளும் ஓர் அமைப்பு. இது உலக அளவில் மறைப்பணி மேம்பாட்டிற்காக குறிப்பாக, மறைமாவட்ட மேய்ப்புப் பணிகளுக்குப் பொருள் உதவிபுரிந்து வருகிறது.
2. Pontifical
Society of St Peter the Apostle (PSSPA):
இது அருள்பணியாளர்கள், வேதியர்கள் மற்றும் அர்ப்பண வாழ்வில் ஈடுபடும் துறவறத்தாரின் ஆன்மிக மற்றும் கல்வி சார்ந்த உருவாக்கப் பணிகளுக்காகப் பொருளுதவி செய்யும் அமைப்பு.
3. Pontifical
Society of Missionary Childhood Associations (MCA): இது குழந்தைகளே, குழந்தைகளுக்கு உதவ முன்வரும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் அமைப்பு. குழந்தைகளுக்கான நலத்திட்டங்களுக்குப் பொருளுதவி புரியும் அமைப்பு.
4. Pontifical Missionary Union
of the
Clergy, the Religious and the Consecrated Laity (PMU): குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலைத் திருத்தொண்டர்களுக்கான பயிற்சிக்குப் பொருளுதவி செய்யும் அமைப்பு. இவ்வமைப்பு உலகளவில் பொதுநிலையினர் மத்தியில் இறையழைத்தலை ஊக்குவிக்கும் பயிற்சிகளை முன்னெடுக்கும்.
திருத்தந்தையின்
தலைமையின்கீழ் இயங்கும் மறைத்தூதுப் பணிகளில் இந்த நான்கு அமைப்புகளும் ஒன்றிணைந்து புதிய மறைத்தளங்களில் மறைபரப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட செபங்களும் பொருளுதவிகளும் நாம் தந்திட நம்மை ஊக்கப்படுத்துகின்றன. இறைமக்களாக நாம் செபிப்பதோடு இறைப்பணி தொடர்வதற்கான பொருளுதவிகளை வழங்குவதால் புதிய மறைப்பணிகளும் புதிய மறைத்தளங்களும் வலுவூட்டப் பெறுகின்றன.
மறை
மாநில அளவில் (Regional Level), தேசிய
அளவில் (National Level), பிராந்திய அளவில் (Continental Level), சர்வதேச
அளவில் (International Level) நிர்வாகக்
கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு படிநிலைகளிலும் உள்ள அலுவலகத்தோடும் அலுவலகப் பணியாளர்களோடும் அமைப்பு முறையோடும் தொடர்பு கொண்டிருக்கக்கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. திரு அவையின் மறைபரப்புப்பணி பற்றிய விசாலமான ஒரு பார்வை, ஆழமான அனுபவம், சில சவால்கள் - எல்லாமே ஒரு தனித்துவமான ஒரு புதிய அனுபவமே!
பிராந்திய
உறுப்பினர்கள் அண்மையில் பிராந்திய பொறுப்பாளர்களாக ஐந்து நபர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் திருத்தந்தையின் மறைபரப்புப்பணி உயர்மட்டக் குழு ஆலோசனை உறுப்பினராக இருப்பார்கள். அதில் நானும் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இது இந்திய நாட்டிற்குப் பெருமை தரக்கூடிய ஒன்று. மேலும், நாம் மேற்கொள்ளும் மறைப்பணிகளால் நமது நாட்டிற்குக் கிடைத்திருக்கும் ஓர் அங்கீகாரம் என்றே கருதுகிறேன்.”
•
வேலூர் மறைமாவட்டத்திற்காகத் தாங்கள்
கொண்டுள்ள
கனவு...…
“திறந்த மனத்தோடு செல்கிறேன். அருள்பணியாளர்கள், துறவியர், இறைமக்களோடு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு செல்கிறேன். பொதுநிலையினரை வலுப்படுத்த வேண்டும்; பங்கேற்புத் திரு அவையாக வேலூர் மறைமாவட்டம் திகழவேண்டும் என்ற ஆசையோடு செல்கிறேன். ‘இரக்கத்தோடும் எதிர்நோக்கோடும்’ என்
மறைமாவட்டத்தை வழிநடத்த வேண்டும் என்ற எண்ணம் என்னில் மேலோங்கியிருக்கிறது. விளிம்புநிலை மக்கள், ஏழை மக்கள் இவர்களைக் குறித்து மறைமாவட்டமாக இணைந்து அவர்களைத் தூக்கிவிட வேண்டிய மனநிலையை எல்லாரிடமும் உருவாக்க வேண்டும், எல்லாரும் சேர்ந்து இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும், அத்தகைய திரு அவையைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற எண்ணம் என்னில் மேலோங்கியிருக்கிறது. இது பொருளாதாரத் தன்னிறைவு, தற்சார்பு சம்பந்தப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து புதிய மறைப்பணி முன்னெடுப்புகளை இந்திய ஆயர் பேரவையின் மேய்ப்புப்பணித் திட்டத்தோடு மேற்கொள்ள வேண்டும் என்ற மனநிலையோடு செல்கிறேன்.”
•
பொன்விழாக் காணும் ‘நம்
வாழ்வு’ வார இதழின்
வாசகர்களுக்குத்
தங்களுடைய
செய்தி...…
“பொன்விழாக் காணும் தமிழ்நாடு திரு அவையின் - நல்லவர்களின் நாடித்துடிப்பு ‘நம் வாழ்வு’ வார இதழின் நிர்வாகத்தினருக்கு எனது மனமார்ந்த பொன்விழா வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். நம் வாழ்வின் நீண்ட நெடிய வளர்ச்சியைப் பார்க்கிறேன். முன்னாள் ஆசிரியர்கள், அங்குப் பணிபுரிந்த பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். தற்போது இவ்விதழில் புதிய பரிணாமத்தைப் பார்க்கிறேன். இப்பொழுது இருக்கின்ற முதன்மை ஆசிரியரையும், அவரோடு இணைந்து பணியாற்றும் உடன் ஆசிரியர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் எழுத்தின் வலிமையைத் தொடர்ந்து சமூகத்திற்கு உணர்த்தி வருகிறீர்கள். உங்களது படைப்புகளும், வெளிவரும் கட்டுரைகளும் நமது களஎதார்த்தத்தைச் சிறப்பாகவே அடையாளப்படுத்துகின்றன. அது தாக்கத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கிறேன். நான் ஒவ்வொரு வாரமும் உங்கள் தலையங்கத்தை வாசிக்கத் தவறுவதில்லை. அது இந்திய, தமிழ்நாடு அளவில் அந்தந்த வார நடப்பு நிகழ்வுகளை முழுமையாக அறிந்திடச் செய்கிறது. வாழ்த்துகள்! ‘நம்முடைய எழுத்து எவரையுமே பாதிக்கவில்லை என்றால் அது எதற்கு?’ என்ற கேள்வியை எழுப்புவார் அருந்ததிராய். ஆகவே, நமது எழுத்துகள் எவரையேனும் பாதிக்க வேண்டும். சிந்தனையைத் தூண்ட வேண்டும். செயல்பாட்டிற்கு அழைத்திட வேண்டும். அத்தகைய கோணத்தில் இறைவார்த்தையில் ஊன்றிய சமூக-அரசியல் பணிக்கு நம்மை வழிநடத்தும் ‘நம் வாழ்வு’க்கு என் வாழ்த்துகளும் நன்றியும்.