news-details
சிறப்புக்கட்டுரை
போர் இல்லாத புது உலகம் பிறக்கட்டும்!

நாம் வாழும் இந்த அழகிய உலகில் என்றுமில்லாத அளவுக்கு இன்று போர்மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. அமைதியின் அரசர் இயேசு பிறந்த புண்ணிய பூமியில், இஸ்ரேல்-பாலஸ்தீன மக்களிடையே ஓயாத போர், கிறித்தவர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் இரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே நிகழும் யுத்தத்தால் இருதரப்பு மக்களிடையே பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில்பைரிக் விக்டரியை’… (Pyrrhic Victory) போரின் பாதிப்பிற்கிடையே கொண்டாடி வருகின்றனர். ஏன், ‘மதங்களின் பிறப்பிடம்என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் நமது நாட்டின் மணிப்பூர் மாநிலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத, இனக்கலவர வன்முறைகளால் பற்றியெரிந்து கொண்டு இருக்கின்றது. இவ்வன்முறையைத் தூண்டியதும், இதை நடத்துவதும் மாநில-ஒன்றிய அரசுகளே என்று சொல்லப்படுகின்றது. இத்தகைய அமைதியற்ற சூழ்நிலையில் அன்பின் அரசர், அமைதியின் மன்னன் இயேசுவின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். அத்துடன் ஜனவரி 1, 2025 அன்று திரு அவைஉலக அமைதி விழாவை’… கொண்டாட திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த இனிய நன்னாளில், ‘எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களுக்கு அமைதி அருளும்என்னும் அருமையான மையக்கருத்தைத் தியானிக்கவும், செயல்படவும் திருத்தந்தை அழைக்கின்றார். புத்தாண்டில் நாம் மன்னிப்பைப் பெற்று, பிறருக்கு மன்னிப்பை வழங்கி, அமைதியின் தூதர்களாக வாழ்ந்து, எவ்வாறு போரில்லாத புத்துலகம் படைக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

இப்பிரபஞ்சத்தைப் படைத்து, அதைப் பராமரிக்கப் படைக்கப்பட்ட மனிதன், கீழ்ப்படியாமையால் கடவுளின் தண்டனைக்கு ஆளாகிறான் (தொநூ 3:14-19). ஆயினும், அன்பும் இரக்கமும் உள்ள கடவுள், ஒருபுறம் நீதியின் அடிப்படையில் தவறிழைத்த மனிதனுக்குத் தண்டனை வழங்கவேண்டிய இக்கட்டான நிலையில், பாவமன்னிப்பும் அமைதியும் வழங்கஅமைதியின் அரசரை’… அனுப்புவதாக (எசா 9:6) வாக்களிக்கின்றார். அவ்வாக்குறுதி தூய ஆவியினால் மரியா கருவுற்று (லூக் 1:31), இயேசுவின் பிறப்பால் (லூக் 2:11) நிறைவு பெறுகின்றது. “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14). கடவுள் வடிவில் விளங்கிய இவர் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனித உருவில் தோன்றி, தம்மையே நமக்காகச் சிலுவையில் தியாகமாகக் கையளித்தார் (பிலி 2:6-8). இவ்வாறு நாம் அனைவரும் அவரால் தூய்மையாக்கப்படுகின்றோம். அதனால் நாம் அவரது இறைத்தன்மையில் பங்குபெற்று (2பேது 1:4), அவரது சகோதரர்-சகோதரிகளாகின்றோம் (எபி 2: 11).

நாம் பிறரை மன்னித்து, மன்னிப்பைப் பெறும்போது, நமது மனச்சுமைகளை இறக்கி வைக்கின்றோம். இயல்பாகவே மன அமைதி பெறுகின்றோம். உடல் நோய்களும், மன நோய்களும் நீங்கி மகிழ்ச்சி அடைந்தவர்களாய், நமது விண்ணகத் தந்தையைப்போல நிறைவுள்ளவர்களாய், கடவுளின் மக்களாய் வாழ்வோம். இக்கருத்தை

மனநலம் மன்னுயிர்க் காக்கும் இனநலம்

எல்லாப் புகழும் தரும்’…(குறள் 457)

என்கிறார் திருவள்ளுவர். அதாவது மனத்தின் நலம் உயிர்க்கு ஆக்கமாக விளங்கும். சமூக நலமே எல்லாப் புகழையும் (உலகுக்கு) வழங்கும். எடுத்துக்காட்டாக, ஒரு குளத்தில் கல் எறியப்படும்போது, தண்ணீரில் அலைகள் தோன்றி அழகூட்டுவதுபோல, ஒரு தனிமனிதனில் ஏற்படும் மன்னிப்பு, மன அமைதி ஆகிய பண்புகள் சமுதாயத்திற்கும் பரவி, நேற்றைய சமுதாயத்தைவிட இன்றைய சமுதாயம் மெருகடைகிறது.

2019-இல், உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்திலிருந்த தெற்கு சூடான் பகுதியில் ஜனாதிபதி சால்வ கிர், மற்றும் அந்நாட்டு முக்கியத் தலைவர்களின் முன்பாக மண்டியிட்டு, அவர்களது பாதங்களை முத்திசெய்து, அந்நாட்டில் மன்னிப்பையும் அமைதியையும் கொண்டு வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்அவரது இச்செயலால் தெற்கு சூடானில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். அதேபோல, அக்டோபர் 2024-இல் ஒரு செப வழிபாட்டின் வேளையில், திரு அவையின் தவறுகளுக்காக இறைவனிடமும், இறைமக்களிடமும் மன்னிப்புக் கேட்டு, உலக அமைதிக்காகச் செபித்தார். இவரது முயற்சியால் உலக மக்களிடையே ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது.

இருப்பினும், அமைதியின் அரசர் கிறிஸ்து பிறந்து 20 நூற்றாண்டுகளாகியும், அவர் பிறந்தது முதல் உயிர்த்தது வரை வாக்களித்தஅமைதி’… (யோவா 14:27) என்கிற மாபெரும் செல்வம் எட்டாக் கனியாகவே உள்ளது! நமது பாவ இயல்பால் இக்கொடையை நமதாக்கிக்கொள்ளவில்லை. எவ்வாறு  அமெரிக்காவில் உள்ள ஒரு மகன், தனது தாய்க்கு மாதம் தவறாது 1000 டாலர் நோட்டை அனுப்பினாலும், அதன் மதிப்பறியாதுபச்சைக் காகிதம் தானேஎன்று தனது சுருக்குப்பையில் போட்டுக்கொண்டு தாய் வறுமையில் வாடுகிறாரோ, அதேபோல, கிறிஸ்துவின் மதிப்பீடுகள் பெரும்பாலும் நமக்கு இன்றும்கருத்தியல்ரீதியாகத்தான்உள்ளதே தவிர, இன்னும் நம் வாழ்வின் நீரோட்டத்தில் கலக்கவில்லை.

நிறைவாக, நாம் சாதி, சமயம், இடம், இனங்களைக் கடந்து, ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுகின்றோம். அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கமிருக்கும். சிறார்கள் புதுப்பொலிவுடன் இருக்க புத்தாடை, விதவிதமான கேக்குக்காக ஏங்குவார்கள். நம் அகத்தில் நிறைந்துள்ள பகைமையை நீக்கி அன்பை விதைப்போமென்றால், கயமையை நீக்கி மன்னிப்பை அளிப்போமென்றால், நல்மனம் கொண்ட நமக்கு அமைதியும் மகிழ்ச்சியும் வழங்கும் நிலையில், நாம் போரில்லாத புத்துலகம் படைக்க முடியும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ்- புத்தாண்டு நல்வாழ்த்துகள்!