வேலூர் மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயராகப் பொறுப்பேற்கவுள்ள பேரருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களின் ஆயர் திருநிலைப்பாட்டு நிகழ்வினை (டிசம்பர் 9-ஆம் தேதி, 2024) மிகுந்த மகிழ்வோடும் ஆர்வத்தோடும் பெருமிதத்தோடும் எதிர்நோக்கி இருக்கின்றோம்.
சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு, பணியாற்றி, செங்கல்பட்டு மறைமாவட்டம் உதயமாகியபொழுது, அதன் அங்கமாகி, மிகுந்த மதிப்புப் பெற்ற அருள்பணியாளராகச் செயல்பட்டு, அத்தலத்திரு அவையின் ஆயரின் பொதுப்பதில் குருவாகவும், மறைமாவட்டப் பள்ளிகளின் கண்காணிப்பாளராகவும், நான்கு பங்குத்தளங்களில் பங்குப் பணியாளராகவும், இந்திய அரசு - ஆட்சிப் பணியாளர்களை உருவாக்கும் பயிற்சியகத்தின் இயக்குநராகவும், அருள்பணியாளர்களின் மன்றச் செயலராகவும் பாங்குடனே செயல்பட்டவர் நமது அன்பு ஆயர்.
சென்னை,
பூவிருந்தவல்லி திரு இருதயக் குருமடத்தின் தத்துவவியலின் பேராசிரியர், உதவி இல்லத்தந்தை என அருள்பணியாளர்கள் உருவாக்கப் பயிற்சியில்
ஆசானாகவும் உருவாக்கப் பணியாளராகவும் பணியாற்றிய பாங்கு அவரின் மாணவ அருள்பணியாளர்களின் உள்ளத்தில் பசுமை நிறைந்த நினைவுகளாக உள்ளது.
தந்தை
அவர்களின் பணியை அறிந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையின் மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குநராக அவரை நியமனம் செய்தார். இந்திய இலத்தீன் வழிபாட்டு முறையின் ஆயர் பேரவையின் மறைபரப்புப் பணியின் செயலராகப் பணியாற்றி, மறைத்தூதுப் பணிகளின் ஆர்வத்தை, முக்கியத்துவத்தை, பங்களிப்பை, அப்பணியகத்தின் இதழின் (Proclaim) வழியாகவும்,
கலந்துரையாடல்கள், அமர்வுகள், குருமட வகுப்புகள், மறைமாவட்டச் சந்திப்புகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் வழியாக இந்தியத் திரு அவை முழுவதும் கொண்டு சென்றார். உரோமைச் செயலகத்தில் அமைந்துள்ள திருத்தூது ஆட்சிப் பீடத்தின் மறைபரப்புப் பணியகத்தின் உயர்மட்ட ஆலோசகர் குழுவின் உறுப்பினராக நியமனம் பெற்றார்.
திரு
அவையின் வளர்ச்சியில் ஆயர் வெளிப்படுத்திய ஆர்வம், அருள்பணியாளர்களின் உருவாக்கத்தில் அவரின் போதிக்கும் திறனும், முதிர்ச்சியும், அனுபவமும் பங்குப் பணியாளராக மக்களோடு இணைந்து பணியாற்றும் கூட்டுப் பணியும் இன்று வேலூர் மறைமாவட்டத்தின் தலைமைப் பணியாளராக, மேய்ப்பராக, கிறிஸ்துவின் பிரதிநிதியாக, திருத்தூதர்களின் வழித்தோன்றலாக, மறைத்தூதுப் பணியை முன்னெடுப்பவராக, ஆடுகளின் முடை அறிந்த ஆயனாக அவர் திரு அவையின் தலைமைப் பொறுப்பினை ஏற்பது உள்ளபடி மிகுந்த மகிழ்வினையும், பெருமிதத்தையும், நிறைவையும் தருகின்றது. திரு அவையின் முப்பெரும் பணிகளான போதிக்கும், புனிதப்படுத்தும், வழிநடத்தும் பணிகளைக் கடந்த காலங்களில் செவ்வனே செய்திட்டு, பலமான அனுபவங்களைப் பெற்றதாலே இத்தலைமைப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அழகியல் பேராசிரியர்
-
அழகியத் திரு
அவையின்
அன்பு
ஆயர்
தத்துவவியலின்
- அழகியல் பேராசிரியராகக் குருமாணவர்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட மேதகு ஆயர் அம்புரோஸ், எல்லா மனிதர்களையும் மதித்து, படைப்புகளையும், இயற்கையையும் அழகியல் பார்வையோடு கண்டு, அன்பு செய்து, உருவாக்குவதில் தனித்திறமை கொண்டவர். அவரின் பணியிடங்களில், அலுவலகங்களில், ஆலயப் பராமரிப்பில், திருப்பலியின் தயாரிப்பு உடைகளில், திருத்தூயகப் புனிதப் பொருள்களின் தூய்மையையும், புனிதத்தையும், மதிப்பையும் வழங்கி, அதன் தயாரிப்பில் போதிய நேரத்தையும் கொடுத்து, அக்கறையையும், அதீதக் கவனத்தையும் வெளிப்படுத்தியவர். ஆயராக, திரு அவையின் புனிதப்படுத்தும் பணியை நிறைவேற்றி, இறைவனின் மறைபொருள்களை முதன்மையாகப் பகிர்ந்து, வழிபாட்டு வாழ்வை வெளிப்படுத்தவும் மேம்படுத்தவும் பாதுகாக்கவும் இன்னும் சிரத்தையுடனும் ஆர்வத்துடனும் அவர் செயல்படுவார் என்பது வெள்ளிடை மலை.
எல்லா
மனிதருக்கும் சுயமதிப்பும், சுய ஆளுமையும் உண்டு என நன்கு அறிந்து,
நிலைப்பாடுகொண்டு, அதனை ஒவ்வொருவரும் பெற்றிட வலியுறுத்துபவர். சுயமதிப்பிற்கான முக்கியத்துவத்தை மாணவர்கள், அருள்பணியாளர்கள் மத்தியில் உருவாக்கிட விருப்பம் கொண்டு அதனை உள்ளத்தில் விதைத்து, அதன்படி செயல்பட வழிநடத்துவதில் நமது ஆயருக்கு நிகர் அவரே.
ஒருவர்
சுயமதிப்பை இழந்து தனிப்பட்ட வாழ்வில் பயன்பெறுவதை இம்மியும் அனுமதிக்காதவர். எல்லாரிடத்திலும் இதை வலியுறுத்திச் செயல்பட உந்தித்தள்ளுவதை நான் நன்கு அறிவேன். கடை நிலையில் உள்ளோர்மேல் அவரின் கரிசனையும், அவர்களின் சுய மதிப்பிற்காகவும் ஆளுமைக்காகவும் அவரின் நிலைப்பாடும் செயல்பாடுகளும் பலரையும் புடமிட்டு உருவாக்கியது.
செவிமடுத்தலும்,
உரையாடலும்
16-வது
உலக ஆயர் மாமன்றத்தின் மூன்று ஆண்டுகள் நிகழ்வு நிறைவுற்று, இறுதி ஆவணம் வெளிவந்த இச்சூழலில், திரு அவை எல்லாருக்கும் தாழ்ச்சியோடு செவிமடுத்து அனைவருடனும் உரையாடி, தலத்திரு அவையின் முடிவுகளையும், செயல்பாட்டினையும் கூட்டு முயற்சியோடு அனைவரையும் உள்ளடக்கிப் பணியாற்றச் செய்வதே முதன்மையான செயல்திட்டமாகக் கொண்டுள்ளது.
இக்காலச்சூழலில்
மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களின் ஆயர் பணி முக்கியத்துவம் பெறுகின்றது. உறவு உரையாடலில், பணி உரையாடல்களில் அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை, செயல்பாடுகளை நானும் அறிவேன். செவிமடுத்து உரையாடுவதில் அவர் சிறந்த தலைவர். தன்னைச் சந்திக்கும் மக்களை, குருமாணவர்களை, அருள்பணியாளர்களை அமரச்செய்து, மதிப்பளித்து, செவிமடுத்து, உரையாடி, தீர்வுகளைக் காண்பதிலும் வழிகாட்டுதலைப் பெறுவதிலும் வழங்குவதிலும் சிறப்புக் கவனத்தைத் தருபவர். உரையாடல்களை, அவர்களின் வாழ்வின் வழித்தடமாக அமைத்து, ஊக்கமூட்டி, பயனுள்ள சந்திப்பாக, அனுபவமாக மாற்றும் அவரின் தலைமைத்துவம் ஆயர் மாமன்றத் தீர்மானங்களையும், விருப்பங்களையும், வழிகாட்டுதலையும் நிச்சயம் செயல்படுத்தும் என உளமார நம்புகின்றேன்.
இறுதியாக, திருத்தந்தை
பிரான்சிஸ், 70-வது இத்தாலிய ஆயர் பேரவையின் கூட்டத்தில் (06, அக்டோபர் 2014) ஆயர்களிடத்தில் உரையாடியபொழுது ‘Parrahesia’ என்னும் கிரேக்க
வார்த்தையைக் குறிப்பிட்டு இன்றைக்குத் திரு அவையின் தலைமைப் பொறுப்பில் செயல்படும் ஆயர்கள், உயர்மட்டக் கூட்டங்களில், திரு அவையின் வளர்ச்சிக்கான உரையாடல்களில், விவாதங்களில், மக்களின் தேவைகளை, கவலைகளை, வேதனைகளை உள உறுதியோடு உண்மையை
எடுத்துரைத்துச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். Parrahesia – என்பது பேச்சு சுதந்திரம் மட்டுமல்ல, பொதுநன்மைக்காக உண்மையை உரக்கச் சொல்லும் மனவுறுதி. மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்கள் Parrahesia என்ற
சொல்லின் அர்த்தத்தைக் கற்றறிந்து எல்லாச் சூழ்நிலையிலும் உள உறுதியோடு, தெளிவோடு,
தூய ஆவியின் உந்துதலோடு, சூழலைத் தெளிவாக அறிந்து, கூர்மையான அறிவோடும் அனுபவத்தோடும் பகுத்தறிந்து, தவறுகளைத் தயக்கமின்றி சுட்டிக்காட்டி, உரையாடல்களில் ஆக்கமிகு குறுக்கீடு செய்பவர்.
புதிய
ஆயர் தனது வாழ்நாளில் அனைத்து நிகழ்வுகளிலும் உண்மைக்குச் சான்று பகர்ந்து, அதனை உள உறுதியுடன் வெளிப்படுத்துபவர்.
தொடர்ந்து ஆயர் அம்புரோஸ் அவர்கள் இறைமக்களை உண்மையின் மனுவுருவாம் இயேசுவை நோக்கிய இறையாட்சிப் பயணத்தில் வீறு நடை போட உளமார வாழ்த்துகின்றோம்.