news-details
சிறப்புக்கட்டுரை
சட்டம் ஓர் இருட்டறைதானா?

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மெகர் சந்த் மகாஜன், தன் சொந்த வாகனத்தில் டார்ஜிலிங் செல்கிறார். போக்குவரத்துச் சிக்னலைக் கவனிக்காமல், நீதிபதியே தவறு இழைக்கிறார். போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் அபராதம்  விதிக்கிறார். நீதிபதியும் தவறை உணர்ந்து அபராதம் செலுத்த முனைகிறார். காவலர் சொல்கிறார்: “நீங்கள் நீதிமன்றத்தில்தான் நாளை அபராதம் கட்ட வேண்டும்.”

நீதிபதியும் மறுநாள் கூண்டு ஏறுகிறார். வழக்கம் போல் பெயர், தொழில் கேட்டவுடன், நீதிமன்றமே அதிர்ந்து, எழுந்து  நின்று வணங்குகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியோ அனைவரையும் கையசைத்து அமரச் சொல்கிறார். வழக்கை விசாரிக்கும் மாவட்ட நீதிபதி முதல் முறையாக அறியாமல் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு வழங்கும்  தன் அதிகாரம் கொண்டு தலைமை நீதிபதியை விடுவிக்கிறார். இதுபோல சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உயர்நிலை மனிதர்களை வரலாறு அடையாளங்காட்டியுள்ளது.

ஒருநாள் பெரும் வணிக வளாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தேன். பின் இருக்கைக் கார் கண்ணாடி திறக்கப்பட்டு, முகம் அறியாத ஒருவர் வணக்கம் கூறி, நகர்ந்து உட்கார்ந்து, ‘காருக்குள் வாருங்கள்என்றார். நாம் குழப்பத்தோடு பார்க்க, அவர் சொன்னார்: “நான் இந்த ஊரில் நீதிபதியாகப் பணியாற்றுகிறேன். நீங்கள் உள்ளே செல்லும் போது என் ஒட்டுநர் என்னிடம் சொன்னார், நீங்கள் தினகரன் நாளிதழில் விரும்பிப் படிக்கும் கட்டுரைகளை எழுதும் நம்மூர்காரர் இவர்தான்என்றார். நாம் சிரித்தவாறே அருகே அமர்ந்திருந்தோம். நீதிபதி சொன்னார்: “நாங்கள் நீதிபதியாக இருப்பதால் பொதுச் சமூகத் தொடர்புகளை அறுத்துக்கொள்வோம்.”

நாம் கை கூப்பி விடைபெற்றோம். அந்த நீதிபதி பணிமாறுதல் பெற்று, தொலைதூரம் சென்று விட்டார். அப்படிப்பட்ட அவர் தன் விடுமுறை முடிந்து, தான் பணியாற்றும் ஊருக்கு இரவு நேர அரசுப் போக்குவரத்துக் கழகப்  பேருந்தில் பயணிக்கிறார். பயணத்திலே மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிகிறது. அவர் ஒரு நீதிபதி என்று அவரது உடலை அடையாளம் காண வந்த காவலர்கள் அதிர்கிறார்கள். இவ்வாறான நீதிபதிகள் சாமான்ய மக்களுக்குச் சட்டத்தின் மீதான நம்பிக்கைகளை உறுதி செய்தனர்.

டான்சிவழக்கு அனைவருக்கும் நினைவிருக்கும். அதன் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு  வரும்வரை எல்லாம் நீர்த்துப் போய், எந்த அடிப்படை அறனுமின்றி முதல்வராகத் தொடர்ந்தார் ஒத்தை ரூபாய் சம்பளம் வாங்கிய  செல்வி ஜெயலலிதா. அவரது சொத்துக் குவிப்பு வழக்குகூட ஜான் மைக்கேல் டி குன்ஹா என்ற நல்ல கிறித்தவ நீதிபதியிடம் சென்ற பின் நியாயம் கிட்டியது. நீதிபதி குமாரசாமியின் ஜெயலலிதா  குவித்த  சொத்துக் கணக்கீடு நகைப்பை நாடெங்கும் உண்டாக்கியது. நீதிபதி குன்ஹா, தன் குடும்ப நபர்களைத் தவிர, தன் மாமனாரிடம் மட்டுமே பேசக்கூடிய ஆளுமையாக இருந்தார். அவரது மாமனாரிடம்ஜெவுக்காகத் தூது போனது யார் என்பதை நாடறியும்.

இராமர் கோவில் வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடந்து தீர்ப்பானது, இராமர் கோவில் ஐந்து நூற்றாண்டுகளாக இராமரை அவ்விடத்தில் வைத்து வழிபட்டார்கள் என்ற பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இறுதித் தீர்ப்பு  வழங்கப்பட்டது. நீதிபதி சந்திர சூட் சொல்கிறார்: “நான் இந்த வழக்கில் எப்படித் தீர்ப்பு வழங்குவது என என் பிரார்த்தனையின்போது இறைவனிடம் கேட்டேன்இறைவனின் வழிகாட்டுதலில் தீர்ப்பு கிடைத்ததுஎன்கிறார். பொதுவெளியில் இறைவனே தீர்ப்புக்கு வழிகாட்டுவார் எனில், எதற்காக நீதிபதி சந்திர சூட் ஹார்வோர்டு சட்டப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று  சட்டம்  படித்தார் என்ற கேள்வியும் கேட்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் துஷ் யந்த் தாவே ஒரு நேர்காணலில், “எனது  46 வருட சட்டப்பணி அனுபவத்தில் அதிகம் வெளியே தெரியக்கூடிய தலைமை நீதிபதியாக சந்திர சூட் அவர்களைப் பார்க்கிறேன். அவர் சுய விளம்பரத்தை விரும்புபவராக இருக்கிறார். தனது வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்குப் பிரதமர் மோடியை அழைத்து விளம்பரம் தேடுகிறார்என்கிறார்.

மேலும், “நீதிபதிகள் தங்கள் மதம் மற்றும் அரசியல் சார்புகளையும் அது சார்ந்த செயல்களையும் பொது வெளியில் பிரதிபலிப்பதின் மூலம், அவர்களின் நீதி வழங்குதல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகும். பிரதமரைத் தன் வீட்டிற்கு அழைத்ததன் பேரில், நீதிமன்றத் தீர்ப்புகளில் அரசின் தாக்கம் இருப்பதாக விமர்சனங்கள் எழலாம். இதனால் நீதிபதி சந்திர சூட் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தைச் சிதைத்து விட்டார்என்கிறார். ஆனால், பிரதமர் அலுவலகமோ, தலைமை  நீதிபதி சந்திர சூட் அவர்களின் துணைவியாரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றார் என அறிக்கை தருகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட தேர்தல் பத்திர வழக்கில் எவர் மீதும் நடவடிக்கை இல்லை. தரவுகளைத் தர மறுத்த, தாமதப்படுத்திய, பாரத ஸ்டேட் வங்கி குறித்து, எந்தக் கண்டனங்களும் இல்லை. பணம் கொடுத்ததற்கும், வாங்கியதற்குமான உள்நோக்கம் ஆராயப்படவில்லை.

சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரியைகிரிமினல்என வருணித்து விட்டு, அவர்மீது  எந்த நடவடிக்கையும் இல்லை; ஷிண்டே - பட்னாவிஸ் அரசாங்கத்தைச் சட்டவிரோதமானது என்று அறிவித்ததற்கும், ஆளுநரின் நடவடிக்கைகள் சட்ட விரோதமானது என அறிவித்ததற்கும், அதன்பின் எந்த உறுதியான முடிவையும் எடுக்காமல் அரசைத் தொடர அனுமதித்ததற்கும், சட்டத்திற்குப் புறம்பாக சபாநாயகரிடம் திருப்பி அனுப்புவதையும், சட்டத்திற்குப் புறம்பான முடிவுகளை எடுக்க அனுமதித்ததையும் மறக்க முடியவில்லை.

அதானி எண்டர்பிரைசஸ்மீது  ஹிண்டன்பர் U.Sநீதிமன்றங்களில் வழக்குத் தொடரக் கேட்பதற்குப் பதிலாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை விசாரணையில் ஒரு பங்காக்கி அதானியைக் காப்பாற்றியதையும் பதிவு செய்ய வேண்டும். 370 சட்டப் பிரிவை நீக்க இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியக் குடியரசுத் தலைவரிடம் கலந்து ஆலோசிக்க வித்தியாச சூழ்நிலையை உருவாக்கிய சூட்  என்றும் நினைவில் இருப்பார். பீமா கோரேகான் வழக்கு, ஸ்டான் சுவாமி வழக்கு எனத் திருத்திய தீர்ப்புகள் வரலாற்றுப் புகழ்மிக்கவை.

தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நூலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆறடி நீதி தேவதையின் சிலையில், கண்களில் கட்டப்பட்டுள்ள கறுப்புத் துணியை அகற்றி விட்டார். இதை நாம்  ஒரு புதிய குறியீடாகவும் புரிந்துகொள்ளலாம். இது குறித்து  உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் (எஸ்.சி.பி..) ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபில், “இந்த மாற்றத்திற்கான பின்னணி தெரியவில்லை. இது குறித்த முன்மொழிவு, எங்கள் கவனத்திற்கு  வரவில்லைஎன்கிறார்.

நீதிமன்றங்களின்  மீதான நம்பிக்கையைக் குடிமக்கள் மெல்ல இழப்பதால், நீதித்துறை பெரும் அச்சுறுத்தலில் உள்ளது. நீதித்துறை மீண்டெழுந்து, நீதியரசர்கள் அறம் சார்ந்த  தீர்ப்புகளைத் தொடர்ந்து வழங்குவார்கள் என நம்புவோம். நாம் நம் சனநாயகத்தின் நான்காவது தூண் வலுப்பெற தொடர்ந்து குரல் கொடுப்போம்.