news-details
ஆன்மிகம்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 06

5. மரியாவை மேன்மைப்படுத்துவதென்பது இயேசுவிடம் செல்வதாகும்

1. மீட்பின் வரலாற்றில் கன்னி மரியாவின் ஆளுமை மற்றும் பங்களிப்பு பற்றிய கிறித்தவக் குழுமத்தினுடைய சிந்தனையானது தொடக்க காலத்திலிருந்தே எவ்வாறு உருவானது என்பதை நமது முந்தைய மரியன்னை மறைக்கல்வியில் விவரித்தோம். இக்கட்டுரையில் திரு அவையின் மரியன்னை அனுபவத்தைப் பற்றி அறிந்துகொள்வோம்.

மரியியல் சிந்தனை மற்றும் பல நூற்றாண்டுகளாகப் பரவியிருக்கின்ற மரியா பக்தியினுடைய வளர்ச்சியானது, திரு அவையினுடைய மரியியல் பார்வையை முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு வெளிப்படுத்துவதில் உதவியிருக்கின்றது. உண்மையில், கன்னி மரியா, கிறித்தவ விசுவாசத்திற்கான அடித்தளம் மற்றும் திரு அவை அனுபவமான (ecclesial experience) கிறிஸ்துவோடு எல்லா வகையிலும் தொடர்புடையவராக இருக்கின்றார். மேலும், அவர் கிறிஸ்துவிடம் நம்மை அழைத்துச் செல்கின்றார். ஆகவேதான், மீட்புப் பணியில் யார் அவருடைய தாய்க்கு மிகச் சிறப்பான பங்கை ஒதுக்கினாரோ, அந்த இயேசுவுக்குப் பணிந்து மரியாவைக் கிறித்தவர்கள் வணங்கினார்கள், அன்பு செய்தார்கள் மற்றும் ஆர்வத்தோடும் மிகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் மரியாவிடம்  செபித்தார்கள். கிறிஸ்துவுக்கான சிறப்புமிக்க வழியாக அவரைக் கண்டு ஒப்புயர்வற்ற இணைப்பாளராகிய (Supreme Mediator) மரியாவுக்கு  அவர்கள் விசுவாசம் மற்றும் பக்தியில் அவருக்கென ஒரு முக்கியமான இடத்தை ஒதுக்கினார்கள்

இவ்வாறாக, திரு அவையினுடைய மரியியல் கூற்றானது கிறித்தவ மக்களுடைய அனுபவத்தில் மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இது நம்பிக்கை கொண்டோர்களுடைய  இதயங்களில் அவர் இருக்கின்றார் என்பதற்குச் சான்றாகப் பல வகைகளில் வெளிப்படுத்தப்படுகிறதுஇது ஏதோ ஒரு மேலோட்டமான உணர்ச்சியின் வெளிப்பாடு அல்ல; மாறாக கிறிஸ்துவோடு இன்னும் அதிகமானதொரு நெருங்கிய உறவு வைத்துக் கொள்வதற்காக, இயல்பாகவே மரியாவை நோக்கித் திரும்புவதற்கான நேற்றைய மற்றும் இன்றைய கிறித்தவர்களைத் தூண்டுகிற, நம்பிக்கையில் வேரூன்றிய ஓர் ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமான பிணைப்பாகும்.

2. மூன்றாம் நூற்றாண்டில் எகிப்தில் வாழ்ந்த கிறித்தவக் குழுமங்களால் ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காகஇறைவனின் தாயைநோக்கி எழுப்புவதற்காக எழுதப்பட்ட மிகப் பழமையான செபத்திற்குப் பிறகு, ஆண்டவரை நோக்கிய அவருடைய பரிந்துரையில் மிகவும் ஆற்றல் மிக்கவராக யாரைக் கிறித்தவர்கள் கருதினார்களோ, அவரை நோக்கியே அநேக வேண்டுதல் செபங்கள் எழுப்பப்பட்டன.

கிறித்தவ மக்கள் மரியாவிடம் ஆழமான பக்தியை வெளிப்படுத்தினார்கள்

இன்றுஅருள் நிறைந்த மரியேமிகவும் பொதுவான செபமாக இருக்கிறது. இதனுடைய முதல் பகுதியானது நற்செய்தியிலிருந்து அதனுடைய வார்த்தைகளைக் கொண்டுள்ளது (ஒப்பிடுக. லூக் 1:28-42). கிறித்தவர்கள் அவர்களுடைய சிறுவயதிலிருந்தே வீட்டில் இந்தச் செபத்தைச் சொல்வதற்குக் கற்றுக்கொள்கிறார்கள். மேலும், வாழ்க்கை முழுவதுமே பாதுகாக்கப்பட வேண்டியதோர் உன்னதமான கொடையாக அதைப் பெற்றுக்கொள்கிறார்கள். அநேக முறை செபமாலையில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்ற இந்தச் செபம் அநேக நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி மறையுண்மைகளைச் செபத்தோடு தியானிப்பதற்குள் நுழைவதற்கும் மற்றும் சில வேளைகளில் இயேசுவினுடைய தாயோடு நெருங்கிய தொடர்பில் நீண்ட நேரம் நிலைத்திருப்பதற்கும் உதவுகிறது.

இடைக்காலங்களிலிருந்தே கிறித்தவர்களுடைய அன்றாட வாழ்க்கைப் பயணத்தில் அவர்களைப் பாதுகாப்பதற்கும் வழிநடத்துவதற்கும் ஆண்டவருடைய புனிதத் தாயிடம் வேண்டுகின்ற அனைத்து நம்பிக்கையாளர்களுடைய மிகப் பொதுவான செபமாகவும்அருள் நிறை மரியேசெபமானது இருந்து வந்துள்ளது (ஒப்பிடுக. மரியன்னை வழிபாடு, எண்கள். 42-55).

கிறித்தவர்களும் மரியா மீதான அவர்களுடைய அன்பை பாடல்கள், செபங்கள் மற்றும் எளிய அல்லது சில சமயங்களில் மிகப்பெரிய அளவிலான தரமான கவிதைகளை மனுக்குலத்திற்காக சிலுவையில் அறையப்பட்டவரால் தாயாகக் கொடுக்கப்பட்டவருக்கான அன்பினால் உந்தப்பட்டு பல்வேறுபட்ட அவர்களுடைய பக்தி முயற்சிகளை அதிகரிப்பதன் வழியாக வெளிப்படுத்தினார்கள். அவற்றில்Akathist Hymnமற்றும்Salve Regina   போன்ற பாடல்கள் நம்பிக்கையாளர்களுடைய நம்பிக்கை வாழ்வை ஆழமாகப் பதிவு செய்தன.

மரியா பக்தியினுடைய மறுவடிவமாக, மரியாவினுடைய ஆன்மிக அழகை ஒட்டுமொத்த மனுக்குலமும் பாராட்டுவதற்குத் தூண்டிய  மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்ட விவரிக்க முடியாத வளமையான ஓவியங்கள் இருக்கின்றன. ஓவியர்கள், சிற்பிகள், இசைக்கலைஞர்கள் மற்றும் கவிஞர்கள் கன்னி மரியாவினுடைய பெருமையை அநேக வழிகளில் வெளிக்கொணர்வதில் நமக்கு மிகச்சிறந்த படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார்கள். அவை மீட்பினுடைய பணியில் அவருடைய மேன்மையான பங்களிப்பினுடைய அர்த்தம் மற்றும் மதிப்பை மிகச் சிறப்பாக நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன.

மரியாவில், கடவுளுடைய திட்டத்தோடு ஒத்துப் போகக்கூடிய ஒரு புதிய மனுக்குலத்தினுடைய நிறைவை கிறித்தவக் கலை வடிவமானது கண்டு கொள்கின்றது. இதன் காரணமாகவே, அது மனுக்குலம் முழுமைக்கும் ஒரு மேன்மையான நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றது.

3. சிறப்பானதோர் அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்ட கிறித்தவர்களால் இந்தச் செய்தியைப் புரிந்துகொள்ள முடியாமல் இருத்தலாகாது. உண்மையில், துறவற சபைகள் (Religious Orders and Congregations), அர்ப்பண வாழ்வை மேற்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் குழுக்களால் (Institutes or Associations of Consecrated life)   மரியா குறிப்பிடத்தக்க வகையில் வணக்கம் செய்யப்பட்டார். பெண் துறவிகளுடைய சபைகள் மட்டுமல்ல, பல துறவற சபைகள் அவர்களுடைய சபையின் பெயரில் மரியாவினுடைய பெயரையும் இணைத்துள்ளார்கள். இருந்த போதிலும், அதனுடைய வெளி அர்த்தங்களைவிட, பல துறவற சபைகள் மற்றும் திரு அவையினுடைய இயக்கங்கள் மரியா ஆன்மிகத்தைக் கொண்டவைகளாக இருக்கின்றன. மேலும், அவர்கள் மரியாவுடன் சிறப்பான உறவை முழுமையாக மற்றும் உண்மையாக வாழ்ந்து, அவர்களுடைய தனிவரத்தைக் கொடுப்பவராக அவரைத் தெரியும்படிச் செய்கின்றார்கள்.

சிறப்பான விதத்தில் தூய ஆவியாரினால் உதவி செய்யப்படுகின்ற மக்களுடைய வாழ்வில் மரியாவோடு இணைந்த இந்த வாழ்வானது எவ்வாறு ஒரு கிறித்தவன் அவனுடைய ஆழ்மனத்தில் மரியாவினுடைய தலையீட்டை அனுபவிக்க முடியும் என்பது போன்ற ஞான வாழ்வின் கூறுகளை உருவாக்கியிருக்கிறது.

மரியாவோடு  இணைந்த இந்த வாழ்வானது அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட கிறித்தவர்களை மட்டுமல்ல; மாறாக, எளிமையான நம்பிக்கையாளர்களையும் மற்றும் திரு அவையினுடைய வாழ்வோடுதூரத்துதொடர்பை மட்டுமே வைத்திருக்கின்றவர்களையும் அவரோடு பிணைக்கின்றது. வருடம் முழுவதும் அநேக நம்பிக்கையாளர்களை ஈர்க்கின்ற மரியன்னை திருத்தலங்கள் ஆண்டவருடைய தாயின்மேல் கிறித்தவ மக்கள் வைத்திருக்கின்ற ஒரு பொதுவான மரியாதையின் அடையாளமாக இருக்கின்றன.

மரியன்னை பக்தியினுடைய அரண்களாகத் திகழ்கின்ற புகழ்பெற்ற இடங்களில் சில: லூர்து நகர், பாத்திமா நகர், லொரேத்தோ, பொம்பெய், கொத லூப்பே மற்றும் செஸ்தோகோவா. மற்றவைகள் தேசிய அளவிலும், உள்ளூர் அளவிலும் மட்டுமே தெரிந்தவைகளாக இருக்கின்றன. அவற்றிலெல்லாம், மரியாவிடம்  தஞ்சமடைவதோடு தொடர்புடைய நிகழ்வுகளின் நினைவானது, கடவுளுடைய அருளுக்கு நம்முடைய இதயங்களைத் திறந்து அவருடைய தாய்மைநிறை அன்பின் செய்தியை அறிவிக்கின்றது

மரியாவினுடைய பரிந்துரை வழியாக மனிதனை அடைகின்ற கடவுளுடைய இரக்கத்தின் ஓர் அற்புதமான சாட்சியாக இந்த மரியன்னை திருத்தலங்கள் இருக்கின்றன. உடல் சார்ந்த குணப்படுத்தும் அற்புதங்கள், ஆன்மிக மீட்பு மற்றும் மனமாற்றம் போன்றவை, ஆவியிலும் கிறிஸ்துவோடும் மரியா ஓர் உதவியாளராக மற்றும் தாயாக இருந்து அவருடைய பணியைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார் என்பதற்கான சிறந்த அடையாளங்களாகும். மரியியல் கூறானது திரு அவையினுடைய ஒட்டுமொத்த வாழ்விலும் ஊடுருவிப் பரவியிருக்கிறது.

4. மரியன்னை திருத்தலங்கள் நற்செய்தியை அறிவிக்கும் மையங்களாக விளங்குகின்றன. உண்மையில், திரு அவையில் இன்றும், பெந்தகோஸ்தே நாளுக்காகக் காத்திருந்த அந்தத் தொடக்கக் குழு மத்தைப்போல, மரியாவோடு  இணைந்த செபமானது அநேகக் கிறித்தவர்களை நற்செய்திப் பணிக்கும் அவர்களுடைய சகோதர- சகோதரிகளுக்கான அன்புப் பணிக்கும் தூண்டுகிறது. இங்கு அன்புப் பணி மற்றும் இரக்கத்திற்கான பணியைச் செய்வதில் மரியன்னை பக்தி ஏற்படுத்தியிருக்கின்ற மிகப் பெரிய தாக்கத்தை நான் நினைவுகூர விரும்புகிறேன். அதாவது, மரியாவினுடைய  உடனிருப்பால் தூண்டப்பட்டு, கன்னி மரியாவினுடைய  தாய்மை பாதுகாப்பின் அடையாளமாகவும் தந்தையினுடைய இரக்கத்தின் உயிரோட்டமான உருவாகவும்  எளியோருக்காக இருந்திட விரும்பி ஏழைகளுக்காக, நலிந்தோருக்காக மற்றும் நோயாளர்களுக்காகத் தங்களையே அர்ப்பணிப்பதற்கான தேவையை நம்பிக்கையாளர்கள் மிகவும் உணர்ந்திருக்கிறார்கள்.

இவை அனைத்திலுமிருந்தும் திரு அவையினுடைய ஒட்டுமொத்த வாழ்விலும் மரியியல் கூறானது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை மிகத்தெளிவாகக் காண முடியும். இறைவார்த்தையினுடைய அறிவிப்பு, திருவழிபாடு, வேறுபட்ட அன்பின் மற்றும் கலாச்சாரத்தின் தோற்றங்களும், வளமைக்கான மற்றும் புதுமைக்கான தருணங்களை மரியாவில் காண்கின்றன.

கடவுளின் மக்கள், அவர்களுடைய மேய்ப்பர்களின் வழிநடத்துதலின் கீழ், மரியாவினுடைய  முகத்தைக் கண்டுபிடிப்பதை நோக்கிய கிறித்தவ நம்பிக்கையைத் தூண்டுகின்ற தூய ஆவியானவருடைய செயலை இந்த நிகழ்வில் உணர்வதற்கு அழைக்கப்படுகிறார்கள். மரியன்னை திருத்தலங்களில் அற்புதங்களைச் செய்கிறவர் தூய ஆவியானவர்தான். அவர்தான் மரியா பற்றிய அறிவிலும், மரியாவுக்கான அன்பிலும் ஊக்கமூட்டி, வரலாற்றில் கடவுளுடைய அடையாளங்களை எவ்வாறு அறியலாம் மற்றும் புதிய மானுடத்தினுடைய வடிவமைப்பாளராக ஒவ்வோர் ஆண் மற்றும் பெண்ணை ஆக்குகின்ற அறிவை எவ்வாறு பெறலாம் என்பதைப் புகழ்ச்சிப் பாடல் பாடிய கன்னியிடமிருந்து (Virgin of the Magnificat) கற்றுக்கொள்வதற்கு நம்பிக்கையாளர்களை அழைத்துச் செல்கிறார்.

மூலம்: Pope John Paul II, To Honour Mary is to go to Jesus, in L’Osservatore Romano, Weekly Edition in English, 22 November 1995, p.11.