“நம்ம பிளாட்டுக்கு கிறிஸ்துமஸ் கேரல் குழுவினர் வர்றாங்களாம். நம்ம வீட்டுக்கும் வருவாங்க” என்றாள் மார்கிரட்.
“கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரா மம்மி?” ஆவலோடு கேட்டான் டோனி.
“ஆமா, கட்டாயம் வருவாரு” பதிலளித்தாள் மார்கிரட்.
டோனி
யூ.கே.ஜி. படிக்கிறான்.
தாய் மார்கிரட் குடும்பத் தலைவி. தந்தை
பீட்டர் வங்கி அதிகாரி.
கிறிஸ்துமஸ்
தாத்தாவைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தவுடன் மகிழ்ச்சியில் துள்ளினான் டோனி. அவரைப் பற்றிய கற்பனை சிறகடித்து பறந்தது.
‘கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு அண்டார்டிக் பனிப் பிரதேசத்தில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது. ஏராளமான குட்டி சம்மனசுகள் வேலை பார்க்கிறார்கள். அந்தத் தொழிற்சாலையில் வருடம் முழுவதும் விதவிதமான பொம்மைகள்
தயாரிக்கிறார்கள். கிறிஸ்துமஸ்
சீசன் தொடங்கியவுடன் பனிச்சறுக்கு வண்டியில் அந்தப் பொம்மைகளைப் பொட்டலமாகக் கட்டி வண்டியில் போட்டு கிறிஸ்துமஸ் தாத்தா ஊருக்குள் வருகிறார். நடு
இரவில் அனைவரும் தூங்கும்போது ஒவ்வொரு வீட்டின் புகைக் கூண்டு வழியாக இறங்கி அந்த
வீட்டிலிலுள்ள குட்டிப் பிள்ளைகள் தலைமாட்டில் பொம்மையை வைத்து விட்டு போகிறார்’ என்று
கார்ட்டூன் படத்தில் பார்த்தது டோனி மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது.
முழுவதையும்
அப்படியே நம்ப முடியாவிட்டாலும் கிறிஸ்துமஸ் தாத்தா வருவார், நிச்சயம் பரிசு தருவார் என்று நம்பினான்.
அதனால் தூங்காமல் ஆவலோடு காத்திருந்தான் டோனி.
கேரல்
பாட்டு சப்தம் கேட்டது. கதவைத்
திறந்தார் பீட்டர். ஆவலோடு
ஓடி வந்து ‘கிறிஸ்துமஸ் தாத்தா வந்திருக்கிறாரா?’ என்று எட்டிப் பார்த்தான் டோனி. கிறிஸ்துமஸ் தாத்தா நின்று கொண்டிருந்தார். ஆனால்,…அவனது கற்பனை தகர்ந்தது! பாவம் ஒல்லியாகப் பரிதாபமாக இருந்தார் கிறிஸ்துமஸ் தாத்தா. கசங்கிய சிகப்பு டிரஸ். பாலிஷ் போடாத அழுக்கு ஷூ. ஒழுங்கில்லாத குல்லா. தோளில்
ஓர் அழுக்குத் துணிப்பை.
கேரல்
குழுவினர் கிறிஸ்து பிறப்புப் பாடல்களைப்
பாடத் தொடங்கினார்கள். தாத்தா நடனமாடினார். பிறகு காணிக்கைப் பையை நீட்டினார். டோனியின் தந்தை நூறு ரூபாய் நோட்டை டோனி கையில் கொடுத்து போடச் சொன்னார். தாத்தா ஆளுக்கு ஒரு சாக்லெட் கொடுத்தார். ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்று
கைகொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
பரிசு
கொடுப்பார் என்று நினைத்த கிறிஸ்துமஸ் தாத்தா, பணம் வாங்கிக் கொண்டு சென்றதைப் பார்த்ததும் டோனியின் மனது வேதனையில் துடித்தது.
‘ஏழைக் குழந்தைகளுக்குப் பரிசு வாங்க பணம் வாங்கிட்டு போறாரு’ என்று சமாளித்தாள் மார்கிரட்.
கிறிஸ்துமஸ்
நேரங்களில் புற்றீசல் போல் பல குழுக்கள்
‘கேரல்’ என்ற
பெயரில் வீடு வீடாகச் சென்று சில பாடல்களைப் பாடிவிட்டு, கிறிஸ்துமஸ்
தாத்தாவை ஆட வைத்துப் பணம்
வசூலிப்பது வழக்கமாகிவிட்டது.
‘பணம் வசூலிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்காகக் கிறிஸ்துமஸ் தாத்தாவை இப்படி இழிவுபடுத்துவதா?’ மார்கிரட் மனம் வருந்தினாள். மகனின்
ஏமாற்றத்தை மாற்றத் தீர்மானித்தாள்.
அடுத்த
நாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன்
டோனிக்கு ஒரே ஆச்சரியம்.
வீடு
முழுவதும் வண்ண வண்ண பலூன்கள். சரிகை
பேப்பர் அலங்காரம். கண் சிமிட்டும் விளக்குகளில் காட்சியளித்த கிறிஸ்துமஸ் மரம். பரிசுப்
பொட்டலங்கள். பாலன் இயேசு சுரூபம் அலங்கரிக்கப்பட்டு நடுவில் வைக்கப்பட்டிருந்தது. மகிழ்ச்சியோடு ஓடி வந்து அம்மா கன்னத்தில் முத்தமிட்டான் டோனி.
“இன்னைக்கு நம்ம வீட்டுல கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் போறோம். உன் நண்பர்கள் எல்லாரையும் அழைச்சிருக்கேன்” என்றாள் மார்க்கிரட்.
“அப்படியா... ஜாலி” என்று துள்ளினான்.
“கிறிஸ்மஸ் தாத்தா?”
“நீதான் கிறிஸ்துமஸ் தாத்தா. நீதான் உன் நண்பர்களுக்குப் பரிசு கொடுக்கப்போறே” என்று
அவனுக்கு வாங்கி வந்திருந்த கிறிஸ்துமஸ் தாத்தா டிரஸ்ஸைக் காட்டினாள்.
மாலையில்
கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து நண்பர்கள் வருகைக்காகக் காத்திருந்தான் டோனி. பீட்டரின் குடும்ப நண்பர்களும், டோனியின் பள்ளித் தோழர்களும் பெற்றோர்களுடன் வந்தார்கள். டோனியைக் கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் பார்த்ததும் நண்பர்களுக்கு
அளவற்ற ஆனந்தம்!
விழா
தொடங்கியது. அனைவரும் கேரல் பாடல்களைப் பாடினார்கள். டோனி
கிறிஸ்துமஸ் கேக் வெட்ட ‘விஷ் யூ ஏ மெரி
கிறிஸ்மஸ் அண்ட் கேப்பி நியூ இயர்’ பாடல் பாடப்பட்டது. டோனி தனது நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கினான். நண்பர்கள் ‘ தாங்ஸ்’ என்று கைகுலுக்கினார்கள். டோனி மனம் ஆனந்தத்தால் துள்ளி குதித்தது. பரிசு வாங்குவதைவிட, பரிசு கொடுப்பதில் எவ்வளவு ஆனந்தம்! பரிசு வாங்கும்போது நாம் மட்டும் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு கொடுக்கும் போது வாங்குகிற ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைகிறார்களே! பிறருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுதானே உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! டோனியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது அன்றைய அனுபவம்.
இன்று
டோனி ஒரு பெரிய தொழிலதிபர். ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா மிகச் சிறப்பாக அவனது தொழிற்சாலையில் நடைபெறுகிறது. ஊழியர்களின்
குழந்தைகளுக்கு டோனியே கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி பரிசுகளை வழங்கி வருகிறான்.