நம் ஒவ்வொருவரையும் இறைவன் அன்பு செய்வதற்காக அவர்தம் இறைநிலையை விட்டு விட்டு மனித நிலைக்கு உட்பட்டார். இந்த நிலையில் அவர் தம்மை மனித நிலைக்குத் தாழ்த்தி, தம் இறைநிலையை மனிதனுக்கு வழங்க முற்பட்டார். அந்த நிகழ்வையே நாம் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடுகின்றோம்.
கிறிஸ்துமஸ்
அன்பை மையப்படுத்தும் விழா. இயேசு கிறிஸ்து அன்பால் மனுவுரு எடுத்ததை நினைவுபடுத்தும் விழா. “தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்தார்” (யோவா
3:16) என்பதை உலகினுக்கு வெளிக்காட்ட நினைத்த ஆண்டவரின் அன்பு விழா!
உண்மையான
செல்வம் என்பது இந்த உலகத்தில் உள்ள பொருள் அல்ல; மாறாக, உண்மையான செல்வம் என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவதும், அவரைப் போல அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுமே என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார்.
திருவருகைக்
காலம் கிறிஸ்துவின் வருகைக்கான தயாரிப்பு மற்றும் எதிர்பார்ப்புகளின் காலம். பல்வேறு மரபுகள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட ஆழமான ஆன்மீக அர்த்தத்தை இக்காலம் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று திருவருகைக் கால மெழுகுதிரிகளை ஏற்றுவது. நான்கு மெழுகுதிரிகளில், அன்பின் மெழுகுதிரி ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இது கடவுளின் எல்லையற்ற மற்றும் தியாக அன்பை நமக்கு நினைவூட்டுகிறது. நிபந்தனைகள் போட்டு மனிதர்களை நிர்ப்பந்திப்பதில்லை; கட்டுப்பாடுகள் போட்டுக் கதறவிடுவதில்லை; மாறாக, நம்மை அப்படியே ஏற்றுக்கொண்டு, நமக்காகத் தம்மையே தியாகம் செய்யும் அன்பே இயேசுவின் அன்பு. புனித பொனவெந்தூரார் கடவுள் மனிதனாய்ப் பிறக்கக் காரணம், “அவர் மனித குலத்தின் மீதும், படைத்த படைப்புகளின் மீதும் கொண்டுள்ள அளவு கடந்த அன்பே” என்று கூறுகிறார். மேலும், “அன்பை அறியாதவனும் அன்பில்லாதவனும் இறைவனை உணர அல்லது காண வாய்ப்பே இல்லை” என்றும் கூறுகிறார்.
ஒரு
குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய 12 வயது மகள் என்று வாழ்ந்து வந்தனர். குடும்பத் தலைவர் ஒரு கல்லூரியில் உயிரியல் துறைப் பேராசிரியர். பூச்சிகளையும் புழுக்களையும் வைத்து ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் உடையவர். தன் இல்லத்திலேயே ஓர் அறையை ஒதுக்கி பூச்சிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தார். ஒருமுறை அவருடைய மகள் பள்ளியில் தான் வரைந்த அழகான ஓவியத்தைத் தந்தையிடம் காண்பிக்கக் கொண்டு வந்தாள். தந்தையோ ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தார். தன் ஓவியத்தைப் பார்க்க எத்தனையோ முறை கேட்டுக் கொண்டும், தந்தையோ கொஞ்சமும் திரும்பிப் பார்க்கவில்லை; மாறாக, எரிச்சல்பட்டு தன் அறையை விட்டு வெளியேறும் படி கத்தினார். அழுதுகொண்டே தன் தாயிடம் வந்த அச்சிறுமி, “நான் ஒரு பூச்சியாகவோ அல்லது புழுவாகவோ பிறந்திருக்கக்கூடாதா? அப்போதாவது அப்பா என்னை நோக்கிப் பார்ப்பாரே!”என்றாளாம்.
அன்புக்காக
ஏங்காத இதயம் இவ்வுலகில் ஏதுமில்லை. நண்பர்களுக்கிடையே நட்பாக, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே பாசமாக, வாலிப வயதினரிடையே காதலாக, இறைவனுக்கும் நமக்குமிடையே பக்தியாகக் காணப்படும் இவை அனைத்துமே அன்பின் பல்வேறு பரிமாணங்களே! மனிதனுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் நெருப்பாகிய இவ்வன்பைத் தூண்டி எழுப்பும்போது, அளவற்ற ஆற்றலைக்கொண்ட அணுசக்தியாக இவ்வன்பு மாறிவிடுகிறது.
உண்மையான
அன்பிற்கு மனிதர்களை மனிதர்களிடமிருந்து பிரிக்கும் எத்தகைய பிரிவினைச் சுவரையும் உடைக்கும் வல்லமை உண்டு. தனிமை உணர்வையும் தாழ்வு எண்ணத்தையும் தகர்த்தெறியும் ஆற்றல் அன்புக்கு உண்டு. அன்பின் இப்படிப்பட்ட மேலான ஆக்கச் சக்தியை உணர்ந்ததால்தான் புனித பவுல், “ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்தவேண்டிய
ஒரே கடனாக இருக்கட்டும்” (உரோ
13: 8) என்றும், “அன்பே திருச்சட்டத்தின் நிறைவு”
(உரோ 13: 10) என்றும்
கூறுகிறார்.
இந்த
அன்பின் மெழுகுதிரி அன்னை மரியாவையும் அவர் கணவரான இயேசுவின் வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பையும் குறிக்கின்றது. ஆண்டவராம் மீட்பரைச் சந்திப்பதற்காகப் புனித யோசேப்பும் அன்னை மரியாவும் எவ்வாறு தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனரோ அவர்களைப் போன்று நம்மை மீட்க நமக்காக இந்த உலகில் பிறந்த இயேசு பாலனை வரவேற்க நம்மை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்பதைச் சிந்திக்க அழைக்கும் நான்காம் வாரத்தில் கடவுளின் அன்பை ஆய்ந்தறிந்து, அன்றாட வாழ்வில் அனுபவிக்க இப்பகுதி அழைக்கிறது.
அன்பின் வாரத்தில்
சிந்திக்க...
1. கடவுளின் அன்பு நிபந்தனையற்றது!
கடவுளின்
அன்பு நமது தகுதியின் அடிப்படையில் அல்ல; மாறாக, அவரது எல்லையற்ற அருளை அடிப்படையாகக் கொண்டது. நாம் பாவிகளாய் இருந்தபோது கடவுள் நம்மை அன்பு செய்தார் (உரோ 5:8). “நீ என்னை அன்பு
செய்தால்தான் நான் உன்னை அன்பு செய்வேன்”
என்று சொல்பவன் மனிதன். இறைவனோ, “நீ என்னை அன்பு
செய்யாவிட்டாலும், நான் உன்னை அன்பு செய்வேன்”
என்றுரைக்கிறார்.
“எனது எதிர்பார்ப்புகளின்படி வாழ்ந்தால்தான் நான் உன்னை அன்பு செய்வேன்”
என்பவன் மனிதன். இறைவனோ, “எனது எதிர்பார்ப்புகளுக்கு எதிராகச் சென்றாலும் உன்னை நான் அன்பு செய்வேன்”
என்கிறார். “நான் சொல்வதைக் கடைப்பிடித்தால்தான், நான் உன்னை அன்பு செய்வேன்”
என்பவன் மனிதன். “நான் சொல்வதை நீ கடைப்பிடிக்காவிட்டாலும் உன் மட்டில் என் அன்பு மாறாது” என்பவர் இறைவன். இந்த அன்பு நாம் தேடிக்கொண்டது அல்ல; இது கடவுளால் நமக்கு இலவசமாக வழங்கப்படும் பரிசு!
2. கடவுளின் அன்பு தியாகம்
நிறைந்தது!
அன்பு
என்பது உணர்வு மட்டுமல்ல; இது ஒரு செயல். எல்லைகள் வகுப்பது மனித அன்பு; எல்லாரையும் ஏற்பது கடவுளன்பு! தொல்லைகள் தருவது மனித அன்பு; தியாகத்தில் மிளிர்வது கடவுளன்பு! இந்தத் தியாக அன்பு, தன்னலமின்றி மற்றவர்களை நேசிப்பதன் மூலம் கிறிஸ்துவைப் பின்பற்ற நம்மை அழைக்கிறது. “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை” என்று இயேசு கூறுவதை யோவான் நற்செய்தியில் (13:15) வாசிக்கிறோம்.
இறையன்பின்
முழுமை இயேசுவின் தற்கையளிப்பில்தான் நிறைவு அடைகிறது. சுயநலத்திற்காகப் பிறரைப் பலியாக்கத் துணியும் மனிதர்கள் வாழும் இவ்வுலகில், பிறருக்காக நம்மைப் பலியாக்கிட இறைவனின் அன்பு நம்மை அழைக்கிறது. இந்த அன்பின் வாரத்தில், தேவைப்படும் ஒருவருக்காகத் தியாகம் செய்யும் அன்பின் ஒரு செயலைச் செய்ய முயல்வோம்.
3. கடவுளின் அன்பு
மாற்றத்தை உருவாக்குவது!
கடவுளின்
அன்பு நம்மை உருமாற்றி பிறரை அன்பு செய்ய அழைக்கிறது. 1யோவான் 4:19 -இல் கூறுவது போல், “அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்.” நாம் ஏற்றுகின்ற அன்பு என்னும் மெழுகுதிரியின் வெளிச்சம்
பகைமை, வெறுப்பு, பிரிவு மற்றும் விரக்தி போன்ற அக இருளை அகற்றி
அன்பு, அமைதி, மகிழ்ச்சி போன்ற இறையாட்சியின் விழுமியங்களால் ஒளிரும் மனிதர்களாக நம்மை மாற்றும் ஆற்றல் பெற்றது. அன்னை தெரசா கூறினார், “நம் எல்லாராலும் பெரிய காரியங்களைச் செய்துவிட முடியாது; ஆனால், சிறியவற்றை மிகுந்த அன்புடன் நம் அனைவராலும் செய்ய முடியும்.” அன்பின் எளிய செயல்கள் வாழ்க்கையை மாற்றும். இந்த அன்பின் வாரத்தில் இரக்கம், மன்னிப்பு போன்றவற்றின் மூலம் கடவுளின் அன்பைச் சுவைப்போம்.
4. கடவுளின் அன்பு நிரந்தரமானது!
புனித
பவுல் கூறுவதுபோல், ‘அவருடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது’
(உரோ 8:38-39) என்பதை ஒப்புக்கொள்வோம். இந்த நிரந்தர அன்பு, வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலைகளிலும்கூட நமக்கு நம்பிக்கையையும் உறுதியையும் தருகிறது. நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம் (1கொரி 13:10).
அன்பின் வாரத்தில்
வாழ்வாக்க...
• அன்பைப் பெறுங்கள்:
கடவுளின் நிபந்தனையற்ற, தியாகம் நிறைந்த, மாற்றத்தக்க, மற்றும் நிரந்தரமான அன்பைப் பெறுவதற்கு உங்கள் இதயங்களைத் திறந்து, அன்பினை நன்றியுணர்வுடன் பெற முயல்வோம். திருப்பலி, திருவழிபாட்டுத் திருநிகழ்வுகள், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்வு ஆகியவை வழியாகவும், நம் அருகில் இருப்பவர்கள் வாயிலாகவும் இறை அன்பைப் பெறுவோம்.
•
அன்பை வெளிப்படுத்துங்கள்: திருவருகைக் காலம் என்பது இயேசுவின் அன்பு மாதிரியைப் பின்பற்றி, இரக்கம், தொண்டு மற்றும் பகிர்வு ஆகியவற்றின் மூலம் அன்பை வெளிப்படுத்தும் நேரம். குடும்பத்தில், உறவுகள் மத்தியில், நண்பர்கள் வட்டாரத்தில், அன்பியத்தில், பங்கில், சமூகத்தில் என அனைத்துத் தளங்களிலும்
எவ்வித நிபந்தனையும் பாகுபாடும் ஏற்றத்தாழ்வும் வேறுபாடுமின்றி அன்பு என்னும் இறையியல் பண்பை வெளிப்படுத்துவோம். குறிப்பாக, வாழ்வது ஒரு முறைதான் என்பதை நன்கு உணர்ந்து பகைமை பாராட்டாமல் மன்னிப்போம், மறப்போம்.
•
அன்பைக் கொண்டாடுங்கள்: கிறிஸ்து பிறப்பு அன்பைக் கொண்டாடும் காலம். வானதூதர்கள் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாட முதன் முதலாக இடையர்களை அழைத்தார்கள். விண்மீன் ஞானிகளை இயேசுவின் பிறப்பினைக் கொண்டாட அழைத்தது. நாம் நான்காம் வாரம் ஏற்றுகின்ற மெழுகுதிரி அன்பைக் கொண்டாட அழைக்கிறது. எப்படிக் கொண்டாடுவது? அன்பு ஒரு செயல். எனவே, செயல்வழிக் கொண்டாடுவோம். இருப்பதை (அன்பை, செல்வத்தை, உணவை, அறிவை, ஆற்றலை, நேரத்தை, உடைமையை)
இல்லாதவர்களோடு பகிர்வோம்! மனநிறைவோடு வாழ்வோம்!
ஆகவே,
அன்பின் வார மெழுகுதிரியை நாம் ஏற்றி அன்பைப் பெற்று, அன்பை
வெளிப்படுத்தி, அன்பைக் கொண்டாடுவோம்!
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துகளும் ஆசிரும்!