வாழ்வளிக்கும் சந்திப்புகள்: உரையாட... உறவாட... உடனிருக்க
வரலாற்றில் எத்தனையோ சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன; நிகழ்கின்றன. நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பு, சாதனையாளர்களுடனான சந்திப்பு, பேரிடர் காலச் சந்திப்பு என ஏராளமான சந்திப்புகள் நிகழ்கின்றன. இயற்கையும்கூட சந்தித்துக்கொள்கின்றது. மழை பூமியைச் சந்திக்கின்றது; சூரிய ஒளியை மரங்கள் சந்தித்துக்கொள்கின்றன. சில சந்திப்புகள் நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம்; சில சந்திப்புகள் வருத்தங்களை உருவாக்கலாம். வாழ்க்கையில் ‘மற்றுமொருமுறை இவரைச் சந்திக்க மாட்டேனா?’ என ஏங்குபவர்கள் உண்டு. ‘இனி என்னுடைய வாழ்க்கையில் இவரைச் சந்திக்கவே கூடாது’ என்று எண்ணுபவர்களும் உண்டு.
நாம்
பயணம் மேற்கொள்ளும்போது பலரைச் சந்திக்கிறோம். குறிப்பாக, அருகில் அமர்ந்து பயணம் செய்பவர்களோடு அறிமுகமாகி உரையாடுகிறோம். அதுவும் நீண்ட நெடிய பயணம் என்றால், நாம் மிகவும் அவர்களோடு ஒன்றித்துப்போய் விடுகிறோம். அப்போது நம்மிடம் இருக்கின்ற உணவினையும் உணர்வுகளையும் இன்ப-துன்ப நிகழ்வுகளையும் பகிர்ந்துகொள்கின்றோம். இத்தகைய உறவாடல்கள் நமக்குள் புதிய உறவுகளை ஏற்படுத்துகின்றன. பழைய உறவுகளை ஆழப்படுத்துகின்றன.
“நான் மட்டும் அவரைச் சந்தித்திருக்காவிட்டால், நான் இந்த உயர்ந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது”,
“அவருடனான சந்திப்புதான் என் வாழ்வையே மாற்றி அமைத்தது”
என்றெல்லாம் நாம்
சொல்லக் கேட்டிருக்கிறோம். பல நேரங்களில் நாமே
சொல்லியிருக்கலாம். நாம் மேற்கொள்ளும் சந்திப்புகள் நம் வாழ்வை மாற்றுகின்றன; வளமான சந்திப்புகள் வாழ்வைக் கொடுக்கின்றன.
திருவருகைக்
காலத்தின் நான்காம் ஞாயிறு வாசகங்கள் அனைத்தும் ‘இறை-மனிதச் சந்திப்பு’
எனும் உன்னதமான சிந்தனையை நமக்கு வழங்குகின்றன. பழைய ஏற்பாட்டுக் காலம் தொடங்கி, புதிய ஏற்பாட்டுக் காலம் வரை மீட்பு வரலாற்றில், வியத்தகு முறையில் இறைவன் மனிதனைச் சந்தித்ததைப் பார்க்கிறோம்.
மீட்பின்
தொடக்கமாக, கடவுள்-நோவா சந்திப்பு; அதனைத் தொடர்ந்து நமது முதுபெரும் தந்தையர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு இவர்களுடனான கடவுளின் சந்திப்பு; இஸ்ரயேல் மக்களை விடுவிப்பவராக முழுப் பொறுப்பேற்றுக் கொண்ட மோசேவுடனான கடவுளின் சந்திப்பு; இஸ்ரயேல் மக்கள் வேற்று நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்குத் தமது மீட்புச் செய்தியைக் கொடுப்பதற்காக எசாயா, எரேமியா, எசேக்கியேல், ஆமோஸ், செப்பனியா, யோவேல், யோனா, மீக்கா ஆகியோருடனான இறைவனின் சந்திப்பு ஆகியவை வரலாற்றுச் சிறப்புமிக்க இறை-மனிதச் சந்திப்புகளாகும்.
புதிய
ஏற்பாட்டிலும் இறை-மனிதச் சந்திப்புகள் பல நிகழ்ந்துள்ளன. இறைவன்
தமது மீட்புத் திட்டத்திற்காக அன்னை மரியாவை முதலில் சந்திக்கிறார். தொடர்ந்து மரியாவின் கணவரும் இயேசுவின் தந்தையுமான யோசேப்பைச் சந்திக்கிறார். மக்களின் மீட்புக்காக மன்றாடிக் கொண்டிருந்த செக்கரியாவைக் கடவுள் சந்திக்கிறார். மனுக்குலத்தை மீட்க மனுவுருவான இயேசு தமது பணிவாழ்வைத் தொடங்கும்போது, முதன்முதலாகத் திரு முழுக்கு யோவானைச் சந்திக்கிறார். இயேசு மகதலா மரியா, மத்தேயு, சக்கேயு எனப் பலரையும் சந்திக்கிறார். இந்த இறை-மனிதச் சந்திப்புகளிலெல்லாம் ‘உரையாடல் - உறவாடல் - உடனிருத்தல்’ என்ற
மூன்று முக்கியச் சிந்தனைகள் உள்ளடங்கியுள்ளன. இவற்றை ‘மெசியா காலப் பண்புகள்’
எனலாம்.
இன்றைய
முதல் வாசகத்தில், பாபிலோனிய மன்னர் நெபுகத்நேசர் எருசலேமை முற்றுகையிட்டபோது, யூதாவை ஆட்சி புரிந்தவர்களால் தங்கள் நகரைக் காப்பாற்ற முடியவில்லை. எனவே, சிறிய இடமாகிய பெத்லகேமிலிருந்து தோன்றும் அரசரால் மட்டும்தான் தம் மக்களைக் காப்பாற்ற முடியும் என இறைவாக்கினர் மீக்கா
முன்னறிவிக்கிறார். மீக்கா முன்னறிவிக்கும் இந்த அரசர்தான் மெசியாவாகிய இயேசு. மீக்கா முன்னறிவித்தபடி பெத்லகேமில் மெசியா பிறப்பார் (லூக் 2:4-7); இவர் என்றும் அரசாள்வார். எனவே, ‘மெசியாவின் பிறப்பு மனுக்குலத்துடனான ஒரு சந்திப்பு. இந்தச் சந்திப்பில் மெசியா சிதறுண்ட அனைவரையும் ஒன்று சேர்ப்பார்; அச்சமில்லாத வாழ்வையும் அமைதியையும் அருள்வார். அவரே அவர்களை மேய்ப்பார்; வலிமையோடு மக்களைத் தேடிவந்து காப்பாற்றுவார்’ என்பதை
உறுதிபடக் கூறுகிறார்.
இன்றைய
நற்செய்தியில், இறைத்திட்டத்திற்குத் திறந்த உள்ளத்தோடும் தாழ்ச்சியோடும் தன்னை ஒப்புக்கொடுத்த, உருவிலா இறைவனைக் கருவில் தாங்கிய அன்னை மரியாவும் ஆண்டவரின் வருகைக்கு மக்களைத் தயார் செய்த திருமுழுக்கு யோவனைத் தன் திருவயிற்றில் தாங்கிய எலிசபெத்தும் சந்திக்கும் நிகழ்வு இடம்பெறுகிறது. அன்னை மரியாவும் எலிசபெத்தும் சந்தித்துக் கொண்ட சந்திப்பு ஒரு சாதாரண சந்திப்பு அல்ல; இது இரு நம்பிக்கையாளர்களின் சந்திப்பு. இயற்கைக்கு அப்பாற்பட்டு நடந்த இறைவனின் வெளிப்பாட்டை ஒருவரையொருவர் பகிர்ந்துகொண்ட சந்திப்பு. இரண்டு காலங்களின் சந்திப்பு. பழைய ஏற்பாட்டின் நிறைவாகக் கருதப்படுகின்ற திருமுழுக்கு யோவானும், புதிய ஏற்பாட்டின் தொடக்கமாகக் கருதப்படுகின்ற மீட்பர் இயேசுவும் பிறப்பதற்கு முன்னரே ஒருவரையொருவர் சந்திக்கின்ற இறை-மனிதச் சந்திப்பு. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே நிகழும் எந்தச் சந்திப்புகளும் இயல்பாக நடப்பவை அல்ல; மாறாக, அவை இறைவன் எடுத்த முயற்சியால் விளைந்தவை. ஆகவே, இறைச் சந்திப்பு எப்போதும் இறைவனிடமிருந்தே தொடங்குகின்றது என்பதை நினைவில் கொள்ளலாம்.
நற்செய்தியின்
இரகசியத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளவும் யூதா மலைநாட்டிலிருந்த எலிசபெத்தின் ஊராகிய அயின்கரீமுக்கு விரைந்து செல்கிறார் மரியா. இப்பயணம் அவ்வளவு எளிதான பயணம் அல்ல; வலிகளும் சவால்களும் நிறைந்த பயணம். பொதுவாக வலிகள் நிறைந்த பயணங்கள் எதிர்கால மகிழ்வைக் கொடுக்கக் கூடியவையாகவே இருக்கும். சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு விட்டு வேலையின் காரணமாக வெளி நாட்டுக்குச் செல்பவர்களின் பயணம் வலி நிறைந்ததாகவே இருந்தாலும் அப்பயணத்தில் எதிர்கால மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மரியா வசிக்கும் நாசரேத் ஊருக்கும், எலிசபெத் இருக்கும் யூதேய மலைநாட்டிலுள்ள ஊருக்குமான தொலைவு 81 மைல், அதாவது, சுமார் 130 கி.மீ. தூரம்
இருந்தாலும், அந்தத் தூரத்தை அடைவதற்கு மரியா கழுதையின்மேல்தான் பயணம் செய்கிறார். இந்தத் தொலைவைக் கடப்பதற்குக் குறைந்தது மூன்று நாள்களாவது ஆகியிருக்க வேண்டும். அன்னை மரியா கருவுற்ற சில நாள்களிலேயே இந்தப் பயணம் நிகழ்கிறது. இறைவனின் துணையை மட்டுமே நம்பி மரியா இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் இப்பயணத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மரியா நாசரேத்தூரிலிருந்து அயின்கரீமுக்குச் சென்றதே முதல் நற்கருணை பயணம்” என்கிறார்.
மரியா-எலிசபெத் சந்திப்பில் வெளிப்படும் மெசியா காலப் பண்புகள் என்னென்ன? முதலாவதாக, அன்னை மரியா, வானதூதரின் செய்தியைப் பெற்றவுடனே, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல்,
தன் உறவினர் எலிசபெத் தேவையில் இருக்கிறார் என்பதை அறிந்து தனது அன்பையும் ஆதரவையும் கொடுப்பதற்காக, விரைந்துசென்று உதவுகிறார். இச்செயல், மரியா ஏற்கனவே தன் கருவில் வளரும் இறைமகனின் சீடராக மாறிவிட்டார் என்பதைக் காண்பிப்பதாக உள்ளது. பிறர் தேவையைத் தன் உள்ளத்தில் தனதாக உணர்வது அன்னை மரியாவுக்கே உரிய தனித்துவமான பண்பு. கானாவூர் திருமண நிகழ்வில் அன்னை மரியாவின் இதே பண்பை நம்மால் கண்டுகொள்ள முடியும். இதனையே திருத்தந்தை பிரான்சிஸ், “ஒருவரின் கண்களை உற்று நோக்கவில்லையெனில் அவர்களின் தேவைகளை நம்மால் உணர்ந்துகொள்ள முடியாது”
என்கிறார் (வத்திக்கான், 19.12.2021).
இரண்டாவதாக,
தன் மனத்திலும் வயிற்றிலும் சுமந்த மகிழ்வை, உற்சாகத்தை, வியப்பை, அச்சத்தைக் கருவுற்றிருக்கும் தன் உறவினரான எலிசபெத்துடன் பகிர்ந்துகொள்ள ஆவல் கொண்ட மரியாவை எலிசபெத் இன்முகத்தோடும் நன்றி உணர்வோடும் “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்”
என வாழ்த்துவதும் பாராட்டுவதும் மெசியா காலத்து மற்றொரு பண்பு. பிறரை வாழ்த்தும்போது, ஆசிர்வதிக்கும்போது நாமும் வாழ்த்தப்பெறுகிறோம், ஆசிர்பெறுகிறோம்.
மூன்றாவதாக,
அன்னை மரியாவின் இந்தச் சந்திப்பு, இவ்வுலகில் வாழும் நாம் அனைவரும் தனியாவோ அல்லது தனிமையாகவோ அல்ல; மாறாக, ஒருவர் மற்றவருடன் இணக்கமாக இணைந்திருக்கும் நிலையில் வாழ்கிறோம் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. நம் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுவதுபோல, “மற்றவர்களின் தேவை குறித்து ஒரு சமுதாயம் கண்டுகொள்ளாமல் செல்லும்போது, புறக்கணிப்பு எனும் கலாச்சாரத்திற்குள் நுழைகிறது”
(கிறிஸ்துமஸ் சிறப்புத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு வழங்கிய உரை, 20.12.2021). எனவே, நாமும் தனிமையில் வாழ்வோருக்கும் வயது முதிர்ந்தோருக்கும் நமது உடனிருப்பை வழங்கவேண்டும் என்பது மற்றுமொரு மெசியா காலப்பண்பாகும்.
நிறைவாக,
இளம்பெண் மரியா, எலிசபெத்துக்குப் பணிகள் ஆற்றியபோது அதற்கு ஈடாக, வயது முதிர்ந்த பெண்ணான எலிசபெத்திடமிருந்து அனுபவங்களையும், ஆலோசனைகளையும், ஆன்மிக வழிகாட்டல்களையும் கொடைகளாகப் பெற்றுக்கொள்வது, நாம் பிறருக்குச் செய்யும் ஒவ்வொரு சிறு உதவிக்கும் மறு உதவியைப் பெறுவோம் என்பதை உணர்த்துகிறது. எனவே, இச்சந்திப்பு நமக்குத் தரும் நற்பாடமான, பிறரன்பை மனத்தில் கொண்டு, தேவையில் இருக்கும் நம் சகோதரர் சகோதரிகளை இந்தக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மையமாக வைத்து செயல்பட முன்வருவோம். நமக்கென்று ஆயிரம் கவலைகள் இருந்தாலும், நம் பிறரன்புப் பணிகளை இன்முகத்துடன் ஆற்றுவோம். ஏனெனில் உரையாட, உறவாட, உடனிருக்க இரக்கம், நெருக்கம் மற்றும் கனிவு நிரம்பியிருக்கும் குழந்தை இயேசு எப்போதும் நம் அருகில் உள்ளார்.