இந்தியத் திருநாட்டின் 50-வது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து அண்மையில் ஓய்வுபெற்றுள்ள நீதிபதி D.Y. சந்திரசூட் அவர்களிடம் ஓர் இந்திய சாமானியன் எழுப்பும் சில பல கேள்விகள்.
தேர்தல்
பத்திரங்கள் வழக்கை உடனடியாக விசாரித்து முடிக்காமல், பல்லாயிரக்கணக்கான கோடிகளை ஆளும் கட்சி வசூல் செய்து முடித்த பின்னர், ‘அது சட்ட விரோதமானது’ என்று
தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிநாயகம் சந்திரசூட் அமர்வு, பத்திரம் மூலம் பெறப்பட்ட பணத்தைத் திரும்ப வசூலிப்பதற்கோ அல்லது தவறாக நன்கொடை என்ற பெயரில் வசூல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள்மீது விசாரணை செய்வதற்கோ நடவடிக்கை மேற்கொள்ளப்படாதது ஏன் என்ற கேள்விக்கு என்ன பதில்?
சண்டிகர்
நகர மேயர் தேர்தலை முறைகேடாக நடத்திய அயோக்கியத்தனமான அதிகாரியைக் குற்றவாளி என்று அறிவித்துவிட்டு, அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று விஷயம் தெரிந்த வர்கள் யாரும் கேட்கமாட்டார்களா?
மகாராஷ்டிராவில்
அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஷிண்டே-பட்னாவிஸ்-அஜித் பவார் பாவக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்திய ஆளுநரின் செயல்கள் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்துவிட்டு, நடவடிக்கை எடுக்கும் பொறுப்பைச் சபாநாயகரிடம் தூக்கிக் கொடுத்துவிட்டு, முறையாக நடவடிக்கை எடுக்காத சபாநாயகர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், முறையற்ற அரசைப் பதவிக் காலம் முழுவதும் ஆட்சியில் இருக்க அனுமதித்தது மாபெரும் வரலாற்றுப் பிழை என்று நாளைய சரித்திரம் சொல்லாதா?
மலைவாழ்
மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய 84 வயது ஸ்டேன்ஸ் சுவாமியை, ‘நக்சலைட் தீவிரவாதி’
என்று பொய் வழக்கில் கைது செய்து, விசாரணையே இல்லாமல் சிறையிலடைத்து, சிறையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், “என் மக்கள் மத்தியில் நான் சாக விரும்புகிறேன்; அதற்காக என்னைப் பிணையில் விடுங்கள்”
என்று அவர் மன்றாடியபோது, உச்ச நீதிமன்றம் பிணை வழங்காமல், அவர் சிறையிலேயே இறந்து போனாரே... அந்த வழக்கு என்ன ஆனது என்று எந்த நீதிநாயகமும் இதுவரை கேட்கவில்லையே! இது நியாயம்தானா? என்று அவரது ஆன்மா கேட்காதா?
இந்தியாவின்
மிகப்பெரிய பணக்காரரான அதானியும், அவரது நிறுவனங்களும் பங்குச் சந்தையிலும், கம்பெனிச் சட்ட வாரியத்திலும் மிகப்பெரிய முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிட்டன்பர்க் நிறுவனம் அறிக்கை அளித்தபோது, ‘அந்த அறிக்கை தவறாக இருந்தால் அமெரிக்காவில் நீதிமன்றங்களில் ஹிட்டன்பர்க் மீது நடவடிக்கை எடுங்கள்’
என்று அதானியிடம் சொல்லாமல், ஒரு நிபுணர் குழுவை நியமித்து, அந்தக் குழுவும் எங்களால் முழுமையாக விசாரித்து உண்மையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறிய பின்னரும், அந்த அறிக்கையையே சாதகமாக்கிக்கொண்டு அதானி நிறுவத்திற்கு நன்னடத்தைச் சான்று வழங்கி அளிக்கப்பட்ட தீர்ப்பு முறையானதுதானா?
காஷ்மீர்
மாநிலத்தை மூன்று யூனியன் பிரதேசங்களாக மாற்ற சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் அனுமதி வேண்டும் என்ற அரசியல் சட்டத்தின் 371 பிரிவின் முக்கிய உள்ளடக்கத்தைப் புறந்தள்ளி, சட்டமன்றம் கலைக்கப்பட்டிருந்த வேளையில், குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவரைக் கலந்து அந்த மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் என்ற தங்களது தீர்ப்பு மிகவும் விநோதமானது மற்றும் வேடிக்கையானது என்று அரசியல் சாசன விற்பன்னர்கள் கூறுகிறார்களே, அது உங்கள் செவிகளை எட்டியதா?
எந்த
விசாரணையும் இல்லாமல், தீர்ப்பும் சொல்லப்படாமல் நான்கு ஆண்டுகளாக உமர் காலித் எனும் ஏழை இஸ்லாமிய இளைஞர் சிறையிலடைக்கப்பட்டுள்ளாரே...
அவருக்கு இந்த நாட்டின் குடிமகன் என்ற முறையில் உரிமைகள் ஏதாவது உண்டா? என்று மனித உரிமை ஆர்வலர்கள் கேட்கும் கேள்விகளின் சப்தம் எங்கள் காதுகளைச் செவிடாக்குகின்றனவே! உச்ச நீதிமன்றத்தின் காதுகளுக்கு அது எட்ட இன்னும் எத்தனை நாள்கள் ஆகும்?
சாரி!
மை லார்ட்...
உச்ச
நீதிமன்றத்திலும், பல உயர் நீதிமன்றங்களிலும்
சில நீதி அரசர்கள் நடந்துகொள்வதும், அவர்கள் பேசுவதும் நீதிபரிபாலனத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றன. நாங்கள் எல்லாரையும் குறைசொல்லவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரது செய்கை நீதி பரிபாலனத்தினையே களங்கப்படுத்துவதைத் தாங்கள் அறியவில்லையா? அப்படிப்பட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தயங்குவது ஏன்?
சமீபத்தில்
தனக்கு முன் வாதாடிக்கொண்டிருக்கும் ஒரு பெண் வழக்கறிஞரைப் பார்த்து ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி கேட்ட கேள்வி எவ்வளவு ஆபாசமானது! அதற்கு ஒரு கண்டனம் மட்டுமே போதுமானதா?அந்த நீதிபதி வருத்தம் தெரிவித்தால் சரியாகிவிடுமா? அவரை நீக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்பதை அறிவோம். அந்த நீதிபதி ஆறு மாதங்களுக்கு எந்த வழக்கையும் விசா ரிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் அத்தனை நீதிபதிகளும் ஓர் அமர்வில் அமர்ந்து ஓர் உத்தரவு போடமுடியாதா?
தங்களது
பள்ளி வாசல்களுக்குள் இஸ்லாமியர்கள் தொழுகை செய்து கொண்டிருக்கும்போது, பாசிச வெறிகொண்ட வன்முறையாளர் கூட்டம் உள்ளே புகுந்து ‘ஜெய் ஸ்ரீராம்’
என்று கோஷம் போடும்போது, ‘சமூக அமைதியைக் கெடுத்தார்கள்’ என்று
அவர்கள்மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தால், ‘ஜெய் ஸ்ரீராம் என்று முழங்குவது சமூக அமைதியைக் கெடுக்காது’ என்று
கூறி, அவர்கள்மீது போட்ட வழக்கை ஓர் உயர் நீதிமன்ற நீதிபதி இரத்து செய்தாரே... அப்படிப்பட்ட தீர்ப்புகளெல்லாம் இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்குச் சட்டத்தின் ஆட்சி மீதும், நீதிமன்றங்களின் மீதும் இருக்கின்ற நம்பிக்கையைக் குலைத்துவிடாதா? இப்படித் தீர்ப்பு எழுதுகின்றவர்களையும் நாங்கள் ‘நீதி நாயகம்’ என்று எத்தனை நாள்கள் அழைக்க வேண்டும்?
இவைகளெல்லாம்
ஓய்வு பெறப்போகும் உங்களுக்கான கேள்விகள் மட்டுமல்ல, உங்களைத் தொடர்ந்து உங்களது ஆசனத்தில் அமர இருக்கின்றவருக்கும், உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதி அரசர்களுக்கும் வைக்கப்படும் கேள்விகள் மட்டுமல்ல; கோரிக்கைகளும் கூட!
சமீப
காலமாக பா.ச.க.
மத்தியில் அதிகாரத்திற்கு வந்த பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரதிய அதிவக்த பரிஷத் (Akhil Bharatiya Adhivakta Parishad - ABAP) அமைப்பின் ஆளுகையும், செல்வாக்கும் நீதித்துறையில் மிக அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். டெல்லியிலும், மாநிலத் தலைநகர்களிலும் அடிக்கடிக் கூட்டப்படும் இந்த அமைப்பின் கூட்டங்களில் இந்நாள் மற்றும் மேனாள் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொண்டு, இந்த அமைப்பின் உறுப்பினர்களுக்குப் பாடம் எடுப்பதும், விவாதம் நடத்துவதும் வாடிக்கையாக நடக்கின்றன. 1992-ஆம் ஆண்டு தத்தோபந்த் தெங்காடி எனும் ஆர்.எஸ்.எஸ். தலைவரால் ஐந்து உறுப்பினர்களைக் கொண்டு துவங்கப்பட்ட இந்த அமைப்பில் இன்று 15,000 உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தொடுக்கின்ற வழக்குகளையும், அவர்கள்மீது தொடுக்கப்படுகின்ற வழக்குகளையும் இந்த அமைப்பைச் சார்ந்த வழக்கறிஞர்கள்தாம் நடத்துகின்றனர். பா.ச.க.
ஆளும் மாநிலங்களிலும், ஒன்றிய அரசு நிர்வாகத்திலும் இந்த அமைப்பினர்தாம் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களாகப் பெரும்பாலும் நியமனம் செய்யப்படுகின்றனர். இன்று உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் 33 நீதிபதிகளில், ஒன்பது பேர் இந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் முக்கிய விருந்தினராகக் கலந்துகொள்கிறார்கள் (பி ஆர் கவாய்,
சூரியகாந்த், ஜே கே மகேஷ்வரி,
பி வி நாகரத்னா, பங்கஜ்
மித்தல், இராஜேஷ் பிண்டல், கே வி விஸ்வநாதன்,
உஜல் புயான், பி பி வராலே).
மாநிலங்களில் இந்த அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் பல உயர் நீதிமன்ற
நீதிபதிகள் அடிக்கடிக் கலந்துகொள்கின்றனர். சமீபத்தில் திண்டுக்கல்லில் இந்த அமைப்பினர் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் நமது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரும் முக்கிய விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த
அமைப்பை தெங்காடியோடு சேர்ந்து உருவாக்கியவர்களின் பெயர்களைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். மேனாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஈ.எஸ். வெங்கட
ராமையா (இவரது மகள் நாகரத்னா தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதி), மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பிஸி கன்னா (வரப்போகும் தலைமை நீதிபதியின் தந்தையின் சகோதரர்), மேனாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உதய் லலித்தின் தந்தை உமேஷ் தலித், பஞ்சாப் ஹரியானா மாநிலத்தின் தலைமை நீதிபதியாக இருந்த இரமாஜாய்ஸ் என்று பல மேனாள் நீதி
அரசர்கள் இதன் காப்பாளர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இன்று இந்த அமைப்பைச் சார்ந்த பல வழக்கறிஞர்கள் பல
உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மானன் மிஷ்ராவும் இந்த அமைப்பைச் சார்ந்தவரே.
அரசியல்
சட்டத்தை மாற்றாமல், தங்களுக்கு அனுசரணையாகச் செயல்படும் நீதித்துறையின் மூலமே தங்களது அடிப்படைக் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். உறுதியாக இருப்பதாக அவர்களோடு தொடர்பில் இருக்கின்றவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஒன்றிய
சட்ட அமைச்சரைப் பார்ப்பதற்காக ஒரு மாநிலச் சட்ட அமைச்சர் சென்றிருந்தபோது அந்த அலுவலகத்தில் அவர் கண்ட காட்சியில் அவர் அதிர்ந்து போனாராம்! அமைச்சரின் பார்வையாளர் அறை முழுவதும் இருக்க இடமில்லாமல் உட்கார்ந்திருந்த அநேகர் உயர் நீதிமன்ற நீதிபதிகளாம்! தங்களது பதவி மாறுதல்களுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் சட்ட அமைச்சரைச் சந்திக்க வந்திருப்பதாக அங்கிருந்த ஒருவர் கூறியதாகக் கூறினார்.
சுதந்திரம்
பெற்று, சனநாயகம் கிடைத்து, நம்மை நாமே சட்டத்தின் ஆட்சி மூலம் ஆளும் அதிகாரம் பெற்று இன்னும் நூறு ஆண்டுகளைக்கூட நிறைவு செய்யவில்லை. அவைகளைத் தொலைத்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது! அரசியல் கொள்கைகள் மற்றும் தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட நீதித்துறை (Indoctrinated judiciary)
சனநாயகத்தின், சட்டத்தின் ஆட்சியின் அழிவின் துவக்கம்!
கண்ணதாசன்
பாடியதுதான் நினைவுக்கு வருகிறது:
‘மங்கை சூதானால் கங்கையில் குளிக்கலாம்!
கங்கையே
சூதானால் என்ன செய்வது?’
சாரி! மை
லார்ட்ஸ்!