மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வழக்கம் போல நமது பிரதமரும், அவரது உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தங்களது வேட்பாளர்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். நீட்டி முழக்கி, கண்கள் எல்லாம் கோவைப் பழம் போல சிவக்க, ஆவேசத்துடன் அவர்கள் பேசும்போது, அவர்களைப் பற்றி எல்லாம் தெரிந்த நமக்கே அவர்கள் இருவரும் பேசுவதெல்லாம் உண்மை என்று நம்பத் தோன்றுகிறது!
நம்மையே
அவர்கள் ஒரு கணம் அசைத்துப் பார்க்கிறார்கள் என்றால், அக்கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்று, அவர்களுடைய பேச்சுகளைக் கேட்கின்ற அப்பாவி பொதுமக்களுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது. ஆனால், இரண்டு பேரும் சொல்லி வைத்தாற்போல் மருந்துக்குக் கூட ஓர் இடத்திலும் ஒரு முறைகூட உண்மை பேசவில்லை.
அரசியல்
மேடைகளில் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களை உண்மையைப் போல பேசுவதை ஒரு கலையாகவே தங்கள் தொண்டர்களுக்குத் தனிப்பயிற்சியாகத் தரும் ஓர் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களாகிய அவர்கள் வேறு எப்படிப் பேசுவார்கள்?
மோடியும்,
அமித்ஷாவும் அந்த இயக்கத்தின் தலைவர்களாகவே மட்டும் இருந்து, இப்படிப் பொதுமேடைகளில் அபாண்டமாகப் பொய்களைப் பேசினார்கள் என்றால் அதைப்பற்றி நாம் அதிகம் பொருட்படுத்தப்போவதில்லை. ஆனால், ஒருவர் உலகின் மிகப்பெரிய அளவில் உள்ள சனநாயக நாட்டின் பிரதமர்; மற்றொருவர் 140 கோடி இந்தியர்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கும், சமூக அமைதிக்கும் பொறுப்பு ஏற்க வேண்டியவர். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அவர்களது அனைத்து அசைவுகளும் நகர்வுகளும் கோடிக்கணக்கான மக்களது வாழ்க்கையையும், ஒட்டுமொத்த இந்தியாவின் நலனையும் உள்நாட்டிலும், உலக அளவிலும் பெருமளவில் பாதிக்கும் என்பதை அறிந்து பேசுகிறார்களா? அல்லது அறியாமல் பேசுகிறார்களா? என்று நமக்குப் புரியவில்லை. அறிந்து பேசினால் இது மாபாதகம்; அறியாமல் பேசினால் மகா கேவலம்!
‘இந்திய அரசியல் சாசனச் சட்டப்படி நடப்பேன்’
என்று இறைவன் பெயரால் உறுதிமொழி எடுத்த நம் பிரதமர், எப்படி ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் வெறுப்பையும், துவேஷத்தையும் மூட்டை மூட்டையாக விதைக்கிறார்? இனம், மதம், மொழி, மாநிலம் என்ற வேறுபாடுகள் பாராமல் நாட்டு மக்கள் அனைவரையும் இந்தியர்களாகவே பார்க்கவும், ஏற்றுக்கொள்ளவும் கடமைப்பட்ட பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்நாட்டின் மண்ணின் மக்களான முப்பது கோடி சிறுபான்மை இசுலாமியர்களை ஏன் இவ்வளவு அந்நியப்படுத்துகிறார்கள்? ஏன் அவர்களை இந்நாட்டின் பெரும்பான்மையான இந்து மக்களுக்கு எதிரான ஜென்மப் பகைவர்களாகக் கட்டமைக்கிறார்கள்?
நடந்து
முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குஜராத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர், “இந்தியா கூட்டணி வென்றால் உங்களிடம் இரண்டு எருமைகள் இருந்தால் ஒன்றை எடுத்து முஸ்லிம்களிடம் கொடுத்துவிடுவார்கள்” என்று
பேசினார். இந்த முறை ஜார்க்கண்ட்டில் பேசும்போது பழங்குடியின மக்களைப் பார்த்து “உங்கள் பெண்களையெல்லாம் ‘அவர்களே’ திருமணம் செய்து கொள்வார்கள். குழந்தைகளைப் பெற்று அனைவரையும் இஸ்லாமியராக மதமாற்றம் செய்து, பழங்குடியினத்தையே இல்லாமல் செய்துவிடுவார்கள்” என்று
எச்சரித்தார்.
பழங்குடி
மக்களின் மக்கள்தொகை குறைந்து, இஸ்லாமியர்களது மக்கள்தொகை கூடிவிட்டது; பழங்குடி மக்கள் வாழும் நிலப்பரப்பு சுருங்கி, இஸ்லாமியர்கள் வாழும் நிலப்பரப்பு அதிகமாகிவிட்டதென்றும் பொய்யான செய்திகளை எவ்வித ஆதாரங்களும் இன்றி வாய் கூசாமல் கூறினார்.
மகாராஷ்டிராவில்
பேசிய பிரதமர், “நடக்கப் போகும் தேர்தல் ஒரு சட்டமன்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல; சத்ரபதி சிவாஜி மகராஜைக் கொண்டாடுகிறவர்களுக்கும், அவுரங்கசீப்பைப் போற்றுகிறவர்களுக்கும் இடையே நடக்கின்ற தேர்தல்” என்றார். அவர் மனத்தில் ஏன் இவ்வளவு வக்கிரம்?
அதைப்போல
மகாராஷ்டிராவில் அமித்ஷா ஒரு படி அதிகமாகச் சென்று இந்து மக்களைப் பார்த்து, “இந்தியா கூட்டணி வென்றால் உங்கள் நிலங்களையெல்லாம் எடுத்து வக்பு வாரியச் சொத்துகளாக மாற்றிவிடுவார்கள்” என்று
பயமுறுத்தினார். மேலும், “பட்டியல் இன, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கான இடஒதுக்கீட்டை இரத்து
செய்து அந்த இடங்களையெல்லாம் இசுலாமியருக்கு வழங்க இருக்கிறார்கள்” என்றும்
எச்சரித்தார். மற்றும் சில இடங்களில் அரசுப் பணிகளின் ஒப்பந்தங்களில் ஒரு பகுதியை இசுலாமியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய சட்டம் இயற்ற காங்கிரஸ் திட்டமிடுகிறது என்றும் பா.ச.க.
பிரச்சாரம் செய்கிறது.
அறுபது
ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியிலும், அடல் பிகாரி வாஜ்பாயின் கூட்டணி ஆட்சியில், ஒரு சிறுபான்மை இஸ்லாமியர் குடியரசு தலைவராகவும், ஒரு சிறுபான்மை சீக்கியர் பிரதமராக இருந்து நடத்திய ஆட்சியிலும் இந்துகளுக்கு இப்படிப்பட்ட எந்தக் கேடும் நடக்காமல் அவர்கள் பத்திரமாகவும்
பாதுகாப்பாகவும் வாழ்ந்தபோது, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழுமையான சித்தாந்தப் பயிற்சி பெற்ற சுயம்சேவக்குகள் குடியரசு தலைவராகவும், பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருக்கின்றபோது, இந்துகளுக்கு இப்படிப்பட்ட கொடுமைகளெல்லாம் நடந்துவிடும் என்று பிரதமரும் உள்துறை அமைச்சரும் சொல்வதை யார் நம்புவார்கள்?
2014-இல் பிரதமர்
இப்படிப் பேசியிருந்தால்கூட அனுபவம் இன்மையால் இப்படிப் பேசுகிறார் என்று நாம் கடந்து சென்றிருப்போம். ஆனால், பதினோர் ஆண்டுகளாக, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன், எதிர்த்துக் கேள்வியே கேட்க முடியாத அதிகாரத்துடன் ஆட்சி செய்த மோடியும், அமித்ஷாவும் இப்படிப் பேசுவதுதான் மிகப்பெரிய வேடிக்கை!
பங்களாதேஷிலிருந்து
பலர் சட்டவிரோதமாக ஜார்க்கண்டில் குடியேறியதால் அங்கு இசுலாமியர்களின் மக்கள்தொகை கூடிவிட்டது என்று குற்றம் சாட்டும் மோடியும் அமித்ஷாவும் யாரை ஏமாற்ற நினைக்கின்றனர்? நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் அதிகாரம் ஒன்றிய அரசிடம்தானே உள்ளது! அந்நியரின் சட்டவிரோதக் குடியேற்றத்தை நீங்கள் இருவரும் ஏன் தடுக்கவில்லை? அப்படிச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நீங்கள் ஏன் வெளியேற்றவில்லை? அப்படி வெளியேற்றும் நடவடிக்கைகளை நீங்கள் எடுத்து,
அதற்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனவா?
நம்
நாட்டு இசுலாமியரோ அல்லது அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளோ, அயல்நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறும்
இசுலாமியருக்குக் குடியுரிமைகள் வழங்கவேண்டும் என்று உங்களிடம் என்றாவது கேட்டார்களா? இப்படி எந்தச் சூழலும் இல்லாத நிலையில், சட்டவிரோதக் குடியேற்றங்கள்மீது
பதினோர் ஆண்டுகளாக மோடியும் அமித்ஷாவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையே... ஏன்? மோடியும், அமித்ஷாவும் செய்த பாவங்களை எதிர்க்கட்சியினர் மீது ஏன் சுமத்த வேண்டும்?
பதினோர்
ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட பா.ச.க.வுக்குத் தங்களது சாதனைகள் என்று சொல்லிக்கொள்ள ஏதுமில்லை! ஏழை
எளிய மக்களின் வாழ்வாதாரங்களை
உயர்த்த எந்தச் சிறப்புத் திட்டங்களையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எந்தப் பெரிய முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. விவசாயிகளின் கடன்களையும், படித்து விட்டு வேலை
கிடைக்காத மாணவ-மாணவியரின் தவணை தவறிய கல்விக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையினையும் நிறைவேற்றித்
தரவில்லை. தேய்ந்துகொண்டே
வரும் சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை அழிவிலிருந்து காப்பாற்ற எந்த முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. மாநிலங்களுக்கு முறையான நிதிப்பங்கீட்டை வழங்காமல், நன்றாகச் செயல்படும் மாநிலங்களையும் திவாலாகும் நிலைக்குத் தள்ளியது
என்று அவர்கள் செய்யத் தவறியவைகளை நீண்ட பட்டியலாக எழுதிக்கொண்டே இருக்கலாம்.
‘பதினோர் ஆண்டுகள் அவர்கள் என்னதான் செய்தார்கள்?’ என்று ஒரு கேள்வி எழும். எப்போதோ படித்த ஒரு புதுக்கவிதை என் நினைவுக்கு வருகிறது. பதினோர் ஆண்டுகள் இவர்கள் என்ன செய்தார்கள் என்ற பட்டியல். என்
நினைவில் நின்றதை எழுதுகிறேன். இதுதான் அவர்களின் செயல்பாடு,
‘காட்டிலிருந்து பழங்குடிகளை விரட்டு!
கடலிலிருந்து
மீனவர்களை விரட்டு!
நகரங்களிலிருந்து
குடிசைவாழ் மக்களை விரட்டு!
டெல்டாவிடமிருந்து
விவசாயிகளை விரட்டு!
சிறு
நகரங்களில் இருந்து சிறுதொழில்,
சிறு
வணிகரை விரட்டு!
மாநிலங்களில்
இருந்து
மண்ணின்
மக்களை விரட்டு!
ஊர்தோறும்
சேரி மக்களை ஓட ஓட விரட்டு!
சிறுபான்மை
மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கிக்கொண்டு அவர்களைச் சித்திரவதை செய்!
பாசிச
வன்முறை சக்திகளைக் கட்டவிழ்த்துவிட்டு பட்டியல் இன மக்களை மானபங்கப்படுத்தி
வன்கொடுமை செய்!
காட்டைக்
கொழுத்து! கடலை நஞ்சாக்கு!
பூமியின்
மறுபுறம் வரை துளையிடு!
வாயு,
கரி, எண்ணெய் என எதையும் விடாதே!
இயற்கை
வளங்களைப் பன்னாட்டு
கம்பெனிகளின் பகல் கொள்ளைக்குத் திறந்துவிடு!
அரசு
உடைமைகள் அனைத்தையும் அம்பானிக்கும் அதானிக்கும் தானம் கொடு!
ஏழை
மக்களின் சேமிப்புகள் அனைத்தையும்
பெரு முதலாளிகளுக்கு
வாராக்கடனாக அள்ளி விடு!
பேச்சுரிமையைப்
பறி! எழுத்துரிமையைப் பறி!
வாழ்வுரிமையைப்
பறி! போராட்ட உரிமையைப் பறி!
சாதி
வெறிக்குச் சாம்பிராணி போடு!
மதவெறிக்கு
ஊதுபத்தி கொளுத்து!
ஏழைகளுக்காகப்
போராடுகின்றவனை உயிருள்ளவரையில் சிறையில் போடு!
நாட்டின்
வளங்களை அனுதினமும் கொள்ளையடி!
அக்கொள்ளைக்குத்
துணைபோவதுதான்
தேசபக்தி
என்று சொல்!
கார்ப்பரேட்டுகள்,
காவிகளின் கால்களை நக்கிக் குடி!
அதை
நாட்டின் மானம் காக்கும் செயல்
என
உன் ஊடக அடிமைகள் ஊருக்குச் சொல்லட்டும்!
எதிர்த்துக்
கேட்போர்
இந்த
மண்ணிலேயே இருக்கக்கூடாது!
அவர்களை
‘இந்து விரோதி’ என அடையாளப்படுத்து!
கல்வியைக்
காவி மயமாக்கு!
இதிகாசத்தை வரலாறு
எனப்
பாடப் புத்தகங்களில் எழுது!
உண்மையான
வரலாற்றின்
மூலங்களையெல்லாம்
அழித்து விடு!
இதைத்
தட்டிக் கேட்பவனை
‘அர்பன் நக்ஸல்’ என்று பிரச்சாரம் செய்!
ஊடகம்
யாவையும் ஊமையாக்கு!
உனக்கு
மட்டும் ஊது குழலாக்கு!
சனநாயக
நிறுவனங்களையெல்லாம்
உன்
ஏவலாள்களால் நிரப்பு!
இந்த
அக்கிரமங்களையெல்லாம்
நியாயப்படுத்த நீதித்துறையை வளைத்துப் போடு!
அதுவும்
முடியவில்லையென்றால் புது சட்டம் போடு!’
இப்படித்தானே
பதினோர் ஆண்டுகளாக ஆட்சி நடக்கிறது! ‘இதையெல்லாம் நாங்கள் செய்தோம்’
என்று அவர்களால் சொல்ல முடியுமா? அதற்காகத் தான் இந்த நாட்டின் சிறுபான்மையின மக்களைப் பெரும்பான்மை மக்களின் எதிரிகளாகக் கட்டமைக்கிறார்கள்!
சிலரைச்
சில நாள்கள் ஏமாற்றலாம்.
பலரைப்
பல நாள்கள் ஏமாற்றலாம்.
ஆனால்,
எல்லாரையும் எப்போதும் ஏமாற்றிக்கொண்டே இருக்க முடியாது!