news-details
சிறப்புக்கட்டுரை
சாரி... மை லார்ட்ஸ்!

அடுத்த சில தினங்களில் நாட்டின் 51-வது தலைமை நீதிபதியாக நீதிநாயகம் சஞ்சீவ் கன்னா பதவியேற்க இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இந்தியாவின் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய நீதிநாயகம் தனஞ்சய யஷ்வந்த் சந்திர சூட் வரும் நவம்பர் 11 அன்று ஓய்வு பெற்றிருக்கிறார்.

இந்திய அரசியல் சாசனச் சட்டம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள தானே உருவாக்கி வைத்திருக்கும் சனநாயக நிறுவனங்களுள் உச்சநீதிமன்றமே முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும். இந்திய அரசியல் அமைப்பில் சட்டங்களை உருவாக்கும் நாடாளுமன்றத்தையும், அந்தச் சட்டங்களை நிறைவேற்றும் அரசு நிர்வாக இயந்திரத்தையும் கண்காணித்து, அவைகளின் செயல்பாடுகளை அரசியல் சட்ட வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்து, நெறிப்படுத்தி, இந்திய நாட்டின் குடிமக்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் மகத்தான அதிகாரம் நமது உச்சநீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு.

ஒரு புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்கும்போதும், இருந்தவர் பணி ஓய்வு பெறும்போதும், உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் பற்றியும், அங்கே பணியாற்றும் நீதிபதிகளின் நடைமுறைகள் குறித்தும், ஒட்டுமொத்த நீதித்துறையின் எதிர்காலம் குறித்தும் நம்மால் சிந்திக்காமலும், பேசாமலும் இருக்க முடியவில்லை.

இந்நாள்களில் வாழும் இந்தியர்கள் உண்மையிலேயே மிகவும் பாக்கியம் செய்தவர்கள்! நமது பிரதமரும், நமது தலைமை நீதிபதியும் தெய்வத்தோடு நேரில் பேசி, தெய்வத்தின் அருள் கடாட்சம் பெற்றபின்னரே தங்களது கடமைகளின் நிமித்தம் செய்ய வேண்டிய பணிகளைச் செய்கிறார்கள். “நான் உயிரியல் ரீதியாகப் பிறக்கவில்லை; இறைவனின் திட்டத்தை நிறைவேற்றவே இறைவனால் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன்என்று நம் பிரதமர் கூறியபோது நாம் எல்லாரும் மெய்சிலிர்த்துப் போனோமே! அதைப்போல நமது தலைமை நீதிபதியும் மிக முக்கியமான வழக்குகளில் தீர்ப்பளிக்கும் போதெல்லாம் ஸ்ரீராமனின் திரு உருவத்தின் முன் அமர்ந்து, தியானித்து அந்த வழக்கு சம்பந்தமாகத் தனக்கு என்ன அருளப்பட்டதோ அதையே தீர்ப்பாக எழுதுகின்ற தெய்வீக வல்லமை பெற்றவர். நாடே எதிர்பார்த்துக் காத்திருந்த பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளிக்குமுன் பகவான் இராமரிடம், “இந்த வழக்கிற்குத் தீர்வு ஒன்று சொல்லுங்கள் தெய்வமே!” என்று அவர் மன்றாடினதாகவும், அவ்வாறு பெறப்பட்டதுதான் அந்தத் தீர்ப்பு என்றும் நமது தலைமை நீதிபதி கூறிய பின்னர்தான் நமக்குப் பல விசயங்கள் புரிந்தன.

வழக்கமாக உச்சநீதிமன்றம் பெரும் அமர்வாக அமர்ந்து தீர்ப்பளிக்கும்போது  பகிரப்பட்ட பெரும்பான்மைத் தீர்ப்பை எந்த நீதிபதி எழுதினார் என்பதும், அதில் உடன்பட்டவர்கள் யார் என்பதும் குறிப்பிடப்பட்டு, உடன்படாதவர்கள் தனியாகத் தங்களது தீர்ப்பினையும் வழங்குவதுதான் உச்சநீதிமன்றத்தின் நடைமுறை. ஆனால், பாபர் மசூதி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை யார் எழுதினார் என்று தெரிவிக்கப்படவே இல்லை. ‘இறைவன் தந்த தீர்ப்புஎன்று எழுத முடியாதல்லவா?

ஆனால், டெல்லி உயர் நீதிமன்றத்தின் மிகச் சிறந்த நீதிபதி என அறியப்பட்ட நீதி அரசியார் சார்மா அவர்கள், தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டப்படியும், நியாயத்தின்படியும் தவறான தீர்ப்பின் பொறுப்பினை ஸ்ரீராமரின் மீது போட்டுவிட முயற்சிக்கும் அவர், அரசியல் சட்டத்தின் மீது தலைமை நீதிபதி ஏற்றுக்கொண்ட உறுதி மொழியை மீறியதோடு மட்டுமல்லாமல், இந்திய நாட்டு மக்களுக்கு எதிராகவும் பெரும் துரோகத்தை இழைத்துள்ளார் என்று சந்திரசூட்டைப் பகிரங்கமாக அவர் கண்டித்தார்.

விடைபெறுகின்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கடந்த சில நாள்களாக பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தனது பணிக்காலத்தின்போது தலைமை நீதிபதியாக மற்றும் நீதிபதியாகத் தனது செயல்பாடுகளைப் பற்றியும், உச்சநீதிமன்றத்திற்குத் தனது பங்களிப்பு பற்றியும் மிகவும் பெருமிதப்பட்டு, தனக்குத்தானே சிலாகித்துக் கொள்கிறார். அந்த உரிமை அவருக்கு உண்டு. அதே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளை அன்றாடம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்ற சட்ட விற்பன்னர்கள், மேனாள் உச்சநீதிமன்ற-உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் சட்ட நிபுணர்கள், அனுபவம் நிறைந்த ஊடகவியலாளர்கள், பொதுநல வழக்குகள் மூலம் நாட்டு மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்ற சமூக ஆர்வலர்கள், மனித உரிமைப் போராளிகள், ஆளும் அதிகார வர்க்கத்தின் எதேச்சதிகாரத் துரைத்தனத்தால் பாதிக்கப்பட்ட எதிர்க்கட்சியினர், பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் சுயநலச் சுரண்டலால் வாழ்வாதாரங்களை இழந்தவர்கள்... இந்தத் தலைமை நீதிபதியின் பணிக்காலத்தில் அவரது செயல்பாடுகள் குறித்தும், ஒட்டுமொத்த நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் என்ன மதிப்பீடுகளை வைத்துள்ளனர் என்பதையும் நாம் பதிவு செய்ய வேண்டும் அல்லவா?

கடந்த மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, தனது  இல்லத்தில் நடந்த விநாயகர் ஆரத்திக்குத் தலைமை நீதிபதி பிரதமரை அழைத்தார். நீதிபதியும், அவரது மனைவியும் பிரதமரின் இருபுறமும் நின்றுகொண்டு, விநாயகருக்குப் பிரதமர் தீப ஆராதனை செய்வதும், நீதிபதியின் மனைவியார் சுலோகங்கள் சொல்வதும், தலைமை நீதிபதி அந்தப் பூஜைக்கு மணியடிப்பதுமான காட்சிகள் தேசிய ஊடகங்கள் அனைத்திலும் ஒளிபரப்பப்பட்டு, சமூக ஊடகங்களிலும் பெரும் வைரலாகி கோடிக்கணக்கான மக்கள் பார்த்தனர்.

தலைமை நீதிபதியின் வீட்டில் நடந்த அந்த நிகழ்வு குறித்து பெரும் விமர்சனங்கள் எழுந்தன. உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர் சங்கம் உள்பட பல மேனாள் நீதி அரசர்களும், பத்திரிகையாளர்களும்இது நல்ல மரபல்லஎன்று சுட்டிக்காட்டினார்கள்.

நரேந்திர மோடிக்கும், சந்திர சூட் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தெய்வ நம்பிக்கையும், வழிபாடு செய்யும் உரிமைகளும் இருக்கக்கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஆனால், பிரதமரும், தலைமை நீதிபதியும் தெய்வ வழிபாடு செய்யும்போது நான்கு காமெராக்கள் சுற்றிநின்று  படம் எடுத்து ஒளிபரப்ப வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் கேட்கும்போது, அதில் உள்ள நியாயத்தை நம்மால் மறுக்க முடியவில்லை. அதிலும், அதற்கு அடுத்த வாரம் மகாராஷ்டிராவில் பா... வையும், அவர்களது அரசையும் பாதிக்கக்கூடிய  சிவசேனா கட்சி வழக்குகள் உள்பட ஒன்றிய அரசு சம்பந்தப்பட்ட பல முக்கியமான வழக்குகளில் தலைமை நீதிபதி தீர்ப்பு சொல்ல இருந்தபோது, இப்படிப் பிரதமருடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பு சரியானதல்ல என்று சிலர் கூறுவதையும் மறுப்பதற்கில்லை.

சில நாள்களுக்குப் பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பிரதமர் தனது இல்லத்திற்கு வந்தபோது இந்த வழக்குகள் சம்பந்தமாகத் தாங்கள் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை என்று பரிதாபமாக ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தபோது, தலைமை நீதிபதி தனது பதவியின் மாட்சிமைமிக்க கம்பீரத்தைச் சற்று இழந்துவிட்டதாகவே நான் பார்க்கிறேன். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு புரிந்துகொள்ளக் கூடியதுதானே!

உச்சநீதிமன்றம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து அந்த வளாகத்தில் நீதி தேவதையின் சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. கிரேக்க-எகிப்திய கலாச்சாரங்களில் நீதியின் தெய்வமாக வணங்கப்பட்டது இந்த நீதி தேவதையின் சிலை. உலகம் முழுவதும் நீதி வழுவாத நெறிமுறையின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பல நாடுகளின் நீதிமன்றங்களில் இந்தச் சிலை வைக்கப்பட்டுள்ளது. வேண்டியவர்கள்-வேண்டாதவர்கள், பெரியவர்கள்-சிறியவர்கள் என்ற வேறுபாடுகளையெல்லாம் பார்க்காமல், நீதி பரிபாலனம் செய்வது மட்டுமே நீதிமன்றங்களின் கடமை என்பதை உணர்த்துகின்ற வகையில், அதன் கண்கள் கறுப்பு துணியால் கட்டப்பட்டிருக்கும். ஒருபால் கோடாத நீதியின் தராசை ஒரு கையிலும், நீதியின் மாண்பையும், மாட்சிமைமிக்க அதன் அதிகாரத்தையும் விளக்குகின்ற வகையில் மற்றொரு கையில் ஓங்கிய வாளுடன் நிற்கும்.

இந்தச் சிலையை ஒரே நாளில் சம்பந்தப்பட்ட யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் எடுத்துவிட்டு, தனது விருப்பப்படி மற்றொரு சிலையைத்  தலைமை நீதிபதி சந்தர சூட் அங்கே வைத்து விட்டார். திறந்த கண்களுடன், நெற்றியில் திலகத்துடன், வாள் அகற்றப்பட்ட கையில் சட்டப் புத்தகத்துடனும், பட்டுச் சேலை கட்டிய ஒரு பெண் சிலை தற்போது அங்கே வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் தத்துவப் பின்னணியும், வரலாற்றுப் பின்புலமும் என்ன? என்று யாருக்கும் புரியவில்லை. நமது இதிகாசங்களிலும், கலாச்சாரத்திலும் இந்தத் தோற்றத்தில் ஒரு நீதி தேவதை இருந்ததாக எந்த இடங்களிலும் இல்லை. எந்த அடிப்படையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டது என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை.

காலனி ஆதிக்கத்தின் எச்சமாக பழைய சிலை இருந்தது. அதனால் அதை எடுத்துவிட்டு பாரத கலாச்சாரம் கொண்ட ஒரு பெண்ணின் சிலை வைக்கப்பட்டுள்ளதுஎன்று சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பழைய சிலை ஆங்கிலேய கலாச்சாரம் சார்ந்ததன்று. அது ஆசிய நாகரிகப் பண்பாட்டுக்கூற்றை உள்வாங்கியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பாரபட்சமற்ற நீதிபரிபாலனத்தின் அடையாளமாக உலகெங்கிலும் கொண்டாடப்படுவது. அதனை எடுத்துவிட்டு தனது  சொந்தக் கற்பனையை இந்தியத் திருநாட்டின் உச்சநீதிமன்றத்தின் அடையாளமாக அவர் நிறுவியதைஉள்நோக்கமுடையதுஎன்றும், ‘நாட்டின் உச்சகட்ட நீதிபரிபாலன நிறுவனத்திற்கு ஒரு பண்பாட்டுச் சாயம் பூச அவர் முற்படுகிறார்என்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் உள்பட பலர் சொல்வதை உதாசீனப்படுத்தமுடியவில்லை.

இந்திய நாட்டின் அரசியல் வானில் வகுப்புவாத மதவெறி எனும் இருள்சூழ்ந்து, அரசியல் சாசனச் சட்டத்தின் விழுமியங்கள் அனைத்தும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சியும், மக்களாட்சித் தத்துவமும் அழிவின் ஆரம்பப் பாதையில் நிற்கும்போது, அதனைத் தடுத்து நிறுத்தி, இந்தியா என்று நாம் கொண்டாடும் தத்துவத்தைப் பாதுகாத்துத் தர பணிக்கப்பட்டிருக்கும் உச்சநீதிமன்றத்தை, நீதிநாயகம் சந்திர சூட் எப்படி வழிநடத்தினார் என்ற கேள்வியை, வரும் தலைமுறைகள் கேட்குமல்லவா? அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?