எப்போது பேசினாலும், எங்கே பேசினாலும், என்ன பேசினாலும், எப்படிப் பேசினாலும் ‘விவகாரமாகவே’ பேசிவரும் ஆளுநர் ரவி, சமீபத்தில் குமரி மாவட்டத்தில் வித்யா ஜோதி வித்யா பூஷன் பட்டமளிப்பு விழாவில் ‘மதச்சார்பின்மை’ குறித்து பேசிய கருத்துகள், அநேகருடைய கவனத்தினை ஈர்த்து பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
“மதச்சார்பின்மை எனும் கோட்பாடு ஐரோப்பிய சரக்கு; நமது பாரத தர்மத்திற்கு ஒவ்வாதது, இந்தியாவுக்குத் தேவையற்றது” என்று
ஒரு பெரிய அரசியல் சிந்தனையாளர்போல அவர் பேசியிருந்தாலும், அந்த வார்த்தைகள் அவரது ‘சொந்தச் சரக்கல்ல’.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிதாமகரும், அந்த இயக்கத்திற்கான கொள்கைகளையும், தத்துவங்களையும் வடிவமைத்தவருமான எம்.எஸ். கோல்வாக்கருடைய கருத்துகள் தாம் அவை என்பதை அவராலேயே மறுக்க முடியாது.
கோல்வாக்கர்
எழுதிய ‘சிந்தனைக் கொத்து’
(Bunch of Thoughts) என்ற
நூலைப் படித்தவர்களுக்கு ஆர்.என். ரவி கூறி வருகின்ற எந்தச் செய்தியும் புதிதல்ல என்பது தெரியும். கோல்வாக்கரைப் பொறுத்தவரை மதச்சார்பின்மை மட்டுமல்ல; சனநாயகம், சோசலிசம், பாராளுமன்ற நடைமுறைகள், கூட்டாட்சித் தத்துவம் என்று நாம் கொண்டாடுகின்ற அனைத்துமே ஐரோப்பியச் சரக்குகள் என்பதுதான் அவரது கருத்து. அவரும், அவரைப் பின்பற்றியவர்களும் அரசியல் சாசன சட்டத்தைக்கூட ஐரோப்பிய இறக்குமதி சரக்காகத்தான் பார்த்தார்கள். அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள். இன்றுவரை அவர்கள் அதனை மாற்றுவதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.
இங்கு
மதச்சார்பின்மையைப் பற்றி மட்டுமே பேசுவோம்.
மதச்சார்பின்மை
ஓர் ஐரோப்பியச் சிந்தனை என்று சொல்கிறவர்களுக்கு உலக வரலாறும் தெரியவில்லை, பாரதக் கலாச்சாரத் தொன்மையும் தெரியவில்லை என்பதுதான் உண்மை. மதச்சார்பின்மை என்று நாம் சொல்வதும், நமது அரசியல் சாசனச்
சட்டம் சொல்வதும் இந்த நாட்டின் தர்மத்திற்கு விரோதமானது என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ரவி உருவாக்க முயற்சிக்கிறார். அவரைப் போலவே வலதுசாரி வகுப்புவாத அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகளும் ‘மதச்சார்பின்மை’ என்பது இந்நாட்டின்
பெரும்பான்மையினர் பின்பற்றும் இந்து மதத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து, நாட்டில் உள்ள சிறுபான்மை மதங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு கருத்தியல் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். உண்மையில் மதச்சார்பின்மை என்பது அரசு நிர்வாகம் சம்பந்தப்பட்டது மட்டுமே. அரசு நிர்வாகத்தில் மத நம்பிக்கைகளுக்கு இடமில்லை என்பதும்,
அரசு, அரசியல் சாசன சட்டப்படி மட்டும்தான் செயல்படும் என்பதும், மதத்தின் அடிப்படையில் தன் குடிமக்களை வேறுபடுத்திப் பார்க்காது என்பதும்தான் நமது அரசியல் சட்டம் சொல்லும் மதச்சார்பின்மையின் தாத்பரியம். இந்தக் கருத்தியலை உலகுக்கு அறிமுகப்படுத்தியதே நமது நாடுதான்.
மதத்தையும்,
அரசையும் ஒன்றாகச் செயல்பட அனுமதிக்கக்கூடாது என்ற கொள்கையுடன் ஆட்சி நடத்தியவர்கள் இந்திய மன்னர்கள் மட்டுமே! இதற்கு நேர்மாறாக ஐரோப்பிய நாடுகளில் மத குருமார்கள்தாம் மன்னர்களை ஆட்டிப்படைத்து
வந்தார்கள். ஒரு காலத்தில் ஐரோப்பிய மன்னர்களுக்கு முடிசூடும் அதிகாரம் போப்பாண்டவரிடம் மட்டும்தான் இருந்தது. போப்பாண்டவர் வந்து முடிசூடாவிட்டால் மக்கள் அந்த மன்னர்களை, மன்னராக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். யார் மிக அதிகமாகப் பொன்னும் பொருளும் கொடுத்தார்களோ அவர்களுக்கு போப்பாண்டவர் முடிசூடிய சம்பவங்களும் நடந்ததுண்டு. இஸ்லாமிய மன்னர்களுக்கும், போப்பாண்டவரின் படைகளுக்கும் இடையில் நடந்த சிலுவைப் போர்கள் பற்றி ஆளுநர் அறிவாரா?
ஆனால்,
கிறிஸ்து பிறப்பதற்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னரே அரசுக்கும், மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அறிவித்தவர் பேரரசர் அசோகர். புதிய மதங்களை, மார்க்கங்களைப் போதித்த சாக்ரடீஸ் போன்றவர்களை அந்நாட்டு அரசியல் அதிகார மையங்கள் விஷம் கொடுத்துக் கொன்றன. இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறைந்தன. முகமது நபியைக் கல்லால் எறிந்து ஊரைவிட்டே விரட்டின. ஆனால், நம் நாட்டு மன்னர்கள் புதிய மார்க்கங்களையும், வழிபாட்டு முறைகளையும் அறிமுகப்படுத்திய புத்தரையும், மகாவீரரையும், ஆதி சங்கரரையும் தடை செய்யவில்லை. அவர்கள் நாடு முழுவதும் வலம் வந்து தங்களது புதிய மதங்களைப் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கியதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குப் பாதுகாப்பும் வழங்கியுள்ளனர்.
பேரரசர்
பாபர் தனது மகனுக்கு எழுதிய உயில் தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. “என் அருமை மகனே! இந்துஸ்தான் என்ற இந்த தேசத்தில் பல மதங்களைச் சார்ந்த
மக்கள் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் அரசாட்சியை நம் கரங்களில் தந்திருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்வோம். நம் இதயத்தில் இருக்கும் அத்தனை வேறுபாடுகளையும் அகற்றிவிட வேண்டும். ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களது கலாச்சார, பண்பாட்டு மரபுகளின்படி நீதி வழங்கவேண்டும். பசு வதையினை அனுமதிக்காதே. அரசு நிர்வாகத்தில் அனைத்துத் தரப்பு மக்களையும் சேர்த்துக்கொள். நம்முடைய இராஜ்யத்தில் இருக்கும் இந்து ஆலயங்கள் மற்றும் இதர வழிபாட்டுத்தலங்களுக்கு எவ்விதச் சேதமும் வராமல் பார்த்துக்கொள்” என்று
அவர் அந்த உயில் மூலம் தனது மகனுக்கான அறிவுரைகளை வழங்குகிறார்.
ஆறாவது
நூற்றாண்டில் இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட பேரரசர் ஹர்ஷவர்த்தனா, பிரயாகையில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களையும் அழைத்து, சர்வமத பிரார்த்தனைகள் நடத்திய வரலாற்றையும் ஆளுநர் தெரிந்து கொள்ள வேண்டும். சீக்கியக் குருவான குருநானக் இந்துகளையும், இஸ்லாமியர்களையும் ஒருங்கிணைத்து வழிபாடுகளை மேற்கொண்டார். சீக்கிய மதநூலான ‘ஆதி கிரந்தத்தில்’ சீக்கியக்
குருக்களின் படைப்புகளோடு இந்து மற்றும் இஸ்லாமிய புனிதர்கள் இயற்றிய படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.
அசோகச்
சக்கரவர்த்தியின் 12-வது கல்வெட்டில் தனது குடிமக்கள் தங்களுக்குள் மத வேறுபாடுகளைப் பார்க்கக்கூடாது
என்றும், அனைத்து மதங்களையும் மதிக்கும் நல்ல பண்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசாணை பிறப்பித்துள்ளார். 18 மற்றும் 19-வது நூற்றாண்டுகளில் வாழ்ந்த மராட்டிய மற்றும் சீக்கிய மன்னர்களும் தங்களது ஆட்சியையும், இராணுவத்தையும் அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களை வைத்தே நிர்வாகம் செய்துள்ளனர் என்பது வரலாறு.
நமது
தேசத்தின் கலாச்சார மரபணுக்களில் மண்டிக்கிடக்கும் மனிதநேயத்தையும், மாற்றாரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும், அண்டிவந்தவரை அரவணைக்கும் தோழமையையும், அனைத்து மதங்களையும் போற்றி மதிக்கும் பண்பையும் 1893 -ஆம் ஆண்டு செப்டம்பர் 11-இல் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த அனைத்து மதங்களின் மாமன்றத்தில் உரையாற்றிய அருளாளர் விவேகானந்தர் எடுத்துரைத்தார்.
“அகில உலகிற்கும், சகிப்புத்தன்மையையும், எல்லாரையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தையும் கற்றுக்கொடுத்த ஒரு மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை கொள்கிறேன். உலகில், மதத்தின் பெயரால் வன்கொடுமைக்கு ஆளான அனைத்து நாட்டு மக்களுக்கும் அடைக்கலம் கொடுத்து ஆதரவளித்த நாட்டைச் சார்ந்தவன் என்ற பெருமையும் எனக்கு உண்டு. உரோமானிய பேரரசின் அடக்குமுறையால் யூதர்கள் மிரட்டப்பட்டு அவர்களுடைய தேவாலயம் இடிக்கப்பட்ட அதே ஆண்டு உயிருக்குப் பயந்து எங்களது தென் இந்தியாவுக்கு அவர்கள் அடைக்கலம் தேடிவந்த வேளையில், பாசத்துடன் அவர்களை நெஞ்சோடு அணைத்துக்கொண்ட நாடு எங்கள் நாடு. உலகெங்கும் அழிந்துபோன சௌராஷ்டிர மதத்தை முழுமையாக அழிந்து விடாமல் இன்றும் பாதுகாக்கும் நாடு எங்கள் நாடு. என்னுடைய சிறுவயதிலிருந்து நானும், என்னைப் போன்ற கோடிக்கணக்கான இந்தியர்களும் ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் சொல்லும் வேத மந்திரத்தை இப்போது உங்களுக்குச் சொல்கிறேன்:
‘பரந்த நிலப்பரப்பில் பல இடங்களில் தோன்றும்
நீரோடைகள் பலப்பலவாக இருந்தாலும், அவைகளில் வடியும் நீரெல்லாம் எப்படி ஒன்றாகி ஒரே மகா சமுத்திரத்தில் கலக்கிறதோ, அதைப்போல எங்கள் இறைவனே! மனிதர்களாகிய நாங்கள் பெரிதும் சிறிதுமான பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், இறுதியில் உன்னிடமே சங்கமிக்கிறோம்’ என்று
விவேகானந்தர் பேசி முடிந்தவுடன் அனைத்து நாட்டுப் பிரதிநிதிகளும் விழிநீர் ததும்ப கைகளைத்தட்டி ஆரவாரித்த காட்சியை வரலாறு ஒரு நாளும் மறக்காது.
நமது
முதல் பிரதமரை-மதச்சார்பின்மையின் மாண்பிற்கு இலக்கணமாக ஆட்சி செய்த பண்டித நேரு அவர்களை வெளிநாட்டு பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி கண்டார். “இந்திய நாட்டின் முதல் பிரதமராகப் பதவியேற்றுள்ள உங்களை எதிர்நோக்கியுள்ள சவால்களில் எதனை மிக முக்கியமானதாக பார்க்கின்றீர்கள்? வறுமையா? அறியாமையா? அடிப்படை வசதிகள் இல்லாமையா?” என்று கேட்டபோது நேரு அவர்கள் கூறிய பதிலை இங்கே நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்: “மிகுந்த மத நம்பிக்கை கொண்ட
மக்கள் மிக அதிகமாக வாழும் இந்தத் தேசத்தில் ஒரு மதச்சார்பற்ற அரசை உருவாக்கி நடத்துவதுதான் எனக்கிருக்கும் மிகப்பெரிய சவால்” என்று நேரு கூறினார்.
மிக
அதிகமான மதநம்பிக்கை கொண்டவர்கள் எந்த நாட்டு மக்கள் என்றறிய சிகாகோ பல்கலைக்கழகம் ஓர் ஆய்வினை நடத்தியது. அதில் முதல் இடத்தைப் பெற்றவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டினர். அடுத்த இடம் இந்தியாவுக்கு. தங்களது மதங்களின் பேரில் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த போதிலும், மற்ற மதங்களையும் மார்க்கங்களையும் மதித்துப் போற்றுகின்ற பண்பு இந்தியர்களின் மரபணுக்களில் இயற்கையாகவே இருப்பதுதான் நமக்கு இருக்கும் மிகப் பெரிய வலிமை.
ஆனால்,
இன்று பெரும்பான்மைவாதத்தை முன்னெடுத்து, வாக்கு வங்கி அரசியலை நடத்தும் வலதுசாரி பாசிச மதவாத சக்திகள், ‘மதச்சார்பின்மை’ என்பது
மதச்சிறுபான்மையினரிடம்
வாக்குகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிலைப்பாடு என்று நாள்தோறும் இடைவிடாமல் பிரச்சாரம் செய்து வருகின்றன.
140 கோடி மக்கள்,
600 மொழிகள், 6000-க்கும் அதிகமான இனக்குழுக்கள் மற்றும் சாதிகள்... 1947-இல் குண்டூசி கூட தயாரிக்க முடியாத நாடு... அமெரிக்காவின் பி.எல். 480 நிதியம்
மூலம் பெறுகின்ற கோதுமையை வைத்துதான் மக்கள் பசியாற வேண்டிய நிலை.
இன்று
75 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையினைத் தொடுவதற்காகக் காத்திருக்கிறோம். உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம். உலகின் மிகப்பெரிய செயல்படும் சனநாயகம் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளோம்.
இந்திய
இளைஞர்களை வரவேற்க உலக நாடுகள் கரம் விரித்துக் காத்திருக்கின்றன. உலக நாடுகளில் மிக அதிகமாக வாழ்கின்ற புலம்பெயர்ந்த மக்களில் இந்தியர்கள்தாம் முதலிடத்தில் இருக்கின்றனர். வெளிநாடுகளில் வாழும் அவர்கள் உழைத்து அனுப்பும் டாலர்கள்தாம் நமது அந்நியச் செலாவணி கருவூலத்தை ஒவ்வொரு நாளும் நிரப்புகின்றன. இவை அனைத்திற்கும் காரணம், சுதந்திர இந்தியாவைத் தங்களது கனவுகளில் தேக்கி நிஜங்களாக உருவாக்கிய நமது முன்னோர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் ‘மதச்சார்பற்ற நாடாக’ இந்தியாவை உருவாக்கியதுதான்.
நம்மோடு
சுதந்திரம் பெற்று, ஒரு மதம் சார்ந்த நாடாகத் தன்னை அவதானித்துக் கொண்ட பாகிஸ்தானின் நிலைமை என்ன என்பதை ஆளுநர் ரவி போன்றவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சமீபத்தில் சவுதி அரேபியா, பாகிஸ்தான் அரசுக்கு ஒன்றை அறிவுறுத்தியுள்ளது: மெக்காவில் பிச்சையெடுப்பவர்களில் பெரும்பாலோர் பாகிஸ்தானைச் சார்ந்தவர்களாம்! பாகிஸ்தான் அரசு ஐ.எம்.எப்.
இடம் பிச்சை எடுக்கிறது. பாகிஸ்தான் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் மதத்தோடு அரசு நிர்வாகத்தை இணைத்து ஆட்சி நடத்தும் எந்த நாட்டிலும் முன்னேற்றம் இல்லை. வளர்ச்சி இல்லை. சமூக அமைதி இல்லை. சனநாயகமும் இல்லை. சட்டத்தின் ஆட்சியும் இல்லை.
மதச்சார்பின்மை
என்பது சிறுபான்மை மக்களுக்கான ‘சமூகச் சலுகை’
(social concession) என்ற தவறான பிரச்சாரத்தை இந்திய இளைஞர்கள் விலக்கி ஒதுக்க வேண்டும். அது நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், இளம் தலைமுறையினரின் எதிர்கால பாதுகாப்புக்கும் நாம் உருவாக்கி வைத்திருக்கும் ‘காப்பீடு’
என்பதில் தெளிவு வேண்டும். அது மட்டுமல்ல, மதநல்லிணக்கமும், மனிதநேயமும், மாற்றுத் தத்துவங்களின் சிறப்புகளை ஏற்கும் பெருந்தன்மையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் மண்ணில் விளைந்து நிற்கின்ற ‘கலாச்சாரக் கருத்தியல்கள்’ என்பதை
அறிய வேண்டும். உண்மை என்னவென்றால், ஆளுநர் ரவி போன்றவர்களின் கருத்துகள்தாம் ஐரோப்பிய இறக்குமதிகள். இவர்களின் முன்னோர்கள் இத்தாலியில் இருந்தும், ஜெர்மனியில் இருந்தும் இறக்குமதி செய்தார்கள்.
‘மதச்சார்பின்மை’ நமது
மண்ணின் மாறாத பெருமை! அதுதான் நமது தேசத்தின் வலிமை!