‘நம்
வாழ்வு’ நாகர்கோவிலுக்கு
இடம்பெயர்ந்தது குறித்து ‘நம் வாழ்வு’ இதழின் இணை ஆசிரியர் எம்.
ஏ.
ஜோ
அவர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரை (19.05.1985).
‘நம் வாழ்வு’ நாகர்கோவிலுக்கு இடம் பெயர்ந்திருக்கிறது. காரணம்... சில சங்கடங்கள், சில நிர்ப்பந்தங்கள்.
‘நம் வாழ்வு’ இதழின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட பலர் இந்த இடமாற்றத்தைப் பற்றி வேதனையோடு என்னிடம் பேசியிருக்கிறார்கள். ‘நம் வாழ்வு இதழின் எதிர்காலத்தை நினைத்து அவர்கள் வெகுவாய்ப் பயப்படுகிறார்கள்.
அவர்கள்
பயப்படுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. நாகர்கோவிலுக்குப் போனால் இது மற்றொரு கோட்டாறு மறைமாவட்டப் பத்திரிகையாக மாறிப் போகும் என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள்.
மறைமாவட்டப்
பத்திரிகைகள் யாவும் ‘ஆமாம் சாமி’ கிரகத்தைச்
சார்ந்திருந்த வேளையில், புதியதொரு சுதந்திரத்தோடு ‘நம் வாழ்வு’ நீதிக்குக் குரல் கொடுத்து, பழமைகளைத் துணிவோடு களைந்துவிட்டு, இளமைக்கும் புதுமைக்கும் திறமைக்கும் ஊக்கம் தந்து, தனக்கென்று ஒரு பாதையை, ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
குற்றங்களைச்
சுட்டிக்காட்டும் இறைவாக்கினருக்கு எப்போதுமே இருப்பதுபோல ‘நம் வாழ்வு’க்கும் எதிர்ப்புகள் இருந்துகொண்டேயிருந்தன. இதனால் நம் வாழ்வை மிரட்டியவர்கள் இருந்திருக்கிறார்கள். முறைத்துக் கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் திரிந்தவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். இவர்களையும்
மீறி இதுவரை தன் உயிரையும், குரலையும் எப்படியோ காத்துக்கொண்ட ‘நம் வாழ்வு’ இப்போது கோட்டாறு ஆயரின் வீட்டு வாசலுக்குப் போய்விட்டால், தன் சுதந்திரத்தை இழந்து விடும்; பத்தோடு பதினொன்றாய் ஆகிவிடும் என்று இவர்கள் பயப்படுகிறார்கள்.
இந்தப்
பயங்கள் எல்லாம் தேவையற்ற பயங்கள் என்று நிரூபித்துக் காட்டும் கடமை நம் வாழ்வின் தோள்களில் இப்போது விழுந்திருக்கிறது.
இப்படி
மற்றோர் ஊருக்குக் குடிமாற வேண்டியதன் அவசியமே சில நிர்ப்பந்தங்களால் ஏற்பட்டதுதான்.
சில
வயிற்று வியாதிக்காரர்களுக்குக் காரமே ஒத்துக்கொள்ளாதல்லவா? அதுபோல நம் வாழ்வில் இருந்த சிறிது காரமும் சிலருக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை. எல்லாமே தித்திப்பாய், எதனையும் வரவேற்று, எல்லாரையும் பாராட்டி, எல்லாருக்கும் நல்ல பிள்ளையாய் ‘நம் வாழ்வு’ இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அப்படி அது இல்லாமல் போனதால் கோபப்பட்டு இவர்கள் குமுறினார்கள். ஒழிந்து போகாவிட்டாலும் பரவாயில்லை... இங்கிருந்து வெளியேறினால் சரி என்ற இவர்களின் ஆற்றல் மிகுந்த ஆசை ஒரு காரணம்.
துவக்கத்தில்
‘நம் வாழ்வு’ அச்சிடப்பட்ட நல்லாயன் அச்சகம் விற்கப்பட்டதிலிருந்து, இதழுக்கென்று சொந்தமாய் ஓர் அச்சகம் இல்லாமற்போனது மற்றொரு காரணம்.
தரைக்குக்
கீழே சாமான்களை அடைத்து வைக்கவேண்டிய கிடங்கு - கொசுவும் இருளும் சூழ்ந்த அறையே சில ஆண்டுகளாய் அலுவலகமாக இருந்த அவலத்தை மாற்ற முயன்று தோற்றுப்போனது மற்றொரு காரணம்.... இப்படிச் சில நிர்ப்பந்தங்கள்....
‘நம் வாழ்வு’ நாகர்கோவிலுக்குப் போனதால் சில புதிய நம்பிக்கைகள் துளிர்ப்பதற்கும் காரணங்கள் இருக்கின்றன.
ஆதியிலிருந்து
இன்றுவரை கோட்டாறு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களே நம் வாழ்வின்மீது உண்மையான அக்கறை கொண்டு உதவி வந்திருக்கிறார்கள். அன்னாரின் அருகாமையும் ஆர்வமும் அக்கறையும் இதழுக்குத் தொலைவிலிருந்து அவர் செய்ய முடியாத பல நன்மைகளை இப்போது
சாத்தியமாக்கக் கூடும்.
துடிப்புடன்
வேகமாய் நடைபோட்ட ‘நம் வாழ்வு’ பொருளாதாரச் சேற்றில் வகையாய்ச் சிக்கிக்கொண்ட பிரச்சினையை மிகத் திறமையாய்ச் சமாளித்து மீட்டு வந்திருக்கும் ஆசிரியர் அமலநாதனே தொடர்ந்து ஆசிரியராய் இருக்கப் போகிறார். இனி வரும் பிரச்சினைகளையும் உறுதியாய் நின்று, வென்று காட்டுவார் என்று நாம் நம்ப முடியும்.
ஆசிரியர்
குழுவில் புதியவர்கள் வரப்போவது புதிய சிந்தனைகளுக்கு இடமளிக்கும்.
நம்
வாழ்வில் இணை ஆசிரியனாய்ப் பணியாற்ற ஈராண்டுக் கால ஒப்பந்தத்தில் வந்தவன் நான். அடியேன் வந்து இரண்டு ஆண்டுகள் முடிவதால் இப்பொறுப்பினின்று விடைபெற்றுக்கொள்கிறேன்.
புதுக்குடித்தனம்
துவங்கும் புது வாழ்வு இன்னும் செழித்துச் சிறந்து, சாதனைகள் படைக்க நெஞ்சார வாழ்த்துகிறேன்.
இடம் மாறினாலும்
இதயங்களிலிருந்து
இடம்
மாறவில்லை!
(‘நம் வாழ்வு’ இதழ் நாகர்கோவிலை நோக்கி இடம்பெயர்ந்த நாள்களில் அன்றைய முதன்மை ஆசிரியர் அருள்பணி. அமலநாதன் அவர்கள் எழுதிய ஆசிரியர் பக்கம் (09.06.1985)
‘நம்
வாழ்வு’ அலுவலகம்
இடம் மாறியதால் வாசகர்களின் இதயங்களிலிருந்தும் இவ்விதழ் இடறி விழுந்துவிடுமோ என்ற அச்சம் என்னுள்ளத்தில் இருந்துகொண்டே இருந்தது. ஆனால், அந்த அச்சம் வெறும் பிரமைதான் என்பதை வாசகர்கள் உணர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் கடிதங்கள் - நம் வாழ்வின் புதுப்பிறப்பு பற்றியும், புதிய அம்சங்களைப் பற்றியும், அச்சு வேலைப்பாடுகளைப் பற்றியும் பாராட்டி எழுதப்பட்டவை - இதயத்திற்கு இதமாக இருக்கின்றன.
அலுவலகம்தான்
இடம்மாறியிருக்கிறதே தவிர, ‘நம் வாழ்வு’ மாறவில்லை, மாறாது. ‘தான் தமிழக இறைமக்களின் பொதுச்சொத்து’ என்கிற
தனது நிலையை ‘நம் வாழ்வு’ ஒருபோதும் மறக்காது. வரிக்கு வரி இதனை அழுத்திக் கூற நான் ஆசைப்படுகிறேன்.
‘என் உயிரினும் மேலான வாசகர்கள்’
- வலம்புரியாரின்
வார்த்தைகள் இவை.
‘பத்திரிகையின் உயிர்மூச்சு வாசகர்கள்தான்’
நம்
வாழ்வின் வளர்ச்சியிலும், தளர்ச்சியிலும் கைகொடுத்த தெய்வங்கள் வாசகர்களாகிய நீங்கள்தான்....
‘நம் வாழ்வு’ வானத்து உச்சியை எட்டிவிட நீங்கள் ஒவ்வொருவரும் ஏணிகளாக இருக்கின்றீர்கள்....
ஏற்றிய
ஏணியை எட்டி உதைக்கும் பழக்கம் நம் வாழ்வுக்கு இல்லை.
நம்
வாழ்வின் இதயத் துடிப்புக்கூட உங்கள் பெயரைச் சொல்லியே ஒலிக்கின்றது.
நீங்கள்
தொடர்ந்து கொடுக்கும் ஆதரவில் ‘நம் வாழ்வு’ வெற்றிக்குமேல் வெற்றி நடைபோடும் என்பது மறுக்க முடியாத உண்மை....
“படியுங்கள், படித்துக்கொண்டேயிருங்கள்...
இறக்கும்வரை படித்துக்கொண்டே இருங்கள்”
என்கிறார் பிராஷ்யூ என்ற அறிஞர்.
படிப்பதோடு
நிறுத்திக்கொள்வது மடமை
படித்தபின்
சிந்திப்பதுதான் பெருமை
சிந்தித்தபின்
செயல்படுவது நம் கடமை....
வாசகர்களாகிய
நீங்கள் படித்து, சிந்தித்து, செயல்படுகிறீர்கள் என்பதற்கான அடையாள முத்திரைகள்தான் நீங்கள் அனுப்பிய அஞ்சல் அட்டைகள்.... பிராஷ்யூவின் வார்த்தைகளையே மீண்டும் சொல்கிறேன்... ‘படித்துக்கொண்டேயிருங்கள்’. காரணம்,
நிறையப் படிப்பதன் மூலம் அறிவு வளர்கிறது. அறிவின் மூலம் பண்பாடு வளர்கிறது....