நேற்று மாதிரி
இன்றில்லை;
ஆகவே...
‘தாய்’ வார இதழின் ஆசிரியர் திரு. வலம்புரி ஜான் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர். ‘நம் வாழ்வு’ வார இதழின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பவர். 20.12.1981 அன்று 1981- இல் வெளிவந்த கத்தோலிக்க இதழ்கள் பற்றி நம் வாழ்வில் அவர் எழுதிய அற்புதமான படைப்பு!
“நான்
எழுதுகிறவன், எழுத்தை ஆள்கிறவன் அல்லன். என் ஆட்சி ஆரம்பிப்பதற்கு இன்னமும் காலம் இருக்கிறது. இப்போது எனது எழுதுகோல் தொட்டிலில் கிடக்கிறது. என்றாலும், அது ஒரு நாள் சிம்மாசனம் ஏறும்.
நான்
ஏன் எழுதுகிறேன்? எழுதாமலிருக்க முடியவில்லை. ஆகவே எழுதுகிறேன். குயிலுக்குப் பாடாமல் இருக்க முடியவில்லையே! மயிலுக்கு ஆடாமலிருக்க முடியவில்லையே! அதைப் போல...
நான்
எழுதிய கவிதை வெளிச்சத்தைப் பார்த்து பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. அப்போது நாகர்கோவிலிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘தென் ஒலி’ என்கிற மாத இதழிலேதான் அந்தக் கவிதை வெளிவந்திருக்கிறது. அது வியாகுல மாதாவைப் பற்றியது.
அது
ஒரு செப்டம்பர் மாதம் என்பது மாத்திரம் நினைவிலிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அதில் நினைவில் நிற்பதற்கு ஒன்றுமில்லை. பூவும், பிஞ்சுமான எனது நினைவுகளால் புலர்வான முற்றத்தில் நான் போட்ட முதல் கோலம் அது.
அப்போதெல்லாம்
‘சர்வ வியாபி’ என்றொரு பத்திரிகை வரும். அதிலிருந்த விவகாரங்களிலிருந்து எனது நினைவுகள் எப்போதோ தப்பித்து விட்டன. ஒன்று மாத்திரம் நினைவிருக்கிறது. அது நமக்குள் நாமே படித்துக்கொள்கிற பத்திரிகை. மற்ற சமயத்தினர் அதை மறந்தும் பார்க்கமாட்டார்கள். காரணம், அதன் கிட்டப் பார்வைதான்.
மறைதிரு
‘வெனிஷ் அடிகளார்’
நடத்திய ‘நற்கருணை வீரன்’ என்ற பத்திரிகையை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதை நான் பள்ளிப் பிள்ளைகளிடத்திலே விற்றதுண்டு. சிறுவர் இதழ்களில் சிறப்பாக வந்த கிறித்தவ இதழ் இதுதான். அதில் வந்த கதைகள் நலம் தரும் கனிகள்.
‘ஞான தூதன்’ நான் நீண்ட நாளாகப் பார்த்தும், சில வேளை படித்தும் வருகிற பத்திரிகை. எங்கெங்கே, எவரெவர்கள் இறந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பத்திரிகை ஒன்றே எனக்கு இப்போதும் உதவுகிறது. அரை நூற்றாண்டுக்கு மேலாக நடந்து வருகிற பத்திரிகை இது. அதன் உள்ளடக்கம் வெகுவாக இப்போது மாறித்தான் இருக்கிறது!
ஞான
தூதனில் ‘உங்கள் கேள்விகள் - பதில்கள் வசந்த்’ என்கிறவர் தருகிறார். கடந்த பத்தாண்டு காலத்தில் ‘தூதனின்’ முகம் வெகுவாக மாறியிருக்கிறது என்பதற்கு இந்தக் ‘கேள்வி-பதில்’ அழுத்தமான எடுத்துக்காட்டாகும். இதிலே வருகிற ‘கேள்வி-பதில்கள்’
கிறித்தவர்களுக்குப்
பத்திரிகை நடத்தவரும், பதில் சொல்ல வரும் என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.
பாண்டிச்சேரியிலிருந்து,
‘வில்லியனூர் விடி வெள்ளி’ என்றொரு பத்திரிகை வருகிறது. இதில் பி.எல். சாமி
போன்ற தமிழறிஞர்களெல்லாம் எழுதுகிறார்கள். இதில் வருகிற கவிதைகள் ‘மரபுக் கவிதைகள்’
என்றாலும், மறக்க முடியாத கவிதைகள்!
சலேசியச்
சகோதரர்கள் நடத்தும் ‘அரும்பு’ விரும்பும்படி இருக்கிறது. ‘காகிதத்தைப் பார்த்தால் கழுதைக்குச் சாப்பிடத் தோன்றுகிறது. கவிஞனுக்கோ கவிதை படைக்கத் தோன்றுகிறது’ என்று
எப்போதோ நான் சொன்னதை எடுத்துப் போட்டிருந்தார்கள். கோலிக்குண்டாகக் குறுகிப்போன ஓர் உலகத்தில் ஆரஞ்சுப் பழமாக விரிந்த அற்புதமான மனிதர்கள் இவர்கள்!
கிறித்தவப்
பத்திரிகைகள் எந்த அளவிற்கு மாறியிருக்கின்றன என்பதற்கு ‘நம் வாழ்வு’ ஓர் உதாரணம். சட்டையாகிய அட்டையிலிருந்து சில விவகாரங்களும் இதிலே புதிதாக முளைத்திருக்கின்றன. வேர்கள் பழமையானவை, பூக்கள் புதுமையானவை என்பதற்கு ‘நம் வாழ்வு’தான் வரலாற்றுச் சான்றாக இருக்கிறது.
‘காக்கைக் கூடுகள்’ எழுதி கவனத்தில் நிலைத்துவிட்ட ஐசக் அருமைராஜன், ‘விசப் பானங்கள்’
என்று எழுதுகிறார். ‘மேற்கே உதித்த சூரியன்’ தலைப்பே நன்றாக இருக்கிறது. ராசி. அழகப்பன் எழுதிய ‘ஒரு புதிய தலைமுறை தோன்றும்போது...’ என்ற சிறுகதை நெஞ்சில் விதைக்கப்பட்ட நெருப்புத் துண்டு. ‘வாசகர் மேடை’ என்பதில் ‘அக்கிரமத்தின் சங்கிலிகளை அறுத்து விடு, அழுத்தியிருக்கும் நுகத் தடிகளை இறக்கு - ஒடுக்கப்பட்டவர்களை உரிமை மக்களாக விடுதலை செய்’ என்ற வரிகளைப் பார்த்ததும் என் கண்களில் நீர் துளிர்த்தது.
‘மனை மலர்’,
‘தீபிகை’, ‘பூக்கூடை’ இப்படி
எத்தனையோ கிறித்தவப் பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் மீது தீர்ப்புச் சொல்லுகிற வேலை எனக்கு வேண்டாம். இருந்தாலும் பொதுவாக, கிறித்தவப் பத்திரிகைகளைப் பார்க்கிறபோது காலத்திற்கேற்றபடி அவை மாறி வந்திருக்கின்றன; மாற முடியாத பத்திரிகைகள் மறைந்திருக்கின்றன என்றே சொல்லலாம்.
மற்ற
சமயத்தவர்களுக்கெல்லாம்கூட
ஞானம் உண்டு என்பதை நாம் ஏற்றுக்கொள்வதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. இன்னமும்கூட பாருங்கள், ‘மகாகவி பாரதிக்கு’
ஒரு நூற்றாண்டு விழா வருகிறது. நமது பத்திரிகைகள் அதைப் பற்றி எழுதியதாகத் தோன்றவில்லை.
ஒரு வேளை கவிஞர் பொ.ம. ராசா
மணி எழுதியிருக்கிறாரோ என்னவோ?
நதி
வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறது. அது ஒரு காலநதி. அது மரங்களைக் கேட்டுக் கொண்டு போக இயலாது. அதில் ஒன்று நாம் மூச்சடக்கிக் கொண்டு மூழ்க வேண்டும். இல்லாவிட்டால் முயன்று நீந்த வேண்டும். இல்லாவிட்டால் மிதந்தாவது
போக வேண்டும். ஓரத்திலிருந்து கொண்டிருந்தால் ஒதுக்கப்பட்டவர்களாவோம்.
இதை
நமது பத்திரிகைகள் உணர்ந்து கொண்டால் நல்லது! இல்லாவிட்டால் காலம் அந்த வேலைக்கு வந்துவிடும்!
மறைமாவட்ட
ஆயரும், கன்னியர்கள் சிலரும் ஒருமுறை என்னிடம் பேச்சுக் கொடுத்தார்கள். ‘ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பத்திரிகையைவிட இரயில்வே கைடு படிக்கும்படியாயிருக்கிறது’ என்று
தெரிவித்தேன். இது நடந்தது நான்கு வருடங்களுக்கு முன்பு. இப்போதும் அந்தப் பத்திரிகை தன்னை மாற்றிக்கொள்ளாமலே இருக்கிறது.
பொதுவாக
நமக்குள் நாமே வாசித்துக் கொண்டிருப்பதற்காக ஒரு பத்திரிகை நடத்த வேண்டிய அவசியமில்லை. நமது பத்திரிகைகள் எல்லாம் சந்தாதாரர்களுக்குச் சேர்கின்ற பத்திரிகைகளே! பெரும்பான்மையாகக் கடைகளுக்கு வருவது இல்லை. இயேசுவின் திருமறை எல்லாத் திசைகளிலும் இருப்பவர்களை எட்டிப்பிடிக்க வேண்டும் என்பது நமது நோக்கம் என்கிறோம். நமது பத்திரிகைகள் அதற்கான கருவிகளாக இல்லை.
வாய்க்கால்கள்
சரியில்லாமல் இருக்கிறபொழுது வயல்கள் வறண்டு போவதில் என்ன ஆச்சரியமிருக்கிறது? அதிகமான மறுவுலகச் சிந்தனைதான் நமது பத்திரிகைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாக நான் உணர்கிறேன். நேற்று மாதிரி இன்றில்லை; ஆகவே, இன்று மாதிரி நாளை இராது என்பதில் நமக்கு அழுத்தமான நம்பிக்கை இருக்கிறது. நமது பத்திரிகைகளுக்குள் விரிவாகி வருகிற சமூகப் பார்வை ‘வைகறை விடியலுக்கு’ விடிவெள்ளி
போல முளைத்திருக்கிறது.”