(17.11.1985 ‘நம் வாழ்வு’ இதழில் திருத்தந்தையின் வருகை குறித்து சென்னை- மயிலை பேராயர் மேதகு அருளப்பா பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியின் ஒரு பகுதி)
இந்திய
ஆயர் பேரவையின் அழைப்பின் பேரிலும், மறைந்த இந்திரா காந்தி அவர்கள் திருத்தந்தையைச் சந்தித்தபோது அழைத்ததன் பேரிலும், நமது குடியரசுத் தலைவர் ஜெயில்சிங்கின் அழைப்பின் பேரிலும் திருத்தந்தை, அடுத்த ஆண்டு (1986) பிப்ரவரி முதல் தேதியிலிருந்து 10 -ஆம் தேதி வரை இந்தியாவில் தமது திருப்பயணத்தை மேற்கொள்கிறார்.
இந்தியாவிற்கு
வருகை தரும் இரண்டாவது திருத்தந்தை இவர். இதற்கு முன்பாக 1964 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் பம்பாய்க்கு வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் இந்தியாவிற்கு வருகை தருகிறார்.
திருத்தந்தை வருகை
தரும்
இடங்களும்
நாள்களும்
பிப்ரவரி
1, 2 ஆகிய தேதிகளில் டெல்லி.
3, 4 ஆகிய தேதிகளில்
கொல்கத்தா, ராஞ்சி, ஷில்லாங்.
5-ஆம்
தேதி சென்னை, திருச்சூர், கோட்டயம், திருவனந்தபுரம்.
9, 10 தேதிகளில் பம்பாய்,
பூனா.
பிப்ரவரி
5 அன்று காலை 11 மணிக்கு கொல்கத்தாவிலிருந்து சென்னை வரும் திருத்தந்தை, விமான நிலையத்திலிருந்து புனித தோமையார் மலைக்குச் செல்கிறார். அங்கிருந்து அண்ணாசாலை வழியாக இராஜாஜி மண்டபம் வருகிறார். அங்கு கிறித்தவரல்லாத பிற சமயத் தலைவர்களுடன் உரையாடுகிறார்.
பின்பு
சாந்தோமிலுள்ள பேராயர் இல்லத்தில் மதிய உணவு, ஓய்வு.
மாலை
3 மணிக்கு புனித தோமையார் பேராலயத்திற்குச் சென்றுவிட்டு, மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகில் அமைக்கப்பட இருக்கும் பிரமாண்ட மேடையில் 200க்கும் மேற்பட்ட ஆயர்கள், குருக்களுடன் திருப்பலி நிறைவேற்றுவார். திருப்பலி முடிந்தவுடன் நேராக விமான நிலையம் சென்று கேரள மாநிலத்திற்குப் புறப்படுவார்.
‘தமிழ்நாட்டிற்கு வருகை தரும் முதல் திருத்தந்தை’ என்ற
வரலாற்றுப் பெருமையைப் பெற்றிருக்கிறார் திருத்தந்தை இரண்டாம்
ஜான்பால். ‘ஒற் றுமைக்கு இறைவன் விடுக்கும் அழைப்பு’ என்பது திருத்தந்தையின் இந்தியப் பயணத்திற்கான மையக்கருத்து.
புனித
பேதுருவைத் தொடர்ந்து வரும் 264-வது திருத்தந்தையும், 80 கோடி கத்தோலிக்க மக்களின் தலைவருமான திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் சென்னை வருவது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
திருத்தந்தையின்
வருகையைக்
குறித்து
இவர்களின்
உணர்வுகள்
என்ன?
(02.01.1986)
“தாய்த்
திரு அவையின் தலைவரை அருகில் நின்று தரிசிப்பதில் உண்மையிலேயே ஆனந்தம் அதிகம்தான். இலட்சக்கணக்கான
மக்கள் தங்களது தார்மீகத் தலைவரைக் காண கரைபுரண்டு வரும் வேளையில், விடிந்தால் முடிந்துபோகிற அரசியல் கூட்டங்களைப் போல் இது அமைந்து விடக்கூடாது. ஆன்மிக மறுமலர்ச்சியும், சமூக ஈடுபாடும் தலத்திரு அவையில் ஊக்கம்பெற திருத்தந்தை மாபெரும் உந்துசக்தியாக இருப்பார் என்பது எனது நம்பிக்கை. நமக்குள்ளே இருக்கிற பிரிவினைகளைக் களைந்துவிட திருத்தந்தையின் வருகை உதவி புரிய வேண்டும்.”
- தியாக்கோன் வின்சென்ட் சின்னதுரை,
திரு
இருதய
குருத்துவக்
கல்லூரி,
சென்னை
“வெளிநாட்டிலிருந்து பிள்ளைகளைப் பார்க்க வரும் அன்புத்தந்தையை வரவேற்கப் போகிற உணர்வுதான் எனக்கு ஏற்படுகிறது. தன்னைத் துப்பாக்கியால் சுட்டவனைக்கூட மன்னித்துவிட்டதால் அவர் மீதுள்ள மதிப்பும், அவரது அருள்பொழியும் வதனத்தைப் பார்க்க வேண்டுமென்கிற ஆசையும் அதிகமாகிறது. அவரில் இயேசுவின் வாரிசையே காண்கிறேன்.”
- ஹெலன் நிர்மலா, சென்னை
“திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் இந்தியாவுக்கு வந்தபோது எனக்கு வயது 11. பணக்காரர்களும், பெரியவர்களும் சொகுசுப் பேருந்து மூலம் அவரைப் பார்க்கச் சென்றபோது, நிராகரிக்கப்பட்ட எனது ஏக்கங்கள் இன்று நிறைவேறப் போகின்றன என்பதில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி. இந்திய மண்ணிலும் இறை இயேசு உண்மையாய் வாழ்கின்றார் என்பதைத் திருத்தந்தையின் வருகை நிரூபிக்கும் என்பது எனது நம்பிக்கை.”
- தி. செல்வராஜ், காவல்துறை பணிமனை
ஆய்வு,
சென்னை
“ஏதோ தேவதைக் கதைகளில் படித்தவர்களை நேரில் பார்க்கப் போவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சின்ன வயதிலிருந்தே வீட்டிலும், மறைக்கல்வி வகுப்புகளிலும் அடிக்கடி
போப்பாண்டவர்களைப் பற்றிச் சொன்னாலும், அவர்கள் கடவுளைப்போல் காண முடியாத மறைபொருள் போலவே இருந்து வந்தார்கள். ஆதலால் இப்போதுகூட வாழ்வில் இனிமேல் பார்க்கவே முடியாத ஒரு பொக்கிஷத்தைப் பார்க்கப் போவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.”
- ஜோஸ்பின், சென்னை
திருத்தந்தை சென்னையில்
ஆற்றிய
மறையுரையின்
சுருக்கம்
(16.02.1986)
“இந்தியத் துணைக் கண்டத்தில் நான் தொடங்கியுள்ள திருத்தூதுப் பயணத்தில், இன்று புகழ்பெற்ற பண்பாடுகளையும், ஆழ்ந்த கடவுள் பக்தியுள்ள பாரம்பரியங்களையும் கொண்டுள்ள தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னைக்கு நான் வந்துள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இதே தமிழ்நாட்டில் நற்செய்திப் பணியாற்றி, அதற்காக மறைச்சாட்சியாக மரித்த புனித அருளானந்தரை நினைவுகூர்ந்து இத்திருப்பலியை நிறைவேற்றுவதில் பேருவகை கொள்கிறேன். இந்நேரத்தில் இங்குத் திரளாக வந்திருக்கும் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரையும் வாழ்த்துகிறேன். அரசு அதிகாரிகளுக்கும், தொழில், கல்வி, கலாச்சாரம் இவற்றில் ஈடுபாடு கொண்டு பணியாற்றும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். இங்குள்ள ஏனைய கிறித்தவ சகோதர-சகோதரிகளுக்கும், மற்ற பல்வேறு சமயங்களைச் சார்ந்த மக்களுக்கும் என் வாழ்த்துகள்.
அன்புள்ள
சகோதர சகோதரிகளே! கிறிஸ்துவோடு இறந்தோமானால் அவரோடு வாழ்வோம் என்பது மட்டுமல்ல, நிலைத்து நின்றால்தான் அவரோடு வாழ்வோம் என்பதையும் மனத்தில் கொள்வோமாக. மேய்ப்பரும் அர்ச்சகரும் இறைவாக்கினருமாகிய கிறிஸ்து நமக்கு விடுத்துள்ள அழைப்பினால் அப்போஸ்தலர்களுடைய உள்ளங்களை எவ்வாறு தொட்டாரோ அப்படியே நம்மையும் தொட்டு தூய ஆவியின் முத்திரையைப் பெற்றுக்கொள்ளச் செய்திருக்கிறார். சிறப்பாக, புனித தோமையார், புனித பிரான்சிஸ் சவேரியார், புனித அருளானந்தர் இவர்களுடைய உள்ளங்களில் நிகழ்ந்த அற்புதச் செயல்கள் நம் உள்ளங்களிலும் நிகழ்வதாக! இந்நாட்டிலுள்ள திரு அவைக்காகவும், எம் அன்புக்குரிய இந்திய நாட்டிற்காகவும், அதன் மக்களுக்காகவும் அவர்கள் தேவைகளுக்காகவும் இப்புனிதர்கள் இறைவனிடம் பரிந்து பேசுவார்களாக. அன்புச் சகோதரரே, நீங்கள் எல்லாரும் கடவுளின் வார்த்தைக்குச் சாட்சிகளாகவும், கிறிஸ்து உலகத்திற்கு வெளிப்படுத்திய மீட்பு அளிக்கும் செய்தியாகிய அன்பிற்கும், இரக்கத்திற்கும் சாட்சிகளாகவும் வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.”
(இம்மறையுரையைத் தமிழில் மொழிபெயர்த்து
உரை
நிகழ்த்தியவர்
கோட்டாறு
ஆயர்
மேதகு மரியானுஸ் ஆரோக்கியசாமி
ஆண்டகை
அவர்கள்)