news-details
சிறப்புக்கட்டுரை
சமயச் சார்பின்மைக்கு நேர்ந்த சோகம்!

அண்மையில் அக்டோபர் 22 அன்று வெளிவந்த நாளிதழ்கள் சமயச் சார்பின்மை தொடர்பான மூன்று செய்திகளைத் தந்துள்ளன. மூன்றினுள் சமயச் சார்பின்மை பற்றிய நம்பிக்கை தரும் செய்தியும் உண்டு; அவநம்பிக்கையைத் தக்கவைக்கும் செய்தியும் உண்டு. ‘சமயச் சார்பின்மைஎன்பது வெறும் முழக்கமல்ல; சமயச் சார்பின்மை சமயச் சார்பற்ற சனநாயகச் சக்திகளின் தேர்தல் நேரத்து அறிவிப்புகளில் ஒன்றுமல்ல.

விடுதலை பெற்ற இந்தியா இரு நாடுகளாகப் (Two nations) பிரிக்கப்பட்ட நிலையிலும், இரு நாடுகளில் ஒன்று மத அடிப்படையில் உருவான போதும், இந்திய அரசியல் நிர்ணய சபைஅரசமைப்பின் மூலம்இந்தியாவை இறையாண்மையோடு கூடிய சனநாயகக் குடியரசாகவே அறிவித்தது. ஆம்! அரசியல் சாசனத்தின் முகப்புரையில் சமயச் சார்பின்மை மற்றும் சமத்துவம் (Socialism) என்ற வார்த்தைகள் இடம் பெறவில்லை என்பதும் உண்மைதான். இந்திய அரசமைப்பின் முகப்புரையில் 1976-ஆம் ஆண்டு திருமதி. இந்திராகாந்தி அவர்களின் ஆட்சிக் காலத்தில்தான் சமயச் சார்பின்மை (Secular), சமத்துவம் (Socialism) என்ற இரண்டு சொற்களும் இணைக்கப்பட்டன.

விடுதலை பெற்ற இந்தியா சந்திக்கவிருக்கும் சவாலாக எதனைக் கருதுகிறீர்கள்?” என்ற வினாவைப் பண்டித நேருவிடம் முன்வைத்தபோது அவர், “ஒரு சமயம் சார்ந்த நாட்டில் சமயச் சார்பற்ற சமூகத்தைக் கட்டுவதே (create a sender state in a religious society) என்று பதிலளித்தார். இச்சவாலைக் கையிலெடுத்து, சமயச் சார்பின்மையை வலிந்து நிலைநிறுத்தியவர்களில் முதன்மையானவருள் பண்டித நேரு என்றும் போற்றுதற்குரியவர். இரு வேறுபட்ட முரண்பட்ட கொள்கைகளில் வளர்ந்த தேசிய இயக்கத்துள் ஒன்றான இந்து தேசியர்கள் சமயச் சார்பின்மையையும், சமத்துவத்தையும் எப்போதுமே ஏற்காதவர்கள். இந்திய அரசியல் சாசனம் தந்த சமயச் சார்பின்மையைபோலி மதச்சார்பின்மை (Psecedo Secular) என்று கேலி செய்பவர்கள்; சமத்துவம் இவர்களின் முதல் எதிரி. ஆர்.எஸ்.எஸ். என்ற மூலஅமைப்பும், அதன் துணைப் பரிவாரங்களும் இவைகளோடு ஆர்.எஸ்.எஸ்-சின் அரசியல் முன்னணியான அன்றைய பாரதிய சனசங்கமும், இன்றைய பாரதிய சனதா கட்சியும் என்ன கூறி வந்தன?

நாங்கள் முழுப் பெரும்பான்மை அடையும் நிலையில் அரசமைப்பை மாற்றுவோம்என்ற பாரதிய சனதா கட்சி, வாஜ்பாய் தலைமையில் ஆட்சியேற்றபோது, தாம் ஏற்கெனவே உறுதியளித்தபடி, அரசமைப்பை மாற்றியமைக்க நீதியரசர் வெங்கட செல்லையா தலைமையில் குழுவொன்று அமைத்தது. இக்காலத்தில் நல்வாய்ப்பாக இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்தவர் திரு. கே.ஆர். நாராயணன். இக்குழு உருவாக்கத்திற்கு அனுமதியளித்த நாராயணன், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை மாற்றக்கூடாது என்பதில் உறுதி காட்டினார். இக்குழுவும் தன் பரிந்துரையை அடிப்படைக் கூறுகளில் எந்தவித மாற்றமும் செய்யாமலேயே சமர்ப்பித்தது. ஆனால், இன்று அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கையற்ற ஒரு கட்சி ஆட்சிக் கட்டிலேறி ஆண்டுகள் பத்தான நிலையில், அரசமைப்பின் அடிப்படைக்கூறுகளை நாளும் சிதைத்து வருதலை இந்தியா பார்த்து வருகிறது.

இந்திய அரசமைப்பின் முகப்புரையில் சமயச் சார்பின்மை மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகள் ஏற்கெனவே இடம்பெறா நிலையில் இவ்வார்த்தைகள் அகற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் திரு. சுப்பிரமணிய சுவாமி. இவ்விரு கோட்பாடுகளும் மதவாதக் கொள்கைகளுக்கு எதிரானவை என்பதால் எதிர்த்த இவர்கள், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அரசியல் சாசன முகப்புரையில் இடம்பெறாமையால் நீக்கப்பெற வேண்டும் என்று பொய்க்காரணம் காட்டி வழக்காடினர். உச்ச நீதிமன்றம் இங்கும் சரியாகவே தீர்ப்பளித்தது.

சமயச் சார்பின்மை இந்திய அரசமைப்பின் மறுக்க முடியா அடிப்படைக் கூறுமீண்டும் மதச் சார்பின்மை எப்போதுமே அரசமைப்பின் அடிப்படைக் கூறாகவே இருக்கிறது. சமத்துவம்சகோதரத்துவம் போலவே சமயச் சார்பின்மையும் அடிப்படைக் கூறாகவே இருக்கிறது. சோசலிசம் என்ற கொள்கையை மேலைநாட்டுக் கண்ணோட்டத்தில் பார்த்தல் தவறு என்றும், சமவாய்ப்பு மற்றும் சமூக வளங்களைச் சமமாகப் பகிர்தலே இந்திய சோசலிசம் என்றும் உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பில் சனநாயகச் சக்திகள் பெருமகிழ்வு கொள்ளலாம். 2014-ஆம் ஆண்டு இந்திய நாட்டின் ஆட்சி பாரதிய சனதா வசம் சென்றபோது, ஏற்கெனவே எழுந்த அரசமைப்பின் முகப்புரையின் சாராம்சம் குறித்த அச்சம் மக்கள் சிலரிடம் இருந்தது. அவ்வச்சத்தை உண்மையாக்கும் வகையில் அவ்வாண்டு நடைபெற்ற குடியரசு விழாவுக்கான அரசின் அழைப்பிதழில், அரசமைப்பின் பிரதான கூறுகளான சமயச் சார்பின்மையும், சமத்துவமும் விடப்பட்டிருந்தன என்று சொல்வதைக் காட்டிலும், திட்டமிட்டுக் களவாடப்பட்டன என்றே சொல்லலாம். திட்டமிட்டு நடத்தப்பட்ட இக்களவாடலுக்குக் காரணமான அரசு எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை.

அரசமைப்புச் சட்டத்தின்மீது கைவைத்து உறுதி மொழியேற்று, பதவியேற்கும் சங்கப் பரிவாரங்கள், அரசமைப்பு முகப்புரையின் கூறுகள் அனைத்தையும் நாளும் மீறிக்கொண்டே அரசியல் அமைப்பு தினக் கொண்டாட்டத்தை அறிவிக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தை, தான் வேதமாகப் போற்றுவதாக மோடி கூறுகிறார். மதவாதப் பாரதிய சனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சனநாயகமும், அரசமைப்பும் பறிபோய்விடும் என்ற அச்சத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பியது கண்டு, மோடி கோபம் கொண்டார். எதிர்க்கட்சிகளைக் கண்டபடி வசைபாடி கேலி செய்தார்.

சமயச் சார்பின்மை என்றால் என்ன?

சமயச் சார்பின்மை என்பது சமயத்தை மறுப்ப தல்ல; சமயம் முன்வைக்கும் கடவுளையும் மறுப்ப தல்ல! மாறாக, பன்முகச் சமயங்களை உடைய ஒரு நாட்டில் சமயங்களின் சமத்துவத்தை மதிப்பது மத அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தாமல், பெரிய சமயங்களையும் சிறிய எண்ணிக்கையிலான சமயங்களையும் சமமாக மதிப்பது

மதச்சுதந்திரம் இங்குப் போற்றப்படும் உரிமையுள் மிகப்பெரிது. மதத்தைத் தழுவவும், தழுவிய மதத்தைக் கடைப்பிடிக்கவும், கடைப்பிடிக்கும் மதத்தைப் பரப்புரை செய்யவும் அனைவருக்கும் உரிமையுண்டு. அதேவேளை, இயங்கும் மதங்களுக்கும், ஆளும் அரசுக்கும் எத்தொடர்பும் இல்லை. மதம் அரசின் கொள்கையை வகுக்க முடியாது. சனநாயக அரசின் நிறுவனங்கள் எவற்றிற்கும் மதக்கொள்கைகள் ஆதாரமாக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது.

நான் சார்ந்த மதத்தை உளமார மதிக்கிறேன். என் மதத்தைக் காக்கும் வகையில் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. அரசுக்கும், இந்த நம்பிக்கைக்கும் எத்தொடர்பும் இல்லை. அரசு குடிமக்களின் சமயச் சார்பற்ற நிலைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்தட்டும். மக்களின் நலவாழ்வு, ஆரோக்கியம், சமூகத் தொடர்பு, வெளியுறவு என்பனவற்றில் அரசு கவனம் செலுத்தட்டும். என் மதத்தில் தலையிட அரசுக்கு உரிமை இல்லைஎன்றார் மகாத்மா காந்தி.

1945 -ஆம் ஆண்டில் நேருவோ, “நான் முழுமையாக நம்புகிறேன். நாம் அமைக்கவிருக்கும் அரசு உறுதியாகச் சமயச் சார்பற்ற அரசாகத்தான் இருக்கும். அந்த அரசு இந்த நாட்டின் எந்தச் சமயங்களோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாது. ஆனால், அனைத்துச் சமயங்களும் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும்என்றார். தொடர்ந்து சொல்கிறார்... “சமயச் சார்பற்ற அரசு பெரும்பான்மை சமூகம்மீது வைக்கப்பெறும் ஒரு நம்பிக்கை என்பது பெரும்பான்மை சமூகம் மதச் சிறுபான்மையினரிடம் கரிசனையோடும் பரிவோடும் நடந்துகொள்வதில் இருக்கிறதுஎன்றார்.

மத நம்பிக்கையுடைய காந்தி, தான் சார்ந்த மதத்தின் கோட்பாடுகளில் உறுதியான நம்பிக்கையுடையவராயினும், அரசு சமய நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கடுமையாக எதிர்க்கிறார். சமயச் சார்பற்ற அரசையே வரவேற்கிறார். பண்டித நேரு, காந்தியின் உற்றச் சீடனாக இருந்தாரெனினும், நேரு கடவுள் பற்றிய சிந்தனையற்றவர் (Gnostics); நிலவும் எச்சமயத்தோடும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாதவர். அவர் சமயச் சார்பின்மையின் தேவையை வலியுறுத்துவதோடு, சமயங்களிடையே நிலவ வேண்டிய நல்லுறவு பற்றியும் பேசுகிறார். “இந்தியா சமயச் சார்பற்ற அரசாக மாற்றம் பெறுகையில் கடவுளையோ, மதங்களின் ஏற்புடைமையையோ மறுக்கிறோம் என்று பொருளில்லை. இந்தியப் பாரம்பரியம் எப்போதுமே ஏதோ ஒரு சமயத்தை ஏற்கும் குணமுடையது என்றாலும், இந்தியச் சமூகம் ஏதோ ஓர் ஒற்றைச் சமய கட்டுப்பாட்டிற்குள் அடங்காது என்பதுதான் உண்மை. எந்தக் குறிப்பிட்ட சமயத்திற்கும் அரசு தனி அங்கீகாரம் வழங்கக்கூடாது. அம்மாதிரியான சிறப்பு அங்கீகாரம் என்பது சனநாயகத்தையே அவமதிப்பதாகும் என்பதோடு மானுட உரிமைகளுக்கும் எதிரான போக்காகும். குடிமகன் ஒருவன் தான் சார்ந்த சமய நம்பிக்கையால் பாகுபடுத்தப்படக் கூடாது. பொது வாழ்வில் அனைத்துக் குடிமக்களும் தம் நம்பிக்கையின் சிறப்பைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்என்றார் டாக்டர் இராதாகிருஷ்ணன்.

மேலும், உச்ச நீதிமன்ற நீதியரசர், முஸ்லிம்களின் மதராசா கல்விக் கூடங்கள் குறித்த தீர்ப்பு, சமயச் சார்பற்ற அரசு மதச் சிறுபான்மையினருக்கு அளித்துள்ள உரிமையைக் கேள்விக்குள்ளாக்கியது அதிர்ச்சியைத் தருகிறது. ‘மதச் சிறுபான்மையினர் நடத்தும் கல்விக்கூடங்கள் மீதான சட்ட ஒழுங்குகள் சமயச் சார்பின்மைக்கு எதிரானதல்லஎன்ற நீதியரசர் சந்திரசூட் அவர்களின் தீர்ப்பு, உருவாக்கவிருக்கும் விளைவு என்னவாயிருக்கும்? சிறுபான்மையினர் தாம் விரும்பியவாறு கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவுமான உரிமைகள் மதச் சிறுபான்மையினரின் பண்பாட்டு உரிமைகளைக் காக்கும் கருவியாகக் கருதப்படுகையில், உச்ச நீதிமன்றத்தின் இப்பார்வை என்ன மாதிரி பாதிப்பைத் தரும்? சிறுபான்மையினர் சிந்திக்க வேண்டும்.

சமயச் சார்பின்மையின் சோக முடிவு

விடுதலை பெற்ற இந்தியா கட்டிக்காத்த சமயச் சார்பின்மை இன்று மதத்தின் பெயரால் ஆளப் பெறுகிறது. பெரும்பான்மை இல்லாத மதத்தின் பெயரால் மதப் பெரும்பான்மைவாதம் கட்டமைக்கப்பட்டு, மதச் சிறுபான்மையினர் அரசியல், சமூக ரீதியாக ஒதுக்கப்படுகின்றனர். அரசமைப்பின் முகப்புரை இந்தியத் தேசியத் தத்துவம் (National Philosophyஎனக் கருதப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட வேண்டிய நிலையில், தேசம், தேசப்பற்று என்ற பெயரில்ஜெய் ஸ்ரீராம், ‘பாரத மாத்தா கீ ஜேபோன்ற முழக்கங்களே தேசிய முழக்கங்களாகி விட்டது. வாழ்த்துச் சொற்கள் பகைச் சொற்களாக நிலவும் அவலம். இராம சென்ம பூமியில் இராமருக்கான கோவில் கட்டி முடிப்பது சமயச் சார்பற்ற அரசின் தேர்தல் நிலைப்பாடாக இருக்க முடியாது. மதச்சிறுபான்மையினரின் 400 ஆண்டுகால வரலாற்றையுடைய வழிபாட்டுத் தலம் ஒன்று மதம் சார்ந்தபக்தர்களால்தகர்க்கப்பட்டதோடு, மதப்பகையால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்நிகழ்வுஇந்து தேசிய எழுச்சிஎன்று கொண்டாடப்படவும், அழிவின்மீது கட்டி எழுப்பப்பட்ட கோவிலுக்கான மதரீதியான சடங்கினைச் சமயச் சார்பற்ற அரசின் பிரதமரே பிரதமப் பூசாரியாய் நின்று செய்து முடிப்பதன் பொருள் என்ன?

இந்திய அரசமைப்பினை வேதமெனப் புகழ்ந்த இந்தியப் பிரதமர், மதத்தால் வேறுபட்டவர்களைசுதேச விரோதிகள்என்று வசைபாடுகிறார். குடியுரிமை குடிமக்களின் அடிப்படை உரிமையாயிருக்க, குடியுரிமை பெற்ற குடிமக்கள் மதரீதியாகப் பாகுபடுத்தப்படுகின்றனர்.

சமயச் சார்பின்மையை உலகுக்கு அறிமுகப்படுத்திய பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில், சமத்துவமும், சகோதரத்துவமும் பிரிக்கவியலாப் பண்புகளாயிருந்தன. மதவாதம் தூக்கிப் பிடிக்கப்படும் இந்நாட்டில், நாம் கண்ட சமயச் சார்பின்மைசமயங்களைச் சமமாக நடத்துவதுஎன்ற உயரிய நோக்கம் சிதைந்து வருகிறது.

சமூகத்தால் இயங்கும் சமயம் என்ற நிலை மாறி, சமயத்தால் இந்தியச் சமூகம் என்ற நிலை ஏற்பட்டு வருவது இன்றைய சோகத்தின் உச்சம்.