இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய மதிப்புகளையும், கொள்கைகளையும் கற்றுக் கொள்ள, பரப்புரை மேற்கொள்ள ஓர் அழைப்பு.
இரு
நூற்றாண்டுகள் அடிமைத்தனத்தில் இருந்த இந்தியா, சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவின் சுதந்திரத்திற்காக உழைத்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் மனத்தில் எழுந்த கேள்விகள் பல. ‘இந்தியா யாருக்கு உரிய நாடு? இந்நாட்டின் உரிமையாளர்கள் யார்? இந்த நாடு எப்படிப் பயணிக்க வேண்டும்? இந்த நாட்டை ஆள்வோரை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்? நாட்டை ஆள்வோருக்கான அதிகாரங்கள் எவை? இந்தியக் குடிமக்களின் உரிமைகளும் கடமைகளும் என்னென்ன? இந்நாட்டில் வசிக்கும் சிறுபான்மையினரின் நிலை என்ன? அவர்களை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்? குழந்தைகள், பெண்களின் நிலை என்ன? அவர்களின் உரிமைகளை எப்படிப் பாதுகாக்கப் போகிறோம்?’ போன்ற எண்ணற்றக் கேள்விகளுக்குப் பதிலாய் உதித்ததுதான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
இந்திய
அரசியல் அமைப்புச் சட்டம் - இந்தியாவின் 140 கோடி மக்களின் இலட்சியக் கனவாகும். மக்கள் அனைவரையும் பாதுகாக்கும் பாதுகாப்புக்
கவசமாகும். சட்டப்பூர்வமாக
அங்கீகரிக்கப்பட்ட உத்தரவாதங்களாகும். பன்மைத்துவத்தில் ஒருமைப்பாட்டின் அடையாளமாகும். யாரும் பாகுபடுத்தப்படாமல் வாழ உதவிடும் சமத்துவ தத்துவ நூலாகும். மக்கள் நலனை மையப்படுத்திச் செயல்பட அரசுக்கு வழிகாட்டும் நெறி முறைகளாகும். நீதிமன்றத் தீர்ப்பு வழங்கிட உதவிடும் அடிப்படைச் சட்ட ஆவணமாகும். சுருங்கக் கூறின், “இது வெறும் ஒரு சட்டப்பூர்வ ஆவணம் மட்டுமன்று; மாறாக, ஒரு மாபெரும் சகாப்தத்தை உள்ளடக்கிய வாழ்க்கை வழிகாட்டி”
என்றார் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.
இது
இந்திய நாட்டின் அரசியல்துறைக்கு உறுதியான அடித்தளத்தை அமைத்துத் தந்திருக்கிறது. இந்திய நாட்டின் ஒவ்வொரு குடிமகளும் / குடிமகனும் அடிப்படை மனித மதிப்புகளை உயர்வாகக் கருதவும், நீதி நேர்மையான வாழ்க்கை முறையைப் பின்பற்றவும் இது வழிகாட்டுகிறது. உலகில் வேறு எந்த ஓர் அரசியலமைப்பும் தராத பொதுநலன் மற்றும் சமூக மாற்றத்திற்கான முக்கியத்துவத்தை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குத் தந்திருக்கிறது.
இந்திய
அரசியலமைப்பின் மதிப்புகளான பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மற்றும் இயக்கமாக ஒருங்கிணைந்து செயலாற்றும் சுதந்திரம் போன்ற தனி மனிதச் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளித்திருக்கிறது. இந்தச் சுதந்திரங்கள் சாதி, சமய, பாலினம் அல்லது வேறு எவ்விதப் பாகுபாடு காட்டுவதையும் தடுப்பதற்கும், சம உரிமைகள்- சம
வாய்ப்புகளை அனுபவிப்பதற்கும், அனைத்துக் குடிமக்களுக்கும் சமத்துவ வாழ்வை உறுதி செய்வதற்கும், அனைத்துத் தரப்பு மக்களும் சமமாக நடத்தப்படவும், ஒரு நீதியான சமூகத்தையும், சனநாயக அமைப்பையும் உருவாக்கிடவும் உறுதுணை செய்கிறது.
மேலும்,
சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினரின் மேம்பாட்டை
உறுதி செய்தல், அவர்களின் நலன் மற்றும் வாழ்வை மேம்படுத்துதல், பொருளாதாரச் சமத்துவத்தை உறுதி செய்தல், இயற்கை வளங்களைச் சமமாகப் பகிர்ந்தளித்தல், மக்களிடையே நல்லுறவையும் அமைதியையும் எற்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும்.
இது
கூட்டாட்சி முறை அரசை உறுதி செய்கிறது. சமயச் சார்பற்ற அரசை வலியுறுத்துவதோடு, ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையே உள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் அரசின் மூன்று இயந்திரங்களான சட்டம் இயற்றுதல், நிர்வகித்தல், நீதியை நிலைநாட்டுதல் என்று ஒவ்வொன்றிற்கும் அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது.
இவ்வளவு
அருமையாக எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எத்தனை குடிமக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? இது மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் அறிந்திருக்க வேண்டிய மதிப்புக்குரிய கொள்கைகள் அல்லவா! இது இந்தியாவின் ஆன்மா; இது இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகளின் / குடிமகனின் சமய நூல் அல்லவா! இத்தைகைய உன்னத நூலுக்குத் தகுந்த மதிப்பும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறதா?
75-ஆம் ஆண்டு நினைவு
நாள்
1947-ஆம் ஆண்டு
நவம்பர் திங்கள் 26-ஆம் நாள் நமது அரசியல் நிர்ணய அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனைச் சட்டமாக இயற்றி நமக்கு நாமே வழங்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 75-ஆம் ஆண்டு நினைவு நாளானது 2024-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26-ஆம் நாள் வருகிறது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். இது நடைமுறைக்கு வந்த 1950-ஆம் ஆண்டு சனவரி திங்கள் 26-ஆம் நாளைத்தான் நாம் ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
இந்தியக்
குடிமக்களாகிய நம் ஒவ்வொருவருடைய மனத்திலும், குறிப்பாக
மாணவ-மாணவியர் மனத்தில் ஆழமாகப் பதியும் வண்ணம் வருகின்ற 2024 நவம்பர் திங்கள் 26 முதல் 2026 சனவரி திங்கள் 26 வரை 14 மாதங்கள் தொடர் கொண்டாட்டமாகக்
கொண்டாடுவது நாட்டில் சமூக, சமய அமைதியையும், நல்லிணக்கத்தையும், சகோதர உறவையும் வளர்த்தெடுக்கும் முயற்சியாகக் கட் டாயம் அமைந்திடும். இந்தக்
கொண்டாட்டமானது குடிமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் அரசு பார்க்கும் வண்ணம் கல்வி நிறுவனங்களிலும், குடிமைச் சமூகங்களிலும், சமய வழிபாட்டுத் தலங்களிலும், அரசு அலுவலகங்களிலும், வீடுகளிலும், வீதிகளிலும் கொண்டாடப்பட வேண்டும்.
இது
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தையும், அது வழங்கிடும் மதிப்புகளையும், கொள்கைகளையும் நமதாக்கிக் கொள்வதற்கான நல்வாய்ப்பு. அதைப் பிறருக்கு அறிவிப்பதற்கான கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டியது அவசியம்.
இந்திய அரசியலமைப்புச்
சட்டக்
கொண்
டாட்டம்
இந்தியா
சுதந்திரம் பெற்ற 75-ஆம் ஆண்டு விழாவை வெகு சிறப்பாகக்
கொண்டாடியது நமக்கு நினைவிருக்கலாம். அது 2022 மார்ச் திங்கள் 12-ஆம் நாள் தொடங்கி 2023 ஆகஸ்டு திங்கள் 15-ஆம் நாள் வரை 75 வாரங்கள் கொண்டாடப்பட்டது. இதனை ஒன்றிய அரசும், மாநில அரசும் முன்கூட்டியே திட்டமிட்டு சிறப்பாகக் கொண்டாடின. இது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும். ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்படுத்திய 75-ஆம் ஆண்டு
நிறைவு விழாக் கொண்டாட்டத்திற்கான எந்த அறிவிப்போ, திட்டமிடலோ இதுவரை நடைபெறவில்லை.
ஆனால்,
வருகின்ற நவம்பர் 26-ஆம் நாள் இரு பாராளுமன்ற அவைகளும் ஒன்றிணைந்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகிய நாளை ஒரு சாதாரண நினைவுக் கொண்டாட்டமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
ஏன்
இதனை இந்திய மக்கள் அனைவரும் இணைந்து ஒரே குடும்பமாகக் கொண்டாட அழைக்கப்படவில்லை? அனைத்து மக்களோடும் இணைந்து கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏன் உருவாகவில்லை? மக்கள் இதனைத் தெரிந்து கொண்டால், இதன் மதிப்புகளையும், கொள்கைகளையும் உள்வாங்கினால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு செயல்படும்பொழுது மக்கள் கேள்வி கேட்பார்கள். எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள் என்பதை அறிந்துதான் இந்தக் கொண்டாட்டத்தை அரசு விரும்பவில்லை என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்திய
மக்கள்தொகையில் 50%-க்கு மேல்
குழந்தைகளும், இளைஞர்களுமே! இவர்கள்தான் இந்தியாவின் எதிர்காலம். இவர்களில் எத்தனை நபர்களுக்கு இந்திய
அரசியல் அமைப்புச் சட்டம் பற்றித் தெரியும்? இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இவர்கள் அறிந்தால், சமூகத்தில் அதிகாரமிக்கவர்களாகவும் அங்கீகாரம் பெற்றவர்களாகவும் மாறுவார்கள். இது இவர்களது உரிமைகளைப் பற்றியும், பொறுப்புள்ள குடிமகளாக /குடிமகனாக வாழ்வது குறித்தும் கற்றுத்தருகிறது.
ஆகவே,
சனநாயகம், குடியாட்சி சுதந்திரம், சமத்துவம், சமயச்சார்பின்மை, சகோதரத்துவம், உரிமைகள், கடமைகள் போன்றவைகளைக் கருப்பொருளாகக் கொண்ட விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மேலும்,
நம் அனைவரையும் இந்திய நாட்டின் குடிமக்களாக இணைக்கவும், நாட்டுப்பற்றை உருவாக்கவும், பிரிவினைவாதம், பகையுணர்வு, வெறுப்புணர்வு போன்றவற்றை விட்டுவிட்டு ‘நாம்’ என்ற உணர்வில் வளரவும் இக்கொண்டாட்டம் தூண்டுதலாக அமைய வேண்டும்.
இறுதியாக,
இந்தியாவில்
ஒரு மதிப்புமிக்க, விலைமதிக்க முடியாத ஒரு புதையல் இருக்கிறது என்றால் அது இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே! இது பாதுகாக்கப்பட வேண்டும். மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும். இது
இந்தியராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியக் குடிமகளை / குடிமகனை அதிகாரமிக்கவராக மாற்றுகிறது. இப்படி நிகழும்பொழுது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் அதிகாரம் மிக்கதாகவே மாறுகிறது. இது இந்தியர் அனைவரையும் ஒரே குழுமத்தின் உறுப்பினர்களாக இணைக்கின்ற சக்தியாகும், இந்தச் சக்திதான் இந்திய நாட்டை வலிமைமிக்க, வளமைமிக்க நாடாக மாற்றும் என்பது உறுதி.
குறிப்பு: இக்கொண்டாட்டத்திற்கு உதவியாக 120 பக்கங்கள் அடங்கிய ‘இந்திய அரசியல் சாசனம்- இந்தியாவின் ஆன்மா’ என்ற நூல் அண்மையில் வெளிவந்துள்ளது. பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் விழிப்புணர்வு பெறவும், பரப்புரை, கருத்துரை வழங்கவும் இந்நூல்
பரிந்துரைக்கப்படுகிறது.
(விலை
35, தொடர்புக்கு: வழக்கறிஞர் சந்தனம் சே.ச. 63802 55324. 99435 70083).