இயற்கை கொஞ்சும் அழகுடன் அமைந்த மணிப்பூரில் இன்று பெண்களின் கதறல் சத்தம் விண்ணை முட்டி எதிரொலிக்கிறது.
பங்களாதேஷ்,
சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்கிடையில் மலைப்பிரதேசங்களையும், சமவெளிகளையும் கொண்ட மாநிலம் மணிப்பூர். இந்தப் பகுதியின் மலைகளின் எண்ணிக்கையை விட, அங்குள்ள பிரச்சினைகளின் எண்ணிக்கை அதிகம். பல ஆண்டுகளாக நீடித்து
வந்த மணிப்பூர் இனக்குழுக்களுக்கிடையேயான பிரச்சினை, கடந்த ஆண்டு மே 3 அன்று கலவரமாக வெடித்தது. ஒன்றரை ஆண்டுகாலமாக மணிப்பூரில் நீடித்து வந்த இந்தப் பயங்கரவாத நிகழ்வுகள், கடந்த சில நாள்களாக மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன.
இந்தக்
கலவரங்களில் பெரும்பாலும் ஒன்றுமறியாத பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடிய வகையில் தாக்கப்படுகின்றனர்; கொல்லப்படுகின்றனர். மணிப்பூர் கலவரத்தை, ‘மெய்தி’ மற்றும் ‘குகி’ என்ற இரண்டு இனக்குழுக்களுக்கிடையேயான பிரச்சினை என்று சாதாரணமாக நம்மால் தள்ளிவிட முடியாது. ஒவ்வோர் இனக்குழுவும் இயந்திரத் துப்பாக்கித் தாங்கி போராட்டகாரர்களை உருவாக்குகின்றது. சாதாரண மக்களுக்கு இத்தனை உயர்ரகத் துப்பாக்கிகள் எப்படிக் கிடைக்கின்றன? இராணுவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான பயிற்சியும், பயிற்சிக்கான நிதி உதவியும் இவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றன? என்ற மர்மங்கள் மணிப்பூர் கலவரத்தை நாடு தழுவிய பிரச்சினையாக மாற்றியுள்ளது.
மணிப்பூரில்
கலவரம் என்பது புதிதல்ல. 1993-ஆம் ஆண்டு ‘குகி’ இன மக்களுக்கும், நாகாக்களுக்குமிடையான
நிலப் பிரச்சினை கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் உயிரை இழந்தனர். பலரது இல்லங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதைத்
தொடர்ந்து 2001 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளிலும் மணிப்பூர் மண்ணில் வன்முறைகள் வெடித்தன.
இதுவரை
மணிப்பூரில் நிகழ்ந்த மற்ற கலவரங்களைக் காட்டிலும் மே 3, 2023 அன்று ‘குகி’களுக்கும், ‘மெய்தி’களுக்கும் இடையே தொடங்கிய கலவரம் மிகவும் வேகமாக மணிப்பூர் முழுவதும் பரவத் தொடங்கியது. மேலும், அதன் தாக்கம் அதன் அண்டைய மாநிலங்களான நாகாலாந்து, அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் பிரதிபலிக்கின்றது.
மணிப்பூரில்
சமவெளிப் பகுதியில் வசிக்கும் ‘மெய்தி’ இன மக்கள், தங்களை
மலைவாழ் பட்டியலினத்தவர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றனர். மணிப்பூரின் உயர் நீதிமன்றம் ‘மெய்தி’களின் கோரிக்கையைப் பரிசீலிக்க உத்தரவிட்டதில் இந்தக் கலவரத்திற்கு அடித்தளம் போடப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால், தங்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்பதையும், தங்களின் வாழ்விடங்களை ‘மெய்தி’ இன மக்கள் எடுத்துக்கொள்வர்கள்
எனவும் கருதிய ‘குகி’ இனச் சமூகச் செயற்பாட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். உச்ச நீதிமன்றம், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை மிகவும் கடுமையாக விமர்சித்தது. ‘குகி’ இன மக்கள் பல்வேறு
விதமான போராட்டங்களில் ஈடுபட்டனர். இவர்களை எதிர்த்து ‘மெய்தி’ இன மக்களும் போராட்டக்
களத்தில் களமிறங்கினர்.
இதையடுத்து
மணிப்பூரில் இந்த இரண்டு இனக் குழுக்களுக்குமிடையே வன்முறை வெடித்தது. இதுவரை ஏறக்குறைய 221 நபர்கள் கலவரத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
60,000-க்கும் மேற்பட்டோர் தங்களின் வாழ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
220 தேவாலயங்களும்,
17 கோவில்களும் இடிக்கப்பட்டுள்ளன. இவையனைத்திற்கும்
மேலாக ஜூலை 19, 2023-இல் வெளியான பெண்களின் நிர்வாண ஊர்வலக் காணொளி, பார்ப்போர் அனைவரின் கண்களையும் குளமாக்கியது. இதுபோன்று மணிப்பூர் கலவரத்தின் தொடக்கம் முதல் இன்று வரை பெண்கள் சொல்ல முடியாத பல துயரங்களை அனுபவித்து
வருகின்றனர்.
இந்தக்
கலவரத்தின் காரணம் மிக தெளிவாக இருப்பினும், இக்கலவரம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணங்கள் அவ்வளவு தெளிவாக இல்லை. மத்தியிலும், மணிப்பூரிலும் ஆட்சி புரியும் மதவாத ஆட்சியாளர்கள் மணிப்பூரை இவ்வுலகின் பார்வையிலிருந்து மறைக்க முயற்சி செய்கின்றனர். கலவரத்திற்கான காரணங்களைச் சமன் செய்யாமல், தங்களுடைய இராணுவத்தின் செயல்கள் மூலம் மணிப்பூரைப் போர்ச்சூழல் நிறைந்த மற்றொரு காஷ்மீராக மாற்றுகின்றனர். இந்தக் கலவரத்தினிடையே அது உருவானதற்கான காரணங்கள் மறைக்கப்படுகின்றன.
மணிப்பூரில்
60 சதவீதமாக உள்ள ‘மெய்தி’ இன மக்கள், 10 சதவிகிதச்
சமவெளிப் பரப்பில் வசிக்கின்றனர். மீதமுள்ள ‘குகி’ இன மக்கள் பெரும்பாலும்
மலைப்பிரதேசங்களில் வாழ்கின்றனர். இவர்களுள் ‘மெய்தி’ இனத்தோர் பெரும்பாலானோர் இந்துகள் என்பதும், ‘குகி’கள் பெரும்பாலும் கிறித்துவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மணிப்பூரில் பெரும்பான்மை இனத்தவராக இருக்கும் ‘மெய்தி’கள் உயரியப் பதவிகளிலும், சீரான பொருளாதார முன்னேற்றத்துடனும் சமவெளிப் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூரின் 60 சட்டமன்ற உறுப்பினர்களுள், 40 பேர் ‘மெய்தி’கள். மணிப்பூரின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுமே ‘மெய்தி’ கள்தான். இதன் மூலம், ‘மெய்தி’கள் சமூகத்தில் எந்த அளவு ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதை அறியலாம்.
சமூக
முன்னேற்றம் அடைந்த ‘மெய்தி’கள், சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட பட்டியல் இன மலைவாழ் மக்களின்
உரிமைகளைத் தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று போராடியதே மணிப்பூர் பிரச்சினையின் மூலமாகும். இன்று இதை மறந்து மணிப்பூர் கலவரம் பல்வேறு திசைகளில் சென்று கொண்டிருக்கின்றது.
தொடக்கத்தில்
இனக் குழுக்களிடையேயான உரிமைப் போராட்டமாகத் தொடங்கிய இப்பிரச்சினைக்கு மதவாதச் சக்திகள் மதச்சாயம்
பூசினர். மணிப்பூர் கலவரத்தின் காரணங்களை மழுங்கடிக்க மதவாதச் சக்திகள் இரு இனத்திற்குமான மதப்பிரிவினையைத் தீமூட்டி விட்டனர். போராட்டக்காரர்கள் தங்களின் கோரிக்கைகளை மறந்து, ஒருவர் மற்றவருக்கான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஆலயங்களையும், வழிபாட்டுத்தலங்களையும் முழுமையாகச் சேதப்படுத்தினர். ‘மெய்தி’ இனக்குழுவைச் சார்ந்த மணிப்பூரின் முதல்வர் பீரேன்
சிங்கும் ‘மெய்தி’ இன மக்களுக்கு ஆதரவாக
ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகின்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். அவரின் செயல்களும் இதற்கு ஏற்றவாறே இருந்தன.
நாட்டின்
பல முக்கியப் பிரச்சினைகளுக்கு மௌனம் சாதிக்கும் பிரதமர், நாட்டையே உலுக்கும் இப்பிரச்சினைக்கும் தொடர்ந்து மௌனம் சாதிக்கின்றார். நாட்டின் பெரும்பான்மை இந்துகளையும், சிறுபான்மையினரையும் ஒருசேரப் பகைத்துக் கொள்வது, தங்களின் தேர்தல் அரசியலைப் பாதிக்கும் என்பதால் மதவாத ஒன்றிய அரசு மணிப்பூர் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதைத் தவிர்க்கின்றது.
இதற்கிடையில்
இரண்டு இனக்குழுக்களும் தங்களுக்கென ஆயுதமேந்திய போராட்டக் குழுக்களை உருவாக்குகின்றார்கள். இவர்களுக்கு மணிப்பூரின் எல்லையோர நாடுகள் ஆயுதமளித்து ஆதரிக்கின்றன என்ற கருத்து நிலவுகின்றது. ஒருபுறம் மணிப்பூரின் ஆயுதக் கலாச்சாரத்திற்கு அண்டை நாடுகளின் ஆதிக்கம்தான் காரணம் என்று கூறும் ஒன்றிய அரசு, மறுபுறம் ‘நாட்டின் பாதுகாப்பில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்’ என்று
முன்னுக்குப்பின் முரணாகப் பேசி மணிப்பூரின் நிலையை மேலும் மோசமாக்குகின்றது.
மதவேற்றுமை,
அண்டை நாடுகளின் தலையிடல், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தொய்வான நடவடிக்கைகள் மற்றும் ஆயுதமேந்திய போராட்ட அமைப்புகள் என்ற பல்வேறு காரணங்களால் மணிப்பூர் கலவரம் இன்றுவரை கொளுந்து விட்டு எரிகின்றது. எரிகின்ற அந்த நெருப்பில் வெந்துபோவது அப்பாவிகள்தாம். அதிலும், குறிப்பாக பெண்களே!
ஜிரிபாம்
மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயது பெண்ணை ‘மெய்தி’ போராட்டக்காரர்கள் பாலியல் வன்புணர்வு செய்து, தீயிட்டுக் கொளுத்தினர். இதற்குப் பதிலளிக்க ‘குகி’ போராட்டக்காரர்கள் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பெண்ணைச் சுட்டுக்கொன்றனர். மேலும், காணாமல் போன பெண்களும், குழந்தைகளும் ஆங்காங்கே சடலமாகக் கண்டெடுக்கப்படுகின்றனர். இதுபோன்று பெண்கள் தொடர்ச்சியாக வன்புணர்வு செய்யப்படுவதும், கொல்லப்படுவதும் வன்முறையின் - அநாகரிகத்தின் உச்சம். இவற்றை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்தக் கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அமைதிக்காக வீதிகளில் இறங்கி போராடுகின்றனர். மேலும், மணிப்பூரின் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முதல்வர் மற்றும் அவர்களின் இல்லங்களை முற்றுகையிடுகின்றனர். உரிமைகளைப் பாதுகாக்கத் தொடங்கப்பட்ட போராட்டத்தில் பல உயிர்களும், ஒன்றும்
அறியாத பெண்களின் மானமும் பறிக்கப்படுகின்றன. ‘இந்தியர் அனைவரும் என் சகோதர, சகோதரிகள்’
என்று உறுதிமொழியெடுக்கும் நாம், நம் சகோதரிகளின் கண்ணீர் துடைக்க நம் கரம் உயர்த்துவோம்.
வன்முறை
ஓயட்டும்; அமைதி திரும்பட்டும்!