‘தந்தை அன்பின் வார்த்தையோ - புவி
நிந்தை
களைய வந்ததே!
மனிதம்
புனிதம் காணவே - அன்னை
மடியில் உறவைத் தேடுதே!
கடைநிலையோர்
உயர்வடைய வளமையாகுமே - இனி
தடை
உடைய திரை விலக பொதுவிலாகுமே!
சமபந்தி
விருந்தொன்று உதயமாகுமே - எங்கும்
சமத்துவத்தில் இறைச் சமூகம் சங்கமமாகுமே!
இறைச்சித்தம்
நனவாக வரமாகுமே - திரு
மறை
இரத்தம் அன்பாலே விதையாகுமே!
இருளில்லாப்
புதுநாளும் விடியலாகுமே - இறை
அருளெல்லாம்
புவியெங்கும் நிறைவாகுமே!’
நம்
வாழ்வின் என் இனிய வாசகப் பெருமக்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்து பிறப்பின் இனிய நல்வாழ்த்துகள்!
இயேசு
பாலன் கொண்டு வந்த அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் நிறைவாய்த் தங்கிட வாழ்த்துகிறேன்.
இன்று
“விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது”
(லூக் 1:79). ஒவ்வொரு பிறப்பும் ஓர் உறவின் தேடல். கிறிஸ்துவின் பிறப்பு உறவின் உன்னதமான தேடல். இது புது உறவை, புது உலகை நோக்கியத் தேடல். இயேசுவின் பிறப்பு ஒரு செய்தி (Message); “இது
எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி”
(லூக் 2:10). கிறிஸ்துவின் பிறப்பு ஒரு வெளிப்பாடு (Revelation); காலம்
கனிந்தபோது தந்தையாம் கடவுள் மனுக்குலத்திற்குக் கிறிஸ்துவின் உருவில் தமது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். “ஒப்புயர்வற்ற கடவுளின் முழு வெளிப்பாடும் கிறிஸ்து ஆண்டவரில் நிறைவு பெறுகின்றது” (இறை
வெளிப்பாடு-7) என்கிறது இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு.
கிறிஸ்துவின்
பிறப்பு ஓர் உடனிருப்பு (Presence); “முற்காலத்தில்
பலமுறை, பல வகைகளில் இறைவாக்கினர்
வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்”(எபி
1:1-2).
ஒவ்வொரு
குழந்தையும் மண்ணில் பிறக்கையில் ‘நான் இந்த உலகை அன்பு செய்கிறேன்’ என்னும்
கடவுளின் செய்தியைக் கொண்டு வருகிறது. ஆனால், இந்தத் தெய்வக் குழந்தையின் பிறப்பில் கடவுளே மனுவுருவாகிறார்; கடவுளே அன்பின் வடிவமாகிறார்; அவரே அன்பின் செய்தியாகிறார். இயேசுவின் பிறப்பு உறவின் தேடலாகிறது; உற்சாகத்தின் உடனிருப்பாகிறது; மாற்றத்தை முன்வைக்கும் அன்பின் வெளிப்பாடாகிறது. ஆகவேதான், கிறிஸ்துவின் பிறப்பு ஒரு மாபெரும் கொண்டாட்டமாகிறது. இந்தக் குழந்தையின் பிறப்பில் வரலாறு கி.மு. - கி.பி. என இரண்டாக வகுடெடுக்கப்படுகிறது.
இக்குழந்தை
அன்பினால் உலகை ஒப்புரவாக்கி அமைதியின் வழியில் மீட்பினைத் தர வந்திருக்கிறது. அவரது பிறப்பின்
பயணம் அன்பு (Love), ஒப்புரவு
(Reconciliation), அமைதி
(Peace), மீட்பு
(Salvation) என்னும்
ஆழமான நோக்கங்களைக் கொண்டிருக்கிறது. இறைவன் மனிதனோடு அன்பைப் பகிரவும், மண்ணுலகிற்கு அமைதியைக் கொணரவும், இறை-மனித உறவில் நம்பிக்கை தளிர்க்கவும், நிலை வாழ்வின் உண்மைகள் மனிதனில் ஒளிரவும் மனுவுரு எடுத்திருக்கிறார். இது உலகை ஒளிர்விக்க, உய்விக்க, வாழ்விக்க வந்த ஒளி!
உலகை
ஒளிர்விக்கும் ‘உலகின் ஒளியாக’
(Light of the World), உலகை
உய்விக்க ‘வாழ்வளிக்கும் உணவாக’
(Bread of Life), உலகை
வாழ்விக்க ‘வழியாக, உண்மையாக, வாழ்வாக’ (The Way, the Truth, The Life) வந்த
ஒளி இவரே! எனவேதான் தூய அம்புரோசியார், “Open your heart and run to meet the Sun of the eternal light that
illuminates all men”
என்கிறார். ஆகவே, எல்லா மனிதரையும் ஒளிர்விக்கும் என்றென்றும் நிலையான ஒளி வீசும் இயேசு என்னும் இந்த ஆதவனைச் சந்திக்கத் திறந்த இதயத்துடன் விரைந்து செல்வோம். இது விண்ணிலிருந்து நம்மைத் தேடி வந்திருக்கும் விடியல்.
இந்த
விடியலின் பிறப்பில் இன்றைய நமது சமூக-அரசியல்-வாழ்வியல் தளத்தில் புரையோடிக் கிடக்கும் சாதிவெறி, சமயவெறி, சுயநலமும் அரசியல் ஆதாயமும் கொண்ட சூழ்ச்சிகள், நயவஞ்சகப் பேச்சுகள், மனிதநேயம் மறந்த செயல்பாடுகள், மானுட மாண்பினைச் சிதைக்கும் ஒடுக்குமுறைகள், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் அடக்குமுறைகள், மதநல்லிணக்கத்தைச் சிதைக்கும் வன்முறைக்கான சூழ்ச்சிகள், சமத்துவ-சகோதரத்துவ-சமயச் சார்பற்ற அரசியல் அமைப்புக்கு எதிரான நிலைப்பாடுகள்... என அண்மைக் காலங்களில்
நாம் சந்திக்கும் அவலங்களின் இருள் அனைத்தும் களையப்பட வேண்டும் என முயல்வோம்.
கிறிஸ்துவின்
பிறப்பு நம்பிக்கையின் வெளிப்பாடு. ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை’ எனத்
தெளிவுபடுத்தினார் வானவர் கபிரியேல்; ‘ஆகட்டும்’
என்றார் அன்னை; ‘மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்’ என்பதை
ஏற்றுக்கொண்டார் யோசேப்பு. இந்த மீட்பின் திட்டம் முழுவதும் நம்பிக்கையில் புடமிடப்படுகிறது. கிறிஸ்து என்னும் ஒளி கொண்டு வரும் விடியல் அடிமையெனும் இருளை, ஆதிக்கமெனும் இருளை, அதிகார, ஆணவமெனும் இருளை, பொய்மையின் சூழ்ச்சியெனும் இருளை முற்றிலும் அகற்றும் என நம்பிக்கை கொள்வோம்.
திருத்தந்தை
புனித முதலாம் லியோ குறிப்பிடுவதுபோல, “இன்று உலகின் மீட்பர் பிறந்திருக்கிறார்; அவருடைய பிறப்பில் துயரத்திற்கு இனி இடமில்லை. அவருடைய பிறப்பு நிறை மகிழ்வின் வாக்குறுதியைக் கொண்ட பேரின்பத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இது அனைவருக்குமானது; வாருங்கள் நாம் மகிழ்ந்து கொண்டாடுவோம்!”
இயற்கை
நிறைந்தால் எழில்; பானை நிறைந்தால் வளமை; மண்ணில் நிலம் நிறைந்தால் பசுமை; விண்ணில் நிலவு நிறைந்தால் குளுமை; அன்பு நிறைந்தால் ஆண்டவன். இயேசு பாலனின் பிறப்பில் கிடைக்கும் நிறைந்த அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் பேரின்பமும் நம் அகமும் - புறமும் நிறையட்டும்; உலகும் - உறவும் தழைக்கட்டும்; நாடும் - வீடும் செழிக்கட்டும்; நானிலமெங்கும் ஒளிரட்டும்!
அனைவருக்கும்
கிறிஸ்து
பிறப்பு
- புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘விடுதலை இந்தியா’- இது பெருமைக்குரிய சொல்லாடல்; உரிமைக்குரிய அடையாளம்! 1947- ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் நாள் இந்தியா ஆங்கிலேயர்களின் காலனித்துவத்திலிருந்து ‘விடுதலை பெற்றதாக’ அறிவிக்கப்பட்டது. ஆட்சி அதிகாரம் நாட்டின் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விடுதலை இந்தியாவின் புதிய வரலாறு படைக்கப்பட்டது. மேலைக்காற்று சுமந்து வந்த அடிமைத்தனமும், அதன் கொடிய அரசியல் கட்டமைப்பும் தகர்க்கப்பட்டு, கடந்த 78 ஆண்டுகளாக விடுதலைத் தென்றல் இம்மண்ணில் எங்கும் உலா வரும் சூழலில், “அடிமை உணர்விலிருந்து இந்தியா மீள வேண்டும்” எனும் நம் பிரதமரின் அண்மைக்காலச் செய்தி நம்மைத் திடுக்கிட வைக்கிறது.
‘விடுதலை’ என்பது அதிகார அடக்குமுறையிலிருந்து விடுபட்டு, தனிநபர் அல்லது சமூகத்தின் வாழ்க்கை முறையைத் தன்னாட்சி கொண்டதாக உருவாக்கும் வாழ்வியல். நமது அரசமைப்பு முறையில், அது முறையான சட்ட உரிமைகளை நமக்குத் தந்துள்ளபோதும், பிரதமர் குறிப்பிட்ட ‘அடிமை உணர்வு’ என்பது அரசியல் தளத்தில் ஆயிரம் விமர்சனங்களைக் கொண்டிருப்பது தவிர்க்க இயலாதது. சுதந்திரம், விடுதலை என்னும் சொல்லாடல்கள் அடிமைத்தனம், அதிகார அடக்குமுறைகள் ஆகியவற்றிலிருந்து மலர்ந்த புது வாழ்வு என்னும் சமூக-அரசியல்-வாழ்வியல் பார்வையைத் தந்தாலும், பிரதமர் குறிப்பிட்ட ‘அடிமை உணர்வு’, விள(ல)க்கப்பட வேண்டிய
கருத்தியலாகவே இருக்கிறது.
உத்தரப்பிரதேச
மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம், 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பின் அடிப்படையில், இராமர் கோவில் கட்ட ‘இராம ஜென்மபூமியாக’ வழங்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில், 191 அடி உயர கோபுரத்தில் 10 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்ட காவிக்கொடியைப் பிரதமர் மோடியும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும் இணைந்து அண்மையில் ஏற்றி வைத்துள்ளனர். அப்போது, “அயோத்தி நகரம் இந்தியாவின் கலாச்சார உணர்வின் உச்ச நிலையைக் கண்டு வருகிறது; நூற்றாண்டுகளாக இருந்து வந்த காயம் ஆற்றப்பட்டு வலி முடிவுக்கு வந்திருக்கிறது; இது வெறும் கொடி அல்ல; தருமத்தின் அடையாளம்; இந்திய நாகரிகத்தின் மறுமலர்ச்சியின் அடையாளம். இந்தக் கொடி உறுதிப்பாடு, வெற்றி, போராட்டம், கனவுகளின் அடையாளம்! இராமரின் கொள்கைகளான உண்மை எனும் தர்மம், பாகுபாடுகள், துன்பம் இல்லாத சமூகம், வறுமை இல்லாத உலகம் ஆகியவற்றை இது பறைசாற்றுகிறது. இந்தக் கோவில் வெறும் நம்பிக்கையை மட்டுமல்ல; நட்பு, கடமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது” என்று
மோடி உரையாற்றியிருக்கிறார்.
மதச்சார்பற்ற
விடுதலை இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றி ஒற்றுமை பாராட்ட வேண்டியவர், காவி கொடியை ஏற்றி வேற்றுமை பாராட்டியிருக்கிறார். ஆகவேதான் இந்தியாவின் மேனாள் நிதி அமைச்சர்
ப.
சிதம்பரம், “மோடி இந்தியாவின் பிரதமரா? இல்லை அயோத்தி கோவிலின் அர்ச்சகரா?” எனக் கேள்வி எழுப்புகிறார்.
தனது
உரையைத் தொடர்ந்த இந்தியப் பிரதமர், “விடுதலையின்
100 ஆண்டுகளை 2047-இல் இந்தியா நிறைவு செய்யும் போது, வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு நமக்குள் இருக்கும் ஸ்ரீராமரை நாம் ஒவ்வொருவரும் தட்டியெழுப்ப வேண்டும். ஸ்ரீராமர் பாகுபாடு பார்த்ததில்லை; அதே உணர்வுடன் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையைக் குடிமக்கள் அனைவரும் தழுவிக் கொள்ளவேண்டும். இந்தியாவின் நாகரிகப் பாரம்பரியத்தில் பெருமை கொள்ளவேண்டும்; காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபடவேண்டும்” எனக்
குறிப்பிட்டிருக்கிறார்.
‘அடிமை உணர்வு’,
‘இராமரைத் தட்டியெழுப்பவேண்டும்’, ‘அனைவரையும்
உள்ளடக்கிய தன்மை...’ என்னும் சொற்பதங்கள் இன்று ஊடகங்களில் விவாதப் பொருளாகி வருகின்றன. இத்தகைய சூழலில், வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கும் இராமருக்கும் என்ன தொடர்பு? இத்தனை காலமாக இராமரை எழுப்பாததால்தான் இந்தியா வளர்ச்சி அடையவில்லையா? என்ற சாமானியனின் கேள்விக்குப் பிரதமர்தான் பதில்கூறவேண்டும்.
சமயச்சார்பற்ற
இந்திய நாட்டில், எல்லாருக்கும் பொதுவான நபராக உயர் பதவி வகிக்கும் பிரதமர், தனிப்பட்ட மத நம்பிக்கையை, கொள்கையை
நாட்டுப்பற்றுக்கும்,
நாட்டின் வளர்ச்சிக்கும் அடிப்படைக்கூறாக இணைத்துப் பேசுவது நாட் டின் சமயச்சார்பற்ற பன்முகத்தன்மையைச் சிதைப்பதாகவே அமைந்துள்ளது.
அடுத்த
இரு தினங்களில் கோவாவில் 77 அடி உயர இராமரின் சிலையைத் திறந்துவைத்தபோது, “மக்களின் ஒற்றுமையே வளர்ந்த இந்தியாவை அடைவதற்கு வழியாகும்; சமூகம் ஒன்றுபட்டால் தேசம் மாபெரும் முன்னேற்றத்தை முன்னெடுக்கும்” என்று
ஒற்றுமையை வலியுறுத்தியிருக்கிறார். பெரிதும் வரவேற்கத்தக்கதே!
உண்மை
பேசுவது வரவேற்கத்தக்கதாயினும், உண்மையாக வாழ்வதே போற்றத்தக்கது. இந்தியப் பிரதமர் அவ்வப்போது உண்மை பேசுகிறார்; பாராட்டத்தக்கதே! ஆனால், அந்த உண்மை ஆட்சித் தளத்தில் - அரசமைப்பின் பார்வையில் வாழ்வாக்கப்படுகிறதா? என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.
இங்கே,
வரலாறு சற்றே பின்னோக்கிப் பார்க்கப்படவேண்டும். அரசியல் அடிமைத்தனத்தில் இந்தியா இருந்தது நேற்றைய வரலாறு; கருத்தியல் அடிமைத்தனத்தில் அது சிக்குண்டு இருப்பது இன்றைய வரலாறு. பன்முகத்தன்மையும் சகோதரத்துவமும் சமயச்சார்பற்ற தன்மையும் சிதைக்கப்பட்டு, சிறுபான்மையினரின் ‘இருத்தலே’
கேள்விக்குள்ளாகும்
வாழ்வியல் அடிமைத்தனம், தொக்கி நிற்பது நாளைய வரலாறு.
மதச்சுதந்திரம்,
கருத்துச் சுதந்திரம், சமூகச் சுதந்திரம், வாக்குரிமைச் சுதந்திரம், தன்னிறைவுப் பொருளாதாரச் சுதந்திரம்... என
யாவும் பறிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில், ஒவ்வோர் இந்தியக் குடிமகனின் ஆழ்மனத்திலும் குடியிருக்கும் அச்சமும் பயமும்தான் பிரதமர் வெளிப்படையாகக் கூற முடியாத அடிமை உணர்வின் வெளிப்பாடு!
காலனித்துவச்
சிந்தனை இன்னும் நிர்வாகம், கல்வி, மொழி ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துவதாகப் பிரதமர் நினைவூட்டி இருந்தாலும், காவி அரசியல், ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் கொள்கையில் நிர்வாகம், கல்வியில் காவி, மும்மொழிக்கொள்கையில் மறைந்திருக்கும் மதவாத அரசியல் என யாவற்றையும் கட்டமைப்பதும்
அவர்களே! தன்னம்பிக்கை, மண்ணின் அடையாளம், மாண்புமிக்க பாரம்பரியம் யாவும் வலுப்படுத்தப்படவேண்டும் என ஒரு பக்கம்
கூறினாலும், மறுபக்கம் ‘ஒரே இந்தியா’ என்னும் போர்வையில் ‘ஒரே மொழி - ஒரே
மதம் - ஒரே இனம்’ என்னும் கட்டமைப்பு நீட்சி அடைவதும் அவர்களாலேயே!
விடுதலை
இந்தியா கல்வி, மருத்துவம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி எனப் பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டிருந்தாலும், இவை அனைத்தும் இன்று மதக்கொள்கைகளுக்குள் சுருக்கப்படுவதும் மதச்சாயம் பூசப்படுவதும் ‘நாம் எங்கே போகிறோம்?’ என்ற கேள்வியையே எழுப்புகிறது.
எப்போதும்
ஒன்றிய அரசிற்கு இசைந்தே துதிபாடும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என். ரவி, “சனாதன தர்மத்தை எடுத்துவிட்டாலோ, பிரித்தாலோ பாரதம் என்ற ஒன்று இல்லாமல் போய் விடும். எனவே, சனாதன தர்மம் அனைவருக்கும் பகிரப்படவேண்டும். இந்த உலகின் நிலைத்தன்மைக்குச் சனாதன தர்மம் தேவைப்படுகிறது; மனிதனின் வாழ்வு தொடங்கிய நாள் முதலே, சனாதன தர்மம் மனிதனின் முன்னேற்றத்திற்கு உதவியது” என்று கூறியிருக்கிறார். சமூகக் கட்டமைப்பைத் தகர்க்க ஆயிரம் கருத்தியல்கள் முன் நின்றாலும், ஆளுநர் ஆர்.என். ரவிபோல சனாதனக்
கட்டமைப்பைக் காக்க முற்படும் இவர்களால்தான் இச்சமூகம் முன்னோக்கியல்ல, பின்னோக்கி இழுக்கப்படுகிறது.
எந்தவொரு
நாட்டிலும் மக்கள் விரும்பி அடிமைத்தனத்திற்குள் சிக்குண்டிருப்பதில்லை. அங்குள்ள அரசியலும், கட்டமைக்கப்படுகின்ற கருத்தியலும்தான் மக்களை இன்னும் அடிமை நிலையிலேயே வைத்திருக்கிறது. இந்தியத் திருநாட்டில் சகோதரத்துவத்தை, சமத்துவத்தை, மனிதத்தை, மனிதநேயத்தை ஒவ்வோர் இந்தியனின் உள்ளத்திலும் தட்டியெழுப்ப வேண்டுமென முழங்குவதற்குப் பதிலாக இராமரைத் தட்டியெழுப்பக் கூறுகிறார் பிரதமர்.
நேற்று-இன்று எனத் தொடரும் இந்த அடிமைத்தனம், நாளையும் தொடராதிருக்க நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது. குடிமக்கள் நினைத்தால் நாட்டின் வரலாற்றை மாற்ற முடியும். அதற்கு இந்திய மண்ணில் வாக்குச்சீட்டே வன்மையான ஆயுதம்; அதுவும் இன்று ஆபத்தான சூழலில் ஊசலாடுகிறது. மக்கள் நினைத்தால் எந்த ஆட்சியையும் மாற்ற முடியும். அதற்குத் தேவை தெளிந்த சிந்தனையும் தீர்க்கமான விழிப்புணர்வும். “சமுதாயம் என்பது நமது தேவைகளால் உருவாகிறது; ஆனால், அரசு என்பது நமது கயமையால் உருவாகிறது” என்றார்
வில்லியம் கோட்வின்.
விழிப்படைந்தால்
விண்ணையும் தொட முடியும்; விவேகம் கொண்டால் வேரடி மண்ணோடு நம் அடிமைத்தனம் விரைந்தோடிவிடும். எனவே, இந்தியாவில் சமூக-அரசியல் மாற்றம் விரைவில் நிகழ்ந்தாகவேண்டும்; இத்தகைய சூழலில், அமெரிக்கக் கவிஞன் ஜேம்ஸ் இரஸ்ஸல் லொவலின் கவிதை வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன...
‘வல்லமையற்றவர்களுக்காகவும்
வாயில்லாதவர்களுக்காகவும்
பரிந்து
பேச அஞ்சுவோர் அடிமைகளே!
உண்மையைக்
கண்டு
உள்ளுக்குள்
ஒடுங்கிவிடாமல்
சீறியெழாதவர்கள் அடிமைகளே!’
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘உழைப்பு’ தனிமனிதனின், சமூகத்தின் மேம்பாட்டுக்கான குறியீடு. உழைப்பு இல்லையேல் உயர்வு இல்லை! உழைப்பே ஒவ்வொருவருக்கும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோல். உழைப்பாளர்கள் இன்றி வீடும் நாடும் ஒருபோதும் உயர்வடையாது. வளமான வேலைவாய்ப்புகளும் தகுதியான பணியாளர்களும் முறையான சட்ட திட்டங்களும் தனிமனிதனின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அடிப்படையானதாகிறது.
1950-ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பின் பிரிவுகள் 14-16, 19(இ), 23-24, 41-43 ஆகியவை தொழிலாளர் உரிமைகள் பற்றிப் பேசுகின்றன. பிரிவு 14, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருக்க வேண்டும்’ என்றும், பிரிவு 15, ‘வேலைவாய்ப்புகளில், பணி நியமனங்களில் அரசு குடிமக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டக்கூடாது’ என்றும், பிரிவு16, ‘அரசின் கீழ் வேலைவாய்ப்பு அல்லது நியமனத்திற்கான சமவாய்ப்பு உரிமையை வழங்க வேண்டும்’ என்றும், பிரிவு 19, ‘தொழிற்சங்கங்களை உருவாக்க உரிமை உண்டு’ என்றும், குறிப்பாக, அரசமைப்பின் பிரிவு 39-(ன) ‘ஆண்களும் பெண்களும் சம வேலைக்குச் சம ஊதியம் பெறவேண்டும்’ என்றும் கூறுகிறது.
இதன் அடிப்படையில் இந்திய ஒன்றிய அரசிற்கு எதிராக ரத்தீர் சிங் மேற்கொண்ட வழக்கில், ‘சமவேலைக்குச் சம ஊதியம்’ என்ற கொள்கை அரசியல் அமைப்பு ரீதியான குறிக்கோள் என்றும், 1976-இல் வெளிவந்த சம ஊதியச் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் அமைப்பின் 32-வது பிரிவின் கீழ் அரசமைப்புத் தீர்வுகள் மூலம் அதை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும்-பின்பும் அதாவது 1930 முதல் 1950 ஆண்டுகளுக்கு இடையில் தொழிலாளர் நலனுக்காக 44 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் 15 சட்டங்களை நீக்கிவிட்டு, எஞ்சிய 29 சட்டங்களை ஒருங்கிணைத்து ஊதிய விதி (Code on
Wages) 2019, தொழில்துறை தொடர்பு விதி (Industrial
Relations Code) 2020, சமூகப் பாதுகாப்பு விதி (Code on
Social Security) 2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதி (Occupational
Safety, Health and Working Condition – OSH Code) 2020 என நான்கு சட்டத் தொகுப்புகளாக இப்போது ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் 1436 தொழிலாளர் சட்ட விதிகள் 351-ஆகக் குறைக்கப்பட்டிருக்கின்றன.
1990-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான ஒன்றிய அரசு, புதிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. ஆனால், அதற்கேற்றவாறு தொழிலாளர் சட்டங்களைச் சீரமைக்கத்
தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவரது ஐந்தாண்டுகால ஆட்சியில் அது சாத்தியப்படவில்லை. பிறகு வந்த ஆட்சியாளர்களாலும் சீர்திருத்தத்தைக் கொண்டுவர இயலவில்லை.
பா.ச.க.-வின் ஆட்சி காலத்தில், 2015 முதல் 2019 வரையில் நான்கு ஆண்டுகள் தொழிலதிபர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் என முத்தரப்புக் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டு, இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலும் இந்தச் சட்டங்கள் நவம்பர் 21-முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஒன்றிய தொழில்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “காலத்திற்கேற்ப பல நாடுகள் தங்களது தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளன; அதன் தொடர்ச்சியாக, தற்போது இந்தியாவிலும் 29 தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை நான்கு சட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். மேலும், 40 கோடி தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அவை வெறும் சீர்திருத்தங்கள் மட்டுமல்ல, தொழிலாளர்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒன்றிய முதன்மை அமைச்சரோ, “மகளிர், இளையோர் எனத் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச மற்றும் உரிய நேரத்தில் ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை இத்தொழிலாளர் சட்டங்கள் உறுதி செய்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “சுதந்திரம் அடைந்தபிறகு தொழிலாளர்களின் நலனை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான சீர்திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாத்து, இந்தியப் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வழிவகுக்கும். இதனால் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை விரைவில் அடைய முடியும்; வணிகம் மேற்கொள்வது இனி எளிமையாகும்” எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ‘யாருடைய வணிகம் எளிதாக இனி மேம்படும்?’ என்பது நமக்குப் புரியாததல்ல; அது ஊரறிந்த, உலகறிந்த உண்மை.
முதன்முறையாக அமைப்புசாரா தொழிலாளர்களைச் சமூகப் பாதுகாப்புப் பலன் வரம்பிற்குள் கொண்டு வருவது, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நியமனக் கடிதம் கட்டாயம் என்பது, அனைத்துத் துறைகளிலும் குறித்த நேரத்தில் ஊதியம், பணிக்கொடை பெறும் காலவரம்பு தளர்வு, பல்வேறு ஊதிய மற்றும் விடுப்புப் பலன்கள் உள்ளிட்ட முக்கியக் கூறுகளை இந்தச் சட்ட வடிவு கொண்டிருக்கிறது. இது ஊழியர்களின் நீண்டகால நலனுக்கான ஒரு முயற்சி என்றாலும் கூட, குறைந்தபட்ச ஊதியத்தை ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் வரை சில மாநில அரசுகள் காத்திருக்க வேண்டியிருப்பது தொழிலாளர்களைப் பாதிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.
மேலும், புதிய தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் தொழிலாளரின் Basic Salary என்னும் அடிப்படை ஊதியம் மொத்த ஊதியத்திலிருந்து குறைந்தபட்சம் 50 விழுக்காடாக இருக்கவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், கையில் வாங்கும் சம்பளம் குறையும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. அவ்வாறே, புதிய விதியின்கீழ் நிறுவனம் ஊழியருக்கு வழங்கும் CTC எனப்படும் மொத்த ஊதியத்தை மாற்றாமல், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைப் பங்களிப்பை அதிகரித்தால் தற்போது வாங்கிக் கொண்டிருக்கும் ஊதியத்தில் 15 விழுக்காடு வரை ஊழியர்கள் இழக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு அண்மையில் நடைமுறைப்படுத்தியுள்ள தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்குத் தொழில் நிறுவனங்கள் வரவேற்பும், எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. மாறிவரும் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையில், இந்தச் சட்டத் திருத்தம் தவிர்க்க இயலாதது என்று ஒன்றிய அரசு முன்வைத்தாலும், இவை நாட்டின் நீடித்த, நிலைத்த வளர்ச்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் அல்ல என்றும், தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களாக இவை இருக்கின்றன எனவும் எதிர்க்கட்சிகள் வலுவாகக் குரல் எழுப்புகின்றன.
புதிய சட்டத்தில் எட்டு மணி நேர வேலை எனக் கூறப்பட்டிருந்தாலும், தொழிலாளரின் இசைவுடன் கூடிய கூடுதல் வேலை நேரத்திற்கு இரண்டு மடங்கு ஊதியம் என்பது, பணிநேரத்தை அதிகரிக்க மறைமுகமான தூண்டுதல் என்றும், காலப்போக்கில் அதுவே நிரந்தரமாகிவிடும் என்றும் தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன. மேலும், இனி தொழில் நிறுவனங்களில் தங்களின் ஆதிக்கம் குறைந்துவிடும் எனத் தொழிற்சங்கங்கள் அஞ்சுவதோடு, தொழிலாளர்களில் 51% பேர் உறுப்பினர்களாக இருக்கும் தொழிற்சங்கங்கள் மட்டுமே கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்னும் விதி தொழிற்சங்கங்கள் பெருகிவிட்ட நிலையில் நடைமுறைச் சாத்தியமல்ல என்பதும் அவர்களது அச்சத்திற்குக் காரணமாக அமைகின்றன. இந்த விதியைப் பயன்படுத்தி அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகள் தங்கள் ஊழியர்களைச் சிறு சிறு குழுக்களாகப் பிரித்தாளும் குறுக்கு வழியைப் பின்பற்றினால் தொழிற்சங்கங்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்தோ, பேரம் பேசும் வல்லமையின்றியோ போய்விடும் என்பது அச்சுறுத்தும் எதார்த்தம்.
நாடெங்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, பத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. திடீரென வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என, தொழில் நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவில் 15 முதல் 60 வயது பிரிவில் உள்ள 80 கோடி பேரில், 50 கோடி பேர் உழைக்கும் வர்க்கத்தினர். அவர்களில் 10 பேர் மட்டுமே நிரந்தர வேலைவாய்ப்புப் பெறுபவர்கள். இந்த நிலையில், அனைவருக்குமான சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தொழிலாளர் சட்டத் திருத்தம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்று ஒன்றிய அரசு நியாயப்படுத்தினாலும், இது நீண்ட நெடுங் காலமாகப் போராடிப்பெற்ற தொழிலாளர்களின் உரிமையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இருப்பதாகவும், முதலாளிகளுக்கு வரைமுறையற்ற அதிகாரத்தை வாரி வழங்குவதாகவும் கருதி, இந்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துத்
தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு வலுவூட்ட வேண்டியது நமது கடமை.
வாக்குரிமை - அந்த நாட்டுக் குடிமகனின் பிறப்புரிமை. ஒரு நாட்டின் அரசமைப்பில் தேர்தல் முறைகள் மாறலாம்; வாக்குரிமை நிலைகள் மாறுபடலாம்; ஆனால், வாக்குரிமை என்பது எல்லாச் சூழல்களிலும் பிறப்புரிமையோடு தொடர்பு கொண்டது.
ஒவ்வொரு
நாட்டிலும் மக்கள், தங்களை ஆள்வதற்கும் வழிநடத்துவதற்கும் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசமைப்பு மக்களாட்சித் தத்துவம் கொண்டது. நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அரசியல் அதிகாரங்களும் நாட்டின் குடிமக்களுக்கு உண்டு என்பதே மக்களாட்சியின் தத்துவம். குடிமக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை வெளிப்படுத்தும் கருவியே வாக்குரிமை. அதன் அடிப்படையிலேயே தங்கள் உரிமையைப் பயன்படுத்தி, தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, தங்கள் சார்பில் அரசை வழிநடத்திவர அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர்.
ஆகவே,
மக்களாட்சி நடைபெறும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் வாக்குரிமை
என்பது இன்றியமையாத
ஒன்றாகும். இந்திய அரசமைப்புச் சட்டம், அரசமைப்பின் படிநிலைகளில் ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என எல்லாத் தளங்களுக்கும்
பிரதிநிதிகளை அனுப்பிவைக்க வாக்குரிமையை அதிகாரமாகத் தன் குடிமக்களுக்கு அளித்திருக்கிறது. தமிழ் மரபு வாக்களிக்கும் முறையைப் பண்டைக்காலம் தொட்டே பயன்பாட்டில் கொண்டிருந்தது என்பது தமிழனின் அறநெறி வாழ்வின் மதிப்பீட்டை உலகிற்கு எடுத்துக்கூறும் வரலாறு. ‘குடவோலை’ முறை
என்னும் இரகசிய வாக்கெடுப்பு முறையால் தங்கள் பிரதிநிதிகளை நிர்வாக அமைப்புகளின் உறுப்பினர்களாக நம் முன்னோர் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.
அவ்வாறு,
வாக்கு உரிமையும் வாக்களிக்கும் வழிமுறையும் தமிழர்தம் உணர்வில் இரண்டறக் கலந்தவை. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்த வாக்குரிமையின் மாண்பினை உணர்ந்து இதனைக் குடிமக்களின் சட்டப்பூர்வமான அரசியல் உரிமையாக வடிவமைத்திருக்கிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களும் இந்திய அரசமைப்பின்கீழ் வாக்களிக்க உரிமை உண்டு எனக் குறிப்பிடுகிறது இந்திய அரசமைப்பின் பிரிவு 326. இத்தகைய உரிமை திட்டமிட்டுப் பறிக்கப்படுவதையும் முறையான காரணமின்றிப் பறிபோவதையும் என்னவென்பது?
நமக்கு
வாய்த்த ஒன்றிய அரசின் பிரதமர் மோடி தலைமையிலான பா.ச.க.
அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே நடுவண்
புலனாய்வுச் செயலகம் (சி.பி.ஐ.),
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் ஆளுங்கட்சி ஆதிக்கம் செலுத்தி எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்து, சனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதை ஊரும் உலகும் நன்கறியும். தேர்தல் வெற்றிகளைப் பறிப்பதற்காகப் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ச.க.
அரசு, அண்மைக்காலங்களில் S.I.R. (Special
Intensive Revision Electoral Rolls) என்னும்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்னும் புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது.
இதன்
அடிப்படையில் அரியானாவில் வெற்றி கண்டவர்கள், பீகாரிலும் அதைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவசர அவசரமாக அங்கும் அது அரங்கேற்றப்பட்டது. ஏறக்குறைய 66 இலட்சம் மக்களுடைய பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விசித்திரமான தேர்தல் அரங்கேறியுள்ளது. நாடே உற்றுநோக்கிய பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் - பா.ச.க.
தேசிய சனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது என்கிறார்கள். ஆனால், உண்மையில் ஆட்சியைப் பிடித்தது S.I.R. மட்டுமே!
இங்குக்
கூட்டணிக் கட்சிகள் மாறுபடுகின்றன; பா.ச.க.வும், தேர்தல் ஆணையமும் இணைந்து கைகோர்த்துச் சனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதன் பலனால் கிடைத்த வெற்றி இது. அண்மைக்காலங்களில் தேர்தல் ஆணையம் பா.ச.க.வின் கைப்பாவையாகவே மாறிப்போனது. இந்திய அரசமைப்பின் செயலாக்கத்தில் தலைகுனிவு ஏற்பட்ட தருணங்கள் இவை. “I am NOT the Chief election
commissioner of the Govt. of
India; but I’m Chief Election Commissioner of India” என்று
கூறினார் டி.என். சேஷன்.
ஆனால், இன்று தனித்தியங்க வேண்டிய அவ்வமைப்பு ஆள்வோரின்
கூட்டணிக் கட்சிகளில் ஒன்றுபோல மாறிப்போனது.
இத்தகைய
வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் S.I.R.-இன்
நடைமுறைச் செயல்பாடுகளை ‘வாக்குத்திருட்டு’ என்கிறது
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். திரைமறைவில் தீட்டப்படும் இந்தச் சூழ்ச்சியில், பல இலட்சக்கணக்கான வாக்காளர்களின்
பெயர்கள் முறையற்ற விதத்தில் நீக்கப்படுவதாகவும் கேள்வி எழுப்பியிருக்கின்றன.
இந்தியா
முழுவதும் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் என, 12 பகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத்
திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தீவிரமாக இப்போது ‘திருத்தம்’
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போலி வாக்காளர்களின் பெயர்களையும், இறந்தவர்களின் பெயர்களையும் நீக்குவதற்காகவே இத்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருந்தாலும், இது மேற்கொள்ளப்படுகின்ற விதமும், நடைமுறைப்படுத்தப்படுகின்ற முறையும், வழங்கப்பட்டுள்ள குறுகிய கால அளவும், கட்டாயப்படுத்தப்படும் கூடுதல் பதிவுகளும் குறிப்பாக, 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் இணைந்தோர் தங்களின் பிறந்த தேதி, வாழ்விடத்திற்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும் எனக் கோரப்படும் பல சான்றிதழ்களும் இச்செயல்பாட்டின்
நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
இந்த
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம், நகரமயமாக்கல், புலம்பெயர்தல், தகுதியற்றவர்கள், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், இறந்தவர்களின்
பெயர் நீக்கம் செய்யப்படாதது, வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வாக்குரிமை வைத்திருப்பது போன்ற காரணங்களால் இது மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏழரைக் கோடி மக்கள் இருக்கும் சூழலில் வழங்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட காலஅளவு, தமிழ்நாட்டை இன்னொரு பீகாராக மாற்றும் சதியோ என நம்மை ஐயப்பட
வைக்கிறது.
தமிழ்நாட்டின்
சட்டமன்றத் தேர்தல் அண்மையில் வரவிருக்கும் சூழலில், ஒன்றிய அரசு இவ்வளவு வேகமாக இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? புதிதாக வெளிவரும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறாவிட்டால், மீண்டும் முறையிட்டு வாக்குரிமை பெற போதிய கால அவகாசமும் இல்லை. உயிரோடு இருப்பவர்களுக்குக்கூட பல பின்னணி காரணங்களுக்காக
வாக்கு மறுக்கப்படும் அபாயம் இருக்கிறது என்றும், இத்தகைய குறுகிய காலக் குளறுபடியால் ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழக்க நேரிடும் எனவும், அப்படி இழப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க விரும்பாதவர்களாக இருக்கக்கூடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும்,
தமிழ்நாட்டில் S.I.R. பணிகள்
உரிய திட்டமிடலின்றி, பயிற்சிகள் அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசரகதியில் - போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக, தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.பி. முருகையன் தெரிவித்திருக்கிறார் .
இந்தப்
படிவம் எளிய நடையில் இல்லாதபோது, வாக்காளர்கள் அதைப் பிழையில்லாமல் பூர்த்தி செய்வதும், இப்பணியை மேற்கொள்ளக்கூடிய சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், நகராட்சி- மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு இன்னும் கேள்விக்குள்ளாகிறது.
இது
முறையாகச் செய்யப்பட வேண்டிய வரலாற்றுப் பதிவு. ஆயினும், அவசர
காலம், போதிய பயிற்சி இல்லாத பணியாளர்கள், முறையான - தெளிவு இல்லாத படிவங்கள், கட்டாயப்படுத்தப்படும் தேவையற்ற ஆதாரங்கள், கூடுதல் சான்றிதழ்கள் எனப் பல காரணங்களால் இது
செய்யத்தக்க செயலாக எவரும் கணிக்கவில்லை. இத்தகைய சூழலில் ஐய்யன் வள்ளுவனின் அறம் கூறும் அடிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன...
‘செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை
யானுங் கெடும்’
(குறள் 466).
அதாவது,
ஒரு செயலைச் செய்வதற்கு முன் நன்கு சிந்தித்து, செய்யத்தகுந்த செயல்களைச் செய்யவேண்டும். செய்யத்தகுந்த காரியங்களைச் செய்யாமல் விடுவதும், செய்யத்தகாத காரியங்களைச் செய்வதும் அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கூறும் வள்ளுவர், சரியான நேரத்தில், சரியான காரியங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
அவசியமான
செயல் - ஆனால், அதிவேகமாக மேற்கொள்ளப்படுவதால், இன்று பீகாரில் S.I.R.-தான்
அரியணை ஏறியது. இதன் நீட்சியாக அதே வழிமுறையில் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் ஆட்சிப்பீடம் ஏறிவிடலாம் எனப் பா.ச.க.
பகல் கனவு காண்கிறது. ஆனால், அரியானாவும், பீகாரும் கற்றுக்கொடுத்த பாடத்தால் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட தமிழர்கள் உறுதியாக பா.ச.க.
விற்குப் பாடம் கற்பிப்பார்கள்.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் மக்களாட்சித் தத்துவம் கொண்டது நம் இந்தியத் திருநாடு. அதன் அரசியலமைப்பின் முகப்புரை: “இந்தியாவை ஓர் இறையாண்மை, சமூகத்துவ, சமயச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்றும், அரசியல் நீதி (JUSTICE), தன் செயலுரிமை (LIBERTY), சமத்துவம் (EQUALITY), அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை (FRATERNITY) ஊக்குவிக்கிறது” என்றும் குறிப்பிடுகிறது.
ஆயினும்,
நாட்டின் ஒற்றுமையைப் பற்றிப் பேச வேண்டிய அரசியல் தலைவர்கள், அவ்வப்போது சுயநலக்கோட்டைக்குள் சிக்கிக்கொண்டு வெறுப்பைக் கக்கி வெற்றிபெறலாம் என்ற எண்ணத்தோடு இன்று அரசியல் மேடைகளில் அநாகரிகமாக வலம்வந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய அரசியல் தலைவர்களின் பட்டியலில் இன்று நமது பிரதமர் மோடியும் சேர்ந்திருப்பது பெரும் வேதனைக்குரியது.
அண்மையில்
பீகார் சட்டப்பேரவைக்கு நடந்தேறிய இரண்டு கட்டப் பரப்புரைகளிலும் பிரதமர் மோடியின் பேச்சு விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது.
தங்களது வாக்குறுதிகளை அடுக்கி, சாதனைகளைப் பட்டியலிட்டு, எதிர்க்கட்சிகள் மீதான ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்து வாக்குச் சேகரிக்க வேண்டிய பரப்புரைக்களம், கரைபுரண்டு வந்த காட்டாற்று வெள்ளம் பாய்ந்த காணி நிலம்போல, வரையறையற்ற வார்த்தை முழக்கங்களால் கொலையுண்டு கிடக்கிறது.
பீகார்
தேர்தல் களத்தில் முதல் கட்டப் பரப்புரையின்போது பிரதமர் மோடி, “தெலுங்கானாவிலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் தலைவர்கள் பீகாரிகளை இழிவுபடுத்துகின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களைத் தி.மு.க.வினர் துன்புறுத்துகின்றனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அவர்களோடு கூட்டணியில் இருக்கும் இராஷ்டிரிய ஜனதாதளம் அமைதியாக இருக்கிறது” என்று
பேசியிருக்கிறார்.
பிரதமரின்
பேச்சு, பிரிவினைவாதச் சிந்தனையின் உச்சக் கட்டம் என நாடெங்கிலுமிருந்தும் கண்டனக் கணைகள்
தொடுக்கப்படுகின்றன. பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,
“நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்துவிடுகிறார். இது போன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை அவர் இழந்துவிடக்கூடாது. ஒடிசா, பீகார் என்று எங்கு சென்றாலும் பா.ச.க.-வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்கு தமிழ்நாடு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று
குறிப்பிட்டிருக்கிறார்.
அவ்வாறே, எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி, “இந்தியாவின் மக்களாட்சித் தத்துவத்தை மோடி இழிவுபடுத்தியுள்ளார்” என்று
கூறியிருக்கிறார்.
மேலும்,
சீதாமர்ஹி, பெத்தியா ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்டப் பரப்புரை மேற்கொண்டபோது பிரதமர், “கடந்த 2005-வரை சுமார் 15 ஆண்டு காலமாக இங்கு காட்டாட்சி நடந்தது; கொள்ளையர்கள், ரவுடிகளின் சொர்க்கப் பூமியாக பீகார் மாற்றப்பட்டது. நாட்டுத் துப்பாக்கி, தவறான நிர்வாகம், கொடுமைகள், ஊழல் இவையே காட்டாட்சியின் அடையாளங் கள். காட்டாட்சி நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உங்கள் தலையில் நாட்டு துப்பாக்கியை வைத்து மிரட்டுவர்” என்று
பேசியிருக்கிறார். இதற்கு
எதிர்வினையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “பிரதமர் மோடியின் தலையில் டிரம்ப் நாட்டுத் துப்பாக்கி வைத்து மிரட்டினாரா? அதனால்தான் ‘ஆபரேஷன் சிந்தூர்’
குறித்த டிரம்பின் கருத்துகளை மறுக்க பிரதமர் அஞ்சுகிறாரோ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரிவினைவாதச்
சிந்தனைகளைப் பேசுவது ஒன்றும் பா.ச.க.-விற்குப் புதிதல்ல. 2024-இல் ஒடிசாவில் நடந்த தேர்தலில் நவீன் பட்நாயக் கட்சியில் இணைந்த தமிழ்நாடு அதிகாரி பி.கே. பாண்டியனை
விமர்சித்துப் பேசுவதாக நினைத்து, “பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பெட்டகச் சாவி தற்போது தமிழ்நாட்டில் இருக்கிறது. ஒடிசா மண்ணை ஒரு தமிழன் ஆளலாமா?” என்றெல்லாம் மாநில பிரிவினைப் பேசி வாக்குச் சேகரித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
2023-இல் மணிஷ்
காஷ்யப் என்ற யூடியூபர், வட மாநிலத்தின் ஏதோ
ஒரு மூலையில் எடுக்கப்பட்ட வீடியோவைக் கொண்டு தமிழ்நாட்டில் புலம்பெயர் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர் என்று வதந்தி பரப்பினார். இந்த வீடியோ போலியானது என நிரூபித்து, தேசியப்
பாதுகாப்புச் சட்டத்தில் மணிஷை கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை. ஆனால், பின்னாளில் பா.ச.க.
அவரைத் தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டது.
தொண்டன்
முதல் தலைவர் வரை பா.ச.க.வில் யாவருடைய சிந்தனையிலும் பிரிவினைவாத மனப்பான்மை அரியணை போட்டு அமர்ந்திருக்கிறது என்பது வெள்ளிடை மலையாகிறது. அமைதியைச் சீர்குலைக்கும் எண்ணத்தில் வதந்தியைப் பரப்பிய மணிஷ் போல, இன்று பிரதமரே அப்படியான வதந்திகளைப் பரப்ப நினைப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது. மதப் பிரிவினையை உண்டாக்கி வாக்குச் சேகரிப்பு நோக்கத்தில் இத்தனை காலம் பேசிக்கொண்டிருந்த பிரதமர் மோடி, தற்போது மொழி-மாநில ரீதியான பிரிவினைகளை விதைத்து வாக்குச் சேகரித்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.
‘தமிழ்நாட்டில்
வாழும் மற்ற மாநில மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்கிற பொய்யான பரப்புரை உலகெங்கும் வாழும் பல கோடி தமிழர்களின்
மனத்தைப் புண்படுத்தியிருக்கிறது. இந்திய மாநிலங்களை ஒரு குடையின்கீழ் ஒன்றிணைத்த சர்தார் வல்லபாய் படேலுக்கு 3000 கோடி செலவில் சிலை வைத்துவிட்டு, அவருடைய சிந்தனை அடிப்படையில் ‘தேசிய ஒற்றுமை தினத்தையும்’ கொண்டாட
அழைப்பு விடுத்துவிட்டு, மாநிலங்களுக்கிடையே பகைமையை உண்டாக்கும் விதமாக எவ்வித ஆதாரமுமின்றி ஒரு வதந்தியை முன் வைத்து வாக்குச் சேகரிப்பது சங்கப் பரிவாரங்களின் வன்மம் நிறைந்த நீண்ட நெடுங்காலத் தேர்தல் சூட்சுமத்தை உணரச் செய்கிறது.
ஒருவேளை,
அப்படி ஒரு சூழல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருந்தால் தன் அதிகாரத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நிலைப்பாடு எடுக்க வேண்டிய பிரதமர், தேர்தல் நேரத்தில் இது பற்றிப் பேசுவது அவருடைய உள்மன நோக்கத்தைப் புரிந்துகொள்ளச் செய்கிறது. வடக்கே செல்கின்றபோது தெற்கைப் பற்றி விமர்சிப்பதும், தெற்கே வந்தால் ‘வடக்கு வளமாக இருக்கிறது’ எனப்
பொய்ப் பிம்பங்களைக் கட்டமைப்பதையும் மரபாகக் கொண் டிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டின் தலைவராக அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய தலைவர், பீகாருக்கும் தென் மாநிலங்களுக்குமிடையே பகைமையைத் தூண்டி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறார்.
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பேன்...” என்று கூறி மூன்று முறை பிரதமராகப் பதவி ஏற்றவர், அந்த உறுதிமொழியை ஒவ்வொரு தேர்தலின்போதும் மறந்துவிடுகிறார்.
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ எனும்
பல்லுயிர் நேயத்தையும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் சகோதரத்துவத்தையும் உலகிற்கு உணர்த்தி, வந்தாரை வாழவைப்பது தமிழகம். யாவரையும் வாஞ்சையோடு அணைத்துக்கொள்ளும் அதன் தாயுள்ளத்தையும் தனிச்சிறப்பையும் சிதைத்ததோடு, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்தியாவின் அடையாளத்தையும் அவர் சீர்குலைத்து விட்டார்.
ஐந்து
ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலுக்காக ஆண்டாண்டு காலமாக நம் முன்னோரால் நிலைத்து நிற்கும் நம் மரபை, இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவை நிலைகுலையச் செய்து விட்டார். தேச ஒற்றுமையைப் பலிகொடுத்துப் பெறும் வெற்றி நீண்ட காலம் நிலைக்காது; அது ‘பங்காளிகளுக்குள் பகை உண்டாக்கி பலனடையும் பாம்பு போன்றது; பேராபத்து என்றால் பால்வார்த்தவனே பல்லாக்கு ஏற்றி விடுவான்’
என்னும் கிராமத்துச் சொலவடைதான் நம் எண்ணத்தில் எழுகிறது.
நம்
நாட்டின் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டுக் கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசுகையில், “கடந்த 1937-இல் ‘வந்தே மாதரம்’ பாடலின் முக்கியப் பத்திகள் நீக்கப்பட்டபோதே பிரிவினை விதைகள் விதைக்கப்பட்டன; இத்தகைய பிரிவினைவாத மனப்பான்மை இப்போதும் நாட்டுக்குச் சவாலாகவே உள்ளது” என்று ‘வருத்தப்பட்டிருக்கிறார்’ பிரதமர்
மோடி.
1870-இல் பங்கிம்
சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்டு, 1896-இல் இரவீந்திரநாத் தாகூரால் இசையமைக்கப்பட்டு, 1950, ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபையால் நாட்டின் தேசியப் பாடலாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது இப்பாடல். முன்னதாக 1937-இல் மௌலானா அபுல்கலாம் ஆசாத், ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், ஆச்சரிய நரேந்திர தேவா, இரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் கொண்ட குழுவின் பரிந்துரையால், ஆறு பத்திகள் கொண்ட இப்பாடலில் இரண்டு பத்திகள் மட்டுமே தேசியப் பாடலாகத் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பாடல் குறித்து, இப்போது இன்றைய பிரதமரின் ‘பிரிவினை’
விமர்சனம் ஏன்? என்பது இப்போது நமக்கு நன்கு புரிகிறது.
இத்தகைய
பிரிவினை விமர்சனத்தைப் பதிவு செய்யும் இந்திய பிரதமர் மோடியும் பா.ச.க.வினரும் கண்ணாடியின்
முன்னிற்கும்போது பிரிவினைவாத மனப்பான்மை கொண்டவர்கள் யார்? என்பதை அவர்கள் முன்னிற்கும் கண்ணாடியே அவர்களுக்குக் காட்டும். ஏனெனில், கண்ணாடிகள் ஒருபோதும் பொய் சொல்வதில்லை.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
“மறைப்பணி என்பது திரு அவையின் இதயம்” என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். நற்செய்தியை, கிறிஸ்துவின் மேன்மைமிகு இறையாட்சியின் விழுமியக் கோட்பாடுகளை எங்கும் விதைத்து, சமத்துவச் சமூகம் படைப்பதே மறைப்பணி. இயேசு என்னும் நற்செய்தியையும், இயேசுவின் நற்செய்தியையும் அறியாத ஒருவருக்கு வழங்கி அவரை மெய்மறையில் சேர்த்து, தொடர்ந்து இறை உறவில் வளரச் செய்வது உலகோர் கண்களுக்கு மதமாற்றமாக அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால், இறை நம்பிக்கையை மட்டும் பகிர்ந்துகொள்ளாது மற்ற நம்பிக்கையாளர்களையும் மாண்புடன் மதித்து, அறச்சிந்தனைகளை விதைத்து, தனிமனிதனிலும் சமூகத்திலும் மாற்றத்தை முன்வைத்து, சமூக மேம்பாடு என்னும் உன்னத இலக்குடன் மதமாற்றம் அல்ல. மாறாக, மனமாற்றமும் மானுட ஏற்றமும் காண மேற்கொள்ளப்பட்டதே கிறித்தவ மறைப்பணி.
கிறிஸ்துவை
ஏற்றுக்கொண்டவர்களுக்கு
நற்செய்தியைப் பகிர்ந்து, அருளடையாளங்களை வழங்கி, நம்பிக்கையை வளர்க்கும் அன்றாட ஆன்மிகப் பணிகளோடு மறைப்பணி முற்றுப் பெறுவதில்லை; மாறாக, அது... “ஏழையருக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வையற்றோருக்குப் பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு, அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிப்பது” (லூக்
4:18-19) எனும் ஆன்மிக அடித்தளம் கொண்ட சமூகப் பணிகளைக் கண்முன் நிறுத்துவதே! குறிப்பாக, கல்வி, மருத்துவம், சுகாதாரம், பொருளாதார ஏற்றம், சமூக மாற்றம், மனிதமாண்பு, சமத்துவ உரிமை போன்ற தனிமனித மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுப்பதே கிறித்தவ மறைப்பணி.
திசையறியா,
தேக நிலையறியா, தேச முறையறியா எண்ணம் கொண்டு, தன்னை முழுமையாக அறிந்து, அழைத்த தேவனை மட்டுமே வாழ்வில் கண்டு, தன் நாடு, இனம், தந்தை வீடு (தொநூ 12:1) என்னும் முகவரி துறந்து, முகமற்றவர்களின் முகமாய், குரலற்றவர்களின் குரலாய், முகவரியற்றவர்களின் முகவரியாய் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களே மறைப்பணியாளர்கள்.
கருணையும்
அன்பும் கறையில்லா வாழ்வும் கொண்டு, கரைசேரா ஓடங்களுக்குக் கலங்கரை விளக்கானவர்கள் மறைப்பணியாளர்கள். இருள்சூழ் உலகில் தனிமனிதரிலும் சமூகத்திலும் அகமும் புறமும் ஒளியேற்றியவர்கள்; அவர்கள் மனிதர் முன் ஞான ஒளி வீசியவர்கள் (மத் 5:16).
பிறர்
துயர் தீர்க்கும் பெருங்கருணை ஒன்றுதான் மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கும். “வாழ்க்கை என்பது தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுப்பது; அடுத்தவரிடமிருந்து எதையும் எடுப்பது அன்று” என்றார் பிரெஞ்சுப் படைப்பாளி விக்டர் ஹயூகோ. “அன்பில்லாத இடத்தில் மனித முகங்கள் வெறும் படங்கள்; அவர்கள் பேசும் பேச்சு உயிரில்லா ஓசை கொண்டவை” என்றார் ஆங்கில அறிஞர் பேகன். அவ்வகையில், அன்பும் கருணையும் மறைப்பணியாளர்களை உன்னத மகான்கள் ஆக்கியது; தன்னலம் துறந்து, பிறர்நலம் தேடும் பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் ஆக்கியது; உறவில்லாத உயிர்களுக்கெல்லாம் ஓடிச்சென்று உதவத்துடிக்கும் உன்னதர்களாக்கியது; வாழ்வின் வலிகளால் சிதையுண்டு, வழி தொலைத்த மக்களுக்கு வாஞ்சையோடு வழிகாட்டும் சமூகப் போராளிகளாக்கியது. அத்தகைய வரிசையில் கிறித்தவர்களின் மறைப்பணியும், மறைப்பணியாளர்களின் இறைப்பணியும் கரையில்லாக் கடலாக வியப்பளிக்கிறது.
இக்கடலில்
கலந்த நீர்த்துளிகளில் ஒன்றுதான் இறை ஊழியர் மைக்கில் அன்சால்தோ. மறைப்பணியின் மாண்பினை உணர்ந்து, பன்முகத்தளங்களில் தடம் பதித்து, கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப்பணி, சமத்துவம் காணும் விடுதலைப் பணி.... எனும் தனது பணிகள் தொடர்ந்திட இறைத்துணையுடன் அவர் தொடங்கிய ‘கொன்சாகா அருள்சகோதரிகள் துறவற சபை’ இன்று தனது சபை நிறுவுநரின் கனவுகளை நனவாக்க, கடந்த 250 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பணிகள் பெரிதும் பாராட்டத்தக்கவை.
1775-ஆம் ஆண்டு
இத்தாலி நாட்டிலுள்ள செசிலி தீவில் புனித லூயிஸ் தே கொன்சாகா இல்லத்தில்
தொடங்கப்பட்ட ‘பிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சகோதரிகள் சபை’ இன்று ஆல்போல் தழைத்து, விருட்சங்களாகத் தன் விழுதுகளைப் பரப்பி இப்பணிகளைத் தொடர்ந்து வருவது இறைத்திருவுளமே.
திருத்தந்தை
லியோ, யூபிலி கொண்டாட்டத்தின் நினைவாகத் துறவற சபைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, “தங்கள் சபை நிறுவுநர்களின் இலக்குகள் அடிப்படையில் ஒவ்வொருவரும் காலத்தின் அடையாளங்களை முறையாகத் தொடர்ந்து கணிக்கவேண்டும்; அன்றைய காலச்சூழல்களின் தேவைகளுக்கு ஏற்றார்போல் துணிவுடனும் தெளிவுடனும் தங்கள் சபை நிறுவுநர்கள் தூய ஆவியாருக்குப் பதிலளித்து, பணிகளை மேற்கொண்டதுபோல, கடந்த தலைமுறையினரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, உயர்ந்த இலட்சியங்களைப் புரிந்துகொண்டு, ஒவ்வொருவரும் அவரவர் அருள்கொடைகளை அடையாளம் கண்டு, நம்பிக்கையுடனும் தாராள மனத்துடனும் நற்பணிகளைத் தொடர வேண்டும்; அதற்கு இறைவன் வழங்கிய அருள்கொடைகளைப் பயன்படுத்த வேண்டும்”
எனக் கேட்டுக்கொண்டுள்ளார் (வத்திக்கான், செப்: 20). அத்தகைய மனநிலையில், சபை நிறுவுநரின் ஆழ்மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் எளிய வாழ்வு, ஆழமான அர்ப்பணம், தன்னலம் துறந்த பணி வாழ்வு, கடின உழைப்பு, இறையன்பில் வேரூன்றிய பக்தி முயற்சி, ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்கான அர்ப்பண வாழ்வு... என்னும் இலக்கு கொண்ட கொன்சாகா அருள்சகோதரிகளின் பணிகள் கிறிஸ்துவின் மனநிலையையும், சபை நிறுவுநரின் கனவுகளையும் அவருடைய ஆழமான ஆன்மிகத்தையும் பிரதிபலிக்கின்றன.
கத்தோலிக்கத்
திரு அவை இவ்வாண்டினை மாபெரும் யூபிலி ஆண்டாகக் கொண்டாடிச் சிறப்பிக்கும் இவ்வேளையில், கொன்சாகா துறவியர் சபை தனது 250-வது யூபிலி ஆண்டைச் சிறப்பிப்பது பெரும் மகிழ்வுக்குரியதே! இவ்வேளையில், இச்சபையின் தலைமை அன்னை அருள்சகோதரி ஞானமணி FSAG, சபை
நிர்வாக ஆலோசகர்கள் மற்றும் அருள்சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் வாசகர்கள் சார்பாக ‘நம் வாழ்வு’ தனது வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்குகிறது. இந்த 250-வது யூபிலி விழாக் கொண்டாட்டத்தின் நினைவாக இச்சிறப்பிதழை வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்