இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில், சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க முண்டாசுக் கவிஞன் பாரதி விடுத்த அழைப்பு உன்னதமானது. சாதி, இன, மத வேறுபாடின்றி அனைவரும் ஒரே குலம், ஒரே இனம் என்று முழங்கிய அக்கவிஞன்,
‘எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும்
இந்திய மக்கள்;
எல்லாரும்
ஓர்நிறை, எல்லோரும் ஓர்விலை,
எல்லாரும்
இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும்
இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும்
இந்நாட்டு மன்னர் - வாழ்க!’
என்று
பாடினான். பாரதியின்
இக்கனவை நனவாக்கும் பெரும் பொறுப்பு நம் கல்வி நிறுவனங்களுக்கே பெரிதும் உண்டு. சாதி, மதம், இனம் கடந்த ஒரு சமத்துவக் கல்விச் சூழலே ஒரு தேசத்தின் உண்மையான வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இருப்பினும், நவீன இந்தியாவின் உயர் கல்வி வளாகங்கள் அவ்வப்போது சாதியப் பாகுபாடுகளின் நிழலில் சிக்குவது ஒரு கசப்பான எதார்த்தமாகவே நீடிக்கிறது.
இந்தப்
பாகுபாடுகளைக் களையும் நோக்கில், பல்கலைக்கழக மானியக் குழு (UGC) கொண்டு வந்த ‘2026-ஆம் ஆண்டு புதிய விதிமுறைகள்’ தற்போது
ஒரு மிகப்பெரிய சட்ட மற்றும் அரசியல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு, இந்தியக் கல்வித்துறையில் நிலவும் ஆழமான சமூக முரண்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்த
விதிமுறைகளை மேலோட்டமாகப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இவை ‘தெளிவற்றவை’ என்றும்,
‘தவறாகப் பயன்படுத்தப்படக்கூடியவை’ என்றும்
தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் கருத்துப்படி, இத்தகைய விதிகள் ஒரு நுணுக்கமான சட்ட வடிவத்தைக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, இவை சமூகத்தில் தேவையற்ற கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால், ஒரு தகுதிவாய்ந்த நிபுணர் குழுவின் மூலம் இந்த விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த
சனவரி 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்தப் புதிய விதிமுறைகள், உயர்கல்வி நிறுவனங்களில் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்யப் பல கட்டமைப்பு மாற்றங்களை
முன்மொழிந்தன. அதன்படி, ஒவ்வொரு பல்கலைக்கழகமும் பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் புகார்களைத் தீர்க்கச் ‘சம வாய்ப்பு மையங்களை’ நிறுவவேண்டும்
என அறிவுறுத்தியுள்ளது.
மேலும்,
தடையின்றி (24 x 7) செயல்படும் உதவி எண்கள், சமத்துவக் குழுக்கள் மற்றும் உயர்மட்டக் கண்காணிப்புக் குழுக்களை அமைப்பதன் மூலம் ‘பாதுகாப்பான மற்றும் பாகுபாடற்ற வளாகங்களை’
உருவாக்குவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறே, புகார்களைப் பெற்றவுடன் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் நடவடிக்கை எடுத்து, அது குறித்த ஆண்டறிக்கையை ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள், இந்திய அரசமைப்பின் சமத்துவக் கோட்பாடுகளுக்கும், தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-இன் நோக்கங்களுக்கும் ஒத்திருப்பதாக ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இருப்பினும்,
இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டவுடனே, அதன் மொழி மற்றும் வடிவமைப்பு குறிப்பாக, பட்டியல் சாதி, பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கான பாதுகாப்புகள் எனும் சொல்லாடல்கள் மீது அதிகக் கவனம் செலுத்தப்படுவதாக எதிர்ப்புகள் எழுந்தன. நாடு முழுவதும் போராட்டங்களும், அரசியல் கொந்தளிப்புகளும் வெடித்தன. குறிப்பாக, ஆளும் ஒன்றிய பாரதிய சனதா கட்சியின் சில பொறுப்பாளர்கள் இந்த விதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தங்கள் பதவிகளை விட்டு விலகியிருப்பது அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எதிர்ப்பாளர்களின்
முதன்மையான வாதம், யு.ஜி.சி.யின் இறுதி வரைவு அறிக்கையிலிருந்து ‘பொய்ப் புகார்கள்’
(False complaints) குறித்த பிரிவு நீக்கப்பட்டதுதான். தொடக்க வரைவில், பாகுபாடு குறித்து யாராவது பொய்ப் புகார் அளித்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இறுதி விதிகளில் இப்பிரிவு நீக்கப்பட்டது, உயர் சாதி அமைப்புகளிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ‘மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்’ எனும்
மூத்தோர் சொல்தான் நினைவுக்கு வருகின்றது. இந்த விதிகள் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கருதுகின்றனர்.
சென்னை
I.I.T. மற்றும் பல உயர்கல்வி நிறுவனங்களில்
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் நிர்வாகத்திலும், பேராசிரியர் பணியிடங்களிலும் மேலோங்கி
இருப்பதும், அங்கு மற்ற சமூகத்தைச் சார்ந்த மாணவர்களும் ஏன்... பேராசிரியர்களும் சாதியப் பாகுபாடுகளைச் சந்திப்பதும் அன்றாடச் செய்தியாவதை நாம் அறிவோம்.
இத்தகைய
சூழலில், கல்வி வளாகங்களில் சமத்துவத்தை நிலைநாட்ட முனையும் ஒரு சட்டமியற்றல், ஏன் இத்தனை போராட்டங்களுக்கு உள்ளாகிறது? என்பது பெரும் ஆய்வுக்குரியது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் வளாகங்களில் சந்திக்கும் நுட்பமான பாகுபாடுகளைத் தடுப்பது அரசின் கடமை. அதே வேளையில், எந்தவொரு சட்டமும் ஒரு சார்புடையதாகவோ அல்லது பழிவாங்கும் கருவியாகவோ மாறிவிடக்கூடாது என்பதில் நீதித்துறை உறுதியாக உள்ளதும் வரவேற்கத்தக்கதே.
ஆயினும்,
உச்ச நீதிமன்றத்தின் தடை என்பது இச்சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது அல்ல; மாறாக, இச்சட்டத்தின் வடிவமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்துவதில் இருக்க வேண்டிய தெளிவின்மைக்கான எச்சரிக்கையாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
ஆகவே,
இனிவரும் காலங்களில், உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த நிபுணர் குழு இச்சட்டத்தை எவ்வாறு மறுசீரமைக்கப் போகிறது என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. சமத்துவத்தை உறுதி செய்யும் அதே வேளையில், தனிநபர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும், பொய்ப் புகார்கள் தவிர்க்கப்படுவதையும் அவர்கள் உறுதி செய்யவேண்டும் என்றே சட்ட வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
குறிப்பாக,
விதிமுறைகளில் உள்ள ‘பாகுபாடு’
எனும் சொல்லிற்கான தெளிவான சட்ட வரையறை கொடுக்கப்படவேண்டும் என்றும், புகார்களை விசாரிக்கும் குழுக்களில் அனைத்துத் தரப்புப் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்ய வேண்டுமென்றும், பொய்ப் புகார்களைத் தடுக்கவும், அதேசமயம் உண்மையான புகார்களைப் பதிவு செய்ய அஞ்சுவோருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் சமநிலையான வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டுமெனவும் கருத்துகள் தெரிவிக்கப்படுள்ளன.
இறுதியாக,
மண்ணின் மாண்பு என்பது நிலத்தில் இல்லை; அந்த நிலத்தில் பயிலும் மாணவர்களின் மனங்களில் இருக்கிறது. கல்வி நிறுவனங்கள் சாதியத்தின் வேர்களிலிருந்து விடுபட்டு, அறிவின் ஒளியால் ஒளிரவேண்டும். ‘2026 யு.ஜி.சி.’
விதிகள் சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் சில அடிகள்! இந்த விதிகள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தலையீடு, ஒரு நீதியான மற்றும் முறையான சட்டக் கட்டமைப்பை நோக்கி நம்மை இட்டுச் செல்லும் என்று நம்புவோம். சட்டம் என்பது தண்டனைக்கான கருவி மட்டுமல்ல, அது சமூக மாற்றத்திற்கான ஒரு மென்மையான ஊன்றுகோலாகவும் இருக்க வேண்டும்.
‘சமூக நீதி’ என்பது ஒரு தரப்பினரின் வெற்றியும் மற்றொரு தரப்பினரின் தோல்வியும் அல்ல; மாறாக, அது ஒட்டுமொத்த தேசமும் இணைந்து முன்னேறும் ஒரு கூட்டுப் பயணமே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு
அல்ல பிற’
(குறள்: 61)
என்ற
வள்ளுவப் பெருந்தகையின் வாக்கு செல்வங்கள், பதவிகள் என ஒருவன் அடையும்
மற்ற எல்லாப் பேறுகளையும்விட, நல்லொழுக்கம் கொண்ட, அறிவில் சிறந்த குழந்தைகளைப் பெறுவதே இல்வாழ்க்கையின் தலையாயப் பேறு என்கிறது. ஆகவே, ஒரு சமூகத்தின் ஆகச் சிறந்த செல்வமாகத் திகழ்வது அந்தச் சமூகத்தின் வருங்காலத் தூண்களாகிய இளைய தலைமுறையினரே!
ஆனால்,
அண்மைக்காலமாக தமிழ்நாடு முதல் டெல்லிவரை கல்விக்கூடங்களில் அரங்கேறி வரும் மாணவர் தற்கொலைச் சம்பவங்கள், அச்சமூகத்தின் ஆன்மாவை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. பசுமையான புல்வெளியில் படரவேண்டிய கொடிகள், பூத்துக்குலுங்கும் முன்பே கருகி உதிர்வதுபோல, நமது கல்வி நிலையங்கள் இன்று மாணவர்களின் மன அழுத்தக் கூடாரங்களாக
உருமாறி வருவது வேதனைக்குரிய முரணாகும்.
ஊடகங்களில்
கவனம்பெறும் அன்றாடச் செய்திகளும், அண்மைக்காலப் புள்ளி விவரங்களும் நம்மைப் பேரதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. 2025, 2026-ஆம் ஆண்டுகளில் பதிவான நிகழ்வுகள், கல்வி என்பது அறிவுத்தேடல் என்பதையும் கடந்து, ஓர் உயிர்வாழும் போராட்டமாக மாறியுள்ளதைக் காட்டுகின்றன.
டெல்லியில்
புனித கொலம்பா பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆசிரியர்களின் மனரீதியான தொல்லை தாங்காது தற்கொலை செய்துகொண்டதும், ஜெய்ப்பூரில் நான்காம் வகுப்பு பிஞ்சு பாலகன் சக மாணவர்களின் ஏளனத்தாலும்,
ஊழியர்களின் அலட்சியத்தாலும் உயிரை மாய்த்துக் கொண்டதும் அதிகார வர்க்கத்தின் பிடியில் சிக்கிய மழலைகளின் அவலத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
இத்தகைய
துயரங்களில் தமிழ்நாட்டின் தளிர்கள் தந்த தழும்புகள் மிகவே கொடியவை. கடந்த மாதம், 2026 சனவரியில் சென்னையில் 15-வது மாடியிலிருந்து குதித்த பொறியியல் மாணவர் முதல், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதிக் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த 12-ஆம் வகுப்பு மாணவர் (சனவரி 6, 2025) மற்றும் திருச்சி - துவாக்குடியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளி விடுதியில் (ஆகஸ்டு, 2025) தற்கொலை செய்துகொண்ட 12-ஆம் வகுப்பு மாணவர் வரை, இவர்களின் மரணம் எழுப்பும் ஒரே கேள்வி: ‘மதிப்பெண் பட்டியல்கள் மனித உயிரை விட மதிப்புயர்ந்தவையா?’ என்பதுதான்.
இவ்வரிசையில்,
கல்வி அறிவில் சிறந்த நமது அண்டை மாநிலமான கேரளமும் இதற்கு விதிவிலக்கல்ல. கொச்சியில் 26-வது மாடியில் இருந்து குதித்த 15 வயது சிறுவன், சக மாணவர்களின் ‘ராகிங்’ கொடுமைக்குப்
பலியானது சமூக விலகல் எவ்வளவு கொடியது என்பதை உணர்த்துகிறது.
தேசியக்
குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) 2023-ஆம் ஆண்டு அறிக்கை, இந்தியாவில் ஒரே ஆண்டில் 13,892 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகக் குறிப்பிடுகிறது. இது கடந்த பத்தாண்டுகளில் இல்லாத உச்சம். இதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அவை தனிப்பட்ட காரணங்கள் அல்ல; மாறாக, கட்டமைக்கப்பட்ட சமூகக் காரணங்களே என்பது புலப்படுகிறது.
குறிப்பாக,
ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமையையும் வெறும் மூன்று மணி நேரத் தேர்வில் அடக்கிப் பார்க்கும் நமது கல்வி முறை, அவர்களைத் தோல்வியைக் கண்டு அஞ்சும் கோழைகளாக்குகிறது. அவ்வாறே, ‘என் பிள்ளை மருத்துவராகவோ, பொறியாளராகவோ மட்டுமே ஆகவேண்டும்’ என்ற
பெற்றோரின் பிடிவாதம் மாணவர்களின் கனவுகளை நசுக்குகிறது.
இத்தகைய
வெளிப்புற அழுத்தத்தில் ‘மனச் சிதைவு’ கொள்ளும் நம் குழந்தைகளை நெறிப்படுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும் அவர்களை ஆற்றல்படுத்துவதும் பெற்றோர் மற்றும் பள்ளிகளைக் கடந்து நம் ஒவ்வொருவருடைய கடமையாகும். ஆயினும், இதில் முன்னிற்பவர்கள் பள்ளிகளில் பணிபுரியும் மனநல ஆலோசகர்களே! ஆனால், இன்று அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பது கவலைக்குரியது. மீட்டா செங்குப்தா எனும் கல்வியாளர் கூறுவது போல, 800 மாணவர்களுக்கு ஓர் ஆலோசகர் என்பது ஒரு ‘பெருந்தொற்று’ காலத்தின்
அவல நிலையே!
அதிகமான
வீட்டுப்பாடம், படிப்பின் மீதான வெறுப்பு, குடும்ப எதிர்பார்ப்பு, ஆசிரியர்களின் கண்டிப்பு, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் பாலியல்
தொந்தரவுகள், தனிமைப்படுத்தப்படுதல், வெறுமை உணர்வு, வெறுப்புணர்வு, கேலி - கிண்டல் என ஏளனங்களைச் சந்திப்பது,
மறைமுகமாய் இன்றும் தொடரும் ‘ராகிங்’,
ஆரோக்கியமற்ற அல்லது ஏமாற்றம் கண்ட நட்பு எனப் பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும்,
இன்றைய இணையதள விளையாட்டு அடிமைத்தனம், மேலைநாட்டுக் கலாச்சார மோகம் என்பதும் தற்கொலைக்கான காரணிகளாக அமைவதைக் கேள்வியுறும்போது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியப்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றும் ஷாமிகா ரவி மற்றும் உளவியல் நிபுணர் டாக்டர் மிமான்சா சிங் ஆகியோர் வலியுறுத்துவது போல, ‘கல்வி என்பது வெறும் பாடத்திட்டம் சார்ந்தது அல்ல; மாறாக, அது மனநலம் சார்ந்தது! ஆசிரியர்கள் என்பவர்கள் வெறும் பாடங்களை ஒப்புவிப்பவர்கள் அல்லர்; மாறாக, மாணவர்களின் மனக் குமுறல்களைக் கண்டறியும் ’முதல் நிலை உதவியாளர்களாக’ இருக்கவேண்டும்.
மாணவன் உதவி கோரும் சிறு சைகையைக் கூட கவனிக்கத் தவறினால், அது ஒரு பேரழிவிற்கு வழிவகுக்கும்’ என்பதை
நாம் மறந்துவிடக் கூடாது.
இத்தகைய
சூழலில், காரிருளில் சில மின் மினிப் பூச்சிகளாய் சில பள்ளிகள் முன்னெடுக்கும் முயற்சிகள் நம்பிக்கை அளிக்கின்றன; அவை பெரிதும் பாராட்டத்தக்கவையே! சில பள்ளிகளில் ‘படி பெஞ்ச்’
(Buddy Bench))
எனும் முறை சக வயது - வகுப்பு
மாணவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், இணக்கமாகப் பயணிக்கவும் கற்றுத்தருகிறது. அவ்வாறே, சில பள்ளிகளில் ‘கவனமாகக் கையாள்வோம்’ (Handle with Care) என்ற
குறிப்பு மூலம் பெற்றோரும் ஆசிரியரும் இணைந்து செயல்படும் முறையும் பாராட்டுக்குரியது.
மேலும்,
டெல்லி பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஜீரோ பீரியட்’
(Zero Period)
மற்றும் பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள், வெளிப்படையான உரையாடலுக்கு வித்திடுகின்றன. அவ்வாறே, ஒன்றிய அரசுப்பள்ளிகளில் ‘மனோதர்ப்பன்’ மற்றும்
‘டெலி-மானஸ்’ போன்ற திட்டங்கள் இருந்தாலும், அவை கடைக்கோடி மாணவரையும் சென்றடைவதை நாம் உறுதி செய்யவேண்டும்.
இறுதியாக,
இம்மானிடப் பிறவியின் மகத்துவமே அதன் வளர்ச்சிப் பாதையில்தான் மிளிர்ந்து நிற்கிறது! இங்கே, ஒரு மாணவனின் தற்கொலை என்பது ஒரு தனிநபர் தோல்வியல்ல; மாறாக, அது ஒரு சமூகத்தின், ஒரு கல்வி முறையின், ஒரு குடும்பத்தின் தோல்வி. மதிப்பெண்களைக் காட்டிலும் மாணவர்களின் மன வைராக்கியத்தையும், தோல்விகளை எதிர்கொள்ளும்
பக்குவத்தையும் வளர்ப்பதே நமது உண்மையான கல்வியாக இருக்க வேண்டும். ‘வாழ்க்கை என்பது ஒரு தேர்வு அல்ல; அது ஒரு கொண்டாட்டம்’ என்பதை
இளைய உள்ளங்களுக்கு நாம் உணர்த்திட வேண்டும்.
ஆசிரியர்,
பெற்றோர் மற்றும் அரசு என முத்தரப்பினரும் இணைந்து, மாணவரின்
மனநலனை ஒரு ‘கூட்டுப் பொறுப்பாக’
ஏற்றால் மட்டுமே, இந்தத் தற்கொலைப் பெருந்தொற்றிலிருந்து நம் வருங்காலத் தூண்களைக் காக்க முடியும்.
நமது
குழந்தைகள் நமது எதிர்காலம்! அவர்களின் சிரிப்பிலும் கனவுகளிலும்தான் நாளைய உலகின் ஒளி நிறைந்துள்ளது. அவர்களைப் பாதுகாப்பது நம் அனைவரின் தார்மிகக் கடமை! விழிப்புணர்வு
என்பது வெறும் காகிதத்தோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு வகுப்பறையிலும், ஒவ்வொரு வீட்டிலும் அன்பாகப் பரிணமிக்கவேண்டும்.
நம்
இளந்தளிர்களைக் காப்போம்;
அதுவே
நம்
சமூகத்தின் கடமையென ஏற்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
ஒவ்வோர் ஆண்டும் இந்திய ஒன்றிய அரசால் தாக்கல் செய்யப்படும் மத்திய நிதிநிலை அறிக்கை என்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு வரைபடம் என்றும், இந்தியாவின் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஆவணம் என்றும் நம்பப்படுகிறது.
ஆனால்,
2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை உற்றுநோக்கினால் இது ‘மக்களுக்கானது’ என்பதை
விட, ‘மன்னர்களுக்கானது’ (கார்ப்பரேட்
நிறுவனங்கள்) என்பது போலவே காட்சியளிக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் சில தனிநபர்களின் கைகளில் குவிக்கப்படுவதையும், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் நசுக்கப்படுவதையும் இந்த நிதிநிலை அறிக்கை தோலுரித்துக் காட்டியுள்ளது.
குறிப்பாக,
மக்களும், அம்மக்கள் வாழும் இவ்வுலகும் அழிந்தாலும் கவலையில்லை; பணம் சேர்ப்பதொன்றே குறி என்று இயங்கும் மிகப்பெரிய முதலீட்டாளர்களும்,
பெரிய வணிக நிறுவனங்களைக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கல்லாவை நிரப்புவதற்கான ஒரு தந்திரமான ஆவணமாகவே இது காட்சியளிக்கிறது. எனவேதான், எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, “இந்த நிதிநிலை அறிக்கை பிரதமரின் நண்பர்களான அதானி மற்றும் அம்பானிக்காகத் தயாரிக்கப்பட்ட ஒரு பரிசுப் பெட்டி” என்றும், “இதில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் தவிக்கும் இளைஞர்களுக்கோ, விலையேற்றத்தால் தவிக்கும் ஏழைகளுக்கோ எதுவுமில்லை” என்றும்
கடுமையாகச் சாடியுள்ளார்.
நாட்டின்
ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் ‘K-வடிவ’ பாதையில் பயணிக்கும் வேளையில், இந்த நிதிநிலை அறிக்கை விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பெருமுதலாளிகளின் நலன்களையே தாங்கிப்பிடிக்கிறது. மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழ்நாடு போன்ற வளர்ச்சி சார்ந்த மாநிலங்களைப் புறக்கணிப்பதும், கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைப்பதுமான, சனநாயகத்திற்கு எதிரான முகத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்தியாவின்
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது பெரிய பங்களிப்பை வழங்கும் மாநிலம் நம் தமிழ்நாடு. ஆயினும், ஒன்றிய பா.ச.க.
அரசு தமிழ்நாட்டை ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே கடந்த 12 ஆண்டுகளாக அணுகுகிறது என்பதற்கு இந்த நிதிநிலை அறிக்கையும் மற்றொரு சான்று. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி வேறாக இருப்பதாலேயே, மாநிலத்தின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன.
சென்னை
மெட்ரோ இரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான நிதி, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முழுமையான ஒதுக்கீடு, பேரிடர் நிவாரண நிதி என தமிழ்நாடு விடுத்த எந்த ஒரு
கோரிக்கையும் இந்த நிதிநிலை அறிக்கையில் செவிமடுக்கப்படவில்லை. ‘தமிழ்நாடு இந்தியாவின் வரைபடத்தில் இல்லையோ?’ என்று ஐயுறும் அளவிற்குப் புறக்கணிப்பு உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஆகவேதான்,
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதையே கொள்கையாகக் கொண்டுள்ள ஒன்றிய பா.ச.க.
அரசு, தேர்தலில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்தே இந்த வஞ்சனையைச் செய்கிறது. மாநில சுயாட்சியை ஒடுக்கும் இந்த நிதிநிலை அறிக்கை ஒரு ‘வெற்று அறிவிப்பு’
ஆவணம்” என்று
கடுமையாக விமர்சித்துள்ளார். அவ்வாறே, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், “இரயில்வே திட்டங்களில் தென்னிந்தியா குறிப்பாக, தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது; இது நாட்டின் நிதிநிலை அறிக்கை அல்ல; மாறாக, பா.ச.க.-வின் அரசியல் நிதிநிலை அறிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து ‘கார்ப்பரேட்மயம்’ ஆக்கப்பட்டு
வருவதால் நாளைய நிலைகுறித்த எண்ணங்கள் பெரும் கவலையளிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் பெருநிறுவனங்களுக்கான திட்டங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி.
மற்றும் பண மதிப்பிழப்பின் பாதிப்பிலிருந்து
இன்னும் மீளமுடியாமல் விழிபிதுங்கி நிற்கும் இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வட்டிச்சலுகையோ, கடன் தள்ளுபடியோ இந்த நிதிநிலை அறிக்கையில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.
நாட்டில்
குடிமக்களின் பொருளாதார இயக்கத்தில் முற்றிலும் முரண் ஓங்கி நிற்கிறது. ஒட்டுமொத்தச் செல்வமும் ஒரு விழுக்காட்டு மக்களிடமே குவிந்துகிடக்கும் வேளையில், எஞ்சியுள்ள 99% மக்கள் வாங்கும் சக்தியை இழந்து தவிக்கின்றனர். கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்ட போதிலும், ஏழைகள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருள்களின் மீதான மறைமுக வரிகள் குறைக்கப்படவே இல்லை. ஆகவேதான், தொல். திருமாவளவன், “இது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகளில் ஒரு பகுதியைக்கூட ஏழை விவசாயிகளுக்கு வழங்க இவர்களுக்கு மனமில்லை”
என்று சாடியுள்ளார்.
இந்தியாவின்
ஒட்டுமொத்தக் கடன் சுமையும் இன்று அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. 2026-ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களின்படி, நாட்டின் கடன் - ஜி.டி.பி.
விகிதம் சுமார் 55.6 விழுக்காடாக உள்ளது. அரசு வாங்கும் கடனுக்கான வட்டியைச் செலுத்துவதற்கே நிதிநிலை அறிக்கையின் பெரும்பகுதி செலவிடப்படுகிறது. ‘வருமானம் இல்லை; ஆனால், கடன் மட்டும் மலைபோல உயர்கிறது’
என்பதுதான் இன்றைய இந்தியாவின் எதார்த்த நிலையாக உள்ளது. இந்தக் கடன்சுமை எதிர்காலத் தலைமுறையினரின் தோள்மேல் சுமத்தப்படும் பெரும் பாரமாகும்.
இன்று
இந்திய மண்ணில் பாமரன் படும்பாடு, பெரும்பாடு! ஒருபுறம், சிலிண்டர் விலை உயர்வு; மறுபுறம், பெட்ரோல், டீசல் விலையேற்றம். நிதி நிலை அறிக்கையில் இதற்கான எந்தவொரு தீர்வும் இடம்பெறவில்லை. தனிநபர் வருமான வரி விகிதத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாதது நடுத்தர வர்க்கத்தினரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆகவே, நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகளின் வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவது, கிராமப் புற ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும்.
பொருளாதாரம்
வளர மக்கள் பொருள்களை வாங்கவேண்டும். ஆனால், இன்று
நுகர்வில் சரிவு ஏற்பட்டுள்ளது. வருமான வரி அடுக்கில் பெரிய மாற்றங்கள் இல்லாததால், நடுத்தர வர்க்கத்தினரின் கையில் செலவு செய்யப் பணம் இருப்பதில்லை.
இந்நிலையைக்
கூர்ந்து நோக்குகின்ற பொருளாதார வல்லுநர்கள், “இந்த நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட் வரிக்குறைப்பு மற்றும் சலுகைகள் மேல்நோக்கிய கோட்டை வலுப்படுத்துகின்றன; ஆனால், ஏழைகளுக்கான மானியக் குறைப்பு கீழ் நோக்கிய கோட்டை மேலும் பள்ளத்தில் தள்ளுகிறது” என்கின்றனர்.
மேலும், ஒன்றிய அரசு வசூலிக்கும் ‘செஸ்’ வரிகள் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. இந்தப் பட்ஜெட்டில் ‘செஸ்’ வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன; இது மாநிலங்களின் நிதிச் சுயாட்சியைப் பறிக்கும் செயல் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அவ்வாறே,
கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடும் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகவே உள்ளது. இவ்வேளையில்...
‘எங்கள் வீட்டில்...
எரியும்
அடுப்பில் எண்ணெய் இல்லை;
எங்கள்
தலையிலும் எண்ணெய் இல்லை!
பிறகே
காரணம் அறிந்து கொண்டேன்...
எங்களை
ஆள்பவர்கள் தலையில்
எதுவுமே
இல்லையென்று!’
எனும்
புதுக்கவிதை வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.
இன்றைய
ஒன்றிய அரசோ பொருளைச் சேர்ப்பதில் காட்டுகின்ற ஆர்வமும் திட்டமும் சூழ்ச்சியும், அதை முறையாகப் பகிர்ந்தளிப்பதில் காட்டுவதில்லை. மாற்றாந்தாய் மனநிலையில் பாரபட்சமே காட்டுகிறது. தன் விருப்பத்திற்கு இணங்கும் மாநிலங்களுக்கு வாரி வழங்குவதும், உரிமைக் குரல் எழுப்பும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களைப் பட்டினி போடுவதும் எந்த விதத்தில் அறமாகும்?
பட்ஜெட்
என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல; அது மக்களின் நம்பிக்கை. ஆனால், 2026-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, பெருநிறுவனங்களின் கல்லாவை நிரப்பும் ஒரு கருவியாகவே உள்ளது. கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் இந்தப் போக்கு இந்தியச் சனநாயகத்திற்கு நலமானதல்ல. மாநிலங்களின் பங்களிப்பை அங்கீகரிக்காத எந்த ஒரு நிதிநிலை அறிக்கையும் முழுமையானதாக இருக்க முடியாது.
இறுதியாக,
தமிழ்நாட்டைப் புறக்கணிப்பது என்பது வெறும் அரசியல் இலாப-நஷ்டம் அல்ல; அது ஒரு தேசியக் குற்றம். கார்ப்பரேட் முதலாளிகளின் கைத்தடியாகச் செயல்படுவதை நிறுத்தி விட்டு, பாமர மக்களின் பசி தீர்க்கும் திட்டங்களை அரசு முன்னெடுக்காதவரை இத்தகைய நிதிநிலை அறிக்கைகள் காகிதப் பூக்களாகவே இருக்கும். அவை மலர்ந்திருக்கும்; ஆனால், மணமிருக்காது!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
இந்தியா இன்று உலகப் பொருளாதார அரங்கில் ஒரு மாபெரும் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. ‘அடுத்த பத்தாண்டுகள் இந்தியாவின் பத்தாண்டுகள்’ என்று உலகளாவிய நிதிநிறுவனங்கள் முழங்கி வருகின்றன. ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் பொருளாதாரம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்து வருவது, புவிசார் அரசியலில் நமக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.
ஆனால், இந்தக் கவர்ச்சிமிகு எண்களுக்குப் பின்னால், ஒரு சாதாரண இந்தியனின் சட்டைப் பையில் இருக்கும் வருமானம் என்ன? என்பதும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) எகிறும்போது, தனிநபர் வருமானம் ஏன் இன்னும் தரைமட்டத்திலேயே இருக்கிறது? என்பதும் அதிர்ச்சி தரும் கேள்விகளே! பெருமை பாராட்டும் இந்தியாவின் வளர்ச்சி குறித்த பிம்பத்தில் இந்தக் கேள்விகள் கரும் புள்ளிகளாகவே தொடர்கின்றன.
உலகளாவிய
நாணய நிதியத்தின் (IMF) 2025-ஆம்
ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவின் பெயரளவு GDP நான்கு டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. மேலும், வாங்கும் திறன் சமநிலை (PPP) அடிப்படையில் நாம் ஏற்கெனவே மூன்றாவது இடத்தில் வலுவாகவே இருக்கிறோம். ஆனால், அதே IMF தரவுகள்,
இந்தியாவின் தனிநபர் வருமானம் சுமார் 2,818 டாலர்கள் மட்டுமே என்ற மற்றொரு கசப்பான உண்மையையும் பதிவுசெய்கின்றன.
ஒப்பிட்டுப்
பார்த்தால், சீனா 13,300 டாலர்களுடனும், வளர்ந்த நாடுகள் 40,000 டாலர்களுக்கும் அதிகமான தனிநபர் வருமானத்துடனும் முன்னிலையில் உள்ளன. ஒரு நாட்டின் மொத்த வருமானம் உயரும்போது, அது மக்களிடையே சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதே ஒரு சிறந்த பொருளாதாரத்தின் அடையாளம். இந்தியாவில் அந்தப் பகிர்வு சமமாக இல்லை என்பதே உண்மை.
இந்தியப்
பொருளாதாரத்தின் போக்கை அதல பாதாளத்திற்குத் தள்ளிய மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று, 2016-இல் பா.ச.க.
அரசால் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையாகும். ‘கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில்’
கொண்டு வரப்பட்ட இந்த நடவடிக்கை, முறைசாராத் துறையைக் (Informal Sector) கடுமையாகச்
சிதைத்துள்ளது.
இந்தியாவின் 90% வேலைவாய்ப்புகள்
முறைசாராத் துறையில்தான் உள்ளன. ரொக்கப் பணத்தைச் சார்ந்து இயங்கிய சிறு, குறு தொழில்கள் முடங்கியதால், இலட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர். அந்த இழப்பு இன்னும் மீட்டெடுக்க முடியாத நிலையிலேயே உள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சேமிப்பு கரைந்தது. இதன் தொடர்ச்சியாக வந்த ஜி.எஸ்.டி.
(GST) அமலாக்கம், பெரிய நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், சிறு வணிகர்களுக்குச் சுமையாகவும் அமைந்தது கொடுமையிலும் கொடுமை! பொருளாதார வளர்ச்சி ‘மேல் மட்டத்தில்’ தெரிந்தாலும்,
‘கீழ் மட்டத்தில்’ மக்களின்
வாங்கும் திறன் குறைய இதுவே தொடக்கப்புள்ளியாக அமைந்தது என்பதே எதார்த்தம்.
இந்தியாவின்
தற்போதைய மிகப் பெரிய சவால் வேலையின்மை. CMIE (Centre for Monitoring Indian Economy) தரவுகளின்படி, இந்தியாவின் வேலையின்மை விகிதம் 8% முதல் 9% வரை
ஊசலாடுகிறது. குறிப்பாக, படித்த இளைஞர்களிடையே இது 20%-க்கும்
அதிகமாக நீடிப்பது வேதனையிலும் வேதனை.
‘ஆக்ஸ்பாம்’
(Oxfam) அண்மை
அறிக்கையில், இந்தியாவின் 1% மிக
உயர்ந்த பணக்காரர்களிடம் நாட்டின் 40% சொத்துகள்
குவிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. கீழ்மட்டத்தில் உள்ள 50% மக்களிடம்
நாட்டின் மொத்தச் சொத்தில் வெறும் 3% மட்டுமே
உள்ளது. ‘கே-வடிவ வளர்ச்சி’ (K-shaped recovery) என்று
பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடும் இந்த நிலை, வசதி படைத்தவர்கள் மேலும் வசதி அடைவதையும், ஏழைகள் மேலும் ஏழ்மை அடைவதையும் காட்டுகிறது.
தொடரும் ஒன்றிய
பா.ச.க. அரசின்
தீவிரமான தனியார்மயமாக்கல் கொள்கை இந்தியாவின் பொருளாதாரத்தைச் சிலருடைய கைகளிலே அடகுவைத்தது போலாகிறது. பொதுத்துறை நிறுவனங்களைச் சில குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் செயல்கள் தொடர்கின்றன. இன்று, விமான நிலையங்கள், துறைமுகங்கள் முதல் எரிசக்தி வரை நாட்டின் முக்கியச் சொத்துகள் ஒருசில பெரும் பணக்காரர்களின் கைகளில் குவிந்து வருகின்றன.
பொருளாதார
வல்லுநர்கள் இதை ‘குரோனி கேபிடலிசம்’ (Crony Capitalism) என்கின்றனர். அதாவது, அரசின் கொள்கைகள் ஒட்டுமொத்தப் பொதுமக்களுக்கானதாக இல்லாமல், ஒருசில தொழிலதிபர்களுக்கு மட்டும் சாதகமாக வடிவமைக்கப்படுகின்றன. இதனால் நாட்டின் மொத்தச் செல்வம் உயர்கிறது; ஆனால், அது ஒருசிலரின் வங்கிக்கணக்குகளில் மட்டுமே முடங்கிக் கொள்கிறது.
மேலும், இந்திய
மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். பா.ச.க.
அரசு கொண்டு வந்த புதிய விவசாயச் சட்டங்கள் (மீளப் பெறப்பட்டாலும்), விவசாயத் துறையில் கார்ப்பரேட் ஆதிக்கத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
விவசாயிகளுக்குக்
குறைந்தபட்ச ஆதார விலை (MSP) கிடைப்பதில்
நிலவும் சிக்கல்கள் மற்றும் உரங்கள், டீசல் போன்ற இடுபொருள்களின் விலை உயர்வு ஆகியவை கிராமப்புற வருமானத்தை முடக்கியுள்ளன. நகர்ப்புறங்களில் உயர்தொழில்நுட்பச் சேவைத்துறை வளர்ந்தாலும், கிராமப்புறப் பொருளாதாரம் இன்னும் தேக்கநிலையிலேயே உள்ளது கவலையளிக்கிறது. ஒரு நாட்டின் பெரும்பான்மை மக்கள் வாழும் கிராமப்புறங்களில் வருமானம் உயராதவரை, தேசிய அளவில் தனிநபர் வருமானம் உயர்வது சாத்தியமில்லை.
ஆகவே, இந்தியா, இன்று ஓர் ‘இரட்டை எதார்த்தத்தில்’ பயணிக்கிறது.
ஒருபுறம் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து, நாடு பொருளாதார வல்லரசாக மாறிக் கொண்டிருக்கிறது; மறுபுறம், ஒரு சராசரி இந்தியன் பணவீக்கத்தாலும், குறைந்த வருமானத்தாலும் அன்றாட வாழ்க்கையை நடத்தப் போராடிக்கொண்டிருக்கிறான்.
GDP உயர்வு
என்பது தேசத்தின் கௌரவம்; ஆனால், தனிநபர் வருமான உயர்வு என்பது மக்களின் வாழ்வு. இந்த இரண்டிற்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைப்பதே இந்தியாவின் உண்மையான வெற்றியாக இருக்க முடியும். அப்போதுதான் ‘வளர்ந்த இந்தியா’ என்ற கனவு உண்மையான அர்த்தத்தைப் பெறும். இத்தகைய அரசுக்குத்தான் அன்றே ஐயன் வள்ளுவர்,
‘இயற்றலும்
ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும்
வல்ல தரசு’
(385) என்றார்.
அதாவது,
பொருள் வரும் வழிகளை உருவாக்குதல், வந்த பொருளைச் சேர்த்தல், சேர்த்ததைக் காத்தல் மற்றும் காத்த பொருளைச் சரியாகத் திட்டமிட்டுச் செலவிடுதல் ஆகிய நான்கையும் சிறப்பாகச் செய்ய வல்லவனே சிறந்த அரசன் என்றார். இன்றைய ஒன்றிய அரசு தன்னைச் சுய ஆய்வு செய்து பார்க்க வேண்டும். பொருள் வரும் வழிகளும் முறையாக உருவாக்கப்படவில்லை; வந்த பொருளைச் சேர்க்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை; சேர்க்கவே இயலாதபோது எப்படிக் காக்கமுடியும்? காத்த பொருளை எப்படிச் சரியாகத் திட்டமிட்ட முடியும்?
இத்தகைய
சூழலில், இந்திய நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை வெளிவர உள்ளது. இது வெறும் எண்கள் மற்றும் வரைபடங்களின் தொகுப்பு அல்ல; மாறாக, 140 கோடி இந்தியர்களின் உழைப்பையும், நாட்டின் முன்னேற்றப் பாதையையும் பிரதிபலிக்கும் கண்ணாடி அது. ஒவ்வொரு பட்ஜெட்டில் ‘யாருக்கு என்ன கிடைக்கும்?’ என்று பார்ப்பதற்குப் பதிலாக, ‘நாம் தற்போது எங்கே இருக்கிறோம்?’ என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையைத் தெரிந்துகொள்வது ஒவ்வொரு
குடிமகனுக்கும் அவசியம்.
நடப்புப் பொருளாதார
ஆய்வறிக்கையில் ‘வளர்ந்த இந்தியா - 2047’ (Viksit Bharat)) திட்டத்திற்கான
ஒரு வரைபடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து நூறு ஆண்டுகளை எட்டும்போது, உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக மாறுவதற்கான சீர்திருத்தங்கள் என்னென்ன தேவை என்பதை இந்த ஆய்வறிக்கை விரிவாக விவாதிக்க உள்ளது.
டிஜிட்டல்
பொருளாதாரம், பசுமை எரிசக்தி மற்றும் பெண்களின் பொருளாதாரப் பங்கேற்பு போன்ற நவீனகாலத் தேவைகள் இந்த வரைபடத்தில் முக்கிய இடம்பிடித்தாலும், குடியானவனின், தனிமனிதரின் வருமானமும் வாழ்வியலும் மேம்படும்போதே, இந்தியா வளர்ந்த நாடாக அறியப்பட்டுப் போற்றப்படும்!
ஏழையோரின்
வாழ்வு உயரட்டும்!
இந்தியப்
பொருளாதாரம் சிறக்கட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
என் இனிய வாசகப் பெருமக்களே,
திரு
அவை என்பது வெறும் ஓர் அமைப்பு மட்டுமல்ல; மாறாக, அது கிறிஸ்துவின் மறையுடலாகவும், ஒரு பெரிய நம்பிக்கைக் குடும்பமாகவும் விளங்கக் கூடியது. ஒரு தாய் தன் குழந்தைகள் சாதனை படைக்கும்போது எத்தகைய பெருமிதம் அடைவாளோ, அதைவிடப் பெரிய மகிழ்ச்சியைத் தன் குழந்தைகள் ‘அருளாளர்’
(Blessed) அல்லது
‘புனிதர்’ (Saint) என்ற
நிலைக்கு உயர்த்தப்படும்போது தாய்த் திரு அவை அடைகிறது.
அருளாளர்
அல்லது புனிதர் நிலைக்கு ஒருவர் உயர்த்தப்படுவது
என்பது, அவர் இந்த உலகில் வாழ்ந்தபோது நற்செய்தி விழுமியங்களை வாழ்வாக்கினார் என்பதற்கான அங்கீகாரம். இது ஒரு தனி நபரின் வெற்றியல்ல; மாறாக, திரு அவை போதிக்கும் நம்பிக்கை அந்த மனிதரின் வாழ்வில் வெற்றி பெற்றுவிட்டது என்பதையே குறித்துக்காட்டுகிறது. அன்னை எலிஸ்வாவின் அர்ப்பண வாழ்வும் அதையே எடுத்துரைக்கிறது.
ஒருவர்
‘அருளாளர்’ அல்லது
‘புனிதர்’ என்று
அறிவிக்கப்படும்போது,
அவர் இப்போது இறைவனை முகமுகமாய்த் தரிசிக்கிறார் என்ற நம்பிக்கையைத் திரு அவை தருகின்றது. திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதுபோல, “புனிதர்கள் திரு அவையின் அழகைக் கூட்டுகிறார்கள்; ஒரு தோட்டத்தில் பல்வேறு வண்ணமலர்கள் பூத்துக் குலுங்குவது போல, ஒவ்வொரு புதிய புனிதரும் திரு அவையின் ஆன்மிகத் தோட்டத்தில் ஒரு புதிய நறுமணத்தைப் பரப்புகிறார்கள்.” அவ்வகையில், அன்னை எலிஸ்வா அருளாளர்
நிலைக்கு உயர்த்தப்பட்டிருப்பது அந்தச் சபைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் திரு அவைக்குமே மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி!
சபை
தொடங்கியபோது மேற்கொள்ளப்பட்ட பல பணிகளில், அன்னை
எலிஸ்வாவின் அளப்பரிய பணி பெண்களுக்கான உயர்கல்விப் பணி. பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பள்ளிகளையும், அனாதை இல்லங்களையும் நிறுவுவதில் பெரும் பங்காற்றிய இவர், ‘பெண்கள் கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேறும்’ என்பதில்
உறுதியாக இருந்தார். இறைவனோடு இணைந்திருத்தல் (Interior Silence), தாழ்ச்சியும்
கீழ்ப்படிதலும் கொண்டிருத்தல், தன்னை முன்னிலைப்படுத்தாமல், இறைவனின் கருவியாக மட்டுமே இறுதிவரை வாழ்ந்தார்.
அருளாளர்
எலிஸ்வா ஏற்றி வைத்த அந்தச் சுடர், இன்று அவரது சபையினரால் உலகம் முழுவதும் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றது.
கல்விப் பணி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, ஆதரவற்றக் குழந்தைகளுக்காக இல்லங்களை நடத்தி, அவர்களுக்குப் புகலிடமும் கல்வியும் வழங்குவதோடு, வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கான மறுவாழ்வு மையங்களையும் நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவப் பணி, மேய்ப்புப்பணி, ஊடகப்பணி, மறைக்கல்விப் பணி மற்றும் நற்செய்திப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். தற்போது, அச்சு ஊடகங்கள் வழியாக இறைவார்த்தையைப் பரப்பும் நவீனகால மறைப்பணிகளிலும் இச்சபை சகோதரிகள் ஆர்வமுடன் பங்கெடுத்து வருகின்றனர்.
தங்கள்
தாய்க்கு ‘அருளாளர்’
என்ற பெருமை கூடும் இந்நாளில், சேய்கள் ஒன்றிணைந்து விழா எடுப்பதும், அவ்விழாவின் நினைவாகச் சிறப்பிதழ் வெளிக்கொணர்வதும் பெரிதும் பாராட்டத்தக்கது. இம்முயற்சியை முன்னெடுத்திருக்கும் CTC சபைத் தலைவி மதர் ஷஹிலா அவர்களுக்கும், விமலா மறை மாநிலத் தலைமை அன்னை அருள்சகோ. வெரோனி அவர்களுக்கும்,
அவருடைய ஆலோசனைக் குழுவிற்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னை
எலிஸ்வா புனிதர் நிலைக்கு விரைவில் உயர்த்தப்பட எமது வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்குகின்றேன்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர் செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பது இந்திய மண்ணில் வெறும் மேடை முழக்கத்திற்கான வாசகம் அல்ல; மாறாக, அது இத்திருநாட்டின் உயிர் ஆற்றல் கொண்ட ஆன்மா. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள் மற்றும் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பை ‘இந்தியா’ என்ற ஒற்றைப் பெயரில் பிணைத்து வைத்திருப்பதுதான் அதன் பன்முகத்தன்மை. ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றிய பா.ச.க. ஆட்சி இந்த ஆன்மாவைச் சிதைத்து, மதவெறி மற்றும் இந்துத்துவ அடிப்படைவாதத்தின் மூலம் நாட்டைப் பிளவுபடுத்தும் ஓர் அபாயகரமான விளையாட்டைத் தொடர்ந்து விளையாடி வருகிறது.
அண்மையில்
குஜராத்தில் நடைபெற்ற சோம்நாத் சுய மரியாதைத் திருவிழா, இந்தியாவின் தற்போதைய அரசியல் போக்கு எத்தகைய திசையில் பயணிக்கிறது என்பதற்கான ஒரு தெளிவான சான்று. நாட்டின் பிரதமர் என்ற முறையில், ஒரு மதச்சார்பற்ற சனநாயக நாட்டின் தலைவராகப் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு முன்னெடுப்புகள், அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்தவேண்டிய திரு. நரேந்திர மோடி அவர்கள், தனது நேரத்தின் பெரும் பகுதியை ஆலய வழிபாடுகளிலும், குடமுழுக்கு விழாக்களிலும் செலவிடுவது கவலையளிக்கிறது.
சோம்நாத்
விழாவில் பேசிய பிரதமர், “நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்கள் இப்போது வாள்களுக்குப் பதிலாகப் பிற தீங்கிழைக்கும் வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன; நம்மைப் பிளவுபடுத்த முயலும் சக்திகளை ஒற்றுமையால் வீழ்த்த வேண்டும்”
என்று அறைகூவல் விடுத்துள்ளார். இங்குதான் ஒரு பெரும் முரண் எழுகிறது. உண்மையில் இந்திய மக்களை மத ரீதியாகவும் சாதி
ரீதியாகவும் பிளவுபடுத்தி, அதன் மூலம் வாக்குகளைச் சேகரிக்கும் அரசியலை முன்னெடுப்பது யார்? 11 ஆண்டுகால ஆட்சியில் சமூகங்களுக்கிடையே பிளவை உண்டாக்கும் வெறுப்புப் பேச்சுகளும், கும்பல் வன்முறைகளும் (Mob Lynching) பெருகியுள்ளதைச்
சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்களின் கேள்விகளுக்குப் பிரதமரின் உரையில் எந்தப் பதிலும் இல்லை. நாட்டின் பிரதமரே ஒரு மதத்தைச் சார்ந்த அடையாளங்களை முன்னிறுத்துவது, அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பற்ற கொள்கைக்கு விடப்பட்ட சவாலாகும்.
அதே
மேடையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் உரை, நேரடியாகவே ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான நஞ்சைக் கக்கும் வகையில் அமைந்திருந்தது. “இஸ்லாமிய மன்னர்கள் இக்கோவிலைத் தகர்த்தார்கள்; இடித்தவர்கள் அழிந்து போனார்கள்; ஆனால், கோவில் கம்பீரமாக நிற்கிறது” என்று அவர் கர்ச்சித்தது, கடந்த கால வரலாற்றுக் காயங்களை மீண்டும் கீறி விட்டு, தற்கால அரசியல் இலாபம் தேடும் முயற்சியே அன்றி வேறில்லை.
வரலாற்று
ரீதியாகச் சோம்நாத் கோவில் தாக்கப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளை இன்று வாழும் ஒரு சமூகத்தின்மீது வெறுப்பை உமிழப் பயன்படுத்துவது எவ்வகையில் நியாயம்? அமித்ஷா தனது உரையில், ‘இந்திய மக்களின் நம்பிக்கை’
என்று குறிப்பிடுவது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் அல்ல; மாறாக, அவர் முன்வைக்கும் ‘இந்துத்துவ’ கொள்கைகளை
ஏற்றுக்கொள்பவர்களை மட்டுமே. சனாதன தர்மமே இந்தியாவின் ஒட்டுமொத்தக் கலாச்சாரம் என உருவகப்படுத்துவதன் மூலம் புத்த,
சமண, சீக்கிய, இசுலாமிய, கிறித்தவ மற்றும் திராவிடப் பண்பாட்டுத் தனித்துவங்களை அவர் திட்டமிட்டுப் புறக்கணிக்கிறார்.
பா.ச.க.-வின்
‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்ற ஒற்றைவாதக் கொள்கை, இந்தியாவின் அடிமட்ட அளவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காலங்காலமாக ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்த கிராமப்புற மக்கள், இன்று மத ரீதியிலான சிறு
சிறு காரணங்களுக்காக மோதிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ‘உணவுத் தேர்வு’
(Food choice)
என்ற பெயரில் மாட்டிறைச்சி உண்பவர்களைக் குறிவைத்துத் தாக்குவதும், ‘லவ் ஜிகாத்’ போன்ற கற்பனையான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் இன்று இந்தியா முழுவதும் ஒரு தொற்றுநோயாகப் பரவி வருகிறது.
மறுபுறம்,
இந்திய சனநாயகத்தின் தூண்களாகக் கருதப்படும் நிறுவனங்கள் தங்களின் சுயாட்சியை இழந்து வருகின்றன. இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி முன்வைக்கும் விமர்சனம் மிக முக்கியமானது: “சி.பி.ஐ.,
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்தும் இன்று
ஆட்சியாளர்களின் ஏவல் படைகளாக மாறியுள்ளன” என்ற
அவரது கூற்று மிகச்சரியானதே! குறிப்பாக, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்குவதற்கு இந்த அமைப்புகள் பயன்படுத்தப்படுவதும், பா.ச.க.-வின் கொள்கைகளுக்கு உடன்படாத அதிகாரிகள் அச்சுறுத்தப்படுவதும் சனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயலாகும்.
இந்திய
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான கருத்துரிமை, மத உரிமை மற்றும்
ஊடகச் சுதந்திரம் ஆகியவை இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய ஊடகச் சுதந்திரப் பட்டியலில் இந்தியா தொடர்ச்சியாகப் பின்தங்கி வருவது இதற்குச் சான்று. அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ‘தேசத்துரோகிகள்’ என
முத்திரை குத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
மேலும்
இன்றைய சூழலில், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் உரிமைகள் மெல்ல மெல்லப் பறிக்கப்படுகின்றன. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமைகள் மறைமுகமாகச் சிதைக்கப்படுகின்றன. குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. இராதா
கிருஷ்ணன் குறிப்பிட்டது போல, “இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகள் நாட்டை ஒருபோதும் பிளவுபடுத்தவில்லை; மாறாக, அவை நமது நாகரிகத்தைப் பாதுகாத்து வலுப்படுத்தியுள்ளன.” ஆனால், இந்த உண்மையை மறைத்து, ‘இந்தி’ மற்றும் ‘சமஸ்கிருதத்தை’ தேசிய
அடையாளமாக முன்னிறுத்தி, பிற மாநில மொழிகளை இரண்டாம் நிலைக்குத் தள்ளும் முயற்சி, இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைக்கிறது.
பா.ச.க. அரசு
சனாதனத் தர்மத்தை இந்தியாவின் தேசிய அடையாளமாக மாற்றத் துடிக்கிறது. ஆனால், சனாதனம் என்பது படிநிலைச் சமூக அமைப்பை (Hierarchy) வலியுறுத்துவது
என்ற விமர்சனம் பரவலாக உள்ளது. சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு நேரெதிரானது இந்தச் சனாதனப் போக்கு. மதம் மற்றும் ஆன்மிகம் என்பது தனிமனித உரிமை; அதை அரசு நிர்வாகத்தோடும் தேசிய அடையாளத்தோடும் கலப்பது மதவாத ஆட்சிக்கே (Theocracy) வழிவகுக்கும்.
பா.ச.க. அரசின்
இந்தப் போக்கு, பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு தந்திரமாகவும் பார்க்கப்படுகிறது. விலைவாசி உயர்வு, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம், ஒரு மதவாதப் பிரச்சினையை முன்னிறுத்தி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவது இந்த அரசின் வாடிக்கையாகிவிட்டது.
இந்தியா
என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கோ சொந்தமான சொத்தல்ல. இது பல கோடி மக்களின்
வியர்வையாலும் தியாகத்தாலும் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டுப் பரிமாற்றத்தாலும் உருவானது. சோம்நாத் போன்ற வரலாற்றுச் சின்னங்களைப் போற்றுவதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்தப் பெருமையை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரான வன்மமாக மாற்றுவது தேசத் துரோகத்திற்கு இணையானது.
இறுதியாக,
மத அடிப்படைவாதமும் வெறுப்பு அரசியலும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையோ அல்லது உலகளாவிய அங்கீகாரத்தையோ ஒருபோதும் பெற்றுத்தராது. உண்மையான சுய மரியாதை என்பது பிற மதத்தவரை இழிவுபடுத்துவதில் இல்லை; மாறாக, அனைத்து மக்களையும் சமமாக நடத்துவதிலும், பசியற்ற, அச்சமற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதிலுமே உள்ளது. ஆட்சியாளர்கள் தங்களின் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகப் பன்முகத்தன்மையைச் சிதைப்பதை நிறுத்தவேண்டும்.
பன்முகத்தன்மைதான்
இந்தியாவின் பலம்; அதைச் சிதைப்பது இந்தியாவின் எதிர்காலத்தையே சிதைப்பதாகும். இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, தங்களின் சனநாயக உரிமைகளையும் பன்முகப் பண்பாட்டையும் காக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இது!
விழிப்பாய்
இருப்போம்! - என்றும்
வேற்றுமையில்
ஒற்றுமை காப்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்