news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (16-03-2025) (மூன்றாம் ஆண்டு) தொநூ 15:5-12, 17-18,21; பிலி 3:17-4:1; லூக் 9:28-36

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று இறைவன்மலைஅனுபவத்தைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறார். மலை அனுபவம் என்பது கடவுளின் மாட்சியின் அனுபவம். இறைபிரசன்னத்தை வெளிப்படுத்தும் அனுபவம். திருவிவிலியத்தில் பல்வேறு இடங்களில் மலை அனுபவம் குறிப்பிடப்பட்டுள்ளது. மோரியா மலையில் ஆபிரகாமும், சீனாய் மலையில் மோசேயும், கார்மேல் மலையில் எலியாவும் இறைவனின் மாட்சியைக் கண்டார்கள். தாபோர் மலையில் கடவுளின் மாட்சியானது வெளிப்படுத்தப்படுகிறது. இயேசு பாடுகளின், இறப்பின், உயிர்ப்பின் வழியாகப் பாவங்களிலிருந்து மக்களுக்கு விடுதலை வாழ்வைக் கொடுக்க இருக்கிறார் என்பதன் சிறந்த அடையாளமே தாபோர் மலை அனுபவம். நம் வாழ்வுக்குத் தாபோர் மலை அனுபவமும், கல்வாரி மலை அனுபவமும் மிகவும் முக்கியமானவை. தாபோர் மலையில் இயேசுவின் முகம் ஒளியாகப் பிரகாசித்ததுஆடை வெண்மையாய் மின்னியது, மோசேயும், எலியாவும் உடனிருந்தனர், பேதுரு உடனிருந்தார், விண்ணகத் தந்தையின் குரல் ஒலித்தது, சீடர்கள் தங்கள் முகத்தை மூடிக் கொள்கின்றனர். கல்வாரி மலையில் இயேசுவின் முகம் காயப்பட்டிருந்தது, ஆடை களையப்பட்டு நின்றார், இரண்டு கள்வர்கள் இயேசுவோடு உடனிருந்தனர், பேதுரு இயேசுவை விட்டு ஓடிவிட்டார், படை வீரர்களின் ஏளனக் குரல் ஒலிக்கிறதுகதிரவன் தன் முகத்தை மூடிக் கொள்கிறான். இவ் வாறு இயேசுவின் மாட்சியில் நாம் பங்கு பெற வேண்டுமென்றால், தாபோர் மலை மற்றும் கல்வாரி மலை அனுபவத்தைப் பெறவேண்டும். நம் வாழ்க்கையில் இன்பமான மற்றும் துன்பமான நேரங்களில் இறைவனின் பிரசன்னத்தை உணர்ந்து, அவரது மாட்சியில் பங்குகொள்ள வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆபிராமிடம்வானத்து விண்மீன்களைப் போல உன் வழி மரபினரும் இருப்பர்என்றார். ஆபிராம் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டார். நாமும்  ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டு வாழும்போது, நாம் செய்வது அனைத்திலும் ஆண்டவர் வெற்றி தருவார். நமது தந்தை ஆபிராமைப் போன்று ஆண்டவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுல், ‘நமக்கு விண்ணகமே தாய்நாடு, அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்என்றும், ‘ஆண்டவரோடு உள்ள உறவில் நிலைத்திருங்கள்என்றும் கூறுகின்றார். இன்னல்கள், இக்கட்டுகள், துன்பங்கள் அனைத்திலும் இறைவனோடு நாம் கொண்டுள்ள உறவில் நிலைத்து  வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் அனைவரும் இக்காலத்திற்கேற்ப விவேகத்தோடும், முன்மதியோடும் செயல்படவும், உம் பணியைச் செய்வதற்குத் தேவையான உடல் நலம் கொடுத்து வழிநடத்தவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மோடு வாழும் ஆண்டவரே! தவக்காலத்தில் உமது பாடுகளைப் பற்றி அதிகமாகத் தியானிக்கும் நாங்கள் அனைவரும் உடன்வாழும் சகோதர-சகோதரிகளுக்குச் சிந்தனையால், சொற்களால், செயல்களால்  தீங்கிழைக்காதிருக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்களோடு பயணிக்கும் ஆண்டவரே! மருத்துவமனைகளிலும் எமது இல்லங்களிலும் தெருவோரங்களிலும் முதியோர் இல்லங்களிலும் உடல் மற்றும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அனைவரின் தனிமையையும் போக்கிடத் தேவையான நல்ல மனத்தை எங்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நல்ல ஆயனான ஆண்டவரே! எம் பங்கிலும் உலகிலும் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை ஆசிர்வதியும். அறிவியல் உலகில் ஞானத்தோடு வாழவும்ஒவ்வொரு நாளும் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் வளரவும், பொறுப்புணர்வோடு செயல்படவும், இவர்களின் எதிர்காலம் சிறக்கவும், நீரே அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் முதல் ஞாயிறு (09-03-2025) (மூன்றாம் ஆண்டு) இச 26:4-10; உரோ 10:8-13; லூக்கா 4:1-13

திருப்பலி முன்னுரை

தவக்காலம் இது மனமாற்றத்தின் காலம்; ஆண்டவரின் பேரன்பைச் சுவைக்கும் காலம்; செபத்தில் நிலைத்து ஆண்டவரின் அருளைப் பெற்றுக்கொள்ளும் காலம்; மன்னித்து நல்ல மனிதர்களாக வாழும் காலம். சொற்களால், செயல்களால், நல்ல எண்ணங்களால் அமைதியை விதைக்கும் காலம். இத்தகைய புனிதமான தவக்காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இன்றைய நற்செய்தியில் இயேசு நாற்பது நாள் நோன்பிருந்தபோது அலகையினால் சோதிக்கப்படுகிறார். தம்முடைய செபத்தால், வல்லமையான வார்த்தையால் அலகையை வென்றுவிடுகிறார். நாமும் அலகையின் செயல்களிலிருந்து விடுபடவேண்டும். திருப்பலி, செபமாலை, தனிச்செபம், குடும்பச் செபம் ஆகியவற்றின் வழியாக ஆண்டவரை நெருங்கிச் சென்று, அலகையை நாம் வெல்ல முடியும். எனவே, நம் வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் இறை வார்த்தையை அனுதினமும் படித்துத் தியானிப்போம்; ஆண்டவரின் பாதத்தைச்சிக்கெனப் பிடித்துக்கொள்வோம். பாவத்திலிருந்து விடுபட்டு தூயவர்களாக வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

மோசே, இஸ்ரயேல் மக்களிடம், ‘ஆண்டவர் தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களினாலும் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்என்று கூறி ஆண்டவரை மகிமைப்படுத்தும்படி கூறுகின்றார். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவர் அன்றாடம் ஏராளமான நன்மைகளைச் செய்து வருகின்றார். ஆண்டவரின் பேரன்பை நினைத்து நன்றி கூற அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆண்டவர் வேண்டுவதற்கு மேலாகவே அருள்வளங்களை நமக்குத் தருகின்றார். தம்முடைய அளவற்ற நன்மைகளால் நாளும் நம்மை நிரப்புகின்றார். நம்பிக்கையோடு ஆண்டவரிடம் கேட்கும் அனைத்தையுமே நாம் பெற்றுக்கொள்வோம். அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நன்மைகளைப் பொழிகிறார் என்று தூய பவுல் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் அனைவரையும் ஆசிர்வதியும். உமது பணியைச் சிறப்பாகவும், விவேகத்தோடும் செய்வதற்குத் தேவையான உடல் மற்றும் மனவுறுதியைத் தந்திடவும், துன்பமான நேரங்களில் நீரே உம்முடைய தூதர்களைக் கொண்டு வழிநடத்திக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பின் வடிவமான ஆண்டவரேஉம்முடைய பேரன்பையும் பேரிரக்கத்தையும் சுவைத்து வாழ இத்தவக்காலத்தைத் துவங்கி இருக்கும் நாங்கள் அனைவரும் உலகச் செல்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட உன்னதச் செல்வமாகிய உமக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உடன் வாழும் ஆண்டவரே! எம்முடைய நாட்டிலும் பங்கிலும் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசிர்வதியும். தீராத நோய்களினின்றும், வறுமை, பசி, போர் போன்ற அழிவினின்றும் மக்களைக் காத்திடவும், அனைத்துக் குடும்பங்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சியைத் தந்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உடன் பயணிக்கும் ஆண்டவரே! எம் நாட்டில் வாழும்  இளைஞர் மற்றும் இளம் பெண்களை ஆசிர்வதியும். இணையம், அலைப்பேசி எனத் தொலைத்தொடர்புக் கருவிகளில் தொலைந்து போகாமல், மெய்ஞானமாகிய உம்மில் நம்பிக்கைகொண்டு உம் வழியில் வாழவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைந்திடவும் அருள் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 8-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (02-03-2025) சீஞா 27:4-7; 1 கொரி 15:54-58; லூக் 6:39-45

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு தூய்மையான பார்வை கொண்டு வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. புறப்பார்வை நம் அறிவை விசாலமாக்குகின்றது. அகப்பார்வை நம் ஆன்மாவையும் உள்ளத்தையும் வளப்படுத்துகின்றது. ‘நான் யார்? எனது நிறை - குறை என்ன?’ என்பதை யார் தெளிவாக அறிந்துள்ளார்களோ, அவர்களே சரியான பார்வை கொண்டுள்ளார்கள். மற்றவர்களின் தவற்றைச் சுட்டிக்காட்டுவதில் நீதிபதிகளாக இருக்கிறோம்; நமது தவற்றை ஏற்றுக்கொள்வதில் வழக்கறிஞர்களைப்போல் வாதாடுகிறோம். பாவம் என்ற சேற்றிலிருந்து எழுந்துதிருவிவிலியம் வாசித்தல், நற்கருணை ஆராதனை, தினமும் திருப்பலியில் பங்குகொள்ளுதல், குடும்பச் செபம் செபித்தல், ஒப்புரவு  இவற்றின் வழியாக நமது ஆன்மாவைத் தூய்மை  செய்து, சிறந்த கனிகொடுக்கும் மரங்களாக மாறுவோம். இன்றைய நற்செய்தியில் இயேசுஉள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்என்கிறார். நம் உள்ளத்தை நல்ல சிந்தனையால், நேர்மறை எண்ணங்களால், வாழ்வு கொடுக்கும் வார்த்தையால், மற்றவர்களை வாழ்விக்கும் செயல்களால்  நிரப்புவோம். மற்றவர்களைப் பற்றிய தவறான கருத்துகளை, கண்ணோட்டங்களை முற்றிலும் அகற்றுவோம். நம்மிடமுள்ள அல்லவைகளை எல்லாம் அகற்றி, நல்ல மதிப்பீடுகளில் நாளும் வளர்வோம். இயேசுவைப் போன்று அன்பும் கனிவும் இரக்கமும் கொண்ட பார்வையும், எவரையும் தீர்ப்பிடாத மனநிலையும் கொண்டு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

சில நல்ல வார்த்தைகள் நம்மை வாழ வைக்கின்றன. சில வார்த்தைகள் நம்மை வீழ்ச்சி அடையச் செய்கின்றன. நாம் பயன்படுத்தும் வார்த்தைகள்தான் நாம் யார் என்பதையும், எப்படிப்பட்டவர்கள் என்பதையும், நம்முடைய ஆளுமையையும் வெளிப்படுத்துகின்றன. அன்றாடம் நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் மாசின்றி இருக்க வேண்டும் என்ற கருத்தை உணர்த்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் அனைவரும் கடவுளை அறிந்து அன்பு செய்யப் படைக்கப்பட்டுள்ளோம். கிறித்தவன், கிறித்தவள் என்ற முகவரியைப் பெற்ற நாம், ஆண்டவரின் பணியை அன்றாடம் செய்துகொண்டே இருக்கவேண்டும். துன்பங்கள், இன்னல்கள், இடையூறுகள், அவமானங்கள் என எது வந்தாலும் துவண்டுவிடாது இறைவனின் பணியைத் துடிப்போடு செய்துகொண்டே செல்ல வேண்டும்ஆண்டவருக்காக நாம் செய்யும் பணி எப்போதுமே வீண்போகாது. இரட்டிப்பான ஆசிர்வாதத்தையே தரும் என்று கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1) அன்பின் ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தி வரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரையும் ஆசிர்வதியும். இவர்கள் அனைவரும் உமது வார்த்தையை அன்றாடம் வாசித்து, அதைத் தங்களுடைய வாழ்க்கையால் அறிவிக்கத் தேவையான ஞானத்தைத் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) கருணையின் இறைவா! எங்கள் அனைவருக்கும் நீர் கொடுத்த இந்த வாழ்வுக்காக நன்றி கூறுகின்றோம். எங்களுடைய வாழ்க்கையில் அன்பு, மன்னிப்பு, இரக்கம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், அமைதி போன்ற பண்புகளை விதைத்து நூறு மடங்கு பலன் கொடுத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) எம்மோடு வாழும் ஆண்டவரே! எமது நாட்டுத் தலைவர்களை ஆசிர்வதிக்க வேண்டுகின்றோம். மண்ணையும் மக்களையும் பாதுகாக்க எம் தலைவர்களுக்குத் தேவையான ஞானத்தையும் முன்மதியையும் தந்து காத்து வழிநடத்தவும்மக்கள் அனைவரையும் கொடிய நோய்களினின்று பாதுகாக்கவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இறைவார்த்தை வழி எம்மோடு அன்றாடம் பேசும் ஆண்டவரே! எங்கள் குடும்பங்களைபங்கு மக்களை உம் பாதம் அர்ப்பணிக்கிறோம். நாங்கள் அனைவரும் வாழ்க்கையை வளப்படுத்தும் மகிழ்ச்சியான வார்த்தைகளைப் பேசவும், புண்படுத்தக் கூடிய வார்த்தைகளைத் தவிர்த்து வாழவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா  உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 7-ஆம் ஞாயிறு (23-02-2025) (மூன்றாம் ஆண்டு) 1சாமு 26:2,7-9,12-13,22-23; 1கொரி 15:45-49; லூக் 6:27-38

திருப்பலி முன்னுரை

அன்றாடம் அனைவரையும் அன்பு செய்து, நாம் பேறுபெற்ற மக்களாக வாழ இந்த ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, பகைவருக்கு அன்பைக் கொடுக்கவும், வெறுப்போருக்கு நன்மை செய்யவும், சபிப்போருக்கு ஆசி வழங்கவும், இகழ்ந்து பேசுவோருக்காக இறைவேண்டல் செய்யவும், கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தைக் காட்டவும்எதையும் எதிர்பார்க்காமல் கடன் கொடுக்கவும், இரக்கத்தோடு வாழவும், மன்னிப்பு கேட்க முந்திக்கொள்ளவும், எவரையும் தீர்ப்பிடாமல் இருக்கவும் நமக்கு அழைப்புவிடுக்கிறார். இந்த மதிப்பீடுகளின்படி வாழ்ந்தாலே நாம் வாழும் இடம் சொர்க்கமாகிவிடும். இந்த வாழ்க்கை இறைவன் கொடுத்த மிகப்பெரிய கொடை! நாளை என்பது நமது கரங்களில் இல்லை. அனைவரோடும் நல்லுறவுடன் வாழ்வோம். ஒவ்வொரு நாளும் அடுத்திருப்போருக்கு நன்மை செய்வதில் கவனமாய் இருப்போம். இயேசுவின் அன்பை அனுதினமும் சுவைத்து, அதை அனைவருக்கும் கொடுக்கும் செயல்வீரர்களாக மாறுவோம். கடவுளிடமிருந்து அனைத்தையும் இலவசமாகப் பெற்றுக்கொண்ட நாம், உடன் வாழும் சகோதர- சகோதரிகளுக்கு நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்து வாழ்வோம். நாம் எதை விதைக்கிறோமோ அதை மட்டுமே அறுவடை செய்வோம். நற்செயல்களை விதைத்து நூறு மடங்கு பலன் கொடுத்து வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம் முன்னுரை

தனக்கு இன்னாது செய்த சவுலை வெறுக்காமல், அவரின் உயிரை விட்டுவைக்கின்றார் தாவீது. தன் கையில் சவுலின் உயிர் கிடைத்தும், தனக்கு வாய்ப்புகள் கிடைத்தும், சவுலுக்குத் தீங்கு செய்ய முற்படவில்லை. ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர்கள் அவருக்குரியவர்கள். அவர்கள் பணிவாழ்வில் துணையாய் இருப்பது நமது கடமை. இறைவனின் பணிக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்களை இறைவனே காப்பார் என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஒருவர் தம்மை ஆதாமின் இயல்போடு இணைத்துக்கொண்டால் அவரால் வேறு ஒன்றும் செய்ய முடியாமல், மண்ணைச் சார்ந்த இயல்பைக் கொண்டவராக இறந்துவிடுவார். ஆதலால், கிறிஸ்துவின் இயல்பில் வாழும்போது, பேறுபெற்ற மக்களாக ஆசிர்வதிக்கப்படுகிறார். திருமுழுக்கு வழியாகக் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்ட நாம் இறுதிவரை அவரோடு இணைந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) அன்பின் இறைவா! உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரையும் ஆசிர்வதியும். இறைப்பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்த இவர்களின் பணிவாழ்விற்கு நாங்கள் துணையாய் இருக்கவும், அவர்களின் துன்ப நேரங்களில் துணையிருக்கவும் தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) எம்மோடு வாழும் ஆண்டவரே! எங்கள் குடும்பங்களுக்கும், பங்கிற்கும்  நீர் செய்த அனைத்து வல்ல செயல்களுக்காகவும் நன்றி கூறுகின்றோம். எங்களின் சிந்தனை, சொல், செயல்களால் அடுத்திருப்போருக்கு நன்மைகளை மட்டும் செய்து, பேறுபெற்ற மக்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) எம்மை நேசிக்கும் ஆண்டவரே! இன்றைய திருப்பலியில் பங்குகொண்டுள்ள எங்கள் அனைவரையும் ஆசிர்வதியும். இறைவார்த்தையையும், மறையுரையையும் கேட்கும் நாங்கள் அவற்றின்படி வாழவும், தகுந்த தயாரிப்போடு திருப்பலியில் பங்குகொள்ளவும், ஒப்புரவு என்ற அருளடையாளத்தால் எங்கள் ஆன்மாவைத் தூய்மையாக்கி தூய மக்களாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) அன்பின் ஆண்டவரே! எமது குடும்பத்திற்கு ஆசிர்வாதமாய் நீர் கொடுத்த எமது குழந்தைகளுக்காய் நன்றி கூறுகின்றோம். அவர்களை ஒவ்வொரு நாளும் இறைநம்பிக்கையிலும் இறைஞானத்திலும் நாங்கள் வளர்க்கவும், அழைத்தல் என்ற உன்னதக் கொடையின் முக்கியத்துவத்தை அவர்கள் மனத்தில் விதைக்கவும் தேவையான வரத்தை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பிப்ரவரி 16, 2025, ஆண்டின் பொதுக்காலம் 6-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எரே 17:5-8; 1கொரி 15:12,16-20; லூக் 6:17,20-26

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம்  ஆறாம் ஞாயிறு, பேறுபெற்ற மக்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசுபேறுபெற்ற மக்கள் யார்?’ என்பதையும், ‘சாபத்துக்குரிய மக்கள் யார்?’ என்பதையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். நாம் அனைவரும் மகிழ்வுடன் வாழ விரும்புகிறோம்; இறைவனும் நாம் மகிழ்வுடன் வாழ்வதையே விரும்புகிறார். எளிமை, பசி, வருத்தம், கண்ணீர், வெறுப்பு ஆகியவற்றால் வாடும் மக்களைப் பார்த்துநீங்கள் பேறுபெற்றவர்கள்என்கிறார். காரணம் ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், பசியால் வாடுவோர், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மனிதர்களை அல்ல; மாறாக, கடவுளை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். இறைவன் மட்டுமே அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். இறைவன்மீது அவர்கள் கொண்ட நம்பிக்கைதான் அவர்களை அன்றாடம் வாழ வைக்கிறது. பணம், பதவி, பட்டம், பகட்டு, வீண்பெருமை, ஆடம்பரம், சொத்து சேர்த்தல், மற்றவர்களின் துன்பத்தில் மகிழ்ச்சி காணுதல், மற்றவர்களை ஏளனமாகப் பேசுதல், பணத்தை வைத்து மனிதர்களை எடைபோடுதல், ஆடை ஆபரணங்களைப் பார்த்து மரியாதை கொடுத்தல்பகிர்ந்து கொள்ளாமையார் எப்படிப் போனால் நமக்கென்ன? என்று வாழும் மந்த உள்ளம் போன்ற குணங்களைக் கொண்டோர் பேறுபெற்ற மக்களாக வாழும் தகுதியை இழந்துவிட்டனர் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. நம் மனம் கோவிலானால் அது நமக்கு நல்லது; நம் குணம் கோவிலானால் அது அனைவருக்கும் நல்லது. நமது மனத்தையும், குணத்தையும் பலருக்கு மன அமைதி கொடுக்கும் கோவிலாக மாற்றுவோம். நாமும் பேறுபெற்றவர்களாக, இறைவனின் ஆசி பெற்ற மக்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நம்பிக்கை என்ற சொல் மட்டுமே மனிதனின் வாழ்வை நகர்த்திக்கொண்டு இருக்கிறது. சிலர் மனிதர்கள் மீது அளவுகடந்த நம்பிக்கை வைக்கிறார்கள். ஏமாற்றம் அடையும்போது மிகுந்த வருத்தம் அடைந்து வாழ்வையே இழக்கிறார்கள். இமைப்பொழுதும் நம்மை விட்டு நீங்காமல் காத்து வரும் இறைவன் மீது நம்பிக்கை வைக்கும்போது, நாம் ஏமாற்றம் அடைய மாட்டோம்ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். ஆண்டவரே அவர்களது நம்பிக்கை என்று ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் கொரிந்து நகர மக்களை அழிவுக்குரிய உடலின்மேல் நம்பிக்கை வைக்காமல், கிறிஸ்துவின் உயிர்ப்பின்மீது நம்பிக்கை கொண்டு வாழ அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப் பெற்ற நாமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் அன்றாடம் வளர வேண்டும். இறந்து உயிருடன் எழுப்பப்பட்டு இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இயேசுவோடு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) எங்களோடு வாழும் ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். நீர் அவர்களுக்கு இலவசமாகக் கொடுத்த அழைத்தல் வாழ்வில் உம்மை அனுதினமும் அனுபவித்து வாழவும், இயேசுவின் மதிப்பீடுகளை விதைத்து வாழவும் தேவையான வரத்தைத் தந்து காத்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்று மொழிந்த ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் உலகச் செல்வங்களின் மீது நம்பிக்கை வைக்காமல், உண்மைச் செல்வமாகிய உம்மில் நம்பிக்கை வைத்து வாழவும், அனைத்து நிலைகளிலும் உம்மீது கொண்ட நம்பிக்கையில் தளர்ந்துவிடாமல் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) ‘உங்களைக் கைவிடமாட்டேன்என்று மொழிந்த ஆண்டவரே! இந்த யூபிலி ஆண்டில் எங்களிடம் உள்ள அன்பு, கருணை, இரக்கம், உடனிருத்தல் போன்ற பண்புகளை மற்றவர்களோடு பகிர்ந்து வாழவும், இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும் இறைவனின் சாயல் என்பதை உணர்ந்து, துன்பப்படும் அனைவருக்கும் துணை நிற்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) அன்பின் ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்களை ஆசிர்வதியும். எம் தலைவர்கள் தன்னலம் மறந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும்மக்கள் என்ற சொத்தைப் பேணிக்காக்கவும், நாட்டில் வன்முறை ஒழிந்து மக்கள் அனைவரும் மகிழ்வோடு வாழவும், விவசாயமும், விவசாய மக்களின் வாழ்வும்  செழிக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பிப்ரவரி 9, 2025, ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 6:1-8; 1கொரி 15:1-11; லூக் 5:1-11

திருப்பலி முன்னுரை

நம்பிக்கையோடு ஆண்டவரின் கரம் பற்றி வாழ  ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் ஆண்டவருக்குள் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் சீமோன் பேதுரு இயேசுவிடம்ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறோம்என்கிறார். அப்படியே செய்து பெருந்திரளான மீன்களைப் பிடிக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் வரும் துன்பங்கள், துயரங்கள், நோய்கள், கடன் தொல்லைகள், புரிந்துகொள்ளாத நிலைகள் போன்ற நேரங்களில் நாம் தனியாக இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்று பயணிப்போம்; அப்போது  நம்முடைய வாழ்க்கையிலும் ஏராளமான அற்புதங்களைக் காண்போம். அன்றாடம் அளவற்ற நன்மைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம். மனநிறைவோடு ஆண்டவருக்கு நன்றி சொல்வோம்சீமோன் பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய் விடும்என்கிறார். சீமோன் பேதுரு அறிக்கையிட்டது போல நமது இயலாமையை நினைத்துஆண்டவரின் பாதத்தில் அறிக்கையிட்டுச் சரணடைவோம். நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பதையெல்லாம் விடுத்து அனைத்தையும் நல்லதெனக் காண்போம்.   உலகச் செல்வங்களைவிட உன்னதச் செல்வமாகிய இயேசுவைச் சிக்கெனப் பிடித்துக்கொள்வோம். அளவில்லாத  அருள்வரங்களைக் கொடுக்க நமக்காகக் காத்துக்கொண்டிருக்கும் இறைவனிடம் நம்மையும், நம் பங்கிலுள்ள குடும்பங்களையும் ஒப்புக்கொடுத்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

எலியா தன்னுடைய குறையை உணர்கின்றார். ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்படுகின்றார். தன்னை முழுமையாக அர்ப்பணிக்கின்றார். ‘இதோ என்னை அனுப்பும்என்று சரணடைகின்றார். அழைப்பு என்பது குருக்கள், துறவியருக்கு மட்டுமல்ல; மாறாக, ஆண்டவரின் பிள்ளைகளாகிய நம் அனைவருக்குமே உரியதுஅழைப்பின், அர்ப்பணிப்பின் மகத்துவத்தைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

தூய பவுல், ‘நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன்என்கிறார். இந்த மனநிலை நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். நம்முடைய அறிவால், ஆற்றலால் அல்ல; மாறாக, இறைவன் கொடுத்த அருளால்தான் வாழ்கிறோம். அவரின் அருளில் நிலைத்து, திளைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்ல ஆயனே ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரையும் ஆசிர்வதியும். உம் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட இவர்கள் ஒவ்வொரு நாளும் உம்மீது கொண்ட நம்பிக்கையில் வளரவும், அழைத்தலின் மகத்துவம் அறிந்து காலத்தின் தேவைக்கேற்ப கருத்தாய் பணிபுரிய தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்களை ஆசிர்வதியும். ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து, மக்கள் நலனைக் கண்முன் கொண்டு வாழவும், போர், வறுமை, பஞ்சம் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்களோடு பயணிக்கும் ஆண்டவரே! ஒவ்வொரு நாளும் நாங்கள் உம்மீது கொண்ட நம்பிக்கையில் வளரவும், அன்பும், மன்னிப்பும், மனிதநேயமும் கொண்ட வார்த்தைகளைப் பேசவும், எம் வாழ்வுக்கு ஒளியாக இருக்கும் இறைவார்த்தையைப் படித்து, சிந்தித்து அதனை வாழ்வாக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அளவின்றி எம்மை அன்பு செய்யும் ஆண்டவரே! நீர் கொடுத்த இந்த வாழ்க்கைக்காக நன்றிகூர்கின்றோம். ஆலயத்தில் மட்டும் உம்மைத் தேடாமல் அடுத்தவரிலும் உம் முகம் கண்டு மகிழவும், ‘நான், ‘எனது, ‘எனக்குஎன்பதிலிருந்து விடுபடவும், இருப்பதில் நிறைவு காணவும் தேவையான வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.