news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 14- ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (06-07-2025) எசா 66:10-14; கலா 6:14-18; லூக் 10:1-12, 17-20

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறை இன்று சிறப்பிக்கின்றோம். இன்றைய நற்செய்தியில் இயேசு தம்முடைய சீடர்களிடம், “நீங்கள் எந்த வீட்டிற்குள் சென்றாலும்இந்த வீட்டுக்குள் அமைதி உண்டாகுகஎன முதலில் கூறுங்கள்என்கிறார். “இறைவா, எங்களை நீர் உமக்காகப் படைத்திருக்கின்றீர். நாங்கள் உம்மை அடையும் வரை எங்களிலே நிம்மதி கிடையாது, அமைதி கிடையாதுஎன்கிறார் புனித அகுஸ்தினார். இறைவனோடு இணைந்திருந்தால் மட்டுமே அமைதியை அனுபவிக்க முடியும்; மற்றவர்களுக்கும் கொடுக்க முடியும். வாழ்க்கையில் அமைதி இல்லாமல் வாடும்போதும், துன்பத்திற்கு மேல் துன்பம் வரும்போதும், கவலைக்குமேல் கவலை வரும்போதும் ஆண்டவரிடம் தஞ்சம் புகுவோம். அவர் நமக்குக் கேடயமாக, மீட்பாக இருந்து நம்மை அமைதியின் பாதையில் வழிநடத்துவார். ஆண்டவரில் அமைதியைச் சுவைத்து அதை எடுத்துச்செல்வோம். பணத்தையோ, அதிகாரத்தையோ, பதவியையோ கொண்டு அமைதியை வாங்க முடியாது. ஆண்டவரிடம் நம்மையே கொடுக்கும்போதுதான் அமைதியைப் பெற்றுக்கொள்ள முடியும். இயேசுவின் சீடர்கள் தங்களையே இயேசுவிடம் ஒப்படைத்தார்கள், இயேசுவிடம் சுவைத்த அமைதியை அவர்கள் சென்ற இடமெல்லாம் கொடுத்தார்கள். நாமும் ஆண்டவர் வழங்கும் அமைதியை அனுபவித்துஅனைவருக்கும் கொடுத்து உயிருள்ள சாட்சிகளாய் சீடத்துவ வாழ்வில் சிறந்து  வாழ வரம்வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம் முன்னுரை

நமது கடவுள், அவருடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதையே விரும்புகின்றார். நலமும் வளமும் அன்றாடம் கொடுத்து நம்மை மகிழ்ச்சியின் பாதையில் வழிநடத்தி வருகின்றார். நன்மைகளாலும் நலன்களாலும் நிறைத்து, நிறைவோடு வாழவைக்கும் இறைவனில் மகிழ்ந்திருக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நம்முடையதுஎன நாம் நினைத்துக்கொண்டிருக்கும் அறிவு, திறமை, ஆற்றல், வாழ்க்கை, குடும்பம், சொத்து, சுகம் இவற்றில் நாம் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால்சிலுவையைச் சுமந்து நமக்குப் புதிய வாழ்வைக் கொடுத்த இயேசுவின் பிள்ளைகள் நாம் என்பதில்தான் பெருமை கொள்ள வேண்டும். நமக்கு வாழ்வு கொடுத்த சிலுவையின்மீது நம் கண்களைப் பதிய வைத்து, துன்பங்களைத் துணிவோடு ஏற்று வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அமைதியின் தெய்வமே எம் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உம்மில் நிலைத்து, உம் அன்பைச் சுவைத்து வாழவும், அவர்களின் பணிவாழ்வில் நாங்கள் துணைநிற்கவும் தேவையான அருளைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. ‘நான் உங்களோடு இருக்கிறேன்என்று மொழிந்த ஆண்டவரே! நாங்கள் உம்மில் நிலைத்திருந்து பல மடங்கு பலன் கொடுத்து வாழவும், உம்மீது கொண்ட நம்பிக்கையில் ஆழம்பெறவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மோடு வாழும் ஆண்டவரே! ஒப்பற்ற செல்வமாகிய உம்மை அனைத்திற்கும் மேலாகத் தேடவும், மற்றவர்களில் வாழும் கடவுளைக் கண்டு கொள்ளவும் தேவையான ஞானத்தை எமக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் மறைமாவட்டத்திலும் பங்கிலும் உள்ள குழந்தைகள், கடவுளைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டத் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
புனிதர்கள் பேதுரு, பவுல்: திருத்தூதர்கள் (மூன்றாம் ஆண்டு) (29-06-2025) திப 12:1-11; 2திமொ 4:6-8, 17-18; மத் 16:13-19

திருப்பலி முன்னுரை

அகில உலகக் கத்தோலிக்கத் திரு அவையின் இருபெரும் தூண்களாகிய புனித பேதுரு, புனித பவுல் இவர்களின் விழாவினை இன்று நாம் கொண்டாடுகிறோம். மீனவரான பேதுரு இயேசுவால் நேரடியாக அழைக்கப்படுகிறார்; யூதச்சட்டங்களைக் கற்றுத் தேர்ந்தவரான பவுல், கிறித்தவர்களைச் சிறைப்பிடிக்க தமஸ்கு நகர் செல்லும் வழியில் உயிர்த்த இயேசுவால் தடுத்தாட்கொள்ளப்படுகிறார். பேதுரு யூத மக்களுக்கு மத்தியில் கிறிஸ்துவைப் போதிக்கிறார். பவுலடியாரோ பிற இனத்தாருக்கும் கிறிஸ்துவைக் கொண்டு செல்கின்றார். பேதுரு இயேசுவைநீரே மெசியா, வாழும் கடவுளின் மகன்என அறிக்கையிட்டார். பவுலடியார், “வாழ்வது நானல்ல, கிறஸ்துவே என்னில் வாழ்கின்றார்என்று முழக்கமிட்டார். பேதுரு இயேசு கிறிஸ்துவுக்காகச் சிலுவையில் தலைகீழாக அறையப்பட்டு இரத்தம் சிந்தி உயிர்விடுகிறார். பவுலடியார் இயேசுவுக்காகத் தலை வெட்டப்பட்டு இரத்தம் சிந்தி உயிர்விடுகிறார். இருவரும் இரத்தம் சிந்தித் திரு அவையை வளர்த்தவர்கள். இந்நாளில் நாம் அனைவரும் இயேசுவின்மீது ஆழ்ந்த நம்பிக்கைகொண்டு வாழவும், இயேசுவை நம் வாழ்க்கையால் அறிவிக்கவும், இயேசுவுக்காக உயிரையும் கொடுக்கும் சீடத்துவ வாழ்வில் சிறக்கவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இயேசு தம் பணிக்காகத் தேர்ந்துகொண்ட மக்களை ஒருநாளும் கைவிடமாட்டார். அவர்களுக்கு அரணாகவும் கோட்டையாகவும் இருந்து காத்திடுவார். தம் தூதர்களைக் கொண்டு அவர்களைத் தாங்கிடுவார் என்பதை எடுத்துக்கூறும் இன்றைய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் நாம் எவ்வாறு வாழவேண்டும்? எதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்? என்பதையும், ஆண்டவருக்காக வாழும்போது அனைத்து வகையான அச்சத்தினின்றும் அவரே நம்மைக் காப்பார்  என்பதையும் தெளிவாக உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! திரு அவையின் மாபெரும் தூண்களாகிய புனித பேதுரு, புனித பவுல் இவர்களின் பெருவிழாவைக் கொண்டாடும் இந்நாளில், எம் திரு அவைத் தலைவர்களுக்காகச் செபிக்கிறோம். இவர்கள் நற்செய்தியைத் தொய்வின்றி அறிவிக்கவும், நம்பிக்கையில் நிலைத்துச் சிறந்த சீடர்களாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. இரக்கத்தின் ஆண்டவரே! இத்திருப்பலியில் கலந்துகொண்டுள்ள எங்கள் அனைவரையும் ஆசிர்வதியும். நற்செய்தி அறிவிப்பதில் புனிதர்கள் பேதுரு, பவுலைப் போன்று துணிவுள்ளவர்களாக வாழத் தேவையான மனவலிமையை எங்களுக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.  நம்பிக்கையின் ஆண்டவரே! நாங்கள் அனைவரும் திருப்பலி, நற்கருணை ஆராதனை, அன்பியக் கூட்டங்கள் அனைத்திலும் தவறாது கலந்துகொண்டு, உடன் வாழும் மக்களுக்கு உயிருள்ள இயேசுவை அறிவிக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் ஆண்டவரே! இன்றைய புனிதர்களின் நாமத்தைத் தாங்கிய அன்பர்களையும் ஆலயங்களையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அனைவரையும் ஆசிர்வதித்து, இயேசுவின்மீது நம்பிக்கையில் வளரத் தேவையான வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
கிறிஸ்துவின் தூய்மைமிகு திருவுடல், திருஇரத்தப் பெருவிழா (22-06-2025) தொநூ 14:18-20; 1கொரி 11:23-26; லூக் 9:11-17

திருப்பலி முன்னுரை

கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கு மட்டுமே உரிய உன்னதக் கொடையான நற்கருணையை நினைவுகூர்ந்து தாயாம் திரு அவை பெருமகிழ்வோடு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தப் பெருவிழாவாகக் கொண்டாட நமக்கு அழைப்புவிடுக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பேரன்பையும் தியாகத்தையும் இவ்விழா நமக்கு நினைவூட்டுகிறது. நற்கருணை கத்தோலிக்கக் கிறித்தவ வாழ்வினுடைய மையமும் ஊற்றுமாகத் திகழ்கிறது. தெய்வீக நிலையை அடையும் உன்னதப் பாக்கியம் நற்கருணையில்தான் உள்ளது. நமது வாழ்க்கைக்குத் தேவையான வல்லமையை, ஆற்றலை, நம்பிக்கையை, சுகத்தை, மனவலிமையை நற்கருணையில்தான் பெறுகிறோம். அன்பின், பகிர்வின், ஒற்றுமையின், உறவின் அடையாளமான நற்கருணையை உட்கொள்ளும் நாம், நற்கருணையின் பிரசன்னத்தை வாழ்க்கையில் வெளிப்படுத்த வேண்டும். நமது குடும்பங்களில் ஆசிர்வாதங்களும் அருள்நலன்களும் நிலைக்க வேண்டுமானால் நற்கருணையை நமது வாழ்வின் மையமாக்க வேண்டும். நற்கருணைப் பேழையில் ஆலயங்களில் தங்கியிருக்கும் ஆண்டவருக்குத் தக்க ஆராதனையும் புகழ்ச்சியும் செலுத்தப்படவேண்டும்எனவே, நமது வாழ்விற்கு அடித்தளமான நற்கருணையின் முக்கியத்துவத்தையும் மகத்துவத்தையும் அறிந்து, தூய்மையான உள்ளத்தோடு தூயவரை உட்கொண்டு அவரது அன்பில் நிலைத்து வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவர் நல்லவர்; நாம் வாழும் இவ்வுலகில் அன்றாடம் பலவிதமான நன்மைகளைச் செய்து அற்புதமாக நம்மை வழிநடத்தி வருகின்றார். அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழும்போது எந்தக் குறையும் இராது. இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம்  ‘விண்ணையும் மண்ணையும் படைத்த ஆண்டவரைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம்என்று சலேம் அரசர் மெல்கிசெதேக்கிடம் கூறுகின்றார். அழிந்துபோகும் செல்வத்தை நாடாமல், அழியாத செல்வமாகிய ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கும்  முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் மீட்கப்பட வேண்டும் என்பதற்காக இயேசு தம்மை உடைத்துப் பலியாகக் கொடுத்து நிலைவாழ்வைப் பெற்றுத்தந்தார்அன்றாடம் நம்முடன் இருக்கும்வண்ணம் அப்ப, இரச வடிவில்  நம் உள்ளத்தில் வாழ்கின்றார். நமது மீட்பின் அடையாளமான நற்கருணையை உட்கொள்ளும்முன் நமது உள்ளத்தைத் தூய்மையாக்கவேண்டும். நாம் வாழ்வுபெற விலையாகக் கொடுக்கப்பட்ட இயேசுவின் உடலையும் இரத்தத்தையும் போற்றி வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது பணிக்காக நீர் தேர்ந்துகொண்ட எமது திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். தங்களின் பணிவாழ்வால் உம்மைப் பறைசாற்றிடவும், நற்கருணை ஆண்டவரின் அன்பைச் சுவைத்து, ஆண்டவரில் நிலைத்துப் பலன் கொடுத்திடவும்  வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பின் இறைவா! ‘இது என் உடல், இது என் இரத்தம்என உம்மையே நற்கருணையின் வடிவில் எமக்கு வழங்கி வாழவைத்துக்கொண்டிருக்கும் உமது அன்பிற்காக நன்றி கூறுகின்றோம். நற்கருணையின் முக்கியத்துவத்தை அறிந்து மாண்போடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்பின் ஆண்டவரே! திருவுடல், திரு இரத்தப் பெருவிழா திருப்பலியில் கலந்துகொண்டுள்ள நாங்கள் அனைவரும் அன்பு, தியாகம், கருணை, இரக்கம் போன்ற பண்புகளில் வளரவும், நற்கருணையை அடிக்கடிச் சந்தித்து ஆன்ம பலம் பெறவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழும் கடவுளே! இளையோர் அனைவரும் உலகப்போக்கின்படி வாழாமல், அன்றாடம் திருப்பலியில் கலந்துகொண்டு, தகுந்த தயாரிப்போடு நற்கருணையை உட்கொண்டு, கடவுள்மீது ஆழமான நம்பிக்கையோடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
மூவொரு கடவுள் பெருவிழா (15-06-2025) (மூன்றாம் ஆண்டு) நீமொ 8:22-31; உரோ 5:1-5; யோவா 16:12-15

திருப்பலி முன்னுரை

திரு அவை இன்றைய நாளில் மூவொரு கடவுளின் பெருவிழாவைக் கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கிறது. மூவொரு கடவுளின் பிரசன்னம் நமது வாழ்விற்கு உந்துசக்தியாக இருக்கிறது. மூவொரு கடவுளின் தன்மையே மனிதருக்குள் உறவுகளை ஏற்படுத்துகிறது. மூவொரு கடவுளின் ஒன்றிப்பு மனித இனத்தை வழிநடத்துவதற்கான அடிப்படை அச்சாரமாகத் திகழ்கிறது. அன்றாடம்தந்தை, மகன்தூய ஆவியார்என்று உச்சரிக்கும்போதுதந்தைஎன்று கூறி நெற்றியில் கைவைக்கிறோம். இது தந்தை கடவுள் உலகத்தைப் படைத்தவர் என்பதையும், மகன் என்று சொல்லி நெஞ்சில் கை வைக்கிறோம்; இது இயேசு நம்மீது கொண்ட அன்பினால் நமக்காக இரத்தம் சிந்தி மீட்டார் என்பதையும், தூய ஆவியார் என்று கூறும்போது தோள்களிலும் கைவைக்கிறோம். இது தூய ஆவியார் நமக்கு ஆற்றலைத் தருபவராக இருக்கிறார் என்பதை உணர்த்துவதாக உள்ளதுநாம் எந்த ஒரு வழிபாட்டு நிகழ்வையும் மூவொரு கடவுளின் துணையோடு துவங்குகிறோம். மூவொரு கடவுளின் துணையோடு நிறைவு செய்கின்றோம்ஆள்தன்மையில் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே தெய்வத்தன்மை உடையதுதான் மூவொரு கடவுளின் கொள்கை. ஒரே கடவுள் மூன்று ஆள்கள் என்ற நம்பிக்கையில் நாளும் வாழவும் வளரவும் வரம் வேண்டுவோம். பேரறிவான தந்தையும், பேரன்பான இயேசுவும், பேராற்றலான தூய ஆவியும் தொடர்ந்து நம்மை வழிநடத்த செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

படைப்புகள் அனைத்தும் இறைவனின் கலை நயம். இறைவனின் அளப்பரிய நன்மைத்தனத்தை வெளிப்படுத்தும் சிறந்த கருவி. எதனையும் எவற்றோடும் ஒப்பிட முடியாத அளவுக்குத் தனித்தன்மையோடு ஒவ்வொன்றும் படைக்கப்பட்டுள்ளன. படைப்புகள் அனைத்தும் கடவுளின் சாயலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மூவொரு கடவுளின் செயல்பாடு, படைப்புகள் ஒவ்வொன்றிலும் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசு கிறிஸ்துவின் வழியாக வாழ்வைப் பெற்றுள்ள நாம், வாழ்க்கையில் வருகின்ற துன்பங்கள், இக்கட்டுகள், இடையூறுகள், சோதனைகள் அனைத்திலும் இயேசு விடுதலை தருவார் என்ற நம்பிக்கையில் வாழ வேண்டும். இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம் அவருக்காக, அவரோடு வாழ்வதில் பெருமகிழ்ச்சி அடைய வேண்டும். வாழ்க்கையில் ஏற்படுகின்ற அனைத்திலும் ஆண்டவர் இயேசுவின் உடனிருப்பு நம்மோடு இருக்கிறது என்ற எதிர்நோக்கில் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. மூவொரு இறைவா! இயேசுவின் மறையுடலாம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் உம்மில் ஒருமைப்பாட்டுடன் வாழ்ந்து, மக்களை இறையாட்சியின் பாதையில் வழிநடத்திச் செல்வதற்குத் தேவையான அருளைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. மூவொரு இறைவா! நீவிர் மூன்று ஆள்களாக இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் இணைந்து செயலாற்றுவதைப்போல, உம் திருமுன் கூடிவந்துள்ள நாங்கள் வேற்றுமைகளைக் களைந்து, ஒற்றுமையோடு வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. மூவொரு இறைவா! உம் திருமகன் இயேசு கிறிஸ்து வழியாக இறைவனோடு நல்லுறவு கொண்டுள்ள நாங்கள் துன்பங்கள், சோதனைகள் மத்தியிலும் உமக்குச் சான்று பகர்ந்திட தேவையான வல்லமையை எமக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. மூவொரு இறைவா! தந்தையாம் இறைவனின் இறையருளும், மகனாம் இயேசுவின் அன்பும், தூய ஆவியாரின் வரங்களும் கனிகளும் நிரம்பப்பெற்று நாங்கள் வாழவும், எங்கள் குழந்தைகளையும் இறைநம்பிக்கையில் வளர்த்தெடுக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
தூய ஆவியார் பெருவிழா (மூன்றாம் ஆண்டு) (08-06-2025) திப 2:1-11; உரோ 8:8-17; யோவா 14:15-16;23-26

திருப்பலி முன்னுரை:

இன்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இவ்விழா ஆவியானவரின் வழிநடத்துதலில் நாளும் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறதுநம்மீது கொண்ட அளவற்ற அன்பால் கிறிஸ்து தம்மைத் தாழ்த்தி, இவ்வுலகிற்கு வந்து தம் இன்னுயிரை நமக்காக அளித்தார். அதனைத் தொடர்ந்து அவரது அன்பின் நீட்சியாக நமக்குத் துணையாளராக இருக்க தூய ஆவியாரை நமக்கு அருளினார். திரு அவையில் தூய ஆவியானவர் புதுப்பிப்பவராகவும் உயிர் அளிப்பவராகவும் திடப்படுத்துபவராகவும் உண்மையின் குரலாகவும் செயல்படுகின்றார். தூய ஆவியார் அநீதிகளை எதிர்ப்பவர்; உள்ளத்திற்கு அமைதியைக் கொடுப்பவர்; நல்லவற்றைச் செய்வதற்கு நம்மைத் தூண்டுபவர். அனைவருக்கும் அனைத்தையும் கொடுப்பவர். இத்தகு சிறப்புமிக்க தூய ஆவியாரை நாம் அருளடையாளங்களின் வழியாகப் பெற்றிருக்கின்றோம். இன்றைய இறைவாக்கினர்களாகிய நாமும் தூய ஆவியைப் பெற்று இறைப்பணியையும் மக்கள் பணியையும் சிறப்பாகச் செய்திட வரம் கேட்போம். தூய ஆவியாரின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, பொறுமை, பரிவு, நற்பண்பு, நம்பிக்கை, சாந்தம், நன்னெறி போன்றவை நம்மையும், நம் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் நிரப்பிட செபிப்போம். தூய ஆவியார் நமது உள்ளத்திற்கும் உறவுகளுக்கும் அமைதியை நல்கிட இணைந்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

தூய ஆவியைப் பெற்றுக்கொண்ட சீடர்கள் வியக்கத்தக்க செயல்களைச் செய்கிறார்கள். அனைத்து மொழிகளையும் பேசும் திறனையும், புரிந்துகொள்ளும் ஆற்றலையும் பெற்றுக்கொள்கிறார்கள். ஆவியின் ஏவுதலால் அனைத்து மக்களுக்கும் இறைவனின் அருஞ்செயல்களை எடுத்துரைக்கிறார்கள். தூய ஆவியைப் பெற்றுள்ள நம்மையும் துணிவுடன் இயேசுவை அறிவிக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

தூய ஆவியார் ஊனியல்பின் இச்சைகளுக்கு ஏற்ப வாழாமல், கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ நமக்குக் கற்றுத்தருகின்றார்அச்சம் நீங்கி ஆண்டவரின் பணியைச் செய்வதற்கு நமக்கு ஊக்கம் தருகின்றார். நம் உள்ளத்து உணர்வுகளையும் சிந்தனைகளையும் அறிந்து நம்மைச் சரியான வழியில் நடத்துகின்றார். எனவே, ஒவ்வொரு நிமிடமும் கடவுளின் ஆவியால் இயக்கப்பட்டு அவருக்கு உகந்த பிள்ளைகளாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. தூய ஆவியை எமக்கு வழங்கிய ஆண்டவரே! தூய ஆவியின் துணையால் எம் திரு அவைக்குக் கிடைத்த திருத்தந்தைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். தொலைநோக்குப் பார்வையுடன் திரு அவையை வழிநடத்தத் தேவையான ஞானத்தையும் நல்ல சுகத்தையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. தூய ஆவியாரின் வழியாக உடனிருப்பை எமக்கு வழங்கும் ஆண்டவரே! நாங்கள் அனைவரும் துடிப்போடு நற்செய்தியை அறிவிக்கவும், தூய ஆவியாரின் குரலாகிய எமது மனச்சான்றிற்குச் செவிகொடுத்து வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. தூய ஆவியின் வழியாக எமக்கு நம்பிக்கையை வழங்கும் ஆண்டவரே! எம் பங்கிலுள்ள இளைஞர்கள் ஆவியின் வரங்களையும் கொடைகளையும் பெற்று விவேகத்துடன் வாழவும், உலகப் போக்கினை விடுத்து ஆவியால் ஆட்கொள்ளப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் ஊற்றே எம் ஆண்டவரே! போரினால் அமைதி இழந்து தவிக்கும்  அனைத்து நாடுகளையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். போர், பகை இவையெல்லாம் அழிந்து நாடுகள் அமைதியில் திளைத்திட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஜூன் 01, 2025, ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழா (மூன்றாம் ஆண்டு) திப 1:1-11; எபி 9:24-28;10:19-23; லூக் 24:46-53

திருப்பலி முன்னுரை

இன்று ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இன்றைய விழா நற்செய்தியைப் பறைசாற்றவும், கடவுளின் சாட்சிகளாய் பயணிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு நலம் கொடுக்கும் நண்பராகவும், துன்பம் போக்கும் தூயவராகவும், ஏழைகளின் தஞ்சமாகவும், அனைத்து மக்களுக்கும் வாழ்வு கொடுப்பவராகவும் விளங்கினார். தாம் முன்னுரைத்தவாறு உயிர்த்தெழுந்து நாற்பதாம் நாள் விண்ணேற்றம் அடைந்தார். இயேசுவின் விண்ணேற்றம் நாம் மண்ணகச் செல்வங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிட அன்பு, மன்னிப்பு, நம்பிக்கை, உடனிருப்பு, விட்டுக் கொடுத்தல், மென்மையான வார்த்தைகளைப் பேசுதல் போன்ற விண்ணகச் செல்வங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வாழ அழைப்பு விடுக்கின்றது. நாமே நடமாடும்  நற்செய்தியாக மாறி இயேசுவை வாழ்க்கையால் அறிவிப்போம். எத்தகைய நிலையிலும் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்து, அனைத்து மாந்தரையும் இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தைச் சுவைக்கச் செய்வோம். விண்ணகப் பயணிகளாகிய நாம் சந்திக்கின்ற துன்ப துயரங்கள், இடையூறுகள், சவால்கள் போன்றவற்றில் தேங்கிவிடாமல், இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையால் அனைத்தையும் முறியடித்து  இயேசுவோடு, இயேசுவில் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

தம்மோடு இருக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு சீடர்களை அழைத்தார். சீடர்களுக்குத் தமது வாழ்க்கையால் போதித்தார். உயிர்த்தபின் பலமுறை சீடர்களுக்குத் தோன்றித் திடமளித்தார். சீடர்களைப் பக்குவமாய் வழிநடத்திப் பலன் கொடுக்கச் செய்த இறைவன் நம்மையும் வழிநடத்துவார் என்ற நம்பிக்கையோடு முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

மனச்சாட்சியே மனிதர்களின் உண்மையான நீதிமன்றம். மனச்சான்று தூய ஆவி வாழும் ஆலயம். உள்ளம் என்னும் ஆலயத்தைத் தூய்மையாக வைத்திருக்கும்போது ஆண்டவரை எளிதில் அணுகிச்செல்ல முடியும். ‘நான் உங்களோடு இருப்பேன்என்று வாக்களித்த இறைவன் நம்பிக்கைக்கு உரியவர். வாழ்நாளெல்லாம் இறைநம்பிக்கையில் வேரூன்றி வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் என் சீடராக்குங்கள்என்று மொழிந்த ஆண்டவரே! உமது சீடத்துவப் பணிக்காக நீர் அழைத்த எம் திரு அவைத் தலைவர்கள் உம்மில் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழத் தேவையான ஆற்றலைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

2. ‘உலகம் முடியும்வரை உங்களோடு இருப்பேன்என்று மொழிந்த ஆண்டவரே! நாங்கள் அனைவரும் எப்பொழுதும் உம்மை விட்டு நீங்காது, உம்மில் உம்மோடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நீங்கள் என் சாட்சிகள்என்று மொழிந்த ஆண்டவரே! உம்முடைய பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் அன்பின், மகிழ்ச்சியின், உறவின், சமத்துவத்தின் திருப்பயணிகளாய் வாழ்ந்து, இறுதிவரை உறுதியுடன் உமக்குச் சான்று பகரும் வாழ்க்கை வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு வாழும் ஆண்டவரே! எம் குழந்தைகள் நல்ல முறையில் படித்து, கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றியைக் கண்டிட தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.