news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 26 -ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (28-09-2025) ஆமோ 6:1,3-7; 1திமொ 6:11-16; லூக் 16:19-31

திருப்பலி முன்னுரை

இன்றைய இறைவழிபாடு, உடன் வாழும் மனிதரில் இறைவனின் சாயலைக் கண்டுகொள்ளவும்நம்மிடம் உள்ளதை ஏழைகளோடு பகிர்ந்து வாழவும்  நமக்கு அழைப்புவிடுக்கிறது. மனித வாழ்வில் இரு வேறுபட்ட துருவங்களைச் சித்தரிக்கும் உவமைசெல்வரும்-இலாசரும்என்ற உவமை. ஏழைகளை ஒதுக்குவது, ஓரம்கட்டுவது, கண்டுகொள்ளாமல் இருப்பது சமூகக் குற்றம் மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கே செய்யும் மாபெரும் குற்றமாகும். தாழ்ந்தோரை உயர்த்தி, செல்வச் செருக்குடையோரைச் சிதறடித்து, ஒடுக்கப்பட்டோரை ஆண்டவர் உயர்த்துவார் என்பதன் அடையாளமாக இலாசர் என்ற பெயர் கொண்ட முகவரி தரப்பட்டிருக்கிறது. கடவுள் எப்போதும்  ஏழையரின் சார்பாகவும் துன்பப்படுவோரின் குரலாகவும் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறார் லூக்கா. இன்றைய நற்செய்தியில் செல்வர், ஏழை இலாசரைக் கண்டுகொள்ளவில்லை; பசியால் இருந்த இலாசருக்கு உணவு கொடுக்கவும் இல்லை. தன் அருகில் பசியால் துன்புற்ற மனிதனில் இறைவனைக் காண மறந்துவிடுகிறார். இன்று நாம் வாழும் சமுதாயத்தில் இலட்சக்கணக்கான இலாசர்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள். செல்வத்தைச் சேர்ப்பதிலும், அதைப் பெருக்குவதிலும் பாதுகாப்பதிலும் இருப்பதை விடுத்து, உடன் வாழும் சகோதர-சகோதரிகளுக்கு உறவாய் உடனிருப்போம். அன்புக்காக, அமைதிக்காக, உறவுக்காக, உணவுக்காக, பாசத்திற்காக ஏங்கும்  ஏழை இலாசர்களைத் தேடிச்சென்று உதவி செய்வோம். அடுத்தவருக்கு உதவி செய்வதற்கு நாம் ஓர் அடி எடுத்துவைக்கும்போது, கடவுள் ஓராயிரம் அடி நம்மை நோக்கி எடுத்துவைப்பார். எல்லாமுமான இறைவனை எல்லாரிலும் கண்டு, உதவி செய்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

தம் காலத்தில் பரவியிருந்த ஆடம்பர வாழ்வையும் செல்வக் குவிப்பையும் வஞ்சிக்கப்பட்ட ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறித்துக்கொண்டு சுகபோக வாழ்க்கையில் மூழ்கியிருப்பதையும், கடவுளின் குரலாய் நின்று எதிர்த்தார் இறைவாக்கினர் ஆமோஸ். தன்னலத்தைக் கடந்து அடுத்தவரின் நலனில் அக்கறை கொண்டு வாழும்போது, ஆண்டவர் நம்மோடு இருப்பார் என்று கூறி இச்சமுதாயத்தில் இறைவனின் குரலாய் வாழ அழைக்கிறார். கவனமுடன் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் எவ்வாறு வாழவேண்டும், இறைவன் கொடுத்த இந்த அற்புதமான வாழ்க்கையில் எதைத் தேடவேண்டும், எவற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும்? எதை நோக்கி அன்றாடம் செல்ல வேண்டும்? என்பதற்கு விடையாக இரண்டாம் வாசகம் அமைகிறது. இறைவனின் பேரன்பிலிருந்து விலகிச் செல்லாமல், அனைத்திலும் அனைவரிலும் இறைவனைக் கண்டு அர்த்தமுள்ள வாழ்வு வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. காக்கும் தெய்வமே இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் இறைவார்த்தையின் வழியில் நடந்து, மக்களை இறையாட்சியின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் ஆண்டவரே! நாங்கள் ஒருவர் மற்றவருக்கு அன்பின், மகிழ்ச்சியின், உறவின், அமைதியின் தூதுவர்களாய் வாழ்ந்து, மனிதத்தில் புனிதம் காண வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘உங்களைத் திக்கற்றவர்களாய் விடமாட்டேன்என்று மொழிந்த ஆண்டவரே! குடிப்பழக்கத்தாலும் தவறான வாழ்க்கையாலும் புரிந்துகொள்ளாமையினாலும் துன்புறும் குடும்பங்களுக்குத் தேவையான அன்பை, அமைதியைக் கொடுத்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் தொடக்கமே எம் இறைவா! எம் குழந்தைகளை இறைப்பற்றும் மனிதநேயமும் மூத்தோரை மதிக்கும் உயர்ந்த பண்பும் கொண்ட குழந்தைகளாக நாங்கள் வளர்த்திடவும், திருமறை போதிக்கும் நெறிமுறைகளைக் கற்றுக்கொடுக்கவும் தேவையான ஞானத்தை எங்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 25 -ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (21-09-2025) ஆமோ 8:4-7 1திமொ 2:1-8 லூக் 16:1-13

திருப்பலி முன்னுரை

மனிதர்களைப் பயன்படுத்தி செல்வத்தைச் சம்பாதிக்கும் நிலைமை மாறி, செல்வத்தைப் பயன்படுத்தி மனிதர்களைச் சம்பாதித்து மனித மாண்போடு வாழ ஆண்டின் பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் பாதுகாப்போடும் மகிழ்ச்சியோடும் பயணம் செய்வதற்குத் திரு அவை அவ்வப்போது சில எச்சரிக்கைகளைத் தருகிறது. அவற்றில் ஒன்றுதான் செல்வத்தின் மட்டில் நாம் விழிப்பாயிருப்பதற்கான எச்சரிக்கை. நாம் வாழும் உலகமானது செல்வத்தின்மீதும் பணத்தின்மீதும் அதிகம் நம்பிக்கை வைக்கும் உலகம். ‘பணம் பத்தும் செய்யும், ‘பணத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லைஎன்ற கருத்துகளைப் பரப்பி, பணக்குவிப்பில் மக்களை ஈடுபடச் செய்யும் உலகம். பணத்தை வைத்து மனிதர்களுக்கு மரியாதை கொடுக்கும் மாய உலகம்பணத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உறவுகளுக்குக் கொடுப்பதில்லை. இன்றைய நற்செய்தியில்  இயேசுசெல்வத்தைக் கொண்டு உங்கள் நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்என்கிறார். இயேசுவின் சீடர்களாகிய நாம் அனைவரும் பொருளைவிட மனிதமே மேலானது என்று வாழ்வோம். பணத்திற்காக உறவுகளை இழக்காமல் பணத்தை இழந்தாவது மனிதம் காப்போம்கொண்டு செல்ல ஒன்றுமில்லை. அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பண்புகளை இம்மண்ணில் விதைத்துச் செல்வோம். சுயநலம் மிகுந்திருக்கும் இவ்வுலகில் ஏழைகளை நினைவுகூர்ந்து நீதியுடன் நடந்துகொள்வதே நமது கடமை. எனவே, மனிதத்தின் புனிதம் உணர்ந்து அனைவரையும் மதித்து வாழவும், உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும் வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில், ஆமோஸ் இறைவாக்கினர் வறியவர்களை வஞ்சித்த, எளியவர்களை ஏமாற்றிய பணக்காரர்களைக் கடுமையாகச் சாடுகிறார். ஏழை எளியவர்களை நசுக்கி, பணத்தைச் சம்பாதிக்கும் செயலை இறைவன் ஒருபோதும் விரும்பமாட்டார் எனக் கூறி நீதியின் உண்மையின் பாதுகாவலராக வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இருப்பதில் நிறைவுகண்டு, இல்லாதவர்களோடு தோழமை கொண்டு, உடன் வாழும் அனைவருக்கும் அமைதியைக் கொடுத்து, ஆண்டவர் கொடுத்த இந்த வாழ்வுக்காக நன்றி கூறி அமைதியோடு வாழவும், இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்த வாழ்வு வாழவும், இறைவேண்டலில் நிலைக்கவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எமது திரு அவையை வழிநடத்தும் அனைவரும் உமது வார்த்தையின்படி வாழவும், அழைத்தவர் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணிசெய்யவும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் மக்களை ஒன்றிணைப்பவர்களாகவும், அனைத்து மக்களுக்கும் வாழ்வு கொடுக்கும் சட்டங்களைக் கொண்டுவரவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! நாங்கள் அனைவரும் நீர் கொடுத்த இந்த வாழ்வுக்காய் நன்றி கூறி, உடன்வாழும் அனைவரோடும் நல் உறவுடன் வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு வாழும் ஆண்டவரே! எம் குழந்தைகள் அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் நாளும் வளரவும், கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றி காணவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 24-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (14-09-2025) (திருச்சிலுவையின் மாட்சியின் விழா) - எண் 21:4-9; பிலி 2:6-11; யோவா 3:13-17

திருப்பலி முன்னுரை

திருச்சிலுவையின் மாட்சியைப் பற்றிச் சிந்திக்கத்  திரு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது. கத்தோலிக்கக் கிறித்தவர்களின் நம்பிக்கை திருச்சிலுவையாகும். இந்தத் திருச்சிலுவையிலிருந்துதான் நமக்கு மாட்சியும் மகிமையும் கிடைக்கிறது. இந்தத் திருச்சிலுவையிலிருந்துதான் நாம் அன்பையும் அருளையும் இரக்கத்தையும் கருணையையும்  பெறுகிறோம். இந்தத் திருச்சிலுவைதான் மன்னிப்பின் மகத்துவத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. ஒரு காலத்தில் சிலுவை அவமானத்தின் சின்னமாகக் கருதப்பட்டது. கைதிகளுக்கும் கள்வர்களுக்கும் தண்டனையாய் கொடுக்கப்பட்டது. ஆனால், இயேசு என்று சிலுவையைச் சுமந்தாரோ, அன்றிலிருந்து அது வெற்றியின்  அடையாளமாய் மாறியது. சிலுவையே நமது வல் லமை, சிலுவையே நமது ஞானம், சிலுவையே நமது வாழ்வு. துன்பம், துயரம், வேதனை, சோதனை இவையில்லாமல் வாழ்க்கையே இல்லை. அனைத்து நிலைகளிலும் திருச்சிலுவையை உற்றுநோக்கும்போது நமது வாழ்விற்கு வழி கிடைக்கும். கிறித்தவர்களாகிய நமது வாழ்வின் வெற்றியே சிலுவைதான். இயேசுவின் திருச்சிலுவை மாட்சி விழாவைக் கொண்டாடும் நாம் மகத்துவமிக்க சிலுவையின்முன் மண்டியிட்டுச் செபிப்போம். திருச்சிலுவைக்குரிய மரியாதையைக் கொடுப்போம். சிலுவையைத் துன்பமாகப் பார்க்காமல் வெற்றியின் சின்னமாகப் பார்க்கவும்இயேசுவின் அன்பைச் சுவைத்து வாழவும் வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் பாதுகாப்பையும் உடனிருப்பையும் உணராத இஸ்ரயேல் மக்களுக்காக மோசே பரிந்துபேசுகின்றார். ஆண்டவர் கூறியபடி ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தி, ஆண்டவரின் வார்த்தையின் மீது நம்பிக்கை வைக்க அழைக்கின்றார்; நம்பிக்கை வாழ்வில் தொய்வின்றி வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். இயேசுவின் பெயர் வல்லமையை, வலிமையை, வாழ்வைத் தரக்கூடியது. இயேசுவையே நமது தலைவராகக் கொண்டுள்ள நாம் எதற்கு முன்பாக, யாருக்கு முன்பாக மண்டியிடுகிறோம்? எவற்றை நோக்கிச் செபிக்கிறோம்? எதன் மீது, எவற்றின்மீது நம்பிக்கை வைத்துள்ளோம்? என்பதைச் சிந்திக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது பணியை நிறைவாகச் செய்வதற்குத் தேவையான மனப் பலத்தையும் உடல்நலனையும் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. சிலுவையினால் எமக்கு வாழ்வு கொடுத்த ஆண்டவரே! திருச்சிலுவையின் மாட்சி விழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களை, சோதனைகளை உமது வல்லமையான சிலுவையின்மீது கொண்ட நம்பிக்கையால் முறியடித்து வாழ, தேவையான ஞானத்தை எமக்குத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமக்காக உயிரைக் கொடுத்து எம்மை மீட்ட ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் வாழ்வையும் வல்லமையையும் கொடுக்கக்கூடிய உமது வார்த்தையின்மீது நம்பிக்கை கொண்டு வாழவும், அவைகூறும் மதிப்பீடுகளின்படி வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. சிலுவையினால் எம்மை மீட்ட ஆண்டவரே! எம் குடும்பங்களில் தீராத நோயினால் துன்பப்படும் அனைவருக்கும் நல்ல சுகத்தைத் தந்து காத்து வழிநடத்தவும், அவர்களுக்கு உதவி செய்வதற்குத் தேவையான நல் மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 23-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (07-09-2025) சாஞா 9:13-18; பில 9-10,12-17; லூக் 14:25-33

திருப்பலி முன்னுரை

அனைத்தையும் துறப்பதில்தான் சீடத்துவ வாழ்வின் மகத்துவம் இருக்கிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க இந்த ஞாயிறு வழிபாடு நமக்கு அழைப்புவிடுக்கிறது. இறைவனை மட்டுமே பற்றிக்கொண்டு உறவில், உயிரில், உடைமையில் பற்றற்று இறைவனை இறுகப் பற்றிக்கொள்வதே சீடத்துவம். உலகச் செல்வங்களான பொன், பொருள், பணம், பதவி, பட்டம் ஆகியவற்றில் ஆசை கொள்ளாமல், ஆன்மிகச் செல்வங்களாகிய அன்பு, அமைதி, நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம் போன்ற நிலையான செல்வத்தின்மீது பற்று வைத்துப் பயணிப்பதே சீடத்துவம். இயேசுஎன்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் ஆகியோரை மேலாகக் கருதக்கூடாதுஎன்கிறார். தாயை, உறவுகளை வெறுப்பதல்ல துறவு; மாறாக, ‘எல்லாரும் என் தாய், எல்லாரும் என் சகோதர-சகோதரிகள்என்ற உறவின் விரிவே துறவு. அன்பு வற்றிய நிலை அல்ல துறவு; அன்பின் அதிர்வுகளை அகலப்படுத்துவதே துறவு. எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாமல் இருப்பதே துறவு. எல்லைக்குட்பட்ட அன்பை எல்லை கடந்ததாக்கும் முயற்சியே சீடத்துவம். இயேசுவை வாழ்க்கையால் போதிக்கும் உண்மைச் சீடர்களாய் வாழவும், நமது குடும்பங்களில் இறையழைத்தல் பெருகவும் தேவையான  வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நமது எண்ணங்கள் கடவுளின் எண்ணங்கள் அல்ல; கடவுளின் திட்டத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. வாழ்க்கையில் வருகின்ற இன்ப-துன்பங்களில் இறைவனின் உடனிருப்பை உணரவேண்டும். இறைவனின் துணையின்றி இந்த உலகில் எதையும் அறிந்துகொள்ள இயலாது. நிலையானது என்று நினைத்து நாம் திட்டமிடும் அனைத்துமே நிலையற்றவை என்று கூறி, இறையோடு நிறைவாக வாழ  அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கொலோசை நகரின் மிகப்பெரும் செல்வந்தர் பிலமோன்; அவருடைய அடிமைதான் ஒனேசிமு. ஓர் அடிமை தப்பி ஓடினால் கொலை செய்யப்பட வேண்டும்; ஆனால், தப்பியோடிய ஒனேசிமுவை மீண்டும் பிலமோனிடம் அனுப்புகிறார் பவுல். “என் இதயத்தையே அனுப்புகிறேன்என்று அவரை ஓர் அடிமையாக அல்லாமல், கிறித்தவ நம்பிக்கையில் சகோதரராக ஏற்றுக்கொள்ளும்படி பிலமோனுக்கு எழுதுகிறார். பவுலைப் போன்று வேற்றுமைகள் பாராது, அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்று ஏற்று வாழும் உண்மைச் சீடர்களாய் வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! ‘நானே உன்னைத் தேர்ந்துகொண்டேன்என்று கூறி உமது பணிக்காக நீரே தேர்ந்துகொண்ட எமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் அனைவரையும் மகத்துவமான இந்த அழைத்தல் வாழ்வில் சிறப்பாகப் பணிசெய்யவும், ‘அழைத்தவர் என்னோடு இருக்கிறார், அவர் என்னைத் தனியாக விட்டுவிடமாட்டார்என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணி செய்வதற்குத் தேவையான திட மனத்தைத் தந்து  வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாசமுள்ள ஆண்டவரே! நாட்டை ஆளும் தலைவர்கள் தன்னலம் மறந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், அடித்தட்டு மக்களும் தங்களின் வாழ்வாதாரங்களைப் பெறக்கூடிய சட்டங்களைக் கொண்டு வரவும், வேறுபாடுகளைக் களைந்து அனைத்து மக்களையும் இணைக்கும் பாலமாக வாழவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நீங்கள் என் சாட்சிகள்என்று மொழிந்த ஆண்டவரே! எம் மறைமாவட்டத்திலும், எம் பங்கிலும் உள்ள குடும்பங்களை ஆசிர்வதியும். நாங்கள் அனைவரும் அனைத்து மக்களுடனும் நல்லுறவுடன் வாழவும், உடன் வாழும் சகோதர- சகோதரிகளின் தேவை அறிந்து உதவி செய்து வாழவும், அற்புதமான இந்த வாழ்க்கையில் அனைவரையும் மன்னித்து மகிழ்ச்சியோடு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ‘நீயே ஆசிர்வாதமாய் விளங்குவாய்என்று மொழிந்த ஆண்டவரே! எமது குடும்பங்களுக்கு நீர் கொடுத்த எம் குழந்தைகளுக்காய் உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர்கள் அனைவரும் படிப்பிலும் இறைநம்பிக்கையிலும் நாளும் வளரவும், அருள்பணியாளராக, அருள்சகோதரியாகப் பணி செய்வதில் ஆர்வம் காட்டவும், இறையழைத்தலின் முக்கியத்துவத்தை எம் குழந்தைகளின் மனத்தில் நாங்கள் விதைக்கவும் தேவையான நல்மனதைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 22 - ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (31-08-2025) சீஞா 3:17-18, 20,28-29; எபி 12:18-19, 22-24; லூக் 14:1, 7-14

திருப்பலி முன்னுரை

தாழ்ச்சியே மாட்சிஎன்ற தலைப்பில் சிந்திக்க இஞ்ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. தாழ்ச்சியான உள்ளம் கொண்ட மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. உணர்விலும் ஆன்மிகத்திலும் முதிர்ச்சியடைந்தவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புவதில்லை. தாழ்ச்சியோடு வாழவே விரும்புவார்கள். தாழ்ச்சி என்ற புண்ணியத்தை அணிகலனாய் கொண்டவர்களின் வாழ்க்கை ஆசிரால் மிளிர்கிறது. தாழ்ச்சி உள்ளவர்களுக்கு மட்டுமே கடவுளின் மறைபொருள் வெளிப்படுத்தப்படுகிறது. தாழ்ச்சி நம்முடைய நன்மதிப்பை உயர்த்துகிறது. தாழ்ச்சி என்பது வீழ்ச்சியல்ல; அது மகிழ்ச்சியான வாழ்வின் திறவுகோல். மதிப்பும் மரியாதையும் நாம் கேட்காமலே கிடைப்பதற்குத் தாழ்ச்சி என்ற பண்பு நமது வாழ்க்கையின் அடித்தளமாக இருக்கவேண்டும். நம்முடைய விருந்துகளில் பணக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, இறைவனின் பிள்ளைகளான ஏழைகள், கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழும்போது நாம் பேறுபெற்ற மக்களாக மாறுகிறோம். மனத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் அனைத்து மக்களோடும் சமத்துவ உறவில் நிலைத்து, ஏழைகளோடு தோழமை கொண்டு வாழ்ந்து, விண்ணகத்தின் முன் சுவையை இம்மண்ணக மக்களும் சுவைக்க உதவுவோம். தாழ்ச்சி என்ற பண்பால் இந்த அகிலத்தையே வென்ற ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி, தாழ்ச்சியோடு வாழ்ந்து மாட்சி அடைய வரம் வேண்டி இணைவோம் இத் திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

தாழ்ச்சி உள்ளவர்கள் ஆண்டவரை மாட்சிப்படுத்தும் பேறுபெறுகின்றனர். தன்னைத் தாழ்த்திக் கொள்பவர்களுக்கு இறைவனின் முன்னிலையில் பரிவு கிடைக்கிறது. நாம் செய்வதனைத்தையும் ஆண்டவருக்காகப் பணிவோடு செய்யவேண்டும் என்று முதல் வாசகம் நமக்குக் கூறுகிறது. வீண்பெருமைகளை விடுத்து, நல்ல மனிதர்களாக வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுள் கொடுத்த இந்த அற்புதமான வாழ்வில் எந்தப் பொருளையும் உயிர்களையும் மனிதர்களையும் அற்பமாகப் பார்க்காமல், அற்புதமாகப் பார்க்கும்போது இறைவன் மாட்சி அடைகின்றார். பணத்தையும் பதவியையும் வைத்து மதிப்புக் கொடுக்காமல் ஏழைகள், இல்லாதோர், இயலாதோர் அனைவருக்கும் மதிப்புக் கொடுத்து வாழ்வோம். நமது இதயத்தைத் தூய்மையாக்கிப் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராகிய கிறிஸ்துவின் முன்னிலையில் மகிழ்வோடு நிற்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது பணியைச் செய்வதற்கு உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட எம் திரு அவைத் தலைவர்களுக்காக உம்மிடம் வேண்டுகின்றோம். உம்மைப் போன்று தாழ்ச்சியும் பரிவும் அன்பும் நிறைந்த தலைவர்களாய் இருந்து மக்களை ஞானத்தோடு வழிநடத்தத் தேவையான அருள் வரங்களைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நீ செய்வதனைத்தையும் பணிவோடு செய்என்று மொழிந்த ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் ஆணவத்தை விடுத்து தாழ்ச்சியோடு வாழவும், இவ்வுலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் மதிப்புக்குரியவர்கள் என்று எண்ணி அனைவரோடும் நல்லுறவுடன் வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! எம் பங்கில் உள்ள குடும்பங்களை ஆசிர்வதியும். ‘நான்தான் பெரியவன், நான் சொல்வதுதான் சரிஎன்று கூறி மகிழ்ச்சியை இழந்து விடாமல், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மதிப்புக் கொடுத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பாதுகாக்கும் ஆண்டவரே! இவ்வுலகில் உள்ள இளைஞர்கள் உடலாலும் உள்ளத்தாலும் தூயவர்களாக வாழவும், நாளும் இறைநம்பிக்கையில் வளரவும், இவர்களின் எதிர்காலம் சிறந்து விளங்கவும் தேவையான ஆசிரைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆகஸ்டு 24, 2025-ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 66:18-21; எபி 12:5-7,11-13; லூக் 13:22-30

திருப்பலி முன்னுரை

இடுக்கமான வாயிலே இறைவாயில்என்பதைப் பற்றிச் சிந்திக்க இஞ்ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. பிறருக்கு நாம் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் நிறைவாழ்வின் செல்வங்கள். இடுக்கமான வாயில் வழியே செல்வதே இறைவழி செல்வதாகும். இறையாட்சியின் மதிப்பீடுகளான அன்பு, அமைதி, உண்மை, நீதி, நேர்மை போன்றவற்றின்படி வாழ்வதையேஇடுக்கமான வாயில்என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. துன்பத்தை, சோதனையை, ஏளனத்தை, அவமானத்தை, வேதனைகளைத் தரக்கூடிய இடுக்கமான வாயிலான எருசலேம் நோக்கி இயேசு பயணிக்கிறார். துன்பத்தை நோக்கி இயேசு பயணம் செய்கிறார். நமது வாழ்க்கையில் நாம் எப்போதும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய பெத்லகேம் அனுபவத்தையே நாடுகின்றோம். துன்பத்தைத் தந்தாலும் இறுதியில் வெற்றியையும் நிலைவாழ்வையும் கொடுக்கக்கூடிய எருசலேம் அனுபவத்தை நாம் விரும்புவதே இல்லை. எருசலேம் அனுபவம் மீட்பின் அனுபவம். துன்பம்  தேவையற்றது என்று சிந்திப்பதை விட்டு விட்டு, நம்முடைய வாழ்வில் அங்கமாக இருக்கும் துன்பத்திலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளவும், நாம் அனுபவித்தத் துன்பங்களை நாம் ஒருபோதும் மற்றவருக்குக் கொடுக்காமல் நற்செயல்களின் வழியாக நற்செய்தியை விதைத்திடவும், நம்முடைய அனைத்து நிலைகளிலும் ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையில் வாழ்ந்திடவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

நீதிக்காக, உண்மைக்காக, நேர்மைக்காக நாம் எடுக்கும் செயல்கள் அனைத்திலும் ஆண்டவர் உடனிருப்பார். பிரிவுகள், அடுத்துள்ள மனிதரில் இறைச்சாயலைக் காணும்போது இறைவன் நம்மை மேன்மைப்படுத்துவார். நமது எண்ணங்களையும் சிந்தனைகளையும் அறிந்து, அதன்படி நம்மை வழிநடத்துகின்ற இறைவனின் பாதுகாப்பை உணர்த்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுள் இரக்கமுள்ளவர், பேரன்பு கொண்டவர், அனைத்து நிலைகளிலும் நம் உடன்வருபவர், தேவையானவற்றைத் தக்க நேரத்தில் தரக்கூடியவர். அவரது நன்மைத் தனங்களை மறந்து நம் மனம்போன போக்கில் வாழும்போது நம்மைக் கண்டித்துத் திருத்துகிறார். தாயைப் போன்று அன்பு செய்தும், தந்தையைப் போன்று கண்டித்தும் நம்மைத் தூய வழியில் வழிநடத்தி வரும் இறைவனின் மகிமையை உணர்த்தும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது மீட்புப் பணியை இந்த அகிலத்தில் செய்துகொண்டிருக்கும் எம் திரு அவைத் தலைவர்கள் தங்களது வார்த்தையாலும் வாழ்க்கையாலும் நற்செய்தியைப் போதிக்கவும், மக்களை நிறைவாழ்வை நோக்கி வழிநடத்தவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! நாங்கள் வழிதவறும்போது எங்களை நீர் கண்டித்துத் திருத்துவதை நாங்கள் நல்மனதுடன் ஏற்றுக் கொண்டு நம்பிக்கை வாழ்வில் வேரூன்றவும், தவறு செய்வதிலிருந்து திருந்தி வாழவும் தேவையான மனப்பக்குவத்தை எங்கள் ஒவ்வொருவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் இறைவா! ‘இடுக்கமான வாயிலில் நுழையுங்கள்என்ற உமது அழைப்பினை ஏற்று, எங்கள் வாழ்க்கையில் எத்தகைய சோதனை ஏற்பட்டாலும் உமது மதிப்பீடுகளைக் கைவிடாமல் வாழவும், எங்களது சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும் உமக்குச் சான்று பகர்ந்து வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் அன்பை மட்டும் விதைக்கவும், எம் உடன்வாழும் சகோதர-சகோதரிகளுக்கு நடமாடும் நற்செய்தியாக வாழவும், தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உதவிடவும் தேவையான நல்மனத்தை எங்கள் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.