news
ஞாயிறு தோழன்
அக்டோபர் 19, 2025, ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) விப 17:8-13; 2திமொ 3:14-4:2; லூக் 18:1-8

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம் 29-ஆம் ஞாயிறு நம்பிக்கையோடு செபிக்கவும் செபத்தில் நிலைத்திருக்கவும் அழைப்பு விடுக்கிறது. நமது ஆன்மிக வாழ்வுக்கு அடித்தளமாக இருப்பது செபம்இறையோடும், சகமனிதரோடு நல்லுறவில் வாழவும், வாழ்க்கையின் அர்த்தத்தை உணரவும், கடவுளின் அளவற்ற இரக்கத்தில் நிலைக்கவும், ஆன்மிக வாழ்வில் ஆழம்பெறவும் செபம் நமக்கு அவசியமாகிறது. செபம் எல்லாத் தடைகளையும் துன்பக் கட்டுகளையும் சிறைகளையும் உடைக்க வல்லதுஆழமான நம்பிக்கையோடு கேட்கும்போது கட்டாயம் பெற்றுக்கொள்வோம். ஆண்டவர் இயேசுவின் பெயரை உச்சரித்தவர்கள், அவரது ஆடையைத் தொட்டவர்கள், ‘இயேசுவே, தாவீதின் மகனேஎன்று நம்பிக்கையோடு அறிக்கையிட்டவர்கள், ‘ஆண்டவரே, என் தேவனேஎன்று சரணடைந்தவர்கள் அனைவரும் வாழ்வு பெற்றனர். நாமும் இத்தகைய உள்ளம் கொண்டு ஆழ்ந்த நம்பிக்கையோடு செபிப்போம். தேவைக்காக மட்டும் ஆண்டவரைத் தேடிவராமல் ஒவ்வொரு நிமிடமும் அவரது உடனிருப்பை உணர்வோம். பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கும் கற்றுக்கொண்ட அனுபவங்களுக்கும் நன்றி கூறுவோம். நமது விருப்பம் விடுத்து, இறைத்திட்டம் அறிந்து வாழ வரம் வேண்டுவோம். ‘இல்லைஎன்று சொல்லாத இறைவனிடம் பிள்ளைகளுக்குரிய பாசத்தோடு கேட்டுக்கொண்டே இருப்போம். பேரன்பால் நம்மைக் காக்கும் இறைவனிடம் முற்றிலும் சரணடைவோம். இறைவனிடம் கேட்பவர்களாய் மற்றும் இருந்துவிடாது, அவரது அன்பையும் பாதுகாப்பையும் இரக்கத்தையும் சுவைத்து நம்பிக்கையின் திருப்பயணிகளாக வாழ்ந்திட  வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரிடம் நம்பிக்கையோடு தொடர்ந்து கேட்கும்போது கட்டாயம் பெற்றுக்கொள்வோம் என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக்கூறுகிறது. உள்ளத்தை உயர்த்தி உரிமையோடு கேட்கும்போதும் செபத்தில் நிலைத்திருக்கும்போதும் வெற்றியை மட்டுமே அனுபவிப்போம். மோசே கரம் விரித்துப் பல மணிநேரம் செபித்ததால் இஸ்ரயேல் மக்கள் வெற்றி பெற்றனர். நாமும் செபத்தால் வெற்றி காணவும், செபமனிதர்களாக வாழவும் அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நமது கிறித்தவ வாழ்வின் உயிர்நாடியாக இருப்பது இறைவார்த்தை. உலகம் கொடுக்கமுடியாத அமைதியைக் கொடுக்க வல்லது இறைவார்த்தை. நமது வாழ்வை அருள்நிறைந்த வாழ்வாக மாற்றுவது இறைவார்த்தை. இறைவார்த்தையை அன்றாடம் வாசித்து, நம்முடைய வார்த்தையாலும் வாழ்க்கையாலும் இயேசுவை அறிவிக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உம்மில் நம்பிக்கை கொண்டு வாழவும், உமக்காகப் பணிசெய்து கொண்டும், இறையரசின் மதிப்பீடுகளை விதைத்துக்கொண்டும் இருக்கும் இவர்களுக்கு நீரே துணையாக இருந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! உமது பெயரால் கூடியுள்ள நாங்கள் அனைவரும் உம்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் ஆழப்படவும், எம்மை விட்டுப் பிரியாத உம் அன்பில் நிலைத்திருக்கவும், உம்மோடு இணைந்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாசமுள்ள ஆண்டவரே! எங்கள் பங்கின் குடும்பங்களில் அமைதியும் மகிழ்ச்சியும் வளர்ந்திடவும், எங்கள் குடும்பங்கள் அனைத்தும் செபிக்கும் குடும்பங்களாக மாறிடவும், வாழ்வு கொடுக்கும் வார்த்தையான இறைவார்த்தையைத் தவறாது படிக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. காக்கும் தெய்வமே இறைவா! அருகில் வாழும் மனிதரில் உம்மைக் கண்டிடவும், எங்கள் குழந்தைகளைத் திருமறை கற்பிக்கின்ற நெறிமுறைகளில் வளர்க்கவும் பெற்றோர்களாகிய நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 28 -ஆம் ஞாயிறு, (மூன்றாம் ஆண்டு) (12-10-2025) 2அர 5:14-17; 2திமொ 2:8-13; லூக் 17:11-19

திருப்பலி முன்னுரை

நன்றிகூறும் நல்ல மக்களாக வாழ இந்த ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. “கடவுளுக்கு இரண்டு உறைவிடங்கள் உள்ளன. ஒன்று, விண்ணகம்; மற்றொன்று நன்றி நிறைந்த இதயம்என்கின்றார் வால்ட்சன். இறைவன் நேரிடையாகவும், பல மனிதர்கள் வழியாகவும் பல அருள்செல்வங்களையும் பொருள் செல்வங்களையும் வாரி வழங்குகின்றார். இறைவனிடமிருந்து நாம் இலவசமாகப் பெற்றுக்கொண்ட இந்த வாழ்க்கைக்காகவும், குடும்பம் மற்றும் சமூக உறவுகளுக்காகவும், அன்றாடம் நாம் உயிர்வாழ அனைத்தையும் தானமாகக் கொடுக்கும் இந்த உலகிற்காகவும் நன்றி கூறுவோம். நாம் பெற்றுக்கொண்ட அனுபவத்திற்காகவும், உறவுகளின் உடனிருப்பிற்காகவும், தக்க நேரத்தில் உதவி செய்து நம்மைத் தாங்கிப்பிடித்த மாமனிதர்களுக்காகவும் நன்றி கூறுவோம். நன்றி என்ற உன்னதமான வார்த்தையை அடிக்கடிப் பயன்படுத்தும் போது இந்த வாழ்க்கையின் அற்புதம் புரியும்; மகத்துவம் தெரியும். ஆண்டவரைத் தேடிவந்து முகங்குப்புற விழுந்து நன்றி கூறிய சமாரியரைப் போன்று இதயத்தால் நன்றி கூறுவோம். இவ்வுலகில் அனுதினமும் எவ்விதக் குறையுமின்றிக் காத்து வருகின்ற இறைவனுக்கு நன்றி கூறி, நன்றி நிறைந்த இதயத்தோடு இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

சிரியா நாட்டுப் படைத்தளபதியான நாமான் தொழுநோயால் பாதிக்கப்பட்டபோது  தனது நாடான சிரியாவைக் கடந்து, தன் நாட்டின் எல்லையைக் கடந்து, தனது எதிரி நாடான இஸ்ரயேலின் கடவுளையும் இறைவாக்கினர் எலிசாவை அணுக முடிந்தது; ஆண்டவரின் வல்லமையை அனுபவிக்க முடிந்தது. தன்னுடைய நிலையிலிருந்து இறங்கியதால் குணம்பெற்ற நாமானைப் போன்று, நாமும்நான்என்ற நிலையிலிருந்து இறங்கி வந்து உடல்நலமும் மனநலனும் பெற அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆன்மிக வாழ்விலும் அகவாழ்விலும் அனுதின வாழ்விலும் முதிர்ச்சி பெற்ற மனிதர்களால் மட்டுமே வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஆண்டவருக்கு நன்றி செலுத்த முடியும். ஆண்டவரை நம்பி நாம் தொடங்கும் அனைத்திலும் வெற்றி காண்போம். தமது உயிரைக் கொடுத்து நமக்கு வாழ்வு கொடுத்த இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டும், அவரது வார்த்தையில் பற்றுறுதி கொண்டும் பயணிக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவையை வழி நடத்த நீர் கொடுத்த திரு அவைத் தலைவர்கள் வழியாக ஒவ்வொரு நாளும் உமது அன்பையும் பாசத்தையும் அனுபவித்து, வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உமக்கு நன்றி கூறும் நல்ல மக்களாக நாங்கள் வாழ்ந்திட வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. பாசமுள்ள ஆண்டவரே! அழகான இந்த உலகில் ஆனந்தமாய் நாங்கள் வாழ நீர் எமக்குக் கொடுத்த  இந்த வாழ்வுக்காகவும், நாங்கள் அனைவரும் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறும் நல்ல மனத்தை எங்கள் அனைவருக்கும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பாதுகாக்கும் ஆண்டவரே! நாங்கள் கேட்பது கிடைக்காதபோது மனம் சோர்ந்து போகாது, எங்கள் தேவையறிந்து சரியான நேரத்தில் கொடுப்பீர் என்ற நம்பிக்கையில் நாளும் வளரவும், உள்ள உறுதியோடு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. பத்துத் தொழுநோயாளர்களுக்குக் குணம் கொடுத்த ஆண்டவரே! அச்சம் தரும் அனைத்துவிதமான நோய்களினின்று எம்மையும் எமது குடும்பத்தையும் எம் பங்கிலுள்ள மக்களையும் இவ்வுல மக்களையும்  காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
அக்டோபர் 05, 2025, ஆண்டின் பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) அப 1:2-3; 2:2-4; 2திமொ 1:6-8,13-14; லூக் 17:5-10

திருப்பலி முன்னுரை

நான் உங்களோடு இருக்கிறேன்என்று கூறி  நம்முடன் பயணிக்கும் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ ஆண்டின் பொதுக்காலம் 27-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்புவிடுக்கிறது. நம்பிக்கை மட்டுமே இந்த உலகத்தையும் உள்ளங்களையும் உயிர்களையும்  நம்மையும்  நகர்த்திக் கொண்டிருக்கிறது. நம்பிக்கை நமது வாழ்வின் அடித்தளமாக இருக்கும்போதுதான் ஆண்டவரையே அனுபவிக்க முடியும். இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டவர்கள், நம்பிக்கையோடு அவரது பெயரை உச்சரித்தவர்கள், இயேசு குணம் கொடுப்பார் என்று நம்பியவர்கள், ‘இயேசுவே நீரே வாழும் கடவுளின் மகன்என்று சரணடைந்தவர்கள் அனைவருக்கும் இயேசு வாழ்வு கொடுத்தார். ஒதுக்கப்பட்ட தொழுநோயாளர்களைத் தேடிச்சென்று சுகம் கொடுத்து நம்பிக்கையை மிகுதியாக்கினார். நம்பிக்கை இருந்தால்தான் கடவுளின் வல்லமையை உணரமுடியும்; நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஆண்டவரின் அளவில்லாத அன்பைச் சுவைக்க முடியும். ஆழமான நம்பிக்கை இருந்தால் நம்மாலும் அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்ய முடியும். இன்றைய நற்செய்தியில் சீடர்கள் இயேசுவிடம் கேட்டது போன்று நாமும்ஆண்டவரே! எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்என்று கேட்போம். வாழ்க்கையில் எந்த நிலையிலும் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கையில் தளர்ச்சி அடையாது வாழ வரம் வேண்டுவோம். இமைப்பொழுதும் விலகாமல் நம்மோடு வாழும் இயேசுவோடு நாம் வாழ்வோம். நமது தாய் அன்னை மரியாவைப் போன்று ஆண்டவர்மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் அபக்கூக்கு, பாபிலோனியர் கொடுமை செய்வதையும் கொள்ளையடிப்பதையும் கண்டு மனம் வெதும்பி ஆண்டவரை நோக்கிக் கேள்வி எழுப்புகின்றார். அபக்கூக்கின் இக்கேள்விக்குக் கடவுள், தாம் குறித்த நேரத்தில் தண்டனைத் தீர்ப்பை நிறைவேற்றுவதாகவும், நேர்மையுடையோர் கடவுள்மீது கொண்ட நம்பிக்கையால் வாழ்வர் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறார். கடவுள்மீது நம்பிக்கை கொண்டு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

கடவுள் நமக்கு தமது வல்லமையையும் அருளடையாளங்களையும் கொடுத்து வழிநடத்தி வருகின்றார். நாம் சோர்ந்து போகும் நேரங்களில் தூய ஆவியார் வழியாக நம்மைத் திடப்படுத்துகின்றார். நம்பிக்கை வாழ்வில் சோர்வு ஏற்படும்போது, தம்முடைய ஆற்றல் மிக்க வார்த்தையால் நமக்கு நலம் தருகின்றார். நம்மைக் காக்கும் ஆண்டவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வாழ வரம் வேண்டி இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நம்பிக்கையின் பாதையில் வழிநடத்தவும், நம்பிக்கை கொண்டு உறுதியோடு உழைக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ‘நான் உங்களோடு இருக்கின்றேன்என்று மொழிந்த ஆண்டவரே! உமது உடனிருப்பை அனுபவித்து வாழும் நாங்கள், ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கையின் தூதுவர்களாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உலகிற்கு ஒளியான ஆண்டவரே! கல்வி என்ற அறிவொளியை இவ்வுலகில் ஒளிர்வித்துக் கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நற்சுகம் தந்து வழிநடத்தவும், கருத்தாய் பணிசெய்வதற்கான விவேகத்தையும் தந்து காத்திட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்;.

4. நலம் கொடுக்கும் நல்லவரான ஆண்டவரே! எம் நாட்டிலும் பங்கிலும் குடும்பத்திலும் தீராத நோய்களால் துன்பப்படும் அனைவருக்கும் நல்ல சுகத்தைக் கொடுத்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 26 -ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (28-09-2025) ஆமோ 6:1,3-7; 1திமொ 6:11-16; லூக் 16:19-31

திருப்பலி முன்னுரை

இன்றைய இறைவழிபாடு, உடன் வாழும் மனிதரில் இறைவனின் சாயலைக் கண்டுகொள்ளவும்நம்மிடம் உள்ளதை ஏழைகளோடு பகிர்ந்து வாழவும்  நமக்கு அழைப்புவிடுக்கிறது. மனித வாழ்வில் இரு வேறுபட்ட துருவங்களைச் சித்தரிக்கும் உவமைசெல்வரும்-இலாசரும்என்ற உவமை. ஏழைகளை ஒதுக்குவது, ஓரம்கட்டுவது, கண்டுகொள்ளாமல் இருப்பது சமூகக் குற்றம் மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கே செய்யும் மாபெரும் குற்றமாகும். தாழ்ந்தோரை உயர்த்தி, செல்வச் செருக்குடையோரைச் சிதறடித்து, ஒடுக்கப்பட்டோரை ஆண்டவர் உயர்த்துவார் என்பதன் அடையாளமாக இலாசர் என்ற பெயர் கொண்ட முகவரி தரப்பட்டிருக்கிறது. கடவுள் எப்போதும்  ஏழையரின் சார்பாகவும் துன்பப்படுவோரின் குரலாகவும் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறார் லூக்கா. இன்றைய நற்செய்தியில் செல்வர், ஏழை இலாசரைக் கண்டுகொள்ளவில்லை; பசியால் இருந்த இலாசருக்கு உணவு கொடுக்கவும் இல்லை. தன் அருகில் பசியால் துன்புற்ற மனிதனில் இறைவனைக் காண மறந்துவிடுகிறார். இன்று நாம் வாழும் சமுதாயத்தில் இலட்சக்கணக்கான இலாசர்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள். செல்வத்தைச் சேர்ப்பதிலும், அதைப் பெருக்குவதிலும் பாதுகாப்பதிலும் இருப்பதை விடுத்து, உடன் வாழும் சகோதர-சகோதரிகளுக்கு உறவாய் உடனிருப்போம். அன்புக்காக, அமைதிக்காக, உறவுக்காக, உணவுக்காக, பாசத்திற்காக ஏங்கும்  ஏழை இலாசர்களைத் தேடிச்சென்று உதவி செய்வோம். அடுத்தவருக்கு உதவி செய்வதற்கு நாம் ஓர் அடி எடுத்துவைக்கும்போது, கடவுள் ஓராயிரம் அடி நம்மை நோக்கி எடுத்துவைப்பார். எல்லாமுமான இறைவனை எல்லாரிலும் கண்டு, உதவி செய்து வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

தம் காலத்தில் பரவியிருந்த ஆடம்பர வாழ்வையும் செல்வக் குவிப்பையும் வஞ்சிக்கப்பட்ட ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறித்துக்கொண்டு சுகபோக வாழ்க்கையில் மூழ்கியிருப்பதையும், கடவுளின் குரலாய் நின்று எதிர்த்தார் இறைவாக்கினர் ஆமோஸ். தன்னலத்தைக் கடந்து அடுத்தவரின் நலனில் அக்கறை கொண்டு வாழும்போது, ஆண்டவர் நம்மோடு இருப்பார் என்று கூறி இச்சமுதாயத்தில் இறைவனின் குரலாய் வாழ அழைக்கிறார். கவனமுடன் வாசகத்திற்குச் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

நாம் எவ்வாறு வாழவேண்டும், இறைவன் கொடுத்த இந்த அற்புதமான வாழ்க்கையில் எதைத் தேடவேண்டும், எவற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும்? எதை நோக்கி அன்றாடம் செல்ல வேண்டும்? என்பதற்கு விடையாக இரண்டாம் வாசகம் அமைகிறது. இறைவனின் பேரன்பிலிருந்து விலகிச் செல்லாமல், அனைத்திலும் அனைவரிலும் இறைவனைக் கண்டு அர்த்தமுள்ள வாழ்வு வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. காக்கும் தெய்வமே இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் இறைவார்த்தையின் வழியில் நடந்து, மக்களை இறையாட்சியின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் ஆண்டவரே! நாங்கள் ஒருவர் மற்றவருக்கு அன்பின், மகிழ்ச்சியின், உறவின், அமைதியின் தூதுவர்களாய் வாழ்ந்து, மனிதத்தில் புனிதம் காண வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘உங்களைத் திக்கற்றவர்களாய் விடமாட்டேன்என்று மொழிந்த ஆண்டவரே! குடிப்பழக்கத்தாலும் தவறான வாழ்க்கையாலும் புரிந்துகொள்ளாமையினாலும் துன்புறும் குடும்பங்களுக்குத் தேவையான அன்பை, அமைதியைக் கொடுத்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞானத்தின் தொடக்கமே எம் இறைவா! எம் குழந்தைகளை இறைப்பற்றும் மனிதநேயமும் மூத்தோரை மதிக்கும் உயர்ந்த பண்பும் கொண்ட குழந்தைகளாக நாங்கள் வளர்த்திடவும், திருமறை போதிக்கும் நெறிமுறைகளைக் கற்றுக்கொடுக்கவும் தேவையான ஞானத்தை எங்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 25 -ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (21-09-2025) ஆமோ 8:4-7 1திமொ 2:1-8 லூக் 16:1-13

திருப்பலி முன்னுரை

மனிதர்களைப் பயன்படுத்தி செல்வத்தைச் சம்பாதிக்கும் நிலைமை மாறி, செல்வத்தைப் பயன்படுத்தி மனிதர்களைச் சம்பாதித்து மனித மாண்போடு வாழ ஆண்டின் பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் பாதுகாப்போடும் மகிழ்ச்சியோடும் பயணம் செய்வதற்குத் திரு அவை அவ்வப்போது சில எச்சரிக்கைகளைத் தருகிறது. அவற்றில் ஒன்றுதான் செல்வத்தின் மட்டில் நாம் விழிப்பாயிருப்பதற்கான எச்சரிக்கை. நாம் வாழும் உலகமானது செல்வத்தின்மீதும் பணத்தின்மீதும் அதிகம் நம்பிக்கை வைக்கும் உலகம். ‘பணம் பத்தும் செய்யும், ‘பணத்தால் செய்ய முடியாதது எதுவும் இல்லைஎன்ற கருத்துகளைப் பரப்பி, பணக்குவிப்பில் மக்களை ஈடுபடச் செய்யும் உலகம். பணத்தை வைத்து மனிதர்களுக்கு மரியாதை கொடுக்கும் மாய உலகம்பணத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உறவுகளுக்குக் கொடுப்பதில்லை. இன்றைய நற்செய்தியில்  இயேசுசெல்வத்தைக் கொண்டு உங்கள் நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள்என்கிறார். இயேசுவின் சீடர்களாகிய நாம் அனைவரும் பொருளைவிட மனிதமே மேலானது என்று வாழ்வோம். பணத்திற்காக உறவுகளை இழக்காமல் பணத்தை இழந்தாவது மனிதம் காப்போம்கொண்டு செல்ல ஒன்றுமில்லை. அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பண்புகளை இம்மண்ணில் விதைத்துச் செல்வோம். சுயநலம் மிகுந்திருக்கும் இவ்வுலகில் ஏழைகளை நினைவுகூர்ந்து நீதியுடன் நடந்துகொள்வதே நமது கடமை. எனவே, மனிதத்தின் புனிதம் உணர்ந்து அனைவரையும் மதித்து வாழவும், உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும் வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில், ஆமோஸ் இறைவாக்கினர் வறியவர்களை வஞ்சித்த, எளியவர்களை ஏமாற்றிய பணக்காரர்களைக் கடுமையாகச் சாடுகிறார். ஏழை எளியவர்களை நசுக்கி, பணத்தைச் சம்பாதிக்கும் செயலை இறைவன் ஒருபோதும் விரும்பமாட்டார் எனக் கூறி நீதியின் உண்மையின் பாதுகாவலராக வாழ அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இருப்பதில் நிறைவுகண்டு, இல்லாதவர்களோடு தோழமை கொண்டு, உடன் வாழும் அனைவருக்கும் அமைதியைக் கொடுத்து, ஆண்டவர் கொடுத்த இந்த வாழ்வுக்காக நன்றி கூறி அமைதியோடு வாழவும், இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்த வாழ்வு வாழவும், இறைவேண்டலில் நிலைக்கவும் அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எமது திரு அவையை வழிநடத்தும் அனைவரும் உமது வார்த்தையின்படி வாழவும், அழைத்தவர் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணிசெய்யவும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அன்பின் இறைவா! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் அனைவரும் மக்களை ஒன்றிணைப்பவர்களாகவும், அனைத்து மக்களுக்கும் வாழ்வு கொடுக்கும் சட்டங்களைக் கொண்டுவரவும் தேவையான ஞானத்தைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! நாங்கள் அனைவரும் நீர் கொடுத்த இந்த வாழ்வுக்காய் நன்றி கூறி, உடன்வாழும் அனைவரோடும் நல் உறவுடன் வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எம்மோடு வாழும் ஆண்டவரே! எம் குழந்தைகள் அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் நாளும் வளரவும், கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றி காணவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 24-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) (14-09-2025) (திருச்சிலுவையின் மாட்சியின் விழா) - எண் 21:4-9; பிலி 2:6-11; யோவா 3:13-17

திருப்பலி முன்னுரை

திருச்சிலுவையின் மாட்சியைப் பற்றிச் சிந்திக்கத்  திரு அவை நமக்கு அழைப்புவிடுக்கிறது. கத்தோலிக்கக் கிறித்தவர்களின் நம்பிக்கை திருச்சிலுவையாகும். இந்தத் திருச்சிலுவையிலிருந்துதான் நமக்கு மாட்சியும் மகிமையும் கிடைக்கிறது. இந்தத் திருச்சிலுவையிலிருந்துதான் நாம் அன்பையும் அருளையும் இரக்கத்தையும் கருணையையும்  பெறுகிறோம். இந்தத் திருச்சிலுவைதான் மன்னிப்பின் மகத்துவத்தை நமக்குக் கற்றுத் தருகிறது. ஒரு காலத்தில் சிலுவை அவமானத்தின் சின்னமாகக் கருதப்பட்டது. கைதிகளுக்கும் கள்வர்களுக்கும் தண்டனையாய் கொடுக்கப்பட்டது. ஆனால், இயேசு என்று சிலுவையைச் சுமந்தாரோ, அன்றிலிருந்து அது வெற்றியின்  அடையாளமாய் மாறியது. சிலுவையே நமது வல் லமை, சிலுவையே நமது ஞானம், சிலுவையே நமது வாழ்வு. துன்பம், துயரம், வேதனை, சோதனை இவையில்லாமல் வாழ்க்கையே இல்லை. அனைத்து நிலைகளிலும் திருச்சிலுவையை உற்றுநோக்கும்போது நமது வாழ்விற்கு வழி கிடைக்கும். கிறித்தவர்களாகிய நமது வாழ்வின் வெற்றியே சிலுவைதான். இயேசுவின் திருச்சிலுவை மாட்சி விழாவைக் கொண்டாடும் நாம் மகத்துவமிக்க சிலுவையின்முன் மண்டியிட்டுச் செபிப்போம். திருச்சிலுவைக்குரிய மரியாதையைக் கொடுப்போம். சிலுவையைத் துன்பமாகப் பார்க்காமல் வெற்றியின் சின்னமாகப் பார்க்கவும்இயேசுவின் அன்பைச் சுவைத்து வாழவும் வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

ஆண்டவரின் பாதுகாப்பையும் உடனிருப்பையும் உணராத இஸ்ரயேல் மக்களுக்காக மோசே பரிந்துபேசுகின்றார். ஆண்டவர் கூறியபடி ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து அதை ஒரு கம்பத்தில் பொருத்தி, ஆண்டவரின் வார்த்தையின் மீது நம்பிக்கை வைக்க அழைக்கின்றார்; நம்பிக்கை வாழ்வில் தொய்வின்றி வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர். இயேசுவின் பெயர் வல்லமையை, வலிமையை, வாழ்வைத் தரக்கூடியது. இயேசுவையே நமது தலைவராகக் கொண்டுள்ள நாம் எதற்கு முன்பாக, யாருக்கு முன்பாக மண்டியிடுகிறோம்? எவற்றை நோக்கிச் செபிக்கிறோம்? எதன் மீது, எவற்றின்மீது நம்பிக்கை வைத்துள்ளோம்? என்பதைச் சிந்திக்க அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரே! உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்ட திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது பணியை நிறைவாகச் செய்வதற்குத் தேவையான மனப் பலத்தையும் உடல்நலனையும் தந்து காத்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. சிலுவையினால் எமக்கு வாழ்வு கொடுத்த ஆண்டவரே! திருச்சிலுவையின் மாட்சி விழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் எங்கள் வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களை, சோதனைகளை உமது வல்லமையான சிலுவையின்மீது கொண்ட நம்பிக்கையால் முறியடித்து வாழ, தேவையான ஞானத்தை எமக்குத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமக்காக உயிரைக் கொடுத்து எம்மை மீட்ட ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் வாழ்வையும் வல்லமையையும் கொடுக்கக்கூடிய உமது வார்த்தையின்மீது நம்பிக்கை கொண்டு வாழவும், அவைகூறும் மதிப்பீடுகளின்படி வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. சிலுவையினால் எம்மை மீட்ட ஆண்டவரே! எம் குடும்பங்களில் தீராத நோயினால் துன்பப்படும் அனைவருக்கும் நல்ல சுகத்தைத் தந்து காத்து வழிநடத்தவும், அவர்களுக்கு உதவி செய்வதற்குத் தேவையான நல் மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.