news
ஆன்மிகம்
இளையோர் ‘இயேசு அனுபவம்’ பெற... (22-வது இளைஞர் ஞாயிறுக்கான ஆயரின் சுற்றுமடல்)

தமிழ்நாடு திரு அவை ஆகஸ்டு முதல் ஞாயிறை (03.08.2025) இளைஞர் ஞாயிறாகக் கொண்டாடுகின்றது. இவ்வாண்டின் இளைஞர் ஞாயிறின் கருப்பொருளாக, “நீங்களும் சான்று பகர்வீர்கள்; ஏனெனில், நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள் (யோவா 15:27) எனும் இயேசுவின் ஆற்றலூட்டும் வார்த்தைகளை மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ளார்.

இளைஞர் இயேசுவின் அழைப்பை ஏற்று, அவரோடு தங்கி, அவரின் பணிவாழ்வில் உடன் பயணித்து, அவரது இறையாட்சிக் கொள்கைகளைத் தமதாக்கி, அவரது பார்வையைக் கொண்டவர்கள் தாம் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் இறப்பு, உயிர்ப்பை உடனுணர்ந்த பிறகு இச்சீடர்கள், தங்கள் வாழ்வால் இயேசுவிற்குச் சான்றுபகர்ந்தார்கள். குறிப்பாக, தேவையிலிருப்பவர்களுக்குப் பணியாற்றுதல், ஏழைகள், கைம்பெண்கள், பிற இனத்தார் போன்றோருக்கு முன்னுரிமை கொடுத்தல், தயக்கமின்றித் துணிவுடன் உண்மையை எடுத்துரைத்தல், நோயுற்றோரை நலமாக்குதல், பிரிவினைகளை அகற்றி வாழ்தல், பெண் சீடர்களை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பணிகளாலும் பண்பாலும் சீடர்கள் சான்று பகர்ந்தார்கள். ஆட்சியாளர்களின் தீங்கிழைக்கும் ஆட்சி முறைக்கு எதிரான, முரண்பட்ட ஆளுமைகளாய் நயன்மை காத்தார்கள். தங்களின் நேர்மையான நிலைப்பாட்டிற்காக இன்னுயிரையும் இழக்க அவர்கள் தயங்கியதில்லை. எனவேதான், இயேசுவின் சீடர்களாய் வாழஇயேசு அனுபவம்பெற்றிருப்பதோடு, இயேசுவிற்குச் சான்று பகரும் வாழ்க்கைமுறையும் அடிப்படைத் தேவையாகிறது. இயேசு அனுபவமும் சான்று பகரும் வாழ்வுமே உண்மையான சீடத்துவ வாழ்வின் இரு இணைபிரியா, ஒன்றையொன்று நிறைவு செய்யும் பக்கங்கள்.

இயேசுவுடன் உடனிருத்தல்

இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். உங்களை நண்பர்கள் என்றேன் (யோவா 15:15) என இயேசு இன்று இளைஞர்களுக்காக நட்பிற்கான அழைப்பை விடுக்கிறார். அதோடு, “வந்து பாருங்கள் (யோவா 1:36) என இளைஞர்களை அவரோடு தங்கி வாழ அழைக்கிறார். சான்று பகரும் சீடத்துவ வாழ்விற்கு இயேசுவோடு உடனிருக்கும் அருள்வாழ்வே அடித்தளமாகும். இதை உணர்ந்துதான் தமிழ்நாடு திரு அவையின் இளைஞர் பணிக்கான கொள்கையின் முதல் முன்னுரிமையாக அருள்வாழ்வும் இறைநம்பிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

இயேசுவோடு உடனிருக்கும் ஆழமான அருள்வாழ்வை வளர்க்க இளைஞர்கள் இறைவார்த்தையை வாசித்து, உள்வாங்கி, இக்காலச்சூழலுக்கு ஏற்ப புரிந்து வாழ்ந்து காட்டலாம்; அருளடையாளங்களின் பொருளுணர்ந்து, அவை விடுக்கும் அழைப்புகளுக்குப் பதிலளிக்கலாம்; ஆழ்நிலைத் தியானம், இயற்கைத் தியானம், இனிய இசை தியானம், திருச்செபமாலை, புதுமையான இறைவேண்டல்கள், இளைஞர் திருப்பலி, ஆற்றுப்படுத்தும் ஒப்புரவு போன்ற அருள்வாழ்வு பயிற்சிகள் வழியாகவும் இயேசு அனுபவம் பெறலாம். இளைஞர் இயேசுவின் ஆளுமையையும் செயல்பாடுகளையும், வாழ்வியல் முறைகளையும், வாழ்வின் மதிப்பீடுகளையும், உறவுகொள்ளும் முறையையும், உதவி செய்யும் பாங்கினையும் தன்வயப்படுத்தியும் இயேசுவோடு உடனிருக்கலாம். இவ்வாறு இளைஞர் இயேசு என்னும் திராட்சைச் செடியின் கிளைகளாய் இளைஞர்கள் இணைந்திருக்கவேண்டும். உயிரோட்டமான இணைவே கனிகள் ஈவதற்கான உயிராற்றல் என்பதை நெஞ்சில் நிறுத்தவேண்டும்.

சான்று பகர்தல்

இயேசுவோடு உடனிருந்து உயிரியக்கம் பெறும் இளைஞர்கள் தாங்கள் வாழும் சமூகத்தில் உயிராற்றலோடு ஈடுபடுவார்கள். “இளைஞர் தெருக்களில் களமாடுகிறார்கள்; மாற்றத்தின் மிக முக்கிய ஆதரவாளர்களாக இருக்க விழைகின்றனர்; இயேசு வெறும் பார்வையாளர் அல்லன் அவர் ஈடுபட்டார். எனவே, ஏதோ ஒரு வழியில் பொதுநலனுக்காகப் போராடுங்கள், ஏழைகளுக்குப் பணியாற்றிடுங்கள். அன்பும் பணியாற்றும் பண்பும் கொண்ட புரட்சியின் முதன்மையான செயல்பாட்டாளர்களாக இருங்கள் (கிவா 174) என்று மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்கிறிஸ்து வாழ்கிறார்என்ற திருத்தூது ஊக்கவுரை வழியாக இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

இளைஞர்களே! நீங்கள் கடவுளின் அன்பைத் தழுவிக்கொள்ளவும், நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளாக வாழவும் பிளவுபட்ட உலகில் அமைதிக்காக உழைக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். பணியாற்றுவதற்கான அழைப்பிற்குப் பதிலுரைக்க அஞ்ச வேண்டாம்எனத் திருத்தந்தை லியோ அழைப்பு விடுக்கின்றார்.

இயேசுவோடு உடனிருந்து, அவரது அனுபவத்தில் வேரூன்றிய இளைஞர்கள், தங்கள் வாழ்க்கை நிலைகளுக்கும் தனியழைப்பிற்கும் ஏற்ப சமூகத்தில் ஈடுபட்டு, சமூக நீதிச் செயல்பாடுகளில் களமாட வேண்டும். ஆண், பெண் நிகர்நிலையைப் பேணிக்காக்கப் பெண்ணடிமைத்தனம், ஆண் மேலாதிக்கம், பாலியல் கொடுமைகள் போன்றவற்றிற்கெதிராக அறச்சீற்றத்துடன் பல முன்னெடுப்புகளை எடுப்பதோடு பெண்ணுரிமையைப் பேணுதல், பெண்களின் மாண்பைப் போற்றுதல், சமவாய்ப்பு போன்ற மாற்றநிலை நோக்கிப் பயணிக்கவேண்டும். சாதியத்தால் பிளவுபட்டுக் கிடக்கும் திரு அவையையும் சமூகத்தையும் கேள்விகேட்டு, இளைஞர் இயேசுவின் அன்புநெறியிலும் சமன்மைப் பாதையிலும் இயங்கும் புதிய சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கவேண்டும். மது, போதைப்பொருள்களால் மாண்பிழந்து தள்ளாடும் இளைஞர், மாணாக்கர் சமூகத்தை நெறிப்படுத்தி, போதையில்லாப் புதிய இளைஞர் பண்பாடு, போதை நோய்க்கான மருத்துவம், போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற நோக்கங்களோடு போராட வேண்டும். இளைஞர் உலகை வீழ்த்தும் பாலுணர்வைத் தூண்டும் படங்கள், அறநெறியற்ற ஊடகப் பயன்பாடு, இணையவழி அச்சுறுத்தல்கள் போன்ற எண்மின் படையெடுப்புகளை வீழ்த்த அறநெறியுடன் இளைஞர்கள் வழிநடத்தப்பட வேண்டும்.

உறவுகளையும் வளங்களையும் பாதுகாப்பையும் அழித்து, சொல்லொண்ணாத் துயரத்தில் குற்றுயிராக்கும் போர்களுக்கெதிராகவும் நாடுகளின் முதலாளித்துவப் போக்கிற்கெதிராகவும், பொதுமையில் வேரூன்றும் நிலையான அமைதியை நிலைநாட்டும் இறையாட்சியின் தலைவர்களாக இளைஞர்கள் உயர வேண்டும். பகட்டையும் கவர்ச்சியையும் புறந்தள்ளி, கொள்கையுள்ள அரசியலை இனம்காணவும், தாங்கள் வாழும் பகுதியில் அரசியல் தன்மையோடு இளைஞர்கள் செயல்பட வேண்டும். இயற்கை வளங்களைச் சூறையாடும் திட்டங்களையும் சட்டங்களையும் முதலாளித்துவ அமைப்புகளையும், அறிவுக்கூர்மையுடனும் அரசியல் ஆற்றலோடும் இளைஞர்கள் அகற்றவேண்டும்.

மலைவாழ் மக்களுக்கான நீதிப்பணிக்காக உயிர் விட்ட அருளாளர் இராணி மரியா, பழங்குடியினரின் உரிமைகளுக்காக உயிர்நீந்த அருள்பணி. ஸ்டேன் சுவாமி, ஊழலுக்கெதிராகக் குரல் கொடுத்ததால் கொல்லப்பட்ட காங்கோ நாட்டு இளம் அருளாளர் ஃபுளோரிபர்ட் ப்வானா சூய் (Floribert Bwana Chui), நாட்டுரிமைக்காகப் போர்புரிந்த இளம் வீராங்கனை புனித ஜோன் ஆஃப் ஆர்க், ஊடகத் துறையில் கிறித்தவ மனநிலையோடு செயலாற்றிய அருளாளர் கார்லோ அக்குத்திஸ், மனித உரிமைக்காகக் குரல் கொடுத்ததால் கொலை செய்யப்பட்ட பேராயர் புனித ஆஸ்கர் ரொமேரோ போன்றோரையும் உங்கள் சான்று வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

இளைஞர் இயக்கம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளை நிறைவு செய்யும் வேளையில், எல்லாப் பங்குகளிலும் இளைஞர் இயக்கம் தொடங்கப்பட்டுச் செயல்பட முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். பங்குகள், மறைவட்டங்கள், மறைமாவட்டங்கள் ஆகிய தளங்களில் இளைஞர்களுக்கான உருவாக்கப் பயிற்சிகளான தலைமைத்துவம், ஆளுமை, சமூகப் பகுப்பாய்வு போன்றவை வழங்கவேண்டும். எல்லா மறைமாவட்டங்களிலும் பயிற்சிபெற்ற இளைஞர்களை ஒருங்கிணைத்து, பங்குச் சந்திப்புக் குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும். அக்குழுக்கள் வழியாகப் பங்கு இளைஞர் இயக்கங்களை ஒருங்கிணைத்து, உயிரூட்டி, ஆற்றல்படுத்த வேண்டும்.

22-வது இளைஞர் ஞாயிறன்று (03.08.2025) போதைப்பொருள்களுக்கெதிராக விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்திடவும், குருதிக் கொடையாளர் பட்டியலை எல்லாப் பங்குகளிலும் உருவாக்கி, தமிழ்நாடு அளவில் தொகுத்திடவும், பங்களவில் ஏழை மாணவர் ஒருவருக்குக் கல்வி உதவித் தொகை வழங்கிடவும், மறைமாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திடவும், மதுக் கடைகளை அகற்றக் கோரியும், போதைப் பொருள்கள் விற்பனையைத் தடைசெய்யக் கோரியும் முதலமைச்சர் தனிப்பிரிவிற்குக் கோரிக்கை மனு வழங்கிடவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இறையாசியும் அன்னை மரியாவின் வழிநடத்துதலும் உங்கள் அனைவரோடும் இருப்பனவாக!

news
ஆன்மிகம்
புனித எண்ணெய் (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 20)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)

அகஸ்டின்:தந்தையே, சென்றமுறை நாம் சந்தித்தபோது, எவ்வாறு சாதாரண நீர் புனிதப்படுத்தப்படுகின்றபோது ஆற்றல் வாய்ந்ததாக மாறுகிறது என்பதை திருவிவிலியப் பின்னணியிலும் அறிவியலின் பின்னணியிலும் நீங்கள் சுட்டிக்காட்டினீர்கள். இது என் சிந்தனையை இன்னும் அதிகமாக்கியது. மனிதர்களாகிய நம் எண்ணங்களும் வார்த்தைகளும் எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவை என்பதை என்னால் உணர முடிந்தது. உதாரணமாக, நம் மனம் கூட நேர்மறையான வார்த்தைகளைக் கேட்கும்போதும், நல்ல எண்ணங்களிலிருந்து உருவாகும் அதிர்வுகளை உணரும்போதும் உற்சாகமடைகிறது. உயரமடைகிறது, உருவாக்கம் கொள்கிறது. எதிர்மறை வார்த்தைகளாலும் எண்ணங்களாலும் சிதைக்கப்படுகிறது, சீரழிக்கப்படுகிறது, சிக்கலாகின்றது. இதுதான் தண்ணீருக்கும் நடக்கிறது. ‘ஆசிர்வதித்தல், ‘புனிதப்படுத்தப்படுதல்,’ ‘மந்திரித்தல்என்றாலே ஆற்றல்மிக்க நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்துவதுதானே! இப்பொழுது ஆற்றல் மையங்கள்மீது எண்ணெய் பூசப்படுவது குறித்துச் சொல்லுங்கள் தந்தையே!”

மார்த்தா:எனக்குத் தெரிந்தவரையில், நம் அன்றாடச் செயல்பாடுகளில் எண்ணெயின் பங்களிப்பு மிகவும் அதிகம். மிதிவண்டி உள்பட எல்லா வகையான இயந்திரங்களும் சிறப்பாகச் செயல்படுவதற்கு எண்ணெயின் பங்களிப்பு இன்றியமையாதது. நம் உடல்கூட ஒருவகையான இயந்திரம்தான். அதன் சிறப்பான செயல்பாடுகளுக்கு எண்ணெய் மிகவும் முக்கியமானது. எண்ணெயின் முக்கியத்துவம் என்ன என்பதை திருவிவிலியமும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சுவையான உணவிற்கு எண்ணெயின் பங்களிப்பு மிகவும் அவசியம் (எண் 11: 8); விளக்கு எரிவதற்கு மிகவும் அவசியமானது எண்ணெய் (மத் 25:1-9); உடல்நோய்க்கான மருத்துவத்தில் எண்ணெய் முக்கியம் இடம்பெறுகிறது (எசா 1:6, லூக் 10:34); உடலின் நலனை மட்டுமல்ல, நறுமணத்தைக் கூட்டுவதற்கும் எண்ணெய் பயன்படுகிறது (ரூத் 3:3); யூத பாரம்பரியத்தில், ஒரு விருந்தினர் வீட்டிற்கு வரும் போது அவரை எண்ணெய் பூசி வரவேற்பது வழக்கம் (லூக் 7:46); வாழும்போது மட்டுமல்ல, வாழ்ந்து இறந்தபின்பு உடலைப் பதப்படுத்துவதற்கு எண்ணெய் தேவைப்படுகிறது (மாற் 16:1).”

அருள்பணி:எண்ணெயினால் நம் புறவாழ்விற்கு நிறைய பயன்கள் உண்டு என்றாலும், அருளடையாளத்தில் நாம் எண்ணெயைப் பயன்படுத்துவது ஆன்மிகக் காரணங்களுக்காக! மூன்றுவிதமான எண்ணெய்களைத் திரு அவை அருளடையாளக் கொண்டாட்டங்களுக்குப் பயன்படுத்துகிறது. ) கிறிஸ்மா தைலம் (SC), ) ஆயத்தக்கார எண்ணெய் (GS) மற்றும் நோயாளர் திருஎண்ணெய் (GI). வழக்கமாக இம்மூன்று எண்ணெய்களுமே ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் புனித வாரத்தில் மறைமாவட்ட ஆயரின் தலைமையில் அனைத்து குருக்களும் பங்கெடுக்கும் சிறப்புத் திருப்பலியில் புனிதப்படுத்தப்படுகின்றன. எனினும், அவசரச் சூழ்நிலையில் ஆயத்தக்கார எண்ணெயும், நோயாளர் திரு எண்ணெயும் அருள்பணியாளர்களாலேயே புனிதப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படலாம்.

ஆயத்தக்கார எண்ணெயானது ஒரு நபர் கடவுளின் அருளைப் பெறுவதற்கான தயாரிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. திரு அவையின் மரபின்படி, ஒரு நபரைப் பீடித்திருக்கும் எதிர்மறைத் தன்மைகளிலிருந்தும் தீயோனின் செயல்பாடுகளிலிருந்தும் விடுவிப்பதற்காக ஆயத்தக்கார எண்ணெயானது குழந்தைகளின் நெஞ்சில் பூசப்படுகிறது. தீமைக்கு எதிரான போராட்டத்தில், எண்ணெயால் அருள்பொழிவு செய்யப்படுவது ஒருவருக்கு வலிமையளிக்கிறது என்கின்ற கருத்தை திருவிவிலியம் சுட்டிக்காட்டுகிறது (திபா 23:5, திபா 45:8, எபி 1:9). மேலும், அருள்பொழிவு ஒருவரைப் பொய்மையிலிருந்து காக்கிறது என்பதையும் திருவிவிலியத்தில் பார்க்கிறோம் (1யோவா 2:27). புனித ஹிப்போலித்துஸ் (St. Hippolytus) தனதுThe Apostolic Tradition’ (கி.பி. 210) என்ற நூலில் இந்த எண்ணெயைபேயோட்டுவதற்கான எண்ணெய் (The oil of exorcism) என்று அழைக்கிறார். இந்த மரபானது திரு அவையில் இன்றுவரை பின்பற்றப்படுகிறதுபேயோட்டுவதற்கான இறைவேண்டல் முன்னெடுக்கப்படுகின்ற வேளையிலே இந்த எண்ணெய் குழந்தையின் நெஞ்சின்மீது பூசப்படுகிறது.

நோயாளர் திரு எண்ணெய் குறித்து நாம் நோயில்பூசுதல் அருளடையாளம் குறித்துப் பேசும்போது கவனம் செலுத்தலாம். கிறிஸ்மா தைலமானது நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்பதன் அடையாளமாக நம்மீது பூசப்படுவது. கிறிஸ்மா தைலத் திருப்பலியின்போது, மந்திரிக்கப்பட இருக்கின்ற ஒலிவ எண்ணெயோடு நறுமணத் தைலமானது கலக்கப்படுகின்றது. இது கடவுளே நம் வாழ்வின் நறுமணமாக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டும் அடையாளமாகவும் இருக்கிறது (2கொரி 2:15,16). திருமுழுக்கு, உறுதிபூசுதல், குருத்துவம் ஆகிய மூன்று அருளடையாளக் கொண்டாட்டங்களுக்கு இந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.”

கிறிஸ்டினா:கிறிஸ்மா எண்ணெயின் சிறப்பம்சம் என்ன தந்தையே?”

அருள்பணி:தூய ஆவியின் பிரசன்னத்தையும் ஆற்றலையும் நாம் பெறுவதற்கான அடையாளமாக கிறிஸ்மா எண்ணெய் நம்மீது பூசப்படுகிறது. எண்ணெய் பூசப்படுகின்ற வேளையில், தூய ஆவி இறங்கி வருவதைப் பற்றிய குறிப்பு திருவிவிலியம் முழுவதும் காணப்படுகிறது. சவுல், தாவீது ஆகியோர் எண்ணெயால் அருள்பொழிவு செய்யப்பட்ட பின்பு, கடவுளின் ஆவியார் அவர்கள் மீது தங்கி அவர்களை ஆட்கொண்டார். எலியாவால் அருள்பொழிவு செய்யப்பட்ட பின்பு, கடவுளின் ஆவி எலிசா மீது தங்கியது. இயேசுவும் கடவுளின் ஆவியால் அருள்பொழிவு செய்யப்பட்டது குறித்துக் குறிப்பிடுகிறார். திரு அவை வரலாற்றிற்கு வருகின்றபோது, திரு அவைத் தந்தையர்களில் முக்கியமாகக் கருதப்படுகிறவர் எருசலேம் நகரத்து புனித சிரில். அவர், ‘எண்ணெய் பூசுவது என்பது உடன்படிக்கையின் முத்திரை ஆகும். தூய ஆவியார் நம்மீது பொழியப்படுகிறார் என்பதன் அடையாளம் ஆகும்என்கின்றார். இக்கருத்தைச் சொல்லிவிட்டு அவரே நமக்கு ஓர் அழைப்பையும் தருகிறார். எனவே, எண்ணெய் பூசுதலை ஒரு வெற்றுச் சடங்காக மட்டும் எண்ணி விடாதீர்கள். திருப்பலியின்போது தூய ஆவியார் சாதாரண ரொட்டியை இயேசுவின் உடலாக மாற்றுவதுபோல, எண்ணெய் பூசுதல் வழியாக உங்கள்மீது இறங்கி வரும் தூய ஆவியார் உங்களைக் கடவுளின் சாயலாக மாற்றுகிறார்.”

மார்த்தா:தந்தையே, நீங்கள் இக்கருத்தைக் கூறும்போது, புனித பவுலின் கீழ்க்காணும் வார்த்தைகள் என் நினைவிற்கு வருகின்றன: ‘அவரே (கடவுளே) நமக்கு அருள்பொழிவு செய்துள்ளார். அவரே நம் மீட்பை உறுதிப்படுத்தும் அடையாளமாகத் தூய ஆவியை நம் உள்ளத்தில் பொழிந்து நம்மீது தம் முத்திரையைப் பதித்தார் (2கொரி 1:21, 22).”

அருள்பணி: “திருமுழுக்குக் குறித்து நாம் மற்றொரு கருத்தையும் மனத்திலிருத்துவது அவசியம். திருமுழுக்கைத் திருவிவிலியம் பாவமன்னிப்போடு தொடர்புபடுத்துவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ‘பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்திற்கும் சென்று அவர் (திருமுழுக்கு யோவான்) பறைசாற்றி வந்தார் (லூக் 3: 3) என்றும், ‘நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள் (திப 2: 38) என்றும் நாம் வாசிக்கிறோம். கடந்த கட்டுரைகளில் நாம் வாசித்ததுபோல, புறம் நோக்கிய மனம் தன்னைத் தக்கவைப்பதற்காக எத்தகைய தீமையையும் செய்ய துணிந்து விடுகிறது. இதுவே பாவம் என்பது! எனவே, புறம் நோக்கிய மனத்தை அகம் நோக்கித் திருப்புவது என்பது பாவத்திலிருந்து மீண்டெழுவதே! பாவத்திலிருந்து மன்னிப்புப் பெறுவதே! இவ்வாறு பாவத்திலிருந்து மீண்டெழும் மனம் குற்றமற்றதாக மாறுகிறது என புனித பேதுரு எடுத்துரைக்கிறார்: ‘திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது (1பேது 3: 21). மேலும் கிறிஸ்துவோடு இணைந்து அவரைப்போல வாழ்வதற்கான வழியையும் திருமுழுக்கு நமக்குத் திறந்து வைக்கிறது என்பதை புனித பவுல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள் (கலா 3:27).

மார்த்தா:தந்தையே! மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு சில செயல்பாடுகளின் தொகுப்பாகத் தெரியும் திருமுழுக்கு அருளடையாளம் எவ்வாறு புது வாழ்விற்கான வழிமுறையாக இருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்கினீர்கள்! நன்றி தந்தையே!”      

தொடரும்

news
ஆன்மிகம்
மிகையான மையப்படுத்தல் தவிர்க்கப்பட வேண்டும்! - மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 07

வழிபாட்டுமுறைகள், அறம், சமூகம் மற்றும் இறையியல், நற்செய்திப் பணிமுறை என்பவை சார்ந்த கருத்து மோதல்கள் இன்று திரு அவையில் நிலவுகின்றன. அவற்றை மேற்கொண்டு ஒன்றிப்புறவை வளர்த்தெடுக்கத் துணிச்சலான முயற்சிகள் தேவை. ‘பன்மையில் ஒருமைஎனும் திரு அவையின் இயல்புப் பண்பைச் சிறப்பாக வெளிப்படுத்துபவை, அதனுடன் ஒன்றிப்புறவில் உள்ள கீழைத் திரு அவைகள். அவற்றை இலத்தீன் மயமாக்கும் அணுகுமுறை கைவிடப்பட்டு, அவற்றின் தனித்தன்மையும் தன்னாட்சியும் அதிகமதிகமாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலை இன்று வந்துள்ளது. அவற்றின் பன்மையில் ஒருமை எனும் அனுபவம் திரு அவையின் கூட்டியக்கத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் உதவ முடியும்.

உண்மையான உலகளாவியத் திரு அவையாகத் திகழ அதற்குப் பல்வகை வெளிப்பாடுகள் இயல்பானவையும் இன்றியமையாதவையும் ஆகும். ஏனெனில், அது வாழும் இடங்களும் பண்பாடுகளும் சூழமைவுகளும் வெவ்வேறானவை. அவற்றின் வேறுபடும் அர்த்தங்களையும் முதன்மைகளையும் பல்வகை வளங்களையும் ஏற்று மதிக்கும் உணர்வைத் திரு அவை இன்னும் அதிகம் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமையைக் காத்து வளர்க்கும் முனைப்பில் பன்மைத்தன்மையை அழிக்கும் மிகையான மையப்படுத்தலுக்கும் ஒருசீராக்குதலுக்கும் அது ஆளாகி விடக்கூடாது.

நற்கருணையிலிருந்தே நாம் பன்மையில் ஒருமை என்பதை எடுத்துரைக்கக் கற்றுக்கொள்கிறோம்; ஒரே அருளடையாள மறைபொருள், பல்வேறு வழிபாட்டு மரபுகள், கொண்டாட்டத்தில் ஒன்றிப்பு, அழைத்தல்கள், அருள்கொடைகள், பணிகள் என்பனவற்றில் பல்வகை. இதுவே பன்மையில் ஒருமை. ஆவியார் உருவாக்கி வளர்க்கும் இந்த ஒத்திசைவு அனைத்தையும் ஒரு சீராக்குதல் அல்ல; இருப்பினும், திரு அவைசார் கொடை ஒவ்வொன்றும் பொது வளர்ச்சிக்காகவே என்பதை வேறு எதையும்விட நற்கருணை அதிகமாகப் புலப்படுத்துகிறது (முஅ 3f).

கூட்டியக்கத் திரு அவையின் இன்றியமையாத ஒரு பண்பு பல்வேறு பிரிந்த அல்லது சீர்திருத்தத் திரு அவைகளுடன் ஒன்றிப்பிற்கான முயற்சிகள். தம் சீடர்களின் ஒன்றிப்பு என்பது இயேசு விரும்பியதும், தமது இறுதி இரவு விருந்தின்போது தந்தையிடம் இறைவேண்டல் செய்ததும் ஆகும் (யோவா 17:20-26). அவர் விடுக்கும் அழைப்பு, நாம் பெற்றுள்ள பொதுவான திருமுழுக்கு என்பனவற்றின் அடிப்படையில் கிறித்தவ ஒன்றிப்பிற்கான பயணத்தைத் தொடரவும் தீவிரப்படுத்தவும் கத்தோலிக்கத் திரு அவை உறுதிபூண்டுள்ளது.

மேலும், திரு அவை அதிகமதிகமாக இன்று பல பண்பாடு மற்றும் பல்சமயச் சூழமைவுகளில் இயங்குகிறது. இதனால் அந்தப் பல்வேறு பண்பாடுகள் மற்றும் சமயங்களுக்கு இடையே உரையாடல் அவசியமாகிறது. “தூய ஆவியார் எந்தச் சமயத்தையும் நம்பிக்கையையும் பண்பாட்டையும் சார்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் வழியாகப் பேசமுடியும் என்பதைத் திரு அவை அறிந்துள்ளது (முஅ 5f)). இதனால் அது மக்களிடையே ஒன்றிப்பை உருவாக்க பல்சமய உரையாடலை ஊக்குவிக்கிறது. இவ்வுரையாடல் மனிதகுலத்தின் ஒன்றிப்பு, சமூக நீதி, அமைதி, ஒப்புரவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பனவற்றையும் நோக்கியதாக இருத்தல் வேண்டும். மேலும், கூட்டியக்கத் திரு அவை எங்கு இருந்தாலும் ஏனைய சமய நம்பிக்கையாளர்களுடன் இணைந்து அப்பாதையில் நடக்க உறுதிகொண்டுள்ளது. அது நற்செய்தியின் மகிழ்ச்சியை அவர்களுடன் தாராளமாகப் பகிர்ந்துகொண்டு, அவர்களது கொடைகளை நன்றியுடன் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது. இத்தகைய ஒத்துழைப்பின் வழியாக அனைவரும் சகோதரர், சகோதரிகள் என ஒன்றிணைந்து நீதி, தோழமை, அமைதி என்பனவற்றை வளர்ப்பதே நமது நோக்கம்.

இத்தகைய சூழ்நிலைகளில் அதன் நற்செய்தி அறிவிப்புப் பணியும் உடன் பயணித்து, செவிகொடுத்து, கற்றுக்கொள்வதாக அமைவது அவசியம். எந்த ஒரு சமயத்தை அல்லது பண்பாட்டைச் சந்திப்பது என்றாலும், அது தான் சார்ந்திருப்பதற்குச் சமமான புனித இடத்தில் புகுகின்ற உணர்வுடன் செய்யப்பட வேண்டியது ஆகும். அதற்கு ஒருவர் தன்னுடையகாலணிகளைக் கழற்றி வைத்துக்கொண்டுதாழ்மை மற்றும் மதிப்பு உணர்வோடு செல்வது அவசியம் (முஅ 5c).

மேலும், பிற சமய மரபுகளுடன் உள்ள உறவில் நட்புறவு, நல்லிணக்கம், ஒத்திசைவு என்பனவற்றை வளர்ப்பதும், அருள்வாழ்வு மற்றும் அறம்சார் விழுமியங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதும், அவற்றைச் சந்தித்து அவற்றுடன் உரையாடி, வளங்களைப் பரிமாற்றம் செய்வதும் கூட்டியக்கத் திரு அவைக்கு இயல்பான செயல்பாடுகள்.

நற்செய்தி அறிவிப்புப் பணி சில இடங்களில் குடியேற்ற ஆதிக்கத்தோடும் அந்தந்த மக்களின் பண்பாட்டுக் கலைப்பு, சமய அழிப்பு என்பனவற்றுடன் கைகோர்த்தே நடந்துள்ளது. “செய்துள்ள தவறுகளை ஏற்றல், அவை பற்றிய புதிய புரிதலைக் கற்றுக்கொள்ளுதல், குடியேற்ற ஆதிக்கத்தைக் கடந்த புதிய தான்மையுணர்வைப் புனைய முனையும் தலைமுறையோடு இணைந்து பயணித்தல் என்பன அத்தகைய சூழமைவுகளில் நற்செய்தி அறிவிப்புப் பணியாற்றுவதற்கு அவசியம். நாம் ஒருவரை ஒருவர் நிறைவாக்குகிறோம், வேறுபட்ட பண்பாடுகளைச் சந்திப்பது கிறித்தவக் குழுமங்களின் நம்பிக்கைசார் வாழ்வையும் புரிதலையும் செழுமைப்படுத்த முடியும் என அவற்றை மதிக்கும் மனநிலையும் தாழ்மையுணர்வும் அப்பணிக்கு அவசியமான அடிப்படைப் பண்புகள் (முஅ 5e).

செயல்படுத்தச் சில பரிந்துரைகள்

1. திரு அவையில் அனைத்து நிலைகளிலும் மிகையான மையப்படுத்தலைத் தவிர்க்கும் வழி வகைகளைத் தெளிதேர்வுசெய்து முக்கிய முடிவு எதுவெனினும், அதனுடன் தொடர்புடைய எல்லாருடைய ஒத்திசைவையும் பங்களிப்பையும் கூட்டியக்க முறையில் பெற்று அதை நடைமுறைப்படுத்த வேண்டும் (முஅ 5m).

2. அந்தந்த மண்ணின் மக்களுக்கு எவ்வாறு அருள்பணி ஆற்றுவது என அவர்களுக்கு ஏற்ற புது வழிமுறைகள் கண்டறியப்படவேண்டும். அவர்களுடன் கலந்துரையாடி அவை பற்றி முடிவெடுப்பது அருள்பணி சிறப்புற உதவும் (முஅ 5n).

3. திரு அவையின் வாழ்விற்கு முக்கியமான திருவழிபாடு, அறவியல், சமூக நிலைப்பாடுகள், இறையியல் என்பனவற்றில் முரண்படும் பல புரிதல்களும் விளக்கங்களும், நற்செய்தி அறிவிப்புப் பணிமுறை, பண்பாட்டுமயமாதல் என்பவை பற்றிய கருத்து வேறுபாடுகளும் இன்று பரவலாக உள்ளன. உரையாடல் வழியாக இவை பற்றிய கருத்து ஒற்றுமையை உருவாக்கி, ஒற்றுமைக்கான துணிச்சலான முயற்சிகளில் இறங்குவதுடன் அவற்றை மேற்கொள்ள ஒப்புரவுக்கான செயல்பாடுகளையும் முன்னெடுக்கவும் வேண்டும் (முஅ 5i).

4. இன்றைய உலகில் பல்வேறு சமூகங்களுக்கு இடையில் வணிகத்தை மட்டுமல்ல; கொடிய ஆயுதங்களைக்கூடக் கையாளும் அளவிற்கு மோதல்களும் போட்டிகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றிற்கு வன்முறை இல்லாத தீர்வு காண்பது எவ்வாறு என்பது பற்றி அதிகம் சிந்திப்பதும், உரிய பயிற்சிகள் கொடுப்பதும் அவசியம். பல்வேறு சமயங்களுடன் உரையாடி, ஒத்துழைத்து இத்துறையில் கிறித்தவர்கள் பெரும் பங்களிப்பு செய்யமுடியும் (முஅ 5k).

news
ஆன்மிகம்
புனித ஜான் மரிய வியான்னி இறைவன் மீது பேரார்வமும் இறைமக்கள் மீது கனிவிரக்கமும் கொண்ட மேய்ப்புப்பணியாளர்!

ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்டு 4-ஆம் நாள் அருள்பணியாளர்களின் பாதுகாவலராம் புனித ஜான் மரிய வியான்னியின் நினைவைக் கொண்டாடுகின்றோம். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆர்ஸ் பங்குத்தளத்தில் பணியாற்றிய இவரின் இறைப்பணியின் செயல்பாடுகளும் துணிவான முடிவுகளும் இன்றும் பேசுபொருளாக, உந்துசக்தியாக அனைத்து அருள்பணியாளர்களுக்கும் அமைந்துள்ளன.

கிறிஸ்துவின்மீது அவரது பேரார்வமும் தொடர்முயற்சியும் முன்னெடுப்புகளும் அவரது மறைப்பணி சார்ந்த மக்கள்மீது கொண்டிருந்த கனிவிரக்கமும் செயல்பாடுகளும் உலகில் உள்ள அனைத்து அருள்பணியாளர்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். அவரது மேய்ப்புப்பணியின் நான்கு தூண்களாக அவரது செபவாழ்வும் பேரார்வமும் தவமுயற்சிகளும் விடாமுயற்சியும் அமைந்திட்டன.

செப வாழ்வு

இன்று செப வாழ்வு என்பது காலாவதியான ஒரு செயல்பாடாகவே கருதப்படுகின்றது. சமூக ஊடகங்களும் செல்லிடைப்பேசிகளும் நமது செப நேரங்களை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. நமது புனிதரின் வியப்புக்குரிய மறைப்பணிக்கு அவரது செப வாழ்வே அடித்தளமாக அமைந்திருந்தது. செப வாழ்வும் அதன் செயல்பாடுகளும் ஓர் அருள்பணியாளரின் குறைந்தபட்சக் கடமையாகும் (திரு அவைச் சட்டம் எண். 276). செப வாழ்வின் மூலம் இறைவனோடு ஓர் அருள்பணியாளர் இணைந்திருத்தால் மட்டுமே, ஒவ்வோர் இறைமக்களின் கண்ணீரையும் வேதனையையும் தமது திருப்பணியின் திருவுடைகளால் வெரோணிக்காவைப் போன்று அவர்களின் துன்பங்களைத் துடைக்க இயலும்.

செபம் என்பது தாழ்ச்சியின் வெளிப்பாடு. ஒவ்வோர் அருள்பணியாளரும் செபிக்கின்றபொழுது, தனது மேய்ப்புப்பணியில் மற்றவர்களின் செயல்களும் தனக்கு மிகவும் அவசியமானது என்பதை அவர் உணர்ந்துகொள்கின்றார். மேய்ப்புப்பணியில் ஈடுபடும் அனைத்து அருள்பணியாளர்களும், இறைமக்கள் தங்களுக்குச் செபிக்கின்ற செயல்களில் நம்பிக்கை கொள்ளவேண்டும். சர்வ அதிகாரமும் அடக்கி ஆள்கின்ற மனநிலையும் முற்றிலுமாகச் சரிந்துவிழும் இடம்தான் செப அனுபவச்சூழல்கள். செப அனுபவங்களில்தான் இறைவிருப்பத்தை நாம் அறிகின்றோம்; அதற்குக் கீழ்ப்படிகின்றோம். இறைதூண்டல்களை உய்த்துணர்கின்றோம். கூட்டொருங்கியக்கத் திரு அவையின் மேய்ப்புப்பணிகளின் செப சூழல்களில்தான் தூய ஆவியின் வழிகாட்டுதலைப் பெற்று, அனைவரின் கலந்தாலோசனைக்குப் பிறகு சரியான முடிவுகளை எடுக்க இயலும். எனவே, செப வாழ்வு மேய்ப்புப் பணியில் மிக முக்கிய அங்கம் என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றார்.

செபம் என்பது ஒவ்வொரு துன்பச்சூழலிலும் அடைக்கலமாக, மகிழ்ச்சியின் அடித்தளமாக, தொடர் மகிழ்வின் ஊற்றாக, சோகமான வாழ்விலிருந்து நம்மைப் பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளதுஎன புனித யோவான் குறிப்பிடுகின்றார். ஆகவே, அருள்பணியாளர்கள் தங்கள் மேய்ப்புப்பணியின் வழக்கமான கடமைகளை நிறைவேற்றுகின்றபொழுது, செப வாழ்விற்கென்று மிகுதியான நேரத்தை வழங்குவது இன்றியமையாதது.

பேரார்வமும் தவமுயற்சிகளும்

திரு அவையின் புனிதர்கள் அனைவரும் தங்களின் அணுகுமுறையிலும் வாழ்வின் செயல்பாடுகளிலும் மிக எளிமையானவர்களாகவே செயல்பட்டார்கள். எளிமையின் வழித்தடங்களே புனிதத்தை அடையும் பாதை என்பதை கற்றுத் தேர்ந்தனர். எளிமையான வாழ்வு முறையும் எண்ணங்களில், செயல்களில் தூய்மையும் தவ ஒடுக்கச் செயல்பாடுகளும் ஓர் அருள்பணியாளரைத் தூய வாழ்விற்கு இட்டுச்செல்லும். புனித ஜான் மரிய வியான்னி 41 ஆண்டுகள் (1818-1859) பிரான்சிஸ் நாட்டின் லியோன் நகருக்கு வடக்கே 40 கி.மீ. தொலைவில் அமைந்திருந்த சிறிய நகரமான ஆர்ஸில் தனது இறுதிமூச்சுவரை எளிய பணியாளராக இறைப்பணி ஆற்றினார். அவரது எளிமையை உலகப்புகழுக்கும் பெருமைக்கும் செல்வத்திற்கும் சிறிதும் வளைந்து கொடுக்காத மனவுறுதி கொண்டதாகவே இருந்தது.

இறைவன் மீதும், தனது அருள்பணியில் வெளிப்படுத்தப்பட்ட கடமையுணர்ச்சியும் பிளவுபடா உள்ள ஈடுபாடுமே வியான்னியை ஆர்ஸ் நகரின் பாதுகாவலராக உயர்த்தியது. மாலை நேரங்களில் சிறு குழந்தைகளுக்கு மறைக்கல்வி போதித்து, திருவிவிலியக் கதைகளைப் பகிர்ந்து நேரத்தைச் செலவிட்டார். அவர்களுடன் இயல்பாக, கரிசனையுடன் பழகினார். அருள்பணியாளர்களின் தொடர் உருவாக்கப் பயிற்சிக்கான, சர்வதேச மாநாட்டின் பங்கேற்பாளர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றிய பொழுது, “ஓர் அருள்பணியாளர் சிறு குழந்தைகளுடன் விளையாட இயலாதபொழுது அவர் மேய்ப்புப்பணியில் முழுமையான ஈடுபாட்டை வெளிப்படுத்தத் தவறுகின்றார்என்கிறார். முழுமையான மனித மாண்பை வெளிப்படுத்தி, குழந்தைகளுடன் இயல்பாக விளையாடக் கூடியவர்களாகவும், சமூகத்திலுள்ள முதியவர்களைப் பராமரித்து, ஆரோக்கியமான உறவுகளை வளர்த்து, மேய்ப்புப் பணியின் சவால்களை மனமுதிர்ச்சியுடன் எதிர்கொள்கின்றவர்களாகவும் இருக்கின்ற அருள்பணியாளர்கள் இன்றைக்குத் தேவைப்படுகின்றார்கள்.

புனித ஜான் மரிய வியான்னியைப் பல நேர மணி நேரம் ஒப்புரவு அருளடையாளம் மட்டுமே வழங்கி, ஆன்மாக்களைக் குணப்படுத்திய அருள்பணியாளராக, அவரது மேய்ப்புப்பணியை நாம் சுருக்கிவிட முடியாது. அவரது மேய்ப்புப்பணி ஆலய வளாகத்திற்குள் மட்டும் முடங்கிவிடவில்லை; மாறாக, அது தொலைநோக்குப் பார்வையுடன், விடாமுயற்சியுடன் இணைந்திருந்தது.

ஆர்ஸ் நகரின் திருமண வாழ்விற்கு எதிரான தவறான முறைகளால் பிறந்த பெண் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் கவனியாமல் புறக்கணித்து வாழ்ந்தனர். அவர்களுக்குக் கல்வியும் சமத்துவ வாழ்வும் அரவணைப்பும் குடும்பங்களில் மறுக்கப்பட்டன. இப்பெண் குழந்தைகளுக்கென்று இல்லம் அமைத்து, கல்வி வழங்கி, அவர்களைச் சமூகத்தின் பொறுப்புமிக்க பெண்களாக உருவாக்கினார். அந்நகரத்தின் எதிர்காலத் தூண்களாக அவர்களை அதிகாரப்படுத்தினார்.

இத்தகைய சிறு துவக்கமே, சிறுமிகளின் உருவாக்கமே, அந்நகரின் எதிர்காலத்தை மாற்றும் என நம்பிச் செயல்பட்டார். அவரது சமூக அர்ப்பணிப்பு அத்துடன் நிற்கவில்லை. ஆர்ஸ் நகரத் தோட்டத்தின் உரிமையாளர்கள் ஏழைக் கூலியாள்களின் உழைப்பினை, ஏழ்மையினைத் தங்களுக்குச் சாதகமாக்கி, குறைந்த ஊதியம் வழங்குவதை எதிர்த்தார். நீதியான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்பட நில முதலாளிகளுக்கு எதிராகக் குரலெழுப்பி, ஏழைகளின் சார்பாகப் போராடி அவர்களின் உரிமையைப் பெற்றுத்தந்தார். ஏழைகளின் துன்பங்களை, துயரங்களை உணர்ந்த தனது ஆடுகளின் முடை அறிந்த ஆயனாக அவர் செயல்பட்டதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

விடாமுயற்சி

ஆர்ஸ் நகர மக்களுக்குச் செய்த புனித வியான்னியின் மேய்ப்புப்பணியினை அங்குள்ள இரவு விடுதிகளின் உரிமையாளர்கள் வரவேற்கவில்லை. தொடக்கச் சவால்களும் போராட்டங்களும் மக்களின் புறக்கணிப்பும் மேய்ப்புப்பணியில் தவிர்க்க இயலாதவை என வியான்னி உணர்ந்திருந்தார்.

சிறிய நகரமான ஆர்ஸின் மக்கள்தொகை ஏறக்குறைய 215 மட்டுமே. 65 குடும்பங்களை உள்ளடக்கிய மக்களை இறைப்பக்கம் திருப்ப புனிதர் பத்து ஆண்டுகள் விடாமுயற்சியுடன் உழைத்தார். அவர்களுடன் மிகப்பொறுமையுடன் உரையாடி, அவமானங்களை, இழிப்பேச்சுகளைச் சகித்துக்கொண்டு இறைஇரக்கத்தை அவர்கள் உணர அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம்.

வேதனைகளும் விரக்தியும் அவரது மேய்ப்புப் பணியைச் சோர்வடையச் செய்தது. அப்பங்கினை விட்டு வெளியேறி, தனிமையில் செப ஆராதனையில் தனது வாழ்வினைக் கழித்திட அவர் விரும்பினார். ஆனால், இறைவனின் திட்டத்தைத் தனது தனிச்செபத்தில் உணர்ந்து 41 ஆண்டுகள் அங்குத் தொடர்ந்து பணியாற்றினார்.

வெறுமையாய் இருந்த ஆர்ஸ் நகரமும், அப் பங்கு ஆலயமும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் புனிதத்தளமாகவும் கடவுளின் இரக்கத்தையும் மன்னிப்பையும் பெற்று, எதிர்நோக்கின் நம்பிக்கையாளர்களாக ஆர்ஸ் நகர மக்களைப் புனிதரின் மேய்ப்புப்பணி மாற்றியது.

விடாமுயற்சியுடன் உழைப்பவர்களே, இறையரசின் கனியை மக்களுக்குப் பெற்றுத்தருவார்கள் என்பதற்கு இப்புனிதரின் வாழ்வைவிட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க இயலுமோ?

news
ஆன்மிகம்
“எதிர்நோக்கை வலுப்படுத்தும் செய்திகளைக் கூறுங்கள்!” - திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 59-வது சமூகத் தொடர்பு நாளுக்கான செய்தி

(சென்ற இதழின் தொடர்ச்சி)

சிக்கல்கள் மிகுந்த இக்காலத்தில் நம்மோடுள்ள சகோதரர்-சகோதரிகளுடன் உடன் நடந்து உற்சாகப்படுத்தி, எதிர்நோக்கு அவர்கள் உள்ளங்களில் உருவாகச் செய்யும் ஒன்றாக நமது தொடர்பாடல் அமைய வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறேன். உணர்ச்சிப்பூர்வமான, சினத்தைத் தூண்டியெழுப்பி, தற்பாதுகாப்பிற்கான எதிர்வினைகளைத் தோற்றுவிக்கும் தொடர்பாடலை அல்ல; மாறாக, மனிதர்களிடையே நட்புறவையும் திறந்த உள்ளத்தையும் உருவாக்கும் தொடர்பாடலாக அது அமைய வேண்டுமென ஆசிக்கிறேன்.

நம்புவதற்குக் காரணங்கள் எதுவும் இல்லாதது போலத் தோற்றமளிக்கும் இன்றைய சூழலில், மக்கள் அன்பையும் அழகையும் போற்றி, அதனால் எதிர்நோக்கையும் பெற்று அவர்களில் அர்ப்பண உணர்வையும், பிறருடன் ஒத்துணர்ந்து வாழும் மனநிலையையும் நமது தொடர்பாடல் உருவாக்க வேண்டுமென விழைகின்றேன். அடுத்தவரின் மனித மாண்பை மதித்துப் போற்றவும், நமது பொதுவான இல்லமாகிய உலகின் மேம்பாட்டிற்காக அக்கறையுடன் செயல்படும் மனநிலையையும் இந்தத் தொடர்பாடல் உருவாக்கவேண்டும் என்பது எனது ஆவல் (Delexit nos 217).

இந்தத் தொடர்பாடல் பொய்யான தோற்றத்தையும், அதனால் எழும் அச்சத்தையும் உருவாக்காமல், நமது எதிர்நோக்கிற்குக் காரணம் கூறும்படி அமைய வேண்டும். மார்ட்டின் லூதர் கிங் ஒருமுறை பின்வருமாறு கூறினார்: “நான் கடந்து செல்லும்போது யாருக்காவது என்னால் உதவ முடிந்தால், ஒரு வார்த்தையாலோ, பாடலாலோ ஒருவரை மகிழ்ச்சிப்படுத்த முடிந்தால் எனது வாழ்வு பயனற்றதாய் இராது.” இதனை நாம் செய்ய வேண்டுமாயின் சுயவிளம்பரங்களைத் தேடும் முயற்சி, தன்னைப் பற்றியே எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கும் தற்சிந்தனை போன்ற நோய்களிலிருந்து விடுபட்டு, நமது குரல் கேட்கப்பட வேண்டுமென்பதற்காக மற்றவர்களுடன் உரக்கக் கத்துகிற ஆபத்திலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவேண்டும். தனது செய்தியை, பதிவுகளைப் படிப்பவர்கள், கேட்பவர்கள், பார்ப்பவர்கள் தம்மை நெருங்கி வரவும், தங்கள் முழு உள்ளத்துடன் தாம் கூற விரும்பும் செய்திகளிலும் நிகழ்வுகளிலும் முழுமனத்துடன் ஈடுபடச் செய்யும் வண்ணம் தொடர்பாளர் தனது தொடர்பாடல் செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு தொடர்பாடல் மேற்கொண்டால் யூபிலி ஆண்டின் மையக்கருத்தாகியஎதிர்நோக்கின் திருப்பயணிகள்என்ற நிலையை நாம் அடையும் வாய்ப்பு உருவாகும்.

அனைவரும் சேர்ந்து எதிர்நோக்குதல்

எதிர்நோக்குதல் ஒரு சமூகச் செயல்பாட்டுத் திட்டமாகும். இரக்கத்தின் இந்த யூபிலி ஆண்டின் அரும்பெரும் செய்தியை உற்றுநோக்குவோம். கடவுள் எல்லாரையும் மீண்டும் உயர்த்தி, தம்மோடு அணைத்துக்கொண்டு நமக்குத் தமது இரக்கத்தை வழங்கும் யூபிலி ஆண்டின் அருளைப்பெற நாம் எல்லாரும் அழைக்கப் பெற்றுள்ளோம். இதில் தனிமனித மற்றும் சமூகக் கூறுகள் பிரிக்க இயலாதபடி கலந்துள்ளன. நாம் எல்லாரும் ஒன்றாகப் புறப்படுகிறோம். பல சகோதர- சகோதரிகளோடு ஒன்றாகப் பயணிக்கிறோம். ஒன்றாகவே புனிதக் கதவில் நுழைந்து யூபிலி ஆண்டின் அருளைப் பெறுகிறோம்.

நாம் கொண்டாடும் இந்த யூபிலி பல விளைவுகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சிறையில் இருப்போருக்கான இரக்கத்தையும், அவர்களது எதிர்நோக்கையும் குறிப்பிடலாம். துன்பத்தில் இருப்போரும், விளிம்பு நிலையில் இருப்போரும் அனுபவிக்கும் மேன்மை மற்றும் உடனிருப்பு அனுபவங்களும் அடங்கும். “அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர் (மத் 5:9) என்ற செய்தியை இந்த யூபிலி நமக்கு நினைவூட்டுகிறது. இவ்வாறு இது எதிர்நோக்கை ஊக்கப்படுத்துகிறது. இதனால் நமது தொடர்பாடல் செயல்பாடுகள் கவனமுடையதாகவும் கனிவுடையதாகவும் ஆழ்ந்த சிந்தனைக்குரியதாகவும் உரையாடலுக்கான வழிவகைகளைச் சுட்டிக்காட்டுவனவாகவும் அமைவது அவசியம். இந்தக் காரணத்திற்காகவே நமது தொடர்பாடல் செயல்பாடுகளில் நாம் பயன்படுத்தும் நிகழ்வுகளில் உள்ள பல நன்மையானவற்றைக் கண்டுகொள்ள முடியும்.

தங்கத் துகள்களைச் சேகரிப்போர் சோர்வடையாது, மணலை நன்கு சலித்து அதில் உள்ள தங்கத்துகள்களைத் தேடிக்கண்டுபிடிப்பது போல, நாமும் நமது தொடர்பாடல் செயல்பாடுகளில் பயன்படுத்தும் செய்திகள், நிகழ்வுகள், பதிவுகளில் காணக்கிடைக்கும் நன்மையானவற்றைத் தேடிக் கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். எதிர்நோக்கின் விதைகளைத்தேடி, அவற்றைப் பிறர் அறியச் செய்வது நமது தொடர்பாடலின் நோக்கமாகும். இதனால் இன்றைய உலகினர் ஏழைகளின் கூக்குரலுக்குச் செவிமடுக்காமல் இருப்பது குறையும். உலகமாந்தர் பிறரைப் பற்றிப் பாராமுகமாய் இருப்பதும், தம்மிலேயே அவர்கள் மூழ்கி இருப்பதும் குறையும். எனவே எதிர்நோக்கை உருவாக்கும் நன்மையின் மினுமினுப்புள்ள நல்ல செய்திகளைத் தொடர்பாடல் துறையில் இருப்பவர்கள் தேடுதல் அவசியம். இத்தகைய தொடர்பாடல் மக்களிடையே ஒன்றிப்பைக் கட்டியெழுப்ப மிகவும் உதவும். இதனால் யாரையும் தனிமையில் விட்டுவிடாமல், எல்லாருடனும் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு ஏற்படும்.

இதயத்தை மறக்க வேண்டாம்

அன்புக்குரிய சகோதரர்-சகோதரிகளே, வியக்கத்தக்கத் தொழில்நுட்பச் சாதனங்களுக்கு முன்நிற்கும் உங்களை, உங்கள் இதயத்தைப் பற்றியும், உங்கள் உள்ளத்தின் வாழ்வு பற்றியும் அக்கறை கொள்ள உற்சாகப்படுத்துகிறேன். இதன் பொருள் என்ன? இதோ ஒருசில சிந்தனைகளை உங்கள் முன்வைக்க விரும்புகிறேன்.

உள்ளத்தில் கனிவோடு இருங்கள்; பிறரது முகங்களை மறந்துவிடாதீர்கள். பிறருக்கு நீங்கள் சில பணிகளைச் செய்யும்போது, அந்த ஆண்கள்- பெண்களுடைய இதயத்துடன் பேசுங்கள்.

• உங்கள் உள்ளுணர்வு இயல்பூக்கத்தினால் மட்டும் உங்கள் தொடர்பாடல் செயல்பாடுகள் தூண்டப்படாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். மிகக் கடினமான சூழ்நிலைகளிலும், எதிர்நோக்கிற்கு வாய்ப்பு இல்லையெனத் தோன்றும் போதும், இது ஒரு பயனில்லாத முயற்சி எனத் தோன்றும் போதும் மனவுறுதியுடன் எதிர்நோக்கைப் பரவலாக்குங்கள்.

மனிதகுலத்தின் காயங்களைக் குணமாக்கும் தொடர்பாடலை ஊக்குவியுங்கள்.

வாழ்க்கைச் சிக்கல்களில் வளைந்துகொடுத்து அழிந்து போகாத நீர்நிலையின் மலர்த்தண்டைப் போல மென்மையானதாக ஆனால் உறுதியானதாக நம் எதிர்நோக்கு இருக்க வேண்டும். இந்த உறுதியான எதிர்நோக்கினாலேயே நமது தாய்மார்கள் தம் பிள்ளைகள் இவ்வுலகின் முரண்பாடுகளாகிய அகழிகளைத் தாண்டி வர வேண்டுமென்று செபிக்கின்றனர். அந்த எதிர்நோக்கினாலேயே பல தந்தையர்கள் நல்ல எதிர்காலத்திற்கான வேலைகளைத் தேடி பல சவாலான சூழ்நிலைகளைத் தினமும் கடந்து வருகின்றனர். இந்த எதிர்நோக்கினாலேயே நமது சிறுவர்கள் போர் என்னும் குப்பைக் கூளங்களுக்கிடையிலும், வறுமை மிகுந்த தெருக்களிலும், குடிசைப் பகுதிகளிலும்கூட விளையாடவும் சிரிக்கவும் நம்பவும் செய்கின்றனர்.

நீங்கள் சாட்சிகளாக இருந்து, வன்முறைத் தாக்குதல் இல்லாத தொடர்பாடலை மேற்கொள்ளுங்கள். பிறர்மீது அக்கறை காட்டும் கலாச்சாரத்தை உண்டாக்குங்கள். நிகழ்காலத்தில் காணக்கூடிய, காணக்கூடாத தடைகளைத் தகர்த்து மனிதரிடையே இணைப்புப்பாலங்களைக் கட்டியெழுப்புங்கள்.

எதிர்நோக்கை வலுப்படுத்தும் செய்திகளைக் (கதைகளை) கூறுங்கள்.

மனுகுலத்தின் பொதுவான இலக்கைப் பற்றியும், அதனை மனிதகுலம் அடையும் வழிவகைகளையும் நமது எதிர்கால வரலாறாக வடிக்கும் ஆற்றல் உள்ள எதிர்நோக்கின் செய்திகளை உங்கள் தொடர்பாடலில் பயன்படுத்துங்கள்.

இந்த யூபிலி ஆண்டில் இறைவன் தரும் அருளால் நீங்களும் நானும் இவற்றையெல்லாம் செய்ய முடியும். இதுவே எனது வேண்டுகோள். உங்களுக்கும் உங்கள் பணிகளுக்கும் ஆசி வழங்குகிறேன்.

- திருத்தந்தை பிரான்சிஸ்

உரோமை, புனித இலாத்தரன் பேராலயம்

2025, ஜனவரி 24,

சலேசு நகர் புனித பிரான்சிஸ் நினைவு நாள்

news
ஆன்மிகம்
தமிழ்நாடு-பாண்டிச்சேரி அருள்பணிப் பேரவை: கூட்டொருங்கியக்கத் திரு அவையில் பெண்கள்

திரு அவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளுள் ஒன்று  2023, 2024-ஆம் ஆண்டுகளில் இரு அமர்வுகளாக நடந்து முடிந்த 16-வது  ஆயர் மாமன்றம். மாமன்றத்தின் இறுதியில் வெளியிடப்பட்ட  அறிக்கை கூட்டொருங்கியக்கத் திரு அவை-ஒரு தொடர் பயணம். அது வத்திக்கான் கூட்டத்தோடு முடிவடையவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது. கூட்டொருங்கியக்கத் திரு அவைக்கான மாற்றங்களை  பங்கு, மறைமாவட்டம், நிறுவனங்கள் மற்றும் திரு அவையின் பல்வேறு அமைப்புகளில கொண்டுவர தகுந்த முயற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திரு அவையின் நம்பிக்கையாளர்களாக அந்நம்பிக்கையை அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்குத் தங்களின் வாழ்வாலும் படிப்பினைகளாலும் கொண்டு சேர்ப்பவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களே. திரு அவையில்  பெண்களின் பங்கேற்பு மற்றும் பங்களிப்புக் குறித்து 16-வது  ஆயர் மாமன்றம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை தமிழ்நாடு திரு அவையில் நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை இணைந்து திட்டமிடல், செயல்படுத்துதல் நம்பிக்கையாளர்கள் என்ற வகையில் நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும்.

ஆயர் மாமன்றத்தின்  தனிச்சிறப்பு

வழக்கமாக ஆயர்களின் பிரதிநிதிகள் இணைந்து திரு அவையின் நலன் சார்ந்த ஏதேனும் ஒரு கருப்பொருளில் ஆய்வு செய்து முடிவெடுக்க வத்திக்கானில்  ஆயர் மாமன்றம் கூட்டப்படும். கூட்டத்தினைத் தொடர்ந்து திருத்தந்தை அவர்களால் ஓர் அதிகாரப்பூர்வ ஆவணமாகதிருத்தூது ஊக்க உரைவழங்கப்படும்.

ஆயர் மாமன்றத்தின் நடைமுறையை மாற்றி, ஆயர் மாமன்றத்தின் பொது அமர்வு ஆயர்களின் கூடுகையாக மட்டுமின்றி, அனைத்து நம்பிக்கையாளர்களும் பங்கேற்கும் அமர்வாக இருக்க வேண்டுமெனத் திருத்தந்தை பிரான்சிஸ் விரும்பினார். அதனைச் செயல்படுத்திட அகில உலக ஆயர்களின் மாமன்றத்தின் செயல்பாடுகள்கூட்டொருங்கியக்கத் திரு அவைஎன்ற கருப்பொருளில் 2021-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டன. அக்டோபர் 9-10, 2021-இல் உரோமையிலும், அக்டோபர் 17, 2021-இல் உலகில் உள்ள அனைத்து மறைமாவட்டப் பங்குத்தளங்களிலும் அது தொடங்கப்பட்டது.

கூட்டொருங்கியக்கத் திரு அவையின் நோக்கம்

ஒன்றிப்பு - பங்கேற்பு - நற்செய்தி அறிவிப்பு.

இணைந்த திரு அவையே இணைந்து பயணிக்கும் திரு அவைஎன்ற இலக்கோடு தொடக்கத் திரு அவையில் நிலவிய இணைந்த வாழ்வுஇணைந்த பணி, இணைந்த பயணம் (திப 2:42-47;4:32-36) என்பதை மீட்டெடுக்க முனைந்தது.

ஐந்து கட்டத்  தயாரிப்பு (2021-2023)

1. தயாரிப்பு நிலை: 2021, செப்டம்பர் 7-ஆம் நாள் வத்திக்கானில் தயாரிப்பிற்கான ஆவணம் வெளியிடப்பட்டது.

2. பயிற்சி அளித்தல் நிலை: மறைவட்ட அளவிலும் பங்கு அளவிலும் பயிற்சிகள் நடத்தப்பட்டன.

3. கருத்துக்கேட்டல் நிலை: உலகளாவியத் திரு அவையாக ஒன்றிணைந்து, மறைமாவட்ட அளவில் கூட்டொருங்கியக்க வாழ்வியல் அனுபவங்களை ஒருவர் மற்றவருடன் பகிர்ந்திட, செவிமடுக்க, கூட்டொருங்கியக்கப் பயணம் மேலும் தொடர்ந்திட அனைவரின் கருத்துகளும் கேட்டறியப்பட்டன.

4. தரவுகளைச் சேகரித்தல் நிலை.

5. கருத்துகளை அனுப்பும் நிலை.

மக்களிடம் கேட்டுப் பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலேயே ஆயர் மாமன்றம் கூட்டப்பட்டது.

16-வது ஆயர் மாமன்றத்தின் பொது அமர்வுகள் இரு கட்டங்களாக நடைபெற்றன.

முதல் அமர்வு: அக்டோபர் 2023

இரண்டாம் அமர்வு: அக்டோபர் 2024

16-வது அகில உலக ஆயர்கள் மாமன்றம் - பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும்

கத்தோலிக்கத் திரு அவையின் வரலாற்றில் முதல் முறையாகச் சில பெண்கள் முழுமையாகப் பங்கேற்றார்கள்.

கர்தினால்மார்கள், ஆயர்கள் ஆகியோருடன் பெண்களும் வாக்களிக்கும் உரிமை பெற்றார்கள்.

2023, அக்டோபரில் நடைபெற்ற அமர்வில் 54 பெண்கள் பங்கேற்று வாக்களித்தனர்.

ஆலோசனைக் குழுக்கள், விவாதங்கள் ஆகியவற்றைப் பெண்கள் தலைமையேற்று வழிநடத்தினர்.

திரு அவையின் எதிர்காலம் குறித்த தங்களின் கருத்துகளை அனைத்து நிலைகளிலும் பகிர்ந்து கொண்டார்கள்.

பெண்களில் சிலர் மொழிக்குழுக்களின் அறிக்கையாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர்.

16-வது ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணம்

ஆயர் மாமன்றத்தின் முடிவில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்ட பரிந்துரைகள், ஆலோசனைகள், தீர்மானங்கள், வழிகாட்டுநெறிகள் ஆகியவற்றைத் திருத்தந்தை பிரான்சிஸ் உடனடியாக அங்கீகரித்து (ratified) அதிகாரப்பூர்வ ஆவணமாக (Ordinary Magisterium) வெளியிட்டார். இந்த ஆவணம் திரு அவையைப் புதுப்பிக்க ஐந்து வகையான மாற்றங்களை முன்வைத்தது: 1. அருள் வாழ்வு (Spiritual), 2. உறவு (Relational), 3. நடை முறை (Procedural), 4. நிறுவனம் (Institutional), 5. மறைப்பணி (Missionary).

பெண்களின் பங்கேற்பிற்கான கட்டமைப்பு மாற்றங்கள்

சமமான மாண்பு: திருமுழுக்கினால் பெண்களும் ஆண்களும் சமமான மாண்பும் உரிமையும் பெறுகிறார்கள்.       

பெண்களின் தலைமை, முடிவெடுப்பதில் பங்கேற்பு: திரு அவையின் நிர்வாகத்தில் பொதுநிலையினருக்கு குறிப்பாக, பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளித்தல்; திரு அவைச் சட்டம் அளித்துள்ள பொறுப்புகளைப் பெண்களுக்கு அளித்தல்.              

அமைப்புசார் சீர்திருத்தங்கள், விரிவான பங்கேற்பு: அருள்பணிப் பேரவை முதலான பங்கேற்பு அமைப்புகளில் பெண்கள் அதிகம் பங்கேற்கும் வகையில் சீர்திருத்தங்கள், முடிவெடுத்தலில் பெண்களுக்கு வாய்ப்பு.    

குருக்கள் உருவாக்கம்: குருக்கள் உருவாக்கத்தில் பெண்கள் பங்கேற்றல்.

பண்பாட்டு மாற்றம்: திரு அவையில் படிநிலை அதிகாரத்தைக் குறைத்தல்; பங்கேற்பை அதிகரித்தல்.

பெண்களுக்கு அதிகாரம் அளித்தலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முன்மாதிரியான நடவடிக்கைகள்

1. திரு அவைச் சட்டத்தில் சீர்திருத்தம்

திருத்தந்தை அவர்கள் திரு அவைச் சட்டத்தில் பெண்களுக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த வாசகர் பணி, பீடப்பணியாளர் பணி ஆகியவற்றைச் சீர்திருத்திப் பெண்களுக்கு நிரந்தர வாசகப் பணியாளர், பீடப்பணியாளர் பணியைச் சட்டமாக்கினார். பெண் திருத்தொண்டர்கள் குறித்த ஆய்வுக் குழுவை நியமித்தார். அது ஆயர் மாமன்றத்திற்குப் பிறகும் தொடர்கிறது என அறிவித்தார்.

2. பெண்களுக்குத் தலைமைப் பொறுப்புகள்

குருத்துவத்தோடு தொடர்புடைய அருள்பணிகள் அல்லாத நிர்வாகப் பொறுப்புகளை குருகுலத்தாரே ஆற்றி வந்தனர். அத்தகைய பணிப்பொறுப்புகளைப் பெண்களுக்கு வழங்குவதில் திரு அவைச் சட்டத்தில் எந்தத் தடையுமில்லை எனப் பல்வேறு பொறுப்புகளைப் பெண்களுக்கு வழங்கினார். இப்பொறுப்புகள் பெண்களின் தலைமைத்துவத்திற்குச் சான்று பகர்வன என்பது குறிப்பிடத்தக்கது.

2016-ஆம் ஆண்டு வத்திக்கான் அருங்காட்சியகங்களின் முதல் பெண் இயக்குநராக பார்பரா ஜட்டா நியமிக்கப்பட்டார். இவர் ஒரு பொதுநிலையினர் என்பது சிறப்பு.

பிப்ரவரி 2021-இல் வத்திக்கான் ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலகத்தின் இரண்டு துணைச்செயலர்களில் ஒருவராக அருள்சகோதரி சிவேரியன் நத்தலி பெக்கார்ட்டை நியமித்தார்.

அருள்சகோதரி இரபேல்லா பெட்ரினி வத்திக்கான் நகர மாநில ஆளுநரகத்தின் முதல் பெண் தலைவராக மார்ச் 1, 2025 அன்று பதவியேற்றார். இதற்கு முன் இப்பதவியை வகித்தவர் கர்தினால் பெர்னாண்டோ வெர்கெஸ் அல்சாகா ஆவார்.

ஜனவரி 6, 2025 அன்று அருள்சகோதரி சிமோனா பிராம்பில்லாவை அர்ப்பண வாழ்வு நிறுவனங்கள் மற்றும் திருத்தூதர்சார் வாழ்வு சங்கங்களுக்கான வத்திக்கான் பேராயத்தின் முதல்வராக நியமித்தார்.

நான் செய்ததுபோல நீங்கள் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் (யோவா  13:15) என நமது ஆண்டவர் இயேசு முன்மாதிரிகை காட்டியதுபோல் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் நமக்கு முன்மாதிரிகை காட்டியுள்ளார்.

இந்தியக் கத்தோலிக்க (இலத்தீன்) ஆயர் பேரவையின் 36-வது கூட்டம்-2025

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை 2025, ஜனவரி 28 முதல் பிப்ரவரி 4 வரை புவனேஸ்வரில் கூடியது. அதன் கருப்பொருள்: ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்; கூட்டொருங்கியக்கத் திரு அவையின் பாதையைக் கண்டறிதல்.’ “நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல; நம்பிக்கையின் அடிப்படையிலேயே நடக்கிறோம் (2கொரி 5:7) (‘Pilgrims of Hope: Discerning the Synodal Path’ For we walk by faith, not by sight (2 Cor 5:7).

16-வது ஆயர் மாமன்றத்தின் இறுதி ஆவணத்தின் வழிகாட்டு நெறிகளைச் செயல்படுத்த இந்தியச் சூழலில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்து இறுதி ஆவணம் ஒன்றையும் இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ளது.

2033-ஆம் ஆண்டிற்குள் நாம் நடைமுறைப்படுத்த வேண்டிய அருள்பணித் திட்டத்தினையும் வழங்கியுள்ளது. அத்திட்டத்தை திரு அவையின் அனைத்து அமைப்புகளிலும் பங்குகளிலும் செயல்படுத்த இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை அழைப்புவிடுத்துள்ளது. இந்திய மண்ணில் பெண்கள் சந்திக்கும் சவால்கள், திரு அவையில் பெண்களின் நிலை, பெண்களை ஆற்றல் ஊட்ட, அதிகாரம் அளிக்க, பாலின நீதியை நிலைநாட்ட, பாலினச் சமத்துவத்தை வாழ்வாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதியான நடவடிக்கைகள், உத்திகள், செயல்திட்டங்கள் ஆகியவற்றைச் செவ்வனே வகுத்துத் தந்துள்ளது.

அருள்பணித் திட்டம், கூட்டொருங்கியக்கத் திரு அவைக்காக இணைந்து பயணித்தல்: இலக்கு 2033’ - பெண்கள் மற்றும் பாலின நீதி (5.11. Women and Gender Justice)

பெண்கள் மானுட வாழ்வின் பல்வேறு பகுதிகளில் சிறந்த பங்கேற்பினை நல்கி வருகின்றனர். திரு அவையில் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த பார்வையும் முடிவெடுக்கும் இடங்களில் அவர்களின் பங்கேற்பும் இன்றியமையாதது.

திரு அவையின் அமைப்புகளில் பெண்கள் தலைமையேற்கவும் வழிநடத்தவும் சமமான வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும். திருவிவிலியத்தின் படைப்பு நிகழ்வு ஆண்-பெண் இருவரும் சமமான மாண்புடன் படைக்கப்பட்டுள்ளனர் என்பதை நமக்கு உறுதி செய்கிறது. ஆனால், நமது இறை நம்பிக்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளன. இந்த வேறுபாடுகள் இறைத்திட்டத்திற்கே எதிரானது. சமுதாயத்திலும் திரு அவையிலும் பெண்களின் இடம், பங்கேற்பு குறித்து ஆழமான புரிதலை உண்டாக்குவது அவசியமாகிறது.

உண்மை நிலையும் சவால்களும்

ஊடகத்தின் தாக்கத்தால் பெண்களின் மாண்பினைச் சிதைக்கும் வகையில் பெண்களை மகிழ்ச்சிக்கான, நுகர்வுக்கான காட்சிப்பொருளாகப் பயன்படுத்துதல்.

பாலினப் பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள்.

சமூக, பொருளாதாரச் சமத்துவமின்மை.

பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள்.

திரு அவையிலும் சமுதாயத்திலும் பெண்கள் விளிம்புநிலைக்குத் தள்ளப்படல்.

ஆணாதிக்க மனநிலையைப் பெண்களே உள்வாங்கியிருத்தல்.

கூட்டொருங்கியக்கத் திரு அவையின் பாதை.

உறுதியான நடவடிக்கை

திரு அவையின் அனைத்து அமைப்புகளிலும் நிர்வாகத்திலும் பெண்களின் தலைமைத்துவத்தையும்  சமமான பங்கேற்பையும் உறுதி செய்தல்.

மதித்தல், சமமாக ஏற்றுக்கொள்ளல், அனைவரையும் உள்ளடக்கிய பண்பாட்டை உருவாக்குதல்.

பெண் துறவியரின் சமூக அருள்பணிப் பங்கேற்பை அங்கீகரித்தல். திரு அவையிலும் நற்செய்தி அறிவிப்பிலும் உடன் பணியாளராய் அவர்களை ஏற்றுக்கொள்ளல். திரு அவையின் நிர்வாகம், நிறுவனம் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்புகள் வழங்குதல்.

அருள்பணிகள், திரு அவை அலுவல்கள் ஆகியவற்றில் பெண்களின் பங்கேற்பிற்கான வழிகாட்டு நெறிகளை மறைமாவட்ட அளவில் ஏற்படுத்துதல்.

சமுதாய மாற்றத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்வி அளித்தல்.

குருக்கள், ஆண் துறவியர், பொதுநிலையினர் ஆகியோருக்குப் பாலினச் சமத்துவம், பாலின நீதி குறித்த கல்வி அளித்தல்.

உத்திகளும் திட்டங்களும்

திரு அவையின் அனைத்துப் பங்கேற்பு அமைப்புகளிலும் 50% பெண்களின் பங்கேற்பை உறுதி செய்தல்.

திரு அவையின் நிர்வாகத்தில் பெண்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்கும் பொருட்டு, தலைமைத்துவத்திற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை அவர்களுக்கு அளித்தல்.

பணியிடப் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - 2013 வழிகாட்டு நெறிகளை நடைமுறைப்படுத்துதல்.

மறைமாவட்ட அளவில் பெண்களின் மேம்பாட்டிற்கான அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துதல்.

பெண்மையைக் கொண்டாடுதல்: பங்குகளில் பெண்கள் தினம், பெண் குழந்தைகள் தினம், அரசியல் அமைப்புச் சட்ட நாள், மனித உரிமைகள் தினம் ஆகியவற்றைக் கொண்டாடுவதன் மூலம் இறைவன் விரும்பிய பாலினச் சமத்துவம் குறித்த கல்வியை நம்பிக்கையாளர்களுக்கு அளித்தல்.

மறைமாவட்டப் பிரதிநிதிகளுக்குப் பங்குப் பேரவை, நிதிக்குழு ஆகியவற்றில் அவர்களின் பொறுப்பு, பணி குறித்த பயிற்சிகளை அளித்தல். அரசியல் அமைப்புச் சட்டம், மனித உரிமைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த கல்வியளித்தல்.

தூய ஆவியாரால் வழிநடத்தப்படும் திரு அவை காலத்தின் அறிகுறிகளைக் கண்டுணர்ந்து, தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் தான்மை கொண்டது. திருத்தந்தை பிரான்சிஸ்கூட்டொருங்கியக்கத் திரு அவையே மூவாயிரம் ஆண்டிற்கான திரு அவைஎன அறிவித்ததோடு, அதனை ஆயர் மாமன்றத்தின் வழி செயல்படுத்தியும் காட்டியுள்ளார். பெண்களின் பங்கேற்பும் பங்களிப்பும் இன்றிகூட்டொருங்கியக்கத் திரு அவையின் பயணம்சாத்தியமற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், பெண்களுக்குச் சரிசமமான வாய்ப்புகளை அளிப்பது, அவர்களை மாண்புடன் நடத்துவது, தலைமைப் பொறுப்புகளை அளிப்பது ஆகியவற்றில் திரு அவை இன்னும் ஆற்றலுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ‘சமுதாயத்தில் பெண்கள் என்றுமே பெற்றிராத செல்வாக்கையும் அதிகாரத்தையும் அடையும் நாள் இதோ வந்து விட்டதுஎனும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் வாக்கு இன்று உலகின் பல்வேறு துறைகளில் மெய்யாகி வருகிறது. உலகிற்கே ஒளியாக விளங்கும் திரு அவை பெண்களை அதிகாரப்படுத்துவதில் முன்னோடியாய் திகழட்டும்.