news
ஆன்மிகம்
கல்வாரியில் அன்னை மரியைக் காண்போம்! (புனித வியாகுல அன்னைத் திருவிழா - செப்டம்பர் 15)

 கல்வாரியில்

பொன்னான மேனி

புண்ணாக நொந்து

பூவாகத் துடிக்கும்

ஓர் உள்ளம் காண்போம்;

அம்மாஎன்றழைக்க

ஒரு குழந்தையில்லாமல்

மான்போன்ற கண்களில் கண்ணீர் பெருகி

கன்னத்தில் ஆறாக

ஓடக் கண்டோம்!”

இறைவனுக்கு இணையாகி, வானிற்கு நீராகி, பேரன்பிற்கு இலக்கணமாகத் திகழும் அன்னை மரியாவின் வேதனையிலும் வீரத்தைக் காட்டிய நாள்தான் செப்டம்பர் 15. இந்நாளில் தான் நமது திரு அவை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் புனித வியாகுல அன்னை திருவிழா. வானளவு உயர்ந்த உள்ளம், கடலளவு பரந்த கருணை, அன்பை மட்டும் அள்ளிக் கொடுக்கும் பரிவு... இவைதான் ஒரு தாயின் உள்ளம். அத்தகைய தாயாம் அன்னை மரியாவின் வியாகுலத்தை, வீரத்தைக் கொண்டாடும் நாள்தான் இந்நாள்.

இந்நாளில் தம்மையே வெறுமையாக்கி, அடிமை போன்று சிலுவைச் சாவை ஏற்ற கிறிஸ்துவைப் பின்பற்றி, தன்னையே பல்வேறு துன்பங்களுக்குள் உட்படுத்திக் கொண்டு இறைத்திருவுளத்திற்கேற்ப வாழ்ந்து காட்டிய நம் தாய் அன்னை மரியாவைப் போல் வாழ நாம் இன்று அழைக்கப்படுகிறோம்.

அன்னையின் வியாகுலத்திற்குக் காரணங்கள்

மீட்கும் திருவுளத்திற்குத் தன்னைக் கையளித்தது.

மீட்பராகிய இயேசுவுடன் கொண்டிருந்த இணைபிரியா உறவு,

மக்களாகிய நம் மேல் கொண்டிருந்த நாம் மீட்படைய வேண்டும் என்ற தாய்மை உணர்வு.

நம் தாய் மரியா பட்ட துன்பங்கள்ஏழு

உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்என்று சிமியோன் உரைத்த இறைவாக்கால் (லூக் 2:25-35) எதிர்காலத்தைப் பற்றிய அச்ச நிலை.

இரவிலேயே எகிப்திற்குப் புறப்பட்டு போ (மத் 2:13-15) என்ற வார்த்தையைக் கேட்டு, எங்கே போவோம்? எப்படித் தங்குவோம்? என்ற அகதிகளின் மன நிலை.

குழந்தையைக் காணாது தேடுதலில் (லூக் 2:41-50) மகனைத் தொலைத்துவிட்ட தாயின் பதறும் நிலை.

கல்வாரிப் பாதையில் மகனைச் சந்தித்தபோது (லூக் 23:27-31) கண்ணீரால் மகனுக்குத் துணிவூட்டும் தாயின் எல்லையற்ற பரிவின் நிலை.

சிலுவையடியில் நிற்கும்போது (யோவா 19:25-30) துன்பத்திலும் துவளாமல், துணிவோடு நிற்கும் வீரத்தாயின் நிலை.

மரித்த மகனை மடியில் சுமக்கையில் (லூக் 23: 50-54) வாழ்வே இருண்ட கையறுநிலை.

கல்லறையில் அடக்கம் செய்கையில் (யோவா 19:38-42) தனிமையில் தவித்த வெறுமை நிலை.

அன்னை சந்தித்த ஒவ்வொரு வியாகுலத்திலும் தன்னை ஒரு நிலையில் நிறுத்தி, பாடுகளையும் துன்பங்களையும் துணிவுடன் தாங்கும் உறுதியைத் தெளிவாக நமக்குக் கற்றுத் தருகின்றார். இத்தகைய துன்பங்களின் ஊடான வாழ்க்கைப் பயணமே அன்னைக்கு விண்ணேற்பைப் பெற்றுத் தந்தது. நாமும் நம் வாழ்க்கையில் நமக்கு வரும் பல்வேறு துன்பங்களைப் பொறுமையோடு சகித்து வாழும்போது, நமக்கும் விண்ணேற்பு நிச்சயம் உண்டு. அன்னை தன் பாடுகள் அனைத்தையும் நமக்கு மீட்பாக மாற்றிக்கொடுத்ததுபோல, நாமும் பிறர்நலத்திற்காகச் சுய நலம் மறந்து நமது அன்பை, நமது சேவையை, உதவியை, இரக்கத்தை, நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் பிறருக்காகக் கொடுத்து வாழ்வோம்.

உன்னைக்கொடு; உலகை வெல்வாய்! உன்னை இழ; எல்லார் உள்ளத்திலும் வாழ்வாய்என்ற கூற்றுக்கேற்ப வாழ்ந்து சிறந்த புனித அன்னை தெரசா, பிறர்நலம் போற்றி வாழ்ந்து தன் இறப்பின்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்த டாக்டர் அப்துல் கலாம் போன்று தன்னலம் கருதாது வாழ்ந்து நாமும் பிறர்நலம் போற்றி வாழ்வோம். இந்நாளில் இறையாசிரும், அன்னையின் அருள்வளமும் நம்மோடு இருந்து நம்மை வழி நடத்த அன்னையிடம் வேண்டுவோம்.

news
ஆன்மிகம்
திரு அவை எனும் கருவறை (அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிகத் தொடர் – 23)

(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு  அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

அன்புச்செல்வன்: “தந்தையே, கடந்த இரு முறை நாம் கூடியபொழுது திருமுழுக்கு தரும் உறவுகள் குறித்துச் சிந்தித்தோம். உறவுகள் குறித்து நான் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபோது, நான் வாசித்த ஒரு கதை என் நினைவிற்கு வந்தது. காடு ஒன்றில் முள்ளம்பன்றிகள் கூட்டமாக வசித்து வந்தன. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் குளிர் அதிகமாக இருந்ததன் காரணமாக, முள்ளம்பன்றிகள் ஒவ்வொன்றாக இறக்க ஆரம்பித்தன. எனவே, அந்தக் கூட்டத்தின் தலைவன் அனைத்து முள்ளம்பன்றிகளையும் அழைத்து, ‘கடுமையான குளிரை எதிர்கொண்டு நாம் உயிர்வாழ வேண்டுமெனில், இரவு நேரத்தில் நாம் மிக நெருக்கமாகக் கூடிவந்து நம் உடலில் வெப்பம் குறையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்என்று ஆலோசனை கூறியது. தலைவனின் ஆலோசனையை ஏற்று முள்ளம்பன்றிகள் இரவு நேரத்தில் மிகவும் நெருக்கமாகக் கூடிவந்தன. உடனே முள்கள் ஒன்றினை மற்றொன்று  காயப்படுத்த, அதைப் பொறுக்க முடியாத சில முள்ளம்பன்றிகள் தனியே விலகிச் சென்றன. அவை குளிரால் சாகநேரிட்டது. இதைப் பார்த்த அக்கூட்டத்தின் தலைவன் இவ்வாறு மீண்டும் பேசினான்: ‘நண்பர்களே! நமக்கு முன்னால் இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, நெருங்கி வருவதால் ஏற்படும் ஒருசில சங்கடங்களைப் பெரிதுபடுத்தாமல் உயிர்வாழ்வது; மற்றொன்று, சங்கடங்களைத் தவிர்ப்பதாக எண்ணிக்கொண்டு வாழ்வை இழப்பது.’

என்னைப் பொறுத்தவரை, உறவைப் பொறுத்த அளவில் நமக்கு முன்னாலும் இரண்டு வழிகள்தான் உள்ளன: ) அன்பின் பொருட்டு சங்கடங்களை ஏற்று வாழ்வை நிறைவாக வாழ்வது; ) சுகபோக வாழ்விற்காக அன்பைத் தவிர்த்து வாழ்வை வெறுமையாக வாழ்வது. வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமெனில், எந்த வகையான உறவை எடுத்துக்கொண்டாலும், அதில் சிக்கல்களும் போராட்டங்களும் உள்ளன. இத்தகைய சிக்கல்களையும் போராட்டங்களையும் பெரிதுபடுத்தாமல், ஏற்றுக்கொண்டு வாழக்கூடிய மனப்பக்குவத்தை நம்மில் உருவாக்கிக்கொள்வது அவசியம்.  ‘உறவுகள் இருந்தாலும் பிரச்சினை, இல்லாவிட்டாலும் பிரச்சினைஎன்பதுதான் மானிட வாழ்வு.”

அருள்பணி:நீங்கள் கூறுவதைப் பார்த்தால் உறவிலேயே பிரச்சினை இருக்கிறது என்பதுபோல இருக்கிறது. அது உண்மையல்ல! உறவில் நாம் சந்திக்கும் பிரச்சினைகள் நம் அணுகுமுறையால் வருபவை. உறவு வாழ்வில் சரியான அணுகுமுறை கொண்ட மனிதர்கள் உறவைக் கொண்டாடுகின்றனர். சரியான அணுகுமுறை கொள்ளாத மனிதர்கள் திண்டாடுகிறார்கள்.”

மார்த்தா:கொஞ்சம் விளக்கமாகக் கூற முடியுமா, தந்தையே?”

அருள்பணி:ஒவ்வொரு உறவிலும் உரிமைகளும் உண்டு, கடமைகளும் உண்டு. நம் உறவுகளின் மட்டிலான கடமைகளை நாம் சரியாகச் செய்யாததாலும், அக்கடமைகளைச் செய்தாலும், அவற்றைச் சரியான மனநிலையோடு செய்யாததாலும், உறவுகள் இன்று பிரச்சினைக்குரியவையாக மாறிவருகின்றன. நம் உறவுக் கடமைகளைச் சரியான மனநிலையோடு செய்தோமென்றால், உறவுகள் தரும் உரிமைகளை நிறைவாக நம்மால் அனுபவிக்க முடியும். ஆனால், பலரது பிரச்சினை என்னவென்றால், உறவுகள் தரும் உரிமைகளையும் மகிழ்வையும் அனுபவிக்க விரும்புகின்றனர். ஆனால், உறவுக்குரிய கடமைகளைச் சரிவர செய்ய விரும்புவதில்லை. அப்படியே செய்தாலும், அவற்றைச் சரியான மனநிலையோடு செய்வதில்லை.”

கிறிஸ்டினா: தந்தையே! திருமுழுக்கு அருளடையாளம் வழங்கக்கூடிய ஒரு மாபெரும் கொடைகடவுளின் பிள்ளைஎன்கின்ற கொடை! அது குறித்து உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.”

அருள்பணி: திருமுழுக்கு அருளடையாளம் வழியாக நாம் ஒவ்வொருமே கடவுளின் மகனாக, மகளாக மாற்றப்படுகிறோம். இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றபோதுஎன் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் (மத் 3: 17) என்று தந்தையாகிய கடவுள் கூறிய வார்த்தைகளை நாம் நினைத்துப் பார்ப்பது அவசியம். திருமுழுக்குப் பெறும் ஒவ்வொரு மனிதரும் கடவுளது சொந்தப் பிள்ளையாகத் தத்து எடுக்கப்படுகின்றனர். திருமுழுக்கு நிகழ்வை நாம்இரண்டாம் பிறப்புஎன்றுகூடக் கூறலாம். அதாவது, முதல் பிறப்பில் நம் பெற்றோர்களுக்கு நாம் பிறந்தோம்; திருமுழுக்கில் நாம் கடவுளின் பிள்ளைகளாக மீண்டும் பிறப்பெடுக்கிறோம்.”

அன்புச் செல்வன்:தந்தையே, புனித மாக்ஸி மிலியன் கோல்பே (St. Maximilian Kolbe) ‘திருமுழுக்கு என்கின்ற நீராட்டால் ஒவ்வொரு குழந்தையும் மறுவுரு பெறுகிறதுஎன்றார்.”

அருள்பணி: அதேபோல புனித வின்சென்ட் பெரர் (St. Vincent Ferrer) ‘திருமுழுக்கு நிகழ்வின்போது திரு அவை என்ற கருவறையில் ஆதாமின் பிள்ளைகள் கடவுளின் பிள்ளைகளாக உருமாற்றம் பெறுகின்றனர். இதைத் திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் மனத்தில் நிறுத்துவது அவசியம்என்கின்றார்.”

அகஸ்டின்:நாம் கடவுளின் பிள்ளைகளாக மாறுகிறோம் என்பதன் பொருள் என்ன தந்தையே?”

அருள்பணி:ஏனைய உறவுகளுக்கு இருப்பது போலவே இந்த உறவுக்கும் உரிமைகளும் உண்டு; கடமைகளும் உண்டு. இரண்டு உரிமைகள், இரண்டு கடமைகளைப் பற்றி நாம் பார்க்கலாம். முதலில் உரிமைகளைப் பற்றிப் பார்க்கலாம். முதலாவதாக, நாம் கடவுளின் பிள்ளைகள் என்ற முறையில் எந்நாளும் நம் சார்பாகச் செயல்படும் கடவுளை (h)ம் தந்தையாகப் பெற்றுக் கொள்கிறோம். கிறித்தவர்களாகிய நாம் எந்தக் காலத் திலும், ‘எனக்கென்று யாரும் இல்லை; நான் தனியாகத் துன்பப்படுகின்றேன்என்று கூறவே கூடாது. நம் தந்தையாகிய கடவுள் நம் கூடவே இருந்து நம் வாழ்வில் சந்திக்கின்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான ஆற்றலை நமக்குத் தருகின்றார்.”

மார்த்தா:தந்தையே! புலனத்தில் (Whats app) நான் வாசித்த செய்தி ஒன்றை நினைத்துப் பார்க்கின்றேன்: ‘உங்கள் வாழ்வில் பிரச்சினைகள் வருகின்றபோது கடவுளை நோக்கி, ‘கடவுளே, எனக்குப் பெரிய பிரச்சினை இருக்கின்றதுஎன்று கூறாதீர்கள்; மாறாக, பிரச்சினையைப் பார்த்துஎன்னோடு பெரிய கடவுள் இருக்கிறார்என்று கூறுங்கள். நானும் இவ்வாறு ஒருசில முறை கூறியிருக்கிறேன். பிரச்சினையின் கனாகனம் பல மடங்கு குறைந்திருப்பதை உணர்ந்தும் இருக்கின்றேன்.”

கிறிஸ்டினா:அடுத்த உரிமை என்ன தந்தையே!”

அருள்பணி:தந்தையின் தன்மை கள் மகனுக்கு வந்தடைகின்றன என்கிறது உளவியல். தந்தையின் சொத்துகள் மகனுக்கு வந்தடைகின்றன என்கிறது சமூகவியல். எனவே, கடவுள் தம்மிடம் உள்ள அத்தனை தன்மைகளையும் கொடைகளையும் நமக்கு வாரி வழங்குகின்றார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட மானிட வாழ்வை நலமாகவும் வளமாகவும் நிறைவாகவும் நாம் வாழும் பொருட்டு கடவுள் தம் கொடைகள் யாவற்றையும் நமக்குத் தருகிறார். ஊதாரி மைந்தன் உவமையில் தந்தை தன் மூத்த மகனைப் பார்த்து, ‘மகனே, என்னுடையதெல்லாம் உன்னுடையதே (லூக் 15: 31) என்று கூறியது நினைவுகூரத்தக்கது. கடவுளது அருள் வளங்களும் ஆற்றல்களும் நமக்குத் திறந்த பெட்டகமாக எப்பொழுதுமே இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால், துரதிருஷ்டவசமாக நம்மில் பலர் கொடுக்கப்பட்ட அருள்வளங்களையும் ஆற்றல்களையும் பயன்படுத்துவதில்லை. நாம் கடவுளின் மகன், மகள் என்கின்ற உண்மையை உணராததன் காரணமாகவும், மகன் தன்மைக்கு ஏற்ப வாழாததன் காரணமாகவும், கடவுள் வழங்கக்கூடிய  கொடைகளை நமதாக்க மறந்து விடுகிறோம் அல்லது மறுத்து விடுகின்றோம்.”

அகஸ்டின்:கடவுளுக்கும், நமக்கும் இடையேயான தந்தை-மகன் உறவில் நமக்குள்ள கடமைகள் எவையெவை தந்தையே!”

அருள்பணி:முதலாவதாக, நாம் கடவுளின் மகனாக, மகளாக இருக்கின்றோம் என்ற உண்மையை நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்பது அவசியம். நம்மில் பலருக்கு நினைவு மறதி நோய் (amnesia) உண்டு. ‘நம் உண்மை இயல்பு என்ன?’, ‘நாம் யாரிடமிருந்து வந்திருக்கின்றோம்?’, ‘கடவுளுக்கும் நமக்கும் இடையேயான உறவு என்ன?’ என்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகின்றோம்.

இரண்டாவதாக, மகனுக்கு, மகளுக்குரிய மனப்பக்குவங்களை நமக்குள் வளர்த்துக்கொள்v வது. ஊதாரி மைந்தன் உவமையில், தன்னுடையது எல்லாம் தன் மகனுக்கும் சொந்தமானது என்று தந்தை நினைத்திருந்தாலும், மூத்த மகனுக்கு அத்தகைய மனப்பக்குவம், அதாவது மகனுக்கு உரிய மனப்பக்குவம் இல்லை. தன்னைஅடிமை (லூக் 15:29) போன்றுதான் நினைத்திருந்தான். எனவேதான், ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட எடுத்து தன் நண்பர்களுடன் விருந்து கொண்டாடத் தயங்கியிருந்தான்

இதற்கு நேர்மாறாக மகனுக்குரிய தன்மையை முழுமையாக உணர்ந்து இருந்தவர் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. தம் குருத்துவச் செபத்தில்என்னுடையதெல்லாம் உம்முடையதே! உம்முடையதும் என்னுடையதே (யோவா 17:10) என்கின்றார். தந்தையின் செல்வங்களைத் தமதாக்கி, வாழ்வை முழுமையாகவும் நிறைவாகவும் வாழ்ந்தார்.”

(தொடரும்)


news
ஆன்மிகம்
இறைவார்த்தையின் பணியாளராகட்டும் தமிழ்நாடு திரு அவை

2019-ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமையை இறைவார்த்தை ஞாயிறாகக் கொண்டாட நம் மேனாள் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் 2025, சனவரி 26 அன்று ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறைஉமது வார்த்தையால் நான் நம்பிக்கை கொள்கிறேன் (திபா 119:74) என்ற மையக்கருத்தில் உலகம் முழுவதும் கொண்டாடினோம். தமிழ்நாடு திரு அவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்புகளில் ஒன்றான திருவிவிலிய மாதம் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே. திருவிவிலிய மாதத்தில் தமிழ்நாடு திருவிவிலிய அருள்பணிக் குழுவின் இணைந்து திட்டமிடுதல் மற்றும் வழிகாட்டுதலில் எல்லா மறைமாவட்டங்கள், பங்குகள், கிளை ஆலயங்கள், துறவற இல்லங்கள், பயிற்சியகங்கள் மற்றும் பள்ளி-கல்லூரிகள் என எல்லா இடங்களிலும் இந்த மாதம் மிக நேர்த்தியாகச் சிறப்பிக்கப்படுவது தமிழ்நாடு திரு அவையின் தனிச் சிறப்பாக அமைந்துள்ளது.

செய்தி ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடகங்கள், பத்திரிகை ஊடகங்கள், இணையவழி ஊடகங்கள், சமூகத் தொடர்பு ஊடகங்கள் வழியாகவும், நேரடி வகுப்புகள் மற்றும் பல்வேறு திருவிவிலியப் போட்டிகள் மற்றும் பரிசளிப்புகள் வழியாகவும் எல்லா மறைமாவட்டங்களிலும் திருவிவிலிய மாதமாகச் செப்டம்பர் மாதம் சிறப்பிக்கப்படுவது மிகுந்த பாராட்டுக்குரியது; பயன் தரவல்லது.

2025-ஆம் ஆண்டு யூபிலி ஆண்டை எதிர்நோக்கின் திருப்பயணியாகக் கொண்டாடும் நமக்கு இந்த ஆண்டின் மையப்பொருளான (திபா 119:74) கிறித்தவ வாழ்வின் நோக்கத்தையும் நம் தொடர் பயணத்தையும் நமது இலக்கையும் தெளிவுபடுத்துகிறது (திபா 119). ஆண்டவரின் திருச்சட்டத்தின் மேன்மையையும், அதில் நாம் கொள்ள வேண்டிய ஈடுபாட்டையும் பற்றுறுதியையும் அதன் அடிப்படையிலான எதிர்நோக்குப் பயணத்தையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது  (திபா 119:43,49,74,81,95, 114,116,14,7, 166) என இந்தத் திருப்பாடலின் (119) பல இடங்களில் கிறித்தவ நம்பிக்கை வாழ்வு என்பது ஆழமான, பற்றுறுதிமிக்க நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் அன்பும் இணைந்து வாழ்வு என்பதை நமக்கு உறுதிப்படுத்துகின்றது. எடுத்துக்காட் டாகஉன் நீதிநெறிகளின்மீது நான் நம்பிக்கை வைத்துள்ளேன்(திபா 119:43) எனவும் நிறைவாகஉன் கட்டளைகளை விரும்புகிறேன் (119:127) எனவும் மொழிகிறது. இதன் அடிப்படையாக எதிர்நோக்கு வாழ்வியல் என்பதுகாத்திருப்பது மட்டுமல்ல; எதிர்நோக்கி இருப்பது மட்டுமல்ல; நாம் நம்பும் கடவுளின் நீதிநெறிகளைச் செயல்படுத்துவதே உண்மையான கிறித்தவ நம்பிக்கை வாழ்வுஎன் பதைத் தெளிவுபடுத்துகிறது.

தமிழ்நாடு திரு அவை திருவிவிலியத்தை இலட்சக்கணக்கில் அச்சடித்து அதனை எல்லா இடங்களுக்கும் மக்களுக்கும் வழங்கியுள்ளது என்பது நமக்குப் பெருமைதான். ஆனால், திருவிவிலிய மாதத்தின் நோக்கம் அது மட்டுமல்ல, கடவுளின் நீதிநெறிகளை நம்புகின்ற தமிழ்நாடு திரு அவை அதன் பணியாளராக மாற வேண்டும், நம்புவதை அறிவிக்க வேண்டும், அவற்றைச் செயல்படுத்த வேண்டும், செயல்படுத்தும் கடவுளின் நீதிநெறிகளை மட்டுமே உலகிற்கு அறிவிக்கவேண்டும். வெற்று அறிவிப்புகள் வேண்டாம். வாக்கு உயிர் பெறட்டும், நம்மிடையே குடிகொள்ளட்டும்.

news
ஆன்மிகம்
எங்கிருந்தோ வந்த கிரீஜோ (புனித தொன்போஸ்கோவின் ஆபத்துக் கால நண்பன்)

மூன்றடி உயரமும் நீண்ட உடலும் ஓநாய் போன்ற முகத்தோற்றமும் கொண்ட கிரீஜோ, குருவானவர் தொன்போஸ்கோ வெளியே புறப்பட்டபோது வாசலை வழிமறித்துக்கொண்டு படுத்திருந்தது. அவரின் தாயார் மார்கரீத், “பார்த்தாயா ஜான், நீ இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டாமென்று என் மனம் கூறுகிறது. கிரீஜோவும் வழிமறித்துப் படுத்திருக்கிறது. எனவே, இந்த இரவில் தனியே வெளியில் செல்ல வேண்டாம்என்றார். தன் பணி நிமித்தம் முக்கியமான ஒருவரைச் சந்திக்கப் புறப்பட்ட தொன்போஸ்கோ சற்றே யோசிக்கலானார்.

தாயின் வார்த்தைகள், கிரீஜோவின் வழி மறிப்பு இவை இரண்டின் வாயிலாய் இறைவன் தன்னை இந்த இரவு நேரத்தில் வெளியே செல்ல வேண்டாமென அறிவுறுத்துகிறார் என்பதைப் புரிந்துகொண்டவராய் வீட்டினுள் சென்று மற்றப் பணிகளில் ஈடுபட்டார்.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும். அவர் வீட்டின் கதவு தட்டப்பட, திறந்த தொன்போஸ்கோ படபடப்போடு தன் முன்னே நிற்கும் நண்பர் ஒருவரைக் கண்டார். வந்தவர்நல்ல வேளையாக நீர் வெளியே கிளம்பவில்லை. வெளியே இந்நேரம்வரை உம்மைக் கொல்வதற்காகக் காத்திருந்தவர்கள் நீர் வராததனால் ஏமாற்றத்தோடு இப்போதுதான் புறப்பட்டுப் போனார்கள்என்றார். தொன்போஸ்கோவின் உள்ளம் ஆண்டவரை நன்றியோடு நினைத்துப் பார்த்தபோது, கிரீஜோ அவரருகில் வாலாட்டியபடி நின்று கொண்டிருந்ததுகிரீஜோ என்ற அந்த நாயை தொன்போஸ்கோ சந்தித்ததே ஓர் எதிர்பாராத நிகழ்வுதான்.

1852-ஆம் ஆண்டில் ஓர் இரவு நேரத்தில் தொன்போஸ்கோ தனியே தன் மடத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் தனக்கு ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என்ற அச்சத்தோடு அவர் நடந்து வருகையில், எதிரே தன்னை நோக்கி ஓடிவரும் ஓநாய் முகத்தோற்றம் கொண்ட மூன்றடி உயர நாயைக் கண்டதும் இலேசாக அஞ்சினார். அவரை நோக்கி ஓடிவந்த அந்நாயோசட்டென நின்று ஏதோ வெகுகாலம் அவரிடம் பழகியதைப் போன்று அவர்முன் தன் வாலையாட்டி மகிழ்ச்சியைக் காட்டியபடி அவரைச் சுற்றி வந்தது.

அவர் பின்னே மடம் வரைக்கும் தொடர்ந்துவந்த அந்தப் பிராணியைத் தடவிக் கொடுத்த தொன்போஸ்கோ இத்தாலிய மொழியில் அதன் நிறத்தின் பொருட்டுகிரீஜோஎன்று செல்லமாகப் பெயரிட்டு அழைத்தார். வாலை ஆட்டியபடி கிரீஜோ அங்கிருந்து ஓடிப்போனது. அன்று மட்டுமல்லாமல் இரவு வேளைகளில் அவர் தனிமையில் வீடு திரும்பும்போதெல்லாம் எங்கிருந்தோ வந்து அவரோடு மடம் வரைக்கும் பாதுகாவலாக உடன் வரும் கிரீஜோவின் துணை தொன்போஸ்கோவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இரவு நேரங்களில் அவர் தனியே வீடு திரும்பும்போது அவருக்கு ஆபத்து இருந்தது, அதற்குக் காரணமும் இருந்தது.

கத்தோலிக்கத் திருமறை இத்தாலியில் வெகுவேகமாக வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த காலம் அது. இத்தாலியில் பினார்டி என்ற இடத்தில் மடம் அமைத்து ஏழைச் சிறுவர்களுக்குக் கல்வியும் தொழிலும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்திருந்த தொன்போஸ்கோ, கத்தோலிக்க மதத்தின் கோட்பாடுகளிலிருந்து சிறிதும் வழுவாமல் தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். அவரின் பிறர்நலப் பணிகளையும் கத்தோலிக்கத் திருமறையின் வளர்ச்சியையும் கண்டு பொறாமையுற்ற எதிரிகள், கத்தோலிக்க மதத்தைப் பற்றித் தவறான, பொருத்தமில்லாத கருத்துகளை வெளிப்படுத்தி அதன் வளர்ச்சியைச் சீர்குலைக்க முயன்றனர்.

இவர்களைக் கத்தோலிக்க மக்கள் எதிர்த்துப் போராடத் தயங்கிய காலத்தில் தொன்போஸ்கோ சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் திருமறையைப் புரிந்துகொள்ளும் வண்ணம் பகைவர்களின் தவறான பிரச்சாரத்துக்குப் பதிலடிக் கொடுக்கும் முகமாக துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து அனைவருக்கும் வழங்கினார்.

வால்டேசியன்ஸ்என்ற பிரிவினை சபையினர் நயத்தாலும் பயத்தாலும் அவரை மிரட்டிப் பார்த்தனர். அவரோ எதற்கும் அஞ்சாமல், அவர்களுடைய எதிர்ப்புகளுக்குப் பதில் கொடுக்கும் விதத்தில்கத்தோலிக்க வாசகம்என்ற பத்திரிகையை வெளியிட்டுக் கத்தோலிக்க மதத்தின் நிகரற்றக் கோட்பாடுகளை, சமய நெறிகளை மக்களுக்கு அறிவித்து இறைமக்களைத் திருமறையில் உறுதிப்படுத்தினார். தன் பிறர்நலப் பணிகளால் மக்களின் இதயங்களைக் கவர்ந்த அவரை ஒழித்துக்கட்ட எதிரிகள் முயற்சித்ததில் வியப்பொன்றுமில்லை. எதிரிகளின் எத்தனையோ தாக்குதல் முயற்சிகளில் தொன்போஸ்கோ ஆண்டவர்மீது கொண்ட பற்றுறுதியால் காப்பாற்றப்பட்டார்.

ஆபத்து அவரைத் தொடர்ந்துகொண்டுதானிருந்தது. அதற்காக அவர் தன் பணியின் வேகத்தைக் குறைத்துக்கொள்ளவில்லை. ஏழைச் சிறுவர்களுக்காகத் தான் நடத்தும் மடத்தின் வளர்ச்சிக்காகவும், மதம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்காகவும் அவர் வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அப்படியே வெளியே சென்று இரவு நேரங்களில் தனிமையில் அவர் மடத்துக்குத் திரும்பும்போதெல்லாம், எங்கிருந்தோ இந்த கிரீஜோ வந்து  அவருக்குத் துணையாக நடந்தது. ஒரு சமயம் பகைவர்கள் தடிகளோடு தொன்போஸ்கோவைத் தாக்க முயன்றபோதும், மற்றொருமுறை மரத்தின் பின்னால் மறைந்திருந்து துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொல்ல முயன்றபோதும் கிரீஜோதான் ஆவேசமாக ஓடிவந்து எதிரிகள்மேல் பாய்ந்து அவர்களைத் துரத்தியடித்தது.

இப்படியெல்லாம் உதவும் கிரீஜோ, தொன்போஸ்கோவை மடத்துவரை கொண்டு வந்து விட்டுப் போகும்போது அங்குள்ள சிறுவர்கள் அதற்கு ரொட்டியும் இறைச்சியும் கொடுப்பார்கள். கிரீஜோவோ அவற்றை ஏறெடுத்துப் பார்த்ததில்லை, முகர்ந்தும் பார்த்ததில்லை. “உனக்கு என்னதான் வேண்டும்?” என்று தொன்போஸ்கோ கேட்கும்போதெல்லாம், அவரை மகிழ்ச்சியுடன் நோக்கி வாலையாட்டிக்கொண்டே மடத்தைவிட்டு வெளியேறிவிடும் கிரீஜோ.     

1854-ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் மூடுபனியால் இருள் அடர்ந்திருந்த ஓர் இரவு நேரம். பணி நிமித்தம் வெளியே சென்ற தொன்போஸ்கோ தனிமையில் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தார். அவரைப் பின்தொடர்ந்து வந்த இருவர், அவர்மீது பாய்ந்து அவர் வாயைத் துணியால் அடைத்து, போர்வையால் அவர் முகத்தை மூடி அவரைக் கொல்ல முயன்றனர்.  ‘இனி தான் பிழைப்பது அரிதுஎன்று நினைத்துக்கொண்ட தொன்போஸ்கோ இறைவனுடைய உதவியை உள்ளத்தில் வேண்டிய நேரம், அதுவரை கண்ணில் படாதிருந்த கிரீஜோ எங்கிருந்துதான் வந்ததென்று தெரியவில்லை. சிங்கம்போல கோபாவேசத்துடன் அவ்விருவர்மீதும் பாய்ந்தது. அவர்களைக் கடித்துக் குதற ஆரம்பிக்க, பயந்துபோன அவர்கள் தொன்போஸ்கோவை நோக்கி, “ஐயா தொன்போஸ்கோ! உம் நாயை அழைத்துக்கொள்ளும்; இல்லாவிட்டால் எங்களுக்குச் சாவு நிச்சயம்என்று அலறினர்.

ஆண்டவரின் கருணையைப் புரிந்துகொண்ட தொன்போஸ்கோ, கிரீஜோவின் வீரத்தை வியந்த வண்ணம் அவர்களைப் பார்த்து, “நான் கூப்பிட்டுக் கொள்கிறேன். இனி இம்மாதிரி செயல்களில் ஈடுபடமாட்டோம் என உறுதி கூறுங்கள்என்றார். அதற்கு அவர்களோ, “இனி உமக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டோம்என ஒன்றாகக் குரலெழுப்பினர். இரக்கம் கொண்ட தொன்போஸ்கோகிரீஜோ! இவர்களை விட்டுவிடுஎன்று சொன்னதும்தான் தாமதம், அந்த இரண்டு பேரையும் விட்டுவிட்டு தொன்போஸ்கோ அருகில் வாலையாட்டியபடியே நின்றது. அவ்விருவரும்தப்பித்தோம், பிழைத்தோம்என்று தலை தெறிக்க ஓடிப் போயினர். தொன்போஸ்கோ கிரீஜோவின் தலையைக் கனிவோடு தடவிக் கொடுத்தார். பேராபத்திலிருந்து தப்பிய அவரை மடம் வரை கிரீஜோ பின்தொடர்ந்து வந்தது.

தங்கள் குருவானவர் தொன்போஸ்கோவைக் காப்பாற்றும் நாய் குறித்து மடத்துச் சிறுவர்கள்இந்த நாய் யாருடையது என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று பலமுறை கேட்டனர். தொன்போஸ்கோவால் இதற்குப் பதில் கூற முடியவில்லை.

அந்த நாய் கிரீஜோ எங்கிருந்து வந்தது? அதன் உரிமையாளர் யார்? அதன் வரலாறு என்ன? என்பதெல்லாம் பற்றி அவர் எவ்வளவோ முயற்சித்தும் கடைசிவரை அவரால் கண்டறிய முடியவில்லை.

தன்னுடைய ஆபத்துக்காலத்தில் ஆண்டவரால் அனுப்பப்பட்ட வாய் பேசமுடியாத நேசமிக்க பாதுகாவலன் என்ற அளவில்தான் அந்த நாய் கிரீஜோவை தொன்போஸ்கோ  அறிந்து வைத்திருந்தார்.

news
ஆன்மிகம்
பெண்களால் பேறுபெறட்டும் திரு அவை (மாமன்றச் சாதனைகள் ஒரு மீள்பார்வை – 07)

திரு அவையில் சரிபாதியினர் பெண்கள். திருவழிபாடுகளில் அதிகம் பங்கெடுப்போரும், குடும்பத்தில் நம்பிக்கையின் முதல் தூதுவர்களும் அவர்களே. திரு அவையின் நீண்ட வரலாற்றில் எண்ணற்றப் பெண்கள் மறைத்தூதர்களாகவும் இறையியலாளராகவும் பணியாற்றியுள்ளனர்; புனிதர்களாகவும் இறையிணைவு அருள்வாழ்வினராகவும் திகழ்ந்துள்ளனர். இன்று திரு அவை நிறுவனங்களிலும், மறைமாவட்ட மற்றும் உரோமைத் தலைமைச் செயலகங்களிலும் முக்கியப் பொறுப்பு வகிப்பவர்களும் உளர். பங்குத் தளங்களிலும் அன்பியங்களிலும் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுபவர்களும் அவர்களே. அனைத்திற்கும் மேலாக, முன்னணிக்கு வந்து முகம் காட்டாமலும், அதிகம் கண்கொள்ளப்படாமலும், பணித்தளங்களில் பெரும்பான்மையான அடிப்படைப் பணிகளை ஆற்றுபவர்களும் அவர்களே.

இருப்பினும், திரு அவையின் வாழ்வுசார்ந்த பல்வேறு துறைகளில் தங்கள் அருங்கொடைகளும் அழைப்பும் இடமும் ஏற்கப்படுவதில் பெண்கள் இன்னும் பல தடைகளை எதிர்கொள்கின்றனர். இது அனைவராலும் பகிரப்படவேண்டிய திரு அவையின் பணியை அவர்கள் ஆற்றுவதற்கு இடையூறாக உள்ளது (இஅ 60). இதனால் மாமன்றம் திரு அவையில் அனைத்துத் துறைகளிலும் பெண்களுடைய முழுமையான பங்களிப்பை வளர்க்கும் வகையில் புதிய சில பார்வைகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது.

மாண்பிலும் பணிப்பொறுப்பிலும் சமமானவர்கள்

கடவுள் பெண்ணை ஆணுடன் இணைத்தும், ஆணுக்கு இணையாகவும் தமது உருவிலும் சாயலிலும் படைத்தார். இயேசுவும் இறையாட்சி பற்றிப் பெண்களுடன் உரையாடுகிறார்; தம் சீடர்கள் குழுமத்தில் அவர்களையும் இணைத்துக்கொள்கிறார். அவரது நலமளிக்கும் ஆற்றலையும் விடுதலையையும் அவர் மதித்து ஏற்றுக்கொண்டதையும் அனுபவித்த சில பெண்கள் கலிலேயாவிலிருந்து எருசலேம்வரை அவருடன் இணைந்து பயணித்தனர் (லூக் 8:1-3). மகதலா மரியா எனும் பெண்ணையே அவர் தமது உயிர்ப்புச்செய்தியின் முதல் அறிவிப்பாளராக அனுப்பிவைத்தார்.

மேலும், திருமுழுக்கின் வழியாக இறைமக்கள் சமூகத்தில் உறுப்பினர்களாக இணையும் பெண்கள், கிறிஸ்துவில் ஆண்களுக்கு இணையான மாண்பாலும், தூய ஆவியார் பொழியும் பல்வேறு அருங்கொடைகளாலும் அணிசெய்யப்படுகின்றனர். இதனால்நாம் அனைவரும் கிறிஸ்துவின் அன்பிலும், போட்டியற்ற உறவின் ஒன்றிப்பிலும், திரு அவையின் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் செயலாக்கம் பெறும் கூட்டுப்பொறுப்பிலும் வாழ இணைந்து அழைக்கப்பட்டுள்ளோம் (முஅ 9டி).

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இத்தகைய அருமையான உறவுப் பரிமாற்றத்தை மாமன்றக் கூடுகையில் பங்கெடுத்தோர் அனுபவித்தனர். அருள்பணி மற்றும் அருளடையாளக் கண்ணோக்குடன் பெண்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களுடன் இணைந்து பயணிக்கவும் திரு அவை இன்னும் அதிகத் திட்டவட்டமான ஈடுபாடு காட்டவேண்டும் எனவும் அவர்கள் எடுத்துரைக்கின்றனர் (முஅ 9).

ஏனெனில், பெண்கள் பல்வேறு தளங்களில் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும், அருள்வாழ்வு அனுபவங்களையும் பகிர விரும்புகின்றனர். பாலியல் வன்முறை, பொருளாதாரச் சமத்துவமின்மை, பொருள்களாக நடத்தப்படும் போக்கு என்பன நிலவும் சமூகங்களில் பெண்கள் நீதிக்காகக் குரலெழுப்புகின்றனர். இச்சூழமைவுகளில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் திரு அவையின் அருள்பணிசார் பயணித்தலும், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும் இணைந்து செல்லவேண்டும்.

திரு அவையில் பெண்களின் இடம், பணி, அவர்களுக்குத் திரு அவை ஆற்றவேண்டிய பணிகள் என்பவற்றிற்கு மாதிரி காட்டுபவர் இறைமகன் இயேசுவின் அன்னையாகவும், சிறந்த நம்பிக்கையாளராகவும் திகழ்ந்த நாசரேத்தூர் மரியா. கடவுளின் குரலைக் கேட்பதற்கும், தூய ஆவியாரின் தூண்டுதல்களுக்குத் திறந்த உள்ளத்துடன் இருப்பதற்கும் அவர் அனைவருக்கும் சிறந்த மாதிரி காட்டுகிறார். குழந்தைப் பேறு, பாலூட்டி வளர்த்தல் என்பனவற்றின் மகிழ்ச்சியையும் ஏழ்மை, அகதியாதல், மகனின் கொடிய கொலை என்பனவற்றின் துயரத்தையும் தன் மகனின் உயிர்ப்பு, பெந்தகோஸ்து என்பனவற்றின் மாட்சியையும் அனுபவித்தறிந்தவர் அவர்.

அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களின் பணிகள் பற்றிப் பெண்கள் பலர் ஆழ்ந்த நன்றி தெரிவிக்கின்றனர். அதேவேளையில், அருள்பணியாளர் ஆதிக்கம், ஆணாதிக்கம், அதிகார அத்துமீறல்கள், பாலியல் துன்புறுத்தல்கள் என்பனவற்றால் திரு அவையில் தாங்கள் புண்படுவதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். இவை தொடர்ந்து திரு அவையின் முகத்தைக் கறைபடுத்துவதுடன், அதன் ஒன்றிப்புறவையும் சிதைக்கின்றனமேலும், திரு அவையில் ஆண் - பெண் உறவுகளில் மாண்பும் நீதியும் மறுக்கப்படும்போது, உலகின் பார்வையில் நமது நம்பிக்கை அறிக்கை நம்பகத்தன்மையை இழக்கிறது. நீதியையும் நலப்படுத்தலையும் ஒப்புரவையும் கோருகின்ற இச்சூழமைவில் உள்ளங்கள், உறவுகள் மற்றும் அமைப்புகளிலும் மாற்றங்கள் அவசியமாகின்றன.

செயல்படுத்தச் சில பரிந்துரைகள்

1. திரு அவையின் வாழ்வு மற்றும் திருத்தூதுப் பணி சார்ந்த அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு ஏற்று மதிக்கப்படவேண்டும், அவர்களது தலைமையும் வளர்த்தெடுக்கப்படவேண்டும் எனும் கோரிக்கை உலகெங்கும் உள்ள திரு அவைகளிலிருந்து எழுந்துள்ளன. பெண்களிடம் காணப்படும் திறமைகளையும் அருங்கொடைகளையும் அருள்பணிசார்ந்த தேவைகளுக்கு ஏற்ப இன்னும் அதிகமாகப் பயன்படுத்தும் வகையில் பல்வேறு பொறுப்புகளையும் திருப்பணிகளையும் அவர்களுக்கு வழங்குவது பற்றி அதிகம் சிந்திக்கவேண்டும்; தேவைப்படின் புதிய பணிகளையும் ஏற்படுத்தலாம்.

2. பெண்கள் திருத்தொண்டர் பணி ஆற்றுவது தொடக்கத் திரு அவையில் நடைமுறையில் இருந்தது. அது இன்றைய காலத்தின் அறிகுறிகளுக்குச் சரியான பதிலிறுப்பாகவும் அமையக்கூடியது. மேலும், அது திரு அவைக்குப் புதிய ஆற்றலும் உயிரோட்டமும் தரக்கூடியது. இக்காரணங்களால் இன்று பெண்களுக்குத் திருத்தொண்டர் பணியைத் தருவது எனும் கருத்திற்குப் பரவலான ஆதரவு இருந்தது. இருப்பினும், அது மரபுக்கு முரணானது எனும் காரணமும் அதற்கு எதிராகக் கூறப்பட்டது. இறுதியாக, அது பற்றி இன்னும் ஆழமான திருவிவிலிய, வரலாற்று, இறையியல் ஆய்வுகள் தேவை என முடிவெடுக்கப்பட்டது.

3. தலத்திரு அவைச் சூழமைவுகளில் விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்குச் செவிமடுத்து, அவர்களுடன் பயணித்து உதவிட அத்திரு அவைகளை மாமன்றம் ஊக்குவிக்கிறது.

4. முடிவெடுக்கும் அருள்பணிசார் நடவடிக்கைகளிலும் திருப்பணிகளிலும் அதிகாரம் உள்ள பொறுப்புகளுடன் பெண்கள் பங்கேற்பது உறுதி செய்யப்படவேண்டும். உரோமைத் தலைமைச் செயலகப் பொறுப்புகளில் பெண்கள் பலரைத் திருத்தந்தை நியமித்துள்ளதுபோல, மறைமாவட்டங்களிலும் பல்வேறு பொறுப்புகளில் பெண்கள் இடம்பெற வேண்டும். இதற்கு வழிசெய்யும் வகையில் திரு அவைச் சட்டத்திலும் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

5. திரு அவையில் பெண்களுக்கு, அதிலும் குறிப்பாகப் பெண் துறவியருக்கு, வேலை ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்படுவதும் குறைந்த ஊதியம் தரப்படுவதும் சரிசெய்யப்படவேண்டும்.

6. உருவாக்கப் பயிற்சித் திட்டங்களிலும் இறையியல் கல்வியிலும் பங்கேற்கப் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும். திரு அவை சட்டமுறை நடவடிக்கைகளில் நடுவர்களாகச் செயல்பட உரிய உருவாக்கம் பெண்களுக்கும் தரப்படவேண்டும்.

7. திருவழிபாட்டிலும், திரு அவை ஆவணங்களிலும் இருபால் பொதுமொழியைப் பயன்படுத்துவதுடன், பெண்களின் அனுபவங்களை வெளிப்படுத்தும் சொற்களும் உருவகங்களும் நிகழ்வுரைகளும் அதிகம் இடம்பெற வேண்டும்.  (தொடரும்)

news
ஆன்மிகம்
பேறுபெற்ற கன்னியானவள் கடவுளின் அருளால் நிரம்பியிருந்தாள்! (Blessed Virgin was filled with God’s Grace) (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 19)

அருளினால் நிரம்பியிருக்கின்றமரியாவின் நிலை அவருடைய தகுதியினால் (Human merit) கிடைத்தது அல்ல; மாறாக, முற்றிலும் கடவுளின் வியக்கத்தக்க செயலினால் விளைந்த ஒன்று (wholly the result of god’s wonderful work) என்பதை புனித லூக்கா நற்செய்தியாளர் தெளிவாக விவரிக்கின்றார்.

1. கிறிஸ்து பிறப்பு அறிவிப்புப் பற்றிய விவரிப்பில்மகிழ்ந்திடுஎன்ற வானதூதரின் வாழ்த்தொலியானது பழைய ஏற்பாட்டில்சீயோனின் மகளைநோக்கிக் கூறப்பட்டிருக்கும் மகிழ்ச்சிக்கான அழைத்தலின் இறைவாக்குகளை நமக்கு நினைவூட்டுகின்றது. இதை நான் இதற்கு முந்தைய எனது மறைக்கல்வியில் சுட்டிக்காட்டியுள்ளேன். மேலும், இந்த அழைப்பிற்கான பின்வரும் காரணங்களையும் விளக்கியுள்ளேன்: ‘கடவுளின் மக்களிடையே அவருடைய இருத்தல், மெசியாவாகிய அரசரின் வருகை மற்றும் தாய்வழிப் பலன்(Marternal fruitfulness) இந்தக் காரணங்கள்  மரியாவில்  நிறைவடைகின்றனகபிரியேல் தூதர் நாசரேத்தூர் கன்னியை நோக்கி ‘Chaire’ அதாவதுமகிழ்ந்திடுஎன்று வாழ்த்துவதில் அவரை ‘kecharitoméne’ அதாவதுஅருளால் நிறைந்தவரேஎன்று அழைக்கின்றார். கிரேக்கத் திருவிவிலிய மூலத்தினுடைய ‘Chaire’ மற்றும் ‘kecharitoméne’ போன்ற சொல்லாடல்கள் ஒன்றோடொன்று மிகவும் நெருக்கமான தொடர்புடையவை. ஆண்டவருடைய தாயாவதன் பொருட்டு கடவுள் அவரை அன்பு செய்வதாலும் அருளால் நிறைப்பதாலும் அதனைக் குறித்து மகிழ்ந்திட மரியா அழைக்கப்படுகின்றார்!

இறையருளானது மகிழ்ச்சிக்கானதொரு காரணம் மற்றும் அந்த மகிழ்ச்சியானது கடவுளிடமிருந்து வருகின்ற ஒன்று என்று திரு அவையின் நம்பிக்கையும் புனிதர்களின் அனுபவங்களும் கற்பிக்கின்றன. கிறித்தவர்களின் வாழ்வில் நிகழ்கின்றவாறே மரியாவிலும் அந்தத் தெய்வீகக் கொடையானது ஆழமானதொரு மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது.

2. Kecharitoméne: மரியாவை நோக்கிச் சொல்லப்பட்ட இந்தச் சொல்லாடலானது இயேசுவின் தாயாக இருக்கின்றதொரு பெண்ணை விவரிப்பதற்குரிய மிகச் சரியானதொன்றாகத் தெரிகின்றது. இதை இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடானஇறைத்திட்டத்தில் திரு அவைபின்வருமாறு விவரிக்கின்றது: “கருவான முதல் நொடியிலிருந்தே தனிச்சிறப்பான தூய்மையின் மாட்சியால் அணி செய்யப்பட்டிருந்த நாசரேத்துக் கன்னியைக் கடவுளின் ஆணையால் தூது சொல்ல வந்த வானதூதர்அருள்மிகப் பெற்றவரே (காண். லூக் 1:28) என்று வாழ்த்துகின்றார் (ஒப்பிடுக: இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 56). 

வானதூதர் மரியாவை இவ்வகையில் வாழ்த்தும் நிகழ்வானது இறைத்தூதரின் வாழ்த்தொலி மதிப்பை உயர்த்துகின்றது. மரியாவைப் பொருத்தவரை இது கடவுளின் மறைமுகமான மீட்புத்திட்டத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. இதையேநான் மீட்பரின் தாய்(Redemptoris Mater) என்கின்ற எனது சுற்றுமடலில் இவ்வாறு கூறியிருக்கிறேன்: “அருளால் நிறைந்தவளே!’ என்ற வாழ்த்தானது கிறிஸ்துவின் தாயாவதற்காக முன்குறித்து வைக்கப்பட்டு தேர்ந்துகொள்ளப்பட்டதனால் மரியாவுக்குக் கிடைக்கப்பெற்ற சிறப்புச் சலுகைகளான இயற்கைக்கு அப்பாற்பட்ட  அனைத்து நன்மைகளையும் குறிக்கின்றது (மீட்பரின் தாய், எண். 9).

கடவுள் மரியாவுக்கு  அருளை முழுமையாகக் கொடுத்துள்ளார்!

அருளால் நிறைந்தவரேஎன்பது கடவுளின் பார்வையில் மரியா பெற்றிருக்கின்ற ஒரு பெயராகும். உண்மையில் தூய லூக்கா நற்செய்தியாளரைப் பொருத்தவரை வானதூதர்மரியாஎன்கின்ற பெயரைச் சொல்வதற்கு முன்பே இந்தச் சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இவ்வகையில் நாசரேத்தூர் கன்னியின் ஆளுமையில் மிகவும் உயர்ந்ததொரு பார்வையை நற்செய்தியாளர் வலியுறுத்துகின்றார். ‘அருளால் நிறைந்தவரேஎன்கின்ற சொல்லாடலானது ‘kecharitoméne’  என்கின்ற கிரேக்கச் சொல்லின் மொழியாக்கமாகும். இது ஒரு வினையின் செயப்பாட்டு இலக்கண வடிவமாகும் (passive participle). ஆகவே, கிரேக்க வார்த்தையின் மிக நுட்பமான வேறுபாட்டைக் காட்டுகின்றவாறு வெறுமனேஅருளால் நிறைந்தவரேஎன்று கூறாமல், அதற்கு மாறாகஅருளினால் முழுமையாக் கப்பட்டவர்என்றோ அல்லது அதையும் கடந்து, கன்னி மரியாவுக்குக் கடவுளால் அளிக்கப்பட்டதொரு கொடை என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்ற வகையில்அருளினால் நிறைக்கப்பட்டவர்என்றோ கூறவேண்டும். வினையின் செயப்பாட்டு (perfect participle) இலக்கண வடிவத்தில் இருக்கின்ற இந்தச் சொல்லாடலானது முழுமையைக் குறிக்கின்ற நிறைவான மற்றும் என்றென்றைக்குமான அருளின் பிம்பத்தை மேம்படுத்துகிறது. ‘அருளை வழங்குதல்என்கின்ற அர்த்தத்தில் கடவுளின் அன்பு மகனில் தந்தையால் நமக்குக் கொடுக்கப்பட்ட அபரிமிதமான அருளைக் குறிப்பதற்கும், மீட்பின் கனியாக மரியா பெறுகின்ற அருளைக் குறிப்பதற்கும் (ஒப்பிடுக: மீட்பரின் தாய், எண். 10) இதே வினைச்சொல்லானது எபேசியர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் பயன்படுத்தப்படுகிறது (எபே 1:6). 

3.            கன்னி மரியாவைப் பொருத்தவரை, கடவுளின் செயலானது உண்மையிலேயே வியப்புக்குரியதொன்றாக இருக்கின்றது. மெசியாவின் வருகையைப் பற்றிய அறிவிப்பைப் பெறுவதற்கு மரியாவுக்கு எவ்விதச் சிறப்புத் தகுதியும் இல்லை. அவர் ஒரு தலைமைக்குருவோ, யூதமதத்தின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதியோ அல்லது ஓர் ஆணோ அல்ல; மாறாக, அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அந்தச் சமூகத்தில் எந்தவொரு செல்வாக்கும் பெற்றிராத ஓர் இளம்பெண். அதோடு, பழைய ஏற்பாட்டில் எந்த இடத்திலும் குறிக்கப்படாத நாசரேத்து என்னும் கிராமத்தைச் சார்ந்தவர். யோவான் நற்செய்தியில்நாசரேத்தூரிலிருந்து நல்லது ஏதும் வரக்கூடுமோ?” (யோவா 1:46) என்று நத்தானியேல் கேட்கின்றவாறு அந்தக் கிராமத்திற்கென்று எந்தவொரு பெருமையோ புகழோ இருந்திருக்கச் சாத்தியமில்லை.

வழக்கத்திற்கு மாறான மற்றும் புரிந்துகொள்ள இயலாத இந்தக் கடவுளின் தலையீட்டின் தன்மையானது லூக்கா நற்செய்தியில் வரும் சக்கரியாவிற்கு நடந்தவைகளை விவரிக்கும் பகுதியோடு ஒத்திருப்பது தெளிவாகின்றது. சக்கரியாவின்குருஎன்கின்ற தகுதியும், அவருடைய முன்மாதிரியான வாழ்வும் குறிப்பிடப்படுவதன் வழியாக அவரும் அவரின் மனைவியான எலிசபெத்தும் பழைய ஏற்பாட்டின் மாதிரிகளாகக் காட்டப்படுகின்றார்கள். “அவர்கள் இருவரும் கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாய் விளங்கினார்கள். ஆண்டவருடைய அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்ப குற்றமற்றவர்களாய் நடந்து வந்தார்கள் (லூக் 1:6).

ஆனால், மரியாவின் தோற்றம் பற்றித் திருவிவிலியத்தில் நமக்கு எந்தவிதமான தகவல்களும் சொல்லப்படவில்லை: “தாவீது குடும்பத்தினராகிய...” (லூக் 1:27) என்பதுகூட யோசேப்புவையே குறிக்கின்றதுமரியாவின்  நடத்தை (Mary’s behaviour) பற்றிய எந்தவிதத் தகவலும் குறிக்கப்படவில்லை. மரியாவைப்  பொருத்தவரை ஒவ்வொன்றும் இறைவனின் அருளிலிருந்து வருவதாக, தூய லூக்கா நற்செய்தியாளர் இலக்கியத் தெளிவோடு வலியுறுத்துகின்றார். மரியாவுக்கு வழங்கப்பட்டதெல்லாம் அவருக்கானதொரு தனிச்சிறப்பின் பலனாக இல்லாமல், கடவுளுடைய சுதந்திரமான மற்றும் விருப்பத்தின் நற்கொடையின் பலனாகவே இருக்கின்றது.

மரியாவில்  கடவுளின் இரக்கமானது உயர் நிலையை அடைகின்றது

4. அவ்வாறு செய்வதில் நற்செய்தியாளர் உண்மையில் கன்னி மரியாவின் தனிப்பட்ட மதிப்பைச் சிறுமைப்படுத்த எண்ணவில்லை. மாறாக, கடவுளுடைய நன்மைத்தனத்தின் தூய்மையானதொரு கனியாகவே மரியாவைக் காட்ட அவர் விரும்புகின்றார். ‘அருள் நிறைந்தவரேஎன்று வானதூதர் பயன்படுத்திய அடைமொழியின்படி அவரால் செய்ய முடிந்ததையே அவர் ஏற்றுக்கொள்ளவும் முடிந்தது

இவ்வாறு செய்வதன் வழியாக, நற்செய்தியாளர் நிச்சயமாகப் பேறுபெற்ற கன்னியின் சிறந்த, தனிப்பட்ட மதிப்பைக் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை; மாறாக, மரியாவைக் கடவுளின் நல்லெண்ணத்தின் தூய கனியாகக் காட்ட விரும்புகிறார். வான தூதர் பயன்படுத்திய அடைமொழியானஅருள் நிறைந்தவராக மாற்றுவதற்காக அவர் மரியாவைத் தமதாக்கிக் கொண்டார்.

யாவே கடவுள் பழைய ஏற்பாட்டில் அவரின் அபரிமிதமான அன்பைப் பல வழிகளில், பல நேரங்களில் வெளிப்படுத்துகின்றார். புதிய ஏற்பாட்டின் தொடக்கத்தில், கடவுளுடைய இரக்கத்தின் கொடையானது  மரியாவில்  அதன் உயர்நிலையை அடைகின்றது. அவரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும் குறிப்பாக, தாழ்மையானவர்களுக்கும் ஏழைகளுக்கும் காட்டப்படும் கடவுளின் சார்புநிலையானது அதன் உச்சத்தை அடைகிறது.

ஆண்டவரின் வார்த்தையாலும் புனிதர்களின் அனுபவத்தினாலும் உந்தப்பட்டு, திரு அவையானது அதன் நம்பிக்கையாளர்களை மீட்பரின் தாயான  மரியாவில்  அவர்களின் கண்களைப் பதிய வைக்கவும், அவரைப் போன்றே கடவுளால் அன்பு செய்யப்பட்டவர்கள் என்று தங்களையே கருதுவதற்கும் அவர்களைத் தூண்டுகின்றது. மரியாவின் தாழ்ச்சியையும் ஏழ்மையையும் பகிர்ந்துகொள்வதற்குத் திரு அவையானது அவர்களை அழைக்கின்றது. ஏனெனில், அவருடைய எடுத்துக்காட்டு மற்றும் பரிந்துரையைப் பின்பற்றி அவர்களின் இதயங்களைப் புனிதப்படுத்தக்கூடிய மற்றும் மாற்றக்கூடிய கடவுளின் அருளில் அவர்களாலும் நிலைத்திருக்க முடியும்.

மூலம்: John Paul II, Blessed virgin was filled with God’s grace, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 15 May 1996, p. 11.