அன்புச்செல்வன்: “தந்தையே! திருமுழுக்குக் குறித்த அற்புதமான பல தெளிவுகளை எங்களோடு உடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டு வருகிறீர்கள். மிகவும் நன்றி! திருமுழுக்குக் குறித்து சில கேள்விகள் எங்களிடம் உள்ளன. அவற்றைக் கேட்க விரும்புகிறோம். சில கிறித்தவர்கள் பக்தியான சில அருள்பணியாளரிடம் அருளடையாளங்களைப் பெற்றால்தான் பலன் உண்டு என்று அருள்பணியாளர்களையும் இடங்களையும் தேர்வு செய்வதில் ஆர்வம் காண்பிக்கின்றனர். இது குறித்து உங்களது கருத்து என்ன?”
அருள்பணி:
“இதற்கு நான் என் பதிலைத் தருவதைவிட திரு
அவையின் மறைவல்லுநராகக் கருதப்படும் புனித இசிதோரின் (St. Isidore) கருத்தைத்
தர விரும்புகிறேன்: ‘திருமுழுக்கு மனிதர்களது செயல்பாடு அல்ல; மாறாக, கிறிஸ்துவின் செயல்பாடு. எனவே, ஒரு கொலையாளியால் திருமுழுக்கு அருளடையாளம் நிறைவேற்றப்பட்டாலும், அதனால் திருமுழுக்கு அருளடையாளத்தின் தன்மை பாதிக்கப்படாது.’ புனித இசிதோர் சொல்லும் கருத்து என்னவெனில், திருமுழுக்கு அருளடையாளத்தை நிறைவேற்றுவது கடவுளே! அருள்பணியாளர்கள் அவர்களது பிரதிநிதிகளே! பிரதிநிதிகள் குறைவுள்ளவர்களாக இருப்பதன் காரணமாக அருளடையாளத்தில் குறைவு வந்துவிடுவதில்லை. அருளடையாளக் கொண்டாட்டத்தின் வழியாகப் பெறப்படும் கொடைகளும் வரங்களும் அதைப் பெறுபவர்களது மனநிலையையும் உளப்பாங்கையும் பொறுத்ததே அன்றி, அவ்வருளடையாளக் கொண்டாட்டத்தை நிகழ்த்தும் அருள்பணியாளர்களின் புனிதத்தைப் பொறுத்தது அல்ல; காரணம், அருளடையாளத்தை நிகழ்த்துபவர் கடவுளே! இக்கருத்தை இன்னும் கொஞ்சம் ஆழமான தளத்தில், ‘இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தவர் யார்?’ என்கின்ற பின்னணியில் நாம் புரிந்துகொள்ள முயற்சி எடுக்கலாம்.”
மார்த்தா:
“இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தது புனித திருமுழுக்கு யோவான்தானே?”
அருள்பணி:
“வெளிப்படையாகப் பார்ர்க்கும்போது இயேசுவுக்குத் திருமுழுக்கு யோவான் திருமுழுக்கு கொடுத்தார் என்பது நாம் அறிந்ததே! எனினும், நான்கு நற்செய்திகளையும் கூர்ந்துநோக்கினோம் என்றால், அங்கு ஒரு சிறிய வித்தியாசம் தென்படுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். மத்தேயு, மாற்கு நற்செய்தியாளர்களின் கருத்துப்படி திருமுழுக்கு யோவானே இயேசுவுக்குத் திருமுழுக்கு கொடுத்தார் (மத் 3: 13-19, மாற் 1:9). ஆனால், லூக்கா மற்றும் யோவான் நற்செய்தியாளர்கள் இதில் சற்று முரண்படுவதாகத் தெரிகிறது. இயேசு திருமுழுக்குப் பெறுவதற்கு முன்பாகவே திருமுழுக்கு யோவான் ஏரோதால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதாக லூக்கா எழுதுகிறார். திருமுழுக்கு யோவான் ஏரோதால் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வை எழுதிவிட்டு (லூக் 3: 20), இயேசுவின் திருமுழுக்குக் குறித்து லூக்கா எழுதுகிறார் (லூக் 3: 21,22). மேலும், இயேசு திருமுழுக்குப் பெற்றதாக லூக்கா குறிப்பிடுகிறாரேயொழிய, அதைக் கொடுத்தது யார் என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிடவில்லை. அதுபோல யோவான் நற்செய்தியிலும் திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கு முன்னோடியாகக் காட்டப்படுகிறாரேயொழிய, இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தவராகக் குறிப்பிடப்படவில்லை. நான்காம் நற்செய்தி யில் இயேசு திருமுழுக்குப் பெற்றதற்கான சாட்சியாக மட்டுமே திருமுழுக்கு யோவான் சுட்டிக் காட்டப்படுகிறார் (யோவா 1: 32-34).”
மார்த்தா: “ஆச்சரியமாக இருக்கிறது! நான் பலமுறை நற்செய்திகளை வாசித்திருக்கிறேன், வாசிக்கக் கேட்டிருக்கின்றேன். ஆனால், நீங்கள் கூறுகின்ற அந்த வித்தியாசத்தைக் கண்டுபிடித்ததில்லை. லூக்கா மற்றும் யோவான் இவ்வாறு முரண்படுவதற்கான காரணம் என்ன தந்தையே!”
அருள்பணி:
“இரண்டு காரணங்கள் இருக்கக்கூடும். ஒன்று, லூக்கா தனது நற்செய்தியை எழுதிய காலகட்டத்தில் யூதேயாவில் ஒரு குழுவினர் திருமுழுக்கு யோவானே மெசியா என்கிற கருத்தைப் பரப்பி வந்தனர். அதாவது, இயேசுவின் திருத்தூதர்கள் ‘இயேசுவே மெசியா’ என்று ஒரு பக்கம் போதித்துக்கொண்டிருக்க, மற்றொரு குழுவினர் ‘திருமுழுக்கு யோவானே யூதர்கள் எதிர்பார்த்த மெசியா’ என்று கூறி, அவர் பெயரால் திருமுழுக்குக் கொடுத்து வந்தனர் (திப 19: 3). இதற்கு அவர்கள் கையில் எடுத்த வாதங்களுள் ஒன்று, இயேசுவுக்கே திருமுழுக்குக் கொடுத்தவர் யோவான் என்பது!”
கிறிஸ்டினா:
“அதாவது திருமுழுக்குப் பெற்ற இயேசுவைவிட திருமுழுக்குக் கொடுத்த யோவான் பெரியவர் என்ற வாதம்?”
அருள்பணி: “ஆம், எனவே, ‘இயேசுவே மெசியா’ என்பதைத் தூக்கிப்பிடிக்கும் விதமாக லூக்காவும் யோவானும் இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தது, திருமுழுக்கு யோவான் என்கின்ற கருத்தைத் தவிர்த்து விட்டனர். மேற்காணும் பிரச்சினையின் காரணமாகவே யோவான் நற்செய்தியாளர் ‘அவர் ஒளியல்ல! மாறாக, ஒளியைக் குறித்துச் சான்றுபகர வந்தவர்’
(யோவா 1:8) என்று திருமுழுக்கு யோவானைக் குறித்து எழுதுகிறார். மேலும், திருமுழுக்கு யோவானே ‘நான் மெசியா அல்ல’
(யோவா 1:19) என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டதாகவும் யோவான் எழுதுகிறார்.”
அகஸ்டின்:
“இரண்டாவது காரணம் என்ன தந்தையே?”
அருள்பணி:
“மேலே நாம் விவாதித்த காரணம்! திருமுழுக்குக் கொடுப்பவர் உண்மையில் கடவுள் தாம் என்ற இறையியல் உண்மையை ஆழமாக எடுத்துரைக்கவே! அருளடையாளங்களை நிறைவேற்றுவதற்குக் கடவுள் தம் கருவிகளாகப் பல்வேறு மனிதர்களைப் பயன்படுத்தினாலும், அருளடையாளச் செயல் பாடுகளின் தொடக்கக் காரணராகவும், அதை நிறை வேற்றுபவராகவும் இருப்பவர் கடவுள் மட்டுமே!”
அகஸ்டின்:
“தந்தையே, திருமுழுக்குக் குறித்து என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. பாவிகளாகிய நாம் நம் பாவங்கள் கழுவப்படுவதற்காகத் திருமுழுக்குப் பெறுகின்றோம். ஆனால், பாவமே அறியாத இயேசு ஏன் திருமுழுக்குப் பெறவேண்டும்?”
அருள்பணி:
“உனது கேள்விக்குப் பதிலாகத் திரு அவையின் புகழ்பெற்ற ஆயரும் அறிஞருமாகிய புனித அம்புரோசியாரின் கருத்தைக் கொடுக்க விரும்புகின்றேன்: ‘நம் ஆண்டவராகிய இயேசு திருமுழுக்குப் பெற்றது தம்மைத் தூய்மைப்படுத்துவதற்காக அல்ல; மாறாக, தண்ணீரைத் தூய்மைப்படுத்துவதற்காக! பாவமே அறியாத இயேசுவின் உடலைத் தொட்ட நீர் புனிதப்படுத்தப்படுவதால், அது பாவிகளின் பாவங்களைப் போக்கும் ஆற்றலைப் பெற்ற ஒன்றாக மாறுகிறது.’ (‘The Lord was baptized,
not to be cleansed Himself, but to cleanse the waters, so that those waters,
cleansed by the flesh of Christ which knew no sin, might have the power of
Baptism’)”
மார்த்தா:
“என்னவோர் அருமையான சிந்தனை! திருமுழுக்குக் குறித்து என்னிடமும் ஒரு கேள்வி இருக்கிறது. பெந்தகோஸ்து கூட்டத்தார் முழுக்கு ஞானஸ்நானம் என்ற ஒன்றைப் பற்றிக் கூறி கத்தோலிக்கரிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்களே! இது பற்றி விளக்கம் அளிக்க முடியுமா, தந்தையே?”
அருள்பணி:
“இரண்டு காரியங்களை நாம் சிந்திக்கலாம். முதலாவதாக, உடல் முழுவதும் தண்ணீரில் மூழ்கிதான் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது என்பது குறித் துத் திருவிவிலியத்தில் எந்தத் தெளிவான குறிப்பும் கிடையாது. ‘திருமுழுக்குப் பெற்றவுடன் இயேசு தண்ணீரைவிட்டு வெளியேறினார்’ (மத்
3:16) என்ற இறைவசனத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, பல பிரிவினை சபையினர்
இயேசு தண்ணீரில் மூழ்கிதான் திருமுழுக்குப் பெற்றார் என்று வாதாடுகின்றனர். இது யூகத்தின் அடிப்படையில் ஊதிப் பெரிதுபடுத்தப்படும் ஒரு காரியம். இரண்டாவதாக, உடல் அழுக்கைப் போக்கவேண்டும் என்றால், ஒட்டுமொத்த உடலுமே குளிக்கவேண்டும். திருமுழுக்கு என்பது உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல; அது நம் ஆன்ம அழுக்கைப் போக்கும் செயல். எனவே, உச்சந்தலையில் தண்ணீர் ஊற்றுவது போதுமானது. தொடக்கக் கிறித்தவர்கள் வாழ்ந்த சுரங்க இல்லங்களில் (catacombs)
செதுக்கி வைக்கப்பட்டிருந்த சிற்பங்களில், யோவான் இயேசுவின் தலைமேல் தண்ணீரை ஊற்றுவதுபோல்தான் வடிவமைத்திருக்கிறார்கள்.”
அன்புச்செல்வன்:
“எனக்கு ஒரு துணுக்கு நினைவுக்கு வருகிறது. ஒரு கத்தோலிக்கக் குருவானவரும், பெந்தகோஸ்து போதகர் ஒருவரும் முழுக்கு ஞானஸ்நானம் பற்றி வாதாடிக் கொண்டிருந்தார்களாம்;
உடல் முழுவதுமாகத் தண்ணீரில் மூழ்கினால்தான் திருமுழுக்குச் செல்லுபடியாகும் என்று பெந்தகோஸ்து போதகர் வாதாடிக் கொண்டிருந்தார். அப்போது குருவானவர் போதகரைப் பார்த்து, ‘திருமுழுக்குப் பெறுபவர் தண்ணீரில் நெஞ்சுவரை நின்று நீங்கள் அவருக்குத் திருமுழுக்கு கொடுத்தால் அது செல்லுபடியாகுமா?’ என்று கேட்க, அந்தப் போதகர் ‘செல்லுபடியாகாது’ என்றார்.
குருவானவர், ‘கண்கள் வரை நின்றால் அது செல்லுபடியாகுமா?’ என்று கேட்க, போதகர் அதே பதிலைக் கொடுத்தார். ‘நெற்றிவரை ஒருவர் நீரில் நின்றார் என்றால் அப்பொழுது திருமுழுக்குக் கொடுக்கலாமா?’ என்று கேட்க, அந்தப் போதகர் ‘தண்ணீர் உச்சந்தலையில்பட்டால்தான் அந்தத் திருமுழுக்குச் சரியானதாக இருக்கும்’
என்ற பதிலைக் கொடுத்தார். குருவானவர் ‘அதைத்தானே நாங்கள் செய்கிறோம்’ என்றாராம்.
அந்தப் போதகரால் அதற்குமேல் பதில் பேச முடியவில்லை.”
அருள்பணி:
“ஆம்! தண்ணீர் ஊற்றுவது ஓர் அடையாளச் செயல்பாடே!”
(தொடரும்)
மீண்டும் மீண்டும் ஒலிக்கும் சப்தங்கள்; மீண்டும் மீண்டும் விழும் குண்டுகள்; பதற்றத்துடன் துடிக்கும் இதயங்கள்; எப்போது? இங்கே? என்ற அச்சமிகு எண்ணங்கள். இத்தகைய சூழலில், “போர் ஒரு முடிவல்ல; ஆயுதம் வெற்றியை அளிக்காது, பசியை ஆயுதமாக்காதீர்கள். இத்தனைகளுக்கு மத்தியிலும் மீண்டும் மீண்டும் சிதறுகிறது மனித உடல்கள்” என ஒலிக்கிறது திருத்தந்தையின் குரல்.
“கோவிலென்பேன், பள்ளிக்கூடமென்பேன், மருந்தகமென்பேன் - எல்லாம் உயிர் காக்ககூடியவை. ஆனால், இங்கேதான் இப்போது உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம்” எனும்
திரு. இறையன்பு அவர்களின் வார்த்தைகள் நினைவலைகளில் அசைவாடுகிறது. வயிற்றுப்பசி, செவிப்பசியை மூடிக்கொள்ளும். ஆனால், செ ருக்கு செவியையும்,
கர்வம் கண்களையும் அடைத்துவிடுகிறது. கிழிந்த உடல்களின் புகைப்படங்களையும் உணர்ச்சிநிறை வார்த்தைகளையும் தன்னில் பதிவு செய்கின்றபொழுது காகிதங்கள் கூட கரைகின்றன. ஆனால், சுற்றமும் நட்பும் வார்த்தையோடும் வேடிக்கையோடும் நின்றுவிடுகிறது.
“பசியை ஒருபோதும் ஆயுதமாக்காதீர்கள்” என்றார்
திருத்தந்தை லியோ. ஆனால், மனித ஆதங்கம், “சகோதரருக்குப் போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதபோது, அவர்கள் உடலுக்குத் தேவையான எவற்றையும் கொடாமல் அவர்களைப் பார்த்து நலமே சென்று வாருங்கள். குளிர்காய்ந்து கொள்ளுங்கள், பசியாற்றிக்கொள்ளுங்கள் என்பார் என்றால் என்ன பயன்?” (யாக் 2:15-16) என்ற வார்த்தைகளோடு நின்றுவிடுகிறது.
பசி
வெறும் உணவு பற்றாக்குறை அல்ல; இது ஓர் ஆயுதம் இல்லாப் போர். உயிர் வாழ்வதற்கான போராட்டம். அநியாயமும் சுயநலமும் நிறைந்த பேராசையின் உச்சம். பசியின் மத்தியில் உணவுப் பகிர்வு இறைவார்த்தையை நம் வாழ்வாக்குவது (எசாயா 58:5).
பசித்தோருக்கு
உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதுதான் இறைவன் விரும்பும் நோன்பு. கடவுளைத் தொழுகின்ற மனிதச் சமூகம் கருணையின்றி கருத்துப் பரிமாற்றம் செய்கிறது. இத்தனைக்கும் காரணம் என்ன?
காரணம்
என்ன என்பதைவிட, யார் என்பது தான். யார் பெரியவர்? என்ற அதிகார மோகம். சவுல் தாவீதின்மீது கோபம் கொண்டு கொல்லத் திட்டமிட்டார். காரணம், சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார் (1சாமு 18:7) என்ற புகழ்ச்சிப் பாடலில் அமைதியைவிட அதிகாரமும் அநீதியும் மேலோங்கிக் காணப்படுகிறது. எவன் ஒருவன் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறானோ, அவனே உண்மையின் தோழன்.
இன்று
மிருகங்களைப் பாதுகாக்க எழும் கூட்டம் மனிதர்களைக் காக்க கண்மூடுவது ஏன்? எழுதும் பேனாவும் கண்ணீர் சிந்துகிறது. பிஞ்சு இதயங்களின் குருதியும் குரலும் வழி தேடுகிறது. ஆனால், மனிதன் கரம் கொடுக்க மறுக்கிறான். கருணை காட்ட கடினம் ஏன்?
அக்டோபர் மாதம் என்றாலே நம் தாய் மரியாவின் வெற்றியின் மாலை - செபமாலையைச் செபிக்கும் மாதம். மனிதகுலத்தின் வரலாற்றில் அறிவியல் மற்றும் நம்பிக்கை எப்போதும் இணைந்து பயணித்துள்ளன. அறிவியல் மனித வாழ்வை மேம்படுத்துவதற்கு வழிகாட்டி ஆகும். அதேசமயம், நம்பிக்கை மனித மனத்தை அமைதியுடன், உறுதியுடன் வாழச் செய்கிறது. இந்த இரண்டிற்கும் இடையே பாலமாக விளங்குவது செபமாலை. அது ஒருபக்கம், ஆன்மிக வாழ்வை வளப்படுத்தும் வழிமுறையாகவும்; மறுபக்கம், வரலாற்றின் பல சோதனைகளில் வெற்றியை வழங்கிய ஆற்றலாகவும் திகழ்கிறது.
உலகப்
புகழ்பெற்ற அறிவியலாளரான லூயி பாஸ்டர் கூட தனது வாழ்வில் செபமாலையின் சக்தியை நம்பியிருந்தார் என்பது அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையே முரண்பாடு இல்லை என்பதற்குச் சாட்சியாகும். குடும்பம், சமூகம், திரு அவை ஆகியவற்றின் ஆன்மிக ஒன்றிப்பை உறுதிப்படுத்தும் கருவியாகச் செபமாலை இன்றுகூட வாழ்வில் பெரும் பொருள்கொண்டதாக இருக்கிறது.
லூயி பாஸ்டர்
மற்றும்
செபமாலை
அனுபவம்
19-ஆம்
நூற்றாண்டின் புகழ்மிக்க நுண்ணறிவியலாளர், பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லூயி பாஸ்டர் (1822-1895) தனது 25-வது வயதில் வெறி நாய்க்கடிக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடித்தார். ஒருநாள் பாரிஸ் நகரத்தை நோக்கித் தொடர்வண்டியில் பயணம் செய்யும்போது, அவர் கையில் செபமாலை வைத்துச் செபித்துக் கொண்டிருந்தார். அதே வண்டியில் அமர்ந்திருந்த ஒரு பல்கலைக்கழக மாணவன் பாஸ்டரைப் பார்த்துக் கேட்டான்: “சார், இன்னும் இந்தச் செபமாலை செபிப்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா?” பாஸ்டர் சிரித்தார், “ஆம்.”
மாணவன்
சோகமாக, “இது ஒரு மூடநம்பிக்கை. அறிவியலையும் அறிவையும் கற்றுக் கொள்ளுங்கள்” என்று
கூறி, செபமாலையை அவரிடம் இருந்து வெளியே எறியுமாறு கேட்டான். பாஸ்டர் வருத்தமடைந்தார். மாணவன் பாஸ்டரின் முகவரியைக் கேட்டுப் பெற்றுக்கொண்டான். சில நாள்கள் கழித்து அந்த மாணவன் தன்னிடமிருந்த முகவரியைப் பார்த்தபோது அதில் ‘அறிவியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநர், லூயி பாஸ்டர், பாரிஸ், பிரான்ஸ்’
என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
வரலாற்றில் செபமாலை
செபமாலை
சொல்லும் வழக்கம் 13-ஆம் நூற்றாண்டிலிருந்து பரவ ஆரம்பித்தது. அந்தக் காலத்தில் இயேசுவின் இறைத்தன்மையை மறுக்கும் ‘அல்பிஜீயன்ஸ்’ என்ற
தப்பறைக் கொள்கை திரு அவைக்கு அதிகப்படியான அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. டொமினிக் என்ற சாமிநாதர் இதை எதிர்த்துப் போராடினார். ஆனால், வெற்றிபெற முடியவில்லை. அப்போது மரியா அவருக்குக் காட்சி கொடுத்து, “இந்தச் செபமாலையை வைத்து நம்பிக்கையோடு செபி, வெற்றி கிடைக்கும்” என்று
கூறினார். டொமினிக் அதற்கேற்ப செபமாலை செபித்ததால், பலர் மனமாற்றம் அடைந்து இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டனர். இதனால் செபமாலை சொல்லும் வழக்கம் பரவியது.
இந்த
விழாவை உலகெங்கும் உள்ள கத்தோலிக்கக் கிறித்தவர்கள் அனைவரும் அக்டோபர் மாதம் முதல் ஞாயிறன்று கொண்டாடும் வகையில் 1716-ஆம் ஆண்டு திருத்தந்தை 12-ஆம் கிளமெண்ட் இதை உரோமன் பொது நாள்காட்டியில் இணைத்தார். 1913-இல் போர்ச்சுக்கல்லின் பாத்திமா நகரில் காட்சி அளித்த அன்னை மரியா தன்னை ‘செபமாலை அன்னை’ என்று அறிமுகம் செய்து கொண்டார்.
புனிதர்கள் மற்றும்
செபமாலை
புனிதர்
ஆலன் ரோச் செபமாலை சொல்லும் வழக்கத்தை மக்களிடத்தில் அதிகரித்தார். 1571-ஆம் ஆண்டு கிறித்தவர்கள் இஸ்லாமியப் படையைச் செபமாலையின் துணையால் வெற்றி கொண்டனர். இதற்குப் பிறகு செபமாலைமீது மக்களின் நம்பிக்கை அதிகரித்தது. 1715-ஆம்
ஆண்டு திருத்தந்தை செபமாலை விழாவைத் திரு அவையின் விழா அட்டவணையில் சேர்த்தார். 1858 மற்றும் 1917-ஆம் ஆண்டுகளில் லூர்து, பாத்திமா நகரங்களில் மரியா சிறுமிகளுக்குக் காட்சி கொடுத்து, செபமாலை சொல்லும் நன்மைகள் மற்றும் வழிமுறைகளை விளக்கினார்.
செபமாலை சொல்லும்
விதி
மற்றும்
அர்த்தம்
செபமாலை
சொல்லும்போது ஒரே வார்த்தையை மறுமுறை மட்டுமல்ல, இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு, இறப்பு மற்றும் உயிர்ப்பை மரியாவின் வாழ்க்கையுடன் இணைத்துத் தியானிக்கிறோம். தூய லூயிஸ் தே மாண்ட்போர்ட் கூறுகிறார்:
“செபமாலை சொல்கிறபோது நமக்கு வரும் தீவினைகள் முற்றிலும் நீங்கும்; இறையருள் மேலும் பெருகும்.” திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர் கூறுகிறார்: “செபமாலை சாதாரண விடயம் அல்ல; அதைச் சொல்லிச் செபிக்கும்போது மீட்பின் வரலாற்றை நினைவுகூர்கின்றோம்; ஆண்டவர் இயேசு நமக்குக் கூறிய செபத்தையும், வானதூதர் கபிரியேல் மரியாவிற்குக் கூறிய மங்கள வார்த்தையையும் நினைவுகூர்கின்றோம்.”
செபமாலையின் மூன்று
பண்புகள்
செபமாலை
கிறித்தவ வாழ்வின் ஆற்றலும் ஆறுதலுமாக இருக்கிறது. அது
வெற்றி, விசுவாசம், விண்ணக வாழ்வு ஆகியவற்றின் முத்திரையாக நம்மை இறைவனின் அருளுக்கு அருகில் கொண்டு செல்லும் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளது. அவைகளைக் கீழே காணலாம். திருத்தந்தை
புனித இரண்டாம் ஜான்பால் தனது அப்போஸ்தலிக்கக் கடிதத்தில் (Rosarium Virginis Mariae,
ghf« 41) இவ்வாறு
கூறுகிறார்: “குடும்பமாகச் சேர்ந்து சொல்லப்படும் செபமாலை நம்பிக்கையையும் ஒற்றுமையையும் வளர்க்கும். அது குடும்ப உறுப்பினர்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாக்கி அன்பு, மன்னிப்பு, சமாதானம் நிறைந்த உறவை உருவாக்குகிறது.”
வெற்றி மாலை
1571-ஆம் ஆண்டு
கிறித்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் இடையே இலாபந்தோ என்னும் இடத்தில் கடுமையாகப் போர் நடந்தது. இந்தப் போரில் கிறித்தவர்களே வெற்றி பெற்றார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் உரோமை நகரில் இருக்கக்கூடிய தூய பேதுரு சதுக்கத்தில் கிறித்தவர்கள் தங்களுடைய கைகளில் செபமாலை ஏந்தி அன்னை மரியாவிடம் செபித்ததே ஆகும். அன்னை மரியாவே எதிரிகளிடமிருந்து கிறித்தவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்ததால் அப்போது திருத்தந்தையாய் இருந்த ஐந்தாம் பவுல் இதனை, ‘அன்னை மரியின் வெற்றியின் விழா’ என்று கொண்டாடப் பணித்தார். “இப்போர் உங்களுடையது அல்ல; அது கடவுளுடையது” (2குறி
20:15). செபமாலையும் இறைவனின் வார்த்தையும் இணைந்து, கிறித்தவர்களுக்கு வெற்றியின் அடையாளமானது.
நம்பிக்கையின்
மாலை
எங்கள்
ஊரில் என் அம்மாச்சி ஒரு செபமாலையைக் கையில் கொடுத்துவிட்டு, “நல்லாச் செபி; இந்தச் செபமாலையைப் பட்டினியா போட்டுடாதப்பா” என்று
சொல்லி தன் நம்பிக்கையை எனக்குச் சொன்னார்கள். செபமாலை சொல்லும் பழக்கம் அது ஓர் உணவு மற்றும் வாழ்க்கையின் விசுவாச முறை. “மானிடர்களை மீட்க வானவர் விடுகின்ற வடம்” என்று செபமாலையைக் குறித்து வீரமாமுனிவர் கூறுவார். ஆம், செபமாலையை நாம் இடைவிடாது, நம்பிக்கையோடு செபிக்கின்றபோது, அதனால் மீட்புப் பெறுகின்றோம் என்பது உறுதி. “நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்” (மத்தேயு
21:22). செபமாலை சொல்லும்போது இறைவனின் வார்த்தை நம்மை ஆற்றலூட்டுகிறது, நம் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
விண்ணக மாலை
ஒரு
மானிடன் பிறப்பிற்கும் இறப்பிற்கும் நல்சுகத்திற்கும் ஆறுதலுக்கும் சுப நிகழ்வுகளுக்கும் சொல்லப்படும் செபம் இந்தச் செபமாலைதான். செபமாலையை உண்மையுடன் செபிப்பவர் இவ்வுலக வாழ்விலும் இறக்கின்ற வேளையிலும் இறைவனின் ஒளியையும், அவரது திருவருளின் பெருக்கினையும் அடைவர். இறக்கும் வேளையில் விண்ணகத்தில் தூயோர் துய்க்கும் பேரின்பத்திலும் பங்குபெறுவர். ஆன்மாவை விண்ணகத்திற்குப் போகத் தூய்மையாக்கும் மிகப்பெரிய கருவி செபமாலை. செபமாலையுடன் இறைவார்த்தை சேரும்போது, அது ஆன்மாவை விண்ணக வாழ்விற்கு வழிநடத்தும் அருள்கருவியாகிறது.
செபமாலையை வாழ்வியலாக்கும்
வழிமுறைகள்
மறைமாவட்டத்திலும்
பங்குகளிலும் பணி செய்யும் தளங்களிலும் செபமாலை செய்யும் பழக்கத்தைச் செயலாக்கும் முறைகள்:
1. செபமாலை
பற்றிய கவிதை, கட்டுரை, பாடல், நாடகம் மற்றும் வினாடி-வினா போன்ற போட்டிகளை நடத்தலாம். 2. வீடுகளில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி வித்தியாசமான செபமாலை செய்யலாம். 3. ஒவ்வொரு வருடமும் மறைக்கோட்ட அளவிலான செபமாலை மாநாடு நடத்தலாம். 4. மரியாயின் சேனையினர் மருத்துவ மனைகளுக்கும் சிறைச்சாலைகளுக்கும் சென்று செபிக்கலாம் 5. பங்கிலே யூடியூப் சேனல் வைத்து தங்களின் பங்கு மக்களைச் செபமாலை சொல்லி, செபமாலை குறித்து நாடகம் நடித்து, பாடல் பாடி யூடியூப் சேனலுக்கு அனுப்பலாம். 6. இரவில் ஒளிரும் செபமாலையைக் கையில் ஏந்தி ஒளியும்-ஒலியும் செபமாலை செய்யலாம். 7. அன்பியம் வாரியாகச் செபமாலை கலந்துரையாடல் செய்யலாம். 8. மிகப்பெரிய செபமாலை செய்து, ஆயரால் அர்ச்சிப்பு செய்து மறைமாவட்டம் முழுவதும் செபமாலை வலம் வரலாம். 9. மரியாயின் சேனையினர் ஒன்றாகச் சேர்ந்து ‘செபமாலை’ என்ற மாதா பத்திரிகையை நடத்தலாம். 10. செபமாலையைக் கையில் ஏந்தி ‘செபமாலை ரேலி’ நடத்தி, செபமாலை நடைப் பயணம் நடத்தலாம். இத்தகைய அன்றாடச் செயல்பாடுகள் செபமாலையின் ஜெயத்தையும், வாழ்வில் வரும் தடைகளைத் தாண்டிச்செல்லும் அருளையும் உணரச் செய்கிறது செபமாலை.
ஆகவே,
செபமாலை என்பது ஒரு பழமையான வழிபாட்டுமுறையோ, பாரம்பரியச் சின்னமோ அல்ல; அது நம்பிக்கையின் உயிர்ப்பும், வாழ்க்கையின் அர்த்தமுமாகும். வரலாற்றில் கிறித்தவர்களுக்கு வெற்றியும், குடும்பங்களுக்கு ஒன்றிப்பும், தனிநபர்களுக்கு அமைதியும் வழங்கிய இந்தச் செபம், இன்றைய காலத்திலும் அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையே பாலமாகத் திகழ்கிறது.
கையில்
ஏந்தப்படும் மணிகள் ஒவ்வொன்றும், நம் இதயத்தை இறைவனிடத்திற்கும் அன்னை மரியாவிடத்திற்கும் நெருங்கச் செய்கின்றன. தனிப்பட்ட வாழ்க்கையிலோ, சமூக வாழ்விலோ, உலகளாவிய சவால்களிலோ, செபமாலை நமக்கு வலிமையும் நம்பிக்கையும் தந்து, விண்ணக வாழ்விற்குத் திசைதிருப்புகிறது. ஆகவே, செபமாலை என்பது ‘வெற்றியின் மாலை, நம்பிக்கையின் மாலை, விண்ணகத்தின் மாலை’ என்று சொல்லப்படும் அளவிற்கு ஆன்மிக வாழ்வின் புதையல் இச்செபமாலை.
“எழுந்து ஒளி வீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது!” (எசா 60:1). உண்மையான இறைவார்த்தையில் (யோவா 17:17) நம்பிக்கை கொள்ளும் அனைவரும் ஒளி வீசி, இறைவனின் மாட்சி தம்மேல் உதித்திருப்பதை உணரமுடியும். உலகின் ஒளியான இயேசுவில் நிறைந்த நம்பிக்கை வைப்போம். இந்த நம்பிக்கை ஒளி எங்கும் ஒளிர வேண்டும் என்றால், நாம் அனைவரும் இயேசுவோடு இணைந்து, அகில உலகக் குடும்பமாக, நல்மனமுடைய மக்களாக, அமைதியின் தூதுவர்களாக, ஒருமனப்பட்ட சமத்துவச் சமுதாயமாக, சகோதர உணர்வுடன் ஒன்றிணைய வேண்டும்.
இந்த
ஒன்றுபட்ட வாழ்வின் மேன்மையை வெளிப்படுத்தி தந்தையிடம் இயேசு மன்றாடினார். “நாம் ஒன்றாக இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை அவர்களுக்கு அளித்தேன்”
(யோவா 17:22). இந்த மாட்சிதான் ஒவ்வொருவரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி. இறைவார்த்தையே நம் ஆற்றல். எழுச்சியுடன் பணியாற்ற
நம்மைத் தூண்டும் உந்துசக்தி. உயர்ந்த இலக்கினை நோக்கி நம்மை வழிநடத்தும் ஒரே வழி. நமது வாழ்வும் உன்னத வழியும் உண்மையுமான இயேசு கூறுகிறார்: “தலைநிமிர்ந்து நில்லுங்கள்; உங்கள் மீட்பு அண்மையில் உள்ளது”
(லூக் 21:28).
இயேசுவின்
வார்த்தை ஒளிமயமானது. நம்மில் செயலாற்றும் வல்லமை கொண்டது. புனித பவுலடியார் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோல “கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார்; அவரே தம் திருவுளப்படி செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்”
\"(பிலி 3:13). வல்லமையுடன் புரியும் பணி நூறு மடங்குப் பலன் தருவது உறுதி. ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் சவால் நிறைந்த செயல்களும் நம்மை ஒளியாக ஒளிரச்செய்யும். இந்த உண்மையை என் வாழ்வில் நிறைவேற்ற அருள்கூர்ந்த ஆண்டவரின் வியத்தகு செயல்களை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.
2000-ஆம் ஆண்டு
தொடங்கி, ஆண்டவரின் மேன்மை மிக்கச் செயலை, அதிசயங்களை அனுபவித்த காலம். சாம்பியா நாட்டின் தலைநகரான லுசாகாவில் அமலவை சகோதரிகளாகிய நாங்கள் மறைமாநில மேய்ப்புப்பணி நிலையத்தில் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுப் பணிபுரிந்தோம். அப்பொழுது இந்தியாவிலிருந்து வந்த இயேசு சபைக்குரு ஒருவர் “இந்தப் பணி செய்யவா இங்கு வந்தீர்கள்?” என்று சவால் நிறைந்த வார்த்தைகளைக் கூறினார். இந்தச் சவாலை ஏற்று இறையுதவியை நாடினோம். அதே நேரத்தில் அந்த மறைமாநிலத்தின் பேராயர் மேதகு மெடார்டோ மசோம்ப்வே அவர்கள், யூபிலி ஆண்டின் நினைவாக ஆதரவற்ற அனாதைகளாக உள்ள சிறுமிகளுக்கு ஓர் இல்லம் அமைத்து அவர்களைப் பராமரிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். நாங்கள் அதனை மகிழ்வோடு ஏற்றுக் கொண்டோம். இறைவனுடைய பராமரிப்பும் பாதுகாப்பும் மிகத் துரிதமாகச் செயல்பட்டது. மர்ஃபி என்ற ஆங்கிலேயர் உதவிக்கரம் நீட்டினார். தூதரகங்களைச் சந்தித்து உதவிபெற உறுதுணையாய் இருந்தார். நார்வே தூதரகம் ஐந்து வீடுகளை அமைக்க உடனே நிதிஉதவி செய்தது. ஓர் இல்லத்தில் 10 சிறுமிகள் வாழ்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 5 தாய்மார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. வாழ்வாதாரத்திற்குத் தேவையான கோழிப்பண்ணை அமைக்க கனடா தூதரகம் உதவியதும், காய்கறித் தோட்டம், மீன் குளம் போன்றவற்றை அமைக்க இந்தியத் தூதரகம் உதவியது.
அனைத்தும்
மிக விரைவிலேயே தயாராகின. பங்குகளைத் தொடர்புகொண்டு சிறுமிகளை இல்லத்திற்கு அழைத்து வந்தோம். இப்படி ஓர் இல்லம் உருவாகி உள்ளதை அறிந்த மக்கள் மிகத் தாராளமாகப் பொருளுதவியும் நிதியுதவியும் அளித்து மகிழ்ந்தனர். “ஆண்டவரே, உம்மைப் போற்றி நன்றிகூறுகிறோம்; ஏனெனில் நீர் நல்லவர்; உமது பேரன்பு என்றென்றும் நிலையாய் உள்ளது” என்று நன்றிப்பா இசைத்து மகிழ்ந்து ஆண்ட வரிடம் சரணடைகின்றோம். இத்தகைய வகையில் தான், நம்மைத் தம் சீடர்களாக, உலகின் ஒளியாக உருமாற்றி, தந்தையை மாட்சிப்படுத்தும் வகையில், இயேசு ஆண்டவர் நம்மோடு இருந்து செயலாற்றுகின்றார். இறையாட்சிக்காக நம்மை அர்ப்பணித்துக்கொண்ட நாம் வாழ்வைப் பற்றிய வார்த்தையை உலகில் ஏந்தி நின்று உலகில் சுடர்விடும் ஒளியாகத் திகழ்வோம்.
இயேசு, தனது இறுதி இராவுணவின்போது, தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறவருக்கு ஓர் அப்பத்துண்டை வழங்கும் தருணமானது, தன்னைப் பகிர்வதற்கான ஓர் அடையாளம் மட்டுமல்லாமல், தன்னைச் சீடர்கள் கைவிட்டுவிடாமல் இருப்பதற்கான அன்பின் கடைசி முயற்சியாகும் என்பதை மிகவும் அதிர்ச்சியூட்டுகின்ற மற்றும் ஒளியூட்டுகின்ற அடையாளச் செயல்களில் ஒன்றைக் கருவியாகக் கொண்டு திருத்தந்தை லியோ தனது புதன் மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்டார்.
நற்கருணையின்
மகத்துவத்தில்
மானுடன்
1979-ஆம் ஆண்டு,
தான் இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னதாக, பேராயர் ஃபுல்டன் ஜே ஷீன் ஒரு
தொலைக்காட்சி நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது, செய்தியாளர் அவரிடம், “பேராயராகிய உங்களின் செயல் மற்றும் வாழ்க்கை பல மில்லியன் மக்களுக்கு
ஊக்கமளித்துள்ளன. அதுபோல் உங்களுக்கு ஊக்கமளித்தவர் யார்? திருத்தந்தையா?” என்ற கேள்விக்குப் பதிலளித்த பேராயர், “எனக்கு ஊக்கமளித்தது திருத்தந்தையோ, கர்தினாலோ, ஆயரோ, குருக்களோ அல்லது அருள்சகோதரிகளோ அல்ல; மாறாக அது ஒரு பதினோரு வயது சிறுமி” என்று தனது அனுபவ நிகழ்வினைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.
1940-களின் முடிவில்,
சீனாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றியபோது, கிறித்தவ ஆலயங்களைத் தாக்கிய அவர்கள் ஒரு குருவானவரை அவருடைய அறையிலேயே சிறை வைத்தனர். அக்குருவானவர் சன்னலின் வழியாகப் பார்த்தபோது, ஒரு காவலன் ஆலயத்திற்குள் சென்று, புனித இயேசுவைத் தாங்கிய நற்கருணைப் பேழையைத் தரையிலிட்டு உடைத்துச் சிதைத்தான். அந்த நேரத்தில் ஆலயத்தின் பின்புறம் செபித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி, காவலர்கள் உள்ளே வந்ததும் மறைந்துகொண்டாள். அந்த இரவு தொடங்கி ஒவ்வொரு நாளும் அவள் வந்து, ஒருமணி நேரம் செபித்துப் பின், அவள் அந்தச் சிதைக்கப்பட்ட இடத்தில் கிடக்கும் திவ்விய நற்கருணையிலிருந்து ஒவ்வொன்றாக, ஒவ்வொரு நாளும் உட்கொண்டு வந்தாள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒருநாள் காவலன் ஒருவனிடம் அகப்பட்ட அவளை, காவலன் துப்பாக்கி முனையில் அடித்துக்கொன்றான். இதைப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்த குருவானவரே அதற்குச் சாட்சி என்றும், அதனால் மிகவும் ஆழமாகத் தூண்டப்பட்ட நான் ஒரு முடிவை எடுத்தேன்: “நான் என் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரமாவது, இயேசுவின் முன், திவ்விய நற்கருணையின் முன் செபிக்க வேண்டும்”
என்பதுதான் என்று கூறினார்.
இதை என்
நினைவாகச்
செய்யுங்கள்:
நற்செய்தியாளர்
யோவான், தனது ஆழ்ந்த ஆன்மிக உணர்திறனுடன், இந்நிகழ்வை நமக்கு விவரிக்கிறார். “இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், அவர்கள் மேல் இறுதிவரை அன்பு செலுத்திய இயேசு சீடர்களின் காலடிகளைக் கழுவி “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்று
தன்னையே பகிர்ந்து சென்றார் (யோவா 13).
இறுதிவரை
அன்பு செலுத்துதல் என்பது கிறிஸ்துவின் இதயத்தைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல். நிராகரிப்பு, ஏமாற்றம், நன்றியின்மைக்கு முன்னால் நிற்காத நிலையான அன்பு இயேசுவின் அன்பு. இயேசுவுக்கு அவரது நேரம் தெரியும். ஆனால், அவர் அதை எண்ணி வருந்தவில்லை, மாறாக அதனை அவர் தேர்ந்தெடுக்கிறார். தனது அன்பானது, மிகவும் வேதனையான காயத்தை, துரோகத்தின் வழியாகக் கடந்து செல்லவேண்டும் என்ற சூழலை அவர்தான் அங்கீகரிக்கிறார்.
பின்வாங்குதல்,
குற்றம் சாட்டுதல், தன்னைத் தற்காத்துக் கொள்ளுதல் போன்றவற்றிற்குப் பதிலாக, அவர் தொடர்ந்து அவர்களை அன்பு செய்கின்றார். அவர்களின் காலடிகளைக் கழுவி தன் துகிலால் துடைக்கிறார், அப்பத்துண்டைத் திராட்சை இரசத்தில் நனைத்து அவர்களுக்குக் கொடுக்கின்றார். “நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்”
(யோவான் 13:26) என்று தன்னைக் காட்டிக்கொடுப்பவன் யாரென அறிவிக்கின்றார் இயேசு.
பலியை அல்ல
இரக்கத்தையே
விரும்புகிறேன்:
எளிய
மற்றும் தாழ்மையான செயல்களின் வழியாக, இயேசு தனது அன்பை முன்னோக்கியும் அதன் ஆழத்திற்கும் கொண்டு செல்கிறார். என்ன நடக்கிறது என்பதைப் புறக்கணிப்பதற்காக அல்ல; மாறாக, என்ன நடக்கின்றது என்பதைத் தெளிவாக, துல்லியமாகக் காண்பதால் அவ்வாறு செய்கின்றார். தீமையில் நாம் தொலைந்து போனாலும், மற்றவரின் சுதந்திரத்தை, மென்மையான அடையாளச் செயல்களின் ஒளியால் அடைய முடியும் என்பதை வலியுறுத்துகிறார். ஏனெனில், உண்மையான மன்னிப்பு மனந்திரும்புதலுக்காகக் காத்திருக்காது, மாறாக, ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பே, இலவசமாகக் கொடையாக வழங்கப்படுகிறது என்பதைத் தனது செயல்களால் எடுத்துரைக்கின்றார். இயேசுவின் இத்தகைய மனநிலையானது, யூதாசுக்குப் புரியவில்லை. “அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான்” (யோவா
13:27) என்று நற்செய்தி கூறுகிறது. அந்த அப்பத்துண்டுதான் நமது மீட்பு.
நமது
வாழ்விலும் கடவுளை நாம் நிராகரிக்கும் நேரத்தில் கூட, கடவுள் நம்மை அடைவதற்காக எல்லாவற்றையும் - முற்றிலும் எல்லாவற்றையும் நமக்காகச் செய்கின்றார் என்பதை இந்நிகழ்வானது நமக்கு எடுத்துரைக்கின்றது. இயேசு நமக்காக நிறைவேற்றும் மறைபொருள் இதுதான், இம்மறைபொருளில் நாமும் சில நேரங்களில் பங்கேற்க ஒவ்வொரு நாளும் அழைக்கப்படுகிறோம்.
தி ஸ்டோல்
அண்ட்
தி
டவல்
“தி ஸ்டோல் அண்ட்
தி டவல்”
(The Stole and the Towel) என்பது
ஒரு புத்தகத்தின் தலைப்பு, இது 58 வயதில் வயிற்றுப் புற்றுநோயால் இறந்த இத்தாலிய ஆயர் டோனினோ பெல்லோவின் செய்தித் தொகுப்பு. 1993-ஆம் ஆண்டு புனித வியாழன் அன்று, தனது மரணப் படுக்கையில் இருந்தபோது, அவர் தனது மறைமாவட்டத்தின் குருக்களுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அதில் ‘தி ஸ்டோல் அண்ட்
தி டவல்’ பிணைக்கப்பட வேண்டும் என்று அவர் அவர்களை வலியுறுத்தினார். ‘தி ஸ்டோல்’ என்பது நாம் கிறிஸ்துவுடன் இணைந்திருப்பதைக் குறிக்கிறது, மேலும் ‘தி டவல்’ என்பது நாம் நமது சேவையின் மூலம் மனிதகுலத்துடன் இணைந்திருப்பதைக் குறிக்கிறது. நற்கருணைப் பிரசன்னத்தில் இறைவனுடன் ஒன்றுபடவும், மக்கள் தங்கள் ஊழியராகக் குருக்கள் இருக்கவேண்டுமென்று அறிவுறுத்தினார்.
ஏன் இந்த
உணவு?
ஏன்
இயேசு, தம்மை நினைவுகூர ஓர் உணவினைத் தேர்ந்தெடுத்தார்? ஏனெனில் நாம் ஒருபோதும் சாப்பிடுவதை மறக்கமாட்டோமென்பது உறுதி! உணவின் வழி மகிழ்ச்சி, நட்பு, மற்றும் உணர்வை ஒன்று சேர்க்கிறது. ஆனால், ஒரு நல்ல உணவை உருவாக்க, பலியீடு, பரிவு, கவனம் ஆகியவை தேவைப்படுகிறது. அந்த உணவு நமக்குள் உயிரணுக்களாக உடைந்து, கலந்து, சிதைந்து ஆற்றலை அளிக்கிறது.
நற்கருணை
என்பது, நம்மால் கொண்டாடப்படவும், அவரை நினைவுகூரவும் இறைமகன் இயேசுவால் விட்டுச் சென்ற மிகப்பெரிய தடம். சமாரியாவில் அது தண்ணீர், கானாவில் அது திராட்சை இரசம், நகர்ப்புறத்தில் ஒரு சிறுவனின் அப்பமும் மீனும், கடற்கரையில் மீண்டும் பேதுருவுக்காக, கனானிய பெண்ணுக்கும் இலாசருக்கும், மேலும், எம்மாவு செல்லும் பயணத்தில் என அப்பம் இயேசுவின்
மறு உருவானது. உணவின் மகத்துவம், பங்கேற்பும் நன்றியும் என்பதை மார்த்தாவின் கவனிப்பிலும் பேதுரு மாமியாரின் விருந்திலும், சிமியோனின் வீட்டில், “அவர்களுக்குச் சாப்பிடக் கொடுங்கள்”
என்ற உத்தரவிலும் பிரதிபலிக்கிறது.
உணவான, மனுவான
இறைவன்
2015-ஆம் ஆண்டு
பிலடெல்பியாவில் உள்ள குர்ரான் - ஃப்ரோம்ஹோல்ட்
சீர்திருத்த விடுதிக்குச் சென்ற, மறைந்த நம் முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ், “வாழ்க்கை என்பது, நமது வரலாற்றில் கலந்த தூசித்தடங்களில் நம்முடைய கால்களை மாசுபடுத்திக்கொள்வதே. ஆகவே, நாம் அனைவரும் சுத்தம் செய்யப்பட வேண்டியவர்கள், கழுவப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்” என்றார்.
பாவத்தின் கறைபடிந்த நம் வாழ்வின் பக்கங்களை, இயேசுவின் செந்நீர்த்துகில் கொண்டு தூய்மையாக்குவோம்.
ஒருநாள் ஒரு நகர்ப்புற ஆலயத்தில் மாலைத் திருப்பலி நிறைவேற்றிவிட்டு, கோவிலில் இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து என்னிடம் செபிக்கக் கேட்டவர்களுக்காக வேண்டிக் கொண்டிருந்தேன். அத்தருணத்தில் ஒருவர் பீடமுற்றத்தில் சோடித்து வைக்கப்பட்டிருந்த இயேசுவின் உயிர்த்த சுரூபத்தின் முன்நின்று பக்தியோடு செபித்துவிட்டு, இயேசுவின் பாதம், கரங்கள் என்று ஒவ்வொரு பாகமாகத் தொட்டு கும்பிட்டுக் கொண்டிருந்ததால் பராக்குக்கு ஆளானேன். பழைய மனிதனுக்குரிய, பாவ நிலையைக் களைந்துவிட்டு புதிய மனிதனாகப் பாஸ்கா காலத்தில் மாறிய அவர், புது மனிதனாக வாழ முற்பட்டிருக்கிறார் என நினைத்துக் கொண்டேன்.
அவர்
வெளியே சென்றபின், நான் மாதா கெபியின் முன்சென்று செபித்துவிட்டுத் திரும்பும்போது, அதே ஆள் கோவிலின் முன்பு நிறுவப்பட்டிருந்த பொன், வெள்ளி, உலோகத் தகடு சுற்றப்பட்டு ‘பளபள’ என மின்னொளியில் மிளிர்ந்த
கொடிமரத்தையும் மாறி மாறித் தொட்டுக் கும்பிட்டு விட்டு, தன் பையனையும் அவ்விதம் செய்யும்படி பணித்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எதை? ஏன்? எதற்காகக் கும்பிடுவது? என்ற விஷயத்தில் இன்னும் பழைய மனிதனாகவே இருக்கிறாரே? என வருந்தினேன். ஆனால்,
அவரிடம் உடனே என்ன, எப்படிச் சொல்வது? என்று வகையறியாமல் அமைதியாக குருவின் இல்லத்துள் சென்றுவிட்டாலும், இது பற்றிய உண்மை எதுவாக இருக்கும் என்ற சிந்தனை என்னை உறுத்திக் கொண்டே இருந்தது.
நமது
வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற சிலருக்கு ‘வணக்கம்’ எனக் கூறி வாழ்த்துகிறோம் அல்லது மிகவும் மரியாதைக்குரிய ஒருவராக இருந்தால் கைகூப்பி கும்பிடுகிறோம். நமக்கும் மற்றவர்கள் இவ்விதமே செய்கின்றனர். கும்பிடுகிற செயல் மட்டும் ஏதாவது ஒருவகையில் ஆன்ம வாழ்வோடு தொடர்புடையதாக இருக்கும் அல்லது மிகவும் எளியவர் ஒருவர் வசதி படைத்தவரிடம் உதவி எதிர்பார்த்துச் செய்கின்ற செயலாக இருக்கும். ஆனால், காலில் விழுந்து கும்பிடுவது தவிர, உயிருள்ள மனிதரை யாரும் தொட்டுக் கும்பிடுவது இல்லை.
ஆனால்,
ஓர் உயிரற்றப் பொருளுக்கு வணக்கம் செலுத்துவதோ, அதை கைகூப்பிக் கும்பிடுவதோ சில நேரங்களில் மட்டுமே. உதாரணமாக, நமது தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துவதும், திருவுருவங்களைக் கும்பிடுவதும்! ஒன்று, நாட்டுப்பற்றை, தேசபக்தியை வெளிப்படுத்தும் செயல். மற்றொன்று, புனிதர் அல்லது புனிதைமீது நம் பக்தியைக் காட்டும் செயல். அதுபோல புனித இடங்கள் என நாம் நம்புகிற
இடங்களிலிருந்து கொண்டு வருகின்ற பொருள்களை வணக்கத்தோடு, மறையாட்டியோடு வைத்துக் கொள்கிறோம். அவை உணவுப்பொருளாய் இருந்தால் அவைகளை மரியாதையோடு உண்டு மகிழ்கிறோம். (உ.ம்) திருவிழா
- மிட்டாய்.
அதேநேரத்தில்
தேசியக் கொடியைக் கம்பத்தில் பறக்கவிட்டால்தான் வணக்கம் செலுத்துவோமே தவிர, அதை மடித்துப் பெட்டிக்குள் வைத்தபின் வணக்கம் செய்வதில்லை. அதுபோல, கொடிக்கு மட்டும்தான் வணக்கமே தவிர, கொடியைத் தாங்கும் கொடிமரத்திற்கோ, கொடிக் கம்பத்திற்கோ யாரும் (salute) வணக்கம் செலுத்துவதில்லை. கொடிமரம்/கம்பம் முக்கியத்துவம் பெறுவது அந்த மரத்திலோ அல்லது கம்பத்திலோ இருந்து கொடி எப்பொழுது பறக்கிறதோ அப்பொழுது மட்டும்தான்! அதுவும் கூட திரு விழாக் கொடியோ, தேசியக் கொடியோ, கட்சிக்கொடியோ, மன்றக்கொடியோ பறக்கின்றது என்றால், அந்தக் கொடிக்கு மட்டும்தான் வணக்கமும் கும்பிடுவதும் இருக்குமே தவிர, கொடிமரத்திற்கோ/கம்பத்திற்கோ அல்ல; ஏறக்குறைய பூவும் நாரும் போலதான்.
அண்மைக்காலத்தில்
கத்தோலிக்கக் கிறித்தவர்களும் பிற மதத்தவரைப் பின்பற்றி கொடிமரத்திற்கும் கூட மிக அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து, அது பயன்படும் திருவிழா நாள்களில் மட்டுமல்லாமல், மற்ற நாள்களிலும் கொடியில்லாதபோதும் அந்த மரத்திற்கு / கம்பத்திற்கு வணக்கம் செலுத்துவது மட்டுமல்ல, அதைச் சுற்றி வருவதும் கும்பிடுகிற பழக்கமும் நமது மக்களில் சிலரிடையே புகுந்திருப்பது ஆச்சரியத்திற்குரியது மட்டுமல்ல, வருத்தத்திற்கும் உரியது! அதோடு ஒருவரைப் பார்த்து ஒருவர், ஒவ்வொரு கோவிலிலும் இக்கொடிமரத்தை பொன், வெள்ளி, உலோகத் தகடுகளால் அழகுப்படுத்திப் பெருமை தேடுவதோடு, பரிதாபத்திற்குரிய வகையில் அந்த மரத்தைத் தொட்டு கும்பிடவும் ஆரம்பித்து விட்டார்கள். இதுபற்றித் திரு அவைத் தலைவர்களும் எதுவும் கூற இருப்பதாகத் தெரியவில்லை. எனவேதான், ஊர் ஊராக இந்த நோய், அதாவது கொடிமரத்தை பொன், வெள்ளி, தகடுகளால் அழகுபடுத்தும் நோய் பரவிக் கொண்டே இருக்கிறது.
கொடி,
கொடிமரம் இதைப்பற்றித் திரு அவையின் தெளிவான போதனை எதுவும் இருப்பதாகவும் தெரியவில்லை. ஆனால், வாடிக்கை, வழக்கம் என்ற பெயரிலும் அங்கு எப்படி? இங்கு அப்படி? என்ற பிறர் சொல்வதைக் கேட்டும், அநேகச் சடங்கு முறைகள் ‘இவை சரிதானா? அர்த்தமுள்ளவையா?’ எனக் கேட்கக்கூடிய அளவுக்குப் புகுந்துவிட்டன. ஒரு திருவிழாவுக்குரிய நவநாள்களில் ஆரம்ப அடையாளமாக மட்டுமே கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது. கொடிமரத்தில் ஏற்ற அக்கொடியைப் பறக்க விடுவதும் ஓர் அடையாளச் செயலே என்பதை குரு அக்கொடியை அர்ச்சிக்கும்போது, ‘இக்கொடி உயர ஏற்றப்படுவதுபோல மக்களுடைய உள்ளங்களும் விண்ணகம் நோக்கி உயர்த்தப்படுவனவாக! இந்த நவநாள்களில் இக்கொடியைக் காண்போர் அனைவரும் தங்கள் பாதுகாவலர் / பாதுகாவலியை நினைவுகூர்ந்து அவர்தம் மாதிரியைப் பின்பற்றி உமக்கு உகந்தவர்கள் ஆவார்களாக’
என்ற செபத்திலிருந்து அறியலாம்.
இந்தக்
கொடியின் ஆயுள், அது கொடிமரத்தில் ஏற்றப்பட்ட நாளிலிருந்து விழா முடிவில் இறக்கப்படும் நாள் வரையில்தான். கொடி ஒரு திருப்பண்டம் (relics) அல்ல;
எனவே, அதைத் ‘திருக்கொடி’ என்று
குறிப்பிடுவதும் பொருத்தமானதல்ல. அர்ச்சிக்கப்பட்ட எல்லாப் பொருளும் திருப்பொருள் ஆகிவிடுவதில்லை; கொடிமரமும் முக்கியத்துவம் பெறுவது அதில் ஏற்றப்படும் கொடியினால்தானே தவிர, அந்தக் கொடிமரமும், கல்தூணோ, பொன், வெள்ளி, தகடுகளால் சுற்றப்பட்டதோ என்பதெல்லாம் எந்த வகையிலும் முக்கியமானவை அல்ல; பொருளற்றதும் கூட (immaterial). ஏனெனில், கொடியும் கொடிமரமும் நமது உள்ளங்களை விண்ணகம் நோக்கி உயர்த்தப்பட தூண்டவும், அதற்கு உதவியாக நடைபெறும் நவநாள் வழிபாடுகளில் தகுதியோடு பங்குபெற்றுப் பயனடையத் தூண்டவுமே!
ஒரு
திருவிழா முடிந்து அடுத்த ஆண்டு திருவிழா வரைக்கும் அந்தக் கொடியோ, கொடிமரமோ யாருக்கும் எவ்விதத்திலும் அடையாளமாகவோ, உண்மையாகவோ பயன்படுவதில்லை. எனவே, பல இடங்களிலோ, சில
இடங்களிலோ இப்படிச் செய்கிறார்கள் என்பதற்காகக் கொடிமரத்திற்காக இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்ற கேள்வியும், இத்தகைய கொடிமரத்தைத் தொட்டுக் கும்பிடுவதும் சரியா? என்ற கேள்வியும் எழும்புகிறது.
மேலும்,
திருவிழாவை முன்னிட்டு மட்டும் புனிதப்படுத்தப்படுகிற கொடியையோ, கொடிமரத்தையோ தொட்டுக் கும்பிடலாம் என்பது சரியென்றால், அதே
திருவிழா சமயத்தில் புனிதப்படுத்தப்படுகிற புனிதரோ/புனிதையோ பவனி வருகின்ற தேர், சப்பரம் இவைகளையும் மற்ற நாள்களிலும் அவ்விதம் தொட்டுக் கும்பிட வேண்டுமா? என்ற கேள்வியும் சரிதானே! ஏற்கெனவே பல இடங்களில் கொடிமரத்திற்கு
பொன்/வெள்ளி தகடுச் சுற்றி வைத்திருப்பதுபோல இனி சப்பரத்திற்கும் தேருக்கும்... ஏன் கொடிக்கும்கூட அவ்வித முக்கியத்துவம் கொடுத்துவிடாமல் தடுக்க வேண்டியது அந்தந்த இடத்தில் உள்ள அருள்பணியாளரும், அவருடைய ஆயரும்தானே தவிர வேறு யார்?
“நமது வேதம், தொட்டுக் கும்பிடுவதில் திருப்தி அடைகிற வேதம் அல்ல; நமது நம்பிக்கையும் கூடத் தொட்டு கும்பிடுவதில் அல்ல; மாறாக, நாம் நம்புகிற உண்மைகளை வாழ்வில் ஏற்று, வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதுதானே உண்மை! எனவே, கொடியோ கொடிமரத்தையோ தொட்டுக் கும்பிட்டு அவைகளைக் கறைபடுத்துவதற்குப் பதில், சரியில்லாத (மூட) நம்பிக்கை எனும் கதைகளை இறைவார்த்தைகளைக் கொண்டு நீக்கி, இறைவார்த்தைகளின்படி வாழ்ந்து இயேசு (லூக் 11:28) கூறுவதுபோல பேறுபெற்றோரோடு இணைவோம். லூக்கா 8:21-இன்படி இயேசுவின் தாயும் சகோதரருமாய் திகழ்வோம்.