1. கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது மரியாவின் வார்த்தைகளில் காணக்கூடிய ‘கன்னியாக நிலைத்திருப்பதற்கான’ அவரின் எண்ணம்தான் திரு அவையில் கிறித்தவக் கன்னிமைக்கான தொடக்கமாகக் கருதப்படுகின்றது.
மரியாவின் இந்த
முடிவில் புனித அகுஸ்தினார் கடவுளின் எந்தவொரு நிபந்தனையையும் காணவில்லை; மாறாக, அதில் சுதந்திரமாக எடுக்கப்பட்ட அவரின் ஒரு வார்த்தைப்பாட்டைக் கண்டார். இந்த வகையில், திரு அவையின் வரலாறு முழுவதுமே ‘புனித கன்னிகளுக்கு’ ஒரு
முன்னுதாரணமாக மரியாவைக் காண்பிப்பது சாத்தியமானது. “மரியா,
அவர் யாரைக் கருத்தரிக்கப் போகின்றார் என்பதை அறியாதபொழுதே அவரின் கன்னித்தன்மையைக் கடவுளுக்கு அர்ப்பணித்தார். ஆகவே, விண்ணக வாழ்வைப் பின்பற்றுதல் என்பது உலகு, நிலையற்ற உடல் சார்ந்த ஒரு வார்த்தைப்பாட்டின் மூலமோ, ஒரு கட்டளை அல்லது சேவை செய்வதற்கான ஒரு தேவை வழியாகவோ அல்ல; மாறாக, அன்பின் ஒரு தெரிவு வழியாக வந்ததொன்றாகும்” (De Sancta Virg., PL 40:398).
வானதூதர்
மரியாவை ஒரு கன்னியாக நிலைத்திருக்கக் கேட்கவில்லை. மரியாதான் கன்னியாக இருப்பதற்கான எண்ணத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்துகின்றார். இந்த அர்ப்பணிப்பில் கன்னி வாழ்வால் கடவுளுக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பதற்கு அவரை இட்டுச் செல்கின்ற அன்பின் தெரிவானது காணப்படுகின்றது. மரியாவின் முடிவு
இயற்கையான தன்மையை மையப்படுத்தி, ஒவ்வோர் அழைப்பின் வேராகக் கடவுளுடைய முன்னெடுப்பு இருக்கின்றது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. கன்னி வாழ்வைத் தேர்ந்தெடுப்பதன் வழியாக, நாசரேத்து இளம் பெண்ணானவள் தனது உள் அழைத்தலுக்கு அதாவது, தூய ஆவியாரின் உந்துதலுக்கு அவரை அவருடைய கன்னிக் கொடையின் மதிப்பு மற்றும் அர்த்தத்தைப் பற்றி அறிவுறுத்திய அழைத்தலுக்குப் பதில் தந்து கொண்டிருந்தார். இந்தக் கொடையை அழைக்கப்படுவதை உணர்ந்தாலன்றி அல்லது தேவையான ஒளியும் மற்றும் திடனுமான தூய ஆவியாரைப் பெற்றுக்கொண்டாலன்றி யாராலும் ஏற்க முடியாது.
கன்னி வாழ்விற்கான
ஒரு
தீர்க்கமானதொரு
முடிவை
மரியா
எடுத்தார்
2. புனித
அகுஸ்தினார் ‘வார்த்தைப்பாடு’ என்ற
சொல்லை முதன் முதலில் அவர்களின் வாழ்க்கை நிலையை ‘புனித கன்னிகள்’
என்று அவர் அழைத்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தியிருந்தாலும், மரியா திரு அவையின் தொடக்கக்
காலங்களிலிருந்தே அர்ப்பணத்தின் அல்லது ஒருவரின் வாழ்வைக் கடவுளுக்குக் கொடுக்கிறபொழுது, வழக்கத்திலிருக்கிற வார்த்தைப்பாட்டை எடுத்தார் என்பதற்கு நற்செய்தி நூலில் தெளிவான சான்றுகள் இல்லை. மரியா
கடவுளுக்கு அவரின் இதயத்தையே கொடுத்து கன்னியாக நிலைத்திருக்க, தனிப்பட்ட வகையில் முடிவெடுத்தார் என்பதையே நாம் திருவிவிலியத்திலிருந்து அறிகிறோம். ‘சீயோனுடைய மகளாக’ வாழ கொடுக்கப்பட்ட அழைத்தலை நிறைவுசெய்து, கடவுளின் நம்பிக்கைக்குரிய மணவாட்டியாக இருக்க மரியா விரும்புகிறார். இவ்வாறு அவரின் முடிவினால் கன்னித்தன்மையில் ஒரு பிளவுபடாத இதயத்தோடு கடவுளுக்குப் பணி செய்ய திரு அவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரின் முன்மாதிரியாக அவர் ஆகின்றார்.
நற்செய்தி
நூல்களோ அல்லது மற்ற புதிய ஏற்பாட்டு நூல்களோ மரியா கன்னியாக நிலைத்திருப்பதற்கான முடிவை எப்பொழுது எடுத்தார் என்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. இருப்பினும், அவர் மிகவும் தீர்க்கமானதொரு முடிவுக்கு வந்தார் என்பது கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின்பொழுது வானதூதரிடம் அவர் கேட்ட கேள்வியிலிருந்து எளிதில்
உணரப்படுகின்றது. மரியா கன்னித்தன்மையைப் பாதுகாப்பதற்கான அவரின் விருப்பத்தை வெளிப்படுத்த அவருடைய எண்ணமானது கால ஓட்டத்தில் முழு வளர்ச்சி பெற்றது என்பதைக் காண்பித்து, பரிந்துரைக்கப்பட்ட தாய்மையின் பார்வையில் அவர்
அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கவில்லை.
உண்மையில்,
கன்னியாக வாழ்வதற்கான மரியாவின் தேர்வானது
கடவுளின் தாயாக ஆவதன் எதிர்பார்ப்பில் முன்னரே உணரப்படாமல் செய்யப்பட்டதல்ல; மாறாக, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்வுக்கு முன்பே அவரின் எண்ணத்தில் வளர்ந்து வந்ததாகும். இதிலிருந்து அவரின் இதயத்தில் இந்த விருப்பமானது, எப்பொழுதுமே இருந்தது என்பதை நாம் யூகிக்க முடியும்: அவரின் கன்னித் தாய்மைக்கு அவரை எந்த அருளானது தயாரித்ததோ அதே தூய ஆவியானவர் அவருடைய சிறு வயது முதலே அவரில் உந்துதலை ஏற்படுத்த இயலாமல் இருந்தபொழுதும் உண்மையில் அவரின் முழு ஆளுமை வளர்ச்சி மற்றும் கடவுளோடு கூடிய முழு ஒன்றிப்பிற்கான ஆர்வத்தையும் அவரில் ஏற்படுத்தியது.
3. கடவுள்
இன்றும் அநேக இளைஞர்-இளம் பெண்களின் உள்ளத்திலும் வாழ்விலும் செய்கின்ற அற்புதமானது மரியாவின் ஆன்மாவில் முதன் முதலில் உணரப்பட்டது. நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் அநேக மேலோட்டமான ஈர்ப்புகளால் தடம் மாறிப் போன நமது சமுதாயத்தில் கூட அநேக இளைஞர்-இளம்பெண்கள் மரியாவின் எடுத்துக்காட்டிலிருந்து
வருகின்ற அழைத்தலை ஏற்று அவர்களின் இளமையைக் கடவுளுக்காகவும் மற்றும் அவர்களுடைய சகோதர-சகோதரிகளுக்கான பணிக்காகவும் அர்ப்பணிக்கின்றார்கள்.
இந்தத்
தேர்வானது மனித மதிப்பீடுகளை நிராகரித்தல் என்பதைவிட, அது மிகப்பெரிய மதிப்பீடுகளின் தெரிவாகும். இந்த வகையில், எனக்கு முந்தைய வணக்கத்திற்குரிய திருத்தந்தை ஆறாம் பவுல் தனது அப்போஸ்தலிக்கப் போதனையான ‘மரியன்னை வழிபாட்டு மரபு’
(Marialis cultus)
என்ற ஏட்டில் எவ்வாறு ஒவ்வொருவரும் திறந்த மனநிலையோடு இறைச் செய்தியின் சான்றுகளைப்
பார்க்கின்றார்கள் என்பதை
“கன்னி நிலைக்கான மரியாவின் தேர்வைத்…
திருமண நிலையின் எந்தவொரு மதிப்பீட்டையும் நிராகரிக்கும் ஒன்றல்ல; மாறாக, கடவுளின் அன்பிற்கு அவரையே முழுமையாக அர்ப்பணிப்பதற்காக அவர் செய்த துடிப்புமிக்க தேர்வு என்றே பாராட்டுவார்கள்” என்று
வலியுறுத்திக் கூறுகின்றார் (எண். 37).
சுருக்கமாகக்
கூற வேண்டுமானால், கன்னி நிலையின் தேர்வானது கிறிஸ்துவின்மேல் உள்ள முழுபற்றினால் தூண்டப்படுகின்றது. குறிப்பாக, இது மரியாவில் வெளிப்படையாக
இருக்கின்றது. கிறிஸ்துவின் பிறப்பு
அறிவிப்பிற்குமுன் இதைப்பற்றி உணராமல் இருந்தாலும், கிறிஸ்துவினுடைய பின்னணியில் தூய ஆவியானது அவரின் கன்னி வாழ்வுக்கான அர்ப்பணத்தைத் தூண்டுகின்றது. அவரின் முழு இருத்தலிலும் மீட்பரும் மெசியாவுமானவரை வரவேற்பதற்கு அவர் ஒரு
கன்னியாக நிலைத்திருக்கின்றார். மரியாவில் தொடங்கிய
கன்னி வாழ்வானது இவ்வாறு அதன் கிறிஸ்து மைய பரிமாணத்தை
(Christocentric dimension)
வெளிப்படுத்துகிறது. மேலும், திரு அவையில் வாழப்படும் கன்னி வாழ்வுக்குக் கிறிஸ்துவின் தாயில் அதன் உன்னத மாதிரியைக் காண்கின்றது. அவரின் தனிப்பட்ட
கன்னி வாழ்வானது இறைத்தாய்மையோடு இணைக்கப்பட்டு
ஒரு வழக்கத்திற்கு மாறான நிகழ்வாக நிலைக்கின்றது. மேலும், கன்னி வாழ்வுக்கான ஒவ்வொரு கொடைக்கும் அர்த்தம் மற்றும் வெளிச்சத்தைக் கொடுக்கின்றது.
கன்னிமை அர்ப்பணமே
ஆன்மிக
வளங்களின்
ஊற்றாக
இருக்கின்றது
4. திரு
அவையின் வரலாற்றில் எத்தனையோ இளம்பெண்கள் ஆண்டவருடைய தாயின் கன்னி இதயத்தின் அழகு மற்றும் மேன்மையை அவர்கள் தியானிக்கின்றபொழுது கன்னி வாழ்வின் மாதிரியைத் தழுவியதால் இறைவனின் அழைத்தலுக்கு முழு மனத்தோடு சம்மதம் தர தூண்டப்படுவதை உணர்ந்திருந்தார்கள்!
நான் திருத்தந்தை இரண்டாம் ஜான்பவுல் ‘மீட்பரின் தாய்’ (Redemtoris Mater)
என்னும் சுற்றுமடலில் நினைவுகூருகின்றவாறு, “நாசரேத்து கனியின் எடுத்துக்காட்டிற்குப்
பின் குறிப்பாக இப்படிப்பட்ட கன்னி வாழ்வு ஒரு சிறந்த ஆன்மிகக் கனியின் ஊற்றாகும்: இது தூய ஆவியில் தாய்மையின் ஊற்றாக
இருக்கின்றது” (ஒப்பிடுக.
மீட்பரின் தாய், எண். 43).
மரியாவின் கன்னிமை
ஒட்டுமொத்தக் கிறித்தவ மக்களிலும் கன்னி வாழ்விற்கான கொடையின் மீதான மதிப்பைத் தூண்டுகிறது. இது திரு அவையில் கடவுளுடைய எல்லா நிகழ்வுகளின் மீதான முதன்மைநிலையின் அடையாளமாகவும், வரவிருக்கின்ற வாழ்வின் முன் எதிர்பார்ப்பாகவும் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தூண்டுகின்றது. எனவே, இறையாட்சிப் பணிக்குக் கன்னிமையில் இன்றும் தங்களின் வாழ்வையே அர்ப்பணிக்கும் தாராள உள்ளங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவோம். அதேநேரத்தில், முன்னரே நற்செய்தி அறிவிக்கப்பட்ட பல பகுதிகளில் தன்
இன்பமே சிறந்த நலம் என்னும் கோட்பாடு (hedonism) மற்றும் நுகர்வுக் கலாச்சாரம் (consumerism) போன்றவை பல இளைஞர்-இளம்பெண்களைத்
துறவற வாழ்வைத் தழுவுவதிலிருந்து அவர்களைத் திசைதிருப்புவதைப் போலத் தோன்றுகிறது. எனவே, மரியாவின் பரிந்துரை
வழியாகத் துறவற அழைத்தல் பூத்துக் குலுங்க இறைவனிடம் இடைவிடாது செபிப்போம். நமது செபங்களால் உந்தப்பட்டு அவர்கள், கிறிஸ்துவினுடைய தாயின் முகமானது தெய்வீகக் குருவைப் பின்செல்வதற்கு முயற்சிக்கின்ற அநேக கன்னியர்களில் எதிரொலித்து மனுக்குலத்திற்குக் கடவுளின் இரக்கம்
மற்றும் கருணையின் சின்னமாக இருப்பதை அவர்கள் தொடர்வார்கள்.
மூலம்: Pope John Paul II, Mary’s choice inspires consecrated virginity,
in «L’Osservatore Romano», Weekly Edition in English, 21 August 1996, p.7.
(சென்ற இதழ் தொடர்ச்சி)
சமூகத் துறைகளில் ஈடுபட ஆற்றல்படுத்தல்
பொதுநிலையினருக்கே
உரிய தனி இறையாட்சிப் பணித்தளம் அவர்கள் பணியாற்றும் சமூகம், பொருளாதாரம், அரசியல், பண்பாடு எனும் உலகியல் துறைகளே. அவற்றில் நற்செய்தி விழுமியங்களுடன் ஈடுபட்டு, அவற்றை இறையாட்சிக்கு இயைந்ததவையாக மாற்றுவது அவர்களுக்கே சிறப்பாக உரிய அழைப்பு. 2-ஆம் வத்திக்கான் சங்கம் இதனை அழுத்தமாக எடுத்துரைத்துள்ளது (திரு அவை 31; பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி 7). எனவே, நம் பொதுநிலையினரை வெறும் கோவில் மையக் கிறித்தவர்களாக வைத்திருக்கும் அல்லது வளர்த்தெடுக்கும் இன்றைய பரவலான நிலை மாற்றப்படவேண்டும்.
உலகியல்
துறைகளை நற்செய்தி விழுமியங்களால் உருமாற்றும் ஈடுபாட்டினை அவர்களிடம் வளர்க்காது, அதற்கென அவர்களை ஆற்றல்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளாது, செபக்கூட்டங்களையும் பக்தி முயற்சிகளையும் நவநாள்களையும் நற்கருணை ஆராதனைகளையும் அதிகரித்துக் கொண்டு, பொதுநிலையினரை அவற்றிலேயே மூழ்கடிக்க முயலும் பாணியே இன்று தமிழ்நாடு திரு அவையில் வளர்ந்துகொண்டிருக்கிறது. இத்தகைய கோவில் கிறித்தவம் சமூக ஈடுபாட்டு மற்றும் சமூக மாற்றுக் கிறித்தவமாக வடிவெடுக்கும்போதுதான், அது உண்மையான சீடத்துவக் கிறித்தவமாகச் சிறந்தோங்கும். இத்தகைய சமூக மாற்றுக் கிறித்தவ வாழ்வுக்குச் சிறந்த மாதிரியாக வாழ்ந்தவர் புனித தேவசகாயம்.
பொதுநிலையினர்
திருப்பணிகளைச்
செயல்படுத்துவோம்
தகுதியும்
திறமையும் உடைய இல்லற ஆண்களைத் திருத்தொண்டர்களாகத் திருநிலைப்படுத்துவதை 2-ஆம் வத்திக்கான் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது (திரு அவை 29). உலகின் பல நாடுகளிலும், இந்தியாவில்
ஓரிரு மறைமாவட்டங்களிலும் இல்லறத் திருத்தொண்டர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், காலத்திற்கு ஏற்ற புதிய முன்னெடுப்புகளுக்கு இந்தியத் திரு அவைக்குத் தடம் காட்டும் தமிழ்நாடு திரு அவையில் அதுபற்றி எவரும் சிறிதுகூடச் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
மேலும்,
1972-இல் திருத்தந்தை 6-ஆம் பவுல் ‘சில திருப்பணிகள்’ எனும்
திருத்தூது மடல் வழியாக வாசகர், பீடத்துணைவர் எனும் பணிகளைப் பொதுநிலையினர் திருப்பணிகள் என அறிவித்தார். தலத்
திரு அவைகளின் ஆயர் பேரவைகளும் தங்கள் தேவைக்கேற்ப வேறு பொதுநிலையினர் திருப்பணிகளையும் ஏற்படுத்த வாய்ப்பு அளித்தார். அதனைப் பின்பற்றி தமிழ்நாடு ஆயர்கள் 2000 ஆண்டில் நற்செய்திப் பணியாளர், நற்கருணைப் பணியாளர், நோயுற்றோர் பணியாளர், நீதிப் பணியாளர், அருள்பணித் துணைவர் என ஐந்து பொதுநிலையினர்
திருப்பணிகளை ஏற்படுத்தினர். 2013-ஆம் ஆண்டு திருந்தந்தை பிரான்சிஸ், வேதியர் பணியை ஒரு திருப்பணியாக அறிவித்ததும் தமிழ்நாட்டு ஆயர்கள் அதையும் ஏற்றுக்கொண்டனர். ஆனால், இன்றுவரை ஓரிரண்டு தவிர ஏனைய தமிழ்நாடு மறைமாவட்டங்கள் அத்தகைய திருப்பணிகளைப் பொதுநிலையினருக்குத் தர முன்வரவில்லை.
எத்தகைய
நலமான மாற்றமாக இருந்தாலும், பழைய பாணிகளுக்குப் பழக்கப்பட்ட பலர் அவற்றை முதலில் ஏற்க மறுப்பதும் எதிர்ப்பதும் இயல்பானதே. 2-ஆம் வத்திக்கான் சங்கம் புகுத்திய பல மாற்றங்களுக்கு அன்று
எவ்வளவோ எதிர்ப்புகள் இருக்கத்தானே செய்தன! இருப்பினும், தக்க விளக்கங்கள் தந்ததாலும், மெல்ல மெல்லப் பழக்கப்பட்டு விட்டதாலும் இன்று அவை பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளவைதானே! திருத்தந்தை பிரான்சிஸ் திரு அவையின் உரோமைத் தலைமைச் செயலகத்தின் முக்கியப் பல பொறுப்புகளில் பொதுநிலையினரை
நியமித்துத் தலத்திரு அவைகளுக்குச் சிறந்த முன்மாதிரி காட்டியுள்ளார் என்பது எண்ணிப்பார்க்கத்தக்கதே.
அவசரத் தேவை
- பொதுநிலையினர்
உருவாக்கம்
அருள்பணியாளர்களுக்கான
உருவாக்கம் 8-10 ஆண்டுகள் என நீடிக்கிறது.
ஆனால், பொதுநிலையினருக்குத் தரப்படுவதோ சிறுவப் பருவத்து மறைக்கல்வி, பிற்கால குறுகிய அருளடையாளத் தயாரிப்பு வகுப்புகள், ஞாயிறு மறையுரைகள் என்பன தவிர, பெரிதாக எதுவும் இல்லை. திருத்தந்தை பிரான்சிஸ் அழுத்தியுரைத்த கூட்டியக்கத் திரு அவையாகத் தங்களுக்கே உரிய தனி அறிவு மற்றும் ஆற்றல்களுடனும் சமமான பணிப்பகிர்வுடனும் கூட்டுப் பொறுப்புடனும் இணைந்து பயணிக்கப் பெரும்பான்மையினரான பொதுநிலையினருக்குப் போதிய பயிற்சிகள் தரப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக,
பங்கேற்பு அமைப்புகளின் உறுப்பினர்களாகும் பொதுநிலையினரை எடுத்துக்கொள்வோம்: அவற்றிற்கான தேர்தல்களில்தான் எத்தனை போட்டிகள்? உறுப்பினர்களுக்கு இடையே எத்தனை பிளவுகள்? சண்டைகள், அதிகாரத்தைக் கையாள்வதில் எவ்வளவு சுயவிளம்பரத் தேடல் மற்றும் ஆதிக்கங்கள்! அனைத்திற்கும் மேலாக நிதி மேலாண்மையில் எத்தனை கையாடல்கள் மற்றும் வீண் பெருமைக்கான ஆடம்பரச் செலவுகள். இவற்றிற்கெல்லாம் முதல் காரணம், அவர்களை இத்தகைய பொறுப்புகளை நன்கு வகிக்க, அவர்களுக்குச் சரியான உருவாக்கம் தர நம் மறைமாவட்டங்கள்
தவறியுள்ளனதானே!
மேலும்,
நல்ல கல்வியாளர்களாக, கலைஞர்களாக, அரசு ஊழியர்களாக, அரசியலாளர்களாக, மருத்துவர்களாக, வணிகர்களாக, அறிவியலாளர்களாக, ஊடகத்துறையினராக எனத் தத்தம் துறைகளில் கிறித்தவ விழுமியங்களோடு செயல்பட நாம் தொடக்க மற்றும் தொடர் பயிற்சிகளை அதிகமாகத் தருவதில்லை. அத்தகைய உருவாக்கத்தின் தேவையை 2023-24 ஆண்டுகளில் இணைந்து பயணிக்கும் திரு அவையை மையப்படுத்தி நடைபெற்ற ஆயர் மாமன்றம் அழுத்தி உரைக்கிறது. இறையியல் உருவாக்கத்துடன் கூட்டுப் பொறுப்பு, செவிகொடுத்துக் கேட்டல், தெளிதேர்வு செய்தல், கிறித்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல், வறியோருக்கு உதவுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கணினிவழி மறைத்தூதுப் பணி என்பனவற்றை நடத்துவதற்கான தனிப்பட்ட சில திறமை வளர்ப்புப் பயிற்சிகளும் தேவைப்படுகின்றன. சிறாருக்கும் இளையோருக்கும் மறைக்கல்வி உருவாக்கம் தருவதிலும் தனிப்பட்ட கவனம் தேவை என அது எடுத்துரைக்கிறது
(முதல் அறிக்கை 14e).
அத்தகைய
உருவாக்கம் அறிவு, உணர்ச்சி, உறவு, அருள்வாழ்வு எனும் ஆளுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் சார்ந்ததும் ஒருங்கிணைந்தும் நடைமுறை அனுபவமுறையிலும் அமையவேண்டும் என்பதை மாமன்றம் சுட்டிக்காட்டுகிறது. மேலும், ‘மாமன்றத்தின் நடைமுறை முழுவதிலும் அழுத்தி உரைக்கப்பட்ட ஒன்று ஆண்களும் பெண்களும் பொதுநிலையினரும் துறவியரும் திருநிலைத் திருப்பணியாளர்களும் அருள்பணி பயிற்சி மாணவர்களும் இணைந்து பங்கேற்கும் பொது உருவாக்கம். இத்தகைய உருவாக்கத்தில் ஒருவர் மற்றவரை நன்கு தெரிந்துகொள்ளவும் மதிக்கவும் ஒத்துழைக்கும் திறனை வளர்க்கவும் முடியும்’
(இறுதி அறிக்கை 143).
இறுதியாக...
திரு
அவையிலும் சமூகத்திலும் பொதுநிலையினரால் மட்டுமே ஆற்ற இயன்ற நற்செய்திப் பணியின் பல முக்கியப் பங்களிப்புகள்
இன்று நிறைவேற்றப்படாமலே உள்ளன. குறிப்பாக, நமது சமூகம் இன்று பல வகைகளில் தடம்மாறி
அழிவுப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இச்சூழமைவில், நற்செய்தி விழுமியங்களால் உலகியல் துறைகளை ஊடுருவி அவற்றை இறையாட்சிக்கு ஏற்ப உருமாற்றுவது பொதுநிலையினருக்கு உரிய தனிச் சிறப்பான அழைப்பு.
உலகை
இறையாட்சியாக உருமாற்றுவதற்கே திரு அவை இருக்கிறது என்பதால், பொதுநிலையினரின் குடும்ப மற்றும் சமூகப் பணிக்காகவே அருள்பணியாளர்களின் சமயப் பணிகள் இருக்கின்றன. எனவே, பொதுநிலையினரின் அழைப்பும் பங்களிப்பும் முதன்மைப்படுத்தப்பட்டு, அதனை அவர்கள் நிறைவேற்றும் வகையில் உரிய உருவாக்கப் பயிற்சிகள் அளித்து அவர்கள் ஆற்றல்படுத்தப்படவேண்டும். பொதுநிலையினரின் தலைமையை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுக்கும் சகோதரத் தலைவர்களாக நம் அருள்பணியாளர்கள் செயல்படும் வகையில் அவர்களது உருவாக்கமும் புத்தாக்கம் பெறவேண்டும்.
மனித வாழ்க்கை என்பது தனிமையான பயணம் அல்ல; அது ஒரு தொடர் பயணம். ஒவ்வொருவரும் ஏதோ ஒரு திசையை நோக்கியும், யாரோ ஒருவரைப் பின்பற்றியும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய எண்ணங்கள், முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள சூழலாலோ அல்லது நாம் முன்மாதிரியாகக் கருதும் நபர்களாலோ செதுக்கப்படுகின்றன.
அரசியல்
தலைவர்கள் முதல் ஆன்மிக வழிகாட்டிகள் வரை அனைவரும் ஏதோ ஒரு தத்துவத்தைப் பின்பற்றியே செயல்படுகிறார்கள். எனவே, ‘நாம் யாரைப் பின்பற்றுகிறோம்?’ என்பது நம் வாழ்வின் திசையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான கேள்வியாகும்.
இன்றைய
நவீன உலகம் ஓயாத சத்தங்களாலும், திசைதிருப்பும் கவர்ச்சிகளாலும் நிறைந்துள்ளது. இத்தகையச் சூழலில், திருத்தந்தையின் மறைக்கல்வி உரையைத் துணையாகக் கொண்டு நமது சீடத்துவ வாழ்வைச் சீர்தூக்கிப் பார்ப்போம்.
1. திருவிவிலியப் பின்னணியில் சீடத்துவ
அழைப்பு
சீடத்துவம்
என்பது வெறும் தகவல்களைச் சேகரிப்பதல்ல; அது ஒரு நபரைப் பின்பற்றி நம்மையே உருமாற்றிக்கொள்வது. திருவிவிலியத்தில் இதற்கு இரு பெரும் தூண்கள் சான்றாக உள்ளனர்:
அ) புனித
பேதுருவின்
அழைப்பு:
பலவீனத்திலிருந்து
பாறையாக...
கலிலேயக்
கடலோரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்த சீமோனிடம், “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்குவேன்”
(மத்தேயு 4:19) என்று இயேசு அழைத்தபோது, அவர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் தன் வலைகளை விட்டுவிட்டுப் புறப்பட்டார். பேதுருவின் சீடத்துவம் ஒரே நாளில் முழுமை பெறவில்லை. அவர் இயேசுவை மறுதலித்தார், சந்தேகப்பட்டார், பயந்து ஓடினார். ஆனால், கிறிஸ்து அவரை மீண்டும் மீண்டும் தேடிவந்து, “நீ என்னை அன்பு
செய்கிறாயா?” என்று கேட்டார். பேதுருவின் பலவீனம் கிறிஸ்துவின் அன்பால் பலப்படுத்தப்பட்டது. இறுதியில், தன் வாழ்வையே சிலுவையில் பலியாகக் கொடுத்து, திரு அவையின் பாறையாக மாறினார். ஒரு சாதாரண மீனவர் உலகத்தையே மாற்றிய தலைவராக மாறக் காரணம், அவர் கிறிஸ்துவை வாழ்நாள் முழுவதும் பின்தொடர்ந்ததுதான்.
ஆ) புனித
பவுலின்
அழைப்பு:
எதிரியிலிருந்து
தூதராக...
திரு
அவையைத் துன்புறுத்திய சவுல், தமஸ்கு செல்லும் வழியில் உயிர்த்த ஆண்டவரைச் சந்தித்தார். அந்த ஒரு சந்திப்பு அவரது வாழ்க்கையின் திசையை 1800 மாற்றியது. “வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்” (கலாத்தியர்
2:20) என்று அறிவிக்கும் அளவிற்கு அவர் கிறிஸ்துவின் பித்தராக மாறினார். தான் கற்ற கல்வி, அதிகாரம், கௌரவம் அனைத்தையும் கிறிஸ்துவுக்காகக் ‘குப்பை’ எனத் தள்ளினார். ஒரு சீடன் என்பவன் தன் பழைய அடையாளங்களைத் துறந்து, கிறிஸ்துவோடு இணைந்து புதிய படைப்பாக மாறவேண்டும் என்பதற்கு பவுல் ஒரு மாபெரும் உதாரணம்.
2. நவீன காலச் சவால்கள்:
சமூக
ஊடகத்
தாக்கம்
(Social Media Influencers))
இன்றைய
டிஜிட்டல் யுகத்தில், சீடத்துவத்திற்குப் புதிய சவால்கள் முளைத்துள்ளன. ‘Influencers’ எனப்படும்
சமூக ஊடகத் தாக்கம் செலுத்துபவர்களே இன்றைய இளையோரின் அன்றாட வழிகாட்டிகளாக மாறிவிட்டனர்.
•
போலி பிம்பங்களின் கவர்ச்சி: சமூக ஊடகங்களில் காட்டப்படும் வடிகட்டப்பட்ட (Filtered) அழகான
புகைப்படங்கள் மற்றும் சொகுசு வாழ்க்கை இளையோரை எளிதில் கவர்கின்றன. இது அவர்களைத் தங்கள் உண்மை வாழ்க்கையின் மீது அதிருப்திகொள்ள வைக்கிறது. ‘அவர்களைப் போல வாழ வேண்டும்’
என்ற ஆசையில் இளையோர் நற்செய்தி கூறும் ‘எளிமை’ மற்றும் ‘பகிர்வு’ போன்ற விழுமியங்களை மறந்து விடுகின்றனர்.
•
நூதனப் போதனைகள்: எபிரேயர் 13:9 எச்சரிப்பது போல, இன்று பல நூதனப் போதனைகள்
வலம் வருகின்றன. “உன் இஷ்டப்படி வாழ்வதே சுதந்திரம்”, “நுகர்வுக்
கலாச்சாரமே மகிழ்ச்சி”
போன்ற போதனைகள் நற்செய்தியின் வேர்களை நீர்த்துப்போகச் செய்கின்றன. திரையில் தோன்றும் ஒருசில நிமிடக் காணொளிகள் வாழ்வின் உண்மையான அர்த்தத்தைத் திசைதிருப்புகின்றன.
3. வாழ்வால் சோதிக்கப்படும்
தலைமை
ஒரு
தலைவரின் உண்மைத் தன்மையை அவர் பேசும் வார்த்தைகளைவிட, அவர் வாழும் வாழ்க்கையே உறுதிப்படுத்துகிறது. புனித அன்னை தெரேசா இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர் பெரிய தத்துவ நூல்களை எழுதவில்லை; ஆனால், ஏழைகளிடையே அவர் காட்டிய அன்பு உலகின் மனசாட்சியை உலுக்கியது. அவர் கிறிஸ்துவைத் தீவிரமாகப் பின்பற்றினார்; அதனால் உலகம் அவரைப் பின்பற்றியது. நமது வாழ்க்கை கிறிஸ்துவை நோக்கிச் சாய்கிறதா? என்பதே இன்று நாம் எழுப்ப வேண்டிய வினா.
4. பதவி அல்ல, பணி
வாழ்வு
இன்றைய
உலகம் தலைமையை ஒரு ‘பதவியாக’
(Position) பார்க்கிறது.
ஆனால், நற்செய்தி தலைமையை ஒரு ‘வாழ்க்கை முறையாக’
(Lifestyle) முன்வைக்கிறது.
மேலாளராக இருக்கும் ஒருவர் தலைவராக இல்லாமல் இருக்கலாம்; ஆனால், அதிகாரம் இல்லாத ஓர் எளிய மனிதர் தனது அன்பால் சிறந்த தலைவராக இருக்கமுடியும். இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஒளியில், நாம் காலத்தின் அடையாளங்களை வாசிக்கவேண்டும். ஆனால், புதிய போதனைகள் என்ற பெயரில் நற்செய்தியின் வேர்களை நாம் இழந்துவிடக் கூடாது. நம் கால்கள் கிறிஸ்துவின் பாதையில் உறுதியாக இருக்கவேண்டும்.
5. மாறாத பேரன்பின் உறுதி:
இயேசு
கிறிஸ்து
மனிதத்
தலைவர்கள் மாறலாம், பலவீனப்படலாம் அல்லது ஏமாற்றலாம். ஆனால், “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்”
(எபி 13:8). இது ஒரு தேக்கநிலை அல்ல; மாறாக, மாறாத பேரன்பின் உறுதிப்பாடு. அவர் உண்மையை மாற்றுவதில்லை, வழியை மங்கச் செய்வதில்லை. அவரே வழி, அவரே உண்மை, அவரே வாழ்வு.
6. புனிதத்தன்மையே புதிய பாதை
திருத்தந்தை
பிரான்சிஸ் தனது ‘நற்செய்தியின் மகிழ்ச்சி’
(Evangelii Gaudium) என்னும்
மடல் வழியாக, நற்செய்தி என்பது ஒரு கருத்து அல்ல; அது கிறிஸ்துவுடனான ஒரு ‘சந்திப்பு’
என்று அழைக்கிறார். திரு அவை என்பது வெறும் அமைப்பு அல்ல; அது ஓர் உரையாடல் மற்றும் பயணம். இன்றைய உலகுக்கு நீதி, அமைதி மற்றும் அன்பின் சாட்சிகள் தேவைப்படுகிறார்கள். இது புதிய சட்டங்களால் அல்ல; ஆழமான புனிதத்தன்மையால் மட்டுமே சாத்தியமாகும்.
முதலில் சீடர்,
பின்பே
தலைவர்!
நாம்
ஒவ்வொருவரும் யாரோ ஒருவரைப் பின்பற்றுகிறோம். அதேவேளையில் யாரோ ஒருவர் நம்மையும் பின்பற்றுகிறார். நாம் எதைப் பின்தொடர்கிறோம் என்பதைவிட, யாரைப் பின்தொடர்கிறோம் என்பதே முக்கியம். டிஜிட்டல் உலகின் மாயச் சத்தங்களுக்கு மத்தியில், “மீனவனே, என் பின்னே வா” என்ற கிறிஸ்துவின் மெல்லிய குரலைக் கேட்போம். நாம் கிறிஸ்துவைப் பற்றிக்கொள்ளும்போது, நம்மைப் பின்பற்றுபவர்களும் நம் வழியாக வாழ்வின் ஆண்டவரைச் சந்திப்பார்கள். மாறாத கிறிஸ்துவை நோக்கி நம் பயணத்தைத் தொடர்வோம்!
1. பின்புலம்
அண்மையில்
ஓர் ஆயர் திருநிலைப்பாடு அருளடையாளத் திருப்பலிக் கொண்டாட்டம் நடைபெற்றது. திருப்பலிக்கு முன்னரே புதிய ஆயருக்கு ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்த வாழ்த்துரைகள் வழங்கப்பட்டன. திருப்பலி தொடங்கியவுடன் பத்து நிமிடங்களுக்கு முன்னுரை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இறைவார்த்தை வாசகங்களுக்குப் பின்னர் 20 நிமிடங்களுக்கு மேல் மறையுரை ஆற்றப்பட்டது. ஏறக்குறைய நான்கரை மணி நேரம் நீடித்த இந்நிகழ்வின்போது, கூட்டுத்திருப்பலியில் பங்கேற்றிருந்த பல அருள்பணியாளர்கள் இடையிடையே எழுந்து
சென்றுவிட்டனர். மற்ற இறைமக்களில் பலர் களைப்புற்று நற்கருணை பெற்றவுடன் கலைந்து சென்றுவிட்டனர்.
மற்றொரு
நிகழ்வில் அருள்பணியாளர் ஒருவரின் முதல் திருப்பலிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அவரை வரவேற்று அழைத்து வந்தபொழுது அவரைப் பற்றிய நீண்டதொரு முன்னுரை வாசிக்கப்பட்டது. எனினும், திருப்பலி தொடங்கியவுடன் பத்து நிமிடங்களுக்கு மேல் மீண்டும் ஒரு முன்னுரை மற்றொரு அருள்பணியாளரால் கொடுக்கப்பட்டது. நற்செய்தி வாசகத்திற்குப்பின் 30 நிமிடங்களுக்கு மேல் வேறு ஓர் அருள்பணியாளர் மறையுரை ஆற்றினார். ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் நீடித்த இக்கொண்டாட்டத்தின் இறுதியில், புதிய அருள்பணியாளருக்கு நடத்தப்பட்ட வாழ்த்துக் கூட்டத்தில் வெகுசிலரே பங்கேற்றனர்.
சிறப்புக்
கொண்டாட்டங்கள் என்றில்லாமல், வழக்கமாக நடைபெறும் ஞாயிறு மற்றும் விழாத் திருப்பலிகளிலும் 20, 30,
40 நிமிடங்களுக்குக் குறையாமல் மறையுரை ஆற்றப்படுகிறது. மொத்தமாக ஒரு மணி நேரம் தேவைப்படும் இத்திருப்பலிக் கொண்டாட்டத்தில் மறையுரையின் கால வரம்பு என்னவாக இருக்கவேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரை விளக்குகிறது.
2. மறையுரையின் சிறப்பியல்புகள்
மறையுரை
(homily) என்பது திருப்பலிக் கொண்டாட்டத்தில் இறைவார்த்தை வாசகங்களுக்குப்பின் நடைபெறும் முதன்மையான, ஒரு தனித்தன்மையான இலக்கிய நடைகொண்ட போதிக்கும் பணியாகும். திருப்பலிக்குப் புறம்பே நடைபெறும் அருளுரை (Sermon), போதனை
(Preaching), சமய
/ ஆன்மிகக் கருத்துரை (religious/ spiritual discourse), மறைக்கல்வி
(Catechesis), திருவிவிலிய
/ இறையியல் பேருரை (Biblical/theological
/ lecture) போன்றவற்றிலிருந்து மறையுரை வேறுபட்டது. திரு அவை ஆசிரியப் படிப்பினைகளில் மறையுரையைப் பற்றிக் கூறப்பட்டுள்ள சில சிறப்பியல்புகளாவன:
1) மறையுரை
என்பது வழிபாட்டுச் செயலின் ஒரு பகுதியும் இறைவார்த்தையின் உயிருள்ள விளக்கவுரையும் ஆகும். இந்த விளக்கவுரை வாசிக்கப்பட்ட திருவிவிலியப் பகுதிகள் கூறுவதையே மீண்டும் விளக்கிச் சொல்வதோ அல்லது அப்பகுதிகளுடன் தொடர்புடைய வேறு திருவிவிலிய வசனங்களை அடுக்கிக் கூறுவதோ அல்ல; மாறாக, அன்றைய இறைவார்த்தை எவ்வாறு இங்கு இப்பொழுது மனித வாழ்க்கைச் சூழமைவில் நிறைவேறிக் கொண்டிருக்கிறது என்பதை அறிக்கையிடுவது ஆகும்.
2) நல்ல
மறையுரை ஒரு கருத்து, ஓர் உணர்ச்சி, செயல்பாட்டிற்கு வழிகாட்டும் குறிப்பு என்ற முக்கியக் கூறுகளைக் கொண்டிருக்கவேண்டும். மேலும், கொண்டாடப்பெறும் மறையுண்மையையும், கேட்போரின் தனிப்பட்ட தேவைகளையும் மறையுரையாளர் கருத்தில் கொள்ளவேண்டும்.
3) ஞாயிற்றுக்கிழமைகளிலும்,
கடமைத் திரு நாள்களிலும் கனமான ஒரு காரணம் இருந்தாலன்றி, மறையுரை கட்டாயம் வழங்கப்பட வேண்டும். பிற நாள்களில் குறிப்பாக, திருவருகைக் காலம், தவக்காலம், பாஸ்கா காலம் ஆகியவற்றின் வார நாள்களிலும், மக்கள் கோவிலுக்குத் திரளாக வந்து கூடும் திருநாள்களிலும் மறையுரை நிகழ்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
4) திருப்பலி
நிறைவேற்றும் ஆயர் அல்லது அருள்பணியாளரே வழக்கமாக மறையுரை நிகழ்த்துவார். அவர் தம்மோடு சேர்ந்து கூட்டுத் திருப்பலி நிகழ்த்தும் அருள்பணியாளர் ஒருவரிடமோ அவ்வப்போது சூழ்நிலைக்கு ஏற்பத் திருத்தொண்டரிடம் கூட இப்பணியை ஒப்படைக்கலாம். சிறப்பான நிகழ்வுகளில், தக்க காரணத்திற்காகக் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தாமல் திருப்பலியில் மட்டும் பங்கேற்கும் ஓர் ஆயர் அல்லது அருள்பணியாளர் மறையுரை ஆற்றலாம்.
5) திருநிலை
அருளடையாளங்களைப் பெறாத மற்றவர் (அருள்பணி மாணவர்கள், அர்ப்பண வாழ்வுச் சமூகத்தினர், பொதுநிலையினர்) இப்பணியைச் செய்ய இயலாது (காண்: 2-ஆம் வத்திக்கான் சங்கம், திருவழிபாடு, எண் 52; திரு அவைச் சட்டம், எண் 767; திருத்தந்தை பிரான்சிஸ், நற்செய்தியின் மகிழ்ச்சி, 2013, எண் 135, 137-138; 145-158;
திருவழிபாட்டுப் பேராயம், மீட்பின் அருளடையாளம் (Redemtionis Sacramentum), 2004, எண் 66; மற்றும்
மறையுரை வழிகாட்டி (Homiletic Directory) 2014, எண்
6; உரோமைத் திருப்பலி நூலின் பொதுப் படிப்பினைகள், மூன்றாம் மாதிரிப் படிவம், 2017, எண் 29 - 66).
3. மறையுரையின் கால வரம்பு
ஞாயிறு
மற்றும் விழாக்காலத் திருப்பலிகளில் 8-10 நிமிடங்களுக்கு மிகாமல் மறையுரை இருத்தல் வேண்டுமெனத் திருத்தந்தை பிரான்சிஸ் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார். சுருக்கமான மறையுரைக்கு அவர் கூறும் காரணம் மிகுந்த கவனத்திற்குரியது: ‘மறையுரை மிக நீள்வது திருவழிபாட்டின் இரு பண்புக் கூறுகளாகிய சீரியக்கம், ஒத்திசைவு என்பதைப் பாதிக்கும்’ (காண்:
புதன் கிழமை பார்வையாளர் அறிவுரை, 7 பிப்ரவரி 2018 - 12 ஜூன் 2014; நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 138). அதாவது 20, 30, 40 நிமிடங்கள் என நீளும் மறையுரைகள்
வழிபாட்டு நேரத்தின் மிக அதிகப் பகுதியை எடுத்துக்கொள்வதால் ஏனைய வழிபாட்டுப் பகுதிகள் உரிய முக்கியத்துவம் பெறாமல் போகின்றன. மக்களும் நீண்ட மறையுரையைக் கேட்பதிலேயே களைப்புற்று, எஞ்சிய வழிபாட்டுப் பகுதிகளில் முழுக் கவனமுடன் ஈடுபட இயலாதவர்கள் ஆகின்றனர். இதனால் மக்களை ஈடுபாடுமிகு நற்கருணைக் கொண்டாட்டத்திற்கு இட்டுச்செல்லவேண்டிய மறையுரை அதற்குத் தடையாகக் கூட சில வேளைகளில் மாறிவிடுகிறது (காண்: தே. அல்போன்சு, நல்லதொரு மறையுரை செய்வோம், பக். 60 - 61).
மறையுரை நீள்வதற்கான
சில
காரணிகளாக
பணித்தள
அனுபவத்தில்
நான்
அறிந்தவை:
1) மறையுரையின்
தொடக்கத்தில் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்களின் அன்றைய வாழ்க்கைச் சூழமைவில் நடந்த பொருத்தமான நிகழ்வு, செய்தி அல்லது கதை ஒன்றைச் சுருக்கமாகச் சொல்வதற்குப் பதிலாக, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பாவில் நடந்த கதைகளையோ பேரரசன் அலெக்சாண்டர், மாவீரன் நெப்போலியன், ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் போன்றவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையோ நீட்டிக்கூறுவது.
2) ஞாயிறு
மற்றும் பெருவிழாத் திருப்பலிகளில் இடம்பெறும் மூன்று திருவிவிலிய வாசகங்களிலிருந்து மக்களின் இன்றைய வாழ்க்கைச் சூழலுடன் தொடர்புடைய மையக்கருத்து ஒன்றைத் தேர்வு செய்து மறையுரையைக் கட்டமைப்பதை விட்டுவிட்டு, ஒவ்வொரு வாசகத்தைப் பற்றியும், அதன் வரலாறு, சூழமைவு, அரசியல்-சமூக-பொருளாதாரப் பின்னணியைக் கூறி பொருள் விளக்கம் தருவது.
3) அருங்கொடை
செபக்கூட்டங்களில் நடப்பது போல் மறையுரையை இடையிடையே குறுக்கீடு செய்து, ‘இயேசுவுக்கே புகழ்’,
‘இயேசுவுக்கே நன்றி’,
‘மரியே வாழ்க’,
‘அல்லேலூயா’, ‘ஆமென்’ போன்ற
முழக்கங்களை மக்களால் சொல்ல வைப்பது; மக்கள் ‘விழிப்பாய்’ இருப்பதற்காகக்
கைகளைத் தட்டச் சொல்வது; பாடல்களைப் பாடுவது; சிரிப்புத் துணுக்குகளைக் கோர்வையாகச் சொல்லி ஊடகங்கள் வழங்கும் ஒரு பொழுதுபோக்கு வகைபோல மறையுரையை ஆக்குவது.
4) திருப்பலியில்
திரளான மக்கள் கூடியிருந்தால் மறையுரையாளர் பரவசமடைந்து தனக்குத் தெரிந்ததை எல்லாம் பேசிக்கொண்டே போவது.
5) மறையுரையை
எப்படி முடிப்பது என்று தெரியாமல் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது அல்லது முடிப்பதுபோல் வந்து மீண்டும் மற்றொரு கருத்திற்குத் தாவுவது.
4. இறுதியாக...
மறையுரை
மிக முக்கியமான ஒரு பொறுப்பு என்பதால் நீண்ட நேரம் வாசிப்பு, செபம், சிந்தனை அருள்பணி அனுபவங்களின் பிரதிபலிப்பை உள்ளடக்கிய முன்தயாரிப்பு அவசியம்.
மறையுரை
பொருள் செறிவும் புதிய செய்திகளும் பார்வைகளும் கொண்டதாக அமைய வேண்டுமெனில், அதனை வழங்கும் மறையுரையாளருக்குப் பரந்துபட்ட அறிவும், நலமான புதிய கண்ணோக்குகளும் அவசியம் தேவை. அவை சமயம் சார்ந்தவை மட்டும் அல்ல; இன்றைய சமூகம் பற்றியதாகவும் இருத்தல்வேண்டும்.
சமூகம்
பற்றிய அறிவைப் பெருக்கத் தரமான தினசரி செய்தித்தாள்களையும், சமூக-பொருளாதார-அரசியல்-பண்பாட்டுச் செய்திகளையும் விமர்சனங்களையும் தரும் வார, மாத இதழ்களையும் மற்றும் நூல்களையும் படிப்பதும், நவீன ஊடகங்கள் வழியாகச் சிறந்த அறிஞர்களின் உரைகள் மற்றும் நேர்காணல்களைக் கேட்பதும் அவசியம் (காண்: தே. அல்போன்சு, நல்லதொரு மறையுரை செய்வோம், பக். 70-71).
தரத்திற்கு
மட்டுமல்லாமல், 8-10 நிமிடங்களுக்கு மிகாமல் மறையுரையைக் கட்டமைக்க வேண்டுமெனில், அதற்கும் முன்தயாரிப்பு மிக மிக அவசியம்.
“முன்தயாரிப்பு செய்யாத மறையுரையாளர் அருள்வாழ்வு அற்றவர் தாம் பெற்ற கொடைகளுக்கு அவர் பொய்மையாகவும் பொறுப்பற்றவராகவும் நடந்து கொள்பவர்”
என்றும், “நீண்ட மறையுரைகள் திரு அவைக்கு ஒரு பேரிடர்” என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் (காண்: நற்செய்தியின் மகிழ்ச்சி, எண் 145; மறைமாவட்ட திருவழிபாட்டு இயக்குநர்களுக்கு ஆற்றிய உரை, 20 சனவரி 2023).
தவக்காலத்தை அருளின் காலம், மீட்பின் காலம், மனமாற்றத்தின் காலம், மன்னிப்பின் காலம், ஒப்புரவின் காலம் என்றெல்லாம் பல பெயர்களைக் கொண்டு நாம் வழக்கமாக அழைப்பதுண்டு. இந்த வரிசையில், ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்னும் பாடல் வரி சொல்வதைப் போன்று, தவக்காலத்தை திருவழிபாட்டு ஆண்டின் காலங்களில் வசந்த காலம் என்றும் விடுதலையின் காலம் என்றும் சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
கழுகு
சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. ஆனால், இந்த வயதை அடைய, கழுகு தனது 40-ஆம் வயதை எட்டுகையில் ஒரு மிகக் கடினமான முடிவை எடுக்கவேண்டும். ஆம், அந்த வயதில் அதன் வலிமையான நகங்கள் மிகவும் பலவீனமாகவும், அதன் நீண்ட கூர்மையான அலகு மிகவும் வலுவற்றும் மாறியிருக்கும். அதன் இறக்கைகள் தடித்தும் கனமாகவும் போயிருக்கும். இதனால் கழுகால் பறக்க இயலாமலும், தனது இரையைப் பிடிக்க இயலாமலும் ஆகி, வாழ்வின் இறுதிக்கட்டத்தை அது நெருங்கும். இச்சமயத்தில், கழுகு ஒரு கடினமானத் தேர்வை எதிர்கொள்கிறது. இறப்பது அல்லது புதுப்பிப்பது - இரண்டில் ஒன்றைக் கழுகு முடிவு செய்கிறது.
புதுப்பித்தலுக்குத்
தன்னை ஒப்படைக்கும் கழுகு சுமார் 150 நாள்கள் நீடிக்கும் ஒரு வலிமிகுந்த பயணத்தைச் சந்திக்கிறது. முதலில் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளும் கழுகு, காடு அல்லது மலைப் பகுதிக்குச் சென்று, தன் அலகுகளால் உடலெங்கும் குத்திக்கொண்டு இறகுகளைப் பிய்த்துவிடுகிறது. மேலும்,
பாறைகளில் தன் அலகுகளையும் நகங்களையும் மோதி நீக்கிவிடுகிறது. பின்னர் புதிய இறகுகளும் நகங்களும் முளைக்கும்வரை தன்னை மறைத்துக்கொண்டு வாழ்கிறது. புதிய இறகுகள் முளைத்தவுடன் வெளியே வந்து முன்பைவிட உயரமாகப் பறக்க ஆரம்பிக்கிறது. இவ்வாறு தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் கழுகு மேலும் 30 ஆண்டுகள்வரை வாழும்.
தவக்காலத்தைத்
தொடங்கியுள்ள நமக்கும் கழுகின் புதுப்பித்தல் பயணம் சிறந்ததோர் ஆன்மிகப் பாடமாக அமைகிறது. கழுகின் தவ நாள்கள் அதற்கு
ஆற்றல் ஊட்டியதைப் போலவும், அதன் இளமையைத் திரும்பக் கொணர்ந்ததைப் போலவும் நமக்கும் இத்தவக்காலத்தின் நாள்கள் அமைய வேண்டும். “உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்” (திபா
103:5) என்னும் திருப்பாடல் வரிகள் இத்தவக்காலத்தில் நம் புதுப்பித்தலுக்கு வழிவகுக்கின்றன.
இயேசுவின்
உயிர்ப்பிற்காகத் தயாரிக்கும் இத்தவக்காலத்தின் நாள்கள், நம்மையும் இயேசுவுடன் சேர்ந்து உயிர்க்கச் செய்யவேண்டும். நம்மைப் புதுப்பிப்பதன் வழியாக நாமும் இயேசுவோடும் - இயேசுவாகவும் உயிர்த்தெழ முடியும். அதுவே இத்தவக்காலத்தின் நோக்கமாகும். இப்புதுப்பித்தல் அனுபவம் வசந்தம், விடுதலை ஆகிய இரு சிறப்பான பயன்களை நமக்கு அளிக்கிறது.
தவக்காலம் ஒரு
வசந்த
காலம்
‘லெண்ட்’
(Lent) என்கிற
ஆங்கிலச் சொல்லுக்கு வசந்த காலம் (Spring) என்கிற
அர்த்தமுண்டு. பழைய இலைகள் உதிர்ந்து புதிய இலைகளும் மலர்களும் தளிர்க்கின்ற, பூக்கின்ற காலமே இவ்வசந்த காலம். இந்த அடிப்படையில் நம்முடைய பழைய பாவ எண்ணங்களையும் தீய நாட்டங்களையும் எதிர்மறைச் சிந்தனைகளையும் உதிர்த்து விட்டு, புதிய எண்ணங்களையும் நற்சிந்தனைகளையும் புனித விழுமியங்களையும் நம்முள் பூக்கச்செய்யும் தவக்காலமும் உண்மையில் ஒரு வசந்த காலமே.
நம்மிடமிருந்து
அகற்றப்பட வேண்டியவை எவை? களையப்பட வேண்டியவை எவை? என்று நன்கு ஆய்ந்தறிய இந்நாள்களில் நாம் முயல வேண்டும். தகாதவற்றை விலக்குவதும் தகுந்தவற்றை உள்வாங்குவதும் இத்தவக்காலத்தின் அழைப்பாகும். அல்லவை நீக்கிடவும் நல்லவை சேர்த்திடவும் இத்தவக்காலம் நமக்கு உதவிட வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் ஆன்மிக வாழ்வை இன்னும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது. இதற்கு இத்தவக்காலம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” (திவெ
21:5) என்று கூறும் கடவுளின் வாக்கிற்கேற்ப அவருடைய பேரன்பும் பெருங்கருணையும் இத்தவக்காலத்தின் நாள்களில் நம்மை உண்மையில் புதுப் படைப்பாக மாற்றட்டும்!
தவக்காலம் ஒரு
விடுதலையின்
காலம்
புகழ்பெற்ற
சிற்பியான மைக்கேல் ஆஞ்சலோ இவ்வாறு கூறுகிறார்: “ஒவ்வொரு கல்லிலும் ஒரு சிலை உள்ளது; அதைக் கண்டுபிடிப்பதே சிற்பியின் பணி.” மேலும் அவர் தொடர்ந்து சொல்வார்: “இந்தச் சலவைக்கல்லில் நான் ஒரு வானதூதரைப் பார்த்தேன்; நான் அவரை இதிலிருந்து விடுவிக்கும்வரை செதுக்கினேன்.” இவ்வாறே இத்தவக்காலமும் ஒரு சிற்பியைப்போல நாம் செயல்பட நம்மைத் தூண்டுகிறது.
கடவுள்
நம் எல்லாரையும் அவருடைய உருவிலும் சாயலிலும் படைத்துள்ளார் (தொநூ 1:26). ஆனால், இந்த இறைமையை நம்முடைய குற்றங்களால் இருட்டடிப்புச் செய்திருக்கிறோம். நம்முள் மறைக்கப்பட்ட இறைமையை வெளிக்கொணர இத்தவக்காலம் உதவிடவேண்டும். ‘நான்’ என்னும் சிறைக்குள் சிக்கிச் சிதையாமல், விடுதலை பெற்றவர்களாக நம்மை வாழப் பணிக்கும் காலமாக இத்தவக்காலம் உள்ளது. நமக்குள் ஒளிந்திருக்கும் ஒரு வானதூதரை வெளிக்கொணரும் பொருட்டு, நம்மையே நாம் தொடர்ந்து செதுக்குவதற்கான காலமே இத்தவக்காலம்.
“ஆகையால், இனி நீங்கள் அடிமைகளல்ல; பிள்ளைகள்தாம். பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே”
(கலா 4:7) என்னும் கூற்றுக்கு இணங்க, இத்தவக்காலம் நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக, விடுதலை வாழ்வு பெற்ற மக்களாக இவ்வுலகில் வாழச் செய்யட்டும்.
நிறைவாக,
தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் இறைவேண்டல், நோன்பு, பிறரன்புச் செயல்பாடுகள் ஆகியவற்றின் வழியாக நம்முடைய புதுப்பித்தல் வீரியமும் வேகமும் பெறட்டும்! இப்புதுப்பித்தலின் நாள்களின் நிறைவில் நமக்கு வசந்தமும் விடுதலையும் கிடைக்கட்டும்!
1. இறைவனின் மீட்புத் திட்டத்தில், அவரின் ஒரே மகன் கன்னியிடமிருந்து பிறக்க வேண்டுமெனக் கடவுள் விரும்பினார். இந்தத் தெய்வீகத் திட்டமானது, மரியாவின் கன்னிமைக்கும் வார்த்தை மனுவானதற்குமான ஆழமானதோர் உறவிற்கு அழைக்கின்றது. “கடவுள் அவரின் மீட்புத் திட்டத்தில், ஏன் அவருடைய மகன் ஒரு கன்னியிடமிருந்து பிறக்க வேண்டுமென விரும்பினார் என்பதற்கான மறையுண்மையை நம்பிக்கையின் கண்ணோட்டத்தில் திருவெளிப்பாட்டின் முழுமையானதொரு சூழலில் உணரமுடியும். இந்தக் காரணங்கள் கிறிஸ்துவின் மனித நிலை, அவரின் பணி ஆகிய இரண்டிலும் எல்லா மனிதர்கள் சார்பாகவும் இந்தப் பணிக்கு மரியா கொடுத்த வரவேற்பையும் வெளிக்காட்டுகின்றது” (Catechism of the Catholic Church, n. 502).
மனித
தந்தையைத் தவிர்த்த இந்தக் கன்னி கருத்தரிப்பானது இயேசுவின் ஒரே தந்தை வானகத் தந்தை ஒருவரே என்பதையும் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ந்த மகனின் இந்தப் பிறப்பு அவரின் நிலையான பிறப்பையும் குறிக்கிறது. காலவரையறைக்கு உட்படாத மகனைத் தோற்றுவித்த தந்தையானவர், குறிப்பிட்ட காலகட்டத்தில் அவரை மனிதனாகவும் தோற்றுவிக்கிறார்.
2. கிறிஸ்து
பிறப்பு அறிவிப்பு நிகழ்வானது இயேசுவின் பிறப்பில் கடவுளுடைய இடையீட்டின் விளைவால் ‘கடவுளின் மகன்’ என்ற அவரின் நிலையை வலியுறுத்துகிறது. “தூய ஆவி உம்மீது வரும்; உன்னதக் கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்; ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது; அக்குழந்தை இறைமகன் எனப்படும்”
(லூக் 1:35).
கன்னி கருத்தரிப்பானது
மரியாவினுடைய ஒத்துழைப்பின் பயனாக இருக்கின்றது
மரியாவிடமிருந்து
பிறந்தவர், அவரின் நிலையான பிறப்பின் காரணமாக ஏற்கெனவே
கடவுளின் மகனாக இருக்கின்றார். உன்னதமானவரால் வழங்கப்பட்ட கன்னியிடமிருந்தான அவரின் பிறப்பானது அவருடைய மனித இயல்பிலும் அவர் கடவுளின் மகனாகவே இருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது.
கன்னியிடமிருந்தான
இயேசுவின் பிறப்பில் வெளிப்படுத்தப்படும் அவருடைய நிலையான பிறப்பானது, அவரின் மனிதப் பிறப்பினால் “தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும், கடவுள் தன்மை கொண்டவருமான ஒரே மகனுடைய...” (யோவா 1:18) பணியை, கட்புலனாகாத கடவுளுடைய வெளிப்பாட்டோடு தொடர்புபடுத்துகின்ற தூய யோவான் நற்செய்தியினுடைய முகவுரையின் வழியாகக் குறிப்பிடப்படுகின்றது: “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்; அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார்” (யோவா
1:14).
இயேசுவின்
பிறப்பை விவரிப்பதில், நற்செய்தியாளர்களான லூக்காவும் மத்தேயுவும் தூய ஆவியானவரின் பங்கையும் பற்றிப் பேசுகின்றனர். தூய ஆவியானவர் அந்தக் குழந்தையின் தந்தை அல்ல; தூய ஆவி வழியாக இந்த உலகிற்கு வந்து, அவரின் மனித இயல்பில் வார்த்தையைத் தோற்றுவிக்கின்ற என்றுமுள்ள தந்தையின் மகனாக மட்டுமே இயேசு இருக்கின்றார் (ஒப்பிடுக. லூக் 1:32-35). உண்மையில், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் வானதூதர் தூய ஆவியாரை, மனித வாழ்வில் அற்புதச் செயல்களைச் செய்யவல்ல வேலைகளில் ஒரு தெய்வீகச் சக்தியாக முன்னிறுத்துகின்ற பழைய ஏற்பாட்டின் வழியில் “உன்னதக் கடவுளின் வல்லமை”
(லூக் 1:35) என்றே அழைக்கின்றார். மனுவுருவாதலின் மறைபொருளில் மிகச்சிறந்த வகையில் அதையே வெளிப்படுத்தி, மூவொரு கடவுளின் வாழ்வில் அன்பாக இருந்து செயல்படுகின்ற இந்தச் சக்தியானது, வார்த்தை மனுவுருவானவரை இந்த மனுக்குலத்திற்கு அளிக்கின்ற செயலைக் கொண்டுள்ளது.
3. குறிப்பாக,
தூய ஆவியானவர்தான் தெய்வீக வளங்களை மனிதர்களுக்குக் கொடுக்கிறார் மற்றும் கடவுளுடைய வாழ்வில் அவர்களையும் பங்குதாரர்களாக ஆக்குகின்றார். மூவொரு கடவுள் மறையுண்மையில் தந்தையையும் மகனையும் இணைக்கின்ற அவரே, இயேசுவின் கன்னியிடமிருந்தான பிறப்பின் வழியாகக் கடவுளோடு
மனுக்குலத்தை இணைக்கின்றார்.
மனுவுருவாதல்
மறைபொருளானது ஒப்பீடு செய்ய இயலாத மரியாவின் கன்னித்
தாய்மையினுடைய மேன்மையையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. இயேசுவின் கருத்தரிப்பானது, எல்லா வளங்களின் ஊற்றாகிய அன்பின் ஆவியாரினுடைய செயலோடு, அவருடைய தாராள ஒத்துழைப்பினால் விளைந்ததொரு கனியாக இருக்கிறது.
ஆகவே,
இந்த இறைமீட்புத்
திட்டத்தில், கன்னி நிலையில் கருத்தரிக்கும் நிகழ்வானது ஒரு புதிய படைப்பின் அறிவிப்பாக இருக்கின்றது. தூய ஆவியாரின் செயலால், புதிய ஆதாமாக இருக்கப் போகிறவர் மரியாவில் உருப்பெறுகிறார்.
கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி நூல் குறிப்பிடுவதைப் போல, “இயேசு கன்னி மரியாவின் கர்ப்பத்தில் தூய ஆவியாரினால் கருவாக உருவானார்; ஏனென்றால், அவர்தான் புதிய படைப்பைத் தொடங்கவிருக்கின்ற புதிய ஆதாமாக இருக்கிறார் (Catechism of the Catholic Church, n.. 504).
நம்பிக்கையுள்ளோர்
கடவுளின்
குழந்தைகளாவதற்கான
ஆற்றல்
கொடுக்கப்படுகிறார்கள்
மரியாவினுடைய கன்னித்
தாய்மையின் பங்கானது இவ்வாறு புதிய படைப்பின் மறையுண்மையில் மிளிர்கின்றது. “கன்னியின் முதற்கனி”
(Ad Haer., 3,16,4) என்று
கிறிஸ்துவை அழைப்பதில் புனித எரோணிமுஸ் அவர்கள், கிறிஸ்துவின் புதுவாழ்வைப் பெறுகிறார்கள் என்ற அர்த்தத்தில் இயேசுவிற்குப் பின் கன்னியிடமிருந்து மற்றவர்களும் பிறந்தார்கள் என்பதை நினைவுகூர்கின்றார். “மரியாவின் ஒரே
மகன் இயேசுதாம். ஆனால், அவரின் ஆன்மிகத் தாய்மையானது உண்மையில் இயேசு யாரையெல்லாம் மீட்க வந்தாரோ அவர்களுக்கும் அகலப்படுத்தப்படுகின்றது. எந்த மகனை அவர் பெற்றெடுத்தாரோ அவரோடு, ஒரு தாயன்போடு ஒத்துழைத்து அவர் யாரையெல்லாம் பெற்றெடுத்து உருவாக்கினாரோ அந்த நம்பிக்கை கொண்டோருள் எல்லாச் சகோதரர்களுக்குள்ளும் முதன்மையானவராகக் கடவுள் அவரை வைத்தார்”
(Catechism of the Catholic Church, n. 501).
4. புது
வாழ்வின் பரிமாற்றமானது இறைமக்கள் ஆவதற்கானதொரு வழியாக இருக்கின்றது. இங்கு நற்செய்தியாளர் புனித யோவான் அவருடைய நற்செய்தியின் முகவுரையில் கூறியுள்ள கூற்றை நாம் நினைவிற்கொள்ளலாம்: “அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அவர்கள் இரத்தத்தினாலோ, உடல் இச்சையினாலோ, ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்லர்; மாறாக, கடவுளால் பிறந்தவர்கள்” (ஒப்பிடுக.
யோவா 1:12-13). இவ்வாறு, கன்னியிடமிருந்தான பிறப்பானது இறைதந்தைக்கான நீட்சியை அனுமதிக்கின்றது; கன்னியின் மற்றும் இறைத்தந்தையின் மகனில் அனைத்து மனிதர்களும் தத்தெடுக்கப்பட்ட மக்களாக (adoptive children
of God) ஆகின்றனர்.
இவ்வாறு,
கன்னியிடமிருந்தான பிறப்பின் மறைபொருளைத் தியானிப்பதென்பது, கடவுள் அவரின் தந்தையன்பை மிகத் தாராளமாக மனுக்குலத்திற்கு வழங்குவதற்கு, அவருடைய மகனுக்கு ஒரு கன்னித் தாயைத் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிந்துகொள்ள நமக்கு உதவியாக இருக்கின்றது.
மூலம்:
John Paul II, Eternal son of God is also born of Mary, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 7/14
August 1996, p.7.