ஆன்மிகமும் அரசியலும்
காலத்தின்
வேகத்தில் எண்ணிம உலகின் மாயத்தில் இரண்டிற்கும் சற்று அலட்சியமாக மனிதன் பயணிக்க தொடங்கிவிட்டான் என்பதே இரு சொற்றொடர்களுக்கும் அச்சாணியாகத் திகழ்கிறது.
பனி
பொழிய, குளிர்காற்று சருமத்தை வருட அனைவர் மனத்திலும் ஒரு புத்துணர்ச்சி. பெரு மகிழ்ச்சி! காரணம், கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டம். அதேவேளையில், சிலர் காலத்தைத் தனதாக்க, பலர் வேதனையை அனுபவிக்க நெருங்கி வந்து கொண்டிருக்கிறது தேர்தல்.
தித்திக்கும்
தேன்போல சிலருக்கு இனித்தாலும் ‘ஐயோ தெரிந்தே அரளிக்காயைச் சுவைப்பதா?’ என்பதுபோல் சிந்தனைகள் சிதறிக்கொண்டிருக்கின்றன. ஆக, கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டம் தொடங்கியது என்று மகிழ்வதா? இல்லை,
வாக்காளர் பட்டியல் சிறப்புச் சீர்திருத்தம் கண்டு கலங்குவதா?
“வாக்கு மனிதரானார்” (யோவா
1:14) - இது கிறித்தவ இறையியலின் இதயத் துடிப்பு “மனிதன் வாக்கானான்!” - இது மனித அரசியலின் ஆழமான உண்மை.
“வாக்கு மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார்” என்ற
வரி கடவுள் நிலையான அன்பால் மனித வரலாற்றிற்குள் நுழைந்து அன்பு, மீட்பு, ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் சமூகத்தை மாற்றிய புரட்சியை ஆழமாக வெளிப்படுத்துகிறது. இது ஒரு சாதாரண அறிக்கை அல்ல; மனிதகுலத்தின் மதிப்பை உயர்த்தும் இறையியலின் அடிப்படை நோக்கம். ஆனால், இன்றைய உலகில் குறிப்பாக, அரசியல் வர்ணனையில் ‘வாக்கு’ வெற்றிக்கான ஓர் எண், ஒரு கணக்குத்தொகை, ஓர் அதிகாரக் கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஒரே ஒரு வாக்கு என்பதில் ‘ஒரு மனிதன், ஓர் உயிர், ஒரு மதிப்பு’ என்பது மறந்துவிடப்படுகிறது. அதிகாரத்தைப் பிடிக்க, பகையை உருவாக்க வாக்கு பயன்படுகிறது.
“அரசியல் வாக்கு பகையின் கதவைத் திறக்கும் போது, இறைவனின் வாக்கு அமைதியின் கதவைத் திறக்கிறது.”
‘வாக்கு மனிதரானார்’- அன்பு
மனிதகுலத்தைக் காப்பாற்ற வந்தது; ஆனால், மனிதன் வாக்கின் அடிமையானான் - இன்று ஒரு நாள் வாக்கிற்காக மனிதன் தனது சுயமரியாதையையும் அடிப்படை மதிப்புகளையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். புனிதமான பொறுப்பாக இருந்த வாக்கு, இன்று பல இடங்களில் சந்தைப்பொருளாக
மாறிவிட்டது என்பது சமூகத்தின் வேதனையான சாயல்.
ஆபிரகாம்
லிங்கன் எச்சரிப்பதுபோல, “ஒரு மனிதனின் வாக்கை விலைக்கு வாங்க முடிந்தால், அந்தச் சமூகத்தை அடிமைப்படுத்த முடியும்.” வாக்கு
ஒரு செல்வம்; அதைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் புனிதக் கடமை. ஒரு காலத்தில் அரசியல் ஒரு தியாகமாக இருந்தது; ஆனால், இன்று அது பலருக்கும் முதலீடாக மாறிவருகிறது. முன்பு மக்கள் தங்கள் நலனுக்காகத் தலைவர்களை உருவாக்கினார்கள்; இன்று சிலர் தங்கள் நலனுக்காக வாக்காளர்களையே உருவாக்க முயல்கின்றனர். “நீ உனக்கான அரசியலைப்
பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால்
ஆளப்படுவாய்” என்கிறார்
லெனின்.
நேற்று
வாக்கு ஓர் உண்மை; இன்று வாக்கு ஓர் உதவி! திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவது போல, “அரசியல் என்பது அன்பின் உயர்ந்த வடிவம்; அன்பு இல்லாத இடத்தில் அதிகாரம் அடக்குமுறையிலும் அடிமைத்தனத்திலும் மாறுகிறது.”
மனிதனைச்
சுதந்திரமாகப் படைத்த இறைவன், அந்தச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நமக்குக் கொடுத்த கருவிதான் வாக்கு. ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தும்போது, சுதந்திரமே சங்கிலிகளாகி விடுகிறது. ஆகவே,
நம்முடைய வாக்கின் புனிதத்தையும் பொறுப்பையும் விழிப்புடன் காக்க வேண்டும்.
வாக்கு
மனிதரானது - மனிதனை அடிமைத்தனத்திலிருந்து மீட்க; ஆனால், மனிதன் வாக்காகும்போது, தன்னைத்தானே மீண்டும் அடிமைத்தனத்திற்கு ஒப்படைக்கிறான்.
ஆகவே,
நடந்தவையாக இருக்கட்டும். இனிமேலும் நமக்குக் கொடுக்கப்பட்ட வாக்கை அறிவுடனும் ஆழ்ந்த பொறுப்புடனும் கையாள்வோம்.
புனிதத்துவத்தில் மரியாவைப் பாதுகாப்பதற்காக இளம்வயதில் அவருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகையானது நம்பிக்கை மற்றும் அன்பில் அவரின் மிகப்பெரும் வளர்ச்சியைக் காட்டுகின்றது.
1. அமல
உற்பவக் கோட்பாட்டு வரையறையானது அவர் ‘முதல் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதிலிருந்து’ மரியாவின்
தொடக்கக் காலம் பற்றி மட்டுமே நேரடியான அக்கறையோடு அணுகுகின்றது. இவ்வாறு, திருத்தந்தையின் ஆசிரியமானது பல நூற்றாண்டுகளாகப் பிரச்சினைக்குள்ளாகியிருந்த முதல் பாவத்திலிருந்து மரியா பாதுகாக்கப்பட்டது பற்றிய உண்மையை
மட்டுமே வரையறுக்க விரும்பியதேயன்றி, ஆண்டவருடைய கன்னித்தாயின் என்றென்றைக்குமான புனிதத்துவம் பற்றி வரையறுப்பதில் அக்கறை கொள்ளவில்லை.
இந்த
உண்மையானது கிறித்தவ மக்கள் மத்தியில் ஏற்கெனவே ஏற்றுக் கொள்ளப்பட்டதொன்றாக இருந்தது. இது மரியா முதல் பாவத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டவராக
மட்டுமல்லாமல், சூழ்நிலை சார்ந்த பாவத்திலிருந்தும் பாதுகாக்கப்பட்டார். மேலும், இவரின் தொடக்கப் புனிதத்துவ வாழ்வு முழுவதையுமே புனிதத்துவத்தால் நிரப்புவதற்காக அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பதற்குச் சான்றுபகர்கிறது.
மரியாவிடம் பாவமோ, மற்ற
குறை
பாடோ
இருந்ததாகக்
கருத
முடியாது!
2. திரு
அவையானது மரியாவைப் புனிதை என்றும், பாவத்திலிருந்தும் ஒழுக்கக் குறைபாட்டிலிருந்தும் விடுவிக்கப்பட்டவர் என்றும் தொடர்ந்து கருதி வந்துள்ளது. இந்த ஆழமான நம்பிக்கையைத் திரிதெந்து திருச்சங்கமானது, “திரு அவையானது கன்னி மரியாவின் விசயத்தில் வைத்திருக்கின்ற நிலைப்பாட்டைப் போன்று, அவர் சிறப்பானதொரு சலுகையைப் பெற்றிருந்தாலன்றி, அவரின்
வாழ்வு முழுவதும், அது மன்னிக்கத்தக்க பாவமாக இருந்தாலன்றி, எல்லா பாவத்தையும் தவிர்க்க முடியாது”
என்ற கருத்தை வலியுறுத்தி
அதையே தனது நிலைப்பாடாக வெளிப்படுத்துகின்றது (DS 1573). கடவுளின்
அருளினால் உருமாற்றப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட கிறித்தவன் கூட பாவம் செய்வதற்கான சந்தர்ப்ப சூழல்களிலிருந்து தப்பித்ததில்லை. திரிதெந்து திருச்சங்கம் கூறுகின்றவாறு, பாவத்திலிருந்து தடுக்கக்கூடிய அந்தச் சிறப்புப் பண்பு உறுதியளித்தாலன்றி, கடவுளின் அருளானது
ஒருவருடைய வாழ்வு முழுவதும் அவரின் எல்லாப் பாவங்களிலிருந்தும் அவரைப் பாதுகாக்காது. மரியாவைப் பொறுத்தவரை இதுதான் நிகழ்ந்தது.
திரிதெந்து
திருச்சங்கமானது இந்தச் சிறப்புச் சலுகையை வரையறுக்கவில்லை. ஆனால், திரு அவையானது அதைத் தெளிவாக உறுதிப்படுத்துவதாகக் கூறுகிறது. இதற்கு ‘Tenet’ என்ற இலத்தீன்
வார்த்தையைத் திருச்சங்கம் பயன்படுத்துகிறது. அதாவது, திருச்சங்கம் உறுதியாக இதை நம்புகிறது என்பதே இதன் பொருளாகும். இந்த உண்மையை வெறுமனே ஒரு பக்தி சார்ந்த நம்பிக்கை அல்லது கருத்து என்று புறக்கணிப்பதைத் தாண்டி, அதன் தன்மையை கடவுளுடைய மக்களின் நம்பிக்கையில் பொதிந்திருக்கின்ற ஓர் உறுதியான கோட்பாடாக உறுதிப்படுத்துகின்றது. மேலும்,
இந்த நிலைப்பாடு இயேசுவின் பிறப்பில் வானதூதரால் மரியாவுக்கு வழங்கப்பட்ட
அருளை அடிப்படையாகக் கொண்ட
ஒன்றாகும். “அருள் நிறைந்தவரே” (kecharitoméne)
என்று மரியாவை அழைப்பதன் வழியாக, வானதூதர் அவரை என்றைக்குமானதொரு நிறைவினாலும் புனிதத்துவத்தின் முழுமையினாலும் நிரப்பப்பட்ட, பாவத்தின் நிழலோ ஒழுக்க அல்லது ஆன்மிகக் குறைபாடோ இல்லாதவொரு பெண்ணாக அங்கீகரிக்கின்றார்.
3. மரியாவின்
முழுமையான புனிதத்துவம் பற்றி நிறைவில்லாத எண்ணங்களைக் கொண்ட அநேக ஆரம்பகாலத் திரு அவைத் தந்தையர்கள் (Fathers of the Church) முழுமையற்றத்தன்மையையும்
ஒழுக்கக் குறைபாடுகளையும் அவர் கொண்டிருந்ததாகக் கற்பித்தார்கள். இதே நிலைப்பாட்டை ஒருசில அண்மைக்காலத்து ஆசிரியர்களும் கொண்டிருந்தனர். இருப்பினும், மீட்பரின் தாய்க்குப் பாவத்தையோ அல்லது ஒழுக்கக் குறையையோ சுட்டிக்காட்டுவதற்கு அவர்கள் மேற்கோள்காட்டிய திருவிவிலிய வாசகங்கள் அவர்களின் கருத்துகளை நியாயப்படுத்துவதற்கான எந்தவோர் அடிப்படைக் காரணத்தையும் கொடுக்கவில்லை.
பன்னிரண்டு
வயதில் தமது தாய்க்கான இயேசுவின் பதில்: “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” (லூக் 2:49). இயேசுவின் இக்கேள்வியானது சில வேளைகளில் மறைமுகமானதொரு கண்டனமாகவே விளக்கப்பட்டது. இருப்பினும்,
இந்த நிகழ்வு பற்றிய கவனமானதொரு வாசிப்பானது, இயேசுவின் தாயும் அவரின் வளர்ப்புத் தந்தையான யோசேப்புவும் அவரைத் தேடுவதற்கான கடமை அவர்களுக்கு இருந்ததால் அச்செயலுக்காக அவர் அவர்களைக் கண்டிக்கவில்லை.
கவலையோடு
கூடிய ஒரு தேடலுக்குப் பிறகு இயேசுவிடம் வந்த மரியா, அவரின் செயலைப்பற்றி ‘ஏன்?’ என்ற ஒரு கேள்வியை மட்டுமே கேட்கின்றார்: “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்?” (லூக் 2:48). இந்தக் கேள்விக்கு இயேசு தமது எதிர்ப்பையோ, கண்டனத்தையோ தெரிவிக்காமல், இறைமகன் என்பதன் மறைபொருளைச் சுட்டிக்காட்டி, ‘ஏன்?’ என்ற மற்றோர் எதிர் கேள்வியைத்தான் கேட்கின்றார்.
கானாவூர்
திருமண நிகழ்வில் அவர் பேசிய, “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே!” (யோவா
2:4) என்கின்ற அவரின் வார்த்தைகளும் கண்டனத்திற்குரியவைகளாக விளக்கமளிக்கப்பட முடியாது. திராட்சை இரசம் தீர்ந்ததினால் மணமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் கண்டு மரியா எளிய உள்ளத்தோடும், அந்தப் பிரச்சினையை அவரிடம் ஒப்படைத்தும் இயேசுவிடம் பேசுகின்றார். ஒரு மீட்பர் என்கிற வகையில் தமது தந்தையின் விருப்பத்திற்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும் என்பதை அறிந்திருந்தும், அவருடைய தாயின் உள்ளார்ந்த வேண்டுதலை அவர் நிறைவேற்றுகின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக, கன்னி மரியாவின் நம்பிக்கையை அவர் நிறைவேற்றுகின்றார். இவ்வகையில் அவரின் மகிமையை வெளிப்படுத்தும் விதமாக, தமது முதல் புதுமையைச் செய்கின்றார்.
4. பின்பு
மரியாவும், அவரின் உறவினர்களும் இயேசுவினுடைய பொதுவாழ்வின் தொடக்கத்தில் அவர் கூறிய வார்த்தைகளுக்குச் சிலர் எதிர்மறை விளக்கங்களைக் கொடுத்தனர். அவரிடம், “உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று
ஒருவர் கூறியபோது, இயேசுவின் பதிலைத் தொடர்புபடுத்தி,
தூய லூக்கா நற்செய்தியாளர் நமக்கு அதற்கான விளக்கத்தை அறிந்துகொள்வதற்கான திறவுகோலைத்
தருகின்றார். அதாவது, இது அவரின் சகோதரர்களைக் குறிக்கும் ஒரு தொடர் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மரியாவின் உள்மன உணர்வுகளை அடிப்படையாக வைத்து நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டும் (ஒப்பிடுக. யோவா 7:5). அவர்களுக்கு இயேசு, “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள்” (லூக்
8:21) என்று பதிலளித்தார். இயேசுவின் பிறப்பு அறிவிப்பில் லூக்கா நற்செய்தியாளர் மரியா எவ்வாறு உண்மையில் கடவுளின் வார்த்தையைக் கேட்பதிலும் தாராள
மனத்திலும் முன்மாதிரியாக இருந்தார் என்பதைக் காட்டுகின்றார். இத்தகைய
விளக்கமளிக்கையில், அந்நிகழ்வில் தன்னுடைய சொந்தவாழ்வில் கடவுளின் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிய மரியாவுக்கு ஒரு மிகப்பெரும் புகழ்ச்சியைத் தருகின்றது. இயேசுவின்
வார்த்தைகளானது சகோதரர்களைக் குறிப்பதற்கு எதிரானதாக இருந்தாலும், அவை உடலளவில் மட்டுமல்லாமல், ஆன்மிக அளவிலும் வாழ்ந்த மரியாவினுடைய தாய்மையின் மாண்பு மற்றும் கடவுளின் வார்த்தையை நிறைவேற்றுவதில் அவரிடமிருந்த
நம்பகத்தன்மையையும் புகழ்ந்து பேசுகின்றன.
மறைமுகமான
இந்தப் புகழ்ச்சியின் வழியாக, இயேசு ஒரு தனிப்பட்ட விளக்கமளிக்கும் முறையைப் (Particular method) பயன்படுத்துகிறார்:
இயேசு மரியாவின் நடத்தையில் உள்ளதொரு பெருந்தன்மை பற்றிப் பொதுவானதொரு விளக்கமளிக்கிறார். மேலும், புனிதத்திற்கான வழிமுறையில் மனுக்குலத்தோடு மரியாவுக்குள்ள நெருக்கத்தையும் உடனிருப்பையும் தெளிவாகக் காட்டுகின்றார்.
இறுதியாக,
இயேசுவின் தாயைப் ‘பேறுபெற்றவர்’ என்று
அழைத்த அந்தப் பெண்ணுக்கான தமது பதிலாக அமைந்த “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறு பெற்றோர்” (லூக்
11:28) என்ற வார்த்தைகள் மரியாவின் தனித்தன்மையைச் சந்தேகிக்காமல், கடவுளின் வார்த்தையை நிறைவேற்றுவதில் அவரிடமிருந்த நம்பத்தன்மையைக் காட்டுகின்றது: திரு அவையும் இதை நன்கு புரிந்துகொண்டு, மரியாவைப் பெருமைப்படுத்தும்
திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களில் இந்த இறைவார்த்தையை வைத்திருக்கின்றது. உண்மையில் அந்த நற்செய்தி வாசகமானது அவரின் தாயினுடைய ஆசிர்வதிக்கபட்ட நிலையானது கடவுளோடு அவருக்கிருந்த நெருக்கமான உறவு மற்றும் கடவுளின் வார்த்தைக்கான அவரின் முழுமையான அர்ப்பணத்தில் இருப்பதை மிகத் தெளிவாக நமக்கு எடுத்துரைக்கின்றது.
மரியா முற்றிலும்
கடவுளுக்குரியவராக
இருந்தார்!
5. ‘முற்றிலும் புனிதமான’ மரியாவுக்கு
கடவுள் வழங்கிய சிறப்புச் சலுகையானது அவர் வாழ்வில், அருளால் நிகழ்த்தப்பட்ட மாட்சியைப் போற்றுவதற்கு நம்மை வழிநடத்துகிறது. மேலும், இது மரியா எப்பொழுதும் முற்றிலும் கடவுளுக்குரியவர் என்றும், அந்த நிலையானது எந்தவொரு குறையும் இல்லாத நிலையில் கடவுளுடனான முழுமையான இணக்க நிலையில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் நமக்கு நினைவூட்டுகின்றது.
ஆகவே,
அவரின் பூவுலக வாழ்வானது நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பில் நீடித்த மற்றும் உயர்ந்ததொரு வளர்ச்சியால் குறிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு, இறை இரக்கத்தின் பிரதிபலிப்பாக, புனிதத்துவத்தின் மற்றும் நற்செய்தியின் முழுமையினுடைய உயர்ந்த மற்றும் உறுதியான வழிகாட்டியாக மரியா இருந்தார்.
மூலம்:
John Paul II, Mary was free from all personal sin, in
L’Osservatore Romaoo, Weekly Edition in English, 26
Jube 1996, p. 11.
ஆயர்கள் திருத்தூதர்களின் வழித்தோன்றல்கள் என்பது இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கப் படிப்பினை. அவர்கள் தலத் திரு அவை மற்றும் உலகத் திரு அவையின் ஒன்றிப்புறவிற்காகப் பணியாற்றுபவர்கள். தமது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட இறைமக்கள், அருள்பணியாளர் குழுமம், திருத்தொண்டர்கள், துறவியர், ஏனைய ஆயர்கள், உரேமை ஆயராகிய திருத்தந்தை என்போருடன் கொண்டுள்ள உறவுப் பின்னலில்தான் ஆயரது பணிபுரிந்து கொள்ளப்படவேண்டும். ஆயருடைய இவ்வுறவுகள் அனைத்தின் முதன்மையான நோக்கு மறைத்தூதுப் பணியே.
தமது
தலத் திரு அவையில் நற்செய்தி அறிவிப்பு, திருவழிபாடு என்பனவற்றின் முதல் பொறுப்பு ஆயருடையதே. அவரே அதனை வழிநடத்துபவர்; ஏழைகளுக்கான அருள்பணியையும், வலுவற்றோருக்குப் பாதுகாப்பு வழங்குவதையும் அவர் ஊக்குவிப்பவர். இருப்பினும், “ஆயராகத் திருநிலைப்பாடு பெற்றுள்ளவருக்குத் தரப்பட்டுள்ள சிறப்பு உரிமைகளும் கடமைகளும் அவர் அவற்றைத் தனித்து நிறைவேற்றவேண்டும் என்பதற்காக அல்ல”
(இஅ 69); மாறாக, அவர் பெற்றுள்ள அருளும் அழைப்பும் தனி ஆள்கள் மற்றும் குழுமங்கள்மீது தூய ஆவியார் பொழிந்துள்ள கொடைகளை இனங்கண்டு, ஏற்று, குழும ஒன்றிப்பில் இணைப்பதற்காகவே! “அவர் அருள்பணியாளர்கள் மற்றும் திருத்தொண்டர்களுடன் தாம் கொண்டுள்ள பொது அருளடையாளப் பிணைப்பை வெளிப்படுத்தும் முறையில் அவர்களுடன் இணைந்தே இதைச் செயல்படுத்துகிறார்” (இஅ
69). “இப்பணியை அவர் கூட்டுப்பொறுப்புடன் கூடிய ஆளுகை, இறைமக்களுக்குச் செவிகொடுத்துப் போதித்தல், மனத்தாழ்மையோடும் மனமாற்றத்தோடும் புனிதப்படுத்தல் மற்றும் திருவழிபாடு கொண்டாடுதல் என்பவை வழியாகக் கூட்டியக்க முறையில் நிறைவேற்றுகிறார்” (முஅ
11b).
ஆயர்
இறைக்குடும்பமாகிய திரு அவையில் கூட்டியக்க முறையை உயிரூட்டி இயக்குவதில் அவருடைய பணி இன்றியமையாதது. ஆயராகிய ஒருவரது பணி தெளிதேர்வு செய்வதிலும், முடிவெடுக்கும் முறைமைகளிலும் நேரடியாக அதிகம் ஈடுபட்டுள்ள சிலரது பங்களிப்பின் வழியாக நம்பிக்கையாளர்கள் எல்லாருடைய பங்கேற்பையும் போற்றி வளர்க்கிறது. மேலும், “அனைவருக்கும் கூட்டியக்கத்தின் மாதிரியாகத் திகழ ஆயர் அழைக்கப்பட்டுள்ளார். கூட்டியக்க அணுகுமுறை பற்றிய அவரது உறுதிப்பாடும், தமது அதிகாரத்தை அவர் கையாளும் முறையும் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் பொதுநிலையினர், துறவியர் என்போரது கூட்டியக்கப் பங்கேற்பை ஆழமாகப் பாதிக்கும் என்பது உறுதி”
(முஅ 12உ). இதற்கு இன்றியமையாதது அவர்களை அவர் சந்திப்பது. குறிப்பாக, தமது பங்குச் சந்திப்பின்போது மக்களுக்குச் செவிமடுத்து, அவர்களுடைய தேவைகளை அவர் தெரிந்துகொள்வது முக்கியமானது. “ஆயர் தேர்வு முறையில் இறைமக்கள் குரலுக்கு அதிக இடம் தரப்படவேண்டும் என இம்மாமன்றம் விரும்புகிறது” (இஅ
70).
“ஆயர் பணிக்கு இன்றியமையாதவற்றில் அவர் அதிகக் கவனம் செலுத்துவதும் ஏனைய ஆயர்களுடனும் அருள்பணியாளர்களுடனும் உண்மையான சகோதர உறவை வளர்த்துக்கொள்வதும் அவசியம்”
(முஅ 12ந). ஏனெனில், பல ஆயர்கள் தங்கள்
மறைத்தூதுப் பணியை முழுமையாக நிறைவேற்ற முடியாத அளவிற்குத் தங்கள் மீதுள்ள எதிர்பார்ப்புகள், நிர்வாகம் மற்றும் சட்டம்சார் கடமைகள் எனும் சுமைகள் தங்களுக்கு இருப்பதாக உணர்கின்றனர். தங்களுக்குப் போதிய ஆதரவு இல்லை எனும் தனிமை உணர்வுக்கும் அவர்கள் ஆளாவது உண்டு. இதனால் ஆயர்களுக்கும் அவர்களது பணியில் ஆதரவும் தோழமையும் தேவைப்படுகின்றன. அண்டை மறைமாவட்டங்களின் ஆயர்களுக்கு இடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதில் பேராயரின்
பங்களிப்புப் பெரிது.
ஆயர்களுக்கும்
பணியிடை உருவாக்க முறைகள் தேவை என மாமன்ற நடைமுறையின்போது
பேசப்பட்டது. அதுபோலவே, “துணை ஆயர்களின் பணி, பதிலாள் உரிமையுடன் ஆயர் பிறரிடம் ஒப்படைக்கக்கூடிய பணிகளை விரிவாக்குதல் என்பனவற்றைத் தெளிவுபடுத்தவேண்டிய தேவையும் மாமன்றத்தின்போது எழுந்தது”
(இஅ 71).
மேலும்,
ஆயர் பற்றிய கற்பனை சார்ந்த மீஉயர் புரிதலையும், மிகுதியான எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையாளர்கள் தவிர்ப்பது அவசியம். ஏனெனில், அவரும் வலுகுறைவுகள் உள்ளவரும்-சோதனைகளை எதிர்கொள்ளுபவரும்தான். இதனால் எல்லாருக்கும்போல் அவருக்கும் உதவி தேவைப்படுகிறது. “மறுபுறம்,
உண்மையான கூட்டியக்கத் திரு அவையில் இறைமக்கள் அனைவருடைய செயல்முறை சார்ந்த பங்கேற்பு எனும் ஆதரவு இருக்கும் போது அவரது பணி மிகவும் சிறப்புற நிகழமுடியும்” (இஅ
71). மேலும், தமது தலத் திரு அவையை வழிநடத்தும் அதேவேளையில், அதன் வரலாறு, மரபு, அருங்கொடை சார்ந்த வளங்களையும் கண்டறிந்து அவற்றைக் காத்து வளர்க்கவும் ஆயர் அழைக்கப்படுகிறார்.
திரு அவையின்
ஒன்றிப்பும்
ஆயர்
பேரவைகளும்
ஆயர்
பேரவைகள் திரு அவைகளுக்கு இடையிலான உறவு ஒன்றிப்பை வெளிப்படுத்துகின்றன; அவை அருள்பணிசார் தேவைகளுக்கு அதிக ஆற்றலுடன் பதிலிறுப்புச் செய்யவும் உதவுகின்றன. “பிணைப்புகளை ஏற்படுத்தவும், திரு அவைகளுக்கு இடையே அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பகிர்வு செய்யவும் பல்வேறு பண்பாடுகளுக்கு ஏற்ப கிறித்தவ வாழ்வையும் நம்பிக்கையின் வெளிப்பாடுகளையும் தழுவியமைக்கவும் அவை அடிப்படையான கருவிகளாக விளங்குகின்றன” (இஅ
125). கூட்டியக்கத்தை
வளர்ப்பதில் அவை இறைமக்கள் அனைவரின் ஈடுபாட்டுடன் முக்கியப் பங்களிப்புச் செய்கின்றன.
மாமன்றத்திற்கு
முன்தயாரிப்பாக நடத்தப்பட்ட கண்டங்களைச் சார்ந்த ஏழு கூடுகைகளும் புதுமையானவை. அவை அவசியமானவையும் பாதுகாக்கப்பட வேண்டிய அதிகப் பயன்களை விளைவித்தவையும் ஆகும். ஒவ்வொரு பெரிய சமூக-பண்பாட்டுப் பகுதிக்கேற்ப கிறித்தவ வாழ்வை அப்பகுதி முழுவதற்கும் ஆழமாகத் தழுவியமைக்க இத்தகைய கண்டம் அளாவிய கூடுகைகள் சிறந்த வழிமுறைகளே. அவைபோலவே மாநில மற்றும் நாட்டு அளவிலான திரு அவைக் கூடுகைகளில் இறைமக்களுள் பல நிலையினரும் இணைந்து
வந்து, தெளிதேர்வு செய்வது ஆயர்கள் குழுவாக இணைந்து வந்து முடிவுகள் எடுக்க உதவுகிறது. இவ்வாறு கூட்டியக்க முறையில் திரு அவையின் பணிசார்ந்த முக்கிய முடிவுகளைச் சிலர் செய்தாலும், அதில் அனைவரும் பங்கேற்கின்றனர். இத்தகைய கூடுகைகளின் இறையியல் மற்றும் திரு அவைச் சட்டம்சார் நிலை தெளிவுபடுத்தப்படவேண்டும்.
திரு
அவையில் மிகையான மையப்படுத்தலைக் கைவிட்டு நலமான அதிகாரப் பரவலாக்கலையும், பயனுள்ள பண்பாட்டுமயமாக்கலையும் நடைமுறைப்படுத்த ஆயர் பேரவைகள் மற்றும் மாநில, மாவட்டப் பேரவைகளின்
பங்களிப்பு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவ்வப்போது இத்தகைய பேரவைகளைக் கூட்டுவது திரு அவை வரலாற்றில் ஒரு கட்டாயமாகவே இருந்துள்ளது.
இன்றைய இலத்தீன் திரு அவைச் சட்டம் அதற்கு இடமும் அளித்துள்ளது (திரு அவைச் சட்டங்கள் 439-446). அவை அவ்வப்போது கூட்டப்படுவதுடன், அவற்றின் முடிவுகளுக்குத் திரு அவைத் தலைமைப்பீடம் தரும் ஏற்புமுறை சீரமைக்கப்படவேண்டும். முற்றிலும் அருள்பணி அல்லது ஒழுங்குமுறை சார்ந்த அவற்றின் முடிவுகளுக்குத் தலைமைப்பீடம் தனது மௌனத்தால் ஏற்பு
தரும் முறையை நடைமுறைப்படுத்தலாம்.
(தொடரும்)
ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் இறுதி நேரம். கையில் அறிக்கையை எடுத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கும் அருள்பணியாளர்கள். நாற்பது நிமிடங்கள் கடந்து சென்றபின்... முன் புறத்தில் சில வயதான பாட்டிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் முகம் சுளித்து, ‘சரி, அப்புறம் பார்க்கலாம்’ என்ற முகபாவனையுடன் பார்த்தனர். அடுத்த வாரம், மனத்துள் ஏற்பட்ட அதிருப்தியோடு அருள்பணியாளர் சிறிது கடுமையான குரலில் அறிவித்தார்: “அறிக்கை வாசிக்கும்போது வெளியே செல்வோர் அருளடையாளங்களைப் பெறமுடியாது.”
‘அமைதியான குழப்பம்’
நிலவியது. மக்கள் முகத்தில் இன்னும் சொல்லப்படாத எண்ணங்கள் தெரிந்தன. அன்றைய திருப்பலியும் வழக்கம்போல நாற்பது நிமிடங்கள் நீடித்தது. அதைக் கடந்து வந்த வாரங்களில், அறிக்கை நேரம் மூன்றில் நான்கு மடங்காக நீண்டது. சிறப்பு அழைப்பாளர்கள் வந்த நாள்களில் அது ஒருமணி நேரம் வரை சென்றது.
இதுபோன்ற
நிலைமைகள் புதிதல்ல. நாட்டின் பெரும்பாலான பங்குகளிலும் இன்று இதேபோல் நடந்து வருகிறது. ஆனால், இந்நிகழ்வுகளின் அடியில் மக்களின் மனநிலை எவ்வாறு மாறி வருகிறது என்பதை நாம் சிந்தித்ததுண்டோ?
எழுபது,
அறுபது வயதுகளில் உள்ள மூத்தோர் பெரும்பாலும், “எங்களுக்குச் சுகர், பிரஷர், வலி எல்லாம் இருக்கு. எட்டு மணிக்குப் பூசைக்கு வந்துட்டு பத்து முப்பதுக்கே வீட்டுக்குப் போற நேரத்திற்குள் வெடவெடன்னு ஆகிடுது; அதனால மாதா டி.வி.யில
பூசை பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்” என்று
கூறத்தொடங்கியுள்ளனர்.
இது அவர்களின் உடல் சோர்வை மட்டுமல்ல, மனச் சோர்வையும் வெளிப்படுத்துகிறது.
இளம்
தலைமுறையினரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் திருப்பலிக்கு வருவதே ஒரு சாதனை. அதன் பின்பு நீண்ட மறையுரை, நீளமான அறிக்கை என்று தொடர்கையில் அவர்களின் பொறுமை துரிதமாகக் கலைந்துவிடுகிறது. கடவுளிடம் அவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய நேரம், பதற்றமூட்டும் நேரமாக மாறிவிடுகிறது. அவர்கள் உள்ளங்களில் ‘அன்பான விருந்தினராக’ கடவுள்
இருக்க வேண்டினால், அவர்களை ஈர்க்கும் இனிய மொழியில் சுருக்கமான செய்திகளைப் பரிமாறவேண்டும்.
இன்றைய
இணையச் சுழற்சி உலகில், மனநிலை வேகமாக மாறுகிறது. சமூக வலைத்தளங்கள், நுகர்வுவெறி, சினிமா கவர்ச்சி, தொழில்நுட்ப நெருக்கடிகள்... இவற்றின் நடுவே கடவுளின் குரல் மெல்லிய ஒலியாய் மட்டுமே கேட்கிறது. இத்தகைய சூழலில், மறையுரை மற்றும் அறிக்கையால் அவர்களை இணைத்துக்கொள்ள வேண்டியவர்கள் திரு அவை அருள்பணியாளர்கள். அவர்களிடம் சிந்தனையும் புதுமையும் கலந்திருக்க வேண்டிய காலம் இது. திருப்பலி, மக்கள் சார்ந்த விழிப்புணர்வாக இருக்கட்டுமேயன்றி, மன அழுத்தம் தரும்
நிகழ்வாக மாறாதிருக்க சுருக்கமான, இனிய பாங்கே வழி.
‘அறிக்கை’ என்பது வெறும் தகவலாக அல்ல; மாறாக, மக்களை ஊக்குவிக்கும் ஆன்மிக உரை என்று பார்க்கப்பட வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ் ஒருமுறை
கூறியுள்ளார்: “மறையுரை ஏழு முதல் பத்து நிமிடங்கள் போதும்.” அதேபோல் அறிக்கைகளும் சுருக்கமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
அறிக்கை
என்பது ஆலயத்தின் இதயத்துடிப்பு; அது மக்களை எச்சரிக்கும் விழிப்புணர்வூட்டும் ஒன்றிணைக்கும் ஓர் அசைவு. ஆனால், அதற்கு அளவு மீறிய நீளம் வரும்போது, அந்த இதயத் துடிப்பு சோர்வாகிவிடுகிறது. திருப்பலி என்பது இயற்கையின் அமைதியையும் இறைவனின் நெருக்கத்தையும் உணர்த்தும் பொன்னான தருணம்; அதனைச் சுருக்கமாக, சுவையாக, இனிமையாக வைத்திருக்கிறபோதுதான் மக்கள் உள்ளங்களில் கடவுளின் பெயர் நின்றுவிடும். கடவுளின் வார்த்தை நீண்ட வாக்கியங்களில் அல்ல; மாறாக, மனத்தைத் தொட்ட ஓர் உயிருள்ள சொல் மூலமே செல்வது. அதுவே திருப்பலியின் உண்மையான புனிதம்!
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அன்புச்செல்வன்:
“தந்தையே, கடந்தமுறை நாம் உரையாடியபோது, வாழ்வில் மேலோட்டமான பார்வை, ஆழமான பார்வை என்ற இரு பார்வைகள் உள்ளன என்று கூறினீர்கள். ‘நீ வேறு-நான்
வேறு’ என்று
பிரித்தும் பகுத்தும் பார்க்கின்ற பார்வை மேலோட்டமான பார்வை என்றும், எல்லாம் ஒன்றோடொன்று இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றன என்ற பார்வை ஆழமான பார்வை என்றும் கூறினீர்கள். மேலோட்டமான பார்வையிலிருந்து ஆழமான பார்வையை நோக்கி நாம் நகர்வதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டவையே கட்டளைகள் என்பதையும் தெளிவுபடுத்தினீர்கள். மேற்கண்ட இரு பார்வைகள் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ஆழமான பார்வைக்கும் பிரபஞ்சத்தின் உண்மைத்தன்மைக்கும், அதாவது அதன் இருப்புக்கும் தொடர்பு இருப்பதாக எனக்குத் தென்பட்டது. மேலோட்டமான பார்வை நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் தவறாகப் பார்க்கும் முறை என்றும், ஆழமான பார்வை அனைத்தையும் சரியாகப் பார்க்கும் முறை என்றும் கருதுகிறேன்.”
அருள்பணி:
“நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை! ஓர் உதாரணம் இக்கருத்தைத் தெளிவுபடுத்தும்! நாம் மேலோட்டமாகப் பார்க்கும்போது சூரியன் பூமியைச் சுற்றிவருவதாக நமக்குத் தென்படுகிறது. ஆனால், கலிலியோ பிரபஞ்சத்தை உற்றுநோக்கி, சூரிய இயக்கத்தைப் பற்றிய ஆழமான பார்வையைத் தனதாக்கினார். பூமியே சூரியனைச் சுற்றிவருகிறது என்ற உண்மையை எடுத்துரைத்தார். கலிலியோவின் ஆழமான பார்வையே பிரபஞ்சத்தின் உண்மைநிலை என்பது நாம் அறிந்ததுதானே!”
மார்த்தா:
“மேலோட்டமான பார்வை தவறானது என்றாலும், அதை அவ்வளவு எளிதில் நம்மால் விட்டுவிட முடிவதில்லையே! பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று தெரிந்தாலும், நம் அன்றாட வாழ்வில் ‘சூரியன் உதிக்கிறது’, ‘சூரியன்
உச்சிக்கு வந்துவிட்டது’, ‘சூரியன்
மறைகிறது’ என்று
சூரியன்தான் நகர்கிறது என்பது போலல்லவா நாம் பேசுகிறோம்!”
அருள்பணி: “நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. பல விசயங்கள் நமக்குத்
தவறு என்று தெரிந்தாலும், அவ்வளவு எளிதில் நம்மால் அவற்றை விட்டுவிட முடிவதில்லை. அதற்கான ஒரு காரணம் பழக்கதோஷம்!”
கிறிஸ்டினா:
“தந்தையே, வாழ்வின் மட்டிலான மேலோட்டமான பார்வை நம் வாழ்விற்குள் பல பிரச்சினைகளைக் கொண்டு
வருவதாகக் கடந்தமுறை கூறினீர்கள். அது குறித்துக் கொஞ்சம் கூறமுடியுமா?”
அருள்பணி:
“ஒருசில பிரச்சினைகளைப் பார்க்கலாம். முதலாவதாக, மேலோட்டமான பார்வை கொண்டு வாழும் மனிதர்கள் உறவின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதில்லை. தனிமனிதத் தன்மைகளையும், தனிமனித முன்னேற்றத்தையும் அளவுக்கதிகமாகத் தூக்கிப் பிடிப்பதன் காரணமாக, தங்களை அறியாமலேயே தங்களைச் சுற்றி எதிரிகளையும் எதிர்ப்புகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். நம்மைச் சுற்றி எதிரிகளும், எதிர்ப்பு மனநிலை உள்ளவர்களும் வாழ்ந்தால் அதற்கு மத்தியில் வாழ்வது எவ்வளவு கடினமானது என்பது நமக்குத் தெரியும்.”
மார்த்தா:
“ஐயய்யோ! அது நரக வாழ்க்கை! எங்களுக்கே ஓர் அனுபவம் உண்டு. திருமணம் ஆன புதிதில் நாங்கள்
இருவரும் ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். அதற்கு அடுத்த வீட்டில் வாழ்ந்தவர் என் கணவரோடு கல்லூரியில் வேலை பார்த்தவர். அங்கு நடந்த சிறு சிறு மனத்தாங்கல்களால் அவர் எங்களை எப்பொழுதுமே எதிரியாகப் பார்த்தார். அவருடைய வீட்டுக்கும் எங்களுக்குமிடையே சுமூகமான சூழல் கிடையாது. இதன் காரணமாக, எங்கள் வீட்டில் ஏதாவது மகிழ்ச்சியான நிகழ்வு நடந்தால், அவர் வீட்டில் இழவு நடந்ததுபோலச் சோகமாக இருந்தார். எங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சினை நடந்ததென்றால், அந்த நாள்களில் குதூகலமாக இருப்பார்.”
அருள்பணி:
“மேலோட்டமான வாழ்வு அந்நியப்பட்ட மனநிலைக்குக் காரணமாக இருக்கிறது. அந்நியப்பட்ட மனநிலையோ பிறரது இன்பத்தை நம் துன்பமாகவும், பிறரது துன்பத்தை நம் இன்பமாகவும் பார்க்க வைக்கிறது.”
கிறிஸ்டினா: (கிண்டலாக) “தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்த்தால் நமக்கு நிறைய எதிரிகள் இருப்பது நல்லதுபோலத் தெரிகிறதே! காரணம், அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம் நாம் இன்பமாக இருப்போம் அல்லவா!” (அனைவரும் சிரிக்கிறார்கள்)
அன்புச்செல்வன்:
“நமக்குப் பிடிக்காதவர்களுக்குத் துன்பம் நேரிட்டால், நாம் இன்பமாக இருப்போம் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்கு இன்பம் நேரிட்டால்?”
அகஸ்டின்:
(சிரித்துக்கொண்டே) “வேறென்ன? நமது வயிறு எரிய வேண்டியதுதான்.”
மார்த்தா:
“இப்படித்தான் பல மனிதர்களது வாழ்வு
போய்க்கொண்டிருக்கிறது.
எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது. ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று, ‘எனக்கு வயிறெல்லாம் எரியுது டாக்டர்! தாங்க முடியலை. எனக்கு மருந்து கொடுங்க’ என்றாராம். மருத்துவர், ‘எப்பொழுதிருந்து வயிற்றெரிச்சல் இருக்கிறது?’ என்று கேட்க, வந்தவர், ‘என் பக்கத்து வீட்டுல பரமசிவம்னு ஒருத்தர் இருக்கிறார். எனக்கும் அவருக்கும் ஆகாது. அவரு என்னைக்குக் கார் வாங்கினாரோ அன்றிலிருந்து எனக்கு வயிற்றெரிச்சல் ஆரம்பித்துவிட்டது’ என்றாராம்.”
கிறிஸ்டினா: “மேலோட்டமான மனநிலையோடு வாழும்போது வரும் இரண்டாவது பிரச்சினை என்ன தந்தையே?”
அருள்பணி:
“சக மனிதர்களை வசதியிலும் பொருளாதாரத்திலும் திறமையிலும் போட்டியாளர்களாகக் கருதி, அவர்களுடன் போட்டி போடுவது. அவர்களை விட ஒருபடி மேலே நாம் இருந்தால்தான் நாம் வாழ்வைச் சரியாக வாழ்வதாக நினைத்துப் புளகாங்கிதம் அடைகின்றோம். ஒருவேளை அவர்களைவிடக் கீழான நிலையில் இருக்க நேரிட்டால், கவலையாலும் கண்ணீராலும் நம் வாழ்வைக் கசப்பாக்கிக் கொள்கின்றோம்.”
அகஸ்டின்:
“நமது மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது ‘அக்கினிச் சிறகுகள்’
என்ற புத்தகத்தில், ‘நான் பத்மபூஷன் விருது பெற்றவுடன், என்னுடன் பணிசெய்த ஒருசில விஞ்ஞானிகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவரை என்னோடு நட்போடு பழகியவர்கள் என் எதிரிகளாக மாறினார்கள்’ என்று
குறிப்பிடுகிறார்.”
மார்த்தா: “மேலோட்டமான மனநிலை மற்றுமொரு முக்கியமான பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். கடவுளின் உறவிலிருந்து அந்நியப்பட்டவர்களாக நாம் மாறுவதே அந்தப் பிரச்சினை. காரணம், நாம் மனிதர்களிடமிருந்து அந்நியப்படும்போது கடவுளிடமிருந்தும் அந்நியப்படுகிறோம்
என்று திருவிவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்லுகிறேன்’ (மத்
25:40) என்று இயேசு கூறியிருக்கிறாரே!”
அருள்பணி: “நீங்கள் கூறுவது மிகவும் சரி! சக மனிதர்களின் உறவிலிருந்து
அந்நியப்படுவது கடவுளிடமிருந்து நாம் அந்நியப்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. கடவுளிடமிருந்து அந்நியப்படுவது பிரபஞ்சத்திலிருந்தே நம்மைத் துண்டித்துக்கொள்வதற்கு இணையானது. ஒரு மரத்திலிருக்கும் ஒரு கிளை தன்னை அம்மரத்திலிருந்து துண்டித்துக்கொள்வதாக நினைத்துக்கொள்வோம். இதன் காரணமாக மரத்திற்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை; ஆனால், துண்டிக்கப்பட்ட கிளை வாடி, வறண்டு ஒன்றுமில்லாமலேயே ஆகிவிடுகிறது.”
அன்புச்செல்வன்:
“என்னைப் பொறுத்த அளவில், இன்றைக்குப் பல மனிதர்கள் பொருளாதார
வசதியில் திளைத்தாலும், உறவைப் பொறுத்த அளவில் சக மனிதர்களிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் பிரபஞ்சத்திலிருந்தும் துண்டிக்கப்பட்ட வாழ்வு வாழ்கின்றனர்.
இதன் காரணமாக மகிழ்வைப் பொறுத்த அளவில் அவர்களது வாழ்வு வாடி, வறண்டு ஒன்றுமில்லாததாக இருக்கிறது.”
அருள்பணி:
“இத்தகைய துண்டிக்கப்பட்ட வாழ்வே, அதாவது பாவ வாழ்வே நம்மில் சோகமாக, தனிமையாக, பயமாக, கவலையாக… என்று பல நிலைகளில் பரிணமிக்கிறது. இதுபோன்ற
பிரச்சினைகள் ஏற்படாமல் வாழ்வை நாம் சரியாகவும் சிறப்பாகவும் வாழ வேண்டுமெனில், அதற்கான ஒரே வழி வாழ்வின் ஆழத்திற்குள் பயணிப்பதே! வாழ்வின் ஆழத்திற்குள் செல்லும் மனிதர்களே ‘நீ வேறு-நான்
வேறு’ என்ற
மனநிலையைக் களைந்துவிட்டு (அதாவது ‘களைகளை’ நீக்கிவிட்டு), உறவு மனநிலையோடு வாழ ஆரம்பிக்கின்றனர். ‘வாழ்வின் ஆதாரம் உறவு’ என்கின்ற உண்மையை, ஒருவர் அனுபவப்பூர்வமாக உணரும்போது மேற்காணும் தீமைகளும் துன்பங்களும் தாமாகவே களையப்படுகின்றன. இவ்வாறு வாழ்வின் ஆழத்திற்குள் பயணிப்பதற்கான மாபெரும் வாய்ப்பை வழங்கும் அருளடையாளமே ஒப்புரவு!”
(தொடரும்)
ஒரு குரல்
ஒலி
குரலுடன் அடையாளப்படுத்தப்படும் உயிர்க் குறியீடு. உலகின் முதல் ஒலியே கடவுளின் குரல்தான். கடவுளின் குரல் உலகைப் படைத்தது. உலகைப் படைத்த கடவுளின் குரல் பல்வேறு சூழல்களில், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மனிதர்கள் வழியாக ஒலித்தது.
ஏதேன்
தோட்டத்தில் தொலைந்துபோன ஆதாம், ஏவாளைத் தேடும் குரலாக ஒலித்தது. ஊர் என்ற கிராமத்தில் வாழ்ந்த குழந்தையற்ற முதியவர் ஆபிரகாமுக்கு வாக்குறுதி கொடுத்து அழைக்கும் குரலாக ஒலித்தது. எகிப்து நாட்டில் தம் மக்கள் படும் அழுகுரலைக் கேட்டு, எரியும் முள்புதரில் தோன்றி மோசேவை அழைத்து, மாற்றத்தின் குரலாக ஒலித்தது. மக்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்றபொழுது, சவுலைத் திருநிலைப்படுத்தி அரச குரலாக ஒலித்தது. எசாயா இறைவாக்கினர் மூலம் மெசியாவை அறிவித்த மீட்பின் குரலாக ஒலித்தது.
இன்று
தம் மகனின் வருகைக்காக வழியை ஆயத்தம் செய்ய, இறைவாக்குகளும் திருச்சட்டங்களும் நிறைவேற திருமுழுக்கு யோவானில் ஒலிக்கிறது. ‘மிதியடிவாரை அவிழ்க்க நான் தகுதியற்றவன்’ என்று
தாழ்ச்சியின் குரலாக, ‘பிறர் மனைவியை வைத்திருப்பது தவறு’ என்று நீதியின் குரலாக, ‘மனம் மாறுங்கள், வழியை ஆயத்தம் செய்யுங்கள்’ என்று
மீட்பின் குரலாக, ‘இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்று
மெசியாவைச் சுட்டிக்காட்டிய குரலாக ஒலித்தது திருமுழுக்கு யோவானின் குரல்.
“கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்ற
இயேசுவின் வார்த்தையை வாழ்வாக்கி, பாலைவனக் குரலாம்
திருமுழுக்கு யோவானின் குரலுக்குச் செவிசாய்ப்போம்; மெசியாவிற்கு வழியை ஆயத்தம் செய்வோம்; பிறருக்காகவும் குரல் கொடுப்போம்!
ஒரு பாலைவனம்
பாலைவனம்
மனமாற்றத்திற்கான ஓர் இடம்; ஒரு மனிதனை வெறுமையாக்கும் இடம்; ஒறுத்தலின் இடம்; தன்னை ஆயத்தப்படுத்தும் இடம். பாலும் தேனும் பொழியும் கானான் தேசம் வந்தடைய நாற்பது ஆண்டுகள் பாலைவன அனுபவம் தேவைப்பட்டது. ஆகார் தன் மகன் இஸ்மாயிலைக் காப்பாற்ற பாலைவனம் தேவைப்பட்டது. யோனா நினிவே மக்களை மனமாற்ற பாலைவன அனுபவம் தேவைப்பட்டது. இறைமகன் இயேசு, தம் இறையாட்சிப் பணியைத் தொடர நாற்பது நாள்கள் பாலைவன அனுபவம் தேவைப்பட்டது. வெட்டுக்கிளியும், காட்டுத்தேனும் உண்டு, தன்னை வெறுமையாக்கி மக்களை மீட்பிற்காகத் தயார் செய்ய ஒரு பாலைவன திருமுழுக்கு யோவானுக்குத் தேவைப்பட்டது.
பாலைவனம்,
நீதியைக் கற்றுக்கொடுத்தது, அநீதியை எதிர்க்கச் செய்தது, உண்மையை உரக்க அறிவிக்கச் செய்தது, பல மக்களைத் திருமுழுக்கினால்
மனம் மாறச்செய்தது, தாழ்ச்சியைக் கற்றுக்கொடுத்தது, மீட்பரை அடையாளப்படுத்தியது.
பாலைவன
அனுபவம் நம்மையும் சீர்படுத்தும் ஆற்றுப்படுத்தும் உறுதிப்படுத்தும் உயிரூட்டும் வாழ்வு கொடுக்கும். மீட்பரைத் தரிசிக்க, மீட்பில் பங்குபெறச் செய்யும். எனவே, திருமுழுக்கு யோவானின் குரலுக்குச் செவிமடுப்போம். பாலைவன அனுபவத்தில் பங்கெடுப்போம். வழியை ஆயத்தம் செய்வோம்.
கிறிஸ்துவை மையப்படுத்தி
வழியை
ஆயத்தம்
செய்தல்
திருமுழுக்கு
யோவானின் தயாரிப்பு இயேசுவை மையப்படுத்தியிருந்தது. இயேசுவை முன்னிறுத்தி இயேசுவுக்கு முன்னோடியாக, மணமகனின் தோழராகத் தன் பணியைத் தொடர்ந்தார். “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் வருபவர் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” என்று
இயேசுவின் திருமுழுக்கை முன்னிறுத்தினார் திருமுழுக்கு யோவான்.
‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்ற பல குழுக்களின் கேள்விக்குப்
பதிலளித்தார் (லூக் 3:10). கூட்டத்தினரிடம், ‘இரண்டு அங்கிகள் உள்ளவர் இல்லாதவரிடம் பகிருங்கள்’ என்று
‘பொருளாதார நீதியை’ வலியுறுத்தினார். வரி
வசூலிப்பவரிடம், “உங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதை விட அதிகமாக வசூலிக்க வேண்டாம்”
என்று ஊழலை எதிர்த்து, ஒருமைப்பாட்டை வலியுறுத்தினார். வீரர்களுக்கு “அச்சுறுத்தல்கள் மூலமாக மிரட்டிப் பணம் பறிக்காதீர்கள்” என்று
‘நீதியை’ வலியுறுத்தினார்.
திருமுழுக்கு
யோவானின் இறையாட்சிப்பணி மீட்பின் திட்டத்திற்கு ஆணிவேராகவும் தனிமனித மற்றும் சமூக மாற்றத்திற்கு அச்சாணியாகவும் திகழ்ந்தது. மெசியாவை எல்லாரும் கண்டுணர வழியை ஆயத்தம் செய்தார். மனமாற்றம், நம்பிக்கை, கீழ்ப்படிதல் இறையாட்சியின் பிரதிபலிப்பாக நம்மிலும் சமூகத்திலும் நிலவவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
திருமுழுக்கு
யோவானின் குரல் நம்மில் ஒலிக்க வேண்டும். நம் சமூகங்களில் ஒலிக்க வேண்டும். நம் இதயத்திலும் உலகிலும் வழியை ஆயத்தம் செய்ய வேண்டும். “வாருங்கள், கடவுளின் ஆட்டுக்குட்டியைக் கண்டு கொள்வோம்”
என்ற திருமுழுக்கு யோவானின் வழியை ஆயத்தம் செய்வோம். ஓங்கிய குரலாக ஒலிப்போம். மாற்றம் நம்மிலும் நிகழட்டும், கிறிஸ்து நம்மில் பிறக்கட்டும்!