news
ஆன்மிகம்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி – 04

3. சிலுவையின் அடியில் இயேசுவோடு ஒன்றித்திருந்த மரியா (Mary was united to Jesus on the Cross)

பல நூற்றாண்டுகளாகவே திரு அவையினுடைய பாரம்பரியமானது, ‘மரியா அவருடைய மகனின் மீட்புப் பணியை மிகவும் நெருக்கமான வகையில் பகிர்ந்து கொண்டார்என்ற கருத்தைப் பெரிதும் பாராட்டியது.

1. “கன்னி மரியாஉண்மையில் கடவுளுடைய மற்றும் மீட்பருடைய தாயாகக் கௌரவிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டார் (இறைத்திட்டத்தில் திருச்சபை எண். 53) என்று சொல்லி இரண்டாம் வத்திக்கான் சங்கமானது மரியாவினுடைய தாய்மைக்கும் மீட்பிற்கும் இடையேயுள்ள தொடர்பை நோக்கி நமது கவனத்தை ஈர்க்கின்றது.

திரு அவையினுடைய போதனையிலும், வழிபாட்டிலும் முதல் நூற்றாண்டிலிருந்தே இயேசு கிறிஸ்துவினுடைய தாயாக மற்றும் அதன் காரணமாக இறைவனின் தாயாகவும் வணங்கப்பட்ட மரியாவினுடைய தாய்மைப் பங்கு பற்றிய தெளிவிற்குப் பிறகு, இடைக்காலங்களில் திரு அவையினுடைய பக்தி மற்றும் இறையியல் சிந்தனையானது மீட்பருடைய பணியில் அவருடைய ஒத்துழைப்பை வெளிச்சமிட்டுக் காட்டியது.

இந்தக் காலதாமதம் ஏற்பட மிக முக்கியக் காரணம் - உண்மையில் திரு அவைத் தந்தையர்களுடைய மற்றும் தொடக்க கால திருச்சங்கங்களுடைய முயற்சியானது,  ‘கிறிஸ்து யார்?’ என்பது பற்றிய விவாதத்தின் மேல் மட்டுமே அதிக கவனம் செலுத்தியது. இதனால் மரியியல் கோட்பாடுகளினுடைய மற்றப் பண்புக்கூறுகளைப் பின்னுக்குத் தள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. திரு அவையின் தொடக்க காலத்திலிருந்தே மரியியலானது கிறித்தியத்திலிருந்தே அது பயணிக்க வேண்டிய திசையைத் தேர்ந்தெடுத்தது. இயேசு கிறிஸ்துதான் கடவுள் என்ற உண்மையை உறுதி செய்வதற்காகவேமரியா இறைவனின் தாய்என்ற கோட்பாடானது எபேசு திருச்சங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதேபோல, மீட்பின் வரலாற்றில் மரியாவினுடைய பங்கு பற்றிய அழுத்தமானதொரு புரிதலும் அன்றே இருந்தது.

2. ஏற்கெனவே, இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த, போலி கார்ப்புவினுடைய சீடராகிய புனித எரோணிமுஸ் மீட்புப் பணியில் மரியாவின் பங்களிப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார். கன்னி மரியாவினுடைய  கீழ்ப்படிதலில் புனித எரோணிமுஸ், கடவுளுடைய மீட்புத் திட்டத்தில் மரியாவின்  பங்களிப்பிற்கான அவரின் சம்மதத்தைப் புரிந்துகொண்டார். அதாவது, மனுக்குலத்தினுடைய சாபத்தின் மீதான நன்மை பயக்கக்கூடிய தாக்கத்தோடு, நாசரேத்தூர் கன்னியின் கீழ்ப்படிதலானது, ஏவாளின் கீழ்ப்படியாமை மற்றும் நம்பிக்கையின்மைக்கு முற்றிலும் எதிராக, வானதூதருடைய செய்தியில் அவர் வைத்த நம்பிக்கையில் கடவுளுடைய மீட்புத் திட்டத்தில் மரியாவின் பங்களிப்பிற்கான அவருடைய ஒப்புதலைப் புனித எரோணிமுஸ் புரிந்துகொண்டார்உண்மையில், ஏவாள் வழியாக இவ்வுலகில் சாவு வந்ததைப் போலவே, மரியா தன்னுடையஆம்என்ற ஒப்புதலின் வழியாக அவருடைய மற்றும் மனுக்குலம் அனைத்தினுடையமீட்பின் காரணியானார் (ஒப்பிடுக. Adv.Haer., III, 22,4; SC 211). ஆனால், அவருக்குப் பிறகு இந்த நிலைப்பாடானது உறுதியான மற்றும் முறையான வகையில் திரு அவையினுடைய தந்தையர்களால் முன்னெடுத்துச் செல்லப்படவில்லை.

மரியா மனுக்குலம் அனைத்திற்குமான ஆன்மிகத் தாய்

இதற்கு மாறாக, இந்தக் கோட்பாடானது ஜான் ஜெயோமீட்டர் என்ற பைசாண்டைன் திரு அவையினுடைய துறவியால் 10-வது நூற்றாண்டில் எழுதப்பட்டமரியாவின் வாழ்வுஎன்ற  நூலில் முதன்முறையாக முறைப்படி விளக்கப்பட்டதுஇந்நூலில் கடவுளுடைய திட்டத்திற்கிணங்க மீட்புப் பணியினுடைய அனைத்து நிலைகளிலும் நம்முடைய மீட்பிற்காக, சிலுவைச்சாவு மற்றும் இயேசுவின் துன்பங்களில் பங்கெடுத்து மரியாவும் அவரோடு இணைந்திருந்தார் என்று அவர் விவரிக்கிறார். மரியா தன்னுடையஒவ்வொரு செயல், உளப்பாங்கு மற்றும் விருப்பத்தில்அவருடைய மகனோடு இணைந்திருந்தார் (ஒப்பிடுக. Life of Mary, Bol. 196, f. 122 v). இயேசுவின் மீட்புச் செயலோடு மரியாவுக்குள்ள தொடர்பானது அவருடைய தாய்மைநிறை அன்பினால் வந்ததாகும். அதாவது, கடவுளுடைய அருளினால் தூண்டப்பட்ட அந்த அன்பானது அவ்வருளின்மீது ஒருவகையான உயர்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. உணர்ச்சியிலிருந்து விடுபட்ட அன்பு மிகவும் இரக்கமானது என்பதை நிரூபிக்கிறது (ஒப்பிடுக. (Life of Mary., Bol. 196, f. 123v).

3. மேற்கத்தியத் திரு அவையில் கி.பி. 1153- இல் இறந்த புனித பெர்னார்து என்பவர் இயேசு கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்விற்கு மரியியல் பார்வையில் பின்வருமானதொரு விளக்கத்தைக் கொடுக்கிறார்: “புனிதத்திற்கெல்லாம் புனிதமான கன்னியே, உம்முடைய மகனை அர்ப்பணி; உம்முடைய கனியை ஆண்டவருக்குக் கொடு; எல்லோருடனுமான எங்களுடைய அமைதிக்காகக் கடவுளுக்கு உகந்த வானகப் பலியைக் கொடு (Serm. 3 in Purif., 2: PL 183, 370).

புனித பெர்னார்தினுடைய நண்பரும் சீடருமான ஜார்த்ரெஸ் நகரத்து அர்னால்டு (Arnold of Chartresஎன்பவர் கல்வாரிப் பலியில் மரியாவினுடைய  காணிக்கை பற்றிய சிறப்பானதொரு விளக்கத்தைத் தருகின்றார். இவர் சிலுவையில் இருந்தஇரண்டு பலிபீடங்களை அதாவது மரியாவினுடைய  இதயம் ஒரு பலிபீடம்; மற்றொன்று இயேசுவினுடைய உடல். இயேசு தம்முடைய சதையைப் பலியாக்கினார்; மரியா அவருடைய ஆன்மாவைப் பலியாக்கினார்என்று வேறுபடுத்திக் காட்டுகிறார். கிறிஸ்துவோடுள்ள ஆழமானதோர் உறவில் ஆன்மிக வழியில் மரியா தன்னையே கையளித்தார் மற்றும் உலக மீட்பிற்காக வேண்டினார்: “தாய் எதைக் கேட்கிறாரோ, அதை மகனும் உறுதிசெய்கிறார் மற்றும் அதையே தந்தையும் தருகிறார்  (De septem verbis Domini in cruce, 3: PL 189, 1694). 

இந்தக் காலகட்டத்தில் மற்ற ஆசிரியர்களும் மீட்புப் பலியில் மரியாவினுடைய  சிறப்பான ஒத்துழைப்பு பற்றிய கோட்பாட்டை விவரிக்கின்றனர்.

4. அதேநேரத்தில், கிறித்தவ பக்தி முயற்சி மற்றும் வழிபாட்டில் மரியாவினுடையகருணைபற்றிய தியானச் சிந்தனையும் வியாகுல அன்னையினுடைய உருவமைப்பில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கல்வாரி நிகழ்விலும் மரியாவினுடைய  பங்கானது மிகவும் மனிதாபிமானமிக்கதொன்றாகச் செய்கிறது மற்றும் நம்பிக்கையாளர்களை அந்த மறைபொருளுக்குள் நுழைவதற்கு உதவுகின்றது. தாயினுடைய இரக்கம் மிகத் தெளிவாக அவருடைய மகனுடைய விருப்பத்தை வெளிப்படுத்துகின்றது.

கிறிஸ்துவினுடைய மீட்புப் பணியைப் பகிர்வதன் வழியாக, மரியாவினுடைய  ஆன்மிகமும் தாய்மையும் அங்கீகரிக்கப்படுகின்றது. கிழக்கத்திய திரு அவையில் மரியா பற்றி ஜான் ஜெயோமீட்டர், ‘நீர் எங்கள் தாய்என்று கூறுகின்றார். ‘நமக்காக அவர் தாங்கிய துன்ப துயரங்களுக்காகமரியாவுக்கு நன்றி தெரிவித்து, மீட்பைப் பெற்றுக்கொண்ட அனைவர் சார்பாகவும் மரியாவினுடைய  தாய்மைநிறை பாசத்தையும் மரியாதையையும் அவர் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றார் (ஒப்பிடுக. Farewell Discourse on the Dormition of Our Most Glorious Lady, Mother of God, in A. Wenger, L’Assomption de la Très Sainte Vierge dans la tradition byzantine, p. 407).

மேற்கத்தியத் திரு அவையிலும் மரியாவினுடைய ஆன்மிகத் தாய்மை பற்றிய கோட்பாடானது வளர்ச்சிபெற்று புனித அன்செல்மோவால் இவ்வாறு உறுதிப்படுத்தப்படுகிறது: “நீ ஒப்புரவு மற்றும் ஒப்புரவாக்கப்பட்டவர்களுடைய மீட்பின் மற்றும் மீட்கப்பட்டவர்களுடையதாயாக இருக்கின்றாய் (ஒப்பிடுக. Oratio 52, 8: PL 158, 957 A).

மரியா இறைவனுடைய தாயாக வணக்கம் செலுத்தப்படுவது நிற்கப்போவதில்லை. மாறாக, அவர் நம்முடைய தாய் என்ற உண்மையானது அவருடனான நெருங்கியதோர் உறவிற்கான வழியை நமக்குள் ஏற்படுத்தி, அவருடைய இறைத்தாய்மைக்கான புதியதொரு பார்வையையும் மரியன்னை வணக்கமானது நமக்குத் தருகிறது.

5. நம்மைப் பொருத்தவரை, மரியாவினுடைய தாய்மையானது பாசப்பிணைப்பை மட்டும் கொண்டதல்ல: ஏனெனில், அவருடைய நற்செயல்கள் மற்றும் பரிந்துரையின் காரணமாக மரியா சிறப்பான வகையில் நம்முடைய ஆன்மிகப் பிறப்பிற்கும், நம்மில் அருள் வாழ்வினுடைய வளர்ச்சிக்கும் உதவுகின்றார். இதன் காரணமாகவே, மரியாஅருளின் தாய்மற்றும்வாழ்வின் தாய்என்றும் அழைக்கப்படுகிறார்.

வாழ்வின் தாயிடமிருந்து நாம் அனைவரும் வாழ்வைப் பெறுகிறோம்!

வாழ்வின் தாய்என்ற பெயரானது ஏற்கெனவே நீசா நகரத்துப் புனித கிரகோரி அவர்களால் அன்னை மரியாவுக்கு வழங்கப்பட்டது. மேலும், இது குறித்து கி.பி. 1157-இல் இறந்த அருளாளர் இக்னி நகரத்து குவேரிக் என்பவரால் பின்வருமாறு விளக்கப்பட்டது: “மனிதர் அனைவரும் வாழ்வைப் பெறும் வாழ்வின் தாய் அவரே; இந்த வாழ்விற்கு அவரே  வாழ்வு கொடுத்து, அந்த வாழ்வை வாழ்ந்த அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் அவர் மறுபிறப்பைக் கொடுக்கின்றார். ஒரே ஒரு நபருடைய பிறப்பில், நாம் அனைவருமே மறுபடியும் பிறந்தோம் (In Assumpt. I, 2: PL 185,188).

13-வது நூற்றாண்டில் எழுதப்பட்டமரியாளே (The Mariale) என்ற ஏடானது கல்வாரியினுடையவேதனையின் வலிபற்றியதோர் உயிரோட்டமான படத்தைப் பயன்படுத்தி இந்த மறுபிறப்புப் பற்றிய பண்பை விவரித்தது. உண்மையில், “அவருடைய புனிதத் திருவயிற்றில், அவர்  திரு அவையின் பிள்ளைகளை இரக்கத்தினால் கருத்தரித்தார் (Q. 29, par. 3) என்கின்றது அந்நூல்.

6. இரண்டாம் வத்திக்கான் சங்கமானது, “மரியா முற்றிலும் தனிப்பட்ட வகையில் மீட்பருடைய பணியில் ஒத்துழைத்தார்என்ற முடிவுக்கு வருகிறது. “இதன் காரணமாகவே அருளின் அடிப்படையில் அவர் நமக்கொரு தாய் (இறைத்திட்டத்தில் திரு அவை, எண். 61) என்று கூறி, மனுக்குலம் அனைத்திற்குமானதோர் ஆன்மிகத் தாயாக அவருடைய மகனுக்கு அருகில் மரியா இருக்கின்றார் என்பதைத் திரு அவையானது உறுதிசெய்கின்றது.

மரியா நம் தாய்: திரு அவையினுடைய அன்பு மற்றும் நம்பிக்கையினால் இன்னும் மிகத் தெளிவாகவும் ஆழமாகவும் விளக்கப்பட்ட ஆறுதல் தரும் இந்த உண்மை, நம் அனைவருடைய ஆன்மிக வாழ்வையும் தாங்கிப்பிடித்தது. மேலும், அது இன்னும் நம் வாழ்வைத் தாங்கிப்பிடிப்பதோடு, நம்முடைய துன்ப நேரத்திலும் நாம் இறைவனில் விசுவாசமும் நம்பிக்கையும் வைக்க நம்மைத் தூண்டுகின்றது.

மூலம்: John Paul II, Mary was united to Jesus on the Cross, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 1 November 1995, p. 11.

news
ஆன்மிகம்
தெய்வீகத் தடங்கள் - 15

அலைகளை எதிர்கொண்டு...

இரவு எவ்வளவுதான் நீண்டிருந்தாலும், விடிந்தே தீரும்என்பது ஓர் ஆப்பிரிக்கப் பழமொழி. எவ்வளவு காலம் இது நீடிக்கும்? இதுபோன்ற ஐயம் நிறைந்த கேள்விகள் எரிமலைகள் போல என் சிந்தனையின் ஆழத்தில் குமிழியிடும். ‘அதுவிரைவில் முடிந்து விடுமா? நான் அனுபவித்த / அனுபவிக்கும் அனைத்தும் தேவைதானா? இப்படிப்பட்ட சவால்கள் நிறைந்த சூழலை நான் ஏன் எதிர்கொள்ள வேண்டும்? ஏதாவது மாற்றுவழி உண்டா? போதும்போதும்... யாரும் எதுவும் எனக்கு நேரடியான உடனடியான விடை தருவதில்லை. நான் முரணான உணர்வுகளால் நிறைந்திருக்கிறேன். நான் மரத்துப் போய் உணர்வின்றி இருக்கிறேன். என்னுடைய ஆழமான நம்பிக்கைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்கின்றன. என் விரக்தி அதிகரிக்கிறது; நான் நம்பிக்கை இழந்து போகிறேன்.

ஆனால், ஐயமும் கவலையும் என் சிந்தனையை அலைக்கழிக்கத் தொடங்கும்போது எனது ஆன்மா மற்றொரு பக்கத்தை ஆராயக் கேள்விகளைக் கேட்கிறது. எனது திட்டங்களினாலேயே நான் அழுத்தங்களுக்கு உட்படுகிறேனா? பத்து ஆண்டுகளை இறுதியென்று கணக்கிடுவதை நான் ஏன் விட்டுவிடக்கூடாது? சுவர்களை நோக்கி என்னைத் தள்ளிக்கொள்ள என்ன அவசரம்? தகுதியான நேரம் எது என்று யார் தீர்மானிப்பதுஇந்த நிலைக்குக் கொண்டு வரவும், இந்த நீண்ட வலிமிகுப் பயணத்தை மேற்கொள்ளவும் எது காரணம்? இந்த ஆன்ம சோதனைக் கேள்விகள் மெய்நிலைக்கு நான் வரக் காரணமாயின.

படைத்தவர் இயற்கையைச் சில இயக்கங்கள் உள்ளேயே இருக்குமாறு வடிவமைத்திருக்கிறார். மனித உடல் அதற்குக் குணமாக்கல் தேவைப்படும்போது, அதனைச் செய்ய தன்னுள்ளேயே உள்நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. இந்த மெய் நிலையை ஏற்கும் உலகும்காலம் குணமளிக்க மிகச்சிறந்த மருந்துஎன்று கூறுகிறது.

எனது கணிப்புகளும், எளிய வழிகளும் என்னுடைய தவறான எதிர்பார்ப்புகளால் வருகின்றன. இந்த எதிர்பார்ப்புகள் வெளியுலக நடப்புகளோடு ஒப்பிடுவதால் உருவானவை. எனது உடைந்த உயிரின் தொடுவானத்தில் தெய்வீகத் தடங்களை நான் ஏன் தேடவில்லை? எனது ஆன்மா மனத்தைக் கட்டும் எதிர்வினையுடன் எழுகிறது. உணர்வு நரம்பின் ஒவ்வொரு செல்லும் புதிதாக வளரும்போது, ஒவ்வொரு கணமும் புது காலை விடிகிறது. வளர்தலும், சீராதலும் என்னுள் ஒரு தொடர் நிகழ்ச்சி. செல்கள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை எனக்கு அன்றாடம் சத்தூட்டி, நான் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க உதவுகிறது; இந்த மெய்நிலைகளைப் புதிய கண்ணோட்டத்தோடு பார்ப்பதற்கு என்னுள் மிகப் பெரும் வலிமை தேவைப்படுகிறது.            

எனது முன்னுரையில் திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா கூறியதை மேற்கோள்காட்டியிருந்தேன். அவல நிகழ்வுகள் வலிமைக்கான வளங்களாகவே இருக்கவேண்டும். எப்படிப்பட்ட அறைகூவல்களைச் சந்திக்க நேரும்போதும், நமது அனுபவங்கள் துன்பம் தரும்போதும் நம்பிக்கையை இழப்பதுதான் பேரிடர். எனவே, நான் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையை விடாமல் பற்றிக்கொள்ள வேண்டும். வாழ்க்கை எனக்கு அளிக்கக் காத்திருக்கும் அனைத்தையும் மகிழ்ச்சியோடும் மரியாதையோடும் ஏற்கத் தேவையான வலிமையை மறுபிறப்படைந்த எனது கண்ணோட்டங்கள் கொடுக்கின்றன. துன்பத்திலிருந்து மீண்டுவராவிட்டால் வாழ்க்கை வீணாகி விடும். அதனை ஐயம் எனும் காற்று அணைக்க முயலும்போது, நம்பிக்கை என்ற தீயை ஆன்மாவினுள் மீண்டும் பற்றவைக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னர், ஒருவர் என் உடல் நிலை குறித்து விசாரித்தார். குறிப்பாக வலது கை பற்றிக் கேட்டார். நான், “அதற்கு இன்னும்  சிறிது காலம் பிடிக்கும். சில ஆண்டுகள்கூட ஆகலாம்என்று சொன்னேன். உடனே அவரிடமிருந்து பதில் வந்தது: “உங்களுக்குக் கடவுளிடம் நம்பிக்கை இல்லை; இல்லையென்றால் இதற்குள் உங்களுக்குப் புதுமையாகக் குணமாயிருக்கும்என்றார்அவருடைய விடை என்னுள் புதுமைகள், அற்புதங்கள், அருங்குறிகள் பற்றிப் புரிந்துகொள்ளும் ஆசையைத் தூண்டிற்று. என்னுடைய விசுவாசம், கடவுளில் நம்பிக்கை ஆகியவற்றின் தாக்கங்களைப் புரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

குருத்துவத்திற்கு என்னுடைய நீண்ட தயாரிப்பின்போது வெவ்வேறு மெய்நிலைகளை அறிய வாய்ப்பு கிடைத்தது. மக்களோடும், சூழ்நிலைகள், கள நிலவரங்கள் ஆகியவற்றோடும் தொடர்பு கொண்டது தனிமனிதமாக என் வளர்ச்சியில் நிரந்தரத் தாக்கத்தை ஏற்படுத்திற்று. இந்த வளர்ச்சி எனது உடல், அறிவு, உணர்ச்சி, உள்ள, ஆன்மிக வாழ்வில் வளம் கூட்டியது. என்னைக் குருவாக உருவாக்கிய அந்த ஆண்டுகளில் நான் விழுமியங்கள் பலவற்றை எனதாக்கிக் கொண்டேன். இவற்றோடு விபத்தில் நான் கற்றவையும் சேர்ந்து என்னுள் வலுவான மனத்திண்மையையும், எந்தத் தடைகளையும் வெற்றிகொள்ளும் உறுதிப்பாட்டையும், எல்லாத் துன்பங்களையும் தாங்கிக் கொள்ளும் ஆன்மிக நம்பிக்கைகளையும் தந்தன.

கங்கா மருத்துவமனையில் மருத்துவர்கள் அவர்களது நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த முறைகளை நான் பெரிதும் மதிக்கிறேன். எலும்பு நோய், நுண் அறுவை சிகிச்சைத் துறைகளில் இருந்த மருத்துவர்கள் பேரா. ராஜா சபாபதி, ஹரி வெங்கட்ரமணி. ஆர். ரவிந்திர பாரதி, பர்வீன் பரத் வாஜ், முதலானோர் பலதரப்பட்ட நோய்களுக்குச் சிகிச்சை அளித்தார்கள். கடந்த பத்தாண்டுகளில் அவர்கள் எப்போதும் புன்னகை செய்துகொண்டு, நோயாளிகளை உற்சாகப்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய அன்பான நடத்தையும், ஊக்கமூட்டும் தன்மையும் அவர்களது நோயாளிகள்முடியாதுஎன்று தோன்றியவற்றைக் கூட முயற்சி செய்துபார்க்கத் தூண்டின. நோயாளிகளின் முதுகில் தட்டி அவர்கள் வருங்காலத்தில் நம்பிக்கையைக் காட்டினார்கள். அப்படிப்பட்ட மனப்போக்குகளும், செயல்களும், புதுமைகளும், அற்புதங்களும் நடக்குமாறு செய்தன.

(தொடரும்)

news
ஆன்மிகம்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 03

2. மரியா இறைவனின் கன்னித்தாய்

(Mary is the Virgin Mother of God)

நாள்: 13 செப்டம்பர் 1995

தொடக்கத்திலிருந்தே திரு அவையானது மரியாவின் கன்னித் தாய்மையை அதாவது, அவர் தூய ஆவியாரால் கருத்தரித்ததை அங்கீகரித்து வருகின்றது.

1. ‘இறைத்திட்டத்தில் திரு அவைஎன்ற சங்க ஏட்டில் திருச்சங்கமானது, “தலைவராகிய கிறித்துவோடும், அவருடைய தூயோர் அனைவரோடும் ஒன்றித்து, நம் கடவுளும் ஆண்டவருமான இயேசு கிறித்துவின் தாயும், என்றும் கன்னியுமான மாட்சிமிக்க மரியாவுக்கு, நம்பிக்கை கொண்டோர்கள் முதற்கண் வணக்கம் செலுத்த வேண்டும் (இறைத் திட்டத்தில் திரு அவை, எண். 52) என்று கூறுகின்றது. இச்சங்க ஏடானது இந்த வார்த்தைகளை உரோமைத் திருப்பலியிலிருந்து பயன்படுத்துகின்றது. இதன் வழியாக மரியாவினுடைய இறைத்தாய்மையின் மீதான நம்பிக்கை கிறித்தவச் சிந்தனையில் முதல் நூற்றாண்டுகளிலிருந்து எவ்வாறு உள்ளது என்பதை வலியுறுத்துகிறது.

புதிதாகப் பிறந்த திரு அவையில் மரியாஇயேசுவின் தாய்என்ற பெயரோடு நினைவுகூரப்படுகின்றார். திருத் தூதர் பணிகள் நூலில் அதன் ஆசிரியராகிய தூய லூக்காவும் நற்செய்திகளில் சொல்லப்பட்டிருப்பதோடு மிகவும் பொருந்தக் கூடிய பெயராகிய இந்தப் பெயரையே கொடுக்கின்றார். மாற்கு நற்செய்தியாளருடைய விவரிப்பின்படி, “இவர் மரியாவினுடைய  மகன் அல்லவா?” என நாசரேத்து ஊரார் வியக்கின்றனர் (மாற் 6:3). மேலும், “இவருடைய தாய் மரியா அல்லவா?” (மத்13:55) என்பதுதான் மத்தேயு நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற கேள்வியாக இருக்கின்றது. மரியாவின் தாய்மை திரு அவையையும் தொடர்புபடுத்துகின்றது

2. சீடர்களுடைய பார்வையில் விண்ணேற்பிற்குப் பின் அவர்கள் கூடி வந்தபொழுதுஇயேசுவினுடைய தாய்என்ற பெயர் அதனுடைய முழு அர்த்தத்தையும் பெறுகின்றது. அவர்களைப் பொறுத்தவரை மரியா ஒரு தனித்துவமான நபர். மரியா மனுக்குலத்தினுடைய மீட்பரைப் பெற்றெடுப்பதற்கெனத் தனிப்பட்டதோர் அருளைப் பெற்றிருந்தார். அவர் நெடுங்காலமாக இயேசு அருகிலேயே வாழ்ந்தார். மேலும், அன்புச் சீடருக்கும், அவர் வழியாக ஒட்டுமொத்த திரு அவைக்கும் ஒருபுதிய தாய்மையைகொண்டு வர சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவால் கல்வாரி மலையில் மரியா அழைக்கப்படுகின்றார்.

இவைகளினால் இயேசுவை நம்புகிறவர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுகிறவர்களுக்குஇயேசுவினுடைய தாய்என்பது ஒரு வணக்கத்திற்குரிய மற்றும் பெருமைக்குரிய பெயராகும். மேலும், இத்தகைய பெயர் திரு அவையினுடைய வாழ்விலும், நம்பிக்கையிலும் என்றும் நிலைத்திருக்கும். குறிப்பாக, இந்தப் பெயரின் வழியாக இயேசுவின் மனித இயல்புக்கு ஏற்ப, ஆவியில் அவரைப் பெற்றெடுத்த பெண்ணின் பங்கை ஒப்புக்கொள்ளாமல் அவருடைய தோற்றத்தைக் குறிப்பிட முடியாது என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர்.

அவருடைய தாய்மைப் பங்கு திரு அவையினுடைய பிறப்பையும் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறு, இயேசுவினுடைய வாழ்வில் மரியாவினுடைய  பங்கை நினைத்துப் பார்க்கையில், நம்பிக்கையாளர்கள் அவர்களுடைய சொந்த ஆன்மிகப் பயணத்தில் ஒவ்வொரு நாளும் அவருடைய உன்னதமான உடனிருப்பைக் கண்டு கொள்வர்.

3. தொடக்கத்திலிருந்தே, திரு அவையானது மரியாவினுடைய கன்னித் தாய்மையை அங்கீகரித்தது. இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகள் மரியாவினுடைய  கன்னித் தாய்மையை நாம் புரிந்துகொள்ள உதவுவதால், தொடக்ககால கிறித்தவக் குழுமங்கள், மீட்பருடைய கருத்தரிப்பு மற்றும் பிறப்பு நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத சந்தர்ப்பங்களைப் பற்றிய மரியாவின்  நினைவுகளைச் சேகரித்தனர். குறிப்பாக, கிறித்து பிறப்பு அறிவிப்பு பற்றிய தொகுப்பானது உயிர்த்த கிறித்துவின் மண்ணுலக வாழ்வின் தொடக்கத்தோடு தொடர்புடைய நிகழ்வுகள் பற்றிய ஆழமான அறிவைப் பெறவேண்டுமென்ற சீடர்களுடைய விருப்பத்திற்குப் பதிலளிக்கின்றது. இதன் இறுதிப் பகுப்பாய்வில், தூய ஆவியாரின் செயல்பாட்டின் வழியாகக் கன்னி கருத்தரிப்பின் மறையுண்மையின் திருவெளிப்பாட்டினுடைய தோற்றத்தில் மரியா இருக்கின்றார்.

இயேசுவின் இறைத்தோற்றத்தைக் காட்டும் இந்த மறையுண்மையானது, அதன் முக்கியத்துவத்திற்காக முதல் கிறித்தவர்களால் உடனடியாகப் புரிந்துகொள்ளப்பட்டது மற்றும் அவர்களின் நம்பிக்கையின் முக்கிய உறுதிமொழிகளில் சேர்க்கப்பட்டது. சட்டத்தின்படி யோசேப்பின் மகனாகிய இயேசு, உண்மையில் தூய ஆவியின் தலையீட்டால் பிறந்ததனால், தமது மனித இயல்பில் மரியாவினுடைய  மகன் மட்டுமே; ஏனென்றால், அவர் மனிதனின் பங்களிப்பு இல்லாமல் பிறந்தவர்.

இயேசு இறைவனுடைய மகன் என்னும் தன்மையைக் கொண்டிருந்தார். இவ்வாறு மரியாவினுடைய  கன்னித்தன்மை ஒரு தனிப்பட்ட மதிப்பைப் பெறுகிறது என்பதற்கு கன்னிப் பிறப்பே அடையாளமாக இருப்பதால், இயேசுவினுடைய பிறப்பானது அவர் இறைமகன் என்ற மறையுண்மைக்கு   ஒரு புதிய வெளிச்சத்தைத் தருகின்றது.

திரு அவைத் தந்தையர்களுடைய நம்பிக்கையினால் அறிவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட கன்னித் தன்மையை, நாம் ஒருபோதும் இயேசுவினுடைய அடையாளத்திலிருந்து பிரிக்க முடியாது. கன்னி மரியாவிடமிருந்து பிறந்ததினால் உண்மையான கடவுள் மற்றும் உண்மையான மனிதன் என்று நீசேன் நம்பிக்கை அறிக்கையில் நாம் அறிவிப்பதைப் போன்று மரியா மட்டுமே தாயாக இருக்கின்ற ஒரு கன்னியாகின்றார். நாசரேத்து கன்னியினுடைய தனிச்சிறப்புமிக்க இணை-உடனிருத்தலானது இந்த இரண்டு கொடைகளால் (தாய் மற்றும் கன்னி) கிறித்தவர்கள் அவருடைய தாய்மையைக் கொண்டாடி மரியாவைகன்னிஎன்றழைக்க இட்டுச் செல்கின்றது.

இவ்வாறு, மரியாவினுடைய  கன்னித்தன்மையானது, ஆண்டவரால் அழைக்கப்பட்ட அனைவராலும் வாழப்பட வேண்டிய கன்னிமை வாழ்வு என்பது கிறித்தவக் குழுமத்தில் பரவுவதற்கான தொடக்கத்தைத் தருகின்றது.

கிறிஸ்துவின் முன்மாதிரியில் அதன் உச்சத்தை அடையும் இந்தச் சிறப்பு அழைப்பானது ஒவ்வொரு காலகட்டத்திலும் மரியாவில் உத்வேகத்தையும் மாதிரியையும் காண்கின்ற அளவிட முடியாத ஆன்மிகச் செல்வத்தைத் திரு அவைக்குத் தருகின்றது. இறைமக்கள் பக்தியின் வெளிப்பாடேஇறைவனின் தாய் மரியா.’

4. ‘இயேசு கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார்என்ற நிலைப்பாடானது, ஏற்கெனவே இந்த நிகழ்வின் ஒரு வெளிப்படையான மறையுண்மையை வெளிப்படுத்துகின்றது. இயேசுவினுடைய இறை மகனுக்கான மறையுண்மையில் மட்டுமே இதை மிக முழுமையாக  நாம் காணமுடியும். மரியாவினுடைய  இறைத்தாய்மையின் மறையுண்மையானது இந்தக் கிறித்தவ நம்பிக்கைக் கோட்பாட்டிற்கு மைய வாக்கியமாக நெருக்கமான முறையில் இணைந்திருக்கின்றது. அவர்உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாகஇருக்கின்ற வார்த்தை மனுவுருவானவருடைய தாய் ஆவார்.

இறைவனின் தாய்என்ற பெயரானது ஏற்கெனவே மத்தேயு நற்செய்தியில்இம்மானுவேலின் தாய்அதாவதுகடவுள் நம்மோடு (ஒப்பிடுக. மத் 1:23) என்று அதற்கு இணையான ஒரு பெயரோடு இணைக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக நடந்த தொடர் சிந்தனைகளுக்குப் பிறகே கொடுக்கப்பட்டது. எகிப்தில் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறித்தவர்கள்தான் மரியாவை தேயோடோகோஸ் (Theotokos), அதாவதுஇறைவனின் தாய்என்று அழைத்தனர்.

கிறித்தவ மக்களின் பக்தியில் மிகவும் பரவலாக எதிரொலிக்கின்ற இந்தப் பெயரோடு மரியா அவருடைய உண்மையான தாய்மை நிலையில் பார்க்கப்படுகின்றார். அவருடைய மனித இயல்பிற்கு ஏற்றாற்போல கன்னித் தன்மையில் யாரைப் பெற்றெடுத்து தாயன்போடு வளர்த்தாரோ, அந்த இறைமகனின் தாயாக மரியா இருக்கின்றார். இவ்வாறு, மனித குலத்தின் தலைவிதியை மாற்றியமைக்க வந்த இயேசுவினுடைய மனித  வளர்ச்சியில் மரியா தமது பங்கை அளிக்கிறார்.

5. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், மரியாவுக்கான மிகப் பழமையான செபமானஉமது பாதுகாவலின் கீழ்Sub Tuum Praesidiumஎன்ற பாடலில் மரியாTheotokosஅதாவதுஇறைவனின் தாய்என்ற பெயரினால் அழைக்கப்படுவதைக் காணலாம். இந்தப் பெயர் உண்மையிலேயே இறையியலாளர்களுடைய சிந்தனையிலிருந்து வந்த ஒன்று அல்ல; மாறாக, கிறித்தவ மக்களுடைய இறைநம்பிக்கையின் உந்துதலிலிருந்து வந்த ஒன்றாகும். இயேசுவை யாரெல்லாம் கடவுளாக ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் மரியாவைஇறைவனின் தாய்என்று அழைக்கின்றனர். மேலும், வாழ்க்கையின் சோதனை நேரங்களில் அவருடைய வல்லமைமிக்க உதவியைப் பெறுவதில் நம்பிக்கை வைக்கின்றனர்.

கி.பி. 431-இல் எபேசு நகரில் நடந்த திருச்சங்கம் அதிகாரப்பூர்வமாக மரியாவுக்குஇறைவனின் தாய்என்ற கோட்பாட்டை உண்மைக் கடவுளாகவும், உண்மை மனிதனாகவும் இருக்கின்ற ஒரே ஆளான கிறித்துவைக் குறிக்கின்ற வகையில் வரையறை செய்தது.

திரு அவை மரியாவின்  தாய்மையில் கொண்டிருக்கின்ற நம்பிக்கையைத் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தேஇயேசுவின் தாய், ‘கன்னித் தாய்மற்றும்இறைவனின் தாய்என்ற இந்த மூன்று பெயர்களில் விவரிக்கின்றது. அதாவது, மரியாவினுடைய தாய்மையானது மனுவுருவாதல் என்ற மறையுண்மையோடு மிக நெருங்கிய விதத்தில் இணைக்கப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது. இவை கிறிஸ்துவினுடைய அடையாளத்தை வரையறுக்க உதவக்கூடிய மற்றும் மக்களுடைய பக்தியோடு இணைக்கப்பட்ட கொள்கையினுடைய உறுதிப்பாடுகள் ஆகும்

மூலம்: Pope John Paul II, Mary is the Virgin Mother of God, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 20 September 1995, p. 7.

news
ஆன்மிகம்
இறைவேண்டலின் பரிமாணங்கள் – 29

ஊடக நோன்பு வேண்டல்

காலத்தின் அறிகுறிகளை உய்த்துணர்ந்து, அதற்கேற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ள அழைப்பு விடுத்ததுஇன்றைய உலகில் திரு  அவைஎன்னும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் கொள்கைத் திரட்டு. அதற்கேற்ப நமது வாழ்விலும், இறைவேண்டலிலும் தேவையான மாற்றங்களைச் செய்வது நம் கடமையாகும்.

நமது இறைவேண்டல் வாழ்வில் உண்ணா நோன்பு, புலால் நோன்பு இரண்டையும் நூற்றாண்டுகளாக நாம் கடைப்பிடித்து வருகிறோம். ஆனால், நாம் வாழும் இந்நாள்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய மற்றொரு நோன்புதான் ஊடக நோன்பு (Media Fast).

தொலைக்காட்சி, அலைப்பேசி, சமூக ஊடகங்கள் அனைத்திலும் எத்தனையோ நன்மைகள் இருப்பதை மறுக்க முடியாது. நமது திரு அவையின் நற்செய்திப் பணியேமாதா தொலைக்காட்சிமற்றும் சமூக ஊடகங்கள் வழியாக வெற்றிகரமாக நடைபெறுவது நாம் அறிந்ததே. இருப்பினும், அவற்றின் தீமைகளும் பெரியதே.

இன்று தொலைக்காட்சி, அலைப்பேசி, இணையதளம், வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக ஊடகங்கள் போன்றவற்றுக்குப் பலரும், குறிப்பாக இளையோர் அடிமையாகி, ‘இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாதுஎன்ற நிலைக்கு வந்துவிட்டனர். அந்நிலையிலிருந்து அவர்களால் மீள முடிவதில்லை. மேலும், இவை அறநெறிக்கும், ஒழுக்கத்திற்கும் மாறான செய்திகளையும், காணொளிகளையும், திரைப்படங்களையும் கொண்டுவந்து நமது மனத்தையும், மனச்சான்றையும் மாசுபடுத்துகின்றன. தவறுகளை நியாயப்படுத்துகின்றன. ‘எல்லாரும் செய்கிறார்கள், நான் செய்தால் என்ன?’ என்னும் மனநிலை வளர்கிறது. வாழ்வியல் சிக்கல்கள் பல நேர்கின்றன. குடும்ப உறவுகள் சிதைகின்றன. அனைத்திற்கும் மேலாக, தனியாகவும், குடும்பமாகவும் இறைவேண்டல் செய்வதற்கு ஊடகங்களே பெரும் தடையாக இருக்கின்றன. எனவே, நாம் ஊடக விழிப்புணர்வு கொண்டு கவனமாக இருக்க வேண்டும் என்பதனை ஊடகங்களே நமக்குச் சொல்லித் தருகின்றன. தலை சிறந்த ஊடகமாகிய திருவிவிலியம் இவை பற்றியெல்லாம் நம்மை எப்போதோ எச்சரித்துவிட்டது. மானிட மகன் வரும் நாள் பற்றி கூறிய இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும், இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காத வாறும் எச்சரிக்கையாய் இருங்கள் (லூக்கா 21:34) என்று மொழிந்தார். இன்றைய ஊடகங்களைப் பயன்படுத்துகின்றவர்களுடைய உள்ளங்கள் மந்தம் அடைகின்றன என்னும் மாபெரும் ஆன்மிக-உளவியல் உண்மையை ஆண்டவர் இயேசு நமக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

எனவே, இன்றைய நாள்களில் நமக்குத் தேவையான ஒரு நோன்பு ஊடக நோன்பு. “அனைத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள். நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா வகையான தீமைகளையும் விட்டு விலகுங்கள் (1தெச 5:21-22) என்று அறிவுறுத்துகிறது இறைமொழி. எனவே, சமூக ஊடகங்களை நாம் பயன்படுத்தும் விதம் குறித்து ஆய்வு செய்து, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நல்லதைப் பற்றிக்கொண்டு, தீமையை விலக்க ஊடக நோன்பைக் கடைப்பிடிப்போம்.

வெள்ளிதோறும் ஊடக மறுப்பு. இயேசுவின் இறப்பைக் குறிக்கும் வெள்ளிக் கிழமைகளில் நாம் ஏதேனும் ஒறுத்தல் செயல்களைச் செய்ய ஊக்குவிக்கிறது கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி. எனவே, வெள்ளிதோறும் உண்ணா நோன்பு, புலால் நோன்பு இவற்றுடன் ஊடக நோன்பையும் கடைப் பிடிக்கலாம். தொலைக்காட்சிப் பெட்டியை அன்றைய நாள் முழுவதும் மூடிவிடலாம். திறன் பேசியைப் பணி தொடர்பாக (Ousibess calls) மட்டுமே பயன்படுத்தி, சமூக அழைப்புகளைத் (Social calls) தவிர்க்கலாம். தகவல் தொடர்புக்காக அன்றி விளையாடுவதற்கோ, காணொளிக் காட்சிகளைப் பார்ப்பதற்கோ, சமூகத் தளங்களின் வழி நச்சுக்கருத்துகளைப் பரப்புவதற்கோ அலைப்பேசியைப் பயன்படுத்தாது பார்த்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறே, வெள்ளிதோறும் இணையதளம் பயன்படுத்தாமை, தகவல் தொடர்புக்கு மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துவது, ஆபாசத் தளங்களை அறவே தவிர்ப்பது போன்றவற்றின் வழியாக இணையதள நோன்பையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். “இழிவான எதையும் என் கண்முன் வைக்கமாட்டேன் (திபா 101:3) என்று சூளுரைத்த இறையடியார்போல, நாமும் இழிவான நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி, அலைப்பேசி, இணையதளம் வழியாகக் கண்ணுறாமல் நம்மைக் காத்துக்கொள்வோமாக!

இறைவேண்டல் வாழ்வுக்கும், ஊடக நோன்புக்கும் நேர்மறையான தொடர்பு உள்ளது. ஊடக மறுப்பைக் கடைப்பிடித்து, ஊடக நோன்பு பெருகப் பெருக, இறைவேண்டல் ஆர்வம் கூடுவதை உணரலாம். இறைவேண்டலுக்கான நேரம் அதிகரிக்கும். நம் மனத்திலும், ஆன்மாவிலும் ஊடகத்தின் தாக்கம் குறைவதால், நம் இறைவேண்டலின் தரமும் அதிகரிக்கும். ஊடகப் பயன்பாடு குறையக் குறைய உறவுகள் மேம்படுவதால், நம் வாழ்வும் வளம்பெறும்.

இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைவதாக. அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் (உரோ 12:2) என்னும் இறைமொழியை இதயத்தில் ஏற்று, இன்றைய காலத்திற்குத் தேவையான தொலைக்காட்சி நோன்பு, அலைப்பேசி நோன்பு, இணையதள நோன்பு என்னும் முப்பெரும் ஊடக நோன்புகளைக் கடைப்பிடித்து, நம் அருள்வாழ்வையும், ஆளுமையையும் மேம்படுத்திக்கொள்வதே விழிப்படைந்தோருக்கான வெற்றியின் செயல்.

news
ஆன்மிகம்
நிறைவின்மை என்னும் நோய்

இன்றைய உலகில்போதும்என்ற நிறைவு காண, எல்லையே இல்லாத ஒரு நிலைதான் மிகவும் அச்சத்தை விளைவிக்கும் காரணியாக உள்ளது. ‘இன்னும் வேண்டும்என்கிற வெறி நம்மை வருத்தத்தின் விளிம்புக்கு நகர்த்திச் செல்லும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும் ஒன்றேபோதும்என்ற நிறைவு. செல்வம், கௌரவம், வலிமை மூன்றையும் சுவைக்கச் சுவைக்க அபாயகரமானதாக மாறிக்கொண்டே செல்லும். நவீன முதலாளித்துவம் இருவகையான சார்பு நிலைகளை உடையது. ஒன்று, செல்வத்தை உண்டாக்குவது. மற்றொன்று, பொறாமையை உண்டாக்குவது. பெரும்பாலும் இரண்டும் இணைந்தே பயணிக்கின்றனஎன்கிறார்பணம் சார் உளவியல்நூலின் ஆசிரியர் மார்க்கன் ஹெளஸ்ஸேல்.

போதும்என்கிற மனமின்மையும், ‘இன்னும் கொஞ்சம்என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்பும் எங்கும் நம்மிடம் உள்ளதையும், நமக்குத் தேவையானதையும் பணயம் வைத்து, நம்மிடம் இல்லாததையும், நமக்குத் தேவையற்றதையும் சேர்க்கப் பாடுபடுகிறோம் என்பதே எதார்த்தம். இதில் ஏற்படும் நிறைவின்மை இறுதியில் ஏமாற்றத்தையும், விரக்தியையும் விளைவிக்கின்றன. ‘போதும்என்ற நிறைவு இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது, மகிழ்ச்சியற்றது. நிறைவு நோக்கி புறந்தேடும் எதுவும் நிலைக்கப் போவதுமில்லை; நிரந்தர நிம்மதியைத் தரப் போவதுமில்லை.

முதலாளித்துவச் சிறையில் நாம்: நம்மிடம்போதும்என்கிற நிறைவின்மையால், வெளிப்புறச் செயல்களில் காட்டும் ஆர்வமும் குறிப்பாக பணம், பதவி, அங்கீகாரம் என்பதான அணுகுமுறையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இரண்டு நிலைகளில் இதனைப் பட்டியலிடலாம்: 1. மட்டுமீறிய எதிர்பார்ப்புகள், 2. எதிலும் சாதனை அணுகுமுறை.

உண்மையான மகிழ்ச்சி என்பது எதிர்பார்ப்புகளை இழத்தலிலே ஏற்றம் பெறுகிறது. நவீன முதலாளித்துவச் சிறையில் நாம் சிக்குண்டுள்ளோமா என்பதனை எப்படிக் கண்டுகொள்வது? நிச்சயம் நமது எண்ணங்களும், செயல்களுமே அதற்குச் சான்று! 2014 -ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று வத்திக்கானில் பணியாற்றும் அனைவருக்குமான கிறிஸ்து பிறப்பு விழா தயாரிப்புக்காகத் திருத்தந்தை ஆற்றிய மறையுரையில் குறிப்பாக, குருக்களைப் பாதித்துள்ள பல்வேறு நோய்களைப் பட்டியலிட்டார். அவற்றைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்துவதே போதுமானதுசின்னச் சின்னக் காரியங்களில் நிறைவின்மை. பெரிது நோக்கி நகர்த்தும் எதுவும் மட்டுமீறிய எதிர்பார்ப்புகளின் விளைவே! பதவி, செல்வம், புகழ் மூன்றையும் சுவைக்கச் சுவைக்க அபாயகரமானதாக மாறிக்கொண்டே செல்லும் என்பது நியதி. நமது நிர்வாகப் பொறுப்புகளில் நாம் செயல்படும் முறைகளும், நமது எண்ணங்களும் எதனை மையம்கொண்டு செயல்படுகின்றன?

நானே எல்லாம்என்கிற ஆணவ நோய் உள்ளதா? தரப்படும் பணிகளில் மற்றவர்களோடு ஒருங்கிணைந்து செயல்படுவது கடினமாக உள்ளதா? தன்னைப் பற்றியே பெருமையாகப் பேசிக்கொள்ளும் தற்பெருமை மனநிலை உள்ளதா?

மற்றவர்களைக் குறித்துப் புறணி பேசும் மற்றும் புறங்கூறும் பழக்கம் இயல்பாக உள்ளதா? தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை எதற்கும் துதி பாடும் போக்கு உள்ளதா? எதையும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்யும் மனப்பாங்கு உள்ளதா பொருள் குவிக்கும் பேராசை உள்ளதா? எதார்த்த உதாரணங்களோடு சற்று சிந்திப்போம்.

களைகட்டும் மரணக் கலாச்சாரம்: முந்தைய நபரைவிட கூடுதலாக, மாறுபட்டுச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் நல்லதாயின் வரவேற்கத்தக்கதே. அதைவிடுத்து, முந்தையவரைவிட நற்பெயர் வாங்க வேண்டும்; எப்படியாவது முன்னவர் நற்பெயருக்கு மறைமுகமாகக் களங்கம் வருவிக்க வேண்டும்; அதனால், தனக்குப் புகழ் சேர வேண்டும் என்கிற எத்தனிப்பில் ஒருவர் செயல்பட ஆரம்பித்தால், அது தவறான அணுகுமுறையே. இத்தகு மனநிலைகளால் வெறுப்பும், புரிதலின்மையும், கசப்புணர்வுகளுமே கூடுகட்டிக்கொள்ளும்.

குறிப்பாக, சாதனை நோக்கிச் செயல்படும் அருள்பணியாளர்களால் மக்களின் மனநிலைகளிலும் அருள் வாழ்வு என்பதனை இரண்டாம் பட்சமாக்கிய மனநிலை உருவாகி உள்ளது. இது எவ்வளவு அபாயகரமானது! மக்களின் உரையாடல்களைக் கவனியுங்கள். ‘இவரைவிட முந்தையவர் நன்றாகச் செய்தார், ‘அவரது காலத்தில் எத்தனை பணிகள் நடந்தன, ‘எவ்வளவு சொத்துகள் வாங்கினார், கட்டடங்கள் கட்டினார்; ஆனால், இவர் வெறும் பூசை வைக்கத்தான் இலாயக்கு, வேற எதையும் கண்டுக்கிடுறதில்ல...’ இறைமக்கள் பங்குப் பணியாளரைப் பார்க்கும் பார்வை இங்ஙனம் மாறியிருக்கின்றன.

முதலீடுகளை ஈட்டும் தொழில் அதிபர்களாக இறைப்பணியாளர்களைப் பாவிக்கும் போக்கை இறைமக்களிடம் விதைத்துவிட்ட பழிபாவம் நம்மையே சாரும். இன்றைய முதலாளித்துவச் சித்தாந்தங்களில் நம்முடைய வாழ்வும் பணியும் சிறைபட்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன நிதர்சனம் தேவை?

நோய்களுக்கான மருந்தென்ன? கால ஓட்டத்தில் நம்மிடம் கறையாய்ப் படிந்துள்ள மரணக் கலாச்சாரங்களை வென்றெடுக்க திருத்தந்தை காட்டும் ஒரே வழி அன்பு! எதையும் கடமைக்காக, கட்டாயத்தினால், சட்டத்தினால், சடங்கிற்காக, சாதனைக்காகச் செய்யாமல், அன்பால் செயல்படுவதே ஏற்றம் தரும். அன்பைச் சுவைத்தவரால்தான் அன்பைப் பகிர முடியும். திரு அவையின் ஒழுக்கவியலின் மையமும் அதுவே.

புனித தாமஸ் அக்குவினாஸ் போதித்ததுபோல, பண்புகள் ((Virtues) மற்றும் அதிலிருந்து தொடங்கும் செயல்களிலும் ஒழுக்கவியல் வெளிப்படுகிறது என்றாலும், எல்லாவற்றையும் விட கணக்கில் கொள்ளக்கூடியதுஅன்பின் வழியாய் செயலாற்றும் நம்பிக்கை ஒன்றே இன்றியமையாதது (கலா 5:6).  “ஒருவரின் அயலாரை நோக்கிய அன்புச் செயல்களே ஆவியின் உள்ளார்ந்த அருளின் நிறைவான, வெளிப்படையான வெளிப்பாடுகள் ஆகும் (நற்செய்தியின் மகிழ்ச்சி, எண்:37) என்கிறார் திருத்தந்தை. அன்பும் நம்பிக்கையும் பிரிக்க முடியாதவை. நம்புகிறவன் அதனை அன்பில் வெளிப்படுத்த வேண்டும்.

இறைநம்பிக்கை ஒளி (LF) சுற்றுமடல், அதிகாரம் 4- இல் திருத்தந்தை, “மனித உறவுகளின் வளத்தை உயர்த்தக்கூடியதாகவும், அதன் நீடித்திருக்கும் சக்தியையும், நம்பத்தக்கதாக நிலைப்பாட்டையும் நமது ஒட்டுமொத்த வாழ்வையும் வளமூட்டி மேம்படுத்தக்கூடியதாகவும் இறைநம்பிக்கை ஒளி உள்ளது (எண்: 51) என்கிறார். இறைப்பணியாற்ற தங்களை அர்ப்பணித்துள்ள ஒவ்வொருவரும் இதனை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

நமது நம்பிக்கை என்பது மனித உறவுகளின் அடிநாதங்களையும், அதன் இறுதி எல்லையான இறைவனையும் இறுகப் பற்றிக் கொண்டு, மனித குலத்தின் பொதுநலனுக்குத் தன்னை அர்ப்பணிக்க உதவ வேண்டும். இதன் நோக்கம் மறுவுலக வாழ்வு மட்டுமல்ல; மாறாக, இன்றைய மனிதச் சமுதாயத்தைக் கட்டி எழுப்பி, எல்லாரும் ஒன்றாக இறையரசின் நிறைவினை நோக்கி நம்பிக்கையில் நடை பயிலச் செய்வதாகும்.

இறுதியாக, நம்மிடம் இருக்கும் பகையுணர்வுகளை, வெறுப்புணர்வுகளைக் களைவதற்கு என்ன வழி? நட்பு பாராட்டுவதே! மணத்துறவின் முக்கியம் மற்றும் நட்புப் பாராட்டுதலைப் பற்றி கம்பானியா அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களிடம் திருத்தந்தை உரையாற்றியபோது (26, ஜூலை 2014) “அருள்பணியாளர்கள் மன வருத்தங்களைச் சுமந்து  பகைமையில் உழல்பவர்களாக இருக்கக்கூடாது. மன்னிப்பதில் முன்னோடிகளாக இருக்க வேண்டும்என்று வலியுறுத்தினார். ஆகவே, நாமும் அன்பின் சாட்சிகளாய் அவனியில் வலம் வருவோமா!

news
ஆன்மிகம்
அருளடையாளங்கள்: உளவியல் ஆன்மிக தொடர் – 5

கிறிஸ்து எனும் அருளடையாளம்

(தந்தை அன்பு செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)

மார்த்தா:பாதர், கடவுளின் அருளைப் பெறுவதற்கு அருளடையாளங்கள் தேவை என்று சொன்னீர்கள். அது குறித்து மேலும் சில கருத்துகளைச் சொல்லுங்களேன்.”

அருள்பணி:தத்துவார்ந்த ரீதியில் பார்க்கும்போது, திருவருள்சாதனங்கள்குறியீடு (sign) என்கின்ற வகையைச் சார்ந்தவை. ஒன்றைச் சுட்டிக்காட்ட மற்றொன்றைப் பயன்படுத்துவதேகுறியீடுஎன்பது! உதாரணமாக, ஒரு சாலையில்மதுரைஎன்று எழுதப்பட்ட பலகை இருந்தது என்றால், அது மதுரையைச் சுட்டிக்காட்டும் குறியீடு ஆகும். அதாவது, பார்க்கக்கூடிய ஒன்றை வைத்து, பார்க்கக்கூடிய மற்றொன்றைச் சுட்டிக்காட்டுவதே குறியீடு என்பது. குறியீடோடு தொடர்புடைய மற்றொரு வார்த்தைஅடையாளம் (symbol) என்பது! அடையாளம் என்பது குறியீட்டையும் தாண்டி இன்னும் ஒருபடி மேலானது. இரண்டு வகைகளில் அது மேலானது. முதலாவதாக, அடையாளம் என்பது பார்க்கக்கூடிய ஒன்றை வைத்து, பார்க்க இயலாத ஒன்றைச் சுட்டிக்காட்டுவது. இரண்டாவதாக, அடையாளம் மற்றொன்றைச் சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், சுட்டிக்காட்டப்படும் பொருளின் தன்மையை ஓரளவுக்குத் தன்னிலே தாங்கியிருப்பதாகும்.”

கிறிஸ்டினா:தந்தையே! நீங்கள் சொல்வது புரிந்தது மாதிரியும் இருக்கிறது, புரியாத மாதிரியும் இருக்கிறது. ஓர் உதாரணம் தாருங்களேன்!”

மார்த்தா:நான் சொல்கிறேன் பாதர்! ரோஜா அன்பிற்கான சிறந்த அடையாளம். முதலாவதாக, ரோஜா பார்க்கப்படக்கூடியது. அது சுட்டிக்காட்டும் அன்போ பார்க்கப்பட முடியாதது. இரண்டாவதாக, அன்பின் மென்மைத்தன்மையை ரோஜா மலர் தன்னிலே தாங்கியிருக்கிறது. எனவேதான் அது அன்பிற்கான சிறந்த அடையாளமாகக் கருதப்படுகிறது என்று நினைக்கின்றேன்.”

அருள்பணி:மிகவும் சரி! காண இயலாத கடவுளையும், அவரது பிரசன்னத்தையும், பண்புநலன்களையும் சுட்டிக்காட்டி, அவற்றில் மனிதர்கள் பங்கெடுப்பதற்கான மிகச்சிறந்த அடையாளங்களாக இருப்பவையே அருளடையாளங்கள். ‘கண்களால் காண முடியாத இறைவனுக்குக் காணக்கூடிய ஓர் அடையாளமாக விளங்குவதே அருளடையாளம்என்கிறார் புனித பெர்னார்டு. காணக்கூடிய பொருள்கள் வழியாகக் காண இயலாத அம்சங்களை வெளிப்படுத்துவதே திருவருள்சாதனச் செயல்பாட்டின் அடிப்படைத் தன்மை. எல்லாத் திருவருள்சாதனங்களுமே கடவுளைச் சுட்டிக்காட்டுபவையாக இருப்பதோடு, கடவுளின் தன்மையைத் தங்களிலே பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, அப்பமும் இரசமும் பார்க்கக்கூடியவை. இந்த அப்பமும் இரசமும் காண இயலாத இறைவனின் பிரசன்னத்தைத் தாங்கக்கூடியவையாக மாறுவது திருவருள்சாதனச் செயல்பாட்டாலேயே! திரு அவை வரலாற்றை உற்றுநோக்கும்போது, ஒரு சாதாரண அழிந்துபோகக்கூடிய பருப்பொருள், அழியாத ஒன்றைச் சுட்டிக்காட்ட முடியும் என்ற செய்தியை ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் புனித அகுஸ்தினார். புனித அகுஸ்தினாரின் கருத்துபடி, இவ்வுலகின் புனிதத்தின் அடையாளமாகத் திருவருள் சாதனம் இருக்கிறது.”

அகஸ்டின்:பாதர்! ஏழு அருளடையாளங்களும் எவ்வாறு கடவுளின் செயல்பாட்டைச் சுட்டிக்காட்டுகின்றன எனச் சொல்லுங்களேன்...”

அருள்பணி:அதற்கு முன்பாக ஒரு கருத்தைப் பற்றி நாம் பேசவேண்டும். கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பொறுத்த அளவில், திருவருள்சாதனங்கள் அனைத்தும் இறைமகன் கிறிஸ்துவிலிருந்தும், அவரது வாழ்விலிருந்தும்தான் ஊற்றெடுக்கின்றன. கிறிஸ்துவின் வாழ்வே ஒரு திருவருள்சாதன வாழ்வுதானே! அதாவது, கிறிஸ்து காண இயலாத இறைவனை வெளிப்படுத்துகின்ற அருளின் கருவியாக விளங்கினார். எனவேதான் இறையியலில் கிறிஸ்து, ‘அடிப்படைத் திருவருள்சாதனம் (basic sacrament) என்று அழைக்கப்படுகின்றார்.”

அன்புசெல்வன்:பாதர், நீங்கள் இதைச் சொல்லும்போது  ‘என்னைக் காண்கிறவன் தந்தையையே காண்கின்றான் (யோவா 14:9) என்ற இயேசுவின் வார்த்தைகள் என் ஞாபகத்திற்கு வருகின்றன. இயேசுவின் வாழ்வே ஓர் அடிப்படைத் திருவருள்சாதனமாக (basic sacrament) இருந்தது என்பதை இவ்வார்த்தைகள் எடுத்துரைக்கின்றன என்று நினைக்கின்றேன்.”

அருள்பணி:மிகச் சரியாகச் சொன்னீர்கள். மேலும், இவ்வார்த்தைகள் அவர் ஒரு தனித்துவமிக்க, வேறு எதற்கும் இணையாக முடியாத திருவருள்சாதனமாக விளங்குகின்றார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. உங்கள் வீட்டில் கத்தோலிக்க மறைக்கல்வி ஏடு (Catechism of the Catholic Church) உள்ளதா?”

அன்புசெல்வன்: இருக்கிறது தந்தையே! உங்களுக்கு முன்பாக இருந்த அருள்தந்தை ஒரு முறை மறையுரையில் அது குறித்துப் பேசியபோது, அதை வாங்கி  அவ்வப்போது வாசித்து வருகிறேன். திரு அவையின் மறைப்போதனைகளைத் தெளிவாகவும் ஆழமாகவும் நான் புரிந்துகொள்ள அது எனக்கு உதவுகிறது.”

அருள்பணி:மிகவும் நல்லது. கிறிஸ்டினா, அப்புத்தகத்தைத் திறந்து, எண் 1151- வாசிக்க முடியுமா?”

கிறிஸ்டினா:இறையரசின் மறைபொருளை விளக்குவதற்காக இயேசு தமது போதனைகளில் அடிக்கடி படைப்புப் பொருள்களை அடையாளமாகப் பயன்படுத்துகின்றார். அவர் தமது குணமளிப்புச் செயல்பாடுகளிலும், போதனைகளிலும் சில பொருள் சார்ந்த குறியீடுகளையும், அடையாளச் செயல்பாடுகளையும் பயன்படுத்துகிறார்; பழைய உடன்படிக்கைக்கு, முக்கியமாக விடுதலைப் பயண நிகழ்விற்கும், பாஸ்குவிழா நிகழ்விற்கும் புதிய அர்த்தத்தை வழங்குகின்றார். இதற்கான காரணம் இச்செயல்பாடுகள் அனைத்திற்கும் பின்னே உள்ள குறியீடாக அவரே விளங்குவதுதான்.”

அருள்பணி:உனக்கு இதிலிருந்து என்ன புரிகிறது கிறிஸ்டினா?”

மார்த்தா:பாதர், அது எனக்கே புரியவில்லை. அவளுக்கு எங்கே புரியப்போகிறது?”

அருள்பணி:அதன் பொருள் இதுதான்: ‘இயேசு தமது புதுமைகளிலும், போதனைகளிலும் காணக்கூடிய பொருள்கள் மற்றும் நிகழ்வுகள் வழியாகக் காண இயலாத கடவுளைச் சுட்டிக்காட்டினார். இதற்கான காரணம், அவரது வாழ்வே காண இயலாத கடவுளைச் சுட்டிக்காட்டும் காணக்கூடிய அடையாளமாக இருந்ததே! வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நாம் கொண்டாடும் அருளடையாள நிகழ்வுகளுக்கான ஆழமான அர்த்தத்தையும், அளப்பரிய ஆற்றலையும் தருவது கிறிஸ்துவின் வாழ்வும், இறப்பும், உயிர்ப்புமேயன்றி வேறெதுவும் இல்லை.”

அகஸ்டின்:தந்தையே! இப்பொழுது எனக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. கடவுளைச் சுட்டிக்காட்டும் மாபெரும் அடையாளமாக விளங்குபவர் கிறிஸ்து. அவரது மீட்புச்செயலை உலகமனைத்தும் எடுத்துச் செல்வதற்கான கருவிகளாக ஏற்படுத்தப்பட்டவையே திருவருள்சாதனங்கள்.”

அருள்பணி:ஆம்! திருவருள்சாதன நிகழ்வுகள் வழியாக இறைமகன் இயேசுவின் மீட்புப் பணியானது உலகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைவதற்கான வாய்ப்பை, திரு அவை இறைவனின் துணையோடு மேற்கொள்கிறது. இவ்வாறு 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட நற்செயல் இன்றும் தொடர்ந்து ஆற்றப்படுகிறது.”

(தொடரும்)