இறைவேண்டல் என்றால் சொற்கள், செபங்கள், பாடல்கள், வழிபாடுகள் என்பதையும் கடந்து அது பன்முகப் பரிமாணங்களைக் கொண்டது என்பதை நாம் உணர வேண்டும். இறைவேண்டல் என்பதை நாம் புரிந்துகொள்ளும் பார்வையை விரிவாக்கி, நம் இறைவேண்டல் தளங்களைப் பெரிதாக்க அழைக்கிறது இறைவார்த்தை. அதன்படி கொடுத்தலும் இறைவேண்டலே.
கொடுப்பது
என்பது அடிப்படையில் ஓர் இறையியல்பு. கடவுள்தாம் கொடுப்பவர். நாம் அனைவரும் அவரிடமிருந்து பெறுபவர்களே. “உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும்; அப்போது அவரும் ஞானத்தைக் கொடுப்பார்” என்று
கூறும் யாக்கோபு, அதற்கான காரணத்தை இவ்வாறு கூறுகிறார்: “அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்” (யாக்
1:5).
இந்தக்
கொடுத்தல் பண்பை இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டு இறைவனுக்கும் பிறருக்கும் கொடுப்பவர்களாக மாறவேண்டும். எனவேதான், “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்\" (லூக் 20:25) என்றார் இயேசு. கடவுளுக்கு உரிய ஆராதனை, இறைப்புகழ்ச்சி, அர்ப்பணம் ஆகியவற்றை நாம் கொடுக்க முன்வர வேண்டும். இந்தக் கொடுத்தலும் ஓர் இறைவேண்டலே. இந்தப் புரிதலின்படி எப்போதெல்லாம் நாம் கடவுளுக்கு ஆராதனை, புகழ்ச்சி, கையளிப்பு, காணிக்கை ஆகியவற்றைக் கொடுக்கிறோமோ, அப்போதெல்லாம் நாம் இறைவேண்டல் செய்கிறோம் என்று பொருள் கொள்ளலாம்.
இந்த
உண்மையை எபிரேயர் திருமடல் விவரித்து நம்மை வியக்க வைக்கிறது. “அவர் வழியாக எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக! அவருடைய பெயரை அறிக்கையிடுவதன் வழியாக நம் உதடுகள் செலுத்தும் காணிக்கையே இப்புகழ்ச்சிப் பலியாகும்”
(எபி 13:15) என்கிறது அம்மடல். பாருங்கள், இறைப்புகழ்ச்சியை ‘உதடுகள் செலுத்தும் காணிக்கை’
என்று அழகாக அழைக்கிறது இத்திருமடல். அதன்படி, நாம் உதடுகளால் காணிக்கை செலுத்தும்போது, அது கடவுளுக்கு உகந்த இறைப்புகழ்ச்சியாக மாறுகிறது.
கொடுத்தலும்
ஓர் இறைவேண்டலே என்பதைச் சற்று ஆய்வு செய்யும்போது, அது இறைவேண்டலின் உயர்ந்த தளங்களுள் ஒன்று என்பதை நாம் உணர்கிறோம். “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை”
(யோவா 15:13) என்பது இயேசுவின் அருள்வாக்கு. எனவே, இறைவேண்டலின் செயல் வடிவமான கொடுத்தலை நாம் நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டும். முதலில் கடவுளுக்கு நம் நேரத்தை, அன்பை, ஆராதனையை, புகழ்ச்சியைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். ‘செபிக்க நேரமில்லை’
என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு! நாம் இருப்பதும், இயங்குவதும், வாழ்வதும் கடவுளின் இரக்கத்தினால்தானே! நம் வாழ்வும், நம் நேரமும் கடவுளின் கொடைதானே! அவருக்கு நன்றி செலுத்தவும், அவரை ஏத்திப்போற்றவும் நேரமில்லை என்பது இறைநிந்தையல்லவா! எனவே, நம்மிடம் இருப்பவை அனைத்திலும் சிறந்தவற்றை நாள்தோறும் தவறாது கடவுளுக்குக் கொடுப்போமாக. அதுவே சிறந்த இறைவேண்டல்.
இந்தப்
பார்வையைச் சற்று நீட்டித்தால், மனிதருக்குக் கொடுப்பதும் இறைவேண்டலே என்பதை நாம் காணலாம். எனவே, மனிதருக்கும் நமது நேரம், அன்பு, பாராட்டு, பணம், திறமைகள், ஆற்றல்கள், மன்னிப்பு என எவற்றையெல்லாம் கொடுக்க
இயலுமோ, அனைத்தையும் கொடுப்போம். அதுவே நம் சிறந்த இறைவேண்டல் என்பதை உணர்வோம்.
கொடுப்பது
ஓர் இறைவேண்டல் மட்டுமல்ல, அது ஓர் ஆசியும் கூட. பிறருக்கு நாம் கொடுக்கும்போதெல்லாம், கடவுள் நமக்குத் திருப்பித் தருகிறார். “கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக்
6:38) என்ற இயேசுவின் அருள்மொழி, கொடுப்பதன் மேன்மையையும், ஆசியையும் எடுத்துச் சொல்கிறது. அது மட்டுமல்ல, “மிகச் சிறியோராகிய என் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்லுகிறேன்” (மத்
25:40) என்னும் இறைமொழி மனிதருக்குக் கொடுப்பவையெல்லாம், கடவுளுக்கே போய்ச்சேர்கின்றன என்கிறது.
எனவே,
கொடுப்பதை ஒரு வாழ்வியல் நெறியாக மாற்றிக்கொள்வோம். உண்மையில் உழைப்பதன் நோக்கமே நலிவுற்றோருக்குக் கொடுக்கவே என்னும் வியப்பான செய்தியைப் பவுலடியாரிடம் கற்றுக்கொள்கிறோம். “பாடுபட்டு உழைத்து நலிவுற்றோர்க்குத் துணை நிற்க வேண்டுமென்று அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டினேன். அதோடு, பெற்றுக்கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூருங்கள் என்றும் கூறினேன்”
(திப 20:35) என்கிறார் பவுல்.
கொடுக்கும்போது
நாம் இரண்டு மனநிலைகளை நமதாக்க வேண்டும். ஒன்று, தேவைக்கு மேல் உள்ளவை அனைத்தும் கொடுக்கப்பட வேண்டும். “உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு; உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்து விடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே”
(தோபி 4:16) என்பது தோபித்து தன் மகனுக்குக் கொடுத்த அறிவுரை. இரண்டாவது, “மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்”
(2 கொரி 9:7).
கொடுப்பதே
பேறு, கொடுப்பதே இறைவேண்டல், கொடுப்பதே இறையாசி. அதை முக மலர்ச்சியோடு, உளமாரச் செய்வோம்.
1. திரு அவை வாழ்வினுடைய மரியியல் கூற்றைப் பற்றிச் சிந்தித்த பிறகு, இப்பொழுது நாம் அவருடைய எடுத்துக்காட்டாலும் பரிந்துரையாலும் திரு அவைக்கு அளவிட முடியாத ஆன்மிக வளத்தை மரியா வழங்குவதைப் பற்றிச் சிந்திக்கப் போகின்றோம்.
முதலாவதாக,
நாம் எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் அவர்களுடைய சொந்த அழைத்தலை ஏற்றுக்கொள்வதற்கும் நிறைவேற்றுவதற்கும் விலைமதிப்பில்லாத வழிகாட்டுதலைத் தருகின்ற மரியாவினுடைய ஆளுமையின்
சில சிறப்புக் கூறுகளைப் (significant aspects of Mary’s personality) பற்றிச் சிந்திப்போம்.
நம்பிக்கையின்
வழியில்
மரியா
நமக்கு
முன்
சென்றிருக்கின்றார்!
வானதூதருடைய
செய்தியை நம்பி, மனுவுருவாகும் மறையுண்மையை முதலில் வரவேற்பவராக மரியா இருந்தார் மற்றும் மிகச் சரியாக அதை நிறைவேற்றினார் (ஒப்பிடுக. மீட்பரின் தாய், எண். 13). ‘நம்பிக்கையாளர்’ என்ற
நிலையில் அவருடைய பயணமானது ‘இறைவனுடைய தாய்’ என்ற அவருடைய நிலைக்கு முன்பே தொடங்கியது. மேலும், அவருடைய பூவுலக அனுபவம் முழுவதும் மிக ஆழமான முறையில் அது வளர்ச்சியடைந்தது. அவருடைய நம்பிக்கையானது ஒரு துணிச்சலான நம்பிக்கையாக (daring Faith) இருந்தது. கிறிஸ்து பிறப்பு அறிவிப்பில் மனித நிலையில் முடியாத ஒன்றை அவர் நம்பினார்; மற்றும் இயேசுவினுடைய மெசியாவுக்கான ஆற்றல்களை (Messianic powers)
வெளிப்படுத்த வேண்டி கானாவூர் திருமணத்தில் அவருடைய முதல் அற்புதத்தைச்
செய்வதற்கு அவர் இயேசுவைத்
தூண்டினார் (ஒப்பிடுக. யோவா 2:1-5).
எல்லாச்
சூழலிலும் தேவைப்படுகின்ற துணிச்சல் மற்றும் விடாமுயற்சி போன்ற பண்புகளால் கிறித்தவர்களுடைய வாழ்வில் அவர்களுடைய நம்பிக்கையை நீடித்த
முழு ஈடுபாடு கொண்டதொரு பயணமாக என்றென்றைக்கும் வாழ்வதற்கு மரியா கற்றுத் தருகிறார்.
மரியாவின் தாழ்ச்சிநிறை மறைமுக
வாழ்வு!
2. இறை
விருப்பத்திற்கான மரியாவினுடைய பணிவு அவருடைய நம்பிக்கையோடு இணைந்த ஒன்றாகும். கடவுளுடைய வார்த்தையை நம்பி கன்னி மரியா அவருடைய வாழ்வில் இறைத்திட்டத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடிந்தது. மேலும், கடவுளுடைய உயர்வான திட்டத்திற்கு ஏற்புடையவராகத் தன்னையே கையளித்து, இறைவனால் அவரிடம் கேட்கப்பட்ட அனைத்தையும் அவர் தாழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இவ்வாறாக, திரு அவையில் கன்னி மரியாவினுடைய உடனிருப்பானது இறைவார்த்தைக்குச் செவிசாய்க்கவும், பல்வேறுபட்ட அன்றாட நிகழ்வுகளில் அவருடைய அன்பான திட்டத்தைப் புரிந்துகொள்வதற்கும் மற்றும் அதை நிறைவேற்றுவதில் நம்பிக்கையோடு ஒத்துழைப்பதற்கும் கிறித்தவர்களை ஊக்குவிக்கின்றது.
3. இவ்வாறு
கடவுளிடம் தங்களையே முழுமையாகக் கையளித்து, தங்களுடைய எதிர்காலத்தைக் காண்பதற்கு, நம்பிக்கையாளர்களின் குழுமத்திற்கு மரியா கற்றுத்தருகிறார். மரியாவினுடைய தனிப்பட்ட
அனுபவத்தில், நம்பிக்கையானது எப்பொழுதும் புதிய காரணங்களோடு வளமையாக்கப்பட்டுள்ளது. இயேசுவினுடைய பிறப்பின் அறிவிப்பிலிருந்தே, அவருடைய கன்னித் திருவயிற்றில் மனுவுருவான இறைமகன் பற்றிய பழைய இஸ்ரயேலுடைய எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்துகின்றார். மரியாவினுடைய நம்பிக்கையானது
நாசரேத்தில் இயேசுவினுடைய வெளிப்படாத வாழ்வு மற்றும் அவருடைய மக்கள் பணி போன்ற தொடர் நிலைகளால் பலப்படுத்தப்பட்டது. சிலுவைப் பயண நிகழ்வுகளைச் சந்தித்தபோதுகூட தன்னுடைய இலக்கில் தடுமாறுவதிலிருந்து ‘மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்’ என்று
அறிவித்த கிறிஸ்துவினுடைய வார்த்தைகளில் அவர் வைத்திருந்த ஆழமான நம்பிக்கையானது தடுத்தது. மீட்புப் பணியினுடைய நிறைவில் அவருடைய நம்பிக்கையைத் தக்கவைத்து, பெரிய வெள்ளியினுடைய இருளுக்குப் பின்னும் உயிர்ப்பின் நாளுக்காக உறுதியுடன் காத்திருந்தார்.
வரலாறு
முழுவதுமே நம்பிக்கையாளர்களின் குழுமமானது அவர்களுடைய துன்பப் பாதையில், ‘ஏற்கெனவே’
பெற்றுக்கொண்ட
மீட்பு மற்றும் ‘இன்னும் அடையப்படாத’ அதனுடைய
நிறைவு இவைகளுக்கிடையேயும் அவர்கள் ‘நம்பிக்கையின் அன்னை’யினுடைய உதவியில் நம்பிக்கை வைக்கலாம் என்பதில் உறுதியாய் இருந்தார்கள். இறப்பின் மீது கொண்ட கிறிஸ்துவினுடைய
வெற்றிக்குப்பின் கடவுளுடைய எதிர்காலத் திட்டத்திற்காகக் காத்திருப்பதற்கும் ஆண்டவருடைய வாக்குறுதிக்கு அவர்களையே கையளிப்பதற்கும் எப்பொழுதும் இல்லாததொரு புதிய ஆற்றலை அவர் அவர்களுக்குக் கொடுக்கின்றார்.
4. மரியாவினுடைய
எடுத்துக்காட்டானது ‘அமைதியின் அருமையை’ பாராட்டுவதற்கு, மிகச் சிறப்பாகத் திரு அவையைத் தூண்டுகிறது. மரியாவினுடைய
அமைதியானது பேசுவதில் அடக்கமாக இருப்பதில் மட்டுமல்லாமல், சிறப்பாக நம்பிக்கையினுடைய ஒரே பார்வையில் மனுவுருவான வார்த்தையினுடைய மறைபொருள் மற்றும் அவருடைய பூவுலக வாழ்வின் நிகழ்வுகளை நினைவுகூர்வதிலும் மற்றும் ஆர்வத்தோடு அவைகளை ஏற்றுக் கொள்வதிலும் இருந்த அனுபவச் செறிவுமிக்கதோர் ஆற்றலுமாகும்.
வார்த்தையை
ஏற்றுக்கொண்டதன் விளைவாக, கிறிஸ்துவினுடைய மறையுண்மையைத் தியானிப்பதற்கான ஆற்றலைத் தருகின்ற இந்த அமைதியைத்தான் நம்பிக்கையாளர்களுக்கு அன்னை மரியா கொடுக்கின்றார். பல்வேறு வகையான செய்திகளாலும் நிறைந்திருக்கின்ற சத்தம் நிறைந்ததோர் உலகில், மரியாவுடைய எடுத்துக்காட்டான வாழ்வானது ஓர் ஆன்மிக வளமையுள்ளதோர்
அமைதியைப் பாராட்டுவதில் நமக்கு உதவுகிறது மற்றும் அமைதியில் தியானிக்கும் ஆற்றலை நம்மில் வளர்க்கின்றது.
மரியா
தாழ்ச்சிநிறை மறைமுக வாழ்வினுடைய மதிப்பிற்குச் சான்றாகின்றார். வழக்கமாக, நாம் அனைவரும் நமது சொந்த ஆளுமை மற்றும் பண்புகளை அடைவதற்கு வற்புறுத்தப்படுவதும் உரிமை கோருவதும் என முயற்சிக்கின்றோம். எல்லாரும் மதிப்பிற்கும்
பெருமைக்கும் ஆசைப்படுகின்றவர்களாக இருக்கின்றோம்.
திருத்தூதர்கள்
இறையரசில் மிக முக்கியமான இடங்களைக் கேட்பவர்களாக இருந்தனர் மற்றும் அவர்களில் ‘யார் மிகப் பெரியவர்?’ என்பதைப் பற்றியும் விவாதித்தனர் என்று நற்செய்திகள் அடிக்கடி குறிப்பிடுகின்றன. இந்த விசயத்தில் இயேசு தாழ்ச்சி மற்றும் பணியின் தேவையை அவர்களுக்குக் கற்றுத்தந்தார் (ஒப்பிடுக. மத் 18:1-5; 20:20-28; மாற் 9:33-37; 10:35-45; லூக் 9:46-48; 22:24-27). அதற்கு மாறாக, மரியா பெருமையையோ அல்லது சிறப்புத் தகுதி நிலையினுடைய நிலையையோ ஒருபோதும் தேடாமல், தந்தையினுடைய மீட்புத் திட்டத்திற்கு இணங்கியதொரு வாழ்க்கை வாழ்ந்து, கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றவே எப்பொழுதும் முயன்றார். அர்த்தமற்ற
வாழ்வு போலத் தோன்றுவதனுடைய பாரத்தை அடிக்கடி உணர்கின்ற அனைவருக்கும், கிறிஸ்துவினுடைய அன்பிற்காக மற்றும் ஒருவருடைய சகோதர- சகோதரிகளுக்காக வாழ்கின்ற வாழ்வானது எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை மரியா வெளிப்படுத்துகிறார்.
5. மேலும்,
மரியா தூய்மையான மற்றும் எல்லா மனிதர்களிடத்தும் கருணை நிறைந்ததொரு வாழ்வினுடைய மதிப்புக்குச் சான்றாகின்றார். முழுவதும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவருடைய ஆன்மாவினுடைய அழகானது கிறித்தவ மக்களுக்கு வியப்பானதொன்றாக இருக்கின்றது. அன்பாலும் கருணையாலும் நிறைந்து, உடல் மற்றும் உள்ளத் தூய்மையில் வாழ்ந்ததன் காரணமாக மரியாவில் கிறித்தவக் குழுமமானது பெண்மைக்கான இலக்கணத்தை எப்பொழுதும் கண்டது.
கற்பினுடைய
மதிப்பை நமது சமூகம் அங்கீகரிக்கவில்லையோ? தனிமனித மாண்பு மற்றும் கடவுளுடைய திட்டத்திலிருந்து பாலுணர்வைப் (sexuality) பிரித்ததன் காரணமாகக் கற்பானது மாண்பிழந்திருக்கிறதோ? என்று நாம் வாழும் காலச்சூழலில் எண்ணத் தோன்றுகின்றது. இப்படிப்பட்ட ‘அவநம்பிக்கை’ (cynicism) கொண்டதொரு
கலாச்சாரத்தை நாம் சந்திக்கின்ற சூழலில், நமது மனசாட்சிக்கு ஒளியூட்டுகிற மற்றும் எல்லாப் படைப்புகளுக்கும் ஆண்டவருக்குமான எல்லையற்ற அன்பை நோக்கி வழிநடத்துகிற ஒழுக்கத் தூய்மையினுடைய சான்றாகக் கன்னி மரியா திகழ்கின்றார்.
6. மரியா
என்றும் கிறித்தவர்களாக வாழ்பவர்களுக்கு மனுக்குலத்தினுடைய துன்பங்களுக்காக ஆழமான பரிவு கொண்டுள்ளவராகத் தோன்றுகின்றார். இந்த இரக்கம் உணர்வுப்பூர்வமான பரிவில் மட்டும் அடங்கியிருக்கவில்லை; மாறாக, மனுக்குலத்தினுடைய பொருள் சார்ந்த மற்றும் ஒழுக்க இழிநிலை சார்ந்தவைகளோடு நேர் எதிரே நிற்கின்றபொழுது இது வலுவாகவும் திடமாகவும் வெளிப்படுத்தப்படுகிறது. மரியாவைப் பின்பற்றுவதில்,
திரு அவையானது பூமியிலுள்ள அனைத்து ஏழை மற்றும் துன்பப்படுபவரிடம் அதே மனப்பான்மையைக் கொண்டிருக்க அழைக்கப்படுகின்றது. குறிப் பாக, புத்தாயிரத்தினுடைய தொடக்கத்தில் ஆண்டவருடைய தாயினுடைய-தாய்மைக்குரிய பார்வையானது கண்ணீர், துயரங்களை அனுபவிக்கின்ற எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுடைய துன்பங்களைக் கண்டு, இன்றைய தாழ்த்தப்பட்ட மற்றும் துன்பப்படுகின்ற மக்களை முன்னேற்றுகிற நிலையான மற்றும் கண்ணால் காணக்கூடிய அன்பின் அடையாளங்களை அதிகரிப்பதற்கும், கிறிஸ்துவின் உயிர்ப்பில் பிறந்த புதிய உலகினுடைய வாக்குறுதிகளையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்துகொள்வதற்கும் தூண்ட வேண்டும்.
7. தாய்
மீதான மனித அன்பு மற்றும் பக்தி நாம் காண்கின்ற திரு அவையினுடைய எல்லைகளைத் தாண்டிச் செல்கிறது மற்றும் மன்னிக்கும் மனநிலைகளை வளர்க்கிறது. தாய் என்ற வகையில், அவருடைய எல்லாக் குழந்தைகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென மரியா விரும்புகிறார். திரு அவையில் மரியாவினுடைய உடனிருப்பானது
முதல் கிறித்தவக் குழுமத்தில் ஆட்சி செய்த அதே உள்ள-ஒன்றிப்பைப் பாதுகாப்பதற்கும் (ஒப்பிடுக. திப 1:14) மற்றும் அதன் காரணமாக நல்லெண்ணம் கொண்ட அனைத்து ஆண்கள் மற்றும் பெண்களிடையேயும் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான வழியைத் தேடுவதற்குமான ஓர் அழைப்பாக இருக்கிறது.
அவருடைய
மகனிடம் பரிந்து பேசுவதில், அன்பின் பண்பாட்டை (civilization of love) கட்டியெழுப்பிடவும், வேற்றுமைக்கான மனப்பான்மை,
பழிவாங்குதல் மற்றும் பகைமைக்கான தூண்டுதல், வன்முறை மீதான அளவில்லாப் பற்று ஆகியவற்றை வென்றெடுத்திடவும், மனுக்குலம் அனைத்திற்குமான ஒற்றுமையினுடைய அருளை மரியா கேட்கின்றார்.
மரியா நம்முடைய
மகிழ்ச்சியின்
காரணமாக
இருக்கின்றார்
8. நிறைய
மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ள மரியாவினுடைய உருவங்களில் (iconography), கன்னி மரியாவினுடைய தாயுள்ளம் கொண்ட புன்னகையானது பகிர்ந்துகொள்ளப்பட வேண்டிய அருள் மற்றும் அமைதியினுடைய முழுமையை வெளிப்படுத்துகிறது. அவருடைய ஆன்மாவினுடைய இந்தச் சாந்தமான தோற்றமானது திரு அவைக்கு ஒரு மகிழ்ச்சியான முகத்தைக் கொடுப்பதில் பயனுள்ள வகையில் பங்காற்றுகின்றது.
இயேசு
கிறிஸ்துவினுடைய பிறப்பு அறிவிப்புச் செய்தியில் ‘மகிழ்ந்திரு’ (khaire ஒப்பிடுக.
லூக் 1:28) என்ற வானதூதருடைய அழைத்தலை வரவேற்று, சீயோனின்
மகளுக்கு (Daughter of Sion) இறைவாக்கினர்களால்
முன்னறிவிக்கப்பட்ட மீட்பின் மகிழ்ச்சியை (ஒப்பிடுக. எசா 12:6: செப் 3:15-15: செக் 9:9) முதலில் பகிர்ந்துகொண்டவராக மரியா இருந்தார் மற்றும் எல்லாக் காலத்திலும் மனுக்குலத்திற்கு அதைக் கொடுக்கிறார்.
கன்னி
மரியாவை ‘எங்கள் மகிழ்ச்சியின் காரணமே’
(causa nostrae laetitiae) என்று
அழைத்து, வாழ்க்கையினுடைய சோதனைகளுக்கு மத்தியிலும் கூட, நம்பிக்கையிலிருந்து பிறக்கும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும்; மேலும், அவரிடம் தங்களையே அடைக்கலமாக ஒப்படைக்கிறவர்களை முடிவில்லாத மகிழ்ச்சியை நோக்கி வழிநடத்துவதற்குமான திறனைக் கிறித்தவர்கள் அவரில் காண்கிறார்கள்.
மூலம்:
Pope John Paul II, Mary is model of persevering silence, in
«L’Osservatore Romano», Weekly Edition in English, 29 November
1995, p.11.
திருக்காட்சிப் பெருவிழாவில் மையமான கதாபாத்திரங்களாக நம் கண்முன் நிற்பவர்கள் மூன்று ஞானிகளும், அவர்களின் கரங்களில் சுமந்து வந்த பரிசுப் பொருள்களுமே. பரந்திருக்கும் உலகில் மெசியாவைக் காண தொலைதூர இடங்களிலிருந்து பயணித்து, பல இடர்ப்பாடுகள், தவறுகள், சோர்வு எனப் பல சூழ்நிலைகளை அனுபவித்துக் கடந்து இயேசுவின் திருக்காட்சியைப் பெற்றனர்.
புனித
அகுஸ்தினார் திருக்காட்சிப் பெருவிழாவை எவ்வாறு குறிப்பிடுகின்றார்? “மனிதர்கள் வழியாகக் கடவுளை அடையும் வழியைத் திருக்காட்சிப் பெருவிழா நமக்கு உணர்த்துகின்றது.”
கடவுள்
புத்தகங்களின் பக்கங்களில் வாழ்வதில்லை. மாறாக, மனுவுடல் ஏற்று நம் மத்தியில் வாழ்கின்றார். இறைவனின் திருக்காட்சியைப் பெற நம் அருகில் வாழும் நம் சகோதர-சகோதரிகளின் முகத்தில் இறைவனின் முகத்தைக் காணவேண்டும். நமது திரு அவையும், திரு அவையின் பணியாளர்களும் நம்பிக்கையாளர்களும் தங்களுக்குள் முடங்கிக் கிடந்தால் இறைவனின் திருக்காட்சியைக் காண இயலாது. கிறிஸ்துவின் மறையுடலாம் திரு அவை மக்களின் மத்தியில் வாழ்கின்றது; இயங்குகின்றது. எனவே, திரு அவையின் தலையாயக் கடமை இறைமக்கள் நம்பிக்கையாளர்கள் தங்களிடம் வரவேண்டும்; அருள் வாழ்விற்கு உதவியை, ஆலோசனையை, வழிகாட்டுதலைக் கூற வேண்டும் எனக் காத்திருக்காமல், மக்களைத் தேடிச்சென்று பயணித்து, செவிமடுத்து தங்களது நற்செய்தியின் பணியைச் செய்திட வேண்டும் (மத்தேயு 28:19). மூன்று ஞானிகளும் தங்களது இருப்பிடத்தை, சுகமான வாழ்வுச் சூழலைக் கடந்து பயணித்து திருக்காட்சியைப் பெற்று, பிறருக்கு மகிழ்ச்சியை அறிவித்தனர்.
நாம்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவு பெற்ற கூட்டொருங்கியக்கத் திரு அவையின் 16-வது ஆயர் மாமன்றம் இச்செய்தியினைக் கோடிட்டுக் காட்டி இருக்கின்றது. திரு அவை தன்னிடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று வீதிகளில் வாழ்வோரைச் சந்தித்து உரையாடி, செவிமடுத்து, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று இன்னும் அதிக உற்சாகத்துடனும் வெளிப்படைத் தன்மையுடனும் நம்பிக்கைக்குரிய செயல்பாடுடனுடன் பொதுநிலையினரையும் பங்கேற்பு அமைப்புகளையும் உறுதிப்படுத்திட அழைப்பு விடுக்கின்றது.
திருக்காட்சிப்
பெருவிழாவில் சிந்தனைகளும் கூட்டொருங்கியக்கப் பரிந்துரைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து செல்வதாக நான் உணர்கின்றேன். இப்பெரு விழாவின் ஒருசில சிந்தனைகளைத் திரு அவையின் செயல்பாடுகளில் பரவச் செய்வது சாலச்சிறந்தது.
கண்களை உயர்த்தி
மற்றவர்களைக்
காணுதல்!
மூன்று
ஞானிகளின் பயணம், தங்களின்
இருப்பிடத்திலிருந்து
துவங்கிடக் காரணமாய் அமைந்திருந்தது அவர்கள் கண்ட விண்மீன். தங்கள் கண்களை உயர்த்திக் கண்ட, அவர்களின் திறந்த மனநிலை நமதாக வேண்டும். எனக்குள், என் சுயத்திற்குள் ஒளிந்து கொண்டு, என் சுகமான வாழ்வு வட்டங்களைக் கடந்து செல்லாமல், என்னைப் பற்றி மட்டும் சிந்திக்கும் மனநிலையைத் தவிர்த்து, இறைவனின் பிரசன்னத்தையும் கரை காணா அவரது அன்பையும் உணர்த்துகின்ற பிறரையும் குறிப்பாக, பல்வேறு சமூகச் சீர்கேட்டினால், வன்முறையினால், போர்களினால், அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், ஒடுக்கப்பட்டோர், புலம்பெயர்ந்தோர் இவர்களை நோக்கி நமது கண்கள் உயர்ந்து, நம்மைச் சுற்றிய நிகழ்வுகளைப் பற்றி நம்பிக்கையின் கண்களோடும் சகோதரத்துவத்துடனும் கண்டிட வேண்டும். இவ்வுலகையும் இயற்கையையும் காத்திட, நம் கண்களை உயர்த்திட வேண்டும்.
குழுவாகப் பயணித்தல்!
திருக்காட்சியின்
மூன்று ஞானிகள் விண்மீன்களைப் பின்தொடர்ந்து சென்று சிறிய முயற்சிகளை நம்பிக்கையின் ஊன்றுகோலாக மாற்றி, பிறரிடம் கேட்டறிந்து, செவிமடுத்து பாலன் இயேசுவைக் கண்டனர். மூவரும் வெவ்வேறு இடங்களில் பிறந்திருந்தாலும், கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்திருந்தாலும், ஒருவர் மற்றவரை ஏற்று, மதித்து, உரையாடிப் பயணத்தின் பொழுது ஒருவரின் களைப்பில், நோயில், நம்பிக்கையற்ற சூழலில் பங்கேற்று, மற்றவருக்கு உதவி செய்து, உற்சாகமூட்டி, ஒன்றாக இணைந்து, இறுதிவரை பயணித்து பெத்லகேமின் குடிலை அடைந்தனர்.
“நான் முன்னேறிச் செல்கின்றேன்; நீங்கள் சோர்வுற்று இருந்தால் இளைப்பாறிப் பின்னே வாருங்கள்”
என்று தன்னலத்தோடு செயல்படாமல், இணைந்து பயணித்த நிகழ்வு திரு அவைக்கு அற்புதமான செய்தியை வழங்குகின்றது. கூட்டொருங்கியக்கத் திரு அவையில் எவர் ஒருவரையும் விட்டு விடலாகாது. அனைவரையும் உள்ளடக்கிய பயணத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். திரு அவையை விட்டு விலகி இருப்போர், காயப்பட்டோர், விளிம்பு நிலையில் வாழ்வோர், பல்வேறு காலச்சூழலில் பாதிக்கப்பட்டோர், பல்வேறு வயதினர், திரு அவையில் பல்வேறு பணியினைச் செய்பவர் என அனைவரையும் அரவணைத்து,
உடன் நின்று, சகோதரத்துவத்தை வெளிப்படுத்திப் பயணிக்கும் திரு அவையே திருத்தந்தையின் விருப்பத் திரு அவையாக உள்ளது. ஒன்றாய்ப் பயணிப்பது ஒரு சிறந்த சாட்சியமே. இன்று திரு அவைக்கு அது மிகவும் அவசியமானது.
பிழைகளைக் கண்டு
பின்வாங்க
வேண்டும்!
மூன்று
ஞானிகள் தங்களின் தேடலில், தங்களின் பயணத்தில் பல தவறுகளைச் செய்தனர்;
தவறான இடங்களில் (ஏரோது அரண்மனை, எருசலேம் நகரம்) பாலன் இயேசுவைத் தேடினர். இருப்பினும், சுதாரித்துக் கொண்டு தங்களின் தவறுகளில் - தவறான பாதையில் மூழ்கி விடாமல், அவற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, மீண்டும் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் நம்பிக்கையுடனும் தங்களின் பயணத்தைத் தொடர்ந்து திருக்காட்சியைக் கண்டனர்.
கடந்த
காலங்களின் திரு அவையின் சில நபர்களின் செயல்பாடுகளினால் திரு அவை காயப்பட்டது; நம்பிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். திரு அவையின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை சீர்குலைந்தது. இப்பொழுது கூட்டொருங்கியக்கத் திரு அவை - அத்தவறுகளையெல்லாம் சரிசெய்து, பிழைகளிலிருந்து பாடம் கற்று, வெளிப்படைத்தன்மை கொண்ட திரு அவையாக உருவாக்க விரும்புவது தூய ஆவியின் செயல்பாடின்றி வேறில்லை. ஆயர்களின் மாமன்ற உரையாடல்களும் கருத்துச் செறிவுகளும் இறுதி ஆவணமும் இவற்றை வலியுறுத்துவதை நாம் உணர்ந்து, புத்தாக்கமும் புது தெம்பும் நம்பிக்கையும் செயல்பாடுகளின் வெளிப்படைத்தன்மையும் கொண்ட திரு அவையையும், அதன் முடிவுகளில் அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பு அமைப்புகளையும் உறுதிப்படுத்துவது மிகவும் ஏற்ற செயலே.
கூட்டுப் பயணமே
இறைவனுக்கு
நாம்
வழங்கும்
பரிசு!
மூன்று
ஞானிகளின் பரிசுப் பொருள்களைவிட, அவர்கள் சிரத்தையோடும் நம்பிக்கையோடும் பயணித்த சூழலே இறைவனுக்கு அவர்கள் வழங்கிய சிறப்புப் பரிசு.
திருக்காட்சியின்
கூட்டொருங்கியக்கப் பயணமே இறைவனுக்கு நாம் வழங்கும் சிறப்புப் பரிசாக அமையும். யூபிலி ஆண்டில் எதிர்நோக்குடன் திரு அவை பயணிப்பதே இறைவனுக்கு நாம் வழங்கும் அன்புப் பரிசு!
கடந்த டிசம்பர் 7-ஆம் நாள் உரோம், புனித பேதுரு பேராலயத்தில், போப் பிரான்சிஸ் புதிதாக 21 கர்தினால்களை உருவாக்கினார். தெஹ்ரான், டோக்கியோ, டொரோன்டோ என்று உலகின் பல்வேறு இடங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் புதிய உறுப்பினர்களில் கர்தினால்கள் அவையின் மிக வயதான கர்தினாலும் (ஆஞ்செலோ அச்செர்பி), மிக இளமையான கர்தினாலும் (மிக்கோலா பைச் சோக்) அடங்குவர். அச்செர்பிக்கு வயது 99. வத்திக்கானின் தூதராகப் பல நாடுகளில் பணியாற்றிவிட்டு, 2001-இல் ஓய்வுக்குப் பின், வாசிப்பு, இறைவேண்டல் என்று இருந்தவரை கார் அமர்த்தி அழைத்து வந்து, கர்தினால் பட்டம் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். 99 வயதில் ஒரு மனிதரின் அதிகபட்ச ஆசை, ‘இன்னும் ஒரு நாள் உயிரோடு இருப்பது’ என்பதாகத்தான் இருக்கும். அச்செர்பிக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த ஆச்சர்ய கர்தினால் பட்டம், அவர் திரு அவைக்கு ஆற்றிய மிக நீண்ட கால தூதரகப் பணிகளுக்கான ஓர் அங்கீகாரம் என்று வத்திக்கான் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
கர்தினால்
மிக்கோலாவிற்கு வயது 44 (நான் அந்த வயதில்தான் ‘பங்குத்தந்தை’ ஆனேன்).
அவர் உரோமன் கத்தோலிக்கத் திரு அவையோடு முழு ஒன்றிப்பில் உள்ள உக்ரேனியன் கிரேக்கக் கத்தோலிக்கத் திரு அவையைச் சார்ந்தவர். உக்ரைன் நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அங்கு அருள்பணியாளராகப் பணியாற்றியவர். நான்கு வருடங்களுக்கு முன்புதான் பிரான்சிஸ் அவரை ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் நகருக்கு ஆயராக நியமித்தார். இப்போது கர்தினால் பட்டம். “இது எனக்கான பெருமை அல்ல; என்னுடைய துன்புறுத்தப்படும் திரு அவைக்குக் கிடைத்த பெருமை” என்று மிக்கோலா கூறுகிறார். அவரின் கர்தினால் நியமனத்திற்கு ஓரங்களிலும், தூரங்களிலும் உள்ள திரு அவை மீது பிரான்சிஸ் கொண்டுள்ள கரிசனையே காரணம் என்று
சொல்லப்படுகிறது.
ஒரு
காலத்தில் கர்தினால்கள் அவையில் இத்தாலி நாட்டவரே ஆதிக்கம் செலுத்தினார்கள். திருத்தந்தையர்களில் நிறையப் பேர் இத்தாலி நாட்டவரே. பிரான்சிஸ் இதை
உத்திரவாதமாக மாற்றி அமைத்துள்ளார். கடந்த பதினோரு ஆண்டுகளில், அவர் உருவாக்கிய 142 கர்தினால்கள், 70 நாடுகளிலிருந்து வந்துள்ளார்கள். ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற கண்டங்களின் மிஷனரி திரு அவைகளுக்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கின்றன. கர்தினால்கள் அவை உண்மையிலேயே ஓர் உலகளாவியத் தன்மை பெற்றுள்ளது. A truly global College of Cardinals!
தற்போது
கர்தினால்கள் அவையில் மொத்தம் 253 பேர் இருக்கிறார்கள். இதில் 80 வயதுக்கு உள்பட்டவர்கள் 141 பேர். பிரான்சிசுக்கு அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க வாக்குரிமை பெற்றவர்கள் இவர்களே. இந்த 141 கர்தினால்களில், 111 பேர், அதாவது, நாளையே ஒரு கான்க்ளேவ் (conclave) கூட்டப்படுமானால், அதில் பங்கெடுக்கும் தகுதி பெற்ற கர்தினால்களில் 79% பேர் பிரான்சிஸால்
நியமிக்கப்பட்டவர்களாக
இருப்பார்கள். எனவே, பிரான்சிஸ் அவர்களின் சீர்திருத்தங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று நம்பலாம்.
கர்தினால்கள்
பற்றி
சில
பொதுவான
தகவல்கள்
இங்கே:
கர்தினால்கள்
திரு அவையின் ‘இளவரசர்கள்’ என்று
குறிப்பிடப்படுகிறார்கள்
(Princes of the Church). திரு
அவையின் நிர்வாகத்தில் மிக முக்கியப் பங்கு வகிப்பதாலும்,
அரசரைத் (திருத்தந்தையை) தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருப்பதாலும் இந்தப் பட்டம். ‘Cardinal’ என்ற ஆங்கில
வார்த்தை ‘cardo’ என்ற இலத்தீன்
வேர்ச் சொல்லிலிருந்து வருகிறது. ‘Cardo’ என்றால் ‘கீல்’ என்று
அர்த்தம். கதவை
நிலைச்சட்டத்தோடு இணைக்கின்ற hinge. உண்மையில் அதுதான் கர்தினால்களின் பணி. இணைப்பாளர்களாகவும் தாங்கிப் பிடிப்பவர்களாகவும் இருந்து அவர்கள் திரு அவையை இயக்கப் பணிக்கப்படுகிறார்கள்.
கர்தினால்
என்பது ஒரு கூடுதல் பொறுப்பு. அது ஓர் அருளடையாளம் கிடையாது. கர்தினால்கள் புதிதாக அருள்பொழிவு செய்யப்படுவதில்லை; நிறுவப்படுகிறார்கள். எல்லாக் கர்தினால்களும், ஏன் திருத்தந்தையும் கூட ஆதாரமாக ஆயர்களே.
பதவியேற்கும்
நிகழ்வில் திருத்தந்தை கர்தினால்களுக்கு மூன்று பொருள்களைக் கொடுக்கிறார்.
கணையாழி:
“இந்தக் கணையாழியைப் பேதுருவின் கரங்களிலிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். அவரு டைய அன்பில் இணைந்து,
திரு அவை மீதான உங் கள் அன்பு பலப்படுத்தப்படுவதாக” என்று
கூறி திருத்தந்தை ஒரு புதிய கணையாழியைப் பட்டம் பெறும் கர்தினாலின் கரத்தில் அணிவிக்கிறார்.
தலைப்பாகை:
ஆயர்களின் நிறம் மென்சிவப்பு என்றால், கர்தினால்களின் நிறம் கருஞ்சிவப்பு. இது மறைச்சாட்சிகளின் அடையாளம். திரு அவை முன்னேற்றத்திற்காகவும், கிறித்தவ நம்பிக்கையின் பரவலுக்காகவும், கர்தினால்கள் இரத்தம் சிந்தி உயிர் துறக்கும் அளவுக்குத் தைரியத்துடன் உழைக்க வேண்டும் என்பதன் அடையாளமாக திருத்தந்தை அவர்களுக்குக் கருஞ்சிவப்பு நிறத் தலைப்பாகையை அணிவிக்கிறார். கர்தினால்கள் அணியும் கறுப்பு அல்லது வெள்ளை நிற அங்கியிலும், கருஞ்சிவப்புத் தீற்றல்களைப் பார்க்கலாம்.
ஆணை: கர்தினால் பணி நியமன ஆணை ஒரு சுருளேடாக அளிக்கப்படுகிறது.
கர்தினால்கள்
ஒவ்வொருவருக்கும் உரோம் நகரில் இருக்கும் ஒரு கோவில் ஒதுக்கித் தரப்படுகிறது. ‘Titular Church’ என்று கூறுவார்கள். அந்தக் கோவிலுக்கு அந்தக் கர்தினால்தான் பொறுப்பாளர். பங்குத்தந்தை மாதிரி. உலகின் எந்த முனையில் ஒரு கர்தினால் பணி செய்தாலும் உரோம் நகரோடும், திருத்தந்தையோடும் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த பிணைப்பை இந்த ‘Titular Church’ முறை
எடுத்துக் காட்டுகிறது.
தற்போது
இந்தியாவில் ஏழு கர்தினால்கள் இருக்கிறார்கள். எல்லாரும் நன்கு அறிந்த மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்ட் கிரேசியசுக்கு 79 வயதாகிவிட்டது. அவருக்கு வாரிசு ஆயரும் நியமித்துவிட்டார்கள். அடுத்த கான்க்ளேவில் அவர் பங்கெடுக்க வாய்ப்பில்லை. ஹைதராபாத் பேராயர் கர்தினால் அந்தோணிக்கும் (63 வயது), கோவா
பேராயர் கர்தினால் ஃபிலிப் நேரிக்கும் (71 வயது) வாய்ப்பிருக்கிறது. ஓட்டுப் போட போவார்கள். திருத்தந்தை ஆவார்களா? தெரியவில்லை. மற்ற நால்வரும் கேரளத்தவர்கள். பெரும்பாலும் கீழைத் திரு அவையைச் சார்ந்த பேராயர்கள். தமிழ்நாட்டிலிருந்து யாரும் இல்லை. இதுவரை தமிழ்நாட்டிலிருந்து ஒரே ஒரு கர்தினால் மட்டுமே உருவாகியிருக்கிறார். மேமிகு கர்தினால் லூர்துசாமி அவர்கள். தற்போது பொறுப்பேற்றிருக்கும் புதிய தலைமுறை ஆயர்களிலிருந்து யாரேனும் கர்தினாலாகத் தேர்வு பெற்று, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று பெரிய நாயகியை வேண்டுகிறேன்.
மிலான்
மறைமாவட்டத்தின் மேனாள் பேராயர் கர்தினால் கார்லொஸ் மரிய மர்த்தினி, நான் மிகவும் வியந்து வாசிக்கின்ற, நேசிக்கின்ற ஒரு திரு அவைத் தலைவர்.
மர்த்தினி
ஓர் இயேசு சபை அருள்பணியாளர். திருவிவிலிய வல்லுநர். 1979-ஆம் ஆண்டு உரோம் நகரில் உள்ள கிரகோரியன் பல்கலைக்கழகத்தின் அதிபராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அது இரண்டாம் ஜான்பால் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற முதல் வருடம். அப்போது இத்தாலி நாட்டின் மிக முக்கிய மிலான் உயர் மறைமாவட்டம் காலியாக இருந்தது. ‘யாரை அங்கு நியமிப்பது?’ என்று திருத்தந்தை யோசித்துக் கொண்டிருந்தார். அச்சமயம் ஒரு நிகழ்வில் பங்கெடுக்க கிரகோரியன் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற போப் ஜான்பாலுக்கு அந்த நிகழ்வை ஒருங்கிணைத்த அதிபர் மர்த்தினியைப் பிடித்துப்போனது. அவரைப் பற்றி விசாரித்தார். மர்த்தினி பற்றிக் கிடைத்த தகவல்கள் அனைத்தும் திருத்தந்தைக்கு மகிழ்வூட்டின. அவரையே மிலான் மறைமாவட்டப் பேராயராக நியமிப்பது என்று முடிவெடுத்தார். செய்தி மர்த்தினிக்குத் தெரிவிக்கப்பட்டது. மர்த்தினிக்கு இதில் சிறிதுகூட விருப்பம் இல்லை. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் திருவிவிலிய ஆய்வு சம்பந்தப்பட்ட அறிவுத்துறையிலேயே தன் வாழ்வைச் செலவழித்திருந்தார். ஒருமுறை கூட பங்குத்தந்தையாகப் பணியாற்றியதில்லை. கல்விப்
புலம் வேறு, மேய்ப்புப் பணிச்சூழல் வேறு. ஐரோப்பாவின் மிகப்பெரிய உயர் மறைமாவட்டத்தை வழிநடத்திச் செல்லக் கூடிய ‘pastoral leadership’ தன்னிடம் இருக்கிறதா? என்று அவருக்குச் சந்தேகம். எனவே, தான் ஏன் இந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படக் கூடாது? என்று பல்வேறு காரணங்களை அடுக்கி, ஒரு நீண்ட கடிதத்தை எழுதி எடுத்துக்கொண்டு போய் போப்பைச் சந்தித்தார். திருத்தந்தையின் முன் முழந்தாளிட்டு கடிதத்தைக் கொடுத்தார். ஜான்பால்
அவர்கள் மர்த்தினியின் கடிதத்தைப் பொறுமையாக வாசித்தார். பின் அதை மடித்து, தன் பையில் வைத்துவிட்டு, மர்த்தினியை நோக்கி, “Thank you for the letter, Fr Martini. But go to Milan” என்று கூறினாராம். அதன் பிறகு நிகழ்ந்தது வரலாறு. திருத்தந்தை ஜான்பால் அவர்களே மர்த்தினியை ஆயராக அருள்பொழிவு செய்தார். 1983-ஆம் ஆண்டு அவர் கர்தினாலாக உயர்த்தப்பட்டார். 22 ஆண்டுகள் மிலான் மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி, 2001-இல் ஓய்வு பெற்றார்.
மிலான்
கத்தீட்ரலில் அவர் எடுத்த விவிலிய வகுப்புகளுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்தனர். கடவுளை நம்பாதவர்களைக் கூட மர்த்தினி கவர்ந்தார். மிலான் மறைமாவட்டத்தின் தலைசிறந்த
பேராயராக மட்டுமல்ல, திரு அவையைச் சீர்திருத்தப் பாதையில் வழிநடத்திச் சென்ற ஓர் உலகத் திரு அவைத் தலைவராகவும் அவர் உருவெடுத்தார். இரண்டாம் ஜான்பாலின் இறப்புக்குப் பின் நடந்த கான்க்ளேவில் முதல் சுற்றில் ஜோசப் ராட்சிங்கரைவிட மர்த்தினிக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன என்று சொல்லப்படுகிறது.
2012, ஆகஸ்டு 31 அன்று
அவர் இறந்த போது, மிலான் நகர மேயர், “Carlo Maria Martini illuminated the way for the entire city, not
just for part of it. For this reason, today more than ever, Milan mourns its
Archbishop” என்று
கூறினாராம்.
உண்மையில்
இதுதான் ஒரு திரு அவைத் தலைவரின் பணி. ஓர் இடத்துக்காக மட்டுமல்ல, ஒரு குழுவுக்காக மட்டுமல்ல, ஓர் இனத்துக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் திரு அவைக்காகவும் ஒளி வீசுவது.
அப்படித்தானே?
(இந்த
வாரக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை +91 9342389212 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம், எழுத்து வடிவிலோ அல்லது வாய்ஸ் மெஸேஜ் வடிவிலோ அனுப்புங்கள்).
நான், குவாடலூப் என்ற தீவில் (1990-1995) ஐந்து ஆண்டுகள் பணி செய்தேன். மரியாவைப் பற்றி மறையுரையாற்றிய போது அவரை ‘கடவுளின் தாய்’ என்று கூறினேன். திருப்பலி முடிந்ததும் பேராசிரியர் ஒருவர் வந்து என்னிடம், “மரியா இயேசுவின் தாய்’ என்பது பொருத்தமானதே. ஆனால், ‘கடவுளின் தாய்’ என்று ஒத்துக்கொள்ள எனது மனம் மறுக்கிறது” என்றார். “மரியா கடவுளின் படைப்பு. அவர் ஒரு பெண். எப்படி உருவம் இல்லாத முழு முதற் தலைவன், தமது படைப்புப் பொருளாகிய மரியா ஈன்றெடுத்த மகனாகப் பிறக்க முடியும்? இது அறிவுக்கு ஒவ்வாதது” என்று கூறினார். எனக்கு அவரது எண்ணங்கள், சிந்தனைகள் ஏற்றுக்கொள்ளும்படி பதில் அளிக்க இயலவில்லை. திருவிவிலிய விளக்கம், இறையியல் விளக்கம், கடவுளின் வெளிப்பாடு என்பதெல்லாம் அவருக்கு விநோதமாக இருந்தது. எனினும், “கிறித்தவம் ஒன்றுதான் கடவுளுக்கு ஒரு தாய் தேவைப்படுகிறாள் என்று கூறுகிறது” என்கிறார் கார்ல் ரானர். இவரது கூற்று உண்மை வாய்ந்தது என்பது நமக்குத் தெரியும். இயேசு மனிதனாகவும் கடவுளாகவும் இருந்தார் என்பதைக் கிறித்தவம் ஒத்துக்கொள்கிறது. எனவே, இயேசுவை ஈன்றெடுத்தபோது மரியா கடவுளையே ஈன்றெடுத்திருக்கிறார் என்று திட்டவட்டமாகக் கூறமுடியும்.
கடவுள் செயல்
மரியா
கடவுளின் அன்னை என்பது புலன்களாலோ, சிந்தனையாலோ, தர்க்க ரீதியாலோ நிரூபிக்கப்பட்ட உண்மையல்ல; அது ஓர் இறையியல் உண்மை! அது கடவுள் தம்மை வெளிப்படுத்தியதால் நாம் தெளிவாக ஏற்கும் ஒரு திருவிவிலிய உண்மை. திருவிவிலிய உண்மையை அறிய நம்பிக்கையோடு திருநூலை ஏற்க வேண்டும். கடவுள் நம் மத்தியில் உறைபவர். அதை ஊனக்கண்களால் காணவியலாது. மாறாக, நமது அகக்கண்களால் அவரைக் காணவியலும். மரியாவைத் தனிப்பட்ட விதமாக அன்பு செய்வதும் தேர்ந்தெடுப்பதும் கடவுள் செயல். கடவுளின் அருளின்றி, கிறிஸ்துவின் துணையின்றி மரியாவைப் பற்றிப் பேச இயலாது. மரியியல் கிறித்தியலில்தான் துவங்குகிறது. மரியா கடவுளின் தாயாவது கடவுள் செயல். மனிதச் செயலல்ல. மனிதன் தனது சிந்தனையால் பலவற்றை ‘சரி’ என்றும், சிலவற்றை ‘தவறு’ என்றும் கூறுகிறான். சில மறையுண்மைகளை ஏற்க மறுக்கிறான். எனினும், கடவுள் தமது செயல்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ஆண்டவர் செயல்கள் நமக்கு வியப்பாக உள்ளன.
கடவுள்
மனிதனாகப் பிறந்து அவரது பெற்றோருக்குக் கீழ்ப்படிவது (லூக் 2:51), ஞானத்திலும் சிறந்து வலிமையில் உயர்ந்து கடவுளுக்கு உகந்தவராய் வாழ்வது (லூக் 2:40) வியப்புக்குரியனவாக உள்ளன. மரியா ஒரு தாய் என்ற முறையில் இயேசு கிறிஸ்துவை ஈன்றெடுத்தார். அவர் கடவுளாயும் மனிதனுமாயிருந்தார். தனது மகனின் வழிமுறைகளும், செயல்பாடுகளும் வாழ்வு முறைகளும் புரியாத வண்ணமாய் மரியாவுக்கு இருந்தன. மரியா அவற்றைப் பற்றித் தியானித்து வந்தார் (லூக்கா 2:13).
மரியாவின் சிறப்பு
ஒரு
கடவுளை மனிதனாக ஈன்றெடுத்தது கடவுள் செயல் என்றாலும், மரியாவின் ஒத்துழைப்பை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.
“கடவுளின் தாய் எனினும், மரியா ஒரு பெண்தான். மனிதன் மனிதனை ஈன்றெடுக்க முடியும். மரியாவோ கடவுளை ஈன்றெடுக்கும் பேறு பெற்றார்.” கடவுளின் திருவடிகளைச் சொர்க்கமாகக் கொண்ட மரியாவின் திருவடிகளும் ஒருவகையில் சொர்க்கம்தான். இயேசு மரியாவை ‘அம்மா’ என்றழைத்ததால், நாமும் அவரை ‘அம்மா’ என்றழைக்கலாம். ஏனெனில், நாம் இயேசுவின் நண்பர்கள் (சகோதர-சகோதரிகள்) (யோவா15:15). ‘நேரில் நின்று பேசும் தெய்வம் அம்மா’,
‘அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே’ என்று
கவிதை வரிகள் கூறுகின்றன. இயேசுவை மீட்பராக உலகுக்கு வழங்கிட உதவியவர் மரியா.
மனிதனான கடவுள்
இறைவார்த்தை
(இயேசு) மனிதர் நடுவே வாழ விருப்பம் கொண்டது (யோவா 1:14). மனிதர் நடுவே வாழ அவர் (இயேசு) தேர்ந்தெடுத்த வழிதான் ஒரு பெண்ணின் வழியாக இவ்வுலகில் வந்திருக்க முடிவெடுத்தது (கலா 4:5). இவர் ஓர் ஆணின் துணையின்றிப் பெண்ணின் வழியாக உலகிற்கு வருகிறார் (யோவா 1:13). கடவுள் மனிதனாக இவ்வுலகில் வருவதற்குப் பல வழிகள் இருந்திருக்கலாம்.
ஆனால், இறைவன் தேர்ந்த வழி மரியா என்ற பெண்; அவர் ஈன்றெடுத்தவரே இயேசு.
இயேசு
மனிதரும் இறைவனுமாவார். அவர் மனிதப்பிறவி எடுத்தாலும், மனிதனுக்கிருந்த தேவைகள், பலவீனங்கள் இருந்தன. அதாவது, பசியுற்றார், தாகமுற்றார், தளர்வுற்றார், நிராகரிக்கப்பட்டார், இறுதியில் சிலுவையில் அறையப்பட்டார். மற்ற பலவீனங்கள் தெய்வ வலிமையால் மேற்கொள்ளப்பட்டன. நற்செய்தியாளர் சொல்வது போல் அவர் பாவம் தவிர மற்றனைத்திலும் மனிதனாகவே வாழ்ந்தார்.
“என்னிடம் பாவம் உண்டு என்று உங்களில் யாராவது என்மேல் குற்றம் சுமத்த முடியுமா?” (யோவா 8:46, 1பேது 2:22, எபி 4:15, 1யோவா 3:5) என்று இயேசு துணிவுடன் சவால் விடுகிறார். இயேசு மனிதராயினும் அவரது தெய்வீக நிலை அவரது இறப்பிற்குப் பின்பே அல்ல; உயிர்த்தெழுதலுக்குப் பின்பே அதிகமாகத் தெரியலாயிற்று. ‘இயேசு இறை மகன். அவர் கட்புலனாகாத கடவுளின் சாயல்’
(கொலோ 1:15). அவர் அனைத்து ஆற்றலும் நிறைந்தவர். அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர் (கொலோ 1:16). “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே; என்னிடம் நம்பிக்கைகொள்பவர் இறப்பினும் வாழ்வார்”
(யோவா 11:25,26). “அவர் வாக்காகவும் கடவுளாகவும் இருந்தார்”
(யோவா 1:1).
மறைபொருள்
இறைமகன்
மனிதனாக, தாய் ஒன்று வேண்டும். அந்தத் தாய்தான் மரியா. அவர் கன்னி மரியாவின் வழியாக இவ்வுலகில் பிறந்தார். மனிதனாயினும் இறைமகன் மனிதனாக அவர் உதவியாயிருந்தார். இறைவனை ஈன்றெடுத்தார். இதை ஒத்துக்கொள்ள மனித எண்ணங்கள் மறுத்தாலும், இது மறைபொருள் என்பதை மறந்துவிடக் கூடாது.
புலன்களால்
தொட்டு, கண்டு, நுகர்ந்து, சுவைத்து, கேட்டு உணரலாம். இவை மனித எல்லைக்கு உட்பட்டவை. சிலவற்றைச் சிந்தனைகளால் உணரலாம். சான்றாக 5+5=10 அல்லது 5x5=25 என்பதும் சரியே. இதற்குப் புலன்களின் உதவி தேவையில்லை, மனது போதும். மேலும், தர்க்க ரீதியைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்க இயலும். ‘தூத்துக்குடியில் உள்ள மக்கள் நல்லவர்கள். அருண் தூத்துக்குடியைச் சார்ந்தவன். எனவே அவன் நல்லவன்’ என்று கூறலாம். ஆய்வுகளும் யூகித்துச் செயல்படுவதும் பல மறைவான குற்றங்களைக்
கண்டுபிடிக்க உதவியிருக்கின்றன. இவை நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், நாம் எங்கிருந்து வந்தோம்? நமது மூலம் என்ன? எங்கு செல்கிறோம்? நமது முடிவு என்ன? இறப்பிற்குப் பிறகு நாம் வாழ்கின்றோமா? என்பதையெல்லாம் நாம் கண்டுபிடிக்க இயலாதவை.
சான்றாக,
ஆறு நாள்களில் கடவுள் உலகைப் படைத்தார் என்பதை அப்படியே நாம் புரிந்துகொள்வது சரியல்ல; ஆறு நாள்கள் கடவுள் எடுத்துக் கொண்டாரெனில், அது அவரது வல்லமை, எல்லையற்றத்தன்மை எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மாறாக, அதை ஓர் அடையாளமாக, தொன்மமாக, படிமமாக, குறியீடாக, புதிராகக் கொள்ளும்போது பல்வேறு அர்த்தங்களை நாம் உணர முடிகிறது. மனிதனின் படைப்பு, ஆண் - பெண் படைப்பு, அவர்கள் பாம்பால் ஏமாற்றப்படுதல், மனித உள்ளுணர்வை, வாழ்வின் உயர்வை, சபலங்களை, மனித பலவீனங்களைக் கண்டு பிடிக்கும் கூறுகளாகப் பார்க்கலாம்.
இறையியல் உண்மை
இயேசு
மனிதன் என்பதும், அவரே இறைவன் என்பதும் மனிதச் சிந்தனையால் ஏற்க முடியாதது. அது இறையியல் உண்மை. கடவுளே அதை வெளிப்படுத்தாவிடில், அதை ஏற்பது கடினம். இயேசுவைக் கடவுள் என்றும், மனிதன் என்றும் பிரித்துப் பார்ப்பது ஏற்புடையதல்ல. மாறாக, ஒருவரில் (இயேசு என்ற மனிதரில்) இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் இணைந்துள்ளன. மனிதனாகவும் கடவுளாகவும் வாழ்ந்த அவர்தான் சிலுவையில் இறந்தார்; சாவை வென்றார்; உயிர்த்தெழவும் செய்தார். ஒரு மனிதரில் துலங்கிய பரம இரகசியம் இது. இதை ஆய்ந்து பார்ப்பவர் குறைகளைக் காண்பர். நம்பி ஏற்பவர் நிறைவைச் சுவைப்பர்.
இயேசுவின் பிறப்பு
நிகழ்வுகள்
“மரியா தன் தலைமகனைப் பெற்றெடுத்தார்; பிள்ளையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார்” (லூக்.2:7).
இவ்வாறு இயேசுவின் பிறப்பு லூக்காவினால் கூறப்படுகிறது. மற்ற நற்செய்தியாளர்கள் இயேசு பிறந்த செய்தியைக் கூறவில்லை. எனினும் லூக்காவும் மத்தேயுவும் வெவ்வேறு மறையுண்மைகளை முன் வைக்கின்றனர். ‘மரியா இறைவனை ஈன்றெடுத்தார்’ எனக்
கூறவில்லை; ஆனால், ஈன்றெடுத்த மகன் எப்படிப்பட்டவர் என்பதை அவரவர்கள் புரிந்த வண்ணம் படைத்துள்ளனர்.
“மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்! அவரது பெயர் இயேசு; அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்”
(மத்1:21). மேலும், “குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள். நெடுஞ்சாண் கிடையாக விழுந்து குழந்தையை வணங்கினார்கள்” (மத்
2:14). வணக்கமும் ஆராதனையும் பெறுபவர் கடவுள் ஒருவரே. காணிக்கைகளும் அவருக்குக் கொடுக்கப்படுகின்றன (மத் 2:12). இதனால் இயேசு வெறும் மனிதர் அல்லர், தெய்வீகம் (இறைமை) நிறைந்த ஒரு குழந்தை என்பது தெளிவு.
இந்த
இயேசுதாம் மரியாவின் மைந்தர். “அவர் ஈன்ற குழந்தை தூயது. அவர் இறைமகன் எனப்படுவார்” (லூக்
1:35). மேலும், “அவர் பெரியவர், உன்னத கடவுளின் மகன், அவரது ஆட்சிக்கு முடிவே இராது”
(லூக் 1:32,33) என்பதெல்லாம் பிறக்கப் போகும் மரியின் மைந்தன் இறைமகன், அவர் கடவுள் இயல்பைக் கொண்டவர் என்று வெளிப்படுத்தப்பட்டது. “இயேசுவில் கடவுள் ஏற்பாடு செய்துள்ள மீட்பை சிமியோனின் கண்கள் கண்டுகொண்டன” (லூக்
2:30,31). இவையெல்லாம்
இறைவனின் வெளிப்பாடு. இறைவன் தம்மை, தம் மகனை வெளிப்படுத்துகிறார். இத்தகைய மகனை ஈன்றெடுக்கச் சம்மதம் தந்தவர்தான் மரியா. அவருக்குத் தெரியும், தான் தாயாவதும், அதுவும் கடவுளுக்கே தாயாவதும்! இவை அவரது மனத்தில் நிழலாடிய உண்மைகள்.
தொடக்கத் திரு
அவை
தொடக்கத்
திரு அவை நம்பியதை ஆரியுஸ், நெஸ்டோரியுஸ் போன்றவர்கள் மறுத்தனர். மரியா மனிதனான இயேசுவுக்குத் தாய். கடவுளுக்குத் தாயல்ல என்ற அவர்களின் கூற்றில் சிந்தனை, தர்க்க ரீதியான உண்மை இருந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால், சிந்தனையும் தர்க்கமும் மெய்யியலும் முடியும் தருணத்தில் உருவாவதே இறைவனைப் பற்றிய உண்மைகள்.
நாம்
புலன்களால், சிந்தனைகளால் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் ‘நாம் கடவுள் படைப்புகள்; அவரது பிள்ளைகள்; அவரால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள்’ என்பது
வெளிப்பாடு. நம்பிக்கையின் உண்மைகள். அவைகளை நிரூபிக்க முடியாததெனினும், அவை மற்ற உண்மைகளை விட உயர்ந்தவை. அவைதான் நம்பிக்கையாளர்களை வாழ்வித்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், ஒரு கிறித்தவன் நம்பிக்கையால் வாழ்கிறான்.
இந்த
உண்மையைத் தெள்ளத் தெளிவாக நமக்குச் சொல்வதுதான் நிசேயா பொதுச்சங்கம் (325). அங்கு துவங்கிய மறையுண்மையை எபேசில் கூடிய திருச்சங்கம் (431) ‘மரியா இறைவனின் தாய்’ என்ற பிரகடனத்தின் வழியாய் உறுதிப்படுத்தியது. கவனிப்போம் - இது மறையுண்மை. இவ்வுண்மைகளை ஏற்க இறை நம்பிக்கை வேண்டும். இறை வெளிப்பாடு உண்மையானது எனத் தெரிந்திருக்க வேண்டும்.
கடவுளைப்
பற்றிப் பேசும்போது நாம் உள்ளார்ந்த உணர்வு நிலைகளுக்குச் சென்றுவிடுகிறோம். புலன்களை, சிந்தனைகளை, மனித ஆய்வுகளைக் கடந்த இறைவனை நம்பிக்கையால் அணுகுவோம். கோடிக்கணக்கான மக்கள் ஏற்று, நம்பிக்கையுடன் வாழ்ந்த மறையுண்மைதான் ‘மரியா இறைவனின் தாய்.’ இது கடவுளுக்குப் பெருமையென்றாலும், மனுக்குலத்தின் பெருமை. ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்ற
கூற்றின் பின்புலம் இதுவே.
(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமசின் உரையாடல் தொடர்கிறது)
அன்புச் செல்வன்:
“தந்தையே, சென்ற வாரம் நீங்கள் ஆன்மிகம் தொடர்பான காரியங்களை அறிவின் பின்னணியில் புரிந்துகொள்ள முயற்சிப்பது சரி என்று சொன்ன அதேவேளையில், அறிவை அதீதமாகத் தூக்கிப்பிடிப்பது எவ்வளவு தவறானது என்பதையும் சிறப்பாக விளக்கினீர்கள். எனினும், இன்றைக்கு இருக்கின்ற பல இளைஞர்களின் பிரச்சினை
என்னவென்றால், தங்களின் அறிவுக்கு ஒன்று எட்டவில்லை என்றால், அத்தகைய காரியம் ஒன்றே இல்லை என்கின்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். எனக்கு ஓர் உதாரணம் நினைவிற்கு வருகிறது. ஒரு நபர் கண்தெரியாத மனிதர் ஒருவரிடம், ‘அதோ! தூரத்தில் உள்ள மலை எவ்வளவு அழகாக இருக்கிறது!’ என்றாராம். அதற்கு அந்தக் கண் தெரியாதவர், ‘மலையா? அத்தகைய ஒன்றை என்னால் பார்க்க முடியவில்லை. நீங்கள் என்னிடம் பொய் சொல்கிறீர்கள்’ என்றாராம்.”
அருள்பணி:
“மிகவும் சரியாகச் சொன்னீர்கள். தனக்குத் தெரியவில்லை அல்லது புரியவில்லை என்றால், அத்தகைய ஒன்றே இல்லை என்று சொல்வது அபத்தமானது.”
அகஸ்டின்: “அப்படியென்றால், ஆன்மிக வாழ்வைப் பொறுத்தமட்டில் எங்களுக்குச் சொல்லப்படுகின்றவற்றை நாங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டுமா?”
அருள்பணி:
“அப்படிச் சொல்லவில்லை. நம் ஆன்மிக வாழ்வின் அங்கங்களைப் புரிந்துகொள்ள அறிவைப் பயன்படுத்துவது தவறில்லை என்றாலும், அறிவின் எல்லைக்குள்ளேயே நாம் சிறைப்பட்டுவிடக்கூடாது என்றுதான் சொல்கின்றேன். இன்னும் சொல்லப்போனால் இன்றைய சூழ்நிலையில் ஆன்மிகத்தைப் பற்றிய ஏராளமான ஆய்வுகளை உளவியலும் அறிவியலும் மேற்கொள்கின்றன. இவை அனைத்துமே ஆன்மிகத்தை
அறிவின் கண்கொண்டு அணுகுவதற்கான முயற்சியே! அறிவின் கண்கொண்டு ஆன்மிகத்தைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது நல்லது என்றாலும், அது போதுமானது அல்ல; அது நம் வாழ்வை உயர்த்தப்போவதில்லை. ஆன்மிகத்தின் ஆழத்தைப் புரிந்துகொள்ள, கொஞ்ச நேரமாவது அமைதியாக இருந்து நம் அறிவையும் தாண்டிச் செல்ல முனைவது மிகவும் அவசியமானது. அத்தகைய முயற்சியே ஆன்மிகம் சுட்டிக்காட்டும் அனுபவத்தை நாம் நமதாக்குவதற்கு உதவியாயிருக்கும். இத்தகைய ஆன்மிக அனுபவமே நம் வாழ்வின் ஆழத்தையும் மகிழ்வையும் கூட்டும்.”
மார்த்தா:
“பாதர், நான் ஓர் உதாரணம் சொல்லலாமா? பிரியாணி பற்றிய எல்லாச் செய்திகளையும் பிறரிடமிருந்தும் இணையத்திலிருந்தும் சேகரிப்பதால் நம் வயிறு நிரம்பிவிடாது. பிரியாணி பற்றிய தகவல்கள் நமக்குத் தேவை என்றாலும், அதைத் தயாரித்து உண்பதே சிறந்ததாகவும் பயன்தருவதாகவும் இருக்கும்.”
கிறிஸ்டினா: “தந்தையே, ஆன்மிகத்தைப் பற்றி இன்று உளவியலும் அறிவியலும் நிறைய ஆய்வுகள் மேற்கொள்வதாகச் சொன்னீர்கள். நாங்கள் சென்ற வாரம் கேட்ட கேள்வியைக் குறித்து, அதாவது 2000 ஆண்டுகளுக்கு
முன்பு வாழ்ந்த கிறிஸ்து எவ்வாறு இப்பொழுது ஆலயத்தில் பிரசன்னமாயிருக்கிறார் என்பது குறித்து இன்றைய அறிவியல் பின்னணியில் நாம் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பு உண்டா தந்தையே?”
அருள்பணி: “நம் ஆலயங்களில் கிறிஸ்துவின் பிரசன்னம் உண்டு என்பதைப் புரிந்துகொள்ளும் பொருட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட ஓர் அறிவியல் ஆய்வை நாம் நம் கண்முன் கொண்டு வரலாம். ஆய்விற்குச் செல்வதற்கு முன்பாக ஓர் உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களாகிய நமக்கு இருவகையான உடல்கள் உள்ளன. ஒன்று சதை உடல் (gross body); மற்றொன்று ஆற்றல்
உடல் (enegry body). சதை உடலை
உயிரோடும் உயிர்ப்போடும் வைத்திருப்பது ஆற்றல் உடலே! ஆற்றலை உடலில் அதிகமாக ஆக்குகின்றபோது, வெறுமனே உயிரோடு இருக்கிற உடல், உயிரோட்டமானதாக மாறிவிடுகிறது. குழந்தைகள் உயிரோட்டத்துடன் இருப்பதற்கான காரணம் அவர்களது உடலில் ஆற்றலின் அளவு அதிகமாக இருப்பதே!”
கிறிஸ்டினா:
“இதற்கும் இயேசுவின் பிரசன்னத்திற்கும் என்ன தொடர்பு தந்தையே?”
அருள்பணி:
“இராபர்ட் தே கிராண்டிஸ் என்கின்ற
அமெரிக்காவைச் சேர்ந்த அருள்பணியாளர் தனது ‘Healing Through the Eucharist’ என்ற புத்தகத்தில் குறிப்பிடும் நிகழ்வு இது. அமெரிக்காவின் விண் வெளித்துறை நாசா! (NASA - The National Aeronautics and Space Administration). அங்கு ஆராய்ச்சி அறிவியலாளராக (research scientist) ஒரு நபர் பணி செய்து வந்தார். அவரது ஆராய்ச்சியின் ஒரு முக்கியப் பகுதி, விண்வெளிக் கலன்களில் பயணம் செய்யும் மனிதர்களின் ஆற்றல் உடலைப் பூமியிலிருந்தபடியே ஆய்வு செய்வது. அதன் மூலம் அவர்கள் எத்தகைய மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது. தன் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக அவர் மருத்துவமனைக்குச் சென்று அங்கிருந்த நோயாளிகளின் ஆற்றல் உடல் சார்ந்த பரிமாணங்களை ஆய்வு செய்து வந்தார். இந்த ஆற்றல் உடலை Kirlian கேமரா
வழியாகப் புகைப்படம் எடுக்க முடியும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தனது ஆராய்ச்சியில் மனிதர்களது
சதை உடல் இறப்பதற்குச் சில மணித்துளிகள் முன்பாக ஆற்றல் உடல் முழுவதுமாக மறைவதைக் கண்டுபிடித்தார். அதாவது, ஆற்றல் உடல் மறைந்த சில நிமிடங்களில், ஒரு மனிதர் முழுவதுமாக இறக்கிறார் என்பதே அவரது கண்டுபிடிப்பு. இதைப் பல்வேறு ஆய்வுகள் வழியாக உறுதிப்படுத்தினார். ஒருமுறை ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் தன் உதவியாளரோடு, மரணப்படுக்கையில் இருந்த நோயாளி ஒருவர்மீது தன் பரிசோதனையை மேற்கொண்டிருந்தார். நோயாளி இருந்த அறைக்கும், தான் இருந்த அறைக்கும் இடையே கண்ணாடி தடுப்பு வைத்துக்கொண்டு அந்நோயாளியின் ஆற்றல் உடல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அந்நோயாளியின் ஆற்றல் உடல் முழுவதுமாக மறைவதைக் கண்டார். இன்னும் ஒருசில நிமிடங்களில் அந்த நோயாளி இறந்து விடுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால், அந்த இடைவெளியில் அந்நோயாளியின் அறைக்கு ஒருவர் வருவதைப் பார்த்தார். அவரது சட்டைப் பையிலிருந்து அதீதமான ஒளி வருவதை அவரது கேமரா பதிவு செய்தது. அந்நபர் தன் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தபோது, வேறொன்றும் தெரியாத அளவிற்கு ஒட்டுமொத்த அறையே மிகப் பிரகாசமான ஒளியினால் நிரம்புவதை அவரது கிர்லியன் கேமரா பதிவு செய்தது. மேலும், நோயாளியின் மறைந்த ஆற்றல் உடல் மீண்டும் வளர ஆரம்பிப்பதையும் பார்த்தார்.”
மார்த்தா: “என்ன ஆச்சரியம்! அங்கு என்ன நடந்தது பாதர்?”
அருள்பணி:
“அந்த அறிவியலாளர் நோயாளியின் அறைக்குச் சென்றபோது, ஒரு குருவானவர் கிறித்தவரான அந்த நோயாளிக்கு நற்கருணை வழங்கியதை அறிந்துகொண்டார். அங்கு மிக ஆற்றலோடு ஒளிவீசுவதற்குக் காரணமாய் இருந்தது அவர் கொண்டு வந்த நற்கருணையே என்பதையும் புரிந்துகொண்டார். இத்தகைய ஆய்வுக்குப்பின் அந்த அறிவியலாளரின் வாழ்வே மாறிவிட்டது. ஐம்பது வயதுக்கு மேற்பட்ட அவர் குருவாக மாறுவதற்காகக் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாராம்.”
அகஸ்டின்:
“நற்கருணையில் இயேசுவின் ஆற்றல் உடல் மிகவும் வலிமையோடு பிரசன்னமாய் இருந்து, நம் ஆற்றலையும் வல்லமையையும் அதிகமாக்குகிறது என்பதை மிகத் தெளிவாக இந்நிகழ்வு எடுத்துரைக்கிறது தந்தையே!”
(தொடரும்)