பொதுவாக அமைதி இருவகைகளில் வெளிப்படுகிறது. புயலுக்குப் பின் ஏற்படுவது முதல் வகை அமைதி. ஒருவிதத் துடிப்போ, துயரமோ எதுவும் இன்றி அப்படியே சலனமற்று இருப்பது மறுவகை அமைதி. இதில் இயேசுவின் பிறப்பு எந்த வகை அமைதியை அளித்தது?
இயேசுவின்
பிறப்பு இருவகை அமைதியையும் கொண்டு வந்தது. ஒருவர் கொண்டிருந்த
மன நிலையைப் பொருத்தே அந்த இருவகை மனநிலைகளில் ஒன்று அவருக்குக் கிட்டியது. அங்ஙனமே அவை இரண்டும் இருவேறு விளைவுகளையும் உலகில் ஏற்படுத்தியது.
புயலுக்கு பின்
அமைதி
புயலுக்கு
பின் அமைதி என்கிற முதல்வகை அமைதியை இயேசு பிறப்பு தந்தது என்றால், பிறந்த பாலன்
இயேசு முதலில் புயலாக அமைந்திருப்பாரோ? அதன் பின்பு அமைதியைத் தந்திருப்பாரோ? என்கிற கேள்விகள் எழுகின்றன. ஆம்! அவருடைய பிறப்பு பலருக்குப் பல தருணங்களில் புயலாகவே
இருந்தது. சில தருணங்களில் சிலருக்கு மட்டுமே அமைதியைத் தந்தது. உதாரணமாக, கடவுளின் தூதர் கன்னியான மரியா முன் தோன்றி “இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்” என்று
கூறியபோது மரியா அமைதி பெறவில்லை; மாறாக கலக்கமடைந்து, “இது எப்படி நிகழும்? நான் கன்னியாயிற்றே!” என்று
குழம்பி நின்றார். புயலை விட அழுத்தமான பாதிப்புக்குள்ளானது அவர் மனது. அந்த நேரத்தில் அவருக்கு அதே வானதூதரால் முறையான விளக்கம் கொடுக்கப்பட, அதை
ஏற்றுக்கொண்டு அதன் பின்பு அவர் மனம் அமைதியானது. அமைதியான அவர் அந்த அமைதியை, தான் மட்டும் அனுபவித்து அயர்ந்து விடவில்லை; மாறாக, அடுத்திருப்பவரிடமும் குறிப்பாக, தேவையிலிருப்போரிடம் வழங்குவதற்காக எலிசபெத் இல்லத்திற்கு ஓடிச்சென்று
அவரை வாழ்த்துகிறார். மரியாவின் வாழ்த்து
கேட்டு எலிசபெத் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ந்து துள்ளியது.
இப்படியாக மரியா பெற்ற அமைதி தேவையிலுள்ள அடுத்தவருக்கும் பகிரப்பட்டு ஆனந்தத்தை அளித்து மகிழ்ந்தது.
அதேபோல்
மரியாவோடு மண ஒப்பந்தமாயிருந்த யோசேப்பு மரியா
கருவுற்றிருப்பதை அறிந்து அமைதியோ ஆனந்தமோ அடையவில்லை; மாறாக, மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி,
மரியாவை மறைவாக விலக்கிவிடவே
திட்டமிடுகிறார். பின்பு இறைவனின் திட்டம் அவருக்குக் கனவில் வெளிப்படுத்தப்பட, முறையான விளக்கம் பெற்ற யோசேப்பு அமைதி அடைகிறார். அதன்பின் மரியாவை மிகுந்த அன்போடு கவனிப்பதில் ஆர்வம் காட்டுகிறார். அதுவே அவர் பெற்ற அமைதியின் விளைவாக வெளிப்படுகிறது.
அதேவேளையில், கீழ்த்திசை
அறிஞர்களின் வாயிலாக இயேசுவின் பிறப்பை அறிந்துகொண்ட ஏரோது மன அமைதி பெறவில்லை; மாறாக,
மனக் குழப்பமும் எரிச்சலும் பெற்று அவரைக் கொன்றுவிடத் துடிக்கிறான், சதித்திட்டம் போடுகிறான்.
ஆக,
இயேசுவின் பிறப்பு குறித்து அறிந்த நேரத்தில் மரியா, யோசேப்பு, ஏரோது போன்றோர் முதலில் குழப்பமும் கலக்கமும் பெற்று, ஒரு புயலின் தாக்கத்தையே தங்கள் மனங்களில் பெறுகின்றனர். பின்பு மரியாவும், யோசேப்பும் அமைதியைப் பெற, ஏரோதோ எரிச்சலை அடைகின்றான். அதற்குக் காரணம் அவனின் மனநிலையே.
“உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக”
(லூக் 2:14) எனும் வானவர் செய்தி மரியா,
யோசேப்பு இருவரிடமும் அமைதியைத் தந்தது. காரணம், அவர்களிடம் ஆண்டவருக்கு உகந்த நல்மனநிலை இருந்தது. எனவே, இயேசுவின் பிறப்பு முதலில் அவர்களுக்குக் கலக்கத்தை, குழப்பத்தை ஒரு புயல் போல உண்டாக்கினாலும், தெளிவு பெற்றபின் அவர்களுக்கு அமைதியைக் கொடுத்தது.
அப்படி
அவர்கள் பெற்ற அமைதி அவர்களுக்குள் மட்டுமே முடங்கி விடாமல் அடுத்தவருக்கும் எட்ட துடிப்பைக் கொடுத்தது. புயல்போலச் செயல்படும் தொடர் ஆற்றலையும் அளித்தது. அவர்களிடமிருந்த ஆண்டவருக்குகந்த நல்மனமே
அதற்குக் காரணமாகவும் இருந்தது. ஆனால், ஏரோதிடம் நல்மனம் இருக்கவில்லை. தன் பதவியின் மேல் கொண்ட அதீத ஆசையால் தனக்கு எதிராக மற்றொருவர் வந்துவிடுவாரோ என்கிற பயத்தால் இயேசுவின் பிறப்பு குறித்து கேள்விப்பட்டு, கலக்கமுற்று எரிச்சல் அடைகிறான்; அமைதி இழக்கிறான். அந்த எரிச்சல் மனநிலையும் புயல் போல செயல்பட்டு அந்நாட்டில் இருந்த அத்தனை ஆண் குழந்தைகளையும் கொல்வதற்கு உத்தரவிடுகிறது.
ஆக,
இயேசுவின் பிறப்பு நல்ல மனம் கொண்டவர்களுக்கு அமைதியை அளித்ததுடன், அது அடுத்தவருக்கும் தொடர்ந்து கிடைக்க ஆற்றலைக் கொடுக்கிறது. அங்ஙனமே, தீய மனம் கொண்டவர்களுக்கு அமைதியை இழக்கச் செய்வதுடன் அந்த அமைதி அடுத்தவருக்கும் எட்டி விடாமல் அழிவைத் தருகிறது.
சலனமற்று உறைந்து
கிடக்கும்
அமைதி
இயேசுவின்
பிறப்பு அறிவிப்பு இடையர்கள், கீழ்த்திசை அறிஞர்கள் போன்றவர்களுக்குச் சலனமற்று உறைந்து கிடக்கும் இரண்டாம் வகை அமைதியைத் தருகின்றது. இவர்களுக்கு இயேசுவின் பிறப்பு அறிவிப்பு எவ்விதக் குழப்பத்தையும் கொடுக்கவில்லை, புயலையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, பிறந்த இயேசுவைத் தேடிச்செல்லும் ஆர்வத்தைக் கொடுத்தது என்பதை நாம் பார்க்கிறோம். அதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த எளிய மனமே.
எவ்வித
முன் தீர்மானமும் இன்றி தாங்கள் கேள்விப்பட்டதை என்ன? ஏது? என்று
அறிந்து கொள்ளத் துடிக்கும் ஒருவிதத் தேடுதல் உள்ள எளிய மனம் அவர்களிடம் இருந்தது. எனவே, அவர்கள் அவரைக் காண ஓடோடி வருகின்றனர். எளிய மனம் கொண்ட இவர்கள் இயேசுவைக் கண்டதும் தங்கள் மனத்தில் அமைதி பெறுகின்றனர். ஆனந்தம் அடைகின்றனர். ஆனால் அந்த அமைதியை, ஆனந்தத்தை அடுத்து இருப்பவருக்குக் கொடுக்கவில்லை. மாறாக, தங்களுக்குள்ளேயே அனுபவித்துக் கொள்கிறார்கள்.
இறுதியாக,
இயேசுவின் பிறப்புச் செய்தி கேட்கின்ற எல்லாருக்கும் அமைதியாக அமையவில்லை, அமைதியைத் தரவில்லை. மாறாக, நல்ல
மனமும், எளிய மனமும் உடையவர்கள் மாத்திரமே அந்த அமைதியைப் பெற்றார்கள் என அறிகிறோம். எனவே,
இயேசுவின் பிறப்பு நமக்கு அமைதியைத் தர வேண்டும் என்றால்,
முதலில் அதற்கு நாம் எளிய மனத்தையோ அல்லது நல்ல உள்ளத்தையோ பெற்றவர்களாக இருக்க வேண்டும். நல் மனத்தால் விளைந்த அமைதி, தான்
பெற்றதைப் பிறருக்கு அளித்து மகிழ்வதில் ஆர்வம் காட்டும். எளிய மனத்தோடு இயேசுவைக் காணத் தேடுவோர் அவரை அமைதியில் கண்டு மகிழ்வர்.
பிறக்கும்
பாலன் நம்மில் பிறக்க அதன் வழி நாமும் புதிதாய் பிறக்க வாழ்த்துகள்!
“நம்ம பிளாட்டுக்கு கிறிஸ்துமஸ் கேரல் குழுவினர் வர்றாங்களாம். நம்ம வீட்டுக்கும் வருவாங்க” என்றாள் மார்கிரட்.
“கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரா மம்மி?” ஆவலோடு கேட்டான் டோனி.
“ஆமா, கட்டாயம் வருவாரு” பதிலளித்தாள் மார்கிரட்.
டோனி
யூ.கே.ஜி. படிக்கிறான்.
தாய் மார்கிரட் குடும்பத் தலைவி. தந்தை
பீட்டர் வங்கி அதிகாரி.
கிறிஸ்துமஸ்
தாத்தாவைப் பார்க்கப் போகிறோம் என்று நினைத்தவுடன் மகிழ்ச்சியில் துள்ளினான் டோனி. அவரைப் பற்றிய கற்பனை சிறகடித்து பறந்தது.
‘கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு அண்டார்டிக் பனிப் பிரதேசத்தில் ஒரு தொழிற்சாலை இருக்கிறது. ஏராளமான குட்டி சம்மனசுகள் வேலை பார்க்கிறார்கள். அந்தத் தொழிற்சாலையில் வருடம் முழுவதும் விதவிதமான பொம்மைகள்
தயாரிக்கிறார்கள். கிறிஸ்துமஸ்
சீசன் தொடங்கியவுடன் பனிச்சறுக்கு வண்டியில் அந்தப் பொம்மைகளைப் பொட்டலமாகக் கட்டி வண்டியில் போட்டு கிறிஸ்துமஸ் தாத்தா ஊருக்குள் வருகிறார். நடு
இரவில் அனைவரும் தூங்கும்போது ஒவ்வொரு வீட்டின் புகைக் கூண்டு வழியாக இறங்கி அந்த
வீட்டிலிலுள்ள குட்டிப் பிள்ளைகள் தலைமாட்டில் பொம்மையை வைத்து விட்டு போகிறார்’ என்று
கார்ட்டூன் படத்தில் பார்த்தது டோனி மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது.
முழுவதையும்
அப்படியே நம்ப முடியாவிட்டாலும் கிறிஸ்துமஸ் தாத்தா வருவார், நிச்சயம் பரிசு தருவார் என்று நம்பினான்.
அதனால் தூங்காமல் ஆவலோடு காத்திருந்தான் டோனி.
கேரல்
பாட்டு சப்தம் கேட்டது. கதவைத்
திறந்தார் பீட்டர். ஆவலோடு
ஓடி வந்து ‘கிறிஸ்துமஸ் தாத்தா வந்திருக்கிறாரா?’ என்று எட்டிப் பார்த்தான் டோனி. கிறிஸ்துமஸ் தாத்தா நின்று கொண்டிருந்தார். ஆனால்,…அவனது கற்பனை தகர்ந்தது! பாவம் ஒல்லியாகப் பரிதாபமாக இருந்தார் கிறிஸ்துமஸ் தாத்தா. கசங்கிய சிகப்பு டிரஸ். பாலிஷ் போடாத அழுக்கு ஷூ. ஒழுங்கில்லாத குல்லா. தோளில்
ஓர் அழுக்குத் துணிப்பை.
கேரல்
குழுவினர் கிறிஸ்து பிறப்புப் பாடல்களைப்
பாடத் தொடங்கினார்கள். தாத்தா நடனமாடினார். பிறகு காணிக்கைப் பையை நீட்டினார். டோனியின் தந்தை நூறு ரூபாய் நோட்டை டோனி கையில் கொடுத்து போடச் சொன்னார். தாத்தா ஆளுக்கு ஒரு சாக்லெட் கொடுத்தார். ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்று
கைகொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
பரிசு
கொடுப்பார் என்று நினைத்த கிறிஸ்துமஸ் தாத்தா, பணம் வாங்கிக் கொண்டு சென்றதைப் பார்த்ததும் டோனியின் மனது வேதனையில் துடித்தது.
‘ஏழைக் குழந்தைகளுக்குப் பரிசு வாங்க பணம் வாங்கிட்டு போறாரு’ என்று சமாளித்தாள் மார்கிரட்.
கிறிஸ்துமஸ்
நேரங்களில் புற்றீசல் போல் பல குழுக்கள்
‘கேரல்’ என்ற
பெயரில் வீடு வீடாகச் சென்று சில பாடல்களைப் பாடிவிட்டு, கிறிஸ்துமஸ்
தாத்தாவை ஆட வைத்துப் பணம்
வசூலிப்பது வழக்கமாகிவிட்டது.
‘பணம் வசூலிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்காகக் கிறிஸ்துமஸ் தாத்தாவை இப்படி இழிவுபடுத்துவதா?’ மார்கிரட் மனம் வருந்தினாள். மகனின்
ஏமாற்றத்தை மாற்றத் தீர்மானித்தாள்.
அடுத்த
நாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவுடன்
டோனிக்கு ஒரே ஆச்சரியம்.
வீடு
முழுவதும் வண்ண வண்ண பலூன்கள். சரிகை
பேப்பர் அலங்காரம். கண் சிமிட்டும் விளக்குகளில் காட்சியளித்த கிறிஸ்துமஸ் மரம். பரிசுப்
பொட்டலங்கள். பாலன் இயேசு சுரூபம் அலங்கரிக்கப்பட்டு நடுவில் வைக்கப்பட்டிருந்தது. மகிழ்ச்சியோடு ஓடி வந்து அம்மா கன்னத்தில் முத்தமிட்டான் டோனி.
“இன்னைக்கு நம்ம வீட்டுல கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப் போறோம். உன் நண்பர்கள் எல்லாரையும் அழைச்சிருக்கேன்” என்றாள் மார்க்கிரட்.
“அப்படியா... ஜாலி” என்று துள்ளினான்.
“கிறிஸ்மஸ் தாத்தா?”
“நீதான் கிறிஸ்துமஸ் தாத்தா. நீதான் உன் நண்பர்களுக்குப் பரிசு கொடுக்கப்போறே” என்று
அவனுக்கு வாங்கி வந்திருந்த கிறிஸ்துமஸ் தாத்தா டிரஸ்ஸைக் காட்டினாள்.
மாலையில்
கிறிஸ்துமஸ் தாத்தா உடையணிந்து நண்பர்கள் வருகைக்காகக் காத்திருந்தான் டோனி. பீட்டரின் குடும்ப நண்பர்களும், டோனியின் பள்ளித் தோழர்களும் பெற்றோர்களுடன் வந்தார்கள். டோனியைக் கிறிஸ்துமஸ் தாத்தா உடையில் பார்த்ததும் நண்பர்களுக்கு
அளவற்ற ஆனந்தம்!
விழா
தொடங்கியது. அனைவரும் கேரல் பாடல்களைப் பாடினார்கள். டோனி
கிறிஸ்துமஸ் கேக் வெட்ட ‘விஷ் யூ ஏ மெரி
கிறிஸ்மஸ் அண்ட் கேப்பி நியூ இயர்’ பாடல் பாடப்பட்டது. டோனி தனது நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கினான். நண்பர்கள் ‘ தாங்ஸ்’ என்று கைகுலுக்கினார்கள். டோனி மனம் ஆனந்தத்தால் துள்ளி குதித்தது. பரிசு வாங்குவதைவிட, பரிசு கொடுப்பதில் எவ்வளவு ஆனந்தம்! பரிசு வாங்கும்போது நாம் மட்டும் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு கொடுக்கும் போது வாங்குகிற ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைகிறார்களே! பிறருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதுதானே உண்மையான கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! டோனியின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது அன்றைய அனுபவம்.
இன்று
டோனி ஒரு பெரிய தொழிலதிபர். ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா மிகச் சிறப்பாக அவனது தொழிற்சாலையில் நடைபெறுகிறது. ஊழியர்களின்
குழந்தைகளுக்கு டோனியே கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறி பரிசுகளை வழங்கி வருகிறான்.
இத்தாலி நாட்டில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில், 1955 -ஆம் ஆண்டு பிராங்கோ பிறந்தான். சிறுவனாக இருக்கும்போதே தன் பெற்றோரை இழந்து அநாதையானான். காலப்போக்கில் குடிபோதைக்கு அடிமையாகி திசைமாறிய பறவையானான். 30 ஆண்டுகள் பிச்சைக்காரனாக, உரோமைநகர் வீதிகளையே உறைவிடமாகக் கொண்டு வாழ்ந்தான். 2016 -ஆம் ஆண்டு நவ. 19 -ஆம் தேதி, புனித பேதுரு சதுக்கத்தில், போப் பிரான்சிஸ் நிறைவேற்றிய ‘இரக்கத்தின் வெள்ளிவிழா’… திருப்பலியில் பங்கெடுத்தான். சோகமே உருவான பிராங்கோ, இரக்கம் ததும்பி வழியும் திருத்தந்தையின் கண்களில் படுகின்றான்.
திருப்பலி
முடிந்தவுடனே திருத்தந்தை பிரான்சிஸ் பிராங்கோவைத் தேடிவந்து, தனிமரமாகக் கவலையுடன் நின்றவனின் கரங்களைப் பற்றிக்கொண்டு நலம் விசாரிக்கிறார். அவன் கண்ணீர் சிந்தியவனாக, “நான் ஓர் ஏழை, இவ்வுலகில் எனக்கென்று யாருமில்லை” என்று
கதறி அழுதவனை இறுக அரவணைத்து, அவனுக்கு உணவு, உறைவிடம், நிரந்தரப் பணியிடம் வழங்கி அவனது வாழ்க்கையில் விடியலாகத் திகழ்ந்தார்.
இந்த
நிகழ்வு திருத்தந்தை அவர்களின் உள்ளத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. எனவே, ஏழைகளின் விடியலாக வரப்போகும் தெய்வீகக் குழந்தை இயேசுவின் திருவருகைக் காலத்திற்கு முன், 33 -ஆம் ஞாயிறை, ஏழைகளின் ஞாயிறு திருவிழாவாக 2017 -இல் திருத்தந்தை பிரான்சிஸ் ஏற்படுத்தி, உலகமெங்கும் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றும் வெள்ளி நிலவாகத் திகழ்கின்றார். நம்மை மீட்க வந்த மெசியாவின் வழித்தோன்றலாகவும் வாழ்ந்து வருகிறார்.
பொதுவாக
உலகிலுள்ள பிற சமயங்களை நோக்கும் போது, மனிதனின் இதயத்தில் இறைவனைத் தேடும் ஓர் உந்துதல் இருக்கிறது. இறைவனைத் தேடும் மனிதன், அவரில் சங்கமம் ஆகும்வரை இது ஒரு தொடர் நிகழ்வே! இந்த வாழ்க்கையே ஒரு தேடலாக அமைகிறது.
தங்களின்
முழுவிடுதலைக்காக மெசியா பிறப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்களின் விடிவெள்ளியாக இயேசு கிறிஸ்து தோன்றினார் (மத்
1:8-25, யோவா
1:1-14). இவரை நம்பும் யாவரும் மீட்கப்பட்டு கடவுளின் பிள்ளைகளாகிறோம் (கலா 4:4-5).
ஈராயிரம்
ஆண்டுகளுக்கு முன்பு இயேசு இம்மண்ணில் தோன்றினார் என்று இறை நம்பிக்கையற்ற வரலாற்று அறிஞர்கள்கூட ஏற்றுக்கொள்கின்றனர். அவரது பிறப்புப் பெருவிழாவை ஆண்டுதோறும் அகமும், முகமும் மலர சமூகக் கொண்டாட்டமாக நாம் கொண்டாடி மகிழவேண்டும். ஆனால், இன்று அது வணிகக் கொண்டாட்டமாக மாறிவிட்டது! திருவிவிலியக் கண்ணோட்டத்துடனும், திரு அவையின் பாரம்பரியத்தின் பார்வையிலும் நோக்குவோமென்றால், இப்புனித நிகழ்ச்சி நம் வழியாகத் தொடர்ந்து நிகழும் தொடர் நிகழ்வாகும்.
மனுவுரு
எடுத்து வரலாற்றில் வாழும் கிறிஸ்துவை இறைவார்த்தை, அருளடையாளங்கள், திரு அவை வழியாக மட்டுமல்ல, தங்கள் சொந்த இறையனுபவத்திலும் பல புனிதர்கள் சந்தித்துள்ளனர்.
உதாரணம் புனித பிரான்சிஸ் அசிசியார். மனுவுரு எடுத்துள்ள இயேசுவின் பிரசன்னம், இறைவனை அதிகமாக அறிந்துகொள்ளும் வாயிலாகத் திகழ்கின்றது. இந்த மனித தெய்வமே, எளிமை, ஏழ்மை, எளியோரை அன்பு செய்யக் கற்றுக் கொடுக்கின்றார். அதேபோன்று புனித இஞ்ஞாசியார், “மனிதனாகப் பிறந்த மரிமகன் இயேசுவை ஆழமாக அன்புசெய்ய உமது அருளைத் தாரும் என்று இறைவேண்டல் செய்ததுடன், அவரே நம் அர்ப்பண வாழ்வுக்கு உன்னத மாதிரியாகவும் நமது பணிவாழ்வுக்கு முன்னோடியாகவும் விளங்குகின்றார்” என்கிறார்.
தம்மையே
தந்த விடிவெள்ளி, உலகிற்கு விடியலாக வந்த வெள்ளி நிலா இறைமகன் இயேசு, தமது திருப்பணியின் தொடக்கத்திலேயே தமது வாழ்வின் இலக்காக ஏழைகளுக்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோருக்கு விடுதலை அளிக்கவும், பார்வையற்றோருக்குப் பார்வை கொடுக்கவும் வந்ததாகக் கூறுகின்றார் (லூக் 4: 18-19).
திண்டுக்கல்
அருகே பார்வையற்ற ஒரு பெண்மணி, 45 பார்வை இழந்தவர்களுக்காக ஓர் அறக்கட்டளை நடத்தி வருகிறார். ஒருமுறை நான் அவரைச் சந்தித்தபோது, “பார்வையற்ற நீங்கள் எதையும் செய்ய சிரமப்படுவீர்களா?” என்றதற்கு, “எங்கள் அன்றாடத் தேவைகளையும் வேலையையும் செய்யப் பயிற்சி எடுத்துக் கொள்கிறோம். அதற்கப்பால் வாசிப்பது, ஆள்களின் குரலைக் கொண்டு அவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்குச் சிரமமில்லை. ஆனால், ஒன்றே ஒன்றுதான் நீங்கள் செய்வதை என்னால் செய்ய முடியாது”
என்று பேச்சை நிறுத்தினார். அவரது மனக்குறை என்னவாக இருக்கும் எனத் தெரிந்து கொள்ளும் ஆவலில், “பார்வையற்றவர்களுக்காக இதை நடத்துவதில் சிரமமா?” என்றேன். அதற்கு அவர், “பார்வையற்றவர்களுக்குப் பார்வை கொடுத்த இயேசப்பா, உங்களைப்போல நல்மனம் கொண்டவர்கள் வழியாக இன்றும் வாழவைக்கிறார். ஆனால், உங்களைப்போல கண்தானம் செய்ய முடியாதே”…
என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறிய போது, என்னையும் அறியாது கண்களில் கண்ணீர் கசிந்தது. ‘இருளும் ஒளியாகும்’
என்னும் சொல்லாட லுக்கேற்ப, அந்தப் பார்வை இல்லாத பெண் என் கண்களைத் திறந்தார். நானும் கண்தானம் செய்வதென்று அன்று முடிவு செய்தேன்.
மனுவுரு
எடுத்து விடிவெள்ளியாகத் திகழும் (திவெ 22:16) இயேசுவின் வழியில் நாமும் நடந்து, புதிய உலகம் படைக்கும் விடியல்களாகத் திகழ்வோமாக!
அனைவருக்கும் கிறிஸ்துமஸ்
நல்வாழ்த்துகள்!
விவரிக்க இயலாத கொடுமைகளால் பெரும்பான்மையான அடித்தட்டு மக்கள் விடுதலைக்காகவும் நீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் கடவுளைத் தேடிய காலத்தில், ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்ட காலத்தில், விடுதலை நல்கும் மெசியாவின் வருகை நிகழ வேண்டும் என ஏக்கத்தோடு எதிர்பார்த்த காலத்தில் கடவுளின் பதிலிறுப்பே 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த மாபெரும் வரலாற்று நிகழ்வான கிறிஸ்து பிறப்பு! மீட்பு வரலாறும், திருவிவிலிய வரலாறும் இதை உண்மைப்படுத்தி, உறுதிப்படுத்துகிறது.
விடுதலைக்காகவும்
நீதிக்காகவும் அமைதிக்காகவும் வாழ்வின் விழுமியங்களுக்காகவும் ஏழை எளிய சராசரி மக்கள் அழுகுரலோடு ஆண்டவரைத் தேடிய காலத்தில் கடவுள் தம் மகனையே உலகின் மீட்புக்காகவும், ஏழைகளின் ஒட்டுமொத்த விடுதலை வாழ்வுக்காகவும் இந்த உலகில் மனிதராகப் பிறப்பெடுக்கச் செய்த நிகழ்வே கிறிஸ்து பிறப்பு நிகழ்வாகும். எனவே, இன்றைய காலகட்டத்தில் நாம் சந்திக்கும் போராட்ட எதார்த்தங்களின் பின்னணியில், அதிலும் குறிப்பாக யூபிலி 2025-இல் எதிர்நோக்கின் காலமாக அழைக்கும் சூழலில் கிறிஸ்து பிறப்பு விழா நமக்கு விடுக்கும் செய்தி என்ன?
அகில
உலகத் திரு அவையின் இன்றைய பயணத்தின் எதார்த்தத்தில் மூன்று மிக முக்கியமான நிலைகளில், குறிப்பாக, கூட்டியக்கத் திரு அவையின் பார்வையில் (SYNODAL HIERARCHY), பொறுப்பும்
வெளிப்படைத்தன்மையும்
(ACCOUNTABILITY AND TRANSPARENCY), யூபிலி 2025: எதிர்நோக்கின்
திருப்பயணிகள் (JUBILEE 2025: A PILGRIMS OF HOPE) எனும் இச்சூழல்களில்
திரு அவையின் மிக முக்கியமான நிகழ்வுகளாக மட்டுமல்ல, அவை விடுக்கும் செய்தி இந்தக் காலத்தில் கடவுளின் குரலாகவும், தூய ஆவியாரின் செயல்பாடாகவும் அமைந்திருப்பதாக நாம் காண்கிறோம். போராடும் உலகுக்குக்
கடவுளின் பதிலிறுப்பே கிறிஸ்துவின் பிறப்பு!
கூட்டியக்கத்
திரு
அவையின்
பார்வையில்
கடவுளின்
பதிலிறுப்பு
‘கூட்டியக்கத் திரு அவை’
(SYNODAL CHURCH) என்னும் மையக்கருத்தில் 2021-ஆம் ஆண்டு அகில உலகம் முழுவதும் தலத் திரு அவைகளின் செவிமடுத்தல் மற்றும் தேர்ந்து தெளிதலின் அடிப்படையில் கூட்டியக்கத் திரு அவையின் பயணமானது ஆரம்பமானது. இப்பயணமானது பங்குகள் நிலையில், மறைமாவட்ட நிலையில், துறவற சபைகளின் பல்வேறு நிலைகளில், தேசிய நிலைகளில் கலந்துரையாடல்களும் கருத்தமர்வுகளும் கருத்துகளுக்குக் காரணமான செவிமடுத்தலும் வலியுறுத்தப்பட்டன.
அதன் அடிப்படையில் தலத் திரு அவைகளுக்கும் அகில உலகத் திரு அவையும், கூட்டியக்கத் திரு அவையாகச் செயல்பட திருவிவிலிய, இறையியல், அருள்பணிப் பார்வையில் தேர்ந்து தெளிதல் நடைபெற்றது.
இதுவரை
தலத்திரு அவைகளில் யாருக்கு இன்னும் நாம் செவிமடுக்க மறுத்திருக்கிறோமோ அல்லது மறந்திருக்கிறோமோ அவர்களின் குரலுக்குச் செவிமடுக்கவும், ஆதிக்கத் திரு அவையாக அல்ல, ஆளும் திரு அவையாக அல்ல, அன்பும் உண்மையும் அமைதியும் நீதியும் நிலவும் திரு அவையாக இணைந்து செயல்படவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
2022 -ஆம் ஆண்டு
தேசிய நிலையிலிருந்து கண்டங்கள் அளவில் கூட்டியக்கத் திரு அவையின் பாதையில் நம் பார்வையும் பயணமும் விரிவடைந்தது என்றாலும், தலத்திரு அவைகளின் முன் மொழியப்பட்ட கருத்துகளே அங்கும் சிந்தனைக்காகவும் செவிமடுத்தலுக்காகவும் இணைந்து செயல்படும் திரு அவைக்கான முன்னுரிமைகளாக, இறைவார்த்தையின் ஒளியிலும் சமூக எதார்த்தங்களின் பின்னணியிலும் ஆய்வு செய்யப்பட்டன.
இதுவரை
நடைபெற்ற 15 அகில உலக ஆயர் மாமன்றங்களில், தொகுப்பறிக்கைகளின் அடிப்படையில் திருத்தந்தை வெளியிட்ட திருத்தூது மடல்களின் பாரம்பரியத்தைக் கடந்து, 2024 அக்டோபர் 02 முதல் 27 வரை உரோமையில் நடைபெற்ற பொதுப்பேரவை மேற்கொண்ட வழிகாட்டுதல்கள், பரிந்துரைகள் மற்றும் முடிவுகளைத் திரு அவையின் ஆசிரியத்தின் ஏடாகத் திருத்தந்தை அறிவித்திருப்பது கூட்டியக்கத் திரு
அவையின் முதல் மறுமலர்ச்சிக்கான செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது.
தன்
அதிகாரத்தின் வெளிப்பாடாக ஓர் ஏட்டினை வெளியிடுவதை விட, பதினாறாம் ஆயர் மாமன்றத்தில் யாவரும் இணைந்து மேற்கொண்ட முடிவுகளையும் வழிகாட்டுதல்களையும் திருத்தந்தை அப்படியே அங்கீகரித்திருப்பது இன்றைய காலகட்டத்திற்குக் கடவுளின் குரலாக ஒலிக்கிறது.
திரு
அவை என்பது படிநிலை அமைப்பு என்பதைக் கடந்து, பங்கேற்கும் திரு அவை, பயணிக்கும் திரு அவை, பணியாளர் திரு அவை எனும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் பார்வையில் கூட்டியக்கத் திரு அவை, கூட்டொருங்கியக்கத் திரு அவை எனும் எதார்த்தத்தை ஒரு
புதிய வெளிச்சத்தை இன்று உலகில் பாய்ச்சியிருப்பது தூய ஆவியாரின் செயல்பாடு என்பதை மறுக்க இயலாது. அதிகாரம், அடக்குமுறை, ஆணவம், ஆதிக்கம், செல்வச்செருக்கு, பணபலம், எதேச்சதிகாரம், ஆணாதிக்கம், இனவெறி, சாதிய ஆதிக்க மனநிலை இவற்றைக் களைந்து விட்டு, செவிமடுத்தல், பிறரை மதித்துக் கலந்துரையாடுதல், பொதுக் குருத்துவத்தை உயர்வாக மதித்துப் பணி செய்வதே பணிக்குருத்துவம் என்பதைத் திரு அவைக்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது இந்த ஆயர் மாமன்றம்.
போராடும்
திரு அவைக்கும் உலகுக்கும் கடவுளின் பதிலிறுப்பாக அமைவதே இந்த மானுடலேற்பு மற்றும் கடவுளின் பதிலிறுப்பு. இது இன்றைய காலகட்டத்தில் கிறிஸ்து பிறப்பின் செய்தியாகவும் கடவுளின் குரலாகவும் அழைப்பாகவும் அறைகூவலாகவும் பார்க்கப்படுதல் நலமானது. மிகக் குறிப்பாக, பங்குத் தளங்களிலும் பணித்தளங்களிலும் மறைமாவட்டங்களிலும் அருள்பணியாளர்களும் ஆயர்களும் தங்கள் ஆதிக்க எதேச்சதிகாரப் போக்குகளை விட்டுவிட்டு, செவிமடுத்து பொது நன்மையை முன்னிறுத்திப் பணியாற்றுவது மிகவும் தேவையானது.
பொறுப்பும் வெளிப்படத்
தன்மையும்
மிகுந்த
பதிலிறுப்பு
இன்றைய
திரு அவையில் பல்வேறு சவால்களை, கடினமான சூழல்களைத் திரு அவை சந்தித்திருக்கிறது. மிகக் குறிப்பாக நிதி மேலாண்மை, சிறுவர் பாதுகாப்பு மற்றும் பொறுப்புகளில் உண்மைத்தன்மை மற்றும் கடமை உணர்தல் எனும் பல நிலைகளில் அருள்பணியாளர்களும்
ஆயர்களும் திரு அவையின் உயர் பொறுப்பில் உள்ளோரும் தவறிழைத்திருப்பதைப் பணிவுடனும், எதார்த்த மனநிலையுடனும் திரு அவை ஏற்றுக் கொண்டுள்ளது. நிதி முறைகேடு, பொதுப் பணத்தைக் கையாடல் செய்தல், முறையான கணக்குகளைப் பராமரிக்காமல் வீண் ஆடம்பரங்களுக்காகச் செலவிட்ட தவறுகள் என நிதி மேலாண்மையில்
திரு அவையில் உயர்மட்ட நிலையில் தொடங்கி, சாதாரண அருள்பணித் தலங்கள் வரை மிகக் கடினமான சூழல்களைத் திரு அவை சந்தித்திருக்கிறது. அதிலிருந்து சீர்படவும், தன்னையே உண்மையும் நம்பிக்கைத்தன்மையும் கடமையுணர்வும் நிறைந்த அமைப்பாகப் புதுப்பித்துக் கொண்டு பல்வேறு முயற்சிகளையும் காணத்தக்க மாற்றங்களையும் திரு அவை செயல்படுத்த முனைந்துள்ளது.
சவால்களின்
மத்தியிலும், நெருக்கடிகளின் மத்தியிலும் திருநிலையினர் வெளிப்படைத் தன்மையோடும் நம்பகத்தன்மையோடும் செயல்பட, திருத்தந்தையர்களின் அறிவுரைகளின் வழிகாட்டுதலில் திரு அவை தன்னையே புதுப்பித்துக்கொள்ள முன் வருவது பாராட்டுதற்குரியது.
நிதி
மேலாண்மைக்கு அடுத்து திரு அவையை அண்மைக் காலங்களில் உலுக்கிய மற்றொரு நிகழ்வு கடந்த காலங்களில் நிகழ்ந்த பாலியல் அத்துமீறல்கள். குறிப்பாக, சிறார்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள். இதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டுள்ள திரு அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, அவர்களுக்கு ஆதரவும் உரிய மாண்பும் தர உறுதியேற்றிருப்பது கடவுளின் குரலாக,
ஆவியானவரின் செயல்பாடாகக் காணப்படுகிறது. திரு அவையின் எல்லா நிலைகளிலும் பணித்தளங்களிலும் நிறுவனங்களிலும் வழிபாட்டுத் தளங்களிலும் சிறார் பாதுகாப்பும் மாண்பும் உறுதி செய்யப்பட்டுள்ளன. அத்துமீறுதல் செயல்பாடுகளுக்கும், சிறார் பாதுகாப்புக்கு எதிரானச் செயல்பாடுகளுக்கும் கடுமையான நடவடிக்கைகளும் தண்டனைகளும் அறிவிக்கப்பட்டது. தொடர் உருவாக்கப் பயிற்சிகள் அனைத்து நிலையினருக்கும் இன்று வழங்கப்படுகிறது.
2022 -ஆம் ஆண்டு
திருத்தந்தை பிரான்சிஸ் உருவாக்கிய சிறார் பாதுகாப்பு மற்றும் நலன், மாண்பு ஆகியவற்றுக்கான ஆணையம் 2023-ஆம் ஆண்டுக்கான தன் முதல் அறிக்கையைத் திருத்தந்தையிடம் வழங்கி தன் பரிந்துரைகளையும் தொடர் வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.
எதிர்நோக்கின்
திருப்பயண
யூபிலி பதிலிறுப்பு
2025-ஆம் ஆண்டு
இரண்டாம் வத்திக்கான் சங்க நிறைவின் 60 -ஆம் ஆண்டு வைர விழாவும், கிறிஸ்து பிறப்பின் 2025 -ஆம் ஆண்டுகளில் மகிழ்ச்சியான யூபிலி விழாவாகவும் சிறப்புமிக்க ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ நாம்
என்ற அழைப்பை யூபிலிக்கான மையப்பொருள்களாக முன்மொழிந்துள்ளார் நம் திருத்தந்தை.
2024 டிசம்பர் 24-ஆம்
தேதி மாலை உரோமை வத்திக்கானில் தூய பேதுரு பேராலயத்தில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா திருப்பலிக்கு முன்பாக, புனித கதவினைத் (Holy Door) திறந்து
வைத்து யூபிலி ஆண்டாகத் தொடங்கி வைக்க உள்ளார் நம் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘எதிர்நோக்கின் திருப்பயணிகளாக’ நம்
பயணத்தைத் தொடர மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் திருத்தந்தை. ஆயிரம் நாள்களைக் கடந்துள்ள இரஷ்ய-உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாகத் தன் ஆதரவு நிலைப்பாட்டையும் இங்கு அவர் வெளிப்படுத்துகிறார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரினால் காசாவில் நிகழ்ந்துள்ளது இனப்படுகொலையா? என ஆய்வு செய்யப்பட
வேண்டும் என அவர் அறைகூவல்
விடுத்திருப்பது அனைவரின் எதிர்நோக்குடன் கூடிய இறைவாக்குப் பணியாக அமைந்துள்ளது.
சுற்றுச்சூழல்
பாதுகாப்பு, புலம்பெயரும் மக்களுக்குப் புகலிடம், மூன்றாம் உலக ஏழை நாடுகளுக்கு வளர்ந்துள்ள நாடுகளின் கடமை என்பதை எல்லாம் திரு அவையின் குரலாக அவர் ஒலிப்பது, போராடும் உலகுக்குக் கடவுளின் பதிலிறுப்பாகவும் குரலாகவும் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள
இந்தக் காலத்தின் அருங்குறிகள் மற்றும் எதார்த்த நிகழ்வுகள் வழியாகக் கடவுள் நமக்குக் கொடுக்கும் அழைப்பு, “வாக்கு மனிதரானார்; நம்மிடையே குடிகொண்டார்” (யோவா
1:14) எனும் உண்மையே!
இயேசுவின்
பிறப்பு என்பது கொண்டாடப்பட வேண்டிய விழா மற்றும் ஆடம்பரக் கொண்டாட்டம் என்பதைக் கடந்து, போராட்டங்கள், சவால்கள், சறுக்கல்கள், இயலாமைகள் மத்தியிலும் மானிட குலத்துக்கு வழிகாட்டும் மற்றும் வழிநடத்தும் கடவுளாக, மண்ணையும் மக்களையும் தேடிவரும் கடவுளாக ‘திருவிவிலியத்தின்
கடவுள் என்றும் செயல்படுகிறார்’ என்பதே
இந்த ஆண்டின் கிறிஸ்து பிறப்பு உணர்த்தும் செய்தி!
நாம் வாழும் இந்த அழகிய உலகில் என்றுமில்லாத அளவுக்கு இன்று போர்மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. அமைதியின் அரசர் இயேசு பிறந்த புண்ணிய பூமியில், இஸ்ரேல்-பாலஸ்தீன மக்களிடையே ஓயாத போர், கிறித்தவர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் இரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே நிகழும் யுத்தத்தால் இருதரப்பு மக்களிடையே பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் ‘பைரிக் விக்டரியை’… (Pyrrhic Victory) போரின் பாதிப்பிற்கிடையே கொண்டாடி வருகின்றனர். ஏன், ‘மதங்களின் பிறப்பிடம்’ என்று பறைசாற்றிக் கொண்டிருக்கும் நமது நாட்டின் மணிப்பூர் மாநிலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மத, இனக்கலவர வன்முறைகளால் பற்றியெரிந்து கொண்டு இருக்கின்றது. இவ்வன்முறையைத் தூண்டியதும், இதை நடத்துவதும் மாநில-ஒன்றிய அரசுகளே என்று சொல்லப்படுகின்றது. இத்தகைய அமைதியற்ற சூழ்நிலையில் அன்பின் அரசர், அமைதியின் மன்னன் இயேசுவின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். அத்துடன் ஜனவரி 1, 2025 அன்று திரு அவை ‘உலக அமைதி விழாவை’… கொண்டாட திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த இனிய நன்னாளில், ‘எங்கள் குற்றங்களை மன்னியும், எங்களுக்கு அமைதி அருளும்’ என்னும் அருமையான மையக்கருத்தைத் தியானிக்கவும், செயல்படவும் திருத்தந்தை அழைக்கின்றார். புத்தாண்டில் நாம் மன்னிப்பைப் பெற்று, பிறருக்கு மன்னிப்பை வழங்கி, அமைதியின் தூதர்களாக வாழ்ந்து, எவ்வாறு போரில்லாத புத்துலகம் படைக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
இப்பிரபஞ்சத்தைப்
படைத்து, அதைப் பராமரிக்கப் படைக்கப்பட்ட மனிதன், கீழ்ப்படியாமையால் கடவுளின் தண்டனைக்கு ஆளாகிறான் (தொநூ 3:14-19). ஆயினும், அன்பும் இரக்கமும் உள்ள கடவுள், ஒருபுறம் நீதியின் அடிப்படையில் தவறிழைத்த மனிதனுக்குத் தண்டனை வழங்கவேண்டிய இக்கட்டான நிலையில், பாவமன்னிப்பும் அமைதியும் வழங்க ‘அமைதியின் அரசரை’… அனுப்புவதாக (எசா 9:6) வாக்களிக்கின்றார். அவ்வாக்குறுதி தூய ஆவியினால் மரியா கருவுற்று (லூக் 1:31), இயேசுவின் பிறப்பால் (லூக் 2:11) நிறைவு பெறுகின்றது. “வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்” (யோவா
1:14). கடவுள் வடிவில் விளங்கிய இவர் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனித உருவில் தோன்றி, தம்மையே நமக்காகச் சிலுவையில் தியாகமாகக் கையளித்தார் (பிலி 2:6-8). இவ்வாறு நாம் அனைவரும் அவரால் தூய்மையாக்கப்படுகின்றோம். அதனால் நாம் அவரது இறைத்தன்மையில் பங்குபெற்று (2பேது 1:4), அவரது சகோதரர்-சகோதரிகளாகின்றோம் (எபி 2: 11).
நாம்
பிறரை மன்னித்து, மன்னிப்பைப் பெறும்போது, நமது மனச்சுமைகளை இறக்கி வைக்கின்றோம். இயல்பாகவே மன அமைதி பெறுகின்றோம்.
உடல் நோய்களும், மன நோய்களும் நீங்கி
மகிழ்ச்சி அடைந்தவர்களாய், நமது விண்ணகத் தந்தையைப்போல நிறைவுள்ளவர்களாய், கடவுளின் மக்களாய் வாழ்வோம். இக்கருத்தை
‘மனநலம் மன்னுயிர்க் காக்கும் இனநலம்
எல்லாப்
புகழும் தரும்’…(குறள் 457)
என்கிறார்
திருவள்ளுவர். அதாவது மனத்தின் நலம் உயிர்க்கு ஆக்கமாக விளங்கும். சமூக நலமே எல்லாப் புகழையும் (உலகுக்கு) வழங்கும். எடுத்துக்காட்டாக, ஒரு குளத்தில் கல் எறியப்படும்போது, தண்ணீரில் அலைகள் தோன்றி அழகூட்டுவதுபோல, ஒரு தனிமனிதனில் ஏற்படும் மன்னிப்பு, மன அமைதி ஆகிய
பண்புகள் சமுதாயத்திற்கும் பரவி, நேற்றைய சமுதாயத்தைவிட இன்றைய சமுதாயம் மெருகடைகிறது.
2019-இல், உள்நாட்டுப்போர்
உச்சக்கட்டத்திலிருந்த
தெற்கு சூடான் பகுதியில் ஜனாதிபதி சால்வ கிர், மற்றும் அந்நாட்டு முக்கியத் தலைவர்களின் முன்பாக மண்டியிட்டு, அவர்களது பாதங்களை முத்திசெய்து, அந்நாட்டில் மன்னிப்பையும் அமைதியையும் கொண்டு வாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அவரது
இச்செயலால் தெற்கு சூடானில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். அதேபோல, அக்டோபர் 2024-இல் ஒரு செப வழிபாட்டின் வேளையில், திரு அவையின் தவறுகளுக்காக இறைவனிடமும், இறைமக்களிடமும் மன்னிப்புக் கேட்டு, உலக அமைதிக்காகச் செபித்தார். இவரது முயற்சியால் உலக மக்களிடையே ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது.
இருப்பினும்,
அமைதியின் அரசர் கிறிஸ்து பிறந்து 20 நூற்றாண்டுகளாகியும், அவர் பிறந்தது முதல் உயிர்த்தது வரை வாக்களித்த ‘அமைதி’…
(யோவா 14:27) என்கிற மாபெரும் செல்வம் எட்டாக் கனியாகவே உள்ளது! நமது பாவ இயல்பால் இக்கொடையை நமதாக்கிக்கொள்ளவில்லை. எவ்வாறு அமெரிக்காவில்
உள்ள ஒரு மகன், தனது தாய்க்கு மாதம் தவறாது 1000 டாலர் நோட்டை அனுப்பினாலும், அதன் மதிப்பறியாது ‘பச்சைக் காகிதம் தானே’ என்று தனது சுருக்குப்பையில் போட்டுக்கொண்டு தாய் வறுமையில் வாடுகிறாரோ, அதேபோல, கிறிஸ்துவின் மதிப்பீடுகள் பெரும்பாலும் நமக்கு இன்றும் ‘கருத்தியல்’ ரீதியாகத்தான்… உள்ளதே
தவிர, இன்னும் நம் வாழ்வின் நீரோட்டத்தில் கலக்கவில்லை.
நிறைவாக,
நாம் சாதி, சமயம், இடம், இனங்களைக் கடந்து, ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுகின்றோம். அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கமிருக்கும். சிறார்கள் புதுப்பொலிவுடன் இருக்க புத்தாடை, விதவிதமான கேக்குக்காக ஏங்குவார்கள். நம் அகத்தில் நிறைந்துள்ள பகைமையை நீக்கி அன்பை விதைப்போமென்றால், கயமையை நீக்கி மன்னிப்பை அளிப்போமென்றால், நல்மனம் கொண்ட நமக்கு அமைதியும் மகிழ்ச்சியும் வழங்கும் நிலையில், நாம் போரில்லாத புத்துலகம் படைக்க முடியும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ்- புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நம் ஒவ்வொருவரையும் இறைவன் அன்பு செய்வதற்காக அவர்தம் இறைநிலையை விட்டு விட்டு மனித நிலைக்கு உட்பட்டார். இந்த நிலையில் அவர் தம்மை மனித நிலைக்குத் தாழ்த்தி, தம் இறைநிலையை மனிதனுக்கு வழங்க முற்பட்டார். அந்த நிகழ்வையே நாம் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடுகின்றோம்.
கிறிஸ்துமஸ்
அன்பை மையப்படுத்தும் விழா. இயேசு கிறிஸ்து அன்பால் மனுவுரு எடுத்ததை நினைவுபடுத்தும் விழா. “தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்தார்” (யோவா
3:16) என்பதை உலகினுக்கு வெளிக்காட்ட நினைத்த ஆண்டவரின் அன்பு விழா!
உண்மையான
செல்வம் என்பது இந்த உலகத்தில் உள்ள பொருள் அல்ல; மாறாக, உண்மையான செல்வம் என்பது கடவுளால் அன்பு செய்யப்படுவதும், அவரைப் போல அன்பு செய்யக் கற்றுக்கொள்வதுமே என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார்.
திருவருகைக்
காலம் கிறிஸ்துவின் வருகைக்கான தயாரிப்பு மற்றும் எதிர்பார்ப்புகளின் காலம். பல்வேறு மரபுகள் மூலம் அடையாளப்படுத்தப்பட்ட ஆழமான ஆன்மீக அர்த்தத்தை இக்காலம் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று திருவருகைக் கால மெழுகுதிரிகளை ஏற்றுவது. நான்கு மெழுகுதிரிகளில், அன்பின் மெழுகுதிரி ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இது கடவுளின் எல்லையற்ற மற்றும் தியாக அன்பை நமக்கு நினைவூட்டுகிறது. நிபந்தனைகள் போட்டு மனிதர்களை நிர்ப்பந்திப்பதில்லை; கட்டுப்பாடுகள் போட்டுக் கதறவிடுவதில்லை; மாறாக, நம்மை அப்படியே ஏற்றுக்கொண்டு, நமக்காகத் தம்மையே தியாகம் செய்யும் அன்பே இயேசுவின் அன்பு. புனித பொனவெந்தூரார் கடவுள் மனிதனாய்ப் பிறக்கக் காரணம், “அவர் மனித குலத்தின் மீதும், படைத்த படைப்புகளின் மீதும் கொண்டுள்ள அளவு கடந்த அன்பே” என்று கூறுகிறார். மேலும், “அன்பை அறியாதவனும் அன்பில்லாதவனும் இறைவனை உணர அல்லது காண வாய்ப்பே இல்லை” என்றும் கூறுகிறார்.
ஒரு
குடும்பத்தில் கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய 12 வயது மகள் என்று வாழ்ந்து வந்தனர். குடும்பத் தலைவர் ஒரு கல்லூரியில் உயிரியல் துறைப் பேராசிரியர். பூச்சிகளையும் புழுக்களையும் வைத்து ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் உடையவர். தன் இல்லத்திலேயே ஓர் அறையை ஒதுக்கி பூச்சிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்தார். ஒருமுறை அவருடைய மகள் பள்ளியில் தான் வரைந்த அழகான ஓவியத்தைத் தந்தையிடம் காண்பிக்கக் கொண்டு வந்தாள். தந்தையோ ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தார். தன் ஓவியத்தைப் பார்க்க எத்தனையோ முறை கேட்டுக் கொண்டும், தந்தையோ கொஞ்சமும் திரும்பிப் பார்க்கவில்லை; மாறாக, எரிச்சல்பட்டு தன் அறையை விட்டு வெளியேறும் படி கத்தினார். அழுதுகொண்டே தன் தாயிடம் வந்த அச்சிறுமி, “நான் ஒரு பூச்சியாகவோ அல்லது புழுவாகவோ பிறந்திருக்கக்கூடாதா? அப்போதாவது அப்பா என்னை நோக்கிப் பார்ப்பாரே!”என்றாளாம்.
அன்புக்காக
ஏங்காத இதயம் இவ்வுலகில் ஏதுமில்லை. நண்பர்களுக்கிடையே நட்பாக, பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையே பாசமாக, வாலிப வயதினரிடையே காதலாக, இறைவனுக்கும் நமக்குமிடையே பக்தியாகக் காணப்படும் இவை அனைத்துமே அன்பின் பல்வேறு பரிமாணங்களே! மனிதனுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் நெருப்பாகிய இவ்வன்பைத் தூண்டி எழுப்பும்போது, அளவற்ற ஆற்றலைக்கொண்ட அணுசக்தியாக இவ்வன்பு மாறிவிடுகிறது.
உண்மையான
அன்பிற்கு மனிதர்களை மனிதர்களிடமிருந்து பிரிக்கும் எத்தகைய பிரிவினைச் சுவரையும் உடைக்கும் வல்லமை உண்டு. தனிமை உணர்வையும் தாழ்வு எண்ணத்தையும் தகர்த்தெறியும் ஆற்றல் அன்புக்கு உண்டு. அன்பின் இப்படிப்பட்ட மேலான ஆக்கச் சக்தியை உணர்ந்ததால்தான் புனித பவுல், “ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்தவேண்டிய
ஒரே கடனாக இருக்கட்டும்” (உரோ
13: 8) என்றும், “அன்பே திருச்சட்டத்தின் நிறைவு”
(உரோ 13: 10) என்றும்
கூறுகிறார்.
இந்த
அன்பின் மெழுகுதிரி அன்னை மரியாவையும் அவர் கணவரான இயேசுவின் வளர்ப்புத் தந்தை புனித யோசேப்பையும் குறிக்கின்றது. ஆண்டவராம் மீட்பரைச் சந்திப்பதற்காகப் புனித யோசேப்பும் அன்னை மரியாவும் எவ்வாறு தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனரோ அவர்களைப் போன்று நம்மை மீட்க நமக்காக இந்த உலகில் பிறந்த இயேசு பாலனை வரவேற்க நம்மை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் என்பதைச் சிந்திக்க அழைக்கும் நான்காம் வாரத்தில் கடவுளின் அன்பை ஆய்ந்தறிந்து, அன்றாட வாழ்வில் அனுபவிக்க இப்பகுதி அழைக்கிறது.
அன்பின் வாரத்தில்
சிந்திக்க...
1. கடவுளின் அன்பு நிபந்தனையற்றது!
கடவுளின்
அன்பு நமது தகுதியின் அடிப்படையில் அல்ல; மாறாக, அவரது எல்லையற்ற அருளை அடிப்படையாகக் கொண்டது. நாம் பாவிகளாய் இருந்தபோது கடவுள் நம்மை அன்பு செய்தார் (உரோ 5:8). “நீ என்னை அன்பு
செய்தால்தான் நான் உன்னை அன்பு செய்வேன்”
என்று சொல்பவன் மனிதன். இறைவனோ, “நீ என்னை அன்பு
செய்யாவிட்டாலும், நான் உன்னை அன்பு செய்வேன்”
என்றுரைக்கிறார்.
“எனது எதிர்பார்ப்புகளின்படி வாழ்ந்தால்தான் நான் உன்னை அன்பு செய்வேன்”
என்பவன் மனிதன். இறைவனோ, “எனது எதிர்பார்ப்புகளுக்கு எதிராகச் சென்றாலும் உன்னை நான் அன்பு செய்வேன்”
என்கிறார். “நான் சொல்வதைக் கடைப்பிடித்தால்தான், நான் உன்னை அன்பு செய்வேன்”
என்பவன் மனிதன். “நான் சொல்வதை நீ கடைப்பிடிக்காவிட்டாலும் உன் மட்டில் என் அன்பு மாறாது” என்பவர் இறைவன். இந்த அன்பு நாம் தேடிக்கொண்டது அல்ல; இது கடவுளால் நமக்கு இலவசமாக வழங்கப்படும் பரிசு!
2. கடவுளின் அன்பு தியாகம்
நிறைந்தது!
அன்பு
என்பது உணர்வு மட்டுமல்ல; இது ஒரு செயல். எல்லைகள் வகுப்பது மனித அன்பு; எல்லாரையும் ஏற்பது கடவுளன்பு! தொல்லைகள் தருவது மனித அன்பு; தியாகத்தில் மிளிர்வது கடவுளன்பு! இந்தத் தியாக அன்பு, தன்னலமின்றி மற்றவர்களை நேசிப்பதன் மூலம் கிறிஸ்துவைப் பின்பற்ற நம்மை அழைக்கிறது. “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும் இல்லை” என்று இயேசு கூறுவதை யோவான் நற்செய்தியில் (13:15) வாசிக்கிறோம்.
இறையன்பின்
முழுமை இயேசுவின் தற்கையளிப்பில்தான் நிறைவு அடைகிறது. சுயநலத்திற்காகப் பிறரைப் பலியாக்கத் துணியும் மனிதர்கள் வாழும் இவ்வுலகில், பிறருக்காக நம்மைப் பலியாக்கிட இறைவனின் அன்பு நம்மை அழைக்கிறது. இந்த அன்பின் வாரத்தில், தேவைப்படும் ஒருவருக்காகத் தியாகம் செய்யும் அன்பின் ஒரு செயலைச் செய்ய முயல்வோம்.
3. கடவுளின் அன்பு
மாற்றத்தை உருவாக்குவது!
கடவுளின்
அன்பு நம்மை உருமாற்றி பிறரை அன்பு செய்ய அழைக்கிறது. 1யோவான் 4:19 -இல் கூறுவது போல், “அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம்.” நாம் ஏற்றுகின்ற அன்பு என்னும் மெழுகுதிரியின் வெளிச்சம்
பகைமை, வெறுப்பு, பிரிவு மற்றும் விரக்தி போன்ற அக இருளை அகற்றி
அன்பு, அமைதி, மகிழ்ச்சி போன்ற இறையாட்சியின் விழுமியங்களால் ஒளிரும் மனிதர்களாக நம்மை மாற்றும் ஆற்றல் பெற்றது. அன்னை தெரசா கூறினார், “நம் எல்லாராலும் பெரிய காரியங்களைச் செய்துவிட முடியாது; ஆனால், சிறியவற்றை மிகுந்த அன்புடன் நம் அனைவராலும் செய்ய முடியும்.” அன்பின் எளிய செயல்கள் வாழ்க்கையை மாற்றும். இந்த அன்பின் வாரத்தில் இரக்கம், மன்னிப்பு போன்றவற்றின் மூலம் கடவுளின் அன்பைச் சுவைப்போம்.
4. கடவுளின் அன்பு நிரந்தரமானது!
புனித
பவுல் கூறுவதுபோல், ‘அவருடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது’
(உரோ 8:38-39) என்பதை ஒப்புக்கொள்வோம். இந்த நிரந்தர அன்பு, வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலைகளிலும்கூட நமக்கு நம்பிக்கையையும் உறுதியையும் தருகிறது. நிறைவானது வரும்போது அரைகுறையானது ஒழிந்துபோம் (1கொரி 13:10).
அன்பின் வாரத்தில்
வாழ்வாக்க...
• அன்பைப் பெறுங்கள்:
கடவுளின் நிபந்தனையற்ற, தியாகம் நிறைந்த, மாற்றத்தக்க, மற்றும் நிரந்தரமான அன்பைப் பெறுவதற்கு உங்கள் இதயங்களைத் திறந்து, அன்பினை நன்றியுணர்வுடன் பெற முயல்வோம். திருப்பலி, திருவழிபாட்டுத் திருநிகழ்வுகள், கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு நிகழ்வு ஆகியவை வழியாகவும், நம் அருகில் இருப்பவர்கள் வாயிலாகவும் இறை அன்பைப் பெறுவோம்.
•
அன்பை வெளிப்படுத்துங்கள்: திருவருகைக் காலம் என்பது இயேசுவின் அன்பு மாதிரியைப் பின்பற்றி, இரக்கம், தொண்டு மற்றும் பகிர்வு ஆகியவற்றின் மூலம் அன்பை வெளிப்படுத்தும் நேரம். குடும்பத்தில், உறவுகள் மத்தியில், நண்பர்கள் வட்டாரத்தில், அன்பியத்தில், பங்கில், சமூகத்தில் என அனைத்துத் தளங்களிலும்
எவ்வித நிபந்தனையும் பாகுபாடும் ஏற்றத்தாழ்வும் வேறுபாடுமின்றி அன்பு என்னும் இறையியல் பண்பை வெளிப்படுத்துவோம். குறிப்பாக, வாழ்வது ஒரு முறைதான் என்பதை நன்கு உணர்ந்து பகைமை பாராட்டாமல் மன்னிப்போம், மறப்போம்.
•
அன்பைக் கொண்டாடுங்கள்: கிறிஸ்து பிறப்பு அன்பைக் கொண்டாடும் காலம். வானதூதர்கள் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாட முதன் முதலாக இடையர்களை அழைத்தார்கள். விண்மீன் ஞானிகளை இயேசுவின் பிறப்பினைக் கொண்டாட அழைத்தது. நாம் நான்காம் வாரம் ஏற்றுகின்ற மெழுகுதிரி அன்பைக் கொண்டாட அழைக்கிறது. எப்படிக் கொண்டாடுவது? அன்பு ஒரு செயல். எனவே, செயல்வழிக் கொண்டாடுவோம். இருப்பதை (அன்பை, செல்வத்தை, உணவை, அறிவை, ஆற்றலை, நேரத்தை, உடைமையை)
இல்லாதவர்களோடு பகிர்வோம்! மனநிறைவோடு வாழ்வோம்!
ஆகவே,
அன்பின் வார மெழுகுதிரியை நாம் ஏற்றி அன்பைப் பெற்று, அன்பை
வெளிப்படுத்தி, அன்பைக் கொண்டாடுவோம்!
அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துகளும் ஆசிரும்!