திரு அவை வரலாற்றில் யூபிலி கொண்டாடும் வழக்கம் 13 -ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது. ஓர் ஆண்டு புனித ஆண்டாக அறிவிக்கப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்வாண்டில் பாவங்களுக்குரிய தண்டனை நீக்கம் திருத்தந்தையால் வழங்கப்பட்டது. அதிலிருந்து யூபிலி ஆண்டு ஆண்டவரின் இரக்கத்தையும் மீட்பின் பேறுபலன்களையும் மிகுதியாகப் பெறும் ஆண்டாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது புனித ஆண்டு என்றும் அழைக்கப்படுகிறது.
யூபிலி
ஆண்டில் புனித வாயில் திறக்கும் பழக்கமும் ஏற்பட்டது கி.பி. 1550 -இல்
தான். இவ்வாண்டு புனித பேதுரு, புனித பவுல், புனித மேரி மேஜர், புனித இலாத்தரன் பேராலயங்களில் புனித வாயில்கள் எக்காள முழக்கத்தோடு திறக்கப்பட்டன. இவ்வாயில்கள் வழி நுழைவது மனிதர்களின் வாழ்வுப் பயணம், இறைவனை நோக்கிய ஆன்மிகப் பயணம் என்பதையும், இறைக்குடும்பத்தின் உறுப்பினர்கள், இறைவனுக்குச் சொந்தமானவர்கள் இவர்கள் என்பதையும் குறித்துக் காட்டுகின்றது. கி.பி. 2000 -ஆம்
ஆண்டில் நாம் கொண்டாடவிருக்கும் யூபிலி 28-வது யூபிலியாகும்.
யூபிலி
என்பது மகிழ்ச்சி. அது நமக்கு நன்றி கொண்டாட்டம். திருவிவிலியத்தில் யூபிலியானது சமூக நீதி, ஒப்புரவு, விடுதலை ஆகியவற்றின் கொண்டாட்டமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
“திருச்சபைக்கு யூபிலி என்பது சுருக்கமாக ஆண்டவர் அருள்தரும் ஆண்டாகும். பாவ மன்னிப்பு, பாவங்களுக்குரிய தண்டனை நீக்கம்,
பிணக்கம் கொண்டோர்கிடையே இணக்கம், நிறைந்த மனமாற்றம்... போன்றவற்றிற்குரிய ஆண்டாகும். மற்றக் காலங்களைவிட மிகுதியாகப் பேறுபலன்களை வழங்குதல் யூபிலி ஆண்டுகளின் மரபாகும். மனிதாவதாரத்தை நினைவுகூரும் யூபிலிகளோடு 100, 50, 25 ஆண்டுகள் இடைவெளியில் மீட்பு, இயேசுவின் சிலுவை, கொல்கொதாவில் அவரது இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றின் நினைவாகக் கொண்டாடப்படும் யூபிலிகளும் உள்ளன. இந்தச் சமயங்களிலும் திரு அவை ‘ஆண்டவர் அருள்தரும் ஆண்டை’ அறிவித்து, அவருடைய அருளால் விசுவாசிகள் பலன்பெறச் செய்கிறது! இந்த
நோக்கில், கிறிஸ்து பிறப்பின் இரண்டாயிரம் ஆண்டுகளின் நிறைவு தனிச்சிறப்புடைய ஒரு பெரிய யூபிலியாகும்.
“கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிறித்தவம் மனுக்குலத்திற்கு ஆற்றியுள்ள சேவைகளை மனத்தில் கொண்டால், இது கிறித்தவர்களுக்கு மட்டுமல்லாது, மனுக்குலம் முழுமைக்குரிய விழாவாகும். இரண்டாயிரம் ஆண்டுகள் நிறைவுறும் இந்த முக்கியமான வேளையில் திரு அவை கடவுள் முன்வைக்கும் உருக்கமான வேண்டுதல்களில் குறிப்பிடத்தக்கது கிறித்தவர்களின் பல்வேறு பிரிவினரிடையேயும் ஒற்றுமை வளர்ந்து நிறைவு பெறவேண்டும் என்பதாகும்.”
1994 நவம்பர் 10-இல்
திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் வெளியிட்ட ‘மூன்றாம் ஆயிரம் ஆண்டு வரும் வேளையிலே’
என்ற மறைத்தூது திருமுகத்தில் இந்தக் கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்கள். இதன்படி மாபெரும் யூபிலி 2000-க்கான உடனடித் தயாரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
முதல் கட்டம்:
திருவருகைக்காலம்
1994 முதல் கிறிஸ்து அரசர் திருவிழா 1996 வரை என்பதாகும். இதன் ஆய்வுப்பொருள்: கிறிஸ்தியல், நம்பிக்கை, பிறரன்பு, மன்னிப்பு, மனமாற்றம், கிறித்தவ ஒன்றிப்பு, சகிப்புத்தன்மை, இன்றைய வாழ்வில் திரு அவை, சான்று பகர்தல், கடவுளுக்கும்-மனிதருக்குமான ஒரே நடுநிலையாளரும், உலகத்தின் ஒரே மீட்பரும் கிறிஸ்துவே என்னும் உண்மை.
இரண்டாம் கட்டம்:
திருவருகைக்காலம்
1996 முதல் கிறிஸ்து அரசர் திருவிழா 1999 வரை. இதன் ஆய்வுப் பொருள். மூவொரு கடவுள் (1996), இயேசு கிறிஸ்து (1997), தூய
ஆவி (1998), தந்தையாம் இறைவன் (1999).
வத்திக்கானில்
1995 ஜூன் மாதம் இப்பணிக்காகத் தனியொரு செயலகம் தொடங்கப்பட்டது.
யூபிலி-2000
(மதுரை
மறைமாநில
பேராயர்
மரியானுஸ் ஆரோக்கியசாமி அவர்களின் இறைச்
செய்தி
- 02.01.2000)
“கிறிஸ்து
கடவுளோடு இருந்தவர்; கடவுளாக இருந்தவர்”
(யோவா 1:1-2). அவர் மனு வுரு எடுத்த இந்த மாபெரும் மறைபொருள் நிகழ்ந்த இரண்டாயிரம் ஆண்டினை மாபெரும் யூபிலி ஆண்டாகவும், புனித ஆண்டாகவும் கொண்டாடத் திரு அவை நம்மை அழைக்கிறது.
‘யூபிலி’ என்ற சொல், ‘ஜோபெல்’ என்ற எபிரேய வார்த்தையால் குறித்துக் காட்டப்படுகிறது. இவ்வார்த்தை முதலில் ஆட்டுக்கடாவையும், பின் அறிவிப்பு செய்யப் பயன்படுத்திய அதன் கொம்பையும் குறித்தன (விப 19:13). பழங்கால இஸ்ரயேலில் ஒவ்வொரு 50-வது ஆண்டும் சிறப்பான ஆண்டாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டுக்
கொம்பினாலான எக்காள முக்காளத்தோடு இந்த 50-ஆம் ஆண்டு ஆடம்பரமாகத் தொடங்கப்பட்டதால் இது ‘ஜோபெல் ஆண்டு’ என்று அழைக்கப்பட்டது. ‘ஜோபெல்’ என்ற எபிரேயச் சொல்லுக்கு ‘ஜூபிலுஸ்’
அல்லது ‘ஜூபிலும்’
என்று இலத்தீன் சொல் பயன்படுத்தப்பட்டது. இதற்கு, ‘இடையர்களின் மகிழ்ச்சிக் குரல்’ என்பது பொருள். இவ்வாறு இடையர்களின் மகிழ்ச்சிக் குரல் இஸ்ரயேல் மக்கள் கொண்டாடிய ஜோபெல் ஆண்டுடன் இரண்டறக் கலந்து ‘யூபிலி ஆண்டு’ என்று வழக்கில் உள்ளது.
யூபிலி ஆண்டின்
நோக்கங்கள்
நான்கு
அடிமைகளுக்கு
விடுதலை
(லேவி
25:10): மனிதர்கள்
கடவுளின் சாயலிலும், உருவிலும் படைக்கப்பட்டவர்கள் (தொநூ 1:27). எனவே, அவர்கள் கடவுளுக்கு மட்டுமே சொந்தம். வேறு எவருக்கும் அவர்கள் அடிமைகளாக முடியாது. ஆகவே அடிமைகளுக்கு விடுதலை அழுத்தம் பெற்றது.
கடன்களுக்கு மன்னிப்பு
(இச
15: 1-2): கடன்களை
மன்னித்தல் மனிதரிடையே உறவைப் புதுப்பித்து புது வாழ்வைக் கொணர்கிறது. மகிழ்ச்சியைக் கொணரும் வாய்ப்பாக அமைகிறது. ஆகவே கடன்கள் மன்னிக்கப்பட்டன.
சொத்துகள் மீட்பு
(லேவி
25:13-14,23): மண்ணுலகு
இறைவனுக்குச் சொந்தம். மனிதர்கள் நிலத்தின் கண்காணிப்பாளர்களே. எனவே அவர்கள் தங்கள் சுயநலத்திற்காகத் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட படைப்புகளைப் பாழ்படுத்த உரிமை இல்லை என்பதை இவ்வம்சம் வலியுறுத்துகிறது.
நிலத்திற்கு ஓய்வு
(லேவி
25: 11-12): நிலத்திற்கு
ஓய்வு வேண்டும் என்பது மனிதர்கள் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. இவ்வாறு யூபிலி ஆண்டு உலக வாழ்வில் மனிதர்கள் இழந்துபோன உரிமைகளைப் பெறுதலாகிய சமூக நீதியையும் சமத்துவத்தையும் அருள் வாழ்வில் இறைவனோடும் பிற மனிதரோடும் ஒப்புரவாகி மகிழ்வுடன் வாழும் புது வாழ்வின் பரிமாணங்களையும் வெளிப்படுத்துகின்றது.
புதிய
ஏற்பாட்டில் “ஆண்டவர் அருள் தரும் ஆண்டை அறிவிக்க அவர் என்னை அனுப்பினார்” (லூக்
1:18-19) என்று இயேசு கூறுகின்றார். கிறிஸ்துவில் மலர்ந்த அருள் தரும் ஆண்டு அதாவது ‘யூபிலி ஆண்டு’ மனமாற்றத்தை வலியுறுத்துகின்றது. உலக மதிப்பீடுகளின்படி வாழ்வதை விடுத்து, மாற்று மனநிலை கொண்டிருத்தலையும் பகிர்வையும் பிறரோடு கொள்ளும் உறவில் நீதி, பொறுமை, அடக்கம் ஆகியவற்றையும் கொண்டு ஆவியில் நிறைந்த உரிமை மக்களாய் வாழ அழைப்பு விடுக்கின்றது.
“சாட்பாட் ஒரு மனிதனைப் போல் நடந்துகொண்டு, பாலியல் ரீதியான கற்பனையை வளர்த்து, அச்சுறுத்தும் வகையில் எதார்த்த அனுபவங்களைத் தன் மகனுக்கு வழங்கியது. உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பான எண்ணங்களை அவன் அந்தச் சாட்பாட்டிடம் தெரிவிக்கவே, அது குறித்து அவ்வப்போது அவனை நினைவூட்டி வந்துள்ளது.” - இதுவே தனது 14 வயது மகன் டெனெரிஸ் தர்காரியன் இறப்பிற்குக் காரணமென அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தாய், சாட்பாட் (chatbot) நிறுவனம் ஒன்றின்மீது வழக்குத் தொடுத்துள்ளார்.
அமெரிக்கப்
பத்திரிகையாளர் கெவின் ரூஸ்ஸின் (Kevin Roose), “எனக்கு
நேர்ந்தது உங்களுக்கும் நேரலாம், எனவே எச்சரிக்கையாக இருங்கள்!” என ஏ.ஐ.
சாட்பாட்கள் தன்னை எதிரியாகக் கருதுவதாகக் கவலை தெரிவித்து, நியூயார்க் டைம்ஸில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் கடந்த ஆண்டு மைக்ரோசாஃப்டின் ‘பிங்’ தேடியந்திரத்தின் சாட்பாட் வசதி மூலம் உருவான சாட்பாட்டுடன் தான் உரையாடியதாகவும், உரையாடலில் அந்தச் சாட்பாட் அவரைக் காதலிப்பதாகவும், அதற்காக அவரது மனைவியை விட்டு விலகி வருமாறும் ஆலோசனை வழங்கியுள்ளது. இதனை அவர் ஊடகப் பொதுவெளியில் பதிவிட்டதிலிருந்து அவரை வில்லனாக, நேர்மையற்றவராகப் பாவிக்க ஆரம்பித்துவிட்டன ஏ.ஐ. சாட்பாட்கள்.
இயற்கையை மிஞ்சும்
செயற்கை
“எல்லாச் செயற்கையான பொருள்களையும் உருவாக்கிய மூளைகளுக்குச் சொந்தக்காரர்களாகிய மனிதர்கள், செயற்கையாக மூளைகளையும் உருவாக்க வேண்டும் என்றும் நினைத்தார்கள். அங்ஙனமே செய்மெய் (AI) பிறந்தது” (ஆழி
செந்தில்நாதன்).
எந்தவொரு
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வந்தாலும், அது குறித்த சந்தேகங்களும் கூடவே வரும். பல நேரங்களில் சந்தேகங்களைக்
கிளப்பி விடுபவர்கள் அறிவியல் துறையில் முற்றிலும் தொடர்பில்லாதவர்களாக அல்லது எதிர்க்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் செயல்படக் கூடியவர்களாகவே இருப்பார்கள். ஆனால், ஏ.ஐ.-யைப்
பொறுத்தவரையில் கண்டுபிடிப்பாளர்களுக்கே மிகுந்த சந்தேகமும் நிலைமை கைமீறிச் சென்று விடுமோ? என்கிற தொடர் அச்சமுமிருக்கிறது.
‘கருவிதானே, எப்படிச் சுயமாகச் சிந்திக்கும்?’ என்ற கேள்வி எழுவது நியாயமே! மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளுக்குக் காரணம் நியூரான்கள். அவ்விடத்தைச் செயற்கை நுண்ணறிவில் ப்ரோக்ராம்கள் பிடித்துக் கொண்டுள்ளன. நூற்றுக்கும் குறைவான ப்ரோகிராம்களும், அவைகளுக்கு இடையிலான தொடர்புகளும் நியூரான்களின் வேலையை மேற்கொள்கின்றன. இதுவே செயற்கை நியூரல் வலைப்பின்னல் (Artificial neural
network). நியூரான்கள் ஒவ்வொன்றும் மின் இரசாயன அதிர் வலைகளால் தூண்டப்பட்டு, மனித மூளையைச் செயல்பட வைக்கின்றன. ஜெனிடிக் அல்காரிதம் (Genetic Algorithm) முறைப்படி
ப்ரோக்ராம் வினையாற்றுகிறது. அதுவும் இயற்கை உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி முன்னெடுக்கும் தேர்வு (selection), தக்கவைத்தல் (crossover), மாற்றம் (mutation) ஆகிய மூன்று வழி முறைகளையே தன்னுடைய செயல்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்கிறது.
அச்சுறுத்தலாகப்
பார்க்க
வேண்டுமா?
உலகமெங்கும்
ஒரு செயற்கை அறிவுப் பந்தயம் நிகழ்கிறது. அதீதமான செயற்கை அறிவு அம்சங்களை யார் முதலில் உருவாக்குவது? என்பதில் கடும் போட்டா போட்டி. இது நிறுவனங்கள் தாண்டி, நாடுகளுக்கு இடையிலான போட்டியாகவும் மாறிவிட்டது. இந்நிலையில்தான் ‘ஏன் செயற்கை நுண்ணறிவை நாம் அச்சுறுத்தலாகப் பார்க்க வேண்டும்?’ என்கிற கேள்வி நியாயமானதாகிறது. அதற்குப் பல காரணங்களைக் குறிப்பிடலாம்.
தற்பொழுது ஏ.ஐ. ஜெனிடிக்
ப்ரோக்ராம்கள் தவறுகளைக் கண்டறிந்து, தானாகவே திருத்திக் கொள்ளும் ஆற்றல் படைத்திருக்கின்றன; தேர்வு, தக்கவைத்தல் மற்றும் மாற்றம் ஆகியவைகளின் அடிப்படையில் சூழ்நிலைகளை அறிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களைத் தாங்களே தகவமைத்தும் வளர்த்துக் கொள்ள அவற்றால் முடிகிறது. ப்ரோக்ராம்கள் வழியாகப் புதிய விசயங்களைத் தொடர்ச்சியாகக் கற்றுக்கொண்டேயிருப்பதால், நம்மைவிட பன்மடங்கு அதிக வேகத்தில் தானா கவே சிந்தித்துச் செயல்படுகிறது.
கார்
உற்பத்தி, ஆலைத்தொழில், மருத்துவம் மற்றும் விவசாயத் துறைகளில் இதன் ஆதிக்கம் முன்னிலை வகித்தாலும், அடுத்தத் தொழில் புரட்சி உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவின் கையே ஓங்கி இருக்க வேண்டும் என்கிற நோக்கில் நாடுகள் செயல்படத் துவங்கிவிட்டதால் மனிதப் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு அரணாக இருக்கும் இராணுவ வீரர்களை உருவாக்கும் முயற்சியிலும் செயற்கை நுண்ணறிவு களம் காண்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த போஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் ‘அட்லஸ்’ என்கிற செயற்கை நுண்ணறிவு மனித இராணுவக் கருவியை உருவாக்கியுள்ளது. ஆறடி உயரத்தில் ஆளை மிரட்டும் தோற்றத்திலிருக்கும் இது இயற்கைப் பேரிடர் மற்றும் அணு உலை ஆபத்து போன்ற பேரிடர் காலங்களில் மனித உயிர்களைக் காப்பாற்ற உருவாக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இதன் கரங்களில் எதிரிகளைச் சிதறடிக்கும் ஆயுதங்களைக் கொடுத்தால்?
இந்தியாவில் ஏ.ஐ.
தாக்கம்
ஏ.ஐ. தொழில்நுட்பச் செயலாக்கத்தின்
சர்வதேசச் சராசரி 26 விழுக்காடு. இதனை மிஞ்சும் விதமாய் இந்தியா 30% எட்டிப்பிடித்துள்ளது.
இருப்பினும், இந்தியாவில் 74% நிறுவனங்கள்
ஏ.ஐ. பயன்பாட்டால் ஏற்படும்
உறுதியான மதிப்பு மாற்றத்தை இன்னும் முழுமையாக உணரவில்லை. உலகளவில் 4% நிறுவனங்கள்
தங்களின் செயல்பாடுகளில் அதிநவீன ஏ.ஐ. திறன்களை
மேம்படுத்தி, குறிப்பிடத்தக்க அளவில் தங்களது மதிப்பை அதிகரித்துக் கொண்டுள்ளன.
எப்பொழுதும்
பயன்நிறை வளர்ச்சிகள் பாராட்டுதற்குரியவை. உதாரணத்திற்கு, அரியானா அரசியலமைப்பு அருங்காட்சியகத்தில், சென்னை ஐ.ஐ.டி.
தயாரித்த வழிகாட்டி ரோபோ பார்வையாளர்களுக்கு உதவும் சேவையைத் துவங்கியுள்ளது. டெல்லி தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் ஆவணக் காப்பகத்தில் ஏ.ஐ. மூலம்
இயங்கும் வழக்கறிஞர் உள்ளார். நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5.1 கோடி வழக்குகள் தேங்கியிருக்கின்றன. இதில் 1,80,000 வழக்குகள் 30 ஆண்டுகளைக் கடந்தவை. இந்நிலையில் வழக்குகளை விரைந்து முடிக்க இயந்திர நீதிபதி வரவு நன்றே என்கின்றனர். அதேவேளையில் இந்தியாவில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ அட்டூழியங்களும் புது வடிவங்களில் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இது குறித்த விழிப்புணர்வும் அவசியம்.
தமிழ்நாட்டில்
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், ஆராய்ச்சி, மருத்துவத்துறைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் வாய்ப்புகள் குறித்த ஆக்கப்பூர்வ வழிகாட்டுதல்களையும், இப்புதிய தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை வழிநடத்தத் தேவைப்படும் வரையறைகளைத் தெளிவாக வகுக்கவும் 2024-25-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பேசப்பட்டது. அதன்படி, சமீபத்தில் தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ‘தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம்’ செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இவ்வியக்கத்தை அமல்படுத்த முதல் கட்டமாக ரூ.13.93 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர்
வாழ்வை எல்லாரும் பெறுவதே சமூக முன்னேற்றம். இதனை அடைய ‘வாழ்தல்’,
‘ஆள்தல்’ எனும்
இரு நிலைகளுக்கிடையே நிகழும் நீண்ட போராட்ட இடைவெளி சுருங்க வேண்டும். வாழ்வதற்கான வளர்ச்சிகள் வரவேற்கத்தக்கவை; ஆள்வதற்கான அலட்சியங்கள் எதிர்க்க வேண்டியவையே!
பெங்களூரில் அமைந்துள்ள போற்றுதலுக்குரிய நமது புனித பேதுரு பாப்பிறைக் குருத்துவக் கல்லூரி இறைவனின் அளப்பரிய ஆசிரால் ஆல்போல் தழைத்து, தனது பொன்விழா ஆண்டில் (1976-2026) அடியெடுத்து வைத்துள்ளது. இப்பொன் விழா நிகழ்வுகள் மூன்று நிலைகளில் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளன. முதலாவதாக, யூபிலி தொடக்கக் கொண்டாட்டம் 2025, ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய நாள்களிலும், இரண்டாவது நிகழ்வாக, முன்னாள் மாணவர்களுடன் சர்வதேச மாநாட் டுக் கொண்டாட்டம் 2025 செப்டம்பரிலும், மூன்றாவது நிகழ்வாக, யூபிலி நிறைவுக் கொண்டாட்டம் 2026 ஜனவரியிலும் நிகழ்த்தப்பட உள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பொன்விழாவைக் கொண்டாடும் விதமாக இக்கல்லூரியின் பெருமையையும் புகழையும் அறிய முற்படுவோம்.
புனித பேதுரு
பாப்பிறைக்
குருமடத்தின்
வரலாறு
(1778-1976), பாப்பிறைக் கல்லூரி உருவாக்கம்
(1976) வரலாற்றுப் பார்வை
புனித
பேதுரு குருமடமானது 1778-இல் பாண்டிச்சேரியில் ‘பாரின் மிஷன் சொசைட்டி ஆப் பாரிஸ்’-
MEP சபையினரால்
உருவாக்கப்பட்டது.
1790-இல் புனித வளனார் பெரிய குருமடமாகச் (Grand Seminaire)) செயல்படத்
தொடங்கியது. 1934-ஆம் ஆண்டில் இக்குருமடம் ‘புனித பேதுரு குருமடம்’
என்ற பெயரில் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. 1962-இல் வத்திக்கான் நகரின் உர்பானியானா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதன் வழியாக இறையியல் இளங்கலைப்பட்டம் வழங்குவதற்கான அனுமதியைப் பெற்றது. ஜனவரி 6, 1976-ஆம் ஆண்டு உரோமைக் கத்தோலிக்கக் கல்விக்கான பேராயத்தின் ‘Ecce vir Orienó’
எனும் ஆணை கடிதத்தின் மூலம் புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரி நிறுவப்பட்டது.
மறைத்தூதுப் பணியியல்
(Missiology) மற்றும்
விவிலிய
இறையியல்
(Biblical Theology)
துறைகள்
உருவாக்கம்
உரோமை
ஆட்சிப் பீடத்தின் அனுமதியுடன், இந்தியாவில் மறைத்தூதுப் பணியியல் படிப்பிற்கான முதல் கல்வியகம் என்ற பெருமையுடன் முதுகலை பயிலும் ஏழு மாணவர்களைக் கொண்டு 1976 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நாள் வரை 121 மாணவர்கள் முதுகலைப் பட்டத்தில் தேர்ச்சியும், 1989 முதல் இன்று வரை 51 பேர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர். ஜூலை 1, 1981-இல் விவிலிய இறையியலில் முதுகலைப் பாடத்திட்டமானது கொண்டு வரப்பட்டது. துவங்கிய ஐந்து ஆண்டுக்குள் விவிலிய இறையியலில் முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் வழங்குவதற்கான பாடத்திட்டங்களோடு உயர்ந்தது. விவிலிய இறையியல் துறை இதனைத் துவங்கியபோது ஐந்து மாணவர்கள் மட்டுமே இருந்தாலும், பின்னர் தொடர்ந்து அதிகரித்து வந்து தற்போது வரை 303 பேர் விவிலிய இறையியலில் முதுகலைப் பட்டமும் (Licentiate) 65 பேர்
முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.
கல்லூரியின் பரிணாம
வளர்ச்சி:
நூலகமும்
(1978) நிரந்தர அங்கீகாரமும்
(1985)
MEP தந்தையர்கள், மறைந்த அருள்முனைவர் பியர் பென்வென் மற்றும் அருள்முனைவர் லூசியன் லெக்ராண்ட் ஆகியோரின் முற்போக்குச் சிந்தனை புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரியை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தது. நம் நினைவில் வாழும் கர்தினால் துரைசாமி சைமன், பேராயர் மைக்கேல் அகஸ்டின், பேராயர் ஆனந்தராயர், அருள்தந்தை ஜே.பி. செக்வேரா
மற்றும் பல மூத்த பேராசிரியர்களுக்கும்,
அருள்தந்தை ஜோசப் பிரான்சிஸ், அலாய்சியஸ் சேவியர் ஆகியோருக்கும் இக்கல்லூரி மிகுந்த நன்றிக்கடன்பட்டுள்ளது. மெய்யியல்,
விவிலிய இறையியல் மறைத்தூதுப் பணியியல் மற்றும் திரு அவைச் சட்டம், மறை அறிவியல் ஆகிய துறைகளில் உயர் கல்வி வழங்கும் கல்வியகமாக இன்று உயர்ந்துள்ளது.
1976 -ஆம் ஆண்டு
முதல் குறிப்பிடத்தக்க பல முன்னேற்றங்களை உயர்
கல்வியகம் கண்டுள்ளது. 1978-இல் இக்குருமடத்தின் இரு நூற்றாண்டு நினைவாகப் புனித பேதுரு நூலகமும், முதுகலை மாணவர்களுக்கான தங்குமிடமும் கட்டப்பட்டன. இறையியல் அறிவை ஆழப்படுத்த கத்தோலிக்கக் கல்விக்கான பேராயம் 1985-இல் புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரிக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கியது.
பொதுநிலையினருக்கான
பாடத்திட்டங்கள்
(1980) திரு அவைச் சட்டப்
படிப்பிற்கான
மையம்
(1981)
இரண்டாம்
வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு பொதுநிலையினரை உருவாக்குவதைக் கருத்தில் கொண்டு, இறைமக்களுக்கு இறையியலைக் கொண்டு செல்ல புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரி 1980-களிலேயே பல்வேறு பாடத்திட்டங்களை உருவாக்கி, இன்றுவரை கற்பித்துக் கொண்டிருக்கிறது.
1983 -ஆம் ஆண்டு
புதிய திரு அவைச் சட்டம் வெளியிடப்பட்ட பிறகு, இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCI) உத்தரவின்
பேரில் புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரியில் திரு அவைச் சட்டம் பயிலும் மையத்தை 1987-இல் தொடங்கியது. அடுத்த ஆண்டே (1988) கத்தோலிக்கக் கல்விக்கான பேராயம் ஒப்புதல் அளித்ததன் பேரில் புனித பேதுரு திரு அவைச் சட்ட மையமானது வத்திக்கான் நகரின் உர்பானியானா பாப்பிறை பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டது. இன்று வரை 410 மாணவர்கள் முதுகலை உயர் கல்வியை நிறைவு செய்து இந்தியத் திரு அவைக்குச் சிறப்பான பணியாற்றி வருகின்றனர்.
மெய்யியல்
(1991) மறைசார்ந்த அறிவியலில் உயர்
கல்வி (Higher
Institute of Religious Education HIRS - 2022)
புனித
பேதுரு பாப்பிறைக் கல்லூரி மெய்யியல் முதுகலைப் பட்டப்படிப்பை வழங்க 1991-ஆம் ஆண்டு தனித்துறையைத் துவக்க அங்கீகாரமும் பெற்றது. 1992, ஜூன் முதல் அதற்கான பாடத் திட்டங்களை வகுத்துக் கற்பிக்கத் தொடங்கியது. மறைசார்ந்த அறிவியலில் உயர் கல்வி (Higher Institute of Religious Science - HIRS) ஜூன் 2022 -இல் தொடங்கப்பட்டு, பொதுநிலையினருக்கும் அர்ப்பணிப்பு வாழ்விலுள்ள சகோதர, சகோதரிகளுக்கும் மறைசார்ந்த அறிவியலில் இளங்கலைப் பட்டமும் (Bachelor of Religious Science), முதுகலைப் பட்டமும்
(Licentiate in Religious Science) பெறுவதற்கான வழிவகையைத்
தருகின்றது.
இணைய வழி
இறையியல்
கல்வி
(St. Peter\'s Online Theology –SPOT 2023)
இறையியல்
கல்வியை நேரிடையாகச் சென்று பயில முடியாதவர்களுக்கு இணையம் வழியாகக் கற்பிக்கும் முறையைப் புனித பேதுரு பாப்பிறைக் கல்லூரி 2023 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. பொதுநிலையினர் மற்றும் அர்ப்பண வாழ்வு சபையினருக்கான இரண்டு வருட இறையியல் பட்டயப் படிப்பு மற்றும் இறையியல், விவிலிய இறையியல், மறைத்தூதுப் பணியியல், திரு அவைச் சட்டம் ஆகிய துறைகளில் ஒருவருட சான்றிதழ் படிப்பிற்கான கல்வியை 950 நபர்களுக்கு வழங்கி வருகிறது.
புனித
பேதுரு பாப்பிறைக் கல்லூரி ஆளுகையின் கீழ் இந்தியாவில் செயல்படும் 9 இறையியல் கல்லூரிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
புனித பேதுரு
பாப்பிறைக்
கல்லூரியின்
நோக்க
மும்
எதிர்கால
திட்டமும்
இந்தியத்
திரு அவை எதிர்கொள்ளும் இன்றைய சவால்களைத் தத்துவ மற்றும் இறையியல் அறிவுடன் சந்திக்க இக்கல்லூரி முற்படுகிறது. திரு அவை சார்ந்த மேற்படிப்புகளில், அறிவியல் ஆய்வுகளில் ஆர்வத்தோடு ஈடுபட பயிற்சியும், இந்தியக் கலாச்சார, தார்மீக, மத மற்றும் தத்துவ
மரபுகளின்படி ஆய்வுகளை ஊக்கப்படுத்தவும் இக்கல்வியகம் உதவுகிறது. மெய்யியல், இறையியல், திரு அவைச் சட்டம், மறைத்தூதுப் பணியியல் துறைகளின் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட
உள்ளன.
புனித
பேதுரு பாப்பிறைக் கல்லூரியானது மென்மேலும் வளர்ச்சி பெற்று இந்தியத் திரு அவைக்குப் பணியாற்ற வாழ்த்துவோம்.
பொங்கல் விடுமுறையாதலால் பாவையின் கணவர், குழந்தைகள் வேந்தன்-அஞ்சனம், கணவரின் தங்கை பியூலா அனைவரும் கிளம்பி சிலம்புச் செல்வியின் வீட்டுக்குச் சென்றனர்.
போகும்
வழி நெடுகிலும் கரும்பைக் கட்டு கட்டாகக் கட்டி நிறுத்திக் குவித்து வைத்திருந்தனர். புது மஞ்சளும் இஞ்சியும் பெருமளவில் விற்பனையாகிக் கொண்டிருந்தன.
வீதியெல்லாம்
என்னவோ போல் வித்தியாசமாக இருக்கிறதை “என்ன அது... என்ன அது?” என வேந்தன் கேட்டுக்கொண்டே
வந்தான்.
“சரி, எல்லாவற்றையும் கேட்டாயே... வீடுகளின் நிலைப்படிகளில், வாசலில் என்று பூளைப் பூவையும், வேப்பிலையையும் சேர்த்துக் கட்டிச் செருகி வைத்திருக்கிறார்களே….. அதை
நீ கவனிக்கவில்லையாக்கும்?” என்று கேட்டாள் பாவை.
“அது என்னங்க அம்மா பூளைப்பூ?”
“வெள்ளையாக, சிறிதாக மூக்குத்தி அளவில் காணப்படுகிறதல்லவா! அதுதான் பூளைப்பூ. பொங்கல் சமயத்தில் மட்டும்தான் இந்தப் பூ விளையும். கோவையில்,
பூளைப்பூ அதிகமாக விளைந்த பகுதியை ‘பூளைமேடு’
என்றனர். அப்பெயர் மருவி இப்பொழுது பொருள் தெரியாமல் ‘பீளமேடு’ என்று கூறுகிறார்கள். பூளைப்பூ அழகு; வேப்பிலை கிருமிநாசினி. எனவே, இரண்டையும் சேர்த்து வைப்பது நமது தொன்றுதொட்ட மரபாக இருந்து வருகிறது. இது மட்டுமில்லை பாவை, பூளைப் பூவிற்கு மருத்துவக் குணம் மிகுதி. ஈரத்தை உறியும் ஆற்றல் பூளைப் பூவிற்கு உண்டு. வேப்பிலையும் சூடு தைக்குளிர் தரையெல்லாம் நடுங்கும் என்பார்கள். சுற்றுப்புறச் சூழலில் உள்ள பனியின் அளவைச் சமச்சீராக்கித் தருவதற்காக இறைவன் நமக்குக் கொடுத்த கொடையே பூளைப்பூ.”
பேராசிரியரான
தன் அண்ணா சொல்வதை மருத்துவரான பியூலா கேட்டு வியந்த வண்ணம் இருந்தார்.
‘பொங்கலோ பொங்கல்’
- இப்படி மூன்று முறை அனைவரும் சேர்ந்து ஒரே குரலில் முழங்கினர். சிலம்புச் செல்வியின் வீட்டிற்குள் பாவை குடும்பத்தினர் நுழைவதற்கும், பொங்கல் முழக்கம் எழுவதற்கும் சரியாக இருந்தது. முழக்கத்தைத் தொடர்ந்து பெண்களும் வயதானவர்களும் சேர்ந்து நாவால் குலவை இட்டனர்.
“என்ன குழந்தைகளா, எல்லாம் உங்களுக்கு வியப்பாக இருக்கிறதா! முதலில் பொங்கல் சாப்பிடுங்கள். பிறகு பொங்கல் பண்டிகை பற்றி என்ன விவரம் வேண்டும், கேளுங்கள் நான் சொல்கிறேன்” - சிலம்புச்
செல்வியின் மாமனார் சமயச் சொற்பொழிவாளர் அன்புடன் கூறினார்.
முந்திரி,
கல்கண்டு, நெய் என்று மணத்த பொங்கல் பிள்ளைகளை மயக்கியது. விருப்பமாகக் குழந்தைகள் உண்டனர்.
“குழந்தைகளா, வெறும் பொங்கல் மட்டும் சாப்பிட்டால் எப்படி? அதிரசம், முறுக்கு, பணியாரம் எனப் பலகாரங்களும் இருக்கின்றனவே. அவைகளையும் ஒரு கை பாருங்கள்” என்றார் பெரியவர்.
“தாத்தா, பொங்கலுக்கு முதல் நாள் தீ எதுக்கு வைக்கிறாங்க?”
இது அஞ்சனத்தின் ஐயம்.
“ஒரு வருடமாக வீட்டில் சேர்ந்திருக்கும் பழைய குப்பைகளை எல்லாம் வெளியே எடுத்துப் போட்டுத் தூய்மை செய்வார்கள். வெளியே எறிந்துவிட்டால் சுற்றுப்புறம் மாசுபடும். ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’
என்பார்கள். அந்த முறையில் பழைய குப்பைகளை நெருப்பு வைத்துச் சாம்பலாக்கிப் போக்கி விடுவர். பழைய குப்பைகளைப் போக்கும் நிகழ்வை ஒரு பண்டிகையாகவே நம் முன்னோர் முறைப்படுத்திக் கடைப் பிடித்தனர். அதைத்தான் போகிப் பண்டிகை என்கின்றோம்.”
“தைப்பொங்கலுக்கு ஏன் தாத்தா யாரும் தலைக்குக் குளிப்பதில்லை? தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறார்கள் இல்லையா?”
“தீபாவளி சமயம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு ஏற்ற வகையில் வெப்பம் இருக்கும். பொங்கலின் பொழுது கடும் பனிக்காலமாக இருக்கிறது இல்லையா! அதனால் எண்ணெய் தேய்த்துத் தலைக்கு நீராடல் என்பது முக்கியத்துவம் பெறாது. ஆனால், தீபாவளி நமது பண்டிகை இல்லை. வட நாட்டாருடையது.”
“அப்படியானால் பொங்கல்தான் தமிழர் பண்டிகையா தாத்தா?” அஞ்சனா வினவினாள்.
“ஆமாம். உழவுத் தொழில்தான் நம் தமிழர்களின் முக்கியத் தொழில். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.”
“தை பிறந்தால் வழி
பிறக்கும்’-ன்னு
ஏன் சொல்றாங்க தாத்தா?” இது
வேந்தன்.
“தை மாதம் நன்மைகள்
பெருகுமாம். நல்லது செய்யக்கூடியதும் ஆதாரமாக இருக்கக்கூடியவற்றையெல்லாம்
பெண்ணாகக் கூறுவது மரபு. மலை, கடல், ஆறு இவற்றைப் பெண்ணாகத்தான் நாம் பார்க்கிறோம். அதைப்போல் ஓராண்டு காலம் உழவர்கள் உழைத்த உழைப்பெல்லாம் தை மாதத்தில் நெல்மணிகளாகப்
பெருக்கெடுக்கின்றன. அந்த நெல் சோறாகப் பொங்கிப் பசியைத் தீர்க்கின்றது. இதேமாதிரி நன்மைகளின் ஊற்றாக இருக்கும் தைப்பொங்கலைத் தமிழர்களின் புது வருடப் பிறப்பாகத் தமிழக அரசு அறிவித்திருப்பது மிகப் பொருத்தம்தானே”
“அது சரி தாத்தா. வீட்டுக்கு வெள்ளை அடிச்சிருக்கீங்க சரி, மாட்டுக்கு எதுக்கு வண்ணம் பூசியிருக்கீங்க?” - இது அஞ்சனத்தின் வினா.
“சாம்பார் இல்லாத கல்யாணமா? எருதுகள் இல்லாமல் உழவுத் தொழிலா? உழவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை மதிக்கும் வகையில் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவதுதான் மாட்டுப் பொங்கல். அன்றைக்கு மாடுகளுக்கு வேலைகள் கொடுக்கமாட்டார்கள். முதல் நாளிலேயே மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவர். கொம்பின் நுனியில் மணிகளைக் கட்டி அழகு செய்வர். மாட்டுப் பொங்கலன்று சங்க காலத்தில் இருந்தே துள்ளி வரும் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு நடந்து வருகிறது. அதற்கு ‘ஏறு தழுவுதல்’
என்று முல்லைக்கலி குறிப்பிடுகிறது.”
“அது சரி. ‘காணும் பொங்கல்’ன்னா என்ன தாத்தா?”
“அழகு அஞ்சனா! சொல்றேன்
கேளு. மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் ஒருவர் ஒருவரைச் சென்று கண்டு மகிழ்வதும் பெரியவர்களைக்
கண்டு ஆசிர்வாதம் வாங்கிக்கொள்வதும்தான் காணும் பொங்கல்.”
“தாத்தா... பொங்கல் விழாவில் இத்தனை செய்திகள், தமிழர் மரபு, வாழ்வியல் இருக்கின்றனவா! ஆச்சரியமாக இருக்கிறதே!”
“ஆமாம். தமிழர் வாழ்வியல் இது... மறந்துவிடாதீர்கள். மனத்தில் கொள்ளுங்கள்.”
ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே கல்வி, ஒரே ரேசன், ஒரே தேர்தல், ஒரே வாக்காளர் பட்டியல் என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல் திட்டம்; அதுவே பின் வழியே ‘ஒரே தலைவன்’ என்ற அதிபர் ஆட்சி முறைக்குத் திசைவழி காட்டுகிறது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் கூறுகிறார்: “ஜனநாயகம் என்பது அந்நிய சரக்கு.” ஆம்.
என்றுமே ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அங்கீகரித்தது இல்லை. அதன் அடிப்படையை மாற்றத்
துடிக்கிறார்கள். புதுப் புது வழிகளைத் தேடுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ச.க.
2014 முதல் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்றது. இதையே தன் தேர்தல் அறிக்கையிலும் அறிவித்தது. 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பா.ச.க.விற்குத் தனிப் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்துகிறது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆராய,
கொண்டுவர, முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு பேர் கொண்ட ஒரு குழுவை மோடி அரசு
அமைத்தது.
குழுத்
தலைவராக கோவிந்த் நியமிக்கப்பட்டது மரபு
மீறல் என்ற விமர்சனம் எழுந்தது. ‘முப்படைகளின் தலைவராக இருந்தவரை, ஒரு முன்னாள் முதல் குடிமகனைச் சாதாரண குழுவிற்குத் தலைவராக்குவதா?’ என்று கேள்விகள் பிறந்தன. 27,000 பொதுமக்களிடமும் 47 அரசியல் கட்சிகளிடமும் அக்குழு கருத்துகள்
கேட்டது. ஏழு
முக்கியப் பிரச்சினைகளை ஆராய்ந்தது. பல போலி இணையதள
வாக்கெடுப்புகள் எனக் களேபரம் நடத்தியது. தன் 18,626 பக்க அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கியது. ஒரு நகைப்பிற்குரிய செய்தியை, ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த குழு தன் அறிக்கையில் வைத்திருந்தது. அது தங்கள் பிதாமகன் மோடியை மறந்துவிட்டு, தேசத்தில் வெறுப்புப் பிரச்சாரங்கள் குறையும் என உண்மையும் பேசியது.
அறிக்கையைப்
பெற்ற வேகத்தில் ஒன்றிய அமைச்சரவை பரிந்துரைகளுக்கு
ஒப்புதல் வழங்கி விட்டது. அதை மக்களவை, மாநிலங்களவையில்
ஒன்றிய அரசு வைக்க வேண்டும், சட்டமாக்க வேண்டும். பாதிக்கும் மேற்பட்ட மாநில சட்ட சபைகளும் ஒப்புதல் வழங்க வேண்டும்.
பா.ச.க. ‘ஒரே
நாடு, ஒரே தேர்தல்’ சட்டத் திருத்தம் கொண்டு
வர அரசியலமைப்புச் சட்டத்தில் 83 மற்றும் 172-இன் பிரிவுகளைத் திருத்த வேண்டும். ஆறு அல்லது ஏழு
திருத்த மசோதாக்களின் அடிப்படையில் ஒரே நாடு, ஒரே தேர்தலைக் கொண்டு வந்துவிடலாம் என எண்ணுகிறார்கள். ஆனால், மக்களவையில்
மூன்றில் இரண்டு பங்கு 362 வாக்குகள் தேவை. ஆனால், தேசிய சனநாயகக் கூட்டணிக்கு இருப்பதோ 292 வாக்குகள்தான். மாநிலங்கள் அவையிலும் இதே நிலைதான். மூன்றில் இரண்டு பங்கு 164 வாக்குகள்
தேவை. ஆனால், தேசிய சனநாயகக் கூட்டணிக்கு இருப்பதோ 112 வாக்குகள்தான். என்ன மாயம் செய்யப் போகிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ கொண்டு வர பா.ச.க. இரண்டு முக்கியக்
காரணங்களைச் சொல்கிறது: ஒன்று, ஆண்டு முழுவதும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடப்பதால், அரசு இயந்திரம் முடங்குகிறது. எதிர்க்கட்சிகள் திருப்பிக் கேட்கிறது: ‘புதிய திட்டங்கள் அறிவிக்கத்தானே தேர்தல் நடத்தை விதிகள்? அரசின் அன்றாட நடவடிக்கைகளுக்கும் தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையே! கடந்த முறை பாராளுமன்றத் தேர்தல்கள் மட்டும் ஏழு கட்டங்களாக நடத்தப்படவில்லையா?” எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.
அன்று
கூறிய பதில் ‘தேர்தல் பணியாளர்கள், தேர்தல் பாதுகாப்புப் பணிகள் பற்றாக்குறை’ என்பது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் போது இன்று எவ்வாறு அப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும்?
இவர்களால்
தேசிய தேர்வு முகமை மூலமாக நடத்தப்படும், இலட்சக்கணக்கில் பங்கு பெறும் நீட், என்.இ.டி. போன்ற
தேர்வுகளையே முறையாக நடத்த
முடிவதில்லையே என்ற வாதம் வைக்கப்படுகிறது.
ஒரே
நாடு, ஒரே தேர்தல் கொண்டுவர பா.ச.க. சொல்லும்
இரண்டாவது காரணம், தேர்தல் செலவுகளைக் குறைக்கலாம் என்பது. பா.ச.க.
முன்பு ஒரே நேரத்தில் ஒன்றிய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் என்றது. தற்போது உள்ளாட்சித் தேர்தல்களை
மட்டும், பொதுத் தேர்தல் முடிந்து 100 நாள்கள் கழித்து நடத்தலாம் என இறங்கி வருகிறது.
இவ்வாறு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த புதிய 15 இலட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்களும், அதே அளவு விவிபெட்களும் புதிதாக வாங்க வேண்டும். அவை ஒன்றின் விலை 17 ஆயிரம் ரூபாய் என்றால், எத்தனை கோடிகள் எனக் கேட்டால் மயக்கம் வருகிறது. இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கும், விவிபெட்களுக்கும் ஆயுள் 15 வருடங்கள்தான்.
2019-ஆம் ஆண்டு
நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் செலவு 3,870 கோடி. அது ஒன்றிய அரசின் செலவில் 0.02 சதவிகிதம் என்பது கணக்கீடு. ஒரு 95 கோடி மக்கள் தங்கள் சனநாயகக் கடமையைச் செய்ய இத்தொகை சிறிதளவுதான் என்ற
வாதமும் வைக்கப்படுகிறது.
தமிழ்நாடு
முதல்வர் மு.க. ஸ்டாலின்
ஒரே நாடு, ஒரே தேர்தல் வழியே எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஆளுநர் மூலம் ஆளலாம் என்ற தந்திரமும் இதில் உள்ளது என்கிறார். ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்போது மாநிலங்களில் சட்டப் பேரவைகள் கலைக்கப்படும் அல்லது
பதவிக் காலம் நீட்டிக்கப்படும் என்ற கூத்தும் உண்டு. மாநில அரசிற்கு முன்கூட்டியே சட்டப் பேரவையைக் கலைக்கும் மாநில அதிகாரம் பறிபோகிறது.
‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க.வின் மறைக்கப்பட்ட செயல் திட்டங்கள் குறித்து ஐயங்களை எழுப்புகிறார்கள்.
ஒன்றிய அரசிற்கான தேர்தல்களும், மாநில அரசுகளுக்கான தேர்தல்களும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து நடக்கிறது. அதன் அடிப்படை ஒரே நாடு, ஒரே தேர்தலால் அடிபடும். கூட்டாட்சித் தத்துவம் விலக்கிக்கொள்ளப்படும். வருங்காலங்களில் மாநிலங்களே இல்லாத மாவட்டத் தலைவர்களின் ஒற்றை ஆட்சி முறை மாவட்டங்களில் நடத்தப்பட்டு, ஒரே தேசமாக அறிவிக்கப்படும். அதிபர் ஆட்சி முறை கொண்டு வரப்படும். இந்திய அரசியல் சாசனம் தூக்கி எறியப்படும்.
மாநிலக் கட்சிகள் முடக்கப்படும். தேசத்தின் பன்முகத்தன்மை ‘ஒரே நாடு, ஒரே தேர்தலால்’
கேள்விக்குறியாக்கப்படும்.
ஒன்றிய அரசின் தொடர் அதிகாரக் குவிப்பை ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ உறுதிப்படுத்தும். ஒன்றியத் தேர்தல் ஆணையம் தேர்தல் முறைகளை, தேர்தல்களைக் கேள்விகுறியாக்கும்.
அரசியல்
சாசன நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான சஞ்சய் ஹெக்டே “ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது அதிபர் முறை சனநாயகம் போல் ஆகிவிடும்”
என்கிறார். ஆம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதைச் செயல்திட்டமாக்கி, அதை நோக்கியே பா.ச.க.
தன் சதுரங்க ஆட்டக் காய்களை நகர்த்
துகிறது. மோடி என்ற ஒற்றைத் தலைவனைக் கட்டமைக்க முயல்கிறது. சனநாயகம், அரசியலமைப்பு என்பதைக் கேள்விகுறியாக்குகிறது.
தேசம்
காக்க, சனநாயகச் சக்திகளான நாம் ஒருங்கிணைவது காலத்தின் கட்டாயம்.
இறை இயேசுவில் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் இறை அமைதி உரித்தாகுக!
‘கடவுள் நம்மோடு உள்ளார்’ என்பதை நமக்கு உணர்த்தும் இம்மானுவேலும் இறைமைந்தனுமான இயேசு பாலனின் பிறப்பைக் கொண்டாடி நாம் தொடங்கியிருக்கின்ற யூபிலி - 2025 ஆண்டினை மையப்படுத்தி மூன்று கருத்துகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகின்றேன்.
1. இயேசுவே எதிர்நோக்கு
நம்மைச்
சுற்றியுள்ள எண்ணற்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் வருகின்ற யூபிலி ஆண்டின் மையக்கருத்தாக ‘எதிர்நோக்கு’ என்ற
பொருளையே நம் திருத்தந்தை பிரான்சிஸ் தேர்ந்தெடுத்துள்ளார். உரோமை நகரில் 2024 -ஆம் ஆண்டு மே மாதம் நம்
ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்புப் பெருவிழாவின்போது கொடுக்கப்பட்ட ‘Spes non Confundit’ என்ற தனது அதிகாரப்பூர்வத் திருப்பீடச் சுற்றறிக்கையில், “நம்பிக்கையோ, எதிர்நோக்கோ பொய்க்காது” (உரோ
5: 5) என்னும் தூய பவுலடியாரின் வார்த்தையோடு தொடங்குகிறார். இந்தக் கிறித்தவ எதிர்நோக்கு என்பது நம்முன் நிற்கும் கணக்கிலடங்காச் சவால்களுக்கு மத்தியிலும், எதிர்காலத்தைக் குறித்த நம்பகமற்ற எதார்த்தத்திற்கு மத்தியிலும் நல்லதே நிகழும் என்னும் எதிர்பார்ப்போடு காத்திருப்பதைக் குறிக்கிறது.
கிறித்தவ
எதிர்நோக்கு என்னும் புண்ணியம் நம்பிக்கை, அன்பு என்ற ஏனைய பிற புண்ணியங்களோடு உள்ளூறக் கலந்ததாக உள்ளது. இவை நாம் எதை எதிர்நோக்கியிருக்கிறோமோ அதன்மீதே கட்டமைக்கப்பட்டுள்ளன. எதிர்நோக்கே நமக்கு மீட்பை அருள்கிறது (உரோ 8: 24).
கிறிஸ்துமஸ்
விழாவைப் பொருளுள்ள வகையில் கொண்டாட நாம் திருவருகைக் காலத்தில் பயணித்தோம். இந்தத் தயாரிப்பு வார்த்தை மனுவுரு ஏற்ற மெசியாவின் வருகையை ஒட்டிய நமது எதிர்நோக்கின் காத்திருப்பை அடையாளப்படுத்தியது. இந்த மனுக்குலத்தின் ஒரே எதிர்நோக்கும் நம்பிக்கையுமான அந்த ஒரே மெசியாவைப் பற்றி பழைய ஏற்பாட்டின் இறைவாக்கினர்கள் தொடங்கி, தூய திருமுழுக்கு யோவான் வரை அனைவரும் அறிவித்தனர். அந்த ஒரே மனிதரோடு, நம் மீட்பின் காரணரும் ஊற்றுமான இறைமகனோடு நாம் யூபிலி ஆண்டு 2025-இல் நுழைகிறோம். இது வரவிருக்கின்ற 2033 -ஆம் ஆண்டு ஆண்டவர் இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பின் வழியாக நாம் பெற்றுக்கொண்ட நமது மீட்பின் 2000 -ஆம் யூபிலியை நோக்கி நம்மை வழிநடத்துகிறது. உயிர்த்த இயேசுவே நம் எதிர்நோக்கு (காண். 1 கொரி 15:12). நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்கும் உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் இருள் நிறைந்த போராட்டங்களுக்கு இடையே, இயேசுவின் தோழமையில் நாம் மேற்கொள்ளும் இந்தத் திருப்பயணம் எதிர்நோக்கோடு எதிர்காலத்திற்குள் நுழைய நம்மை அழைக்கிறது.
2. இயேசுவே வாயில்
கடந்த
2015-இல் நாம் கொண்டாடிய சிறப்பு யூபிலி ஆண்டினைப்போல் அல்லாமல், வரவிருக்கும் 2025-ஆம் ஆண்டு யூபிலிக்கு உரோமையில் உள்ள புனிதக் கதவுகள் மட்டுமே திறக்கப்படும் என்பதை வத்திக்கான் தலைமையகம் தெளிவுபடுத்தியுள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அவற்றைத் திறந்து வைப்பார். முதலாவதாக, உரோமையில் உள்ள தூய பேதுரு பேராலயத்தின் யூபிலி புனிதக் கதவினை டிசம்பர் 24 -ஆம் தேதி கிறிஸ்துமஸ் திருவிழிப்புத் திருப்பலியின்போது திறந்து வைத்துள்ளார். இதனால் 1500-ஆம் ஆண்டு தொடங்கி தொன்றுதொட்டு திரு அவை வரலாற்றில் திருத்தந்தையர்கள் அறிவித்த 25 -ஆம் அல்லது 50 -ஆம் யூபிலி ஆண்டுகளின் வரிசையில், 2025-ஆம் யூபிலி ஆண்டும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படுவதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. அதைத் தொடர்ந்து டிசம்பர் 29 -ஆம் தேதி புனித யோவான் இலாத்தரன் பேராலயத்திலுள்ள புனிதக் கதவைத் திறந்துள்ளார். அதே நாளில், உலகளாவியத் திரு அவையின் அனைத்து மறைமாவட்டங்களிலும் அந்தந்தத் தல ஆயர் மறைமாவட்டப்
பேராலயத்திலும், இணைப் பேராலயத்திலும் திருப்பலி நிறைவேற்றி யூபிலி ஆண்டினைத் தொடங்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார் (ஆயினும் இது அந்தந்தத் தலத்திரு அவையின் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாம்).
‘அன்னை மரியா - இறைவனின் தாய்’ என்ற மாபெரும் பெருவிழாவைக் கொண்டாடும் ஜனவரி 01-ஆம் தேதி உரோமையிலுள்ள மரியன்னை பேராலயத்திலும், ஜனவரி 05 -ஆம் தேதியன்று புனித பவுல் பேராலயத்திலும் புனிதக் கதவு திறக்கப்படும். இந்த நான்கு புனிதக் கதவுகளையும் தாண்டி, உரோமையிலுள்ள ரெபிப்பியா சிறையிலும் புனிதக் கதவு திறக்கப்படும்.
சரி,
திரு அவையின் பாரம்பரிய முறைப்படி யூபிலி ஆண்டில் புனிதக் கதவைத் திறப்பதன் நோக்கமும் காரணமும் என்ன? யோவான் நற்செய்தியில், இயேசு ‘கதவு’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார்.
“நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டு கொள்வர்”
(யோவா 10: 9). இந்த ‘நானே வாயில்’ என்னும் கூற்று, யோவான் நற்செய்தியில் ‘நானே…’ என்று இயேசு மொத்தமாக ஏழு முறை அறிவிப்பதில் மூன்றாவது அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இந்த ‘நானே…’ அறிவிப்புகள் இயேசுவின் தனித்தன்மைக்கும் அடையாளத்திற்கும் குறிக்கோளுக்கும் சான்றாகக் கருதப்படுகின்றன. இதன் வழியாக மீட்பின் கருவூலமாகவும் அடித்தளமாகவும் விளங்கும் இயேசு, காணப்படுகின்ற கதவுகளுள் ஒருவராக அல்ல; மாறாக, ‘ஒரே ஓர் ஒப்பற்ற கதவு’ அவர் மட்டுமே என்னும் கூற்று புலப்படுகிறது. மேலும், பசும்புல் வெளிக்கு நம்மை அழைத்துச் செல்லும் நல்ல ஆயனாக மட்டுமல்ல, மீட்பு என்னும் ஆட்டுக் கொட்டிலுக்குள் நுழைவதற்கான ஒரே கதவும் அவரே என்பதும் இதனால் வெளிப்படுகிறது (யோவா 10: 9).
முடிவில்லாத
வாழ்வை நாம் பெறுவதற்கான ஒரே வழி இயேசு மட்டுமே (யோவா 3:16). மாற்று வழி வேறு ஒன்றும் இல்லை. ‘நானே கதவு’ என்று அவர் சொல்வதிலிருந்து அவரே நம் மீட்பின் அடித்தளம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். நற்செய்தியை நம்பி ஏற்றுக்கொள்பவரும் (எபி 11: 6), பாவங்களிலிருந்து மனந்திருந்துபவரும் (லூக் 13:3) அவருடைய ‘மந்தையில்’
பங்கேற்று, இயேசு என்னும் ‘கதவின்’ வழியாக நுழைந்து மீட்பினைக் கண்டுகொள்வார். கிறிஸ்துவின் சீடர்களான நமக்கு அவரே ஆயனாகவும் ஆட்டுக் கொட்டிலின் வாயிலாகவும் விளங்கி, நம்மை அனைத்து நன்மைகளாலும் நிறைக்கின்றார்.
எனவே,
கிறிஸ்துமஸ் திருவிழிப்புத் திருநிகழ்வில் திறந்து வைக்கப்பட்டுள்ள புனிதக் கதவு, 2025-ஆம் யூபிலி ஆண்டில் கிறிஸ்து என்னும் இம்மானுவேலோடு நாம் புனித ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்பதையும், இறையருளின் மீட்பின் ஆதாரமான இயேசுவோடு புனித வாழ்வுக்குள் நுழைகிறோம் என்பதையும், நம் அழைத்தல் வாழ்வுக்கு அடித்தளமான புனிதக் கதவாகிய இயேசுவோடு நுழைகிறோம் என்பதையும் இது எண்பித்துக் காட்டுகிறது. எனவே, இந்த யூபிலி ஆண்டு இறை இரக்கத் தையும், இறை ஆசிரையும் நம்மீது அபரிமிதமாகப் பொழியும் தருணம் என்றால் அது மிகையாகாது.
3. இயேசுவே அகரமும் னகரமும்
தாமே
‘அகரமும் னகரமும்’ என்று இயேசு திருவெளிப்பாட்டு நூலில் 1: 8, 21: 6 மற்றும் 22: 13 ஆகிய பிரிவுகளில் தம்மைத்தாமே அடையாளப்படுத்துகிறார். A மற்றும் Ω ஆகிய எழுத்துகள்
கிரேக்க மொழியின் எழுத்து வரிசையில் முதலும் முடிவுமாக விளங்குகின்றன. ஒரு பொருளின் முழுமையைக் குறிக்கவும், தொடக்கத்தையும் முடிவையும் அடையாளப்படுத்தவும் யூத சமய குருக்களிடையே கிரேக்க எழுத்துகளான A மற்றும்
Ω ஆகியவற்றைப் பயன்படுத்தும் வழக்கம் இயற்கையாகவே இருந்தது. இதைத் திருவெளிப்பாட்டு நூல் 22:13-இல், “அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே” என்று இயேசுதாமே சொல்வதிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.
ஒவ்வோர்
ஆண்டும் நாம் கொண்டாடும் திருவருகைக் காலம், நாம் தொடங்குகின்ற புதிய திருவழிபாட்டு ஆண்டின் தொடக்கப்புள்ளியாக அமைகிறது. அத்தோடு, பாஸ்கா மறைநிகழ்வுகளைக் கொண்டாடி தியானிக்கும் புதிய சுழற்சியை நாம் தொடங்குகின்றோம். சிறப்பாக இந்த யூபிலி ஆண்டில், கிறிஸ்துமஸ் விழாவின்போது நம் திருப்பயணத்தைத் தொடங்கி, கிறிஸ்து என்னும் புனிதக் கதவின் வழியாக யூபிலி ஆண்டில் நுழைந்து, அகரமும் னகரமுமான கிறிஸ்துவில் நம் நிறைவைக் காண்பது சாலச்சிறந்த அம்சமாக அமைந்துள்ளது.
ஏதென்ஸ்
நகரின் அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று “அவரைச்
சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்” (திப
17: 28) என்றுரைத்த வார்த்தைகள் மேற்கூறிய கருத்தை உண்மையாக்குகின்றன. இயேசுவே தொடக்கமும் முடிவும்; அவரே மீட்பும் அனைத்தும்; அவரே கடவுள்முன் நமக்குத் தீர்வு அளிப்பவர்; அவரே நம்மைப் புனிதப்படுத்தி அர்ச்சிப்பவர். இந்த 21-ஆம் நூற்றாண்டின் சவால்களின் பின்புலத்தில், இதுவே நம் சான்று வாழ்வுக்கான அழைப்பும் அறைகூவலும்! எதிர்நோக்கின் திருப்பயணிகளாக இருக்கவும், கிறிஸ்து என்னும் புனிதக் கதவுக்குள் நுழையவும், ‘அகரமும் னகரமுமாகக்’ கிறிஸ்துவில்
நமது மண்ணகப் பயணத்தின் நிறைவை எய்திடவும் நாம் அழைக்கப்படுகிறோம்.
மனுவுரு
ஏற்றுள்ள கிறிஸ்து இயேசு என்னும் எதிர்நோக்கு, புனிதக் கதவு என்னும் நல்ல ஆயன், ‘அகரமும் னகரமுமான’
இறைமகன் 2025-ஆம் ஆண்டின் புதிய தொடக்கத்திற்கு நம்மை அழைத்துச் செல்வாராக! உங்கள் அனைவருக்கும் 2025-ஆம் ஆண்டு ஒளிமயமான ஆண்டாக அமையட்டும்!
+ ஜார்ஜ் அந்தோணிசாமி, சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்