இந்தியா சனவரி 26 அன்று குடியரசு நாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்தது. விடுதலை பெற்ற இந்தியா தனக்கென அரசமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்கிட முனைந்த நிலையில், நாடு முழுமையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உரிய பிரதிநிதிகளைத் தேர்வு செய்து அரசியல் நிர்ணயச் சபையை உருவாக்கியது. அறிவர் அம்பேத்கர் அவர்களை வரைவுக் குழுத் தலைவராகக் கொண்டு உருவாக்கிய புரட்சிகர அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.
புதிய
இந்தியாவின் அடையாளமாகவும், இந்தியாவின் கொள்கைப் பெட்டகமாகவும், மக்கள் உணர்வின் உள்ளார்ந்த வெளிப்பாடாகவும் இனி உருவாகவிருந்த இந்தியாவின் கருத்தாகவும் (Idea of India) கருதப்பெறும்
இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டம் பிறப்பெடுத்தது.
இந்தியச்
சுதந்திரப் போரில் பங்கு எதுவும் பெறாத ஓர் அமைப்பு, இந்தியச் சுதந்திர தினத்தையும் குடியரசு தினத்தையும் தலைமையேற்று நடத்தப்பெறும் துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், இந்திய அரசமைப்பின் பண்புகள் இந்துப் பண்பிற்கு எதிரானது என்று கோல்வாக்கர் அவர்களால் அவமதிக்கப்பட்ட நிலையிலும், இதே அரசமைப்பின் மீதுதான் கைவைத்து உறுதிமொழி (Oath) எடுத்து
ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டியது காலத்தின் கட்டாயமானது. இவ்வரசமைப்புச் சட்டத்தை இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் ‘போற்றுதற்குரிய வேதம்’ எனப் புகழ்ந்ததும் இன்று உலகறிந்த செய்தி!
நடந்து
முடிந்த நாடாளுமன்ற விவாதங்கள் முழுமையும் அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டு நிறைவை முன்வைத்து நடத்தப்பட்டவைதான் என்பதும், இவ்விவாதத்தின் ஒரு பகுதியில் அறிவர் அம்பேத்கர் இந்திய உள்துறை அமைச்சர் அவர்களால் அவமானப்படுத்தப்பட்டதையும் அறிவோம். மனுஸ்மிருதியையும் சவார்க்கரையும் கொண்டாடும் இன்றைய அரசு, சமயச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தை மதித்ததில்லை என்பதையும், கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அரசமைப்பின் முக்கிய விழுமியங்கள் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டுள்ளன என்பதையும் எதிரணிகள் ஆணித்தரமாக எடுத்து வைத்தன.
சனநாயகத்தை
நம்பாத ஒரு மதவாத கட்சி, சனநாயகம் தந்த தேர்தல் சனநாயகத்தை விடாமல் காத்து வருதலில் என்ன சூழ்ச்சியுள்ளதோ, அதே நிலைதான் அரசமைப்பைக் காப்பதாக அல்லது மதிப்பதாகக் காட்டிக்கொள்ளும் நாடகமும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
“தொன்று தொட்டு இந்தியா காத்துவரும் முதன்மை மதிப்பீடுகளின் தொடர்ச்சியே இன்றைய அரசமைப்புச் சட்டம். சமத்துவம், சுதந்திரம், நீதி எனும் உயர்விழுமியங்கள் இந்திய நாகரிகம் ஏற்கெனவே காத்துவரும் மதிப்பீடுகளே. இதைத்தான் நம் அரசமைப்புச் சட்டம் பிரதிபலிக்கிறது. இந்தியச் சுதந்திரத்தின் நிலைப் பண்பைக் குறித்து சந்தேகப்பட்டவர்கள்தான் தோற்றுப் போனார்கள்”
- குடியரசுத் தலைவர் முர்மு அவர்களின் குடியரசு தின உரையின் சுருக்கம். இந்தக் குடியரசு தின உரையின் சாரம் மிகச் சரியானதே. அரசமைப்பின் முகப்புரையில் தரப்பட்டுள்ள அடிப்படை விழுமியங்களின் இன்றைய ஏற்புடைமை பற்றி நமக்கு வேறுபட்ட கருத்து இருந்தாலும், மீண்டும் மீண்டும் வலுவூட்டப்பெறும் இக்கூற்றுகள் நமக்கு மகிழ்வையே தருகின்றன.
நம்பிக்கையற்ற
அல்லது பக்தி தன்மையற்ற ஒரு மதவாத கட்சி சனநாயகத்தைக் காக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம் சமயச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்தை ஏற்குமா?
அரசமைப்புச்
சட்டத்தின் அனைத்து விழுமியங்களுக்கும் எதிரான ஆர்.எஸ்.எஸ். என்ற மூல அமைப்பு தன் நோக்கை மிகத் தெளிவாகவே இந்திய மக்களிடம் வைத்து வருகிறது. மூலக் கொள்கையில் இவ்வமைப்புகளிடம் எந்தவிதச் சமரசமும் இல்லா நிலையில்,
ஆட்சியைத் தற்காலிகமாகக் காத்துக் கொள்ளும் சூழ்ச்சியாகவே இக்கட்சியின் போக்கை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சூழ்ச்சியின்
உச்சம்
பாபர்
மசூதி உடைப்பிற்குப் பின், விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கியதைப் பலர் மறந்திருக்கலாம். மோடி ஆட்சிக் கட்டிலேறிய முதலாண்டில் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழாவுக்கெனத் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழில் ‘சோசலிசம்’,
‘சமயச் சார்பின்மை’ என்ற
இரு வார்த்தைகளும் களவாடப்பட்டிருந்தன. அண்மையில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அவர்கள் இந்தியா 1947-இல் பெற்ற சுதந்திரத்தை மறுத்து, ‘இராமருக்கான கோவில் எழுப்பப்பட்ட நாளையே உண்மையாகச் சுதந்திர நாள்’ என்று அறிவித்தமையின் உள்ளடக்கம் என்ன?
இந்தியச்
சுதந்திரப் போரில் பங்கு எதுவுமற்ற ஆர்.எஸ்.எஸ். இப்படித்தான் சிந்திக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்தியச் சுதந்திரம் இந்து நாடு ஒன்றை உருவாக்க உதவவில்லை என்பதாலும், சுதந்திரம் பெற்ற இந்தியா சனாதனக் கொள்கைகளுக்கு முரணான அரசமைப்புச் சட்டத்தை அடிப்படை அடையாளமாக ஏற்றதால், இந்துத்துவ அமைப்புகள் நிலவும் அரசமைப்பை ஏற்றுக்கொள்வதுபோல நாடகமாடி வருகையில், அண்மையில் ‘தர்ம சன்மத் சமய நாடாளுமன்றம்’ (Religious Parliament) என்று அழைக்கப்பெறும் விசுவ இந்து பரிஷத்தின் அமைப்பொன்று புதிய அரசமைப்புச் சட்டத்தை அறிவித்துள்ளது.
“இந்து இராஷ்டிராவுக்கான அரசமைப்பு ஒற்றைச் சட்டமன்றத்தை (unicameral Legislature)
நடைமுறைப்படுத்துமாம்.
இராணுவப் பயிற்சி அனைத்துக் குடிமக்களுக்கும் கட்டாயமாக்கப்படுமாம். அரசு தொகுதி வளர்ச்சிக்குத் தரும் நிதி, சமய நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கு மட்டுமே வழங்கப்பெறுமாம். வேளாண்துறை வரிவிலக்குபெறும். இப்பிரதிநிதிகள் வேத பாடசாலையில் கல்வி கற்றவர்களாக இருத்தல் வேண்டும். சமய நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டவர்களைத் திரும்பப் பெறும் உரிமையுண்டு. வாக்காளர் எண்ணிக்கையில் 50,000 பேரின் ஒப்புதலைப் பெற்றால் இது நடைமுறைக்கு வரும். இந்தப் புதிய அரசமைப்புச் சட்டம் இராமராஜ்யம், மனுஸ்மிருதி, சாணக்கியரின் அர்த்த சாஸ்திர அடிப்படையில் அமையும். விரைவான நீதிக்கு உத்தரவாதம் அளிக்கப்படும். ஒரு நபருக்கு அளிக்கப்பெறும் தண்டனை, அவரைத் திருத்துவதற்கான கருவியாக அமையும். பொய்யான குற்றச்சாட்டுகளுக்குத் தண்டனை வழங்கப்பெறும். இவ்வரசமைப்புச் சட்டப்படி சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். இந்திய மண்ணில் தோன்றிய இந்து, சைனம், சீக்கியம், பௌத்த மதம் சார்ந்தவர்களே வாக்களிக்கும் (Vote) உரிமை
பெற்றவர்கள். கல்வி அமைப்பு குருகுல முறையில் மாற்றப்படும். ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளிகள் குருகுலப் பள்ளிகளாக மாற்றப்படும். இசுலாமியர்
நடத்தும் மதராசா பள்ளிகள் மூடப்படும். சாதி அமைப்பு ஒழிக்கப்படும். ஒற்றைத் திருமண முறையும், கூட்டுக் குடும்ப முறையும் ஊக்குவிக்கப்படும். உலக நாடுகள் அனைத்தும் இந்து இராஷ்டிரத்தை அங்கீகரிக்கும் வகையில் பரப்புரை அமையும்.
இவ்வுலகில்
கிறித்தவர்களுக்கென்று
நாடுகள் உள்ளன; இசுலாமியர்க்கும் உள்ளன; இந்துகளுக்கென்று நாடு எதுவும் இல்லாச் சூழலில், இந்நாட்டை இந்து நாடாக அங்கீகரிக்க இம்முயற்சி தொடரும். புதிய அரசமைப்பின்படி, மத நம்பிக்கைகளும் மதச்
சுதந்திரமும் பாதுகாக்கப்படும்.
இந்தியா
முழுமையிலான நிபுணர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும்
501 பக்க இந்த ஆவணம் சங்கராச்சாரியாரின் அனுமதி பெற்றபின் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் (‘டெக்கான் ஹெரால்டு’,
பெங்களூரு பதிப்பு 26.01.2025).
மேற்கண்ட
செய்தித் தொகுப்பினை நாம் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறோம்? எங்கோ கூடிய சில மதவாதிகளின், மத அடிப்படைவாதிகளின் உளறலாக மட்டுமே
கருதப் போகிறோமா?
மதவாதிகள்
எனச் சிறுமைப்படுத்தப்பட்டு, கண்டுகொள்ளாமல் விட்ட நிலைக்கு இந்த நாடு ஒவ்வொரு நாளும் பதிலளிக்க முடியாமல் திணறி வருகிறது.
வகுப்புவாத
இந்துத்துவர்கள் பேசிய அகண்ட பாரதக் கனவு இன்றும் நனவாகாமல் இருக்கலாம்; நிலப்பரப்பில் அகண்ட பாரதக் கனவு நனவாகாமல் இருக்கலாம்; இந்துத்துவர்களின் தொடர் பரப்புரைகளால் இந்திய எல்லை தாண்டி, உலக அளவிலான அங்கீகாரத்தை மோடி தலைமையிலான அரசு பெற்றுள்ளது என்பதே உண்மை. இதுவும் அகண்ட பாரதக் கருத்தியலின் வெற்றிதான் அல்லது மதப் பெரும்பான்மைவாத அரசு, ஒரு பாசிச அரசாகத்தான் இருக்க முடியும் என்ற அடிப்படை அரசியல் ஞானம் கூட இல்லாத உலக அரசுகள் எப்படி மோடி அரசுக்கு அங்கீகாரம் வழங்க முடியும்?
சனநாயகத்திற்கு,
சனநாயகம் காக்க உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்திற்கு இந்துத்துவ அரசியலால் ஆபத்து வரும் என்று வகுப்புவாத அரசியலின் போக்கையும் வரலாற்றையும் அறிந்திருந்த அரசியல் அறிஞர்கள் முன்னறிவித்த போதெல்லாம், இது வெறும் கற்பனையென்று நகைத்தவர்கள் அனைவருக்கும் இன்றைய ஆட்சியாளர் தரும் பாடம் என்ன? இந்துத்துவர்களின் சனநாயகத்தின் எதிரான போக்கு உண்மை சனநாயகம் பற்றிய விவாதத்திற்கும், அரசமைப்புச் சட்டம் பற்றிய புரிதலுக்கும் வழிவகுத்தது என்பது ஒரு நேரடி விளைவு என்பதும் உண்மையே. இந்த நேரடி விளைவு வரவேற்கத்தக்கது என்றாலும், காந்தி, நேரு, அம்பேத்கர் தலைமையிலான இந்தியக் கனவுக்கு (Idea of India) நேர்
எதிரான போக்கு மக்கள் மனத்தில் திட்டமிட்டு விதைக்கப்பட்டு நியாயம் பெற்று வருதலை மூன்றாம் முறை ஆட்சிப் பொறுப்பேற்ற மோடி ஆட்சி நிரூபிக்கவில்லையா?
நாக்பூரைத்
தலைமையிடமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். எனும் வகுப்புவாத அமைப்பு, தன் பரிவாரங்களை நாடு முழுவதும் விரித்து வருகின்ற சூழலில் இந்திய அரசியல், சமூகப் பண்பாட்டுக் கட்டமைப்புகளைச் சிதைத்து வருவதை இந்தியாவின் சமயச் சார்பற்ற அரசியல் அறிஞர்கள் எடுத்துக் காட்டியும் எச்சரித்தும் வந்துள்ளனர். இவ்வெச்சரிக்கைகளைத் தொடர்ந்து வந்த ஆட்சியமைப்புகள் கண்டுகொள்ளவில்லை. அதன் விளைவுதான் இன்று தரப்பட்டுள்ள இந்துத்துவச் சாயலோடு கூடிய அரசமைப்புச் சட்டம்.
பன்மைக்குணம்
மிக்க இந்தியாவை ஒற்றைக்குள், ஓர்மைக்குள் முடக்கி, சனநாயகத்தின் குரல் வளையை முறிக்கும் இந்திய மதவாதிகள் 1925-ஆம் ஆண்டிலிருந்தே இதைத்தான் கூறி வருகின்றனர். இன்று அக்குரலின் உச்சம் நம் செவிகளைத் துளைக்கும்போதுதான் வேற்றுமை (Diversity) பற்றி,
பன்மைக் குணம் (Pluralizion) பற்றி
பெரிய அளவில் பேசத் துவங்கியுள்ளோம். பன்மை ஒழிப்பைத் தன் அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவம் இன்று ஒற்றையை, ஒற்றையை வலியுறுத்தும் எதேச்சதிகாரத்தை, தேசிய இனங்களின் தனித்துவத்தை, அவற்றின் அடையாளத்தை அழித்து வருவதில் எந்த ஒளிவு மறைவுமில்லை.
காஷ்மீருக்கான
தனி அந்தஸ்து ஒழிக்கப்படும், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும், இராமருக்கான ஆலயம் எழுப்பப்படும்... இவையெல்லாம் எப்போதுமே இந்துத்துவர்கள் தம் தேர்தல் முழக்கங்களாகக் (Manifestos) கூறி
வந்துள்ளனர். சிறுபான்மையினரைச் சமயச் சார்பற்ற கட்சிகள் திருப்தி (appeaserent) செய்யும் வகையில் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் வெறும் உளறல்களாகவே கருதப்பட்டு வந்தன. மதமாற்றுத் தடைச்சட்டங்கள் பா.ச.க.
ஆளும் மாநிலங்கள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளன.
இந்திய
மதவாதிகள், ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் மதவாத கட்சிகள் ஒருவகையில் பார்த்தால் நேர்மையானவர்கள். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று உறுதி அளித்தனரோ, அவ்வுறுதி மொழிகளை எழுத்துப் பிசகாமல் நிறைவேற்றி வருகின்றனர். கண்ணீர் விட்டு வளர்த்த சுதந்திரம் கருகிப்போவது உண்மையெனினும் மதவாத சக்திகள் உறுதியானவர்கள்.
நிச்சயமாக
அண்மையில் இந்து அமைப்புகள் அறிவித்த புதிய சாசனம் உருப்பெறும் காலம் தொலைவில் இல்லை.
5,125 ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்ட ‘மாயன்’ (MAYA) காலண்டர், 21.12.2012-இல் முடிவடைந்தது. அந்த நாள் உலகின் கடைசி நாளாக இருக்குமென்று பலர் அஞ்சியது, வரலாற்றில் ஒரு நாளாக எழுதப்பட்டுவிட்டது.
ஜோகன்னஸ்
ஸடோபர் என்ற ஜெர்மானிய கணித வல்லுநரும், சோதிடருமான (Astrologer) இவர்,
பெரிய வெள்ளம் 25.02.1524-இல் உலகைச் சூழ்ந்துகொள்ளுமென்றும், கிரக மாற்றங்கள் ஏற்படுமென்றும் கணித்தார். பலர் நம்பினர். அதேபோன்று மழை வந்தது, ஆனால் சிறிதளவே.
76 ஆண்டுகளுக்கு
ஒருமுறை, ஹேலி வால்நட்சத்திரம் (Halley comet) நாம்
வாழும் உலகிற்கு அருகில் வருவது இயற்கை. அவ்வாறு 1910-இல் இந்த வால்நட்சத்திரம் வந்த நிலையில், அதனால் விஷ வாயு பரவும் அல்லது வானலோகக் கிரக மோதல்கள் எழும், உலகம் அழியும் என்று கூறப்பட்டது. அதுவும் நிகழவில்லை.
1806-ஆம் ஆண்டு
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில், உலக முடிவைக் குறிக்கும்படியாக, பெட்டைக் கோழி ஒன்று ‘கிறிஸ்து வருகிறார்’
என்று எழுதப்பட்ட முட்டை இடுவதாகச் செய்தியைப் பரப்பினார். இதனைக் கேள்வியுற்று பலர் அதைச் சென்றும் கண்டனர். பின்னர் அதை எழுதியது அந்தக் கோழியின் சொந்தக்காரர் என்று தெரியவந்தது.
1911-ஆம் ஆண்டு
பிறந்து 1996-இல் மரித்த பாபா வெங்கா (Baba Venga) என்ற
பல்கேரிய தொலைநோக்குத் திறனாளர் (clairvoyant) தன் 12-ஆம் வயதில் பார்வையை இழந்தார்; உலகின் பல நிகழ்வுகளை முன்கணிப்பதில்
தேர்ந்தவர்; இவரின் பல கணிப்புகள் நிகழ்ந்துள்ளன.
டயானாவின் மரணம், செப்டம்பர்-9/11 நிகழ்ச்சி என்பவைகள் சில. இவர், 2024-இல் ஏ.ஐ. (A.I.) உலகை ஆளும் திறன் பெறும் என்பதை முன்கணித்துள்ளார்.
1993-ஆம் ஆண்டு
வெர்னன் விங்கே (Vernon Vinge) என்ற
அமெரிக்கக் கற்பனை எழுத்தாளர், கணினி விஞ்ஞானி, இவரின் முன்கணிப்பு: முப்பது ஆண்டுகளில் மனிதனை மிஞ்சும் அறிவாற்றலைக் (Super human
intelligence) கொண்ட தொழில்நுட்பத்தை உலகம் பெற்றுவிடும் என்று. அதோடு நிற்கவில்லை, மனித சகாப்தமும் முடிந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார். நாம் 2023-ஆம் ஆண்டைக் கடந்து ஓராண்டாகிறது. இவ்வாறு உலக அழிவைக் குறித்து முன்மொழிந்தவர்கள் பலர். நிலவரம் இப்படியிருக்க, இந்தச் செய்திகளைப் பரப்புவதன் மூலம் ஆதாயம் சம்பாதிப்போர் சிலர்; ‘எல்லாருக்கும் நடப்பது நமக்கும்’
என உலக அழிவைக் குறித்து கவலையின்றி சிலர் அவரவர் வேலையைப் பார்ப்பதையும் காண்கிறோம்.
உலகச்
சரித்திரத்தில், கடந்தகாலத் தொழில்நுட்பங்கள் பல உருவில் மனிதனின்
வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளன. இன்று நாம் புதிய தொழில்நுட்பத்தைக் காண்கிறோம். பல முந்தையத் தொழில்நுட்ப
அலைகள் தொழிலாளர் பிரிவில் சில வேலைத் திறன்களைத் தேவையற்றதாகவும், அதே நேரத்தில் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கியது. ஆனால், இப்போது நாம் சந்திக்கும் ஏ.ஐ. (AI) அலை எங்கு அழைத்துச் செல்கிறதென்று உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் சகாப்தம்
(Digital era)
டிஜிட்டல்
தொழில்நுட்பம் இதுவரை கண்டிராத வேகத்துடன், எவ்வாறு எதிர்காலமிருக்குமென்று கணிக்க முடியாத (unpredictable)
ஒன்றாக உள்ளது. ரோபோக்களும், ஏ.ஐ. (AI) சார்ந்த தொழில்நுட்பமும் முழு அளவில் இயங்கும்போது வேலைகளை ஆக் கிரமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் புதிய வேலைகளை உருவாக்கியது என்பதுதான் கடந்தகால வரலாறு.
ஏ.ஐ. (AI) கடந்த
இருபது ஆண்டுகளில் முன்னேறி வரும் (developing countries) உலக நாடுகளின் 50% மக்களிடம்
சென்றடைந்து சமுதாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிட்டது.
வேகமான விஞ்ஞான வளர்ச்சியினால், உலகச் சரித்திரத்தில் எப்போதுமில்லாத அளவிற்கு மக்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் நிலை இயல்பாகவோ அல்லது தேவைக்கென்றோ உருவெடுத்துள்ளது. ஏறக்குறைய 780 கோடி உலக மக்கள்தொகையில் 550 கோடியினரிடம் கைப்பேசி (mobile) உள்ளது; 440 கோடியினர் இணையதளமும் (Internet), 37 கோடியினர்
சமூக ஊடக (Social Media) உபயோகிப்பாளர்களாகவும்,
25 கோடியினர் மின்னஞ்சல் (email), 28 கோடியினர் முகநூல் (Facebook) பயன்படுத்துவோராகவும்
உள்ளனர் என்பது ஓர் ஆய்வின் அறிக்கை.
இன்று
ஏறக்குறைய 50% உலக
மக்கள் தொகையினர் சமூக ஊடகங்கள் மூலம் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒருபுறம், இது மக்களிடையே சில வேளைகளில் உண்மைக்கு அப்பாற்பட்ட செய்திகள் பரவ வழிசெய்தாலும், உலகச் சமுதாயத்தினர் தங்கள் குரலை மற்றவர் கேட்க இடமளிப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.
இந்நிலையில்,
உலகளாவிய வேகமான இப்புதுமை தொழில்நுட்ப வளர்ச்சி நாடுகளிடையே இடைவெளியை ஏற்படுத்தவும் இடமளிக்கலாம்; வலிமை பெறும் நாடுகள் தங்களுக்கென்று இணையதளம், ஏ.ஐ. (AI) கட்டமைப்பு , பண ஆதிக்கம், வர்த்தகம்,
நிதி ஒழுங்குமுறைகள் என்பன ஒருவேளை, முன்பொரு காலத்தில் உருவாகிய பெர்லின் சுவர் நிலைக்குச் செல்வதாக இல்லாமல் தவிர்க்க வேண்டுமென்று ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலாளர் கூறுகிறார்.
இன்று
ஏ.ஐ. என்ற தொழில்நுட்பம்
தொடக்கத்தில் மெதுவாகக் கால்பதித்து இப்போது நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தி வருவதை நாம் வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் உணர்வதில்லை. 2010-ஆம் ஆண்டு ஏ.ஐ. தொழில்நுட்பத்தைக் குறித்து யாரும் பெரும் பொருட்டாக நினைக்கவில்லை. இன்று ஏ.ஐ. சிறுகச்
சிறுகப் பல துறைகளில் ஒரு
பெரும் புரட்சியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது .
உலகில்
தலைசிறந்த கணினி நுட்ப நிறுவனங்களிலொன்றான மைக்ரோசாப்ட்டின் (Microsoft) தலைவர்
நாடெல்லா, ஏ.ஐ. பற்றி
“இப்போதிருக்கும் மின் அஞ்சலின் (email) முக்கியத்துவத்தை 1995-இல் யாரும் உணரவில்லை என்பதைப் போன்று, ஏ.ஐ.யின்
நிலை இருக்கிறது; இன்று இணையதளம் (Internet) இல்லையென்றால்
வீட்டிலிருந்து பணி (WFH) சாத்தியப்படுமா?
அல்லது பெரும்பான்மை வாடிக்கையாளர்களின் சந்தேகங்களுக்குக் கூகுள் (Google) இல்லையென்றால்
இருக்குமிடத்திலிருந்து
யாரிடம் சென்று பதில் பெற முடியும்?” என்று கூறுகின்றார். வரலாற்றில் இதுவரை மனித வாழ்க்கை முறைகளில் தொழில்நுட்பம் ஓரளவிற்குத் தேவைக்கேற்ப கலந்திருந்ததைக் கண்டோம். இன்று நாம் சந்திக்கும் தொழில்நுட்பத்தின் மூலம் பல துறைகளில் குறிப்பாக,
மருத்துவத்துறையில் ஏற்படப் போகும் மாற்றங்கள், மனித வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு உயர்த்திடப் போகிறதென்பதை உணரப் போகிறோம்.
சென்னை ‘ஏயர் N~h’ 2024, அக்டோபர் மாதம் மிகப் பிரமாண்டமாக நடந்தேறியது. மெரினா கடற்கரையில் புறாக்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு தானியங்கள் தரையில் சிதறிக் கிடப்பதுபோல ஏராளமான மக்கள் கூட்டம் கடற்கரையில் திரண்டிருந்தது. உச்சி வெயில் தலையைப் பிளக்க, மணல்சூடு காலை வறுத்தெடுக்க கடலை நோக்கி ஓடினேன். கடல் தண்ணீரில் கால் நனைத்ததுமே கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. சிலர் கையில் குடைகளோடும், தண்ணீர் பாட்டிலோடும் தயார் நிலையில் வந்திருந்தனர். ஒரு சிலர் என்னைப்போல முன்தயாரிப்பு இல்லாமல் வந்திருந்தனர்.
‘ஏயர் N~h’ தொடங்கியதுமே
பாராசூட்டில் வீரர்கள் தேசியக்கொடி தாங்கி வந்திறங்கினர். அணிவகுத்துப் பறக்கும் பறவைகள் புகை கக்கிச் செல்வது போன்று இயந்திரப் பறவைகளின் அணிவகுப்பு அங்கு வட்டமடித்துக் கொண்டிருந்த பறவைகளுக்கே பிரமிக்கத்தக்கதாய் இருந்தது.
இயந்திரப்
பறவைகளை இயற்கை பறவைகள் வீழ்த்திவிடும் என்பதாலோ என்னவோ பட்டாசு வெடிக்கச் செய்து அங்குமிங்குமாகப் பறந்து கொண்டிருந்த புறாக்கள் மற்றும் காகங்களை விரட்டியடித்துக் கொண்டிருந்தனர். குழந்தைகளைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு வானத்தை நோக்கி விரல் நீட்டி வானூர்திகளைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த தந்தைமார்கள், கடல்நீரில் கால் நனைத்து விளையாடிக் கொண்டிருந்த கரையேறிய குழந்தைகள், களைத்துப்போய் தாயின் சேலை நுனியைப் பிடித்துக் கொண்டு விழாமல் நின்ற சிறார்கள், ஆரத்தழுவக் காத்திருந்த கடல், உச்சிமுகர்ந்து வியர்வை வழியச் செய்த வெயில், ‘காற்றே வீசு’ என்றிருந்த மனம், மௌனத்தைக் கலைத்துச் சென்றது வானில் சீறிப்பாய்ந்த இரபேல் விமானங்கள். மனம் புத்துணர்வு பெற்றது. ‘அடுத்தென்ன?’ என்று ஏங்கித் தவித்தது. மீண்டும் அதே வெயில், அதே உஷ்ணம், அதே மௌனம், அதே வியர்வை, அதே கூட்ட நெரிசல் அத்தனையும் கொத்திச் சென்றது தீ கக்கும் இயந்திரப்பறவை.
‘அடுத்து என்ன?’ என்று கேட்டு, வானம் பார்த்து நின்றது என் மனம்.
‘அது என்ன?’ என்று தொடங்கி, ‘அடுத்து என்ன?’ என்று ஏங்கித் தவிப்பதுதான் மனித மனத்தின் இயல்பாக உள்ளது. இதனை உளவியலாளர்கள் ‘நெஸ்டிங்’
(Nexting) என்கின்றனர்.
சமூக ஊடக உலகில் ‘நெஸ்டிங்’
என்பது மனித மனத்தில் ‘அடுத்து என்ன?’ என்ற ஆர்வத்தைக் கிளர்ந்தெழச் செய்து, சமூக ஊடக வலைப்புழுக்களாக நம்மை மாற்றிவிடுவது. சமூக ஊடகங்களை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது நமது உடலில் டோபோமைன் (dopomine) என்ற மகிழ்ச்சி அமிலம் சுரந்து, அந்த வெகுமான சுழற்சிக்குள் (reward loop) நம்மைச் சிக்கவைத்து
விடுகின்றது.
ஒரு
வீடியோவைப் பார்க்கிறோம்; அது ஒருவித மகிழ்மயக்கத்திற்கு இட்டுச்செல்கின்றது. மீண்டும் உடலும் உணர்வும் அதே மகிழ்மயக்க நிலையை எதிர்பார்க்கின்றது. எனவே, மீண்டும் அடுத்த வீடியோவைப் பார்க்க வைக்கின்றது. இதுவே தொடர் செயலாகிப் பல மணி நேரம்
நம்மை அறியாமல் சமூக ஊடகங்களின் கைதிகளாக்கி விடுகின்றது. இந்தச் சுழற்சியின் சூத்திரத்தை அறியாமல் இருப்பது என்பது காளை மாட்டின் கண்ணுக்கு முன்பாகக் கட்டப்பட்ட புற்கட்டை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் காளை மாட்டின் ஓட்டத்திற்கு ஒப்பானது. புற்கட்டு கண்ணுக்குப் புலப்படுமே தவிர, அதனால் அந்தக் காளைக்கு எந்தப் பயனும் இல்லை. அந்தக் காளையினை ஓடச்செய்ய திட்டம் தீட்டிய வியாபாரிக்கே அதிகப் பயன். அதே சூத்திரத்தைப் பயன்படுத்தியே நம்மையும் இயக்கிக் கொண்டிருக்கின்றது நுகர்வுக் கலாச்சார உலகம்.
நம்மைச்
சமூக ஊடகங்களை அதிகமாக நுகரச் செய்வதால் வியாபாரம் பல தளங்களில் அதிகரிக்கின்றது.
பொருள் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
பொருள் வியாபாரப்படுத்தப்படுகின்றது.
‘டேட்டா’ விற்பனையாகின்றது.
நம் சொந்தத் தரவுகள் விற்கப்படுகின்றன. நாம் வீடியோக்களைப் பகிர்வதால், நாமும் அந்த விற்பனையாளர்களின் ஊதியமில்லாப் பங்காளிகளாக்கப்படுகின்றோம்.
மனிதர்களின்
‘அடுத்து என்ன?’ என்று எதிர்பார்க்கும் இயல்பை நன்கு புரிந்துகொண்டு, அதிலே ஆதாயம் தேடும் ஒரு வணிக யுக்தியை அடையாளம் காண்பது இன்று காலத்தின் கட்டாயம். இந்த ‘டோபோமைன்’
வெகுமதி சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ளாமல் நம்மைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்.
சமூக
ஊடகங்களை உள்சென்று ஆழ நுகர்வதற்குப் பதிலாக,
புறம் நின்று தேவைக்கு நுகர்கின்ற கட்டுப்பாடு நம்மில் வளர வேண்டும். போதையும் பொழுதுபோக்கிற்காக நுகரப்படுகின்ற போனும் ஒரே டோப்போமைனை (depomine) சுரக்கச் செய்கின்றது என்ற அறிவியல் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவிட்டோம் என்ற அறிதல் வந்தால் அதனிடமிருந்து கொஞ்சம் விலகி இருப்பது (digital detox) நல்லது.
நாம்
பயன்படுத்தும் ஊடகங்கள், நம்மைப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது அறிவு.
எனக்கு அப்போது சிறு வயது. திடீரென்று இரவைக் கிழித்து வந்தது பக்கத்து வீட்டு அழுகைக் குரல். ஓர் அழுகைக் குரல் பலர் சேர்ந்துகொண்டதால் ஒப்பாரி ஆனது. ஏன்? என்ன ஆச்சு? இதயம் சில நிமிடங்கள் தறிக்கெட்டோடும் ஓட்டுநர் இல்லா வாகனம் போல வேகமெடுத்தது. ஒரு நிமிடம் அதிர்ந்துபோய் என்னவென்று பார்ப்பதற்குள், பக்கத்து வீடு அக்கம்பக்கத்தினரால் சூழ்ந்திருந்தது. கூட்டத்திற்குள் புகுந்து ஒருவழியாய்ப் பக்கத்து வீட்டு கதவருகில் போய் நின்றேன். “எங்களை விட்டுப் போய்ட்டீயே. இனி எங்களுக்கென்று யாரு இருக்கா?”
யாரோ
இறந்து போயிருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இறந்து போனவரின் உடல் அங்கு இல்லை. சிறிது நேரம் ஆழ்தூக்கத்தில் எழுப்பி விடப்பட்ட சிறுவன் போல ஒன்றும் புரியாதிருந்த எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை புலப்படத் தொடங்கியது. வெளிநாட்டிலிருந்து வந்த கடிதத்தால் வந்த பிரச்சினை அது. அந்த வீட்டின் நபர் ஒருவர் வெளிநாட்டில் இறந்துவிட்டதாகவும், அவருடைய உடலை ஒப்படைக்கக் கொஞ்சம் செலவாகும் என்றும், எனவே குறிப்பிடப்பட்ட தொகையை அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மணியார்டர் செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வீட்டில் அழுகையும் ஒப்பாரியும் ஒருபுறம் அரங்கேறினாலும், மற்றொரு புறம் ஒன்றும் புரியாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குப் போன் போட்டும், தெரிந்தவரிடம் பேசியும் உண்மை அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். இன்றைய காலத்தைப் போன்று அன்றைய காலத்தில் போன் போட்டுப் பேசுவதும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பனம்பழம் பழுத்து விழுந்தது போன்று கடைசியாக உண்மையும் விழுந்து உடைந்தது. இறந்ததாகக் கருதப்பட்டவர் உயிரோடு நலமாக இருப்பதாகவும், யாரோ அக்குடும்பத்தை நன்கு அறிந்தவர் பணத்தாசையில் அம்மனிதர் இறந்ததாகக் கடிதம் எழுதியதும் தெரிய வந்தது.
‘ஏமாறுபவர் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்’ என்பதைப்
போன்று காலங்கள் கடந்தாலும், அறிவும் தொழில்நுட்பமும் வளர்ந்தாலும் ஏமாறுபவர்களுக்கும் ஏமாற்றுபவர்களுக்குமான தொடர் பந்தம் இந்த நவீன காலத்திலும் தினந்தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. ஹெட்செட் போடாமல், சத்தம்
அதிகம் வைத்து, பிறருக்குத் தொந்தரவாக இருக்கும் என்னும் நினைப்பே இல்லாமல் இரயில் அல்லது பேருந்தில் செல்லும்போது சமூக ஊடகங்களில் வலம் வரும் டிரெண்டிங் வீடியோக்களைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்துக்கொண்டிருக்கும் ஏராளமான பயணிகளைப் பார்த்திருப்போம். இந்த வீடியோக்கள் பத்தில் இரண்டு போலியானது என்று ஆய்வு ஒன்று கூறுவது ஆச்சரியமாக உள்ளது இல்லையா!
‘டீப்டிரேஸ்’ என்ற
நிறுவனம் 2019-இல் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் சமூக ஊடகங்களில் ஆய்வு செய்யப்பட்ட ஏராளமான பதிவுகளில் 15,000 வீடியோக்கள் போலியானவை என்ற உண்மையைச் சொன்னது. இந்த எண்ணிக்கை இன்றைய தினத்தில் 83% அதிகரித்திருக்கின்றதாம்.
ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் சுமார் 30 இலட்சம் படங்களும் சுமார் 7,20,000 மணிநேர வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படுகின்றன என்று ‘தி கான்வர்சேசன்’ என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் எத்தனை பதிவுகள் போலியானவை என்பது யாருக்கும் தெரியாது.
செயற்கை
நுண்ணறிவின் வருகைக்குப் பிறகு எதுவும் சாத்தியம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ‘டீப்பேக்’
(Deepfake) தொழில்நுட்பம்
மூலமாக யாரையும் யாராகவும் மாற்றலாம், யாருடைய குரலையும் மாற்றியமைக்கலாம்.
சமூக
ஊடகங்களின் வீடியோக்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கும் நம்மில் எத்தனை பேருடைய வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் போலியாக வலம் வந்து கொண்டிருக்கின்றது என்பது தெரியாது. அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், சாமானியர்கள் என்று யாரையும் இந்த ‘டீப்பேக்’
தொழில்நுட்பம்
விட்டு வைப்பதில்லை. பிறரை மிரட்டிப் பணம் பறிப்பதற்காக, ஆபாசப் படம் தயாரிப்பதற்காக, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, ஒருவருடைய நற்பெயரைக் கெடுப்பதற்காக, மக்கள் மத்தியில் போலி கருத்தியலைத் திணிப்பதற்காக ‘டீப்பேக்’
பயன்படுத்தப்படுகின்றது.
மனிதனுக்கு
எப்போதுமே கடவுளைப்போல் படைக்கின்ற செயலில் ஈடுபட வேண்டும் என்ற ஆசை உண்டு. இதனைத் தொடக்கநிலை சோதனை எனலாம். இதுவே அவனை இன்று படைப்பாளியாக மாறச்செய்கின்றது. கடவுள் ‘ஒளி தோன்றுக’ என்கின்றார், ஒளி தோன்றியது என்று திரு விவிலியத்தில் வாசிக்கின்றோம். அதேபோன்று நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் மனிதன் ‘தோன்றுக’ என்கின்றான். அனைத்தும் கண்முன் தோன்றுகின்றது.
அறிவியலின்
வளர்ச்சியை ‘ஓகோ’ என்று பாராட்டினாலும், அது உருவாக்கும் ஆபத்தை அறியாமல் கடந்துபோக முடியாது.
கடவுள்
படைப்பில் போலி என்று எதுவும் இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வேறுபட்டிருந்தது. மனிதனின் படைப்பில் போலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. போலிச் செய்தி, போலி முகங்கள், போலிக் குரல்கள், போலி முகவரிகள், போலி அடையாளங்கள் என்று எல்லாம் போலியாகவே உள்ளன.
இந்தப்
போலி உலகிலிருந்து உண்மையைப் பகுத்தறிவது என்பது நம் முன் வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவால் என்றே நினைக்கின்றேன். போலிகளுக்கு முகமும் முகவரியும் தந்த மனிதனை என்னவென்பது?
பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை அமெரிக்காவில் கடந்த 1868-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பெற்றோருக்குப் பிறக்கும் சுமார் 1.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்நாட்டுக் குடியுரிமையைப் பெறுகிறார்கள். இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த சுமார் 16 இலட்சம் பேருக்கும் அமெரிக்கக் குடியுரிமை கிடைத்திருக்கிறது.
கடந்த
சனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் பிறப்பு ரீதியிலான குடியுரிமையை இரத்து செய்ததோடு, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை உடனடியாக வெளியேற்றவும் உத்தரவு பிறப்பித்தார். இவ்வாணை அடுத்த 30 நாள்களில் அமலுக்கு வரும் என்றார். இச்சூழலில், சனவரி 24-ஆம் நாள் அவரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது கூட்டாட்சி நீதிமன்றம். இருப்பினும், ‘என்ன நடக்குமோ?’ என்கிற பீதியில் பிறப்புக் குடியுரிமை நடைமுறை இரத்து செய்யப்படுவதற்கு முன்பாக வெளிநாடுகளைச் சேர்ந்த கர்ப்பிணிகள், சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மருத்துவமனைகளுக்குப் படையெடுக்கின்றனர்.
முன்கூட்டியே
குழந்தை பெற்றுக்கொள்வதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து அதிகம். குறிப்பாக, வளர்ச்சி அடையாத நுரையீரல், நரம்பு மண்டல பாதிப்பு, எடைக்குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதற்கிடையில், வாஷிங்டன் எபிஸ்கோப்பல் சர்ச்சின் முதல் பெண் பிஷப்பாக அறியப்படும் மரியன் எட்கர் பட்டே (Marianne Edgar Budde) டிரம்ப்
பங்கேற்ற பிரார்த்தனையில் ‘ஒரு நாட்டை வழிநடத்த அநீதத் தீர்ப்பு எழுதுவது ஆபத்தான வழி’ என்கிற ரீதியில் மறைச்செய்தி வழங்கினார். தற்சமயம் இதுவும் பேசுபொருளாகி உள்ளது.
ட்ரம்பின்
நடவடிக்கை குறித்து கடந்த சனவரி 19-ஆம் தேதி, இத்தாலிய தொலைக்காட்சிக்குப் பேட்டி கொடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், “இது (ட்ரம்ப் நடவடிக்கை) உண்மையாக இருந்தால், இது அவமானகரமானது; ஏனெனில், ஒன்றும் இல்லாத ஏழை மக்களைத் திணறச் செய்யும். இதுவே பிரச்சினைகளைத் தீர்க்கும் வழி அல்ல” என்றார். “எல்லாரும் ஒரேவிதமான மனித மாண்போடு பிறந்திருப்பதால் இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. நிறம், மதம், திறமைகள், பிறப்பிடம், வசிப்பிடம் இவை போன்ற இன்னும் பல காரணிகளில் வேறுபாடு
இருப்பதால், எல்லாருக்குமான உரிமைகளின் மீது ஒரு சிலருக்கு மட்டும் அதிகச் சலுகைகள் என்பது நியாயப்படுத்த முடியாத ஒன்று. ஒரு சமூகமாக நம் அனைவருக்கும், எல்லா மனிதர்களும் மாண்போடு வாழவும், அவர்களுடைய முழுமையான வளர்ச்சிக்குப் போதுமான வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்யவும் கடமை இருக்கிறது” (அனைவரும்
உடன்பிறந்தோர் (FT), எண்
118).
குடியேற்றம்
மற்றும் வெகுமக்கள் வெளியேற்றம் - இவ்விரு சூழ்நிலைகள் குறித்த திரு அவை அணுகுமுறையை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
1. குறிக்கோளுடன் கூடிய வெளியேற்றம்
(Targeted Deportation): ஒவ்வொரு
நாடும் தத்த மது மக்களைக் காக்கும் பொறுப்பினைப் பெற்றுள்ளது. அதற்கு இடையூறாக வரும் எதையும் அகற்றுவது அதன் கடமை. இதனைத் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், “தோன்றும் பொதுநலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு குடியேற்றத்தை ஒழுங்குபடுத்துவது ஒவ்வொரு நாட்டின் உரிமையாகும்” (2013) என்கிறார்.
போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் அல்லது குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் போன்ற குறிப்பிட்ட குழுக்களை வெளியேற்றுவது என்பது ஒரு குறிப்பிட்ட குறிக்கோளுடன் அமையும் வெளியேற்றமாகும். இது நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியம். “தேவையற்ற அந்நிய நாட்டுக் குடியேற்றம் என்பதைத் தவிர்ப்பதுதான் சிறப்பானது” (FT, எண் 129).
குடியேற்றச் சட்டங்களும் சரியான நுழைவை உறுதிப்படுத்த வேண்டும்.
2. வெகுமக்கள் (கும்பல்) வெளியேற்றம்
(Mass Deportation):
கடந்த செப்டம்பர் 2024-இன் படி மொத்தம் 11.9 மில்லியன் சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் அமெரிக்காவில் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பொருளாதார நெருக்கடி, போர், வன்முறை, மனிதக் கடத்தல் மற்றும் போதைக்கடத்தல் போன்றவற்றிலிருந்து தப்பிக்கவே இங்குக் குடியேறியுள்ளனர். இவர்கள் இங்கு வேலை செய்கிறார்கள், சமூகத்திற்குப் பங்களிப்பு நல்குகிறார்கள், குடும்பங்களை உருவாக்குகிறார்கள். “குடியேற்ற உரிமையின் பயன்முறைகள் பொதுநலத்திற்குப் பாதகமாக இருப்பதாக இருந்தால் அதை ஒழுங்குபடுத்த வேண்டும்”
என்கிறார் புனித இரண்டாம் ஜான்பால். குடியேற்றக்காரர்கள் தங்கிய நாட்டின் சட்டங்களை மதிக்கவும், நன்றி தெரிவிக்கவும், அவர்களின் பொருளாதார மற்றும் ஆன்மிகப் பாரம்பரியத்தைக் காப்பாற்றவும் கடமைப்பட்டுள்ளனர் (கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி ஏடு (CCC), எண்
2241). “வளர்ந்து கொண்டே போகும் பொருளாதாரத் துறையோடு ஒருங்கிணைந்து செல்கின்ற இடப்பெயர் பண்பானது தனிமனிதரையும், அவர்களது குடும்பங்களின் வாழ்வையும் பாதுகாப்பின்றி இடருக்குள்ளாக்காத விதத்தில் முறைப்படுத்தப்பட வேண்டும்...” (இன்றைய உலகில் திரு அவை, எண், 66). ஒவ்வொருவருக்கும் தங்கள் குடும்பத்திற்காகச் சிறந்த வாழ்க்கையைத் தேடி மற்ற நாடுகளுக்குக் குடியேற உரிமை உள்ளது.” இத்தகையோரை வெளியேற்றும் நடவடிக்கை என்பதனை மனித மாண்புடன் அணுக வேண்டும் என்பதே திரு அவை நிலைப்பாடு.
குடிவரவு
மற்றும் வெகுமக்கள் வெளியேற்றங்கள் மீது மேற்கொள்ளப்படும் கொள்கைகள் மனித மாண்பு மற்றும் ஒற்றுமை போன்ற விழுமியங்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும். ‘அனைவரையும் அனுமதிப்பது’ அல்லது
‘அனைவரையும் வெளியேற்றுவது’ என்ற
நெறிமுறைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சட்ட முறைப்படி நமது நாட்டிற்குக் குடியேற வரும் நபர்கள் மீதான நமது நடவடிக்கையும் வரவேற்பு (Welcome), பாதுகாப்பு
(Protect), வளர்ச்சிக்குத்
துணைசெய்தல் (Promote) மற்றும்
சமூகத்தில் ஒருங்கிணைத்தல் (Integrate) என்பதாக
அமைய வேண்டும். இதனையே 1888-இல் திருத்தந்தை 13-ஆம் லியோ எழுதிய ‘Quam Aerumnosa’ முதல் 2020-இல் திருத்தந்தை பிரான்சிஸ் எழுதிய ‘Fratelli Tutti’ (அனைவரும்
உடன்பிறந்தோர்) வரை வலியுறுத்துகின்றன. “குடியேறிகள் (சரியான விதத்தில் குடியேறிய சமூகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள்) ஓர் ஆசிர், சமூகச் செறிவூட்டலுக்கு ஒரு மூலாதாரம், மற்றும் ஒரு சமூக நிறைவை நோக்கி வளர்வதற்குக் கிடைத்த மிகப்பெரிய கொடை”
(FT, எண்
135). யாவற்றிற்கும் மேலாய், பிரெஞ்சு தத்துவஞானி பால் ரிகோயர் (Paul Ricoeur) சுட்டிக்காட்டுவதுபோல்,
“நாம் அனைவருமே இவ்வுலகில் குடியேறியவர்கள்” (அகதிகள்)
என்பதனையும் ஒருபோதும் மறவோம்! நம் உடலில், சிந்தனையில், செயலில் நாளும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருப்பதால் நாமே ‘நமக்கு-நமக்குள்’
அகதிகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு எதுவும் யாருக்கும் நிலையானதல்ல!
‘எலி ஏன் கோவணத்தோடு ஓடுகிறது?’ என்று எங்கள் மாவட்டத்தில் ஒரு பழமொழி உண்டு. தங்களுடைய வழக்கத்திற்கும் இயல்புக்கும் தன்மைக்கும் தகுதிக்கும் மாறாக யாராவது சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் நடந்துகொண்டால், இந்தப் பழமொழியைச் சொல்லி ‘இவர் இப்படி நடந்து கொள்வதற்கு என்ன காரணம்?’ என்று தேடுவார்கள். எலிக்குக் கோவணம் அவசியம் இல்லை. ஆனால், அப்படி ஒன்றைக் கட்டிக்கொண்டு அது ஓடுகிறது என்றால், அங்கே ஏதோ ஒன்று விபரீதமாக நடக்கிறது என்று ஊகிக்க முடியும்.
சென்னை
ஐ.ஐ.டி. இயக்குநர்
காமகோட்டி. இந்தியாவில் மட்டுமல்ல; உலகம் முழுமையும் அறியப்பட்ட ஒரு முதல்தர உயர்கல்வி நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இவர் மெத்தப் படித்தவர்; சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் படித்தவர்; பல ஆராய்ச்சிகள் செய்து
முனைவர் பட்டமும் பெற்றவர்; அனுபவம் பெற்ற பேராசிரியர். அப்படிப்பட்ட ஒருவர், “பசுவின் மூத்திரம் குடித்தேன்; பதினைந்து நிமிடங்களில் காய்ச்சல் சரியாகிவிட்டது. அந்த மூத்திரத்தில் பல நோய்களைக் குணமாக்கும்
மருத்துவக் குணங்கள் உள்ளன” என்று அறிவியலுக்கு எதிரான செய்தியைப் பொதுத்தளத்தில் ஏன் பகிரவேண்டும்? ஒன்றிய அரசு நடத்தும் புகழ்பெற்ற ஓர் உயர்கல்வி நிறுவனத்தின் தலைவர் இதைப்போன்று பேசும்போது, கல்வி அறிவு இல்லாத பொதுமக்கள் நம்பத்தானே செய்வார்கள்! அப்படி நம்பி பசுமூத்திரத்தைக் குடிக்கும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுகாதாரக் கேடுகளுக்கு யார் பொறுப்பு? காமகோட்டி பொறுப்பேற்பாரா?
கடைவீதிகளில்
இரவு நேரங்களில் லேகியங்களை விற்பனை செய்யும் ‘லேகிய வியாபாரி’
இப்படிப் பேசினால் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், இப்படிப் பேசுவது யார்? சென்னை ஐ.ஐ.டி.
இயக்குநர்! கோமியத்தில் நோய்களைக் குணமாக்கும் தன்மை இருக்கிறது என்பதை உலகச் சுகாதார நிறுவனமோ அல்லது எந்தவோர் உலகளாவிய சுகாதார அமைப்போ ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, கோமியம் குடித்தால் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும், கோமியத்தில் உள்ள ஈக்கோலை, சால்மோனல்லா மற்றும் கேம்பிலோபாக்டர் போன்றவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சிறுநீர் பாதைத்தொற்று, வயிற்றுப் போக்கு மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பது பல மருத்துவ ஆராய்ச்சியாளர்களின்
முடிவு. இதையெல்லாம் அறியாதவரா காமகோட்டி? அறிந்தும் ஏன் அப்படிப் பேசுகிறார்?
தமிழிசை
சௌந்தரராஜன் ஓர் அலோபதி மருத்துவர். இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்தவர். அவரது கணவர் புகழ்பெற்ற மருத்துவப் பேராசிரியர். சிறுநீரக நோய்கள் சம்பந்தப்பட்ட நிபுணர். அப்படிப்பட்ட தமிழிசை காமகோட்டியின் அபத்தமான பேச்சை வரிந்து கட்டிக்கொண்டு மூர்க்கத்தனமாக ஆதரிக்கிறார். “மாட்டுக்கறியைச் சாப்பிடுபவர்கள் மாட்டு மூத்திரத்தைக் குடித்தால் என்ன?” என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேட்கிறார். பதநீரைக் குடிக்க முடியும்; பனை ஓலையைச் சாப்பிட முடியுமா? இதைத் தமிழிசை அறியமாட்டாரா? அறிவார்.
அறிந்த பின்னரும் ஏன் இப்படி அபத்தமாகப் பேசுகிறார்?
இராஜ்பவனில்
இருக்கும் ஆளுநர் இரவி மேனாள் ஐ.பி.எஸ்.
அதிகாரி. அவருக்கும் திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம்? திருவள்ளுவரைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் இரவி எந்தப் பல்கலைக்கழகத்தில் படித்தார்? இல்லற வாழ்வின் அனைத்துப் பரிணாமங்களையும் வாழ்ந்து தெளிந்த ஒரு மகத்தான குடும்பத் தலைவரான வள்ளுவப் பெருந்தகையைக் காவியுடை தரித்த சந்நியாசியாகச் சித்தரிக்கும் அதிகாரத்தை இரவிக்குத் தந்தது யார்? ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று
வாழ்ந்த அவருக்குப் பூணூல் போட்டு, சாதி அடையாளம் தந்தது எப்படி? இது தவறு என்று ஆளுநர் இரவிக்குத் தெரியாதா? அது தன்னுடைய வேலையல்ல என்பதும் புரியாதா? அவருக்குத் தெரியும். அவருக்குப் புரியும். தெரிந்தும் புரிந்தும் இரவி ஏன் இப்படிச் செய்கிறார்?
பா.ச.க. தலைவர்
அண்ணாமலை ஒரு மேனாள் ஐ.பி.எஸ்.
அதிகாரி. டங்ஸ்டன் சுரங்கத் தொழிற்சாலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் நடத்தும் மதுரை மாவட்ட விவசாயிகள் மத்தியில் உரையாற்றுகிறார்: “இந்தச் சுரங்கத் தொழிலால் இப்பகுதியின் பொருளாதாரம் வளரும், வேலை வாய்ப்புகள் பெருகும். இதனை எதிர்ப்பவர்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்; இதனை எதிர்க்கும் தி.மு.க.
கூட்டணிக் கட்சிகள் மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். மக்களின் எதிர்காலத் தேவை அறிந்து பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட இந்தச் சுரங்கத் திட்டத்தை மக்கள் வரவேற்க வேண்டும்”
என்று பகிரங்கமாகப் பேசினார். பின்னர் அவரே விவசாயிகளை அழைத்துக் கொண்டு டெல்லி சென்று மக்களுக்குப் பாதகமாக இருக்கும் இந்தச் சுரங்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார். உடனே அந்த ஒன்றிய அமைச்சரும் அந்தத் திட்டத்தை இரத்து செய்துவிட்டதாக அறிவிக்கிறார். “அரிட்டாப்பட்டி மக்கள்மீது அன்பும் கருணையும் கொண்டு, திட்டத்தைக் கைவிட்ட மோடிக்கு அந்த மக்கள் காலங்காலமாக நன்றியுடன் இருப்பார்கள்” என்று
அண்ணாமலை கூறியிருக்கிறார். அன்று பேசியது ‘நாற வாய்!’ இன்று பேசியது ‘எந்த வாய்?’ என்று மக்களுக்குத் தெரியாதா? இந்தக் கபட நாடகம் மக்களுக்குத் தெரியும் என்று அண்ணாமலைக்குத் தெரியாதா? பின்னர் ஏன் அண்ணாமலை இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்?
தமிழ்த்
தேசியம், சமூகநீதி, சுயமரியாதை, தமிழர்களின் இனமானம் என்றெல்லாம் மேடைதோறும் பேசிக்கொண்டிருந்த சீமான் ஏன் திடீரென்று தந்தை பெரியாரைத் தரக்குறைவாகப் பேசுகிறார்? எண்பது ஆண்டுகளாகக் கலப்படமற்ற பொதுநல உணர்வுடன், தனக்கென இருந்த அனைத்தையும் இந்த மண்ணின் மக்களுக்காக வஞ்சகமின்றி வாரி வழங்கிய அந்த மனிதப்புனிதரை ‘மக்களின் எதிரி’ என்று சீமான் தூற்றவேண்டிய அவசியம் என்ன?
தந்தை
பெரியாரின் தியாகத்தை அறியாதவரா சீமான்? அவரது தொண்டைப் புரியாதவரா சீமான்? அறிந்தும் தெரிந்தும் சீமான் ஏன் இப்படித் தரம் தாழ்ந்து நடந்துகொள்கிறார்?
உத்தரப்பிரதேசத்தில்
பிரயாகையில் மகா கும்பமேளா எனும் புனிதமான நிகழ்வு நடக்கிறது. ‘உலகின் மிகப்பெரிய ஆன்மிகக் கூடல்’ என்று அந்த நிகழ்வைப் பெருமையுடன் அழைக்கின்றனர். இந்தியாவில் இருந்து மட்டுமல்ல; உலகமெங்கிருந்தும் இப்புனிதமான நிகழ்வுக்கு மக்கள் வருகின்றனர். பண்டித நேரு கூட இதனைப் பாரத ஆன்மிகத்தின் மிகப் பிரமாண்டமான நிகழ்வு என்று தனது புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். எத்தனை ஆண்டுகளாக இந்தப் புனித நிகழ்வு நடக்கிறது என்ற நிச்சயமான வரலாறு தெரியவில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நடக்கிறது என்று சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க ஓர் ஆன்மிக நிகழ்வு.
கோவிந்த
வல்லப பந்திலிருந்து, கமலபதி திரிபாதி உள்பட பல மாபெரும் தலைவர்கள்
உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்துள்ளார்கள். இறைவனையும் மன அமைதியையும் தேடி
வரும் யாரையும் அங்கே தடை செய்ததில்லை. ஏனென்றால், அது மனிதமும் தெய்வீகமும் தழுவிக் கொள்ளும் ஆன்மிகக் கூடல். இதை அறியாதவரா முதலமைச்சர் ஆதித்தியநாத்? அறிந்தும்
தெரிந்தும் அங்கே போய் அமைச்சரவை கூட்டம் நடத்தி ஆன்மிகக் கூடலை, அரசியல் நிகழ்வாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன?
காமகோட்டி,
தமிழிசை, ஆளுநர் இரவி, அண்ணாமலை, சீமான், ஆதித்தியநாத் - இவர்கள் அனைவரும் வெவ்வேறு பின்புலங்களைச் சார்ந்தவர்கள். ஆனால், ஒரே ‘எஜமானுக்காக’ உழைப்பவர்கள்.
அவரவர்களின் உழைப்புக்கேற்ப கூலி கிடைக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
சிலருக்குப்
பதவி! சிலருக்குப் பணம்! சிலருக்கு அதிகாரம்!
எலி
ஏன் கோவணத்தோடு ஓடுகிறது என்பது இப்போது புரிகிறதா?