காலை நேரம் வாசலிலே போட்ட கோலம், மாலை நேரம் அடையாளமே இல்லாமல் காணாமல் போவதுபோல ஒருசில நினைவுகள் மங்கி மறைந்து போய்விடுகின்றன. நினைவுகள் சில எப்போதுமே பசுமையானதாக இருக்கும். அப்படி மனத்திலிருக்கும் ஒரு நினைவுக்குறிப்பு இது.
அன்று
அந்தக் கிராமமே துக்கத்தில் ஆழ்ந்திருந்தது. பெரியவர் ஒருவரின் இறப்பு ஊரில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இறந்துபோன பெரியவருக்கு இரண்டு மகன்கள். இரண்டாண்டு கழிந்து பிறந்தாலும், இருவரும் பார்ப்பதற்கு ஒன்று போல் இருப்பர். சிறு வயதில் இருவரும் ஒரே ஆடை அணிந்து கைக்கோர்த்து விழாக்களுக்குச் செல்வர். ஒன்றுபோல முடித்திருத்தம் செய்துகொள்வர். சில ஊர் பெருசுகளுக்கு இவர்களில் யார் மூத்தவன்? யார் இளையவன்? என்று கண்டுபிடிப்பதில் கூட சிக்கல் இருந்தது. இரண்டு பேரையும் பார்த்தால் அச்சு அசலாக ஜவுளிக்கடை பொம்மைகளைப் போலவே இருந்தனர்.
வளர்ந்த
பிறகு மூத்த மகன் ஒரு பெண்ணைக் காதலித்து, வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டான். இது வீட்டாருக்குப் பிடிக்கவில்லை. “இனி இந்த வீட்ல கால் வச்ச, கால வெட்டிப்புடுவேன்” என்று
கோபத்தில் எச்சரித்திருக்கின்றார் பெரியவர். அதன் பிறகு பல ஆண்டுகள் உருண்டோடிய
பின்னரும் இரு வீட்டாரும் சமாதானம் ஆகவில்லை.
இளைய
மகனுக்குத் திருமணம் முடிந்திருந்தது. இந்த நிலையில்தான் பெரியவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். “உங்கப்பன் தவறிட்டாரு. என்ன இருந்தாலும் உன் அப்பன்ல, ஓர் எட்டு வந்து பார்த்துட்டுப் போயிடு டே, என்ன நடந்தாலும் பாத்துக்கலாம். நீ வா” என்று ஊர் தோழனிடமிருந்து வந்த அலைப்பேசி அழைப்பைக் கேட்டு மூத்த மகன் செய்வது அறியாது உறைந்து நின்றான். “நீ வேணும்னா போய்ட்டு
வா, நான் வரல” என்று
செய்தியறிந்து போய்வரக் கூறினாள் மனைவி. ஊருக்குள் ‘மூத்த மகன் நுழைந்துவிட்டான்’ என்ற
செய்தி காட்டுத் தீயைப்போல வேக வேகமாகப் பரவியது. ஊர் மக்கள் குழுக்களாக இங்கொன்றும் அங்கொன்றுமாக மழைக்கால காளான் கூட்டம்போல முளைத்து, ஏதோ முக்கிய உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள். மூத்த மகன் ஊருக்குள் வந்த நேரம் பெரியவரின் பூத உடல் சவப்பெட்டியில் வீட்டிற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது. அடக்கம் செய்ய பெட்டியைத் தூக்கிய நேரமும், மூத்த மகன் ஆட்டோவில் வீட்டிற்கு முன்பாக வந்திறங்கிய நேரமும் ஒன்றாயிருந்தது.
“எவனப் பாக்க நீ இங்க வந்த?
காம்பவுண்டுக்குள்ள கால் வச்ச, தொலைச்சிடுவேன்” என்று
கையில் மரச்சிலுவையை வைத்துக்கொண்டே கோபத்தில் கொப்பளித்தான் இளைய மகன்.
தனக்காகத்
தாய் பேசுவாள் என்று தன் தாயைத் தேடினான் மூத்த மகன். அவள் எங்கோ ஓரத்தில் அழுதுகொண்டே சேலை நுனியால் மூக்கைச் சிந்திக்கொண்டு செய்வதறியாது நின்றிருந்தாள்.
“வழக்கப்படி மூத்த மகன்தான் மரச்சிலுவையைத் தூக்கணும். நீ ஏம்ல தூக்குற?
மூத்தவன்தான் வந்துட்டானுல, இனி அத அவனுக்கிட்ட குடு” என்று
ஊர்க்காரன் ஒருவன் சொன்ன உடனேயே, விசில் ஊதிய குக்கர் நாலாப்பக்கமும் வெடித்துச் சிதறியது போல இரு அணியினரும் ஒருவர் மற்றொருவரை ஏசியும் கெட்ட வார்த்தை பேசியும் சண்டையில் ஈடுபட்டனர். மரச்சிலுவையைத் தூக்குகின்ற உரிமை தனக்குக் கொடுக்கப்படவில்லை என்பது மூத்த மகனின் கோபம்.
“இத்தன வருசம் நோய் வந்து கிடையில கிடந்தவரை ஒருநாள் கூட வந்து பாக்கல, இப்ப மட்டும் ஏன் வந்தான்? இப்ப வருவான், மரச்சிலுவையைத் தூக்கிச் சவப்பெட்டிக்கு முன்னாடி போவான். நாளைக்குச் சொத்தில் எனக்குப் பங்கு கொடுனு கேட்பான். அத எப்படிக் கொடுக்க
முடியும்?” என்பது இளைய மகன் அணியின் கேள்வி.
“நான்தான் இவருக்கு மகன், மூத்தவன் செத்துப் போனான். எனக்குதான் அந்த உரிமை” என்று இளைய மகன் பலமுறை அல்லது பல்லாயிரம் முறை கத்தினாலும் கதறினாலும் ஊர்க்காரர்கள், உறவினர்கள் என்று எல்லாருக்கும் தெரிந்திருந்தது இளையவன் பொய் பொம்மைதான் என்று.
இளையவன்
மூத்தவனுக்கான அடையாளத்தை ஒருபோதும் பெற முடியாது என்பது நமக்குத் தெரியும்; ஆனால், இன்றைய சைபர் உலகிலே அடையாளங்கள் களவாடப்படுகின்றன. ஆள் மாறாட்டப் பித்தலாட்டம் தினந்தினம் அரங்கேறுகிறது. தன் முகத்தை மறைத்துக்கொண்டு பிரபலமான மற்றொருவரின் அடையாளத்தை முகத்தில் தைத்துக்கொண்டு வலம் வரும் இணையதளங்கள் இன்று நிறைய இருக்கின்றன. எது போலி? எது உண்மையானது? என்று கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு அது ஒத்து வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இதனால் பலர் இணையம் வழியாக ஏமாற்றப்படுகின்றனர்.
இந்த
ஏமாற்று மோசடியினை ‘பாமிங்’
(Pharming) என்கின்றனர்.
எடுத்துக்காட்டாக கூகுள் தேடல் பக்கத்தில் நமது வங்கி இணையதளப் பக்கத்தைத் தேடிக் கண்டுபிடிக்கின்றோம் என்று வைத்துக்கொள்வோம்; அதன் பெயர் சரியாக இருக்கின்றது; அதன் இலட்சினை (logo) சரியாக இருக்கின்றது; கிளிக் செய்து உள்செல்லும்போது அதன் முகப்பக்கமும் சரியாக இருக்கின்றது; எனவே, இது நமது வங்கியின் ஒரிஜினல் பக்கம்தான் என்று எண்ணிப் பணபரிவர்த்தனை செய்கிறோம். ஆனால், இந்தச் சரிபார்ப்பு மட்டும் போதுமானது இல்லை. உரலி அல்லது இணையதள முகவரி (URL - Uniform Resource Locator) சரியாக உள்ளதா?
என்பதைச் சரிபார்ப்பது அவசியம். இங்குக் குறிப்பிடப்பட்டுள்ள இணையதள முகவரியில் எது சரி? எது தவறு? www.google.com அல்லது
www.goople.com. இரண்டும்
பார்ப்பதற்கு ஒன்றுபோல் இருக்கலாம். ஆனால், இரண்டும் ஒன்றல்ல; இரண்டும் வெவ்வேறு.
‘பாமிங்’ என்ற இணையதள மோசடி பல விதங்களில் நடைபெறுகின்றது.
ஓர் இணையத்தளத்தை ‘கிளிக்’ செய்தால் அதேபோன்ற மற்றொரு போலி இணையதளத்திற்குக் கொண்டு சேர்க்கின்றது. ஓர் இணையதள லிங்கை ‘கிளிக்’ செய்யும்போது தேவையில்லா Poisoned cache குறியீடு (code) தரவிறக்கம்
செய்யப்பட்டு நம் கணினியின் கோஸ்டு (Host) பைலுக்குள்
சென்று ஒட்டிக் கொள்வதால் எந்த ஹைப்பர் லிங்கை ‘கிளிக்’ செய்தாலும், அது போலியான இணையதள முகப்பக்கத்திற்கே கொண்டு செல்கின்றது.
ஓர்
இணையதளத்தில் டி.என்.எஸ்.
(DNS -Domain Name System) மிக
முக்கியமானது. இதுதான் ஓர் இணையதள முகவரியைக் கணினி புரிந்துகொள்ளும் ஐ.பி. (IP) முகவரியாக மாற்றித் தருகின்றது. ‘பாமிங்’ என்னும் இவ்வித மோசடி வழியாக டி.என்.எஸ்.
(DNS) பிழைப்படுத்தப்பட்டு
ஐ.பி. (IP) முகவரி
மாற்றப்பட்டு, போலியான இணையதளத்திற்கு நாம் தள்ளப்படுகின்றோம். இங்கு இளையவன் மூத்தவனாக மாறுவதற்கான ஒரு முயற்சி எனலாம்.
இணையம்
என்பது எப்போதும் நன்மையும் உண்மையும் விளைவிக்கச் செய்யும் விளைநிலம் அல்ல; தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளைப் போல நமது அடையாளங்களும் அந்தரங்கங்களும் நமது இயல்பும் இருப்பும் இணையதள சந்தைக் கிடங்குகளில் விற்பனைக்காகத் தூக்கி வீசப்படுகின்றன. பொய் பொம்மைகளை இனம் கண்டுகொண்டால் மட்டுமே உண்மையும் நம்மையும் இணையதளங்களில் தொடர்ந்து முளைவிடும்.
முற்காலத்தில் மனிதர்கள் கூட்டங்கூட்டமாக, வாழ்விற்கான அடிப்படை ஆதாரங்களைத் தேடி இடம் மாறினார்கள். வாழ்விற்கான போராட்டத்தால் நாடோடிகளாகப் புலம்பெயர்ந்தார்கள். ஆடு, மாடுகளோடு மேய்ச்சல் தேடிய ஒரு கூட்டம் இந்துகுஷ் மலை வந்து சேர்கிறது. அம்மக்கள் பள்ளத்தாக்குகள் வழி கைபர், போலன் கணவாயை வந்தடைகிறார்கள். இது நாம் பள்ளியில் படித்த ஆரிய வருகை குறித்த பாலப்பாடம். மானுடவியல் ‘இனம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்ட சமூகக் கட்டமைப்பு’ என்கிறது. மத்திய ஆசியாவிலிருந்து கி.மு. 1500-ஆம் ஆண்டுகளில் வந்த அந்தக் கூட்டம் சமய, சமூக, அரசியல், பொருளாதார நிலைகளைப் படிப்படியாகக் கைப்பற்றினார்கள். அவர்கள் இன்று மண்ணின் மைந்தர்களான பூர்வீகக் குடிகளை ‘அடிமைகள்’ என்கிறார்கள்.
மனுதர்மம்
உள்ளிட்ட வர்ணாசிரமச் சாத்திரங்களை ‘ஆரியம்’ என்கிறோம். ஆரியம் என்பது பிராமணியமாக உருப்பெற்றுள்ளது.
மனுதர்மம் சமூக அமைப்பை நான்காகப் பிரிக்கிறது. தலையிலிருந்து பிறந்த
பிராமணர் படிப்பு, அரசருக்கு ஆலோசனை சொல்லுதல், இறை வழிபாட்டை நடத்துதல் என அறிவால் முழு
தகுதியை உருவாக்கிக் கொண்டனர். அவர்களின் யஜூர் வேதம் மனிதர்களை வெள்ளை மற்றும் கறுப்பு நிறங்களின் அடிப்படையில் இரண்டு குழுக்களாகப் பிரிக்கிறது. இதை இராமாயண கதை சார்ந்து, ‘இது ஆரிய-திராவிட போராட்டம்’
என்கிறார் முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு.
“இந்திரனே, நாகர்களின் நகரங்களை எரித்து தரைமட்டமாக்கு; நீர்த் தேக்கங்களை உடைத்தெறி; எங்களுக்கு நிறைந்த
செல்வங்களைக் கொடு; குதிரைகளை, பசுக்களை மந்தைகளாகக் கொடு; நல்ல மேய்ச்சல் நிலங்களை எங்களுக்கு வழங்கு; நாகர்களின் நிலங்களை எங்களுக்கு வழங்கு; நாகர்களின் இனத்தைக் கூண்டோடு ஒழித்துக் கட்டு” என்று
வேதங்கள் பாடுகிறது. இந்த நாகர்களே தேசத்தின் பூர்வீகக் குடிகளான திராவிடர்கள். வேதம் சொன்னபடி செய்தார்கள். தமிழீழ விடுதலைப் போரில் அன்றைய இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகரான எம். கே. நாராயணனும், அன்றைய இந்திய அமைதிப்படைச் செயலாளரும், இன்றைய வெளியுறவு அமைச்சருமான ஜெயசங்கரும் தமிழ் மக்களை அழித்தொழித்தார்கள். அக்காலக் கட்டத்தில் இந்தப் பிராமணர்கள் செய்ததை யாரும் எளிதாக மறந்துவிட முடியாது.
“ஆரியர்கள் போர் செய்து, திராவிடர்களை வெல்ல முடியாது. ஆனால், ஆரியப் பண்பாட்டை நம் மக்களிடையே புகுத்தியே
வெற்றி கொண்டனர்”
என்று குறிப்பிடுகிறார் தந்தை பெரியார் (விடுதலை - 23.03.1950). மத வழிபாட்டில், அரச
அவையில் ‘சடங்கு, சம்பிரதாயங்கள்’ என
எளிய மக்களை ஏமாற்றி உச்சம் பெற்றனர்.
1927-ஆம் ஆண்டின்
பிற்பகுதியில் சாதியப் பாகுபாடு மற்றும் தீண்டாமை எதிர்ப்பு மாநாடுகள் நடைபெற்றன. அங்கு பாபாசாகிப் அம்பேத்கர் ஆயிரக்கணக்கான தன்
ஆதரவாளர்களுடன், சாத்திரம் இவைகளை நியாயப்படுத்துவதாகக் கூறி, மனுதர்ம சாத்திரப் பிரதிகளை எரித்தார். இருப்பினும் மனுதர்மம் உயிர் பெற்றது.
தேசச்
சுதந்திரத்தைவிட, சாதிக்க வேண்டியது வேறு உண்டு எனச் சாதிய வெறியில் உருப்பெற்றது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. இவ்வமைப்பு
சுதந்திர இந்தியாவை மனுதர்ம அடிப்படையில், சாதியைக் கையிலெடுத்து வென்றது. அதன் அரசியல் பிரிவான பா.ச.க.-வை ஆட்சிக்கும் கொண்டு
வந்துவிட்டது. இவர்கள் இடஒதுக்கீடு முறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் காலங்காலமாக - நீதிக்கட்சி காலம் தொட்டே ஆயிரமாயிரம் வழக்குகளைப் போட்டவர்கள். இன்று பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கான
‘இ.டபிள்யூ.எஸ். இடஒதுக்கீடு’ என
மத்திய அரசில் 10 சதவிகித இடஒதுக்கீட்டைப் பின்வாசல் வழியாகப் பெற்றுவிட்டார்கள். தமிழ்நாட்டில் ‘இ.டபிள்யூ.எஸ்.
இடஒதுக்கீடு இல்லை’ எனத் தமிழ்நாடு அரசு அறிவித்து விட்டதால் கொதிக்கிறார்கள்.
ஒரு
விவாத மேடை நிகழ்ச்சியில் பேசிய ஒருவர்,
“தமிழ்நாடு ஆட்சி அதிகாரத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையிலும் எங்களை மேல் சாதி எனக் கூறுகிறது. ஆனால், எங்களுக்கு அதற்குரிய பிரதிநிதித்துவம்
இல்லையே?” எனக் கேட்டார். அதற்குப் பதில் அளித்தவர், “கோடிக்கணக்கான மக்கள் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் போடும் சட்டம், தமிழ்நாடு ஆளுநரால் நிறுத்தப்படுகிறது அல்லது உச்ச நீதிமன்றத்தில் செல்லாது எனச் சொல்லப்படுகிறது. அவர்கள் யார்? உங்கள் மேல்தட்டு சாதியினர்தானே?” என்று கூறுகிறார்.
சிறுபான்மைப் பள்ளிகள்
குறித்த ஓர் அரசாணை நீண்ட நாள்களாகக் கிடப்பில் வைக்கப்படுகிறது. “இந்த அரசாணை வெளியிட, கல்வி அமைச்சருக்கும் அரசிற்கும் ஆர்வம் உள்ளது. உயர் அதிகாரிகள் பல சாக்குபோக்குக் கூறித்
தள்ளிவிடப் பார்க்கிறார்கள்” என்கின்றனர்
அங்கிருக்கும் இரண்டாம் நிலை அதிகாரிகள். அவர்கள் யார்? என்றும், எந்தச் சாதியைச் சார்ந்தவர்? என்றும் ஊர் அறியும்!
ஐந்து
விழுக்காடு மக்கள்தொகை கொண்ட உயர் வகுப்பினர், 50 விழுக்காடு ஆளுநர்களாகவும், மாநில அரசின் தலைமைச் செயலாளர்களில் 62 விழுக்காடாகவும், உச்ச நீதிமன்றத்தில் 56 விழுக்காடாகவும், வெளிநாட்டுத் தூதர்களில் 41 விழுக்காடாகவும், பாராளுமன்றத்தில் 48 விழுக்காடாகவும், மாநிலங்களவையில் 36 விழுக்காடாகவும், பொதுத் துறை நிறுவனங்களில் 57 விழுக்காடாகவும், மாநில அரசுகளில் 82 விழுக்காடாகவும், ஏர்லைன்சுகளில்
61 விழுக்காடாகவும், ஐ.ஏ.எஸ்.-சில் 72 விழுக்காடாகவும், ஐ.பி.எஸ்.-சில் 61 விழுக்காடாகவும், தொலைக்காட்சி மற்றும் பாலிவுட்டில் 83 விழுக்காடாகவும்
கோலோச்சுவது அவர்களது தந்திரமே தவிர, அறிவல்ல!
இன்று
ஊடகத்துறையும் இவர்கள் கைக்கு மாறிவிட்டது. தமிழ்நாடு பத்திரிகை வரலாற்றில், தினம் பேருந்தில் செய்தி எழுதி
அனுப்பிய பத்திரிகையாளர்களைப் பார்த்திருக்கிறேன். பிரதமர், முதல்வர் போன்ற முக்கியஸ்தர்களின் கூட்டச் செய்திகளைப் புகைப்படம் கழுவி, பிரிண்ட் போட்டு காத்திருக்கும் பக்கம் வைத்து, கணினி தட்டச்சு செய்த காலம் இருந்தது. தமிழே படிக்காமல், தமிழ் எழுத்துகளே தெரியாமல் சாதியை வைத்து தமிழ் நாளிதழில் வேலைக்குச் சேர்ந்தவர்கள்
இவர்கள். மாலை வேளைகளில் அந்தப் பத்திரிகையாளர்களே செய்தி வாசிப்பாளர்கள்போல செய்தி தருவார்கள்.
நாம் இதைக்
குறை கூறுவதற்குப் பதிலாக, குடிமைத் தேர்வுகளுக்கு, தேசிய, மாநில, அரசுப் பதவிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு நாமும் நம் பிள்ளைகளைத் தயார்செய்ய வேண்டும். நமது குழந்தைகளும் அதற்கான தகுதியும் திறமையும் பெற்றவர்களே. நாம் அடிக்கடி பொதுவெளிகளில் பேசுவதுபோல, தமிழினமே உலகில் யூதர்களுக்கு நிகரான, அவர்களை மிஞ்சும் ஆற்றல் படைத்த அறிவார்ந்த இனம் என்பதில் ஐயமில்லை. வாருங்கள்! உலகச் சமுதாயத்திற்காக, தமிழ்ச் சமூகமாக மானிட தர்மம் காப்போம்.
இரயில் பயணம் எப்போதுமே சுவாரசியமானதுதான். சிறுவயதில் மலை மற்றும் வயல்களுக்கிடையே வளைந்து நெளிந்து நகரும் ஆயிரம் கால் இராட்சசப் பூச்சி போன்ற பிரமிப்பைத் தந்தது தூரத்தில் ஊர்ந்து செல்லும் இரயில் வண்டி. சிறுபிள்ளைகளுக்கு அந்த இரயில் பெட்டிகளில் பயணிக்கும் எல்லாருமே உறவினர்கள் ஆகிவிடுகின்றனர், கையைத் தூக்கி ‘டாட்டா’ காட்டும்போது. சிறுவயதில் இரயில் வண்டி எத்தனை பெட்டிகளை இழுத்துச் செல்கின்றது என்பதை வைக்கோல் போர்வையின் முதுகிலே சவாரிச் செய்துகொண்டே பார்த்து மகிழ்ந்ததையும் மறக்க முடியாது.
என்னதான்
இரயில் வண்டி தூரத்தில் பெயர் சொல்லி அழைப்பது போன்று சத்தம் போட்டுக் கொண்டே சென்றாலும்,
அதில் என்றாவது ஒருநாள் பயணிக்க வேண்டும் என்ற
பேரார்வம் என்றுமே இருந்தது. வளர்ந்து பலமுறை இரயில் வண்டியிலே பயணித்திருந்தாலும்
ஒவ்வொரு முறையும் அது ஒரு புது அனுபவத்தைத் தந்துகொண்டே இருக்கும். ஒவ்வோர் இரயில்
வண்டியும் பல ஆயிரம் மனிதர்களை மட்டுமல்ல, பல ஆயிரம் கதைகளையும் சுமந்து செல்கின்றது.
சமீபத்தில்
சென்னை - நாகர்கோவில் செல்லும் ஸ்லீப்பர் கிளாஸ் கோச்சில் பயணித்தேன். பொங்கல் விடுமுறை
என்பதால் வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்யாமலேயே பலரும்
கிடைத்த இருக்கைகளிலே அல்லது இடங்களிலே தங்களை நிரப்பிக் கொண்டார்கள். முதியவர்கள்,
இளையவர்கள், பெண்கள் என்று எல்லாரும் இந்த இடைச்செருகல்களில் உண்டு. ‘இது முன் பதிவு
செய்து பயணிக்கக்கூடிய பெட்டிதானா?’ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. ஒருசிலர், ‘கொஞ்சம்
ஒதுங்கி உட்காருங்களேன்’ என்று சொல்லி கிடைத்த இடத்தில் அமர்ந்து
கொண்டார்கள். சிலர் இடம் கேட்டும் கடுகு பொட்டித் தெறித்த பதிலும் பார்வையுமே கிடைத்ததால்,
வழியிலேயே பெரும் கூட்டம் நின்று பயணித்தது. அவர்களைக் கடந்து கழிவறைக்குச் செல்லும்
பெண்கள், குழந்தைகளுக்கு அப்பெருங் கூட்டம் அசௌகரியத்தைத் தந்தது.
குழந்தைகளின்
துள்ளல், மின்விசிறிகளின் அலறல், விழிப்பேச்சு, நண்பர்களின் நச்சரிப்பு, அரசியல் கிசுகிசு,
மொபைலில் சத்தமாக ‘இன்ஸ்டாகிராம்’ சிரிப்பு, இடையிடையே ‘தண்ணீ பாட்டில்,
தண்ணீ பாட்டில்...’ என்னும் அழைப்பு, காணாமல் போன தண்ணீர் பாட்டில் என்னும் பெயர் கொண்ட
சிறுவன் ஒருவனைப் பெற்றோர் கூட்டத்தில் தேடி அலைவதுபோல. நடமாடும் மனிதக்கடைகள், உணவுப்
பதார்த்தங்கள், விதவிதமான பாடல்களைப் பாடி
யாசகம் கேட்கும் மேடை கிடைக்காத சங்கீத மேதைகள், துப்புரவாளர்கள், காய்கறி-பழ வியாபாரிகள்...
என்று ஒவ்வொரு பயண நிறுத்தத்திலும் தாவி ஏறும் அன்றாடங்காய்ச்சிகள். இரயில் வண்டியின்
ஓட்டத்தில் பல கறைபடிந்தக் கதைகளும் வலி நிறைந்த அனுபவங்களுமே கூட இழுத்துச் செல்லப்படுகின்றன.
இந்த
இரயில் பயணத்தைப் போன்றதுதான் இந்த அல்காரித அபத்தங்களும். ‘அல்காரிதம்’ (algorithm) என்பதை ‘தானியங்கி நெறிப்பாட்டு முறை’ என்று மொழிபெயர்க்கலாம். இரயில் பயணத்தின்போது நமக்குத்
தேவையானதை யாரோ ஒருவர் நம் இருக்கையிலேயே கொண்டு வந்து தருகின்றார். அவர் தருவதை நாம்
உண்ண வேண்டியுள்ளது. அந்த உணவுப்பொருளின் சுவை, தரம் பற்றிய கேள்வி கேட்க முடிவதில்லை.
ஆயிரம் உரையாடல்கள் பல்வேறு மொழிகளில் நம் செவிப்பறையைத் தட்டிக்கொண்டே இருக்கின்றன.
அதில் எது சுவாரசியமோ அதை நாம் உற்றுக்கவனிக்க முடிகின்றது. எங்கோ திரும்பத் திரும்ப
ஒலிக்கும் பாடல் பயணம் முழுவதும் நம் நாவில் ஒட்டிக்கொள்கின்றது.
எங்கெல்லாம்
இரயில் நிற்கின்றதோ, அந்த இடத்தில் பிரபலமானவைகள் நமக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.
மதுரை என்றால் மல்லி, கோவில்பட்டியென்றால் முறுக்கு, திருநெல்வேலியென்றால் அல்வா!
நாம்
யாருடனாவது பேசினால் அந்த நபருடனான உரையாடல் இரயில் நிறுத்தம்வரை நீள்கின்றது. யாரை
வாஞ்சையோடு பார்க்கின்றோமோ, அவர் அடிக்கடி நம் கண்முன்னே வந்து செல்கின்றார். இந்தப்
பொறிமுறைதான் (mechanism) இன்று சமூக ஊடகங்களையும் இயக்குகின்றது.
டிஜிட்டல், மனிதன் ஒவ்வொருவரையும் ஆள்கின்றது. இந்த இரயில் பயண நிகழ்வுகள், நம்மோடு
பயணிக்கும் மனிதர்கள், நம் கண்முன்பாக வலம் வரும் உணவுப் பதார்த்தங்கள், நாம் கேட்கும் பாடல்கள், அருகிலிருப்பவர் அடிக்கடிப்
பேசும் கருத்தியல்கள், சன்னல் வழியே காணும் கலர் காட்சிகள், அடிக்கடி வரும் இரயில்
நிறுத்தங்கள்... இப்படி எல்லாமே யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒன்று வேண்டுமென்றே வடிவமைத்த
மேடை நாடக ஸ்கிரிப்டின் அடிப்படையில் அரங்கேறுகின்றது என்போமானால், நம் உணர்வு நிலை
என்ன? இப்படியாகத்தான் சமூக ஊடக ‘அல்காரிதம்’ செயல்படுவதாகக்
கருதப்படுகின்றது. உடைத்துச் சொல்ல வேண்டுமென்றால், நம்மை யாரோ அல்லது ஏதோ ஒன்று உளவுப்
பார்த்து நமக்கு உதவி செய்கின்றோம் என்ற போர்வையில் நம் மூளையைச் சலவை செய்கின்றது
எனலாம்.
நாம்
எதை வாங்குவது? எதைப் பார்ப்பது? யாருக்கு வாக்கு செலுத்துவது? எதை நாம் விவாதப் பொருளாக
எடுத்துக்கொள்வது? எதைச் சிந்திப்பது? இப்படி எல்லாமே அல்காரிதத்தின் மாயாஜாலக் குமிழிக்குள்
(filter bubble) மாட்டிக்கொண்டதன் விளைவு என்கின்றார்கள்.
ஒரே
கருத்து அல்லது செய்தி மீண்டும் மீண்டும் நமக்குப் பரிந்துரைக்கப்படுவதால் (eco-champer) நாம் அதனையே உண்மை என ஏற்றுக்கொண்டாக
வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படுகின்றோம். ஒரு குறிப்பிட்ட சிந்தனை, ஒரு குறிப்பிட்ட
பார்வை, ஒரு குறிப்பிட்ட விருப்பநிலை, ஒரு குறிப்பிட்ட உலகத்தின் ஒற்றைப் பிரஜையாக
(silos) நம்மை மாற்றிவிடுவதும் இந்த அல்காரிதம்தான்.
இந்த அல்காரித சூட்சமத்தைத் தங்களுக்கு ஆதாயமாகப் பயன்படுத்தி உலக வர்த்தக வித்தகர்கள்
இலாபம் பார்க்கின்றனர், பெரும் அரசியல் கட்சிகள் ஆட்சிக் கட்டிலிலே அமர்கின்றனர், கருத்தியல்வாதிகள்
சமூகக் கட்டமைப்பை உடைத்து மறுசுழற்சிக்கு அல்லது வெகுசன மக்களின் சிந்தனையை மாற்றியமைக்க
(social engineering) துடிக்கின்றனர்.
இந்தச்
சமூக ஊடக அல்காரித சூட்சமத்தை அறிந்து வாழ்வது என்பது நம் இரயில் பயணத்தில் நாமே ஓட்டுநரும்
நாமே நடத்துநரும் நாமே பயணியும் நாமே பயணமும் என்ற நிலை உருவாக உதவும்.
பணியிடங்களில் முதலாளி - தொழிலாளி, உயர் அதிகாரி - ஊழியர், மேலாண்மை நிர்வாக அதிகாரி - பணியாளர்கள் என்ற உறவுமுறை பணித்தளத்திற்காகக் கட்டமைக்கப்பட்ட சமூக உறவுமுறை. எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்தாம். ஆயினும் படிப்பு, திறமை, நிர்வாக ஆளுமை எனப் பல தளங்களின்மீது இந்தப் பொறுப்புகள் கட்டமைக்கப்படுகின்றன.
ஒரு
நிறுவனத்தில் கிடைக்கும் ஊதியத்தை விட, நன்மதிப்பும் நற்பெயரும் நம்பிக்கையுமே விலையேறப்பெற்ற பெரும் பேறாகக் கருதிய பணியாளர்கள் கடந்தகாலத் தலைமுறையினர். வர்க்கபேதமின்றி அன்பாய் உறவாடுவதும், நேர்மையாய்ப் பணியாற்றுவதும், கடுமையாய் உழைப்பதும், நம்பிக்கையாய் துணை இருப்பதும் இவர்களின் அளவுகோலாக இருந்தன.
காலம்
செய்த கோலம், உலகமயமாக்கலுக்குப் பிறகு எல்லாத் தளங்களிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு இடையிலான பிணைப்பு, உறவு என்பது பெருமளவில் பேசப்படுவதில்லை; இன்று அவை நலிந்து விட்டன. பணியிட ஒழுங்கு என்பது இன்று காற்றில் பறந்துவிட்டது. நிர்வாகத்திற்குக் கீழ்ப்படிதல், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுதல், தவறு இழைக்கும்போது அல்லது தவறும்போது கொடுக்கப்படும் அறிவுரைகளுக்கும்
அறவுரைகளுக்கும் இணங்கிச் செல்வது என்பதெல்லாம் இன்று காண்பது அரிது.
இத்தகைய
சூழலில், அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பணியிடங்களில் நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதாவது, “பணியிடங்களில் கீழ்மட்ட ஊழியரை அலுவலகப் பணிகளுக்காக முதுநிலை ஊழியர் கண்டிப்பதை வேண்டுமென்றே செய்யப்படும் அவமானமாகக் கருதி குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது”
என்பதுதான் அந்தத் தீர்ப்பு.
தெலுங்கானா
மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள தேசிய மனநல நிறுவனத்தின் இயக்குநர் மீது அங்குப் பணியாற்றும் பெண் உதவிப் பேராசிரியர் ஒருவர் உயர் அதிகாரிக்குப் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதை அறிந்த இயக்குநர், அந்தப் பெண் உதவிப் பேராசிரியரைத் தனது அறைக்கு அழைத்து ‘புகார் மனு அனுப்புவதற்கான அலுவலக நடைமுறைகள் உங்களுக்குத் தெரியாதா? எப்படிப் புகார் அனுப்பினீர்கள்?’ எனக் கூறி கண்டித்துள்ளார்; அதைத் தனக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதி அந்தப் பெண் உதவிப் பேராசிரியர், இயக்குநர் தன்னைப் பலர் முன்னிலையில் சத்தம் போட்டு பேசி அவமானப்படுத்திவிட்டதாகவும்,
அதனால் தனக்கு மனவேதனை ஏற்பட்டதோடு மருத்துவ ரீதியில் தனக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியக்
குற்றவியல் சட்டப்பிரிவு 504(BNS. 352)-இன்படி திட்டமிட்டு அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவின்கீழ் இயக்குநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டு காலம் தண்டனை தரும் இந்த வழக்கை இரத்து செய்யும்படி உயர் நீதிமன்றத்தை அணுகினார் இயக்குநர். ஆனால், உயர் நீதிமன்றமோ “இது ஒரு தீவிரமான பிரச்சினை; முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்”
எனக் கூறி இயக்குநரின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆகவே, இயக்குநர் உச்ச நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சஞ்சய் கரோல், சந்திப் மேத்தா ஆகியோரைக் கொண்ட அமர்வானது, “அலுவலகங்களில் மூத்தவர்கள் அவர்களுக்குக் கீழ் உள்ள ஊழியர்களை அலுவலகப் பணிகளுக்காகக் கண்டிப்பது என்பது வேண்டுமென்றே அவமதிக்கும் செயல் ஆகாது; வேலை செய்யும் இடத்தில் கண்டிப்பது என்பது, நிர்வாகச் செயல்பாட்டின் ஒரு பகுதி; அதற்காகக் கிரிமினல் வழக்குத் தொடர்ந்தால் அது அலுவலகங்களில் பேண வேண்டிய பொது ஒழுங்குக் கட்டமைப்பைச் சீர்குலைத்துவிடும்” என்று
அண்மையில் தீர்ப்பளித்துள்ளது.
முன்பெல்லாம்
தவறு செய்யும் ஊழியர்களை நிர்வாகம் முதலில் கடுமையாக எச்சரிக்கும்; தொடர்ந்து தவறு செய்தால் தண்டனை அளிக்கும், இடை நீக்கம் செய்யும்; அதன் பிறகும் தவறுகள் தொடர்ந்தால் பணிநீக்கம் செய்வது போன்ற நடைமுறைகள் இருந்தன. ஆனால், இப்போது பணியிடங்களில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் ஊழியர்களுக்கு மேலோட்டமாகச் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அவர்களுடைய நடத்தையை மேன்மைப்படுத்திக்கொள்ள அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. அறிவுரைகள் பிடிக்காவிட்டால் ஊழியர்கள் வெளியேறுவார்கள்; அறிவுரையைப் பின்பற்றாவிட்டால் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள். இதுதான் நடைமுறையாக இருக்கிறது.
ஆயினும்,
அண்மைக் காலங்களில் பணியிடங்களில் ஊழியர்கள் காலதாமதமாகப் பணிக்கு வருவதும், கைப்பேசிகளில் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பதும், சக ஊழியர்களுடன் நீண்ட
நேரம் அரட்டை அடிப்பதும், பணிச் செயல்பாடுகளைத் தாமதப்படுத்துவதும் போன்ற ஒழுங்கீனங்கள் அதிகமாகவே நிகழ்கின்றன. இது ஏதோ ஒன்றிரண்டு அலுவலகங்களில் மட்டுமல்லாது, எல்லாப் பணித்தளங்களிலும் நடக்கும் பொதுவான செயல்பாடுகளாகவே இன்று கணிக்கப்படுகின்றன.
இத்தகைய
சூழல்களில், அரசு அல்லது தனியார் பணித்தளங்களில் மேல்மட்ட அதிகாரிகள் தங்களின் கீழ் செயல்படும் பணியாளர்களைப் பணியின் நிமித்தமாகக் கண்டிக்கும்போது, தவறை உணர்த்தும்போது, அறிவுரைகள் கூறும்போது அல்லது உயர் அதிகாரிகள் கடிந்துகொள்ளும்போது, சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும், மதத்தின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாகவும், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குற்றம் சுமத்துவது இன்று வாடிக்கையாகிப் போனது. இத்தகைய குற்றப் பின்னணியில் எழும் உண்மைத்தனத்தைக் கண்டறிய வேண்டியதும் அவசியமாகிறது.
பொது
இடங்களிலும் பணித்தளங்களிலும் ஊழியர்களின் நன்னடத்தையும் சுயஒழுக்கமும் முக்கியத்துவம் பெறுகின்றன. பணித்தளத்தின் நன்மதிப்பையும் இலக்கையும் நோக்கத்தையும் செயல்பாட்டையும் பாதிக்கும் எந்த ஒரு செயலும் ஊழியர்களால் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். இத்தகைய நிலை தொடரும்போது ஊழியரின் பணி, செயல்திறன், நன்னடத்தை ஆகியவை கேள்விக்கு உட்படுத்தப்படுவது எதார்த்தமே. இது பணித்தளத்தின் மேன்மையையும், உற்பத்தித் திறனையும் செயல்பாட்டையும் அதன் இலக்கையும் நிலைநாட்டுவதாகவே அமைகிறது.
ஆகவே,
அலுவலக விதிமுறைகளுக்கு உள்பட்டு ஒழுக்கத்துடனும் பணித்திறனுடனும் நடந்துகொள்ளும் ஊழியர்களுக்குக் கண்காணிப்பும் உயர் அதிகாரிகளின் கண்டிப்பும் அவசியம் இருக்காது. ஆயினும், எல்லாப் பணியாளர்கள் மத்தியிலும் பணித்தள ஒழுக்கச் செயல்பாடுகள் மீண்டும் மலர வேண்டும் என்பதே சமூகத்தின் எதிர்பார்ப்பு.
சிறந்த படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்வோருக்குச் சாகித்ய அகாதமி விருது மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் மலையாள எழுத்தாளர் நளினி ஜமீலா எழுதிய ‘எண்ட ஆண்கள்’ என்ற தன் வரலாறு நூலை ‘எனது ஆண்கள்’ என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்த பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிப் பேராசிரியர் ப. விமலா அவர்களோடு ஒரு சிறப்பு நேர்காணல்:
•
வணக்கம்! முதலில் உங்களுக்கு
வாழ்த்து
கூறுகிறேன்.
உங்களைப்
பற்றிய
ஒரு
சிறிய
அறிமுகம்
கூறுங்களேன்.
“வணக்கம். என் பெயர் விமலா. நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈஞ்சக்கோடு பங்கைச் சார்ந்தவள். நான் தற்போது குடும்பத்தினருடன் திருநெல்வேலியில்
வசித்து வருகிறேன். எனது பள்ளிப் படிப்பை முடித்ததும் கல்லூரியில் படிக்க மிகவும் விரும்பினேன். ஆனால், நேரடியாகக் கல்லூரி சென்று படிக்க இயலாத சூழ்நிலை. ஆகவே, தொலைதூரக் கல்வி வாயிலாகத் தமிழில் இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டு மேற்படிப்பையும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முடித்தேன். அதன் பின்பு சில கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் மேற்படிப்புக்காக விண்ணப்பித்தேன். ஆனால், நான் தொலைதூரக் கல்வி படித்ததினால் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் எனக்கு ஆராய்ச்சிப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புது டெல்லியில் இருக்கக்கூடிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் இந்த இரண்டு பட்டங்களையும் சேர்த்து ஆறாண்டுகள் படித்தேன். ஜே.என்.யூ.-வில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றால் இரண்டு மொழிகள் எடுத்து நாம் ஆய்வு செய்ய வேண்டும்.
கன்னியாகுமரி
மாவட்டமாக இருந்ததனால் ஓரளவுக்கு மலையாளம் பழக்கமாக இருந்தது. அதனால் ஓரளவுக்குத் தெரிந்த மலையாள மொழியிலும் தாய்மொழி தமிழிலும் ஆய்வு செய்தேன். 2019-இல் ஆய்வை முடித்து வெளியே வரும்போதும், ‘மலையாளம், தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்’ என்கிற
ஓர் ஆய்வு நூலும், அதனைத் தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு ‘விவேகானந்தம்’ என்கிற
மலையாள நாவலைத் தமிழிலும் மொழி பெயர்த்தேன். அதற்கு அடுத்ததாக, 2022-ஆம் ஆண்டில் நளினி ஜமீலா அவர்களுடைய ‘எனது ஆண்கள்’ என்கிற நூலும் வெளியானது. தற்போது இந்த நூலுக்கு எனக்குச் சாகித்ய அகாதமி விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை என் அம்மாவுக்கும் உறவினர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எனது இலட்சியம். தற்போது தமிழிலிருந்து மலையாளத்திற்கு கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தையும் குறுந் தொகையையும் மொழிபெயர்க்கக் கூடிய பணியைச் செய்து கொண்டிருக்கிறேன். அதுவும் விரைவில் நூலாக வெளிவர இருக்கிறது.”
•
இலக்கியத்தில் உங்களுக்கு எப்படி
ஆர்வம்
வந்தது
என்று
கொஞ்சம்
சொல்லுங்களேன்?
“இலக்கியங்களின் மீதும் குறிப்பாக, வாசிப்பு மீதும் எனக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். நேரடியாக நான் கல்லூரி சென்று படிக்காததனால் அந்த ஐந்து ஆண்டுகளுக்கான படிப்பையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குச் சென்ற பிறகு சேர்த்துப் படிக்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழல் எனக்கு ஏற்பட்டது. மற்றொன்று ஜே.என்.யூ.-வில் இருக்கக்கூடிய ஒரு சிறப்பு என்னவென்றால், 24 மணி நேரமும் அதாவது, வாரத்தில் ஏழு நாள்களும் திறந்து இருக்கக்கூடிய நூலகம் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம், எப்போது வேண்டுமானாலும் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இப்படியான ஒரு சூழல் இருந்தது. அங்கிருந்த பாடத்திட்டங்களும் சற்றுக் கடினமானவையாகவே இருந்தன. அடிப்படையான செய்திகளைத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தது. அதனால் இன்னும் அதிகமாக, தொடர்ச்சியாக வாசித்தேன். அதிலிருந்து மலையாள நாவல்களை வாசிக்க ஆரம்பித்தேன். மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்தேன். இப்படியாக என்னுடைய வாசிப்புப் பழக்கமும். இலக்கியத்தின் மீதான ஆர்வமும் அதிகரித்தது.”
•
மொழிபெயர்ப்பில் நீங்கள் எதிர்கொண்ட
சவால்கள்,
நன்மைகள்
என்னென்ன?
“இன்றைய காலகட்டத்தில் ‘AI’ என்கிற
‘ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ தொழில்நுட்பம்
மிக வேகமாக வளர்ந்து வருகிறது. உலகம் எல்லாம் சுருங்கி கைக்குள்ளே வரக்கூடிய அளவிற்கு அறிவியல் வளர்ச்சி இருக்கிறது. பரந்துபட்ட உலகத்தின் அறிவுச் செல்வங்களை எல்லாம் நுகர்வதற்கு நாம் எல்லா மொழிகளையும் படிப்பது என்பது அசாத்தியமானது. ஆகவே, மற்ற மொழிகளில் இருக்கக்கூடிய நல்ல செய்திகளை, வரலாற்றுச் செய்திகளை, இலக்கிய இன்பங்களை நம் மொழியில் நாம் படிப்பதற்கு நமக்கு உதவி செய்யக்கூடிய ஒரு பெரிய கருவியாக இருப்பது மொழிபெயர்ப்பு. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய எல்லா மொழிகளையும் இணைப்பதற்கு மொழிபெயர்ப்பு மிக முக்கியமான ஓர் ஊடகமாக இருக்கிறது. அந்த வகையில் மொழிபெயர்ப்பு என்கிற துறையும் இலக்கியத் துறையிலே மிக முக்கியமான ஒரு துறையாக இருக்கிறது என நான் உணர்கிறேன்.
மொழிபெயர்ப்பில்
ஏற்படக்கூடிய சவால்கள் என்று குறிப்பிட்டுச் சொல்லும்போது, பண்பாடு சார்ந்த சிலவற்றை மொழிபெயர்ப்பதில் சிக்கல்கள் ஏற்படும். ஒவ்வொரு நூலில் உள்ள பண்பாடு சார்ந்த சொற்களை அப்படியே மொழிபெயர்ப்பது என்பது மற்றொரு மொழி வாசகர்களுக்குப் புரிந்து கொள்வதற்குக் கடினமாக இருக்கும். எனவே, நாம் அதற்கான விளக்கத்தைத் தனியாக அடிக் குறிப்பாகக் கொடுக்க வேண்டிய ஓர் அவசியம் ஏற்படும். எனவே, பண்பாட்டுச் செய்திகளை மொழிபெயர்ப்பதில் அதிகக் கவனமும் தேவைப்படுகிறது.”
•
இன்றைய இளம் தலைமுறையினரிடம்
மொழிப்பற்று
இருக்கிறது.
ஆனால்,
மொழிப்புலமை
என்பது
குறைவுதான்.
அவர்களுக்கு
என்ன
சொல்ல
விரும்புகிறீர்கள்?
“நிச்சயமாக, மொழிப்பற்று என்பது அதிகம் நம் மாணவர்களிடமும் நம் மக்களிடமும் இருக்கிறது. ஆனால், தமிழ் படிக்கக்கூடிய மாணவர்களே கேட்பார்கள், ‘தமிழ் படிச்சா எங்க வேலை கிடைக்குது?’ என்று. உண்மையில் நான் சொல்கிறேன், நீங்கள் தமிழைச் சரியாகப் படித்தீர்கள் என்றால், தமிழ் உங்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும்; உங்களுக்கான வாழ்க்கையைத் தரும். உண்மையிலேயே தாய்மொழிதான் நம்மை, நாம் நினைப்பதைவிட மிக அதிக உயரங்களில் கொண்டு சேர்க்கக்கூடிய வல்லமை மிக்கது. அதற்குச் சான்று நான்தான். மொழிதான் இன்று எனக்கு இத்தனை உயரங்களைத் தந்திருக்கிறது. தமிழோடு பிற மொழிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, தமிழை நன்றாகப் படிக்க வேண்டும்; ஆழமாகப் படிக்க வேண்டும்; பிழை இல்லாமல் படிக்க வேண்டும்; சரியாக உச்சரிக்க வேண்டும். எத்தனை மொழிகள் தெரிந்தாலும் தாய்மொழியை நன்கு ஆழமாகப் படித்து உணர்வது என்பதுதான் நமது முதல் கடமையாக இருக்கிறது.”
பேராசிரியர்
விமலா அவர்களே, ‘நம் வாழ்வு’ வாசகர்களுக்கு உங்களது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பல்வேறு நூல்களை மொழிபெயர்ப்பு செய்து தமிழுக்குப் பெருமைசேர்க்க வேண்டும் என வாழ்த்துகிறோம்.
இந்தியா மக்களாட்சியாக மாறிய பின்பு, 1955-இல் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. எனினும், மொழிவாரியாக இந்தியா முழுவதும் மாநிலங்கள் ஒன்று சேர்க்கப்பட்ட நிலை என்பது, நாம் அந்நியர் ஆட்சியில் இருக்கும் போதே 1921-களில் தொடங்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்வோம். அதேவேளையில், 1930-இல் இருந்தே இந்தி எதிர்ப்பும் இம்மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதையும் நாம் மறுக்க இயலாது.
நமது
நாட்டில் குறைந்தபட்சம் 10,000 மக்கள் பேசக்கூடிய மொழி மட்டுமே ஒரு தனிமொழியாக அறிவிக்கப்பட்டாலும், பேச்சு மொழியென, எழுத்துரு இல்லாத மொழிகளும் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1,624
மொழிகள் ஏற்கப்பட்டவைகளாக இதுவரை இருந்து வருகின்றன. இதை ஒருபுறம் ஏற்கும் வேளையில், நாட்டின் விடுதலைப் போரில் பங்காற்றிய வட மாநிலங்களை ஒன்றுசேர்க்கும்
விதமாக இந்தியில் பத்திரிகைகள் வெளிவந்ததும் வரலாறு. அதுவே காலப்போக்கில் இந்தியைத் தொடர்புமொழியாக ஏற்றுக்கொண்டதற்கும் தங்கள் மொழிகளின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் இழந்துபோனதற்குமான காரணம் என்பதையும் அறிந்து வருந்துகிறோம். இந்தி மொழி உருவாவதற்கு முன்பாகவே பிறந்த ப்ரஜ், அவாதி, இராஜஸ்தானி, பஃபேலி, போஜ்புரி, புரிதேலி, மைத்திலி, சட்டீஸ்காரி, கார்வாலி, ஹர்யான்வி , கனாவ்ஜி, குமவுனி, மகாதி, மார்வாரி போன்ற மொழிகள் இன்றளவும் நலிந்த நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு இந்தி மொழியின் ஆதிக்கமே காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது. மகாவீர் பிரசாத், திவி வேதி, பாலமுகுந்த் குப்தா நு அம்பிகா பிரசாத்
பாஜ்பயி, சோட்டே இராம் சுக்லா போன்றோர்கள் இந்தி மொழி எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களாக இருந்து மற்ற மொழிகள் மற்றும் வழக்காற்று மொழிகளைப் புறந்தள்ளவும், இந்தி மொழி எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியாக மாறவும் காரணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மிகவும்
வருந்தத்தக்க விசயம் ஒன்று இருக்குமென்றால், உருது
மொழியை ஏனோ இசுலாமிய மதப் பிரிவினரின் மொழியாக மாற்றிவிட்டதென்பதே. உருது எழுத்தாளர்களான பி.எஸ். ஜெயின்
ஜவஹர், அமீர் சந்த், பகவான் தாஸ் இஜாஸ், சோஹன் ராஹி, இந்திராமோகன் தீபக்குமார், ஆஷா பிரபாத், காமினி தேவி, இராஜேந்தர் நாத், ஜயன்றி பராமர் போன்றோர் இசுலாமிய மதம்
சாராத
எழுத்தாளர்கள் என்பதை எப்படி எளிதாக நம் நாடு மறந்துவிட்டது?
இருப்பினும்,
மாநிலங்களின் அமைப்புகள் மற்றும் வரையறைகள் எல்லாம் அந்தந்தப் பகுதியில் மொழிவாரி இனங்கள் அதிகம் குடியேறியதை முன்னிட்டு பிரிக்கப்பட்டு, இன்றைய
சூழலில் 28 மாநிலங்களும், எட்டு
யூனியன் பிரதேசங்களும் இணைந்த மாநிலங்களின்
ஒன்றியமாகவே இந்தியா பார்க்கப்படுகின்றது.
இதில்
ஒவ்வொரு மாநிலமும் அதன் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், வரலாறு இவற்றைக் காத்திடவும், வரும் தலைமுறையினருக்கு அதை வழங்கிடவும் வழிவகை செய்யும் வண்ணமாக, தாய்மொழியில் மட்டுமே கல்வி என்பதை இந்தச் சமூகம் ஏற்க வேண்டிய நிலை மாறி, தொடர்பு மொழியாகக் கடந்த நானூறு ஆண்டுகளாக நமது பயன்பாட்டில் இருக்கும் ஆங்கிலமானது அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுவதை நாம் ஏட்டளவில் ஏற்றுக்கொண்டு விட்டோம். எனினும், தாய் மொழியை விடுத்து ஆங்கிலம் மட்டுமே கல்வி பயிலும் மொழியாக மாறும் வேளையிலும் அல்லது இந்தி முதலிய வேறு மொழிகளின் கற்பித்தல் மொழிப்பாடத்தில் இணைக்கப்பட்டுவிட்ட நிலையில் CBSE பள்ளிகளில் அந்தக் கொள்கையை வைத்துக்கொள்வதிலே நமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இருந்ததில்லை. ஆனால், மாநிலங்களின் உரிமையாகப் பார்க்கப்படும் தாய்மொழி வழிப் பள்ளிகளிலும், அரசு நடத்துகின்ற ஆங்கில வழிப் பள்ளிகளிலும் கூட, மூன்றாவதாக மற்றொரு மொழியைப் புகுத்த நினைப்பதை எவ்வாறு நாம் வளர்ச்சியாகப் பார்க்க முடியும்?
எடுத்துக்காட்டாக,
ஆங்கிலத்தையும் வெல்ஷையும் அதிகமாகப் பேசக்கூடிய பிரிட்டனில் கூட 91 விழுக்காட்டினர் மட்டுமே ஆங்கிலம் புரிந்து பேசக்கூடியவர்கள் என்பதும், அதிகமாகப் பேசக் கூடிய மற்ற மொழிகளில் போலிஷ், உரோமேனியன், பஞ்சாபி, உருது ஆகிய மொழிகள் ஆங்கிலத்திற்கு அடுத்த நான்கு இடங்களில் பெருகி வருகின்றன என்பதும் அதிகாரப்பூர்வமான தகவல்கள். இது மொழிகளுக்கும், அதைப் பேசிவரும் இனங்களுக்கும் நாம் தரக்கூடிய முதன்மைத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
இந்தியாவை
எத்தனையோ அரசர்கள் கைப்பற்றி ஆட்சி செய்தனர் என்ற வரலாற்றுக் குறிப்பு இருந்தாலும், வட பகுதியைச் சார்ந்த
பேரரசுகள் ஒருகாலும்
தமிழ்நாட்டில் கோலோச்ச முடியாமல் போனதற்குக் காரணம், இம்மண்ணைச் சார்ந்த சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் பேரரசுகள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியதும், அதன் பின்புலமாகத் தமிழ்மொழி இருந்ததுமே காரணம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஒரு
மொழி ஆட்சி வழியாக ஓர் இனமே நடத்தப்படுவது என்பதைக் கருத்தளவில் நாம் ஏற்றுக் கொண்டாலும், இந்தியா போன்ற பல மொழிகள் பேசும்
பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் தொடர்பு மொழி ஒன்று வேண்டும் என்பதை யாராலும் மறுக்க இயலாது. எனினும், அந்தத் தொடர்பு மொழியானது ஆங்கிலேயர்களின் ஆட்சியில் வேறு வழியில்லாமல் ஆங்கிலமாக நிறுவப்பட்ட நிலையில், தொடர்பு மொழிக்கென மற்றொரு மொழியைத் தேர்வு செய்வது அவசியமற்றது எனவும், அதுவும் ஓர் ஏகாதிபத்தியத் திணிப்பே எனத் தமிழ்நாடு முதல்வர் கூறுவதில் இருக்கும் நியாயத்தையும் நாம் பார்க்க வேண்டும். மேலும்,
மூன்றாவதாகத் திணிக்கப்படும் மொழியானது நமக்கு எந்தவிதத்திலும் அறிவு மற்றும் திறன் வளர்ச்சிக்கு வித்திடாது என்ற நிலையில், இந்தி மட்டுமல்ல, வேறெந்த இந்நாட்டு அல்லது வெளிநாட்டு மொழிகளுக்குமே இது பொருந்தும் என்பதையும் நாம் உணர்ந்தாக வேண்டும்.
இந்தியா
என்பது பன்மொழி, பல பண்பாடுகள், சமயங்கள்,
நம்பிக்கைகள், வரலாறுகளின் கூட்டு என்பதையும், அதில் ஒரு சமூகத்தின் மொழி என்பதை மதிப்புடனும், அதைப் பரவலாக்கும் நோக்குடனுமே பார்க்க வேண்டுமே ஒழிய, ஒருகாலும் மற்றொரு மொழித் திணிப்பினால் அழித்து விடவோ, ஒதுக்கித் தள்ளிவிடவோ கூடாது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துக்கெள்ள வேண்டும்.
ஆகவே,
ஒரே மொழி மற்றும் மும்மொழிக் கொள்கையால் இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு என்பதெல்லாம் மற்றொரு மொழிப்போருக்கு இம்மண்ணிலே வித்திடும் என்பதையும் நாடாள்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.