கீழடியில் தமிழர் தொன்மை நாகரிகம் பற்றிய வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த செய்திகளைத் தனது ஆய்வறிக்கை மூலம் வெளிக்கொணர்ந்த தொல்லியல்துறை அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணா அவர்களை மீண்டும் ஒருமுறை அதிகாரமும் செயல்பாடுகளும் இல்லாத ஒரு பணியிடத்திற்கு ஒன்றிய அரசு மாற்றம் செய்துள்ளது. கீழடி அகழாய்வு வடக்கே உள்ளவர்களுக்கு ஏன் பதற்றத்தையும் பரிதவிப்பையும் தருகிறது என்பதைத் தமிழ்நாட்டிற்கும் உலகிற்கும் எடுத்துச் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம்.
கீழடி
அகழாய்வின்போது கிடைத்துள்ள மிக அரிதான பொருள்கள் இதுகாறும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங்பரிவார அமைப்புகள் கட்டமைத்து வைத்திருந்த வரலாற்றுப் புனைசுருட்டுகளின் போலி முகங்களை உலகிற்கு உணர்த்தியுள்ளன.
வேதகால
நாகரிகமே இந்தியத் துணைக் கண்டத்தின் ஆதி நாகரிகம் என்றும், சமஸ்கிருதமே இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றும் கூறிவந்தவர்கள் தலைகளில் கீழடித் தகவல்கள் பேரிடியாக விழுந்தன. தமிழர் நாகரிகமும் தமிழ் மொழியும் வேதகால நாகரிகத்திற்கும் முந்தையவை என்ற அறிவியல்பூர்வமான உண்மையினை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. குற்றவாளிகள் தடயங்களை அழித்து, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதுபோல கீழடி நாகரிகத்தின் தொன்மையினையும் சிறப்பையும் வெளியுலகிற்குத் தெரியாமல் இருட்டடிப்புச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் ‘அவர்கள்’ செய்து பார்த்தார்கள். உண்மைகளை எத்தனை நாளுக்குத் திரையிட்டு மறைக்க முடியும்? சரியான நேரத்தில் கீழடியைக் கைவசம் எடுத்துக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்ச்சமூகம் நன்றிக்கடன்பட்டுள்ளது.
உலகெங்கும்
உள்ள வரலாற்று அறிஞர்கள் கீழடி நாகரிகத்தின் தொன்மையையும், அதனது பிரமாண்டத்தையும் பார்த்துப் பிரமித்து, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் துவங்கியுள்ளதால் மூக்கறுபட்ட ஒன்றிய அரசு, கீழடி அகழ்வாய்வு அறிக்கையின் தகவல்கள் ‘இன்னும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை’ என்று
கூறி அறிக்கையை வெளியிட மறுக்கின்றது.
தொல்பொருள்
அகழ்வாய்வு ஆராய்ச்சியாளர் அமர்நாத் இராமகிருஷ்ணா இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சிதுறை சார்பில் இரண்டு கட்டமாகக் கீழடியில் அகழாய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகளுக்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றும், அந்த அறிக்கையினை ஏற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு மேலும் அதிகமான தரவுகளும் ஆதாரங்களும் தேவைப்படுகின்றன என்றும், அவற்றை அவர் தந்தால் மட்டுமே அடுத்தக் கட்டத்திற்கு நகரமுடியும் என்றும் ஒன்றியக் கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். அவர் கூறிய ஒரு செய்தி மிகவும் முக்கியமானது:
“Let them come with more results, data and evidence because a
single finding cannot change the entire discourse.”
- ‘தி
இந்து’ ஆங்கிலப்
பத்திரிகைக்கு ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் அளித்த பேட்டி இது. அதாவது, “எங்களுக்கு இன்னும் ஏராளமான தரவுகளும் சான்றுகளும் வேண்டும்; ஓர் அகழாய்வின் தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு இதுகாறும் சொல்லப்பட்ட வரலாற்றை மாற்ற முடியாது.”
அமைச்சர்
எதையும் ஒளிக்கவும் இல்லை; மறைக்கவும் இல்லை. தற்போது கீழடியில் கிடைத்துள்ள தகவல்களை ஒன்றிய அரசின் தொல்லியல் ஆராய்ச்சித்துறை ஏற்றுக்கொண்டால் இதுகாறும் கூறப்பட்டு வந்த வரலாற்றை மாற்ற வேண்டியதிருக்கும். அதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதே அமைச்சர் கூறும் செய்தி.
கீழடி
ஆய்வில் ஒவ்வொரு தட்டிலும் கிடைத்த பொருள்களின் தொன்மத்தையும் சிறப்பையும் பார்த்து அதிர்ச்சியடைந்த ஒன்றிய அரசு, அகழாய்வை அப்படியே கைவிட முயற்சித்தது. “அகழாய்வில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை, கிடைத்த பொருள்களுக்கு எவ்வித வரலாற்று முக்கியத்துவமும் இல்லை” என்று கூறி இராமகிருஷ்ணனை மாற்றிவிட்டு ஆய்வை அப்படியே நிறுத்தியது.
இந்திய
நாட்டின் தொன்மை நாகரிகப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் அறிவியல் சார்ந்து ஆய்ந்து தெரிவிக்கும் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட தொல்லியல்துறை, தனது சிறப்பான செயல்பாட்டால் உலகம்
முழுமையும் பாராட்டுகளைப் பெற்ற காலம் ஒன்று இருந்தது. ஆனால், மோடி அரசு பதவியேற்ற பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கூறுகின்ற வலதுசாரி (வரலாற்று) நிலைப்பாடுகளுக்கு ஏற்ப தங்களது செயல்பாடுகளை வைத்துக்கொள்வதுதான் இன்றைய தொல்லியல்துறையின் நிலைப்பாடு என்று அந்தத் துறையில் அனுபவம் பெற்ற சிலர் கூறுவதைக் கவனிக்க வேண்டியதுள்ளது. இதிகாசங்களை வரலாறாக மாற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அரசியல் திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் தொல்லியல் ஆய்வுத்துறை துணை போகிறதோ என்ற ஐயத்தைத் தவிர்க்க முடியவில்லை.
கீழடித்
தகவல்களுக்கு அறிவியல்பூர்வமான தகவல்களும் சான்றுகளும் இல்லை என்று கூறுகின்ற அமைச்சர் ஷெகாவத் உத்தரப்பிரதேசம் சின்னாலியில் நடந்த ஆய்வுகளைப் பற்றித் தொல்லியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கு என்ன அறிவியல் ஆதாரங்கள் உள்ளன என்று கூறுவாரா? அங்குக் கிடைத்தப் பொருள்களை வைத்துக்கொண்டு துறையின் ஆய்வாளர்கள் அங்கே ஒரு தொன்மையான இந்து நாகரிகம் இருந்ததாகக் கட்டமைத்து உள்ளார்கள். ஆனால், உண்மையில் கிடைத்த பொருள்கள் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்ட செய்திகளுக்கு எதிர்மாறான கண்டுபிடிப்புகளை நிரூபிக்கின்றன என்று நடுநிலையான, உலகம் போற்றும் வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
சம்பால்,
ஞானவாபி பள்ளிவாசல்களில் நடந்த ஆய்வுகளும், பிரதமரின் சொந்த ஊரான வாட் நகரில் நடந்த ஆய்வுகளும் தொல்லியல்துறை ஆய்வுகளை ஒன்றிய அரசு விரும்பியபடி எப்படியெல்லாம் வளைக்கலாம் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் என்று பெயர்களைக் கூறவிரும்பாத தொல்லியல்துறையின் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2003-ஆம் ஆண்டில்
தொல்லியல்துறையின் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜெனரலாகப் பணியாற்றிய A.I. மணி
எனும் அதிகாரி பாபர் மசூதிக்குக் கீழே பத்தாவது நூற்றாண்டை சார்ந்த ஓர் இந்து ஆலயம் போன்ற கட்டுமானங்கள் இருக்கின்றன என்று ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தார். பாபர் மசூதி சம்பந்தப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கின் தீர்ப்புக்கு அந்த அறிக்கையே அடிப்படையாகக் காட்டப்பட்டது. 2015-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவரை, மோடி அரசு தேசிய அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஜெனரலாக நியமித்துப் பெருமை சேர்த்தது. பாபர் மசூதி சம்பந்தப்பட்ட ஆய்வறிக்கைக்கான அங்கீகாரம்தான் அந்தப் பதவி என்று அப்போது பரவலாகப் பேசப்பட்டது. ‘2G’ வழக்கிற்குக்
காரணமாக இருந்த தணிக்கைத்துறை அறிக்கையினைத் தந்த வினோத் ராய்க்கு, மோடி அரசால் வழங்கப்பட்ட பேங்கிங் ஓம்பட்ஸ்மேன் பதவியையும், பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த சில நீதிபதிகளுக்கு ஓய்வுக்குப் பின்னர் வழங்கப்பட்ட பதவிகளும் நம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
அமர்நாத்
இராமகிருஷ்ணா தொல்லியல் துறையில் நீண்ட நிறைந்த அனுபவம் பெற்ற ஆராய்ச்சியாளர். தொல்லியல் துறையில் அகில இந்திய அளவில் பல களங்களில் பணியாற்றியவர்.
அப்படிப்பட்ட தகுதியுடைய ஒருவர் எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லாமல் உலகமே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் ஓர் அகழாய்வு பற்றித் தரமற்ற ஓர் ஆய்வறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளார் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? அப்படி ஒரு தரமற்ற அறிக்கையினை அவர் அரசுக்குத் தரவேண்டிய அவசியம் என்ன? தொல்லியல் துறையில் நடந்த பல்வேறு ஆய்வுகளுக்கு என்ன விதிமுறைகளும் வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டனவோ, அதே நடைமுறைகளைப் பின்பற்றிதான் தனது அறிக்கையினை அவர் சமர்ப்பித்துள்ளார்.
அகழாய்வுக்காக
வரையறுக்கப்பட்ட 100 ஏக்கர் நிலத்தில் 45% நிலத்தில் மட்டுமே
தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 90 மீட்டர் நீளமும் 60 மீட்டர் அகலமும் உள்ள நிலப்பரப்பில் இதுவரை 13,000 பழம்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தந்தம், தங்கம், கண்ணாடி, தாயக்கட்டங்கள், சுட்ட மண்பாத்திரங்கள், ஓடுகளில் எழுதப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள், பாசிமணிகள், தாமிர நாணயங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிணறுகள், வடிகால் அமைப்புகள் என்று வளமான தொழிலும் வணிகமும் செழித்து வளர்ந்திருந்த ஒரு நாகரிக சமூகத்திற்கு அடையாளங்களாக இருக்கும் அத்தனை பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட
பொருள்கள் கரிம பகுப்பாய்வு பரிசோதனைகளுக்கு உலகின் புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, பகுப்பாய்வுச் செய்யப்பட்டு ஆய்வறிக்கைகள் பெறப்பட்டுள்ளன. சில பொருள்களைப் பகுப்பாய்வு செய்த அமெரிக்க ஆய்வு நிறுவனமான பீட்டா அனெலிட்டிக்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட பொருள்கள் கி.மு. ஆறாம்
நூற்றாண்டைச் சார்ந்தவை என்று சான்றிதழ் தந்துள்ளது. இதுதவிர சிகாகோவின் ஃபீல்டு மியூசியம், பூனாவின் ஆகர்கார் ஆராய்ச்சி நிறுவனம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், இத்தாலியின் பீஸா பல்கலைக்கழகம், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் அட்வான்ஸ் ஸ்டடீஸ் பெங்களூரு போன்ற பல சர்வதேச, தேசிய
நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகள் மூலமாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தொல்லியல் துறைக்குச் சந்தேகங்கள் இருப்பின் பகுப்பாய்வு செய்த அந்த நிறுவனங்களிடமிருந்தே தெளிவுகளைப் பெற்றிருக்க முடியும். எதையும் செய்யாமல் அறிக்கையினை வாங்கி வைத்துக் கொண்டு இரண்டு வருடங்கள் தூங்கிய தொல்லியல்துறை நீதிமன்றங்களின் உத்தரவுகளுக்கும், பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதில் கூற முடியாமல், ‘அறிக்கை முழுமையாக இல்லை’ என்று கூறித் தப்பிக்க நினைப்பது கண்டனத்திற்குரியது.
உலகப்
புகழ்பெற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் தரக்கூடிய சான்றுகளை ஏற்க மறுக்கும் தொல்லியல்துறை சில முக்கியமான ஆய்வுகளில் தந்த அறிக்கைகள் சர்வதேசத் தொல்லியல் ஆய்வர்களையே அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
நமது
பிரதமரின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் ஞானவாபி மசூதியில் தொல்லியல்துறை செய்த ஆய்வுக்கும், அவர்கள் தந்த அறிக்கைக்கும் எந்த அறிவியல் ஆதாரம் என்பது யாருக்கும் தெரியாது. பள்ளிவாசலுக்குள் தொழுகைக்குச் செல்லுமுன்னர் இசுலாமியர்கள் தங்களை ஒடுக்கம் செய்துகொள்ளும் இடமான ‘வாசுகானா’
பகுதிக்குள் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் ஆய்வர்களைத் தடை செய்துவிட்டது. தொழுகை நடக்கும் பகுதிகளில் தரையைத் தோண்டக்கூடாது என்றும் தடை விதித்துவிட்டது. பூமிக்கு மேலே வைத்துப் பார்க்கும் நவீன ஸ்கேன் கருவிகள் மூலம் கண்டதாக ஓர் அறிக்கையினை நீதிமன்றத்தில் தொல்லியல்துறை தாக்கல் செய்தது. அதில் தொல்லியல்துறை, ஞானவாபி பள்ளிவாசல் கட்டடத்திற்குக் கீழே இடிந்த நிலையில் ஓர் இந்து
கோவிலையும் சிலைகளையும் கண்டதாகவும், அது 17-வது நூற்றாண்டில் மொகலாய மன்னர் அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்டிருப்பதைப்போல தெரிகிறது என்றும், சில இடங்களில் கோவிலின் பகுதிகளையே பள்ளிவாசலாக மாற்றியுள்ளனர் என்றும் அறிக்கை தாக்கல் செய்தது.
17-ஆம்
நூற்றாண்டைச் சார்ந்தது என்று சொல்ல எந்தக் கரிமப் பகுப்பாய்வும் நடந்ததாகத் தெரியவில்லை. அவுரங்கசீப் காலத்தில் இடிக்கப்பட்டது என்று சொல்ல அறிவியல் ஆதாரம் எதையும் தரவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் சரியான நேரம் பார்த்து நீதிமன்றத்தில் தொல்லியல்துறை அறிக்கையினைத் தாக்கல் செய்துவிட்டு, ஊடகங்களிலும் பெருமளவில் செய்திகள் வெளிவரும்படி பார்த்துக்கொண்டது. இந்த அறிக்கையால் தேர்தல் நேரத்தில் யாருக்கு ஆதாயம் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.
மேற்கு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாக்பாட்
மாவட்டத்தில் சொனாலி என்ற இடத்தில் தொல்லியல் துறையின் ஆய்வின்போது, பழங்கால மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்ட நூறு இடங்களைக் கண்டனர். வாள், வில், அம்பு, பானை ஓடுகள் போன்ற பொருள்களோடு சக்கரம் பொருத்திய வண்டி போன்ற ஒரு வாகனமும் கண்டுபிடிக்கப்பட்டன. சஞ்சய் குமார் மஞ்சுல் என்ற தலைமை ஆய்வர் அதனைக் குதிரைகள் பூட்டி இழுக்கப்பட்ட இரதம் என்றும், இதன் மூலமாக அங்கு ஒரு மாபெரும் சத்திரிய வம்சத்தினர் வாழ்ந்திருந்தது தெரியவருவதாகவும், ரிக் வேதம் மற்றும் மகாபாரத நிகழ்வுகள் உறுதிப்படுத்தப்படுவதாகவும்
தெரிவித்தார்.
அடுத்த
நாள் நமது பிரதமர் அந்த அகழாய்வு அறிக்கையினைப் பாராட்டியும், நமது தொன்மையான நாகரிகத்தை வியந்தும் தனது ‘X’ தளத்தில்
பதிவு செய்தார். கண்டுபிடிக்கப்பட்ட வாகனம் ஒரு வண்டியாக இருக்க வாய்ப்பு உண்டு என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குதிரைகள் இருந்ததாக அடையாளங்கள் கிடைக்கவில்லை. கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களுக்கும் ரிக் வேதத்திற்கும் மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்புக்கு அறிவியல் ஆதாரம் ஏது என்று யாரும் கேட்கவும் இல்லை. அதையெல்லாம் வியந்து பாராட்டுகிற பிரதமருக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் இரும்பை உருக்கும் வித்தையைக் கற்றிருந்தான் என்பதை உலகுக்குக் கூறிய அறிவியல்பூர்வமான கண்டுபிடிப்பை வியந்து பாராட்ட மனமில்லை.
தற்போது
சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ள, நாட்டின் முக்கிய அருங்காட்சியகமான ‘பிரின்ஸ் ஆப் வேல்ஸ்’ அருங்காட்சியகத்தில் சிந்து சமவெளிப் பகுதிகளில் நடந்த அகழாய்வின்போது கிடைத்த பொருள்களை ‘திராவிட நாகரிகத்தின் எச்சங்கள்’
என்ற பெயரில் காட்சிப்படுத்தியிருந்தனர்.
தற்போது அதனை மாற்றிவிட்டு ‘அடையாளம் தெரியாத மக்களின் நாகரிக எச்சங்கள்’
(unknown civilisations) என்று எழுதி வைத்துள்ளனர். திராவிட நாகரிகத்தையும், அதன் தொன்மையையும் ‘அவர்கள்’ ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இல்லை!
நமது
முதலமைச்சர் கூறியதுபோல தவறுகள் அறிக்கையில் இல்லை. ‘அவர்களது’
மனங்களில் இருக்கின்றன. ‘ஒரே நாடு, ஒரே இனம், ஒரே கலாச்சாரம்’ என்று
கூறி அரசியல் நடத்திவரும் அவர்களுக்குச் சமஸ்கிருத மரபு மற்றும் ஆரிய நாகரிகம் தவிர வேறு பண்பாட்டுக் கூறுகளை ஏற்க முடியவில்லை. அவர்கள் கொண்டாடும் வேதகால நாகரிகத்தைவிட, பலவகைகளில் சிறந்த ஒரு நாகரிகம் வேதகாலத்திற்கு முன்னரே இந்த மண்ணில் செழித்தோங்கியிருந்தது என்ற உண்மையை ஒத்துக்கொள்ளும் பெருந்தன்மை அவர்களிடம் இல்லை. இதிகாசங்களை வரலாறாகக் கட்டமைக்கும் அவர்களது அரசியல் திட்டங்களுக்கு கீழடி மண் முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்ற எதார்த்தம் அவர்களைக் கதிகலங்கச் செய்கிறது.
‘அவர்களை’ பற்றிக்கூட நாம் கவலைப்படவில்லை; திராவிடக் கட்சிகள், தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள், தமிழ்ச் சமுதாயத்தைத் தூக்கி நிறுத்த அவதானித்திருக்கும் தலைவர்கள் என்றெல்லாம் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தமிழ்ச் சமூகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள இப்பெரும் அநீதி குறித்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கள்ள மௌனம் காக்கிற இவர்களை ‘தமிழர் விரோதிகள்’
என்று ஏன் அழைக்கக்கூடாது?
எங்கள்
ஊர் மொழியில் கூறினால், ‘கரடி கூட காறித் துப்பும்.’ இவர்களது துரோகத்தைக் காலம் ஒரு நாளும் மன்னிக்காது!
ஒருமைக் கோட்பாடு:
இது
அனுமானமாகயிருக்கலாம்,
மனித செயலாற்றலை மிஞ்சுவதென்பது. ‘குருவுக்கு மிஞ்சிய சீடன்’ என்ற பழமொழியைப்போலவே செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பமும்
மனிதரின் புத்திசாலித்தனத்தை ஒரு நாள் மிஞ்சுமோ? என்ற கேள்வி இன்று பரவலாகக் கேட்கப்படுகிறது. இந்தக் கேள்வியின் மையத்தில் இருப்பதுதான் ‘ஒருமை’ என்ற கருத்து. நாம் மெதுவாகத் தொழில்நுட்ப நகர்வில் மனிதச் சமுதாயத்திற்குச் சவாலாக இருக்கும் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை.
ஒருமை
என்றால் என்ன? இப்போது பேசப்படும் ‘ஒருமை’ என்ற கருத்து 1915-இல் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ‘சார்பியல்’ தத்துவத்தில்
பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை விவரிக்கிறது. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் கூறுவது: ‘இப் பிரபஞ்சம் ஒருமையிலிருந்து உண்டானது; அது ஒன்றுமில்லாத, அளவிடப்படாத அடர்த்தியும், புவிஈர்ப்பும் கொண்டது’ என்பதாகும்.
வெர்னர்
விங்கே என்ற கணிதப் பேராசிரியரும், புகழ்பெற்ற விஞ்ஞானக் கற்பனை எழுத்தாளருமான இவர் தன்னுடைய நூலில் “தொழில்நுட்ப ஒருமை என்பது எதிர்காலத்தில் கணினி அறிவாற்றல் வளர்ந்து மனிதனை மிஞ்சும்; இது மனிதனின் கட்டுப்பாட்டிற்கும், அறிவுக்கும் அப்பாற்பட்டு, புதிய யுகத்தின் ஆரம்பமாயிருக்கும்; ‘இப்படியும் நிகழலாம்’
என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கும் இயந்திரங்கள் மனிதனைவிட திறன் படைத்தவையாக உருவெடுப் பது என்பது மனிதனால் அடையக்கூடாத திறன்” என்று கூறுகிறார்.
இது
ஒரு கைமீறிய தொழில்நுட்ப வளர்ச்சியாக, அதனைத் திரும்ப மீட்க முடியாமல் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்று தொழில்நுட்ப நோக்கில் புரிந்துகொள்ளப்படுகிறது.
‘ஒருமை’ விபரீதத்தில்
முடியுமா?
ஏ.ஐ. தானாக அடுத்தடுத்து
மேம்படுத்திக் கொண்டு, ஒரு கட்டத்தில் அதிவேகத் தொழில்நுட்பத்தை மனிதனால் ஆய்ந்தறியவும் கட்டுப்படுத்தவும் முடியாத நிலையில் அபார செயற்கைச் செயலாற்றல் மனிதருக்கே சவாலாகவும் மனிதனை அடிமையாக்கிடுதல், ஒழித்திடுதல், என்பது போன்ற ஒரு தீயனவாக இருக்கலாம்.
ஒருவேளை
ஏ.ஐ. முறைகள் இந்த
நிலையை அடையாமல் போனாலும், சில நேரங்களில் ஒரு சிக்கலான கட்டத்தை அடைந்து, அந்த நிலையில் எப்படி இயங்குகிறதென்று புரிந்துகொள்ள முடியாமல் போகலாம். இவ்வாறு எந்த நோக்கமுமின்றி, ஆனால் வெளிப்படைத்தன்மை இல்லாத செயல்பாட்டினால் எவ்வித அல்கோரிதங்கள் மூலம் தீர்வுகளைக் காணமுடியும் என்று திகைக்கும் நேரமும் ஏற்படலாம். இவ்வாறு மனிதன் இயந்திர வேகத்துடன் ஈடு கொடுக்க இயலாத நிலையில் சமுதாயம், பொருளாதாரம், தொழில்துறை போன்றவைகளில் பெரும் விளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதுவரை முழுமை பெற்ற தன்னிச்சையான ஏ.ஐ. உருவாகவில்லை
என்றாலும், நவம்பர் 2022-ஆம் ஆண்டில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தால்
அறிமுகப்படுத்தப்பட்ட
பதில்பேசி (chat GPT - Generative
Pre-trained Transformer) என்பது
ஒரு மொழி பேசும் இயந்திரம் (Large Language Model). இந்தப்
படைப்பு ஆராய்ச்சியாளர்களிடையே சற்றுத் திகைப்பை ஏற்படுத்திவிட்டது. மனிதரைப் போன்று உரையாடும் ஏ.ஐ. சாதனமான
பதில்பேசியை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவுநரான
சாம் ஆல்ட்மேன், அவருடைய உருவாக்கத்தைக் குறித்து அவரே சிறிது பயப்படுவதாகக் கூறுகிறார்.
ஒரு
பெரிய அச்சமென்னவென்றால், ‘மனித கட்டுப்பாட்டிற்கு அப்பால்’ என்ற ஆற்றலை ஏ.ஐ. அடைவது.
இதன் விளைவாக இயந்திரம் மனிதனை அவனின் தனித்தன்மையிலிருந்து விடுபடச்செய்வது; ஒரு கட்டத்தில் மனிதனின் இடத்தை இயந்திரமே பிடித்துக்கொள்ளும் என்ற நிலையையும் அடைவது; இதனால் மனிதன் இப்பூவுலக உயிரினங்களிலேயே தனி அதிகாரச் சக்தியாக விளங்கும் இடத்தை இழப்பதோடு, இயந்திரத்திற்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்படும் சூழல் ஏற்படலாம்.
ஒருமைக்
கோட்பாட்டின் முன்னோடியான ஜான் வான் நியூமேன் என்பவர், “இயந்திரங்கள் ஒருமை நிலையை அடையும்போது மனித இயல்புகள் இல்லாமல் போகும்” என்று
கூறுகிறார். மற்றொரு வகையில், இது மனிதகுல அழிவிற்கு ஆரம்பமாயிருக்குமோ என்று எண்ணவும் தோன்றுகிறது.
இத்தகைய
மனித இயந்திரங்களின் பெருக்கம், உண்மை மனிதர்களை எவ்வாறு சிறுமைப்படுத்தும் என்பதற்கு மூர் கோட்பாடு உதாரணமாகக் கூறப்படுகிறது. மூர் கோட்பாட்டின்படி மைக்ரோ ஃப்ராசஸர்களின் ட்ரான்சஸ்டர்கள் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை செலவு அதிகமில்லாமல் இரட்டிப்படைகிறது என்பது. அதாவது, காலப்போக்கில் இயந்திரங்கள் மிகத்திறன் படைத்தவைகளாகும் என்பது. அறிவாற்றல் கொண்ட மனிதன், தன்னை விட குறைந்த அறிவாற்றலுடைய உலகின் உயிரினங்களைக் குறைவாக மதிப்பதும், தேவைக்கென்று பயன்படுத்துவதும் உலக நடைமுறை. அதுபோன்று, வருங்காலத்தில் அதிக அறிவாற்றல் பெற்ற இயந்திரங்கள், அதைவிட குறைந்த அறிவாற்றல் பெற்றுள்ள மனிதனை எவ்வாறு நடத்தும்? என்ற கேள்வியும் எழுகிறது.
ட்ரான்சென்டென்ஸ்
(Transcendent) என்றால்
என்ன?
ஒருமைக்
கோட்பாடென்பது மனிதச் செயலாற்றலை மிஞ்சுவது. இதையும் மீறிய செயலாற்றலின் தத்துவமே ட்ரான்சென்டென்ஸ். இது இயந்திரங்கள் மனித நுண்ணறிவை அப்படியே பிரதிபலிப்பதோடு, தரத்தில் புதுமை படைத்தல், விண்வெளியில் இதுவரை கண்டறிய முடியாதவற்றை ஆராய்ந்தறிதல், குணப்படுத்த முடியாத நோய்களுக்குத் தீர்வு போன்ற சிக்கலான முடிச்சுகளை அவிழ்ப்பதில் உதவுவது.
இந்நிலையில்,
இயந்திரம் சுயமாக இயங்குதல், மனிதத் திறனுக்கு ஈடு கொடுத்து நிற்பது என்பவை மனோதத்துவ, ஆன்மிக, நெறிமுறை கொண்ட பாரம்பரிய வாழ்வின் முறைக்குக் கேள்வியாய் அமைந்திருப்பது, விஞ்ஞானம் மனிதனுக்கு விட்டிருக்கும் சவால் என்றும் கூறலாம். நம்மை விஞ்ஞானம் வேகமாக நடத்திக் கொண்டு வருகிறது. இன்று ஏ.ஐ. பாதையின்
எல்லையைக் காண இருக்கின்றோம்.
நாம்
நிற்பது ஒளிமயமான எதிர்காலத்தின் வாசலாயிருக்கலாம். ஆனால், இத்துடன் அபாயமும் சேர்ந்து நம்முன் நிற்கிறது என்பதை மறந்துவிடலாகாது. அல்கோரிதம் செயல்பாட்டின் வெளிப்படையின்மையும், இயல்பாகவே காணப்படும் பாரபட்சச் செயலாற்றல் என்ற ஏ.ஐ. தொழில்நுட்பங்கள்
ஒருவேளை, தீங்கிழைப்போர் வசம் சிக்கினால், அதனால் ஏற்படும் சவால்களைக் குறித்து நாம் மிக எச்சரிக்கையாயிருக்க வேண்டியுள்ளது.
2021, ஜூலை 05 அன்று பழங்குடி மக்களின் அறப்போராளி தந்தை ஸ்டேன் அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு பல கண்டனப் போராட்டங்களையும், அரசியல் தலைவர்கள், மனித உரிமை அமைப்புகளின் கண்டனக் குரல்களையும் ஏற்படுத்தியது. மனித உரிமை மீறலான இந்நிகழ்வு நடந்து நான்கு ஆண்டுகள் கடந்தாலும், தந்தை ஸ்டேன் அவர்களின் எடுத்துக்காட்டான வாழ்வும், அவரின் எழுத்துகளும் நம்மை வெறுமனே கடந்து செல்லவில்லை என்பதுதான் உண்மை.
அண்மையில்
தந்தை ஸ்டேன் அவர்கள் சிறையில் இருக்கும் வேளையில் எழுதிய கடிதங்களையும் கவிதைகளையும், அவர் கைது செய்யப்பட்ட நிகழ்வுகளையும் அவரின் ஆங்கிலத் தன் வரலாற்று நூலான ‘நான் மௌன சாட்சி அல்லேன்’
(I am not a Silent Spectator) வழியாக
வாசிக்க நேர்ந்தது. என் வாசிப்பில் நேசித்த, பாதித்த உள்ளொளிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
சமத்துவம் பேசும்
கவிதை
தந்தை
அவர்கள் டஜோலா சிறையில் இருக்கும்போது மூன்று கவிதைகளை எழுதியுள்ளார். அவற்றில் ‘நம்மைச் சிறப்பாகச் சமப்படுத்துகிற சிறை வாழ்க்கை’
என்னும் தலைப்பில் எழுதியுள்ள கவிதை வரிகள் சமத்துவத்தையும் பொதுத்தன்மையையும் எடுத்துக்காட்டுவதாக அமைகிறது...
‘நீ முதலில் வருகிறாய்!
நான்
அடுத்ததாக வருகிறேன்; என்றாலும்
நாம்
சுவாசிக்கும் காற்று ஒன்றல்லவா!
என்னுடையது
எதுவுமில்லை,
உன்னுடையது
எதுவுமில்லை,
எல்லாம்
நமதே அவரவர் திறனுக்கும்
அவரவர்
தேவைக்கும் தருவது பொதுத்தன்மை
இது
நெருக்கடிச் சம்மட்டியால் நொறுக்கப்படாமல்
விருப்போடும்
சுதந்திரத்தோடும்
அனைவரையும்
அரவணைக்கும்போது
உண்மையில்
நாம் எல்லாரும்
பூமித்தாயின்
பிள்ளைகளாகிறோம்.’
என்ற
கவிதை வரிகள் தந்தை ஸ்டேன் அவர்களின் ஆழமான சமூக மாற்றுச் சிந்தனையையும், அவர் சமூக மாற்றத்தில் கொண்டிருந்த தாகத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
சாட்சியம் பகரும்
சிறைக்
கடிதங்கள்
சிறையில் மலரும்
மனிதம்:
தந்தை ஸ்டேன் அவர்கள் சிறையிலிருக்கும்போது தனக்கு நடப்பதைப் பிறருக்குத் தெரியப்படுத்தக் கடிதங்களையும் சிறை நாள்குறிப்புகளையும் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் 12 கடிதங்களும், சில குறிப்புகளும் உள்ளன. அவை தந்தை அவர்கள் ஒரு சாட்சியாக வாழ்ந்ததை எடுத்துக்காட்டுகின்றன.
தந்தை
ஸ்டேனைப் போல, அதே சிறையில் அதே காரணத்திற்காகச் சிறையிலிருக்கும் சமூகப் போராளிகளான வரவரராவ், வெர்னன் கொன்சால்வஸ் மற்றும் அருண் ஃபெரைரா அவர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். தந்தை அவர்களுக்கு நடுக்கு வாதநோய் இருந்ததால் அருண் என்பவர் தந்தை ஸ்டேனுக்கு மதிய உணவருந்த உதவியதாகவும், வெர்னன் என்பவர் தந்தைக்குக் குளிப்பதற்கு உதவியதாகவும் எழுதுகிறார். மேலும், தந்தை ஸ்டேனுடன் உடனிருக்கும் இரண்டு சிறைவாசிகள் மற்ற நேரங்களில் துணிகளைத் துவைத்துத் தருவதில், மூட்டு வலிக்கு மருந்திடுவதில் உதவியாக இருந்ததை நன்றியோடு நினைத்து அதனைத் தனது கடிதம் ஒன்றில், ‘எல்லா முரண்பாடுகளுக்கும் மத்தியில் டஜோலா சிறையில் மனிதம் மலர்கிறது’
என்று எழுதுகிறார்.
சிறையிலும் பிறர்
நலனில்
அக்கறை
கொண்டவர்:
டஜோலா சிறையில் காரணமின்றிச் சிறையில் வாடும் பலருடன் உரையாடி, அவர்களின் கவலைகளைப் பகிர்ந்து கொண்ட தந்தை ஸ்டேன் ‘சிறைவாசிகளின் புன்னகையிலும் வலிகளிலும் கடவுளைக் காண்கிறேன்’ என்று
எழுதுகிறார். தனது கருத்துகளை எழுதியதோடு நின்றுவிடாது, செயலிலும் வாழ்ந்து காட்டுகிறார். தந்தை ஸ்டேன் அவர்களுக்கு ‘முகுந்தன் மேனன் மனித உரிமை விருது’ அறிவிக்கப்பட்டு அதற்குப் பாராட்டுத் தொகையாக ரூபாய் 25,000 வழங்கப்பட்டது. அதனை ஆதிவாசி மக்களுக்காகச் சிறையில் வாடும் நபர்களின் குழந்தைகளுக்கு வழங்கிட கேட்டுக்கொண்டார். இச் செயல் தந்தை அவர்கள் பிறர்நலனில் அக்கறை கொண்டவராக இருந்தார் என்பதைக் காட்டுகிறது.
துன்புறும் மானுடத்தோடு
பயணித்தவர்:
தந்தை அவர்கள் மக்களோடு தனது கையை மடக்கி முழங்கால்மீது வைத்துக்கொண்டு தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படமானது புலனப் பக்கத்தில் பலரும் பகிர்ந்தனர். இப்படம் தான் ‘நான் மௌன சாட்சி அல்லேன்’ என்ற புத்தகத்தின் அட்டைப் படமாக உள்ளது. மக்களோடு உடன் பயணிக்கும் பண்பானது, தந்தை அவர்கள் சிறைக்குச் சென்றும் தனது பணியை நிறுத்திவிடவில்லை; மாறாக, சிறையில் வாழும் சிறைவாசிகளின் உண்மை நிலையை அறிய முற்பட்டதோடு, தன்னுடன் இருப்பவர்களுக்காகச் செபிக்கக் கேட்கிறார். மக்களோடு மக்களைப்போல் உடனிருப்பது, மக்களைத் தனதாக்கிக்கொள்ள வழி செய்கிறது என்ற பணிவாழ்வுக்கான வழிகாட்டியாக அமைகிறார் தந்தை ஸ்டேன்.
உண்மைக்காகப்
போராடுவதில்
ஓய்வு
காணாதவர்:
‘பல
இன்னல்கள், இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் தந்தை ஸ்டேன் அவர்களால் எப்படி உடன்பாட்டு எண்ணங்களுடன் சிறை வாழ்வை எதிர்நோக்க முடிந்தது?’ என்ற கேள்விக்குத் தந்தை அவர்கள் சிறைக்குச் செல்லும் முன்னர் காணொளியில் பேசிய வார்த்தைகள் பதிலாக அமைகிறது. “உண்மை
கசப்பாக, கருத்துத் தெரிவிப்பது சகிக்க முடியாததாக, நீதி எட்டாததாக ஏனோ மாறிப் போனது? காரணம், உண்மை அதிகாரத்திற்குக் கசப்பாக, கருத்துத் தெரிவிப்பது ஆளும் வர்க்கத்துக்குச் சுவையற்றதாக, நீதி வலுவிழந்தவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் எட்டாக் கனியாக மாறியுள்ளது. இருந்தாலும், உண்மை அறிவிக்கப்பட வேண்டும்; கருத்துத் தெரிவிப்பது உயர்த்தப்பட வேண்டும்; நீதி ஏழைகளின் கதவுகளை அடைய வேண்டும். நான் மௌன சாட்சி அல்லேன். செய்யாத குற்றத்திற்காகத் தண்டனை அனுபவிப்பது கடவுளின் விருப்பமென்றால் அவ்வாறே நடக்கட்டும். ஆதிவாசிகளின் உரிமைக்காக அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியதால் என்னைத் தேசத்துரோகி என்று மரண தண்டனை விதித்தாலும் பரவாயில்லை; அதுவும் நடக்கட்டும்.”
இயேசுவின் இறப்பைத்
தன்னிலே
பிரதிபலித்தவர்:
தந்தை ஸ்டேன் அவர்களுக்குத் தண்ணீர் குப்பி தராத நிகழ்வு மனித உரிமை பறிக்கப்பட்டதை எடுத்துக்காட்டுகிறது. இயேசு சிலுவையிலிருந்து ‘தாகமாயிருக்கிறேன்’ (யோவா
19:28) என்று கூறிய நிகழ்வு, இயேசுவைப் பின்பற்றிய தந்தை அவர்களுக்கும் நிகழ்ந்துள்ளது எனலாம். இயேசுவின் ஏழை எளியோரின் நீதிக்கான வாழ்வை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு தந்தை ஸ்டேன் சுவாமி அவர்கள் அநீதியான தீர்ப்பைப் பழங்குடி மக்களின் வாழ்வுக்காக ஏற்றுக்கொண்டு தன்னுயிர் தந்தார். இவ்வாறு இயேசுவின் இறப்பும், இயேசுவைப் பின்பற்றிய தந்தை ஸ்டேனின் இறப்பும் மனித உரிமை மீறலையே சுட்டிக்காட்டுகிறது.
சவால் விடுக்கும்
கேள்விகள்
தன்னைக்
கொன்றுவிடுவார்கள் என்று தெரிந்தேதான் தந்தை ஸ்டேன் அவர்கள் சிறை சென்றதாகக் குறிப்பிடுவது தந்தை அவர்கள், தான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்காது, வாய்ச்சொல் வீரராக மட்டுமல்லாது, நீதிக்காக, உண்மைக்காக இறுதி வரையும் குரல் கொடுத்து, செயல்வீரராக வாழ்ந்த நிலைப்பாடு நம்மில் எத்தனை பேருக்கு வரும்?
தன்னைச்
சுற்றி நடக்கும் அநீதி தனக்கு மட்டும் நடக்கின்ற ஒன்றல்ல என்று சமுதாயத்தின் அவலங்களைக் கண்டுகொண்டு, சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட இயேசுவைப்போல சாட்சிய வாழ்வு வாழ அழைக்கிறார். 2020, ஆகஸ்டு 13 அன்று திருத்தந்தை பிரான்சிஸ், “மனித இனம் தன்னலம் மற்றும் கண்டுகொள்ளாமையில் இருந்து குணம் பெறவேண்டும்” என்று
செபிக்க அழைப்பு விடுத்தார். சமூகத்தில்
நடக்கும் அவலங்களைக் கண்டுகொண்டு, சரியான பதிலிறுப்பைத் தன் சாட்சிய வாழ்வு வழியாகத் தந்த இயேசுவைப்போல சமூக மாற்றத்தையும் சமத்துவத்தையும் உருவாக்கும் சாட்சிகளாக வாழ முயற்சிப்போம்.
மேளதாளத்தோடு சவ ஊர்வலம், தார் சாலையெங்கும் காலில் மிதிக்கப்பட்டு ஒப்பாரி வைக்கும் பூக்கள், பாதையில் குறுக்கே செல்லும் மாட்டு மந்தைகளைப்போல சாலையை மறித்துச் செல்லும் பெருங்கூட்டம், கூட்டத்திற்கு நடுவில் மாரடித்து அழுதுகொண்டே ஒப்பாரி ஓலங்களோடு சில பெண்கள்!
யார்
இறந்து போனது? அரசியல் தலைவராக இருப்பாரோ? இல்லை... இல்லை...! அப்படியெனில், கட்சிக்கொடிகள் காணப்பட்டிருக்குமே! சினிமா பிரபலம் யாராவது? சீ! இருக்காது. சினிமா பிரபலமெனில், சினிமா முகங்கள் தென்பட்டிருக்குமே!
மதுரையில்
சாலையோர டீக்கடையில் ஒரு பேப்பர் கப் டீயோடு நின்றிருந்த என்னை இந்தச் சவ ஊர்வலம் திரும்பிப்
பார்க்க வைத்தது. டீ மாஸ்டர் கடைசியில்
மிஞ்சும் டீத்தூளைச் சுடுதண்ணீரில் வடித்தெடுப்பதுபோல, ‘இறந்தவர் யார்?’ என்ற கேள்வி என் மனத்தை வடிகட்டியது.
இத்தனை
மனிதர்களின் மனத்தையும் சம்பாதித்த இந்தப் பெரிய மனிதர் யார்? ஆணா? இல்லை... பெண்ணா? டீக்கடைக்காரரிடம் கேட்டேன். அவரும் “ஒவ்வொரு நாளும் ஒரு சவ ஊர்வலம் போகுது.
அதெல்லாம் யாருனு தெரிஞ்சு வச்சுக்கணுமா?”
இம்முறைச்
சர்க்கரையோடு கொஞ்சம் கோபத்தையும் கலந்தே டீ ஆத்தினார். ‘தெரியாது’ என்று
ஒற்றை வார்த்தையில் அவர் முடித்திருக்கலாம். பரவாயில்லை. சண்டைபோட நேரமும் இல்லை. டீ குடித்த பேப்பர்
கப்பைச் கசக்கி எறிந்துவிட்டு சவ ஊர்வலத்தைப் பேரார்வத்தில்
பின்தொடர்ந்தேன். கொஞ்ச தூரம் சென்றபிறகு சவ ஊர்வலம் நின்றது.
மணமகன் ஊர்வலத்தில் மணமகனை மணமகள் கண்கள் தேடுவதுபோல சவ ஊர்வலத்திற்குள் இறந்துபோனவரைக் காண
ஊடுருவிச் சென்றேன். அருகில் சென்ற எனக்கு ஆச்சரியம் காத்திருந்தது. இறந்துபோனது ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. அது மனிதரே இல்லை! டிராக்டருக்குப் பின்னால் இணைக்கப்பட்ட பெட்டியிலிருந்து ஒரு சிறு ரக கிரேன் கொண்டு
பிணத்தை அப்படியே தூக்கியெடுத்தார்கள்.
அது
ஒரு கோவில் மாடு. மஞ்சளால் பூசப்பட்டு மாலையிடப்பட்டிருந்தது அந்த மாடு. ஐயோ! மன்னிக்க வேண்டும். மாடு இல்லை, சாமி! அங்குச் சூழ்ந்திருந்தவர்கள் ஒப்பாரி வைத்து அழுதார்கள். அவர்களின் அழுகையைப் பார்த்து உண்மையைக் கூற வேண்டுமென்றால், என் கண்ணும் கொஞ்சம் கலங்கியது. மாட்டிற்குக் கொடுக்கும் இந்த மரியாதையில் கொஞ்சமேனும் இந்தச் சமூகம் எனக்கும் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
வீட்டிற்குச்
செல்ல பேருந்தில் ஏறினேன். அருகில் வந்த நடத்துநரிடம், “அம்பேத்கர் நகருக்கு ஒரு டிக்கெட் கொடுங்க” என்றேன். டிக்கெட்டை வாங்கிச் சட்டைப்பையில் வைத்துக் கொண்டு சன்னலோரம் அமர்ந்தேன். சன்னல் காற்று என்னவோ இதமாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் அது முகத்தைத் தழுவிச் செல்லும்போது ஊருக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாத என் அப்பாவின் சவ ஊர்வலம் என்
நினைவிற்கு வந்து என் கண்களை நனைத்தது. ‘அடுத்த சென்மத்தில் கோவில் மாடாகப் பிறந்திட வேண்டும்’
என்று எண்ணிக்கொண்டிருக்கையில், ‘அம்பேத்கர் நகர் இறங்கு’ என்ற கண்டக்டரின் குரல் கேட்டு இறங்கிச் சென்றேன்.
எத்தனை
தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் வந்தாலும், மனிதர்களைப் பிளவுபடுத்தும் சாதி, சமய வேற்றுமைகள் ஒழிந்தபாடில்லை. மனிதர்களுக்கு அன்று கோவில் மாடுபோல இன்று ஏ.ஐ. தொழில்நுட்பம்
சமயச் சடங்குகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றது. கோவில் மாடுகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை இன்று குறைந்திருப்பதால், அதனை ஈடுசெய்ய அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாச் சமயங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
பொதுவாகவே
சமயத்தலைவர்கள் அறிவியலின் குறுக்கீட்டையும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கத்தையும் எளிதாக ஆதரித்துவிடமாட்டார்கள். ஆனால், இன்று செயற்கை நுண்ணறிவு எல்லாத் துறைகளிலும் ஊடுருவியிருப்பதுபோல சமயங்களிலும் அதன் வழிபாடுகளிலும் கால்பதித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது.
சமயத்தைப்
பொறுத்தவரை முக்கியமாக இரண்டு தளங்களில் செயற்கை நுண்ணறிவின் தேவை இருக்கும்: 1) சமயங்களின் மரபுசார் நம்பிக்கையினைப் (Orthodoxy) பாதுகாக்கவும்
ஆழப்படுத்தவும் அதனைப் பரவலாக்கம் செய்யவும் செயற்கை நுண்ணறிவு தேவைப்படலாம். 2) சமயங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையினையும், அதன் கோட்பாட்டினையும் சமூகத்தில் ஈடுபடுத்துவதற்கும், அந்நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கும் (Orthopraxis) செயற்கை
நுண்ணறிவு தேவைப்படலாம்.
ஏற்கெனவே
உலகில் பல்வேறு இடங்களில் செயற்கை நுண்ணறிவினால் செறிவூட்டப்பட்ட மனித உருவ ரோபோக்கள் சமயப் பயன்பாட்டிலும், அதன் வழிபாட்டு முறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஈரான் நாட்டைச் சார்ந்த அக்பர் ரெசாய் என்ற 27 வயது இளைஞர் ஒருவர் ‘வெல்டன்’
(Veldan) என்னும்
மனித உருவ ரோபோ ஒன்றை வடிவமைத்திருக்கிறார்.
குழந்தைகளுக்குக்
குரானையும், இசுலாமியச் செபங்களையும் போதிப்பதற்காக அது வடிவமைக்கப்பட்டுள்ளது. டிரோவடோ என்னும் 42 வயதான கணினிப் பொறியாளர் ‘சாண்டோ’
(Santo) என்னும்
கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கான ஒரு ‘ரோபோ புனிதரை’ வடிவமைத்திருக்கின்றார். இந்த மனித உருவ ரோபோ, முதியவர்கள் செபிப்பதற்கு உதவுகின்றது. ‘பெப்பர்’
(Pepper) என்னும்
மனித உருவ ரோபோவை ‘சாப்ட்பேங்’ என்னும்
ஜப்பானிய நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. புத்தமத பிட்சுகளைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்கள் சரியாகப் புத்தமதச் செபங்களைப் புத்த வழிபாடுகளில் பயன்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக, அடக்கச்சடங்கு நிகழ்வுகளில் ஓதும் செபங்களை மிகச் சரியாகவும் உச்சரிப்புப் பிழையில்லாமலும் ஒப்புவிக்கிறது. மலேசியாவில் புகழ்பெற்ற கோவிலில் சீனக் கடல்தேவதை என்று கருதப்படுகின்ற மசு மாதாவின் டிஜிட்டல் சிலையை (AiMazu) ‘அய்மாசின்’ என்ற
நிறுவனம் வடித்துள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தால்
செறிவூட்டப்பட்ட இக்கடல் தேவதையிடம் பக்தர்கள் என்ன கேள்வி கேட்டாலும், அதற்கு நம்பத்தகுந்த பதிலைச் சமய மற்றும் மனத்தத்துவ அடிப்படையில் தருகின்றது.
சுவிட்சர்லாந்தின்
கத்தோலிக்கப் பேராலயம் ஒன்றில் ‘தேயுஸ் இன் மெசீனா’
(Deus in Machina) என்னும்
இயேசுவின் முப்பரிமாண டிஜிட்டல் உருவம் நிறுவப்பட்டுள்ளது. இத்தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் கேள்விகளுக்கு இறையியல் அடிப்படையில் சுமார் நூறு மொழிகளில் பதிலளித்து வருகிறார் ஏ.ஐ. இயேசு!
சமயங்களில்
ஏ.ஐ. ரோபோக்களின் (Humaniod
Robots) பயன்பாடு தொடக்க
நிலையில் ஆச்சரியமூட்டக்கூடிய ஒன்றாக இருந்தாலும், அது எத்தகைய இறையியலை அடிப்படையாகக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது
என்பதைப் பொறுத்தே, அது எவ்வகையில் சமூகத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நாம் கூறமுடியும்.
கடவுளை
அடைவதிலும், மனித நேயத்தை வளர்ப்பதிலும் ஏ.ஐ. ரோபோக்கள்
பயன்படுமாயின் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், நம் மக்கள் ஏ.ஐ. ரோபோக்களையே
கடவுளாக்கிவிட்டால் அதை என்னவென்பது?
உலக அரசியல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையே நடைபெறும் வலிமையான யுத்தம். இடதுசாரி அரசியல், மக்களை மையப்படுத்திய முன்னேற்றம் குறித்த சமத்துவ-சகோதரத்துவ-சமதர்ம தத்துவம் கொண்டது. இதற்கு எதிர்மறையானது வலதுசாரி அரசியல். அது பழமைவாதப் படிநிலைச் சமூகத்தைப் பாரம்பரிய ஒழுங்குகளை, மதம் சார்ந்த நம்பிக்கைகளை, தேசியவாதத்தை, தனிநபர் முன்னேற்றத்தை ஆதரிப்பதே வலதுசாரி அரசியல்.
இந்திய
அரசியலையும், இடதுசாரிகள் மற்றும் வலதுசாரிகளின் நேரடிப் போட்டியாகக் காணலாம். இந்தியக் கூட்டணிக் கட்சிகள் பெரும்பாலனாவை, இடதுசாரிச் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவை. காங்கிரஸ் கட்சி 2004-இல்
அமைத்த கூட்டணி ஆட்சியால், மையவாத இடதுசாரிச் சித்தாந்தத்தில் இருந்த காங்கிரஸ்,
இடதுசாரிச் சித்தாந்தத்திற்கு மெல்ல நகர்ந்தது. இராகுல் காந்தியின் அரசியல் பாதையும் இடதுசாரிச் சித்தாந்தம் சார்ந்ததே. தேசியச் சனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ.) பா.ச.க. மற்றும்
அதன் கூட்டணிக் கட்சிகளால் கட்டப்பட்டது. பா.ச.க.
கட்சிக்குத் தனிப்பட்ட கொள்கைகள், சித்தாந்தங்கள் இல்லை. பா.ச.க.,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவு என்பதில் ஐயமில்லை.
வலுத்த
வலதுசாரிச் சித்தாந்தம் கொண்ட அமைப்பு பா.ம.க.
என்ற இடதுசாரிச் சாயம் கொண்ட கட்சியானது என்.டி.ஏ. கூட்டணியில்
இருப்பது பெரும் கொள்கை முரணாக விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில், இடதுசாரிச் சித்தாந்தம் கொண்ட அரசியல் கட்சிகள், தி.மு.க.
தலைமையில் 2016 முதல் ஏறக்குறைய பத்து ஆண்டுகளாக ‘இந்தியா’ கூட்டணியில் உள்ளன. இவை தனித்தனிக் கட்சிகள் எனினும், சித்தாந்தங்கள் ஒன்றே. எதிர் வலதுசாரிச் சித்தாந்தம் கொண்ட கட்சியான பா.ச.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி வலுவால் பத்து தேர்தல்களில் என்.டி.ஏ. கூட்டணியினர்
தொடர்ந்து தோல்வி அடைகிறார்கள். தமிழ்நாடு மக்கள் கல்வி அறிவும், அரசியல் விழிப்புணர்வும் கொண்டவர்கள் என்பதே இந்த அரசியல் மாற்றத்தின் திசைவழி.
கடல்
எனில் தொடர்ந்து அலை அடிக்கும். எப்பொழுதாவது புயல் அடிக்கும். ஆனால், தமிழ்நாட்டில் பா.ச.க.
எதிர்ப்பு எனும் பெரும் புயல் எப்பொழுதும் வீசுகிறது. அதுவே தமிழ்நாடு ‘இந்தியா’ கூட்டணியை நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் 100 விழுக்காடு வெற்றிக்கு வழிநடத்துகிறது.
அ.தி.மு.க.வினர் சிறுபான்மையோர் வாக்கு என்பதைக் குறிவைத்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்றனர். அ.தி.மு.க.வின் நிலை,
நம்பகத்தன்மை குறித்த ஐயப்பாடுகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டது. மக்கள் அ.தி.மு.க.வை நம்பவில்லை.
அது உண்மையானது.
2026-தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ச.க.
கட்சிகள் என்.டி.ஏ. கூட்டணியாகப்
போட்டியிடுவார்கள் என அறிவித்து விட்டனர்.
பா.ச.க.வின்
அமித்ஷா ஒட்டிய பசை கூட்டணியில் ஒட்டவில்லை. முன்பு தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணியிலிருந்த
எந்தக் கட்சியும் என்.டி.ஏ. கூட்டணியில்
இருப்பதாகக்கூட அறிவிக்கவில்லை. அமித்ஷா வழக்கம்போல தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணியை உடைக்க வழி தேடுகிறார். இவர்கள் ஆட்சி அதிகாரம் குறித்த ஒற்றைக் கொள்கை தவிர, வேறு எதையும் தமிழ்நாடு மக்கள் நலனுக்காகச் செய்யவில்லை. தமிழ்நாடு ஆளும் அரசு, ‘ஒன்றிய அரசு நிதி
தர மறுக்கிறது; எங்களைத் தொடர்ந்து வஞ்சிக்கிறது; தமிழ்நாடு திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை’ என்ற
பொதுவெளிக் குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிய அரசிடம் பதில் இல்லை.
ஆளுநர்
வழி தமிழ்நாடு அரசை முடக்க நடக்கும் சதியும் தமிழ்நாடு மக்களால் பேசுபொருளாகி உள்ளது. பா.ச.க.வின் கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.விற்குத் தமிழ்நாடு
மக்கள் தி.மு.க.வைத் தட்டிக்கேட்க எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து அளித்தார்கள். அவர்கள் தி.மு.க.
அரசை எதிர்த்துத் தட்டிக்கூட கேட்கவில்லை. பெருந்திரள் மக்கள் போராட்டங்களை நடத்தவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் பேசக்கூட பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பேச்சாளர்களை அனுப்புவதில்லை.
தமிழ்நாட்டில் எதற்கும் ஆள் இல்லாத பா.ச.க.கூட, வலதுசாரிகள் என்ற போர்வையில் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரங்களைத் தினம் நடத்துகிறார்கள். சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் இவர்கள், மக்கள் மன்றத்தில் இல்லை. 2026 -தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பத்து மாதங்களே உள்ள நிலையில், என்.டி.ஏ. கூட்டணியினர்
மந்த நிலையில் தவிப்பது அவர்களின் கையறு நிலையை வெட்ட வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணிக்கு
ஆள் பிடிக்க உள்துறை அமைச்சரே களம் இறங்குவது பின்னடைவின் முதல் அடையாளம்.
தமிழ்நாட்டில்
‘இந்தியா’ கூட்டணி
வலுவாக உள்ளது. என்.டி.ஏ. கூட்டணியில்
பா.ச.க., அ.தி.மு.க.
தவிர வேறு கட்சிகள் இல்லை. ஆளும் தி.மு.க.
அரசிற்கு எதிரான, வலுவான என்.டி.ஏ. கூட்டணிக்கு
எந்தத் தமிழ்நாடு அரசியல் கட்சிகளும் தயாராக இல்லை. தனித்துப் போட்டியிட
‘நாம் தமிழர்’ கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் முடிவு செய்து, பிடிகொடுக்காமல் நழுவுகிறார்கள். ‘யார் முதல்வர்?’ என்பதே இந்தக் கூட்டணிப் பேச்சு வார்த்தைகளுக்கு முட்டுக்கட்டையாக, முதல் தடையாக உள்ளது. இவர்கள் எவருக்கும் மக்கள் நலன், விட்டுக் கொடுக்கும் பண்பு, தன்னம்பிக்கை இல்லாத மனநிலை, தமிழ்நாடு அரசியலில் பெரும் அவலமாக உள்ளது. இதனால் களநிலவரம் ஆளும் தி.மு.க.விற்குக் கனிகிறது.
கருத்துக்கணிப்புகள்
என்ற தேர்தல் வெற்றி குறித்த கருத்தாக்கமும், ஆளும் தி.மு.க.
அரசிற்கே சாதகமாக வெளியாகிறது. ‘வெற்றி பெறுபவர்களுக்கே எமது வாக்கு’ என்ற சராசரி வாக்காளரின் மனத்தில் தேர்தல் கணிப்புகள் பெரும் மாற்றத்தை உருவாக்கிவிடும். அது தேர்தல் கால தட்பவெப்ப மாற்றங்களுக்கு உட்பட்டது என
எதிர்க்கட்சிகள் உணர்ந்து செயல்படுவது நல்லது.
தமிழ்நாடு
சட்டமன்றத் தேர்தலில் இரண்டு அணிகளா?
மூன்றாவது அணியா? நான்காவது அணியா? என்ற கேள்விகள் விடை தெரியாக் கேள்விகள். எப்படி இருப்பினும், தேர்தலைச் சந்திக்க தி.மு.க.
தயாராகி விட்டது. ஆய்வுக் கூட்டங்கள் என்ற பெயரில் மாவட்டந்தோறும் தமிழ்நாடு முதல்வர் செல்கிறார்; ஆதரவு திரட்டுகிறார்.
அணிகள்
அதிகமாக அதிகமாக ஆளும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசம் பெறும் என்பதும் கண்கூடு.
இருப்பினும், தி.மு.க.
தன் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் எனில், கூட்டணியைத் தக்க வைக்க வேண்டும். அதற்காகப் பெரும் தியாகங்களுக்குத் தயாராவது நடைமுறையில் இடியாப்பச் சிக்கல். தி.மு.க.
தனது தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்றாத வாக்குறுதிகளை மின்னல் வேகத்தில் செயல்படுத்த வேண்டும். கிறித்தவச் சிறுபான்மையோர் தி.மு.க.வின் வெற்றிப்பாதையில் மலர்களைத் தூவுகிறவர்கள். கிறித்தவ மக்கள் தங்கள் கோரிக்கைகளைக் கேட்டுப்பெற, முன்னெடுக்க இந்தத் தேர்தல் காலமே சிறந்த காலம்.
நமது
தலைவர்கள் இதில் கவனம் கொள்வதும் கேட்டுப் பெறுவதும் நமது முதல் உரிமையும் முன் கடமையுமாகும்.
அமெரிக்காவின் இரகசியமாகத் தாக்கும் 13 விமானங்கள், 11,400 கிலோ மீட்டர் பறந்து ஈரானின் அணு உலைகள் உள்ள இடத்தில் குண்டு மழை பொழிந்து தகர்த்துவிட்டன. அதேபோல நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து குண்டுகள் வீசப்பட்டு மற்றோர் அணு உலையும் தகர்க்கப்பட்டது. இத்தகைய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கருவிகள் பயன்படுத்தப்பட்டு இன்றைய போர் முறையே மாறிவிட்டது. இந்த விமானங்களில் ஆறு குண்டுகள் மட்டும்தான் வீசின. மற்றவை எதிரியை ஏமாற்றுவதற்குப் பயன்பட்டன. இவற்றை இயக்கியவர்கள் முகம், ஒரு பெண் விமானியைத் தவிர, நமக்குத் தெரியாது. இத்தனை குண்டுகள் பொழிந்த விமானங்களில் எத்தனை அமெரிக்கர்கள் இருந்தார்கள் என்பதும் தெரியாது. ஆனால், ஒருசிலர் மட்டுமே சென்று இவ்வளவு பேரழிவை ஏற்படுத்தினர்.
உடனடியாக
ஈரான் பதிலடி கொடுத்தது. அமெரிக்காவின்
தளத்தைக் குறிவைத்துத் தாக்கியது. அதேசமயம் இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணைகளைத் தொடுத்தது. இஸ்ரேலும்
அதன் பங்குக்கு ஈரானின் அணு ஆயுதக் கிடங்குகள் இருப்பதாகச் சொல்லப்பட்ட இடங்களைத் தாக்கியது. இந்த
நிலையில் இரஷ்யாவும் இந்தப் போரில் தலையைக் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகி, இரண்டு நாடுகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்த போர் உலகப் போராக வெடிக்குமோ என்ற அச்சம் உலகை நடுங்க வைத்தது.
நல்ல
வேளையாக, ட்ரம்பின் அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான 12 நாள் போர் நின்று விட்டதாகத் தெரிவித்தது. அவர் அறிவித்த பிறகும்கூட ஏவுகணைகள் வீசப்படுவது இரு தரப்பிலும் நிற்கவில்லை. ‘நாங்கள் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொள்ளவில்லை’ என்று
ஈரான் முழங்கியது. இஸ்ரேலும்
பதில் தாக்குதலை நிறுத்தவில்லை. இறுதியில்
போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
இந்த
12 நாள் போர் ஏன் வந்தது? யார் காரணம்? ஒரு சிறு நாட்டைச் சூழ்ந்திருக்கும் அறுபதுக்கும் மேற்பட்ட அரபு, இஸ்லாமிய நாடுகள் அவற்றின் வலிமையைக் காட்டுவதற்கா இந்தப் போர்? ஈரான்
அணுகுண்டு தயாரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டதாக இஸ்ரேலும், உலக நாடுகளும் முடிவுக்கு வந்தது மட்டுமே காரணமா?
இஸ்ரேல்
மேல் பல நாடுகளுக்கும் மனத்தாங்கல்
இருந்து வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். பாலஸ்தீனம் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பல முறை உள்ளாகியிருக்கிறது.
பெண்களும் குழந்தைகளும் குண்டு வீச்சால் இறப்பதும், கட்டடங்கள் தரைமட்டம் ஆவதும் அன்றாட நிகழ்ச்சிகள். பாலஸ்தீன மக்கள் ஒவ்வொரு நாளும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக இஸ்ரேல் ஒரு சிறு நாடு என்ற அனுதாபம் இருந்தது போய், மக்கள் மத்தியில் அதன்மேல் வெறுப்பு அதிகமாகியது.
இஸ்ரேலுக்கும்,
அரபு, இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான பகைமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல; இரண்டாம்
உலகப் போருக்குப் பிறகு நேச நாடுகளால் உருவாக்கப்பட்ட நாடு அது. வேகமாக வளர்ந்த நாடு நமக்கெல்லாம் ஆபத்தைக் கொண்டு வரும் என்று மற்ற நாடுகள் அச்சம் கொண்டன. எண்ணெய்
கிணறுகள் அரபு நாடுகளில் தோண்டப்பட்ட பிறகு அவற்றின் வறுமை போய், அங்கு வளம் கொழிக்கத் தொடங்கியது. பணக்கார
நாடுகள் அவற்றின் மேல் கண்வைத்தன. பாரம்பரியமாக
யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இருந்த பகையும் வலுப்படத் தொடங்கியது.
இந்தப்
பகைமைக்குக் காரணங்கள் பல. வரலாற்று ரீதியாகப் பாலஸ்தீனியர்களை அவர்கள் நாட்டிலிருந்து விரட்டியதும், யூதர்கள் தங்களுடைய தாய்மண்ணைத் தங்களுக்குத் திருப்பித் தரவேண்டும் என்று ஆசைப்பட்டதும் காரணங்கள். இஸ்ரேல்,
பாலஸ்தீனம், எருசலேம் ஆகிய பகுதிகளுக்கு இசுலாமியர்களும், யூதர்களும், கிறித்தவர்களும்கூட உரிமை கொண்டாடியது மற்றொரு காரணம். இதற்கிடையில் வெளிநாட்டு ஆதிக்கமும் தூண்டுதலும் இந்த முரண்பாடுகள் உரசலாக மாறக் காரணம்.
இஸ்ரேல்
தனது அண்டை நாடுகளுடன் போர் பகைமை கொண்டது நீண்ட வரலாறு உடையது. 1948-இல்
‘இஸ்ரேல் சுதந்திர நாடு’ என்று அறிவித்தவுடன் அரபு நாடுகள் அதன்மேல் போர் தொடுத்தன. 1956-இல் சூயஸ் கால்வாய்க்கு உரிமை கொண்டாடி இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து இஸ்ரேல் எகிப்தைத் தாக்கியது. 1967-இல் நடந்த ஆறு நாள் போரில் இஸ்ரேல் எகிப்து, யோர்தான், சிரியா ஆகிய நாடுகளைத் தாக்கியது. யூதர்களின்
புனித நாளான ‘யாம் கப்பூர்’ அன்று எகிப்தும் சிரியாவும் இஸ்ரேலைத் தாக்கின. இதற்கிடையில்
லெபனானில் இஸ்புல்லாக்களின் தீவிரவாதத்தை எதிர்த்து இஸ்ரேல் அதன்மேல் 1982-இல் தாக்குதல் நடத்தியது. காசா பிரச்சினையில் அவ்வப்போது பாலஸ்தீனத்தை ஆளும் ஹமாஸ்களுக்கும் இஸ்ரேலுக்கும் மோதல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இஸ்ரேல்,
பாலஸ்தீன முகாம்களைத் தாக்கி குழந்தைகளையும் பெண்களையும் அழிக்கின்றது. தரைவழி
தாக்கி தனது அதிகார வரம்பை அதிகரிக்கிறது. பாலஸ்தீனத்துக்கு
அனுப்பப்படும் உதவிகள் போகவிடாமல் தடுக்கின்றது. ட்ரோன்களை அனுப்பி வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனத் தீவிரவாதிகளைக் கொல்கிறது. பாலஸ்தீனத் தீவிரவாதிகளான ஹமாஸ்களுக்கும் இஸ்ரேலுக்கும் நடந்த மோதல்களில் 2023-இல் ஹமாஸ்கள் இஸ்ரேல் மேல் நிலம், கடல், ஆகாயம் மூலமாகத் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில்தான்
சென்ற ஜூன் 13 அன்று இஸ்ரேல், ஈரான்மேல் ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் கொண்டு அத்துமீறி ஈரானின் இராணுவம், அணுசக்தி நிலையங்கள் மேல் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியது. அடுத்த
நாளே ஈரான் பதிலடி கொடுத்தது. அதிவேக ஏவுகணைகளைத் தொடுத்து, விடாது இஸ்ரேல்மேல் குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேல் இரும்புக் குவிகை என்ற பாதுகாப்பு அரணை அமைத்திருந்ததால், அதை ஊடுருவி எந்த ஏவுகணையும் வரமுடியாது என்ற இறுமாப்பில் இருந்தது. ஆனால், இந்த ஒலியைவிட அதிவேகமாகப் பறந்து வரும் விமானங்கள், தொகுப்புக் குண்டுகளை வீசித்தாக்கின. ஒரே நேரத்தில் இரண்டாயிரம் குண்டுகளை எட்டு கிலோ மீட்டர் சுற்றளவிற்குக் குறிபார்த்துத் தாக்கும் திறனுடையவை. இதனால் இஸ்ரேலின் தாக்கும் சக்தி குறைந்தது. இருப்பினும், ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மேல் தாக்குதலைத் தொடர்ந்தது இஸ்ரேல். குறிப்பாக, ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. பதிலடியாக ஈரான் டெல் அவிவ், எருசலேம் முதலான நகரங்களைத் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்தியது.
லெபனானின்
ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் அமைப்பு அமெரிக்கக் கப்பல்களைத் தாக்கப் போவதாக எச்சரித்தது. அமெரிக்கா இதுவரையில் போரில் தலையிடாமல் இருந்தது. போர் தீவிரம் அடைந்த நிலையில், அமெரிக்கா ஈரானை எச்சரித்தது. அதனுடைய அணுசக்தித் தளங்களைத் தாக்கப் போவதாக எச்சரித்தது. தொடக்கத்தில் பார்த்தது போல ‘B2’ Stealth bombers அனுப்பி ஈரானின் அணுசக்தி நிலையங்களான போர்டோ, நார்டன்ஸ், எஸ்பகாம் ஆகிய இடங்களைத் தாக்கியது. இதற்குப் பதிலடியாக ஈரான், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானத்தளங்களைத் தாக்கியது. ஏற்கெனவே அது எச்சரித்திருந்ததால் சேதம் அதிகமில்லை. உடனே
24-ஆம் தேதி அன்று இரு நாடுகளுக்கு இடையே உள்ள போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ட்ரம்ப் அறிவித்தார். 24 மணி நேரத்திற்குள் இரு நாடுகளும் அவற்றின் தாக்குதலை நிறுத்திக்கொள்ளும் என்று அறிவித்தார். எனினும், இரு பக்கமும் தாக்குதல்கள் தொடர்ந்தன. ஈரான் முதலில் ‘எந்தப் போர் நிறுத்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை’ என்று
அறிவித்தது. இன்றைய நிலவரப்படி (25.06.2025) இரு நாடுகளுமே போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டன என்று அறிகிறோம்.
டொனால்ட்
ட்ரம்ப் இந்தப் போரினாலும், போர் நிறுத்தத்தாலும் தனக்கே வெற்றி கிடைத்தது என்று முழங்குகிறார். அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறார். ஆனால், அவருடைய விமானங்கள் தாக்கிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்று இப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்கக்
குண்டுகள் கான்கிரீட் பதுங்குக் குழிகளைத் துளைத்துக் கொண்டு தரைக்குக் கீழே உள்ள ஆயுத உற்பத்தி நிலையங்களை அழிக்கும் ஆற்றல் உடையவை. ஆனால், ஏற்கெனவே ஈரான் தயாரித்து வைத்திருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் அகற்றப்பட்டுவிட்டதால், ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறுகிறார்கள். இந்தத் தகவலை அமெரிக்கச் செய்தியாளர்களே தெரிவிக்கிறார்கள். ஆகவே, 17,300 கோடி மதிப்புள்ள விமானங்கள் பொழிந்த குண்டுகள் வீண் என்றால், அவருடைய விமானத் தாக்குதலுக்கு வெற்றி இல்லை. சண்டையைத்
தூண்டி கடைசியில் அமைதியைக் கொண்டு வந்து விட்டதாகப் பறைசாற்றவே இந்த வெற்றி முழக்கமா?
தாக்குதலைத்
தொடங்கிய இஸ்ரேலுக்கு வெற்றியா? என்றால், உறுதியாக இல்லை. டெல் அவிவும், எருசலேமும் அழிவுற்றதே விளைவு. அணு ஆயுத அச்சுறுத்தல் இன்னும் தொடர்கிறது. அவர்களுடைய
இரும்புக் குவியம் தகர்த்தப்படக் கூடியது என்று பாடம் கற்றதே மிச்சம்.
ஈரான்
பலத்த சேதத்தைச் சந்தித்தது என்பது உண்மை. பல இராணுவத் தளபதிகள்
கொல்லப்பட்டார்கள். ஈரானின் முதன்மை அணுசக்தி விஞ்ஞானிகள் ஒன்பது பேர் உயிரிழந்தார்கள். டெஹ்ரான் சிதைந்துபோய்விட்டது. பல
விமானத் தளங்கள் அழிந்துபோய்விட்டன. அதனுடைய அணு ஆயுதம் தயாரிக்கும் ஆற்றல் வேண்டுமென்றால் மீட்டெடுக்கக்கூடியதாய் இருக்கலாம். ஆனால், ஈரான் தகர்ந்துபோய்விட்டது என்பது உண்மை.
இந்த
12 நாள் போரில் உயிரிழப்புகள் மிகக் குறைவு என்பது ஓர் ஆறுதல். இருந்தாலும், மக்கள் பீதியிலும் அச்சத்திலுமே வாழ்ந்தார்கள். உலகமும் இது ஒரு பெரும் போராக வெடிக்கும் என்று பயந்து கொண்டிருந்தது. நல்ல
வேளையாகப் போர் முடிவுக்கு வந்திருக்கிறது.
கச்சா
எண்ணையின் விலை ஓரளவு கூடினாலும், மீண்டும் குறையத் தொடங்கியிருக்கிறது. கச்சா எண்ணைய் கொண்டு செல்லப்படும் கடற்பாதைகள் மூடப்பட்டால் எரிபொருள் கிடைக்காமல் போகும். அப்போது எல்லாருக்குமே பிரச்சினைதான். உலகின் எரிபொருள் தேவையில் ஈரான் மூன்றில் ஒரு பங்கைத் தயாரிக்கிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
மக்களுக்கு
ஓரளவு நிம்மதிதான். ஆனால், டெஹ்ரானும் டெல் அவிவும் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.
எந்தப்
போர் நடந்தாலும், யாரும் வெற்றி பெறப் போவதில்லை.