பாசிசம் என்றால் என்ன?
அண்மையில்
வெளிவந்த ‘பரா சக்தி’ எனும் திரைப்படத்தைப் பார்த்தேன். தனிமனித, சமூக உரிமைகள், மானுட மாண்புகளுக்கு எதிரான எந்தத் திணிப்பையும் பாசிசத்தையும் எதிர்க்கும் உந்துணர்வைத் தந்தது அந்தத் திரைப்படம்.
இரண்டாம்
உலகப்போர் காலகட்டத்தில் எழுந்த அரசியல் சித்தாந்தமே பாசிசம். ஒரு குறிப்பிட்ட இனம், சமூகம் அல்லது சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே சமூகத்தில் உயர்ந்தவர்கள்; மற்ற எல்லாரும் அவர்களுக்குக் கீழானவர்கள் எனும் பிரித்தாளும் பார்வை கொண்டது பாசிசம். சமுதாயத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்படுகிற எதேச்சதிகாரச் சிந்தனையுடன் செயல்படுபவர்கள் இவர்கள். இவர்களுக்கு எல்லாவற்றிலும் முன்னுரிமையும் இலாபமும் கிடைக்கிறது. இந்தப் பாசிசம் தம் குடிமக்களில் ஒரு பகுதியினரை இரண்டாந்தர மக்களாக வகைப்படுத்தி, அவர்களைக் கொடுமைப்படுத்துகிறது. இதுவே ஜெர்மனியில் ஹிட்லரும் (நாசிசம் எனும் பெயரில்) இத்தாலியில் முசோலினியும் கடைப்பிடித்தது. இந்தப் பாசிச உணர்வு சமயத்தின் பெயரால் 2000 ஆண்டுகளாக இந்தியாவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் படர்ந்து
வரும்
பாசிசம்
கிரேக்கப்
பாசிசத் திணிப்பை எதிர்த்து மக்கபேயர் தலைமையில் யூதர்கள் போராடியதை திருவிவிலியத்தில் படிக்கும் எவரும் ஈராயிரம் ஆண்டுகளாகச் சமயத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடத்தப்படும் ஒடுக்குமுறைகளையும் கொடுமைகளையும் எண்ணிப் பார்க்காமல் இருக்க இயலாது. ஆரியச் சாதியத் திணிப்பை உள்வாங்கிய ஒடுக்கப்பட்டோரிடம் ஊறிப் பாயும் சாதிய வெறி, திமிர், ஆணவக்கொலை எனும் இழிவுகள் நம்மை விலங்குகளைவிடக் கீழானவர்களாக மாற்றுகின்றன.
கடந்த
16 ஆண்டுகளாக அரசியல் இலாபத்திற்காகப் பாசிசச் செயல்பாடுகள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. 1935-இல் ஹிட்லர் ஜெர்மனியில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்தார். அதனடிப்படையில் 60 இலட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார். அதேபோல் இந்தியாவிலும் குடியுரிமைத் திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. வாக்காளர் சிறப்புத் திருத்தச்சட்டமும் குடியுரிமையைப் பறிப்பதாகவே நடக்கிறது. சிறுபான்மையினர் இந்தியாவில் இனி இரண்டாந்தரக் குடிமக்களே!
வரலாறு ஒழிப்பு
ஒன்றிய
அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி தென்னிந்திய வரலாறு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக்
கல்வியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட திப்பு சுல்தான், ஹைதர் அலி போன்றோரின் 18-ஆம் நூற்றாண்டில் நடந்த நான்கு ஆங்கிலேய மைசூர் போர்கள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய செல்வாக்கு மிக்க விஜயநகரப் பேரரசு பற்றிய விரிவான குறிப்புகள் வெட்டப்பட்டுள்ளன. திருவிதாங்கூர் சாணார் புரட்சி, தென்னிந்திய எதிர்ப்பு இயக்கங்கள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. தக்காண சுல்தான்களின் ஆங்கில எதிர்ப்புகள் அழிக்கப்பட்டுள்ளன.
சீரழிக்கப்படும்
பன்முகத்தன்மை
‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ எனப்
பன்முகத்தன்மையைப் பறைசாற்றினார் பாரதியார். ஆனால், ‘காசி தமிழ்ச்சங்கம் எதற்கானது?’ என்ற கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதில் கூறுகிறார்: ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்.’
பல்சமயங்கள்,
மொழிகள், இனங்கள், இலக்கியங்கள், பண்பாடுகள் எனும் பன்முகத்தன்மைதான் இந்தியாவின் அழகு, பெருமை! ஆனால், அதற்குப் பதில் இப்போது ஒரே நாடு, ஒரே இந்தி மொழி, ஒரே சமயம், ஒரே ஆரியப் பண்பாடு எனும் ஆர்.எஸ்.எஸ். கருத்துத் திணிக்கப்படுகிறது.
2024-2026 ஆண்டுகளில்
தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளுக்குத் தரவேண்டிய தொகை 3,548.22 கோடி மோடி அரசால் தரப்படவில்லை. சமஸ்கிருதத்திற்காக 2024 முதல் 2025 வரை ஒதுக்கிய நிதி 2,532.59 கோடி; ஆனால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 147.50 கோடி. இதில் தமிழுக்கு ஆண்டுக்கு 15 கோடி மட்டுமே! சமஸ்கிருதத்தைவிட 22 மடங்கு குறைவாக ஒதுக்கிவிட்டு, காசி தமிழ்ச் சங்கம் பற்றி மோடி துதி பாடிகள் ‘டமாரம்’ அடிக்கின்றனர். கீழடி அகழாய்வை ஒன்றிய அரசு கைவிட்டதோடு, பன்னாட்டு ஆய்வு நிலையங்கள் கீழடியில் கிடைத்த பொருள்களைப் பற்றித் தந்த அறிக்கையைக் கூட வெளியிட மறுக்கிறது ஒன்றிய அரசு.
கலவரமே ஆயுதம்
தோழர்
அந்தோனியோ கிராம்ஷி கூறியதுபோல, மக்கள் எதிரிகள் (பாசிசவாதிகள்) பாசிசத்தைத் திணிக்கக் கலாச்சார மேலாதிக்கத்தைப் பயன்படுத்துகின்றனர். தவறான தகவல்கள் திரித்துக் கூறப்படுவதால், போலி புள்ளி விவரங்கள், வெற்று வெறுப்புப் பேச்சுகள் மூலம் மக்கள் மூளையைச் சலவை செய்கின்றனர். மக்களைத் தூண்டும் கவர்ச்சிப் பேச்சுகளும் பொய்களும் அவர்களது கலை. இந்தியாவில் சமய, சாதிச் சண்டைகளைத் தூண்டுவதும், கஞ்சா போன்ற போதைப் பொருள்களைப் பரப்புவதும் அவர்களே.
இடையறாத
பதற்றத்தில் மக்களை வைத்து, கலவரங்களைத் தூண்டி அதன்மூலம் அரசியல் இலாபம் தேடுகின்றனர். ‘அர்பன் நக்சல்’,
‘தேச விரோதிகள்’,
‘அந்நியக் கைக்கூலிகள்’ என
முத்திரை குத்தி, பொய்வழக்குகளைப்
புனைகின்றனர். குடிமக்களைக் கண்காணிக்க அலைப்பேசி கருவியில் ‘சஞ்சார் சாத்தி’ எனும் உளவு பார்க்கும் கருவியைப் பொருத்தக் கட்டாயப்படுத்துகின்றனர்.
ஆரியப்
பண்பாடே இந்தியப் பண்பாடு, வேதமே அனைத்துத் தத்துவங்களின் உறைவிடம் என கருத்துத் திணிப்புச்
செய்கின்றனர் பாசிஸ்டுகள். சிந்துச் சமவெளி பண்பாட்டை, சரஸ்வதி பண்பாடாகப் பார்க்கின்றனர். இசுலாமியரைக் கூட்டம் கூட்டமாகவும் தனியாகவும் சீண்டி, கூட்டுக் கொலை செய்தனர். 2025 - கிறிஸ்து பிறப்பு விழாவின் போது கிறித்தவர்களையும் சீண்டியுள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட கிறித்தவ மறைப்பணியாளர்கள் துன்புறுத்தப்பட்டுள்ளனர். பழங்குடியினர் கூட்டம் கூட்டமாக ‘மாவோயிஸ்டுகள்’ எனும்
பெயரில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். பட்டியலினத்தவர் குறிப்பாக, பட்டியலினத்துப் பெண்கள் பட்டப்பகலில் பொதுவெளியில் மானபங்கப்படுத்தப்படுகின்றனர்.
எதிர்க்கேள்வி கேட்போரின் வீடுகள் புல்டோசர் கொண்டு தகர்க்கும் போக்கு நியாயப்படுத்தப்படுகிறது.
இப்போது
தமிழ்நாட்டிலும் பாசிசம் தன் சீரழிவுகளைச் செய்யும் துணிவைப் பெற்றுள்ளது. நாம் விழிப்பாய் இருப்போம். ஏனெனில், பாசிசம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்க்கவேண்டும் எனும் தூண்டுதலை நமது திருவிவிலியத்தின் மக்கபேயர் நூல் நமக்கு ஊட்டுகிறது.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது முதுமொழி. தமிழ்நாட்டுத் தேசிய சனநாயகக் கூட்டணிக்கு (என்.டி.ஏ.) இப்பழமொழி பொருந்திப்போகிறது. 2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் மெல்ல அனல் பறக்கத் தொடங்கியது. பிரதமர் மோடி முதல் சுற்று ஆட்டத்தை மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி களத்தில் தி.மு.க. Vs தமிழ்நாடு வெற்றிக்கழகம் என்ற மாய விவரிப்பை, தி.மு.க. Vs அ.தி.மு.க. என்ற கடும் போட்டியாக உருமாற்றினார். தமிழ்நாட்டில் புதிய பகுதி நேர அரசியல் தலைவர்களுக்கும் வாய்ச்சொல் வீரர்களுக்கும் மோடி கள்ள ஆட்டம் காட்டினார். வலதுசாரிகளுடன் இடதுசாரிகளும், பாதி வலது - இடதுசாரிகளும் சார்ந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியாக என்.டி.ஏ. கூட்டணி தமிழ்நாட்டில் உருபெற்றது.
அமித்ஷா,
பியூஸ் கோயல் நடத்திய திரை மறைவு ஆட்டத்தில் திரை விலகியது. பிரதமர் கூட்ட மேடையில் எடப்பாடியுடன் அன்புமணி, டி.டி.வி.
தினகரன், ஜி.கே. வாசன்,
ஏ.சி. சண்முகம், திருமாறன், ஜான்பாண்டியன், செல்லமுத்து, பூவை ஜெகன்மூர்த்தி, என்.ஆர். தனபாலன் ஆகிய கட்சித் தலைவர்கள் மேடை ஏறினர். இவர்கள் அனைவரும் தொகுதிக்கு நூறு முதல் ஆயிரம் வாக்கு கொண்ட சாதிக்கட்சித் தலைவர்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் இக்கட்சிகளை, ‘ஒரு நபர் கட்சிகள்’
எனக் காட்டமாக விமர்சித்தார். கடந்தகால என்.டி.ஏ. கூட்டணி
அப்படியே இருக்கிறது.
2024 - நாடாளுமன்றத் தேர்தலில்
என்.டி.ஏ. கூட்டணியில்,
சிவகங்கை தொகுதியில், தாமரை சின்னத்தில் போட்டியிட்ட இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் மேடையில் இல்லை. மயிலாப்பூர் இந்துப்
பாரம்பரிய நிரந்தர நிதி நிறுவன மோசடியில் தற்போது தேவநாதன் சிறையில் இருக்கிறார். 6000 மக்களிடம் 800 கோடி நிதி மோசடி செய்தார் என்பது வழக்கு. அவரைக் கைது செய்ய பலர் கூட்டம் கூட்டமாக நின்று யூ-டியூப்பில் முதல்வர்
ஸ்டாலினுக்குக் கெஞ்சி வேண்டுகோள் வைத்த வீடியோக்கள் கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
என்.டி.ஏ. கூட்டணி
ஊழல், வாரிசு அரசியல், சனாதனப் பாதுகாப்பு. சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, போதைப்பொருள் கலாச்சாரம், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, இந்துமதப் பாதுகாப்பு எனத் தேர்தல் பிரச்சாரத்தைக்
கட்டமைக்கிறது.
என்.டி.ஏ. கூட்டணி
அமைய டி.டி.வி.
தினகரனுக்கு இரட்டை இலை சின்ன இலஞ்ச
வழக்கு, அன்புமணிக்கு மருத்துவக்கல்லூரி அனுமதி தந்த இலஞ்ச வழக்கு... இவை அடுத்தடுத்த மாதங்களில் டெல்லி நீதிமன்றத்தில் வாய்தாவாக நிற்கின்றன. அன்புமணி மீதுள்ள இலஞ்ச வழக்குகளை விரைவாக விசாரித்துத் தீர்ப்புத் தரவேண்டுமென அவரது தந்தை இராமதாஸ் அவர்களே தனது கட்சித் தீர்மானமாகத் தருவது செய்தியல்ல; கசக்கும் உண்மை!
பியூஸ்
கோயல், அன்புமணி, ஜி.கே.வாசன்
ஆகிய வாரிசுத் தலைவர்களை மேடையில் வைத்துக்கொண்டே, ‘வாரிசு அரசியல்’ எனப் பேசுவதை எதில் சேர்ப்பது? தேர்தலுக்கு
முன்பே ஆர்.எஸ்.எஸ். ஊடகங்கள் பேசியதை,
ஆளுநர் பேசிய அரசியலை மோடியை வைத்துக்கொண்டு என்.டி.ஏ.வினர்
பேசுவது தேர்தலுக்கான எங்கள் செயல்திட்டம் என்பதாக வெளியாகியது. மதத்தை மட்டுமே வைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள மதவாத பா.ச.க. மற்றும்
பிரதமர், தமிழ்நாட்டுக் களத்தில் இது ‘வாக்கு அரசியல்’ என முழங்கியது அபத்தமானது.
தமிழ்நாடு
பாரதிய சனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் ‘ஜெய் ஸ்ரீராம்’
என மேடை ஏறி இந்தியில் முழுக்கமிட்டது அவரது ஆர்.எஸ்.எஸ். பிடிப்பின் வெளிப்பாடாகும். இதைவிட நகைப்பிற்குரிய செய்தி ஒன்று, எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தைப் பார்த்து தன்னை ஜெயலலிதா என நினைத்துக்கொண்டு, ‘செய்வீர்களா?’ எனக்
கேட்டதுதான். பிரதமர் மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் தங்கமணியை,
முதுகில் தட்டிக் கொடுத்து பலத்த சிரிப்புடன் பேசியது அடுத்த அ.தி.மு.க. ஆட்டத்திற்கு ஆள்
தயார் என்பதாக இருந்தது.
அமித்ஷா,
பா.ச.க. - அ.தி.மு.க.
கூட்டணி அறிவிப்பில் மூன்று நேர்காணல்களில் பியூஸ் கோயல் சென்னை வருகை, பத்திரிகையாளர் சந்திப்புகளில் பிரதமர் மோடியின் மதுராந்தக உரையில், தமிழ்நாட்டில் என்.டி.ஏ. ஆட்சி
என உறுதிபடக் கூறுகிறார்கள். அவர்கள் பீகார், ஆந்திரா, பாண்டிச்சேரி போல,
கூட்டணி என்.டி.ஏ. ஆட்சிக்குத்
தயாராகிவிட்டார்கள். பா.ச.க.விடம் இடத்தைக் கொடுத்தால் மடத்தைப் பிடுங்கிவிடுவார்கள் என்ற உண்மையை அ.தி.மு.க.வினர் உணரவே
இல்லை. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களோ, ‘நான்தான் அடுத்த முதலமைச்சர்,
அ.தி.மு.க.
ஆட்சி’ என்று
தொடர்ந்து கூறிவருகிறார்.
தொலைக்காட்சி விவாத மேடைகளில் அ.தி.மு.க.வினர் சிரிப்பு
நடிகர் செந்திலின் திரைப்பட நகைச்சுவை காட்சிபோல, “ஒரு பழம் இங்கே உள்ளது! மற்றொன்று எங்கே என்று கேட்டால், அதுதானே இது” எனச் சொல்வதாக, பா.ச.க.வும், அ.தி.மு.க.வும் மாற்றி
மாற்றிப் பேசுகிறார்கள். இவர்களை நினைத்து மக்கள் தங்களுக்குள் சிரித்து மகிழ்கிறார்கள்.
பிரதமர்
மோடி ‘இரட்டை இஞ்ஜின் சர்க்கார்’
என மதுராந்தகத்தில் பேசுகிறார். உத்தரப்பிரதேசத்தில், இரட்டை இஞ்ஜின் ஆட்சியில், யோகி ஆதித்தியநாத் தலைமையில் ‘கோவிட்’ பெருந்தொற்று நேரத்தில் இறந்தவர்களின் பிணத்தைப் புதைக்க இயலாமல், கங்கை நதியில்
வீசிய அவலம் அரங்கேறியது. பொய்கள் மூலமே என்.டி.ஏ. கூட்டணி
ஏதாவது செய்து தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து விடும் எனக் கனவு காண்கிறார்கள்.
கடந்த
காலங்களில் தேர்தலுக்கு முன்னான சட்டிஸ்கர், தில்லி, தெலுங்கானா போன்ற ஆளும் அரசின் மாநிலங்களின் மையப்புள்ளிகளை அமைச்சர்களைக் கையெடுக்கும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆட்டங்களும் ஆரம்பமாகும். இது தவிர வாக்காளர் திருத்தமும், ஓட்டுப் பதிவு இயந்திரத் தில்லுமுல்லுவும்
பா.ச.க. ஆட்டத்தின்
உள்ளடக்கங்கள். தேர்தல் கால மத, இன, சாதிக் கலவரங்கள் அதன் அடையாளங்கள்.
தமிழ்நாட்டு
மக்கள் சமத்துவம், சமயச் சார்பின்மை, சமூக நீதி போற்றுபவர்கள், மத நல்லிணக்கம் பேணுபவர்கள்,
மதவாதக் காவி கும்பலையும், அவர்களின் அடிமைகளையும், அடித்து விரட்டுவதே தமிழ்நாட்டு மக்களின் பெரும் பொறுப்பு என உணர்ந்தவர்கள், அதன்
அடிப்படையில் மக்கள் வாக்களிப்பார்கள் என்பதை நம்புவோம்.
கிறித்தவர்கள் இம்மண்ணின் மக்கள். இம்மண்ணின் சமூக, அரசியல் வாழ்வோடு பின்னிப் பிணைந்தவர்கள். தங்களின் வாழ்வாலும் பணிகளாலும் இம்மண்ணை, மக்களை, மொழியை வளப்படுத்தியவர்கள். தங்களின் சக்திக்கு அப்பாற்பட்டு கல்வி, மருத்துவம், சமூகப் பணி ஆகிய துறைகளில் அளப்பரிய பங்களிப்பு செய்து, தேசக் கட்டுமானத்திற்குத் தொண்டாற்றி வருபவர்கள்.
இவ்வாறு
இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு அக்கறையுடன் தொண்டாற்றி வரும் கிறித்தவர்கள், தமிழ்நாட்டில் நடைபெற உள்ள எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சமூகக் கரிசனையுடன் பங்காற்ற
விழைகின்றனர். அந்நோக்கில், சிறுபான்மையினர் நலனையும், பரந்துபட்ட தமிழ்நாட்டின் நலனையும் முன்னிறுத்தி, கீழ்க்காணும் கோரிக்கைகளைக் கிறித்தவச் சமூகம் முன்வைக்கிறது.
1. சனநாயகம்,
சமத்துவம், சமூக நீதி, சமயச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சமதர்மம் இறையாண்மை போன்ற இந்திய அரசமைப்புச் சட்ட விழுமியங்களின் அடிப்படையில் ஆட்சி நடப்பதை உறுதி செய்யவேண்டும்.
2. தலித்
கிறித்தவர்களைப் பட்டியல் சமூகத்தினர் வகைப்பாட்டில் ஒன்றிய அரசு சேர்த்திட தமிழ்நாடு சட்டமன்றத்தின் மூலமும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமும் அழுத்தம் கொடுக்க வேண்டும். அதுவரை பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக, தலித் கிறித்தவர்களுக்கு 4.6 விழுக்காடு மாநில அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
3. மிகவும்
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியக் கிறித்தவர்களையும் சேர்க்க வேண்டும்.
4. சிறுபான்மைப்
பள்ளிகளுக்கு,
அ)
1991-லிருந்து நிறுத்தப்பட்டுள்ள மானியத்தை நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று வழங்க வேண்டும்.
ஆ)
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் அனைத்துச் சமூக நலத் திட்டங்களையும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
இ)
சிறுபான்மைப் பள்ளிகளுக்கான அங்கீகாரம், புதுப்பித்தல் ஆகியவற்றிற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும்.
5. சிறுபான்மையினர்
ஆணையம் மாவட்ட ஆய்வுகள் நடத்தும்போது, திரு அவைகளின் மறைமாவட்ட அமைப்புகளின் ஆலோசனைகளையும் பெறவேண்டும்.
6. உரிய
சான்றுகளுடன் சமர்ப்பிக்கப்படும் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்தவேண்டும்.
7. அரசின்
நிலத்தில் நெடுங்காலமாக உள்ள வழிபாட்டுத் தலங்களுக்குப் பட்டா வழங்கவேண்டும்.
8. கிறித்தவர்களுக்கான
கல்லறைத் தோட்டம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யவேண்டும். பல்சமய மக்கள் வாழும் ஊர்களில் அனைத்துச் சமூக மற்றும் சமயத்தவருக்கான சமத்துவக் கல்லறைத் தோட்டங்கள் அமைக்கவேண்டும்.
9. கருணை
இல்லங்கள், முதியோர் இல்லங்கள், கைவிடப்பட்டோர் இல்லங்கள் போன்ற கிறித்தவர்களின் அறப்பணிகளுக்கு அங்கீகாரமும் ஆதரவும் உதவிகளும் நல்கவேண்டும்.
10. பொது இடங்களில்
சிறுபான்மையினர் வழக்கமாக நடத்திவரும் சமய நிகழ்வுகளுக்கு, சமூக விரோதிகளின் எதிர்ப்பைக் காரணம் காட்டித் தடை விதிக்கக்கூடாது.
11. ஆலயப் பணியாளர்களுக்கு
உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் திரு அவைத் தலைவர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பதோடு, ஆலய நிர்வாகத்தில் தலையிடக்கூடாது.
12. கிறித்தவர்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப
தேர்தல்களில் வேட்பாளர்களை நிறுத்தவேண்டும். மேலும், அந்தந்தக் கிறித்தவச் சபைகளின் மக்கள்தொகைக்கு ஏற்ப வேட்பாளர்களைத் தேர்வு செய்யவேண்டும்.
13. தமிழ்நாட்டு விவசாயத்தின்
எதிர்காலத்தை வளர்த்தெடுக்க,
அ)
செறிவான விவசாய நிலங்களை வேளாண் மண்டலங்களாக அறிவிக்கவேண்டும்.
ஆ)
மரபார்ந்த இயற்கை விவசாயத்திற்கு ஊறுவிளைவிக்காத வகையில் எந்திரங்கள் பயன்பாட்டை அறிமுகப்படுத்தவேண்டும்.
இ)
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைப் பரவலாக்க வேண்டும்.
ஈ)
விவசாயக் கூலிகளுக்குப் பட்டா வழங்கி, வீடுகள் கட்டித் தரவேண்டும்.
உ)
நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள், சதுப்பு நிலக் காடுகள் போன்றவற்றைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சீமைக் கருவேல மரங்கள், சீமைப் பூண்டுகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
14. தமிழ்நாட்டின் மரபார்ந்த
தொழிலான பனைத் தொழிலைப் பாதுகாக்க,
அ)
பனை மரங்களின் எண்ணிக்கையை 50 கோடியாக உயர்த்தவேண்டும்.
ஆ)
பனை உற்பத்திப் பொருள்களை அரசே கொள்முதல் செய்யவேண்டும்.
இ)
பனைகளில் ஏறி பதநீர் எடுக்க ஏணிகள், சிறு மோட்டார் வண்டிகள், தொழிற்சாலைகளைத் தொடங்கி நவீனப்படுத்தவேண்டும்.
ஈ)
கள் ஓர் உணவுப் பானம் என ஏற்று, அதற்கான
தடையை நீக்கவேண்டும்.
உ)
மது, போதை ஒழிப்பை முன்னெடுக்கவேண்டும்.
15. தமிழ்நாட்டின்
பொருளாதார வளமான மீன்பிடித் தொழிலை வளர்க்க,
அ)
மீன்பிடித் தொழிலிலும், மீன் விற்பனையிலும் பெருமுதலாளிகளிடமிருந்து மீனவர்களைக் காப்பாற்றவேண்டும்.
ஆ)
மீன்பிடித் தடை, பேரிடர் காலங்களுக்குப் போதுமான உரிமைத்தொகை (உதவித்) வழங்கவேண்டும்.
இ)
மீனவர்களின் சிதைவுக்குள்ளான வீடுகளுக்கு மாற்றாக, பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டித் தரவேண்டும்.
ஈ)
இலங்கை இராணுவத்தினரின் அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.
16. தமிழ்நாட்டின்
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க,
அ)
சுற்றுச்சூழலுக்கு எதிரானத் திட்டங்களுக்கு மக்களின் கருத்துக்கேட்பைக் கட்டாயமாக்கவேண்டும்.
ஆ)
கனிம வளங்கள், மண், மலைகள் ஆகியவற்றைக் கொள்ளையிடுவதைத் தடுக்க வேண்டும்.
இ)
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக்கி, மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
17. இலஞ்சம்,
ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யவேண்டும்.
இரவு முழுவதும் பட்டாசு சத்தங்கள்! காலையும் அது தொடர்ந்தது. அன்று தீபாவளி. “அம்மா, நேத்தில இருந்தே கேட்டுட்டு இருக்கேன். பட்டாசு வாங்கக் காசு குடுமா” என்று நச்சரித்துக் கொண்டிருந்தான் அஜித். தன் பத்து வயது மகன் அஜித்திடம், கடையிலிருந்து வாங்கி வந்த காய்கறிகளை அருவாமனையில் அறுத்தவாறே, “அதான் நேத்தே பிஜிலி வெடி ஒரு பாக்கெட் வாங்கிட்டு வந்தேன்ல... அது எங்க?” என்று அதட்டல் தொனியிலேயே கேட்டாள் சாந்தி.
“அம்மா, அதெல்லாம் காலியாயிடுச்சு! எனக்கு யான வெடி வாங்கித்தாம்மா.”
சாந்திக்கு
என்ன சொல்வதென்று தெரியவில்லை. இறைச்சி வாங்கி வருவதாகச் சொல்லிச் சென்ற தன் கணவனை இன்னும் காணவில்லை என்பதே அவள் மனத்தை அரித்துக் கொண்டிருந்தது.
“டேய், அம்மாக்கிட்ட இவ்வளவு காசுதான் இருக்கு. இனி கேட்கக்கூடாது சரியா” என்று சொல்லிக்கொண்டே தன் மசாலா டப்பாவில் சேமித்து வைத்திருந்த நூறு ரூபாய் தாளை எடுத்து மகனிடம் கொடுத்தாள்.
“அம்மா, இதுக்கு இரண்டு யான வெடிதாமா கிடைக்கும். சரி கொடு” என்று மாமரத்தில் மாங்காய்களைத் துள்ளிப் பறிப்பதுபோல அந்த நூறு ரூபாய் நோட்டைப் பறித்துக்கொண்டு வெளியே பறந்தான் அஜித்.
தடபுடலென்று
அடுப்பில் சோறு கொதித்துக் கொண்டிருந்தது. காய்கறிகள் பொரியலுக்காகத் தயாரானது. இறைச்சிதான் பாக்கி. வீட்டுக்காரர் வந்தாரென்றால் அதுவும் தயாராகிவிடும். ஊரிலிருந்து தங்கையும் அவ புருஷனும் கிறிஸ்மசுக்கு
வருவதாகச் சொல்லியிருந்தார்கள். வரக்கூடிய நேரம்தான். அதுக்குள்ள எல்லாம் தயாராகிவிடும்’ என்று
தன் மனத்தில் சொல்லிக்கொண்டவாறே அடுப்பங்கரை கதவில் சாய்ந்துகொண்டு பட்டாசு வெடிச்சத்தத்திற்குப் பயந்து ஒடுங்கிப்போய் படுத்திருந்த தன் வீட்டு நாயைக் கவனித்துக்கொண்டிருந்தாள் சாந்தி.
‘அம்மா!’ என்று அலறல் சத்தத்தோடு கையைப் பிடித்துக்கொண்டே வீட்டிற்குள் ஓடிவந்தான் அஜித். அவன் வலது கைவிரல்கள் தீக்காயத்தால் பூத்திருந்தன. புதிய சட்டைத்துணி இரத்தத்தால் நனைந்திருந்தது. பட்டாசு வாங்கச் சென்றபோது யாரோ சில இளைஞர்கள் வீரியமான பட்டாசைக் கொளுத்தி அவன் மீது எறிந்ததாகவும், ஏதேச்சையாக அதைக் கையில் பிடிக்கும்போது அது வெடித்ததாகவும் அவன் அழுதுகொண்டே சொன்னது சாந்திக்கு மனத்தில் பெரும் வலியை ஏற்படுத்தியது. அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று வந்தாள். அவனிடமிருந்த நூறு ரூபாயும் கூடுதலாக இருநூறு ரூபாயும் செலவானது.
இவ்வளவு
நடந்திருந்தும் ஐந்நூறு ரூபாய் கொடுத்து கறி வாங்கி வரச்சென்ற கணவர் இன்னும் வீடு திரும்பாததிலிருந்தே அவர் நன்றாகக் குடித்துவிட்டு மாலைதான் வீடு வருவார் என்பதை சாந்தியால் யூகிக்க முடிந்தது.
கிறிஸ்துமஸ்
விருந்திற்காக ஊரிலிருந்து தங்கையும், அவ புருஷனும் சாப்பாட்டு
நேரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். மீதமிருந்த பணத்தை மருந்திற்கும் மருத்துவமனைக்கும் செலவு செய்தாகிவிட்டது. டப்பாக்களைத் தேடிப் பார்த்தும் ஒன்றும் கிடைக்காததால் பக்கத்து வீட்டு விஜி அக்காவிடம் கடன் வாங்கினாள். ஐந்நூறு ரூபாய்க்கு ஹோட்டலிலிருந்து பொரித்த கோழி வாங்கி வந்து அவர்களுக்குப் பரிமாறி எப்படியோ சமாளித்தாள்.
இனி
செலவு இல்லையென்று நினைத்துக் கொண்டிருந்தபோது, “அக்கா! சூப்பர் ஸ்டார் படம் இன்னைக்கு ரிலீஸ் ஆகியிருக்காம். பாத்திட்டு வரலாமா?” என்று கேட்டாள் சாந்தியின் தங்கை. ‘ஏழைகளுக்குத் திருவிழாக்கள் இல்லாமலேயே இருந்திருக்கலாம்’ என்று
சாந்திக்கு அன்று தோன்றியது.
குழந்தைகளையும்
குடும்பங்களையும் குறிவைத்துத் தாக்குகின்ற யானை வெடி இன்று சமூக ஊடகங்கள் எனச் சொல்லலாம். திறன்பேசியினை (Smart phone) குழந்தைகளின் கரங்களில் திணித்ததில் கொரோனா பெருந்தொற்றின் பங்கும் அதிகம் இருக்கின்றது எனலாம். கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில்தான் இணையவழிக் கல்வி என்ற போர்வையில் சிறார்கள் திறன்பேசியின் வழியாகக் கல்வியினை நுகரத்தொடங்கினர். இந்த நுகர்வு இணையம்வழிக் கல்வி என்று நின்றுவிடாமல் இணைய விளையாட்டு, இணைய நண்பர்கள், இணைய உணவுகள், இணைய வியாபாரம், இணைய சூதாட்டம் என்று விரியத்தொடங்கியது. இதனால் திறன்பேசியினைப் பயன்படுத்தும் சிறார் அதிகமாக இணையத்தைச் சார்ந்து இருப்பதால் திறனற்றக் கூட்டமாக உருவாகி வருகின்றனர்.
இப்பெரும்
உண்மையைக் கூர்ந்து கவனித்த சில நாடுகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் சிறாருக்குப் பல கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளன.
குறிப்பாக, ஆஸ்திரேலியா அண்மையில் டிக்டாக் (TikTok), இன்ஸ்டாகிராம்
(Instagram), யூடியூப்
(YouTube),
ஸ்நாப் சாட் (SnapChat) போன்ற தளங்களை 16 வயதிற்குட்பட்டவர்கள் பயன்படுத்துவதற்குத் தடை விதித்தது. அந்நாட்டின் தொடர்புத்துறை அமைச்சர் அன்னிக்கா வெல்ஸ் (Anika Wells) இது
பற்றிக் குறிப்பிடும்போது, “சமூக ஊடகங்கள் சிறார்களை இயங்குநிலை உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு (online purgatory) இழுத்துச் செல்கிறது”
என்று குற்றம் சாட்டுகிறார். மேலும், “சமூக ஊடகங்களை இயக்கும் நெறிப்பாட்டுமுறை (algorithm) சிறார்களின் நடத்தையில் போதை யூட்டியாக (behavioral cocaine) இருந்து
அவர்களின் முழுமனித வளர்ச்சியைப் பாதிக்கிறது” என்கிறார்.
பல்வேறு ஊடக அறிஞர்கள் மற்றும் இணையச் செயற்பாட்டாளர்கள் இதற்கு எதிர்வினையாற்றினாலும், சிறார்களின் பாதுகாப்பிற்காக ஒரு நாடு திட்டமிடுகிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியே.
ஆஸ்திரேலியாவைப்
போன்று இன்று பல நாடுகள் சமூக
ஊடகங்களைச் சிறார் பயன்படுத்துவதற்கு எதிராகச் சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கின்றன. டென்மார்க், சீனா, பிரான்ஸ், பிரிட்டன், மலேசியா, அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளும் சில வழிகாட்டுதல்களையும் சட்டங்களையும் சிறார்களை இணைய ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கக் கொண்டு வந்திருக்கின்றன.
அதிகமாக,
சமூக ஊடகங்களை நுகரும் சிறார்கள் அதிகமாக உளநலப் பாதுகாப்புகளை எதிர்கொள்கின்றனர். தங்கள் உடல் பற்றிய எண்ணத்தில் எதிர்கருத்துகளைக் கொண்டுள்ளனர். தங்களை
எப்போதும் இணைய உலக ஆளுமைகளோடு ஒப்புமைப்படுத்தித் தங்களைக் கீழ்த்தரமாகப் பார்க்கின்றனர். எனவே, இத்தகைய சமூக ஊடகத் தடை என்பது சிறார்களை நல்வழிப்படுத்தி, அவர்களை மனப்பிறழ்வுகளிலிருந்தும் தூக்கமின்மையிலிருந்தும் பாதுகாக்கும் என்கின்றனர் அறிஞர்கள்.
யானை வெடிக்கு ஆசைப்பட்டு திருவிழா மகிழ்ச்சி திவாலானது போல, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும்போது சிறார் தங்கள் கைகளை மட்டுமல்ல, தங்கள் அறிவையும் ஆற்றலையும் பாழ்படுத்திக்கொள்கின்றனர்.
(தொடரும்)
மத்திய அரசு ‘தேசியக் கல்விக் கொள்கையை’ நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டது. இக்கொள்கை இந்நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்லாது, அரசியல் சாசன அடிப்படைக்கும் குறிப்பாக, இந்நாட்டின் சமயச்சார்பின்மை, பன்முகத்தன்மை மற்றும் அதிகாரப் பகிர்விற்கும் விடப்பட்ட சவாலாக உள்ளது.
வேதக்கல்வியும் குருகுலமும்!
இந்திய
நாடு பன்முகத்தன்மை கொண்டது. பலவித கலாச்சாரங்கள், இனங்கள், மொழிகள், மதங்கள், வரலாற்றுப்
பின்னணிகள், மரபுகள் இந்நாட்டையும் மண்ணையும் செழுமைப்படுத்துகின்றன. இப்பன்முகத்தன்மையை
இக்கல்விக் கொள்கை மறுப்பதாக உள்ளது. வேதக்கல்வியையும், குருகுலக் கல்வி முறையையும்
இலட்சியக் கல்வியாக முன்னிறுத்துகிறது. பள்ளிகளை அருகிலுள்ள ஆசிரமங்களுடன் தொடர்புபடுத்த
முயல்கிறது.
அடிப்படையில்,
இத்தகைய கல்விமுறை சாதி அடிப்படையிலான வர்ணாசிரமத் தர்மத்தின் வழிபட்டது. மனனக் கல்வியே
இதன் ஆன்மா. அறிவு வளர்ச்சியிலும் ஆராய்ச்சியிலும் புதிய கண்டுபிடிப்புகளிலும் அக்கறை
கொண்ட எவரும் இதனை ஏற்க இயலாது. எனவேதான் நமது தமிழ் நாடு அரசு, இந்திய அரசியல் சாசனம்
கூறியபடி அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில்,
நமது மாநிலத்திற்கெனத் தனியாகக் கல்விக் கொள்கை வகுக்க முயல்கிறது. இது மனமுவந்து வரவேற்கத்தக்க
நடவடிக்கை.
சமஸ்கிருதமயமாக்கல்
தேசத்தின்
கலாச்சார ஒற்றுமைக்கும், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கும் சமஸ்கிருதம் சிறப்புப் பங்காற்றியுள்ளது
என்று இக்கொள்கை குறிப்பிடுகிறது. பள்ளி, கல்லூரிகளில் மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைத்
திணிக்கிறது. சமஸ்கிருதம் ஒரு வழக்கொழிந்த மொழி. இந்திய மொழிகள் அனைத்தும் அதிலிருந்து
தோன்றியவை அல்ல; நம் தமிழே திராவிட மொழிகளின் தாய். கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு
போன்ற திராவிட மொழிகள் தமிழிலிருந்தே தோன்றியவை.
சமஸ்கிருத
எதிர்ப்பின் ஊடாகவே தமிழ் வளர்ந்துள்ளது. கால்டுவெல், மறைமலையடிகள், உ.வே.சா., க. அப்பாத்துரை,
தேவநேயப் பாவாணர் போன்றோரின் ஆய்வுகள் இதற்குச் சான்றாகும். தமிழுக்குச் சமஸ்கிருதத்துடன்
ஒட்டுமில்லை, உறவுமில்லை. இவ்வுண்மைகளை இக்கல்விக் கொள்கை இருட்டடிப்பு செய்கிறது.
கலாச்சார ஒற்றுமை வேண்டும், அதற்குச் சமஸ்கிருதம் கற்கவேண்டும் என்கிறது. இது இந்தியத்
தேசியத்திற்கு எதிரானது.
நாட்டுப்பற்று
என்பது வேறு; தேசியவாதம் (nationalism) என்பது வேறு. ஒரு குறிப்பிட்ட இனம்,
மொழி, கலாச்சார அடிப்படையிலான தேசியவாதம் உண்மையிலிருந்து விலகிச் செல்ல வாய்ப்புண்டு.
ஹிட்லரின் ஜெர்மானிய ஆரிய தேசியவாதம் பல கோடி மக்களைக் கொன்று குவித்தது. பன்முகப்பட்ட
இந்தியாவில் ஒற்றைத் தேசியவாதத்திற்கு இடமில்லை. அத்தகைய தேசிய இறுமாப்புவாதத்தை (Hindu nationalism) இக்கல்விக் கொள்கையில் காணமுடிகிறது.
இது இந்நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லவே உதவும். இதனை இந்தியர்கள் குறிப்பாக,
தமிழர்கள் ஏற்க இயலாது.
யோகா கல்வியை நிபந்தனையாக்குதல்
இக்கல்விக்கொள்கை
யோகாவைக் கட்டாயப்படுத்துகிறது. யோகா பாடத்தைப் பள்ளி அங்கீகாரத்தின் நிபந்தனையாக்குகிறது.
அதன் முன்னுரையில் பதஞ்சலி முனிவர் போற்றப்படுகின்றார். யோகாவைத் தன்னார்வமாகவும்,
ஒரு பயிற்சியாகவும் மேற்கொள்வதை நமது பள்ளிகள் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், கட்டாயப் பாடமாய்
அங்கீகார நிபந்தனையாக (Condition of Recognition)
ஆக்குவதை நாம் ஏற்க முடியாது.
மாணவர்களைத் தரம் பிரிக்கும்
கல்வி
இக்கல்விக்கொள்கை,
பத்தாம் வகுப்பில் மாணவர்களை இரண்டாகத் தரம் பிரிக்க முயல்கிறது. கணிதம், அறிவியல்,
ஆங்கிலம் இவற்றில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை உயர்கல்விக்குரியவர்கள் எனவும்,
பின்தங்கும் மாணவர்களைத் தொழில் கல்விக்குரியவர்கள் எனவும் வேறுபடுத்தி, இருபிரிவினருக்கும்
இருவேறு தேர்வுகளை நடத்த முற்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில், வசதி வாய்ப்புள்ள
மாணவர்கள் உயர்கல்விக்கும், வசதி மறுக்கப்பட்டவர்கள் தொழில்கல்விக்கும் தள்ளப்படுவர்.
ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இச்சமூக அமைப்பில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள்
பின்தள்ளப்படுவர். சமூக அடிப்படையில், பலவிதமான கல்விக்கூடங்கள் செயல்படும் சூழலில்,
இத்தகைய தரம் பிரித்தல் கிராமப்புற ஏழை மாணவர்களை வெகுவாகப் பாதிக்கும். இது மீண்டும்
வர்ணாசிரமக் குலக்கல்விக்கும், குலத்தொழிலுக்கும் வழிகோலும். சமூக நீதியில் அக்கறை
கொண்ட எவரும் இதனை ஏற்க இயலாது.
கிராமப் பள்ளிகளுக்கு
மூடுவிழா
தற்போது
நடைமுறையிலுள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் - 2009, குழந்தைகளின் குடியிருப்பிலிருந்து
மூன்று கி.மீ. தூரத்திற்குள் தொடக்கப்பள்ளி அமைக்க முற்படுகிறது. ஆனால் இப்புதியக்
கல்விக்கொள்கை இதனை மறுக்கிறது. மாறாக, மாணவர்களின் எண்ணிக்கை அல்லது பள்ளியின் உள்கட்டமைப்பு
குறைவுபடும் பட்சத்தில், அப்பள்ளிகளை மூடவும், அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்கவும் வேண்டுமென்கிறது.
இது கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும். பள்ளிகளை மூடத்
தடையாக உள்ள இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தைத் திருத்தவேண்டுமெனவும் இக்கொள்கை
பரிந்துரைக்கிறது. அத்துடன் பன்னாட்டு நிறுவனங்களின் கல்விக்கூடங்களை நாடு முழுவதும்
நிறுவிட இக்கல்விக்கொள்கை கதவைத் திறப்பதோடு, பல்லாயிரம் ஏழைப் பள்ளிகளுக்கு மூடுவிழா
நடத்தவே இக்கொள்கை முனைகிறது.
ஆசிரியர்களை எடுபிடிகளாக்கும்
கல்வி
இக்கொள்கையின்படி,
மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறவேண்டும். ஐந்தாண்டுகளுக்கு
ஒருமுறை திறனறியும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இல்லாவிடில், அவர்களுக்குப் பதவி
உயர்வும், ஊதிய உயர்வும் மறுக்கப்படும். எனவே, இறுதிவரை அவர்களின் பணியில் நிச்சயமற்றத்தன்மை
ஏற்படும். பள்ளிகளின் முதல்வர்கள் பணிமூப்பு அடிப்படையிலன்றி, திறமை மற்றும் தனிப்பயிற்சி
அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர். எனவே, தலைமையாசிரியரின் புதிய பணியிடங்கள் வழக்கமான
முறையில் நிரப்பப்படாது. மாணவர்கள் முறையாகத் தேர்ச்சி பெறாவிடில், ஆசிரியர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும். வசதி படைத்த பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமும்,
ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதமும் இந்நாட்டில் ஒன்றாக
இருக்க வாய்ப்பில்லை. எனவே, ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது ஏழைகள் படிக்கும்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை வெகுவாகப் பாதிக்கும். மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின்
அதிகாரத்திற்குட்பட்ட கல்வித் தீர்ப்பாயங்கள் (Central
Educational Tribunals)
நிறுவப்படும். இவை பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பலவற்றில் தீர்ப்பு வழங்கும்.
ஒட்டுமொத்தமாக, ஆசிரியர்களின் சுதந்திரச் சிந்தனை, கற்பித்தல் திறன் இவற்றை இச்சூழல்
வெகுவாகப் பாதிக்கும். கல்விக்குத் தொடர்பற்ற இந்தியக் கல்விப்பணி (Indian Education Service)
என்கிற அதிகார வர்க்கத்தின் கீழ் ஆசிரியர்கள் பணிசெய்ய நேரிடும். சுருக்கமாக, அறிவைத்
தேட வேண்டிய ஆசிரியர்கள், நிர்வகிக்கப்படும் பணியாளர்களாய் மாறுவர்.
அதிகாரத்தை மையப்படுத்தும்
கல்விமுறை
1975
வரை கல்வி மாநிலப் பட்டியலில் மட்டுமே இருந்தது. நெருக்கடி நிலையின்போது, இந்திராகாந்தி
அம்மையார் அதனைப் பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்றார். அதன்பின் மெல்ல மெல்ல அதில்
ஒன்றிய அரசு அதிகக் கட்டுப்பாடு செலுத்தத் தொடங்கியது. இருப்பினும், பாடத்திட்டம் முழுவதும்
இதுவரை மாநில அதிகாரத்திற்கே உட்பட்டுள்ளது. இப்புதிய கொள்கை, மாநிலத்தின் இந்த அதிகாரத்தைப்
பறிக்கின்றது. பள்ளிகளிலே கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் இவற்றிற்குத் தேசியப்
பாடத்திட்டத்தைக் கொண்டுவர முயல்கிறது. அந்தந்த மாநிலங்களின் தனித்தன்மைக்கேற்ப பாடத்திட்டங்கள்
தற்போது அமைகின்றன. இப்பன்முகத்தன்மையை உடைத்து, ஒருபடித்தான கல்வியை இந்தியா முழுவதும்
கொண்டுவர இக்கொள்கை முனைகிறது. இவை தவிர கல்வி நிர்வாகம் முழுவதையும் ஒன்றிய அரசின்
கட்டுப்பாட்டில் கொண்டுவர இக்கொள்கை முயல்கிறது.
அதிலும்
கூடுதலாக, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை நாடு முழுவதும் ஒருபடித்தாக
நடத்த இது பரிந்துரைக்கிறது. அனைத்து ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளையும் தேசிய அளவில்
கட்டுப்படுத்த முயல்கிறது. தேசியக் கல்வி ஆணையம் என்ற பெயரிலும், இந்தியக் கல்விப்
பணி என்ற பெயரிலும் அதிமேதாவிகள் சிலர் மாநில அதிகாரங்களின் அனைத்து மட்டங்களிலும்
குறுக்கீடு செய்ய வழிவகுக்கிறது. இவ்வாறு மாநில அரசின் அனைத்து அதிகாரங்களையும் இக்கல்விக்கொள்கை
பறிக்க முயல்கிறது. இதனால் அரசியல் சாசன அடிப்படையிலான மாநிலங்களின் அதிகாரப் பரவலை
இக்கொள்கை கேலிப் பொருளாக்குகிறது.
சிறுபான்மை அடையாளங்களைச்
சிதைக்கும் கல்விக்கொள்கை
இக்கல்விக்கொள்கையில்
சிறுபான்மையினரைப் பற்றியோ, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றியோ,
அவர்களின் அரசியல் சாசன உரிமைகள் பற்றியோ எந்த விவாதமும் கொள்கையும் இல்லை. மாணவர்களின்
கல்வி உதவித்தொகை பற்றிக் குறிப்பிடும்போதுகூட, ‘பொருளாதார அடிப்படையில் பிற்பட்டவர்கள்’ என்றே குறிப்பிடுகிறது. இவ்வாறு சாதி அடிப்படையிலான சமூகத்தின்
பிற்பட்டத்தன்மையைக் கருத்தில் கொள்ள இக்கொள்கை மறுக்கிறது.
மேலும்,
சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் அரசியல் சாசனப் பாதுகாப்பை இது பொருளற்றதாக்குகிறது.
பிரமதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள்
மீது இட ஒதுக்கீட்டைத் திணிக்க முயல்கிறது. பள்ளி மேலாண்மை குழுக்களை (School management
Committee) ஏற்படுத்தி,
சிறுபான்மைப் பள்ளிகளில் அரசியல் குறுக்கீட்டிற்கு வழிவகுக்கிறது. சிறுபான்மைக் கல்வி
நிறுவனங்கள் அவர்களின் கலாச்சாரம் மற்றும் தத்துவத்தைப் பிரதிபலிக்கும் நிறுவனங்களாகும்.
அவற்றில் யோகா, சமஸ்கிருதம், வேதக்கல்வி போன்றவற்றைப் புகுத்தி, சிறுபான்மைக் கல்வி
நிறுவனங்களின் அடையாளங்களை இக்கல்விக்கொள்கை சிதைக்க முயல்கிறது. இது அரசியல் அமைப்புச்
சட்டத்தின் அடிப்படைக்கே எதிராக உள்ளது.
108 – இதன் ஆழமான பொருள்
2005-ஆம் ஆண்டிலிருந்து
இந்தியா முழுவதும் ‘108’ என்ற எண் பரவலாக அறியப்பட்டு வருகிறது. இது அவசர மருத்துவச் சேவையுடன் தொடர்புபடுத்தப்பட்டதால் முக்கியத்துவம் பெற்றது. 2005, ஆகஸ்டு மாதம் கிறித்தவரான ஆந்திரப் பிரதேச மேனாள் முதலமைச்சர் திரு. ஒய்.எஸ். இராஜசேகர ரெட்டி அவர்களின் ஆட்சிக் காலத்தில், அவசர மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (EMRI) இணைந்து ‘108 ஆம்புலன்ஸ்’ சேவையைத்
தொடங்கியது. அதன் பின்னர், இந்தியாவின் பல மாநிலங்களில் 108 அவசர மருத்துவ
எண்ணாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில்
இச்சேவை 2008-இல் மதுரையில் அன்றைய முதலமைச்சர் திரு.மு. கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அனைவருக்கும் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கச் செய்வதில் முக்கியமான படியாக அமைந்தது.
நடைமுறை
முக்கியத்துவத்தைத் தாண்டி ‘108’ என்ற எண்ணுக்கு ஆன்மிக அர்த்தமும் உண்டு. பாரம்பரியமாக இது ‘தேவதூதர் எண்’ எனக் கருதப்படுகிறது. இது இறைவழிகாட்டுதல், ஆன்மிக வளர்ச்சி மற்றும் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுவதைச் சுட்டிக்காட்டுகிறது.
இந்த
அவசர எண் நாம் ஒவ்வொருவரும் நவீனகால நல்ல சமாரியர்களாக மாறி, துன்புறுவோருக்கு உதவ அழைக்கிறது. இது இயேசுவின் வார்த்தைகளை எதிரொலிக்கிறது: “நோயாளிகளை நலமாக்குங்கள்;… நீங்கள் இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்”
(மத்தேயு 10:8). இது பாகுபாடின்றி கருணையுடன் உயிர்களைக் காக்கும் அவசரச் சேவைகளின் பணியோடு முழுமையாக ஒத்திசைக்கிறது.
நோயுற்றோர் உலக
நாள்
துன்புறுவோரை
ஆதரித்து மதிப்பளிக்கும் வகையில் திரு அவை ஒவ்வோர் ஆண்டும் நோயுற்றோர் நாளைக் கொண்டாடுகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் நோயுற்றோருக்கு உறுதி அளிக்கிறது:
“நீங்கள் தனியாகவோ, கைவிடப்பட்டவர்களாகவோ, பயனற்றவர்களாகவோ இல்லை. நீங்கள் கிறிஸ்துவால் அழைக்கப்பட்டவர்கள்; நீங்கள் அவரது உயிருள்ள, வெளிப்படையான உருவம்.”
வரலாறும் முக்கியத்துவமும்
1992-ஆம் ஆண்டு
திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் நோயுற்றோர் உலக நாளை நிறுவினார். அக்காலத்தில் அவரே பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது திருத்தூதுக் கடிதத்தில், ‘துன்பம் கிறிஸ்துவுடன் இணைக்கப்படும்போது மீட்புப் பொருள் பெறுகிறது’ என்று போதித்தார்.
இந்த
நாள் பிப்ரவரி 11 அன்று கொண்டாடப்படுகிறது. இது லூர்து அன்னைப் பெருவிழாவாகும்; அங்கு புனித பெர்னதெத் சூபிரூ அவர்களுடன் தொடர்புடைய குணமளிப்பு மற்றும் நம்பிக்கையின் தலம் உள்ளது. முதல் நோயுற்றோர் உலக நாள் 1993-ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. குறிப்பிடத்தக்க வகையில், 2013, பிப்ரவரி 11 அன்று திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்கள் உடல்நலக் குறைவால் தனது பதவியைத் துறப்பதாக அறிவித்தார்.
34-வது நோயுற்றோர் உலக
நாள்
(2026)
2026, பிப்ரவரி 11 அன்று
34-வது நோயுற்றோர் உலக நாள் சிலிக்லாயோ நகரில் கொண்டாடப்படும். இது இலத்தீன் அமெரிக்காவுடன் திரு அவையின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.
நல்ல
சமாரியரின் எடுத்துக்காட்டால் ஈர்க்கப்பட்டு, கிறித்தவர்கள் துன்புறுவோரின் அருகில் ‘நிற்க, பராமரிக்க,
சேவை
செய்ய’ அழைக்கப்படுகிறார்கள்.
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் இந்த ஆண்டின் கருப்பொருளாக ‘சமாரியரின் இரக்கம்: மற்றவரின் வலியைத் தாங்கி அன்பு செய்வது’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார். இது உண்மையான அன்பு, கனிவு, நெருக்கம் மற்றும் இரக்கமிக்கப் பராமரிப்பில் வெளிப்படுகிறது என்பதை நினைவூட்டுகிறது.
‘Dilexi Te’- ஏழைகளின்
மீதான
அன்பு
பற்றிய
போதனை
‘ஏழைகளின் மீதான அன்பு பற்றிய போதனை’(Dilexi Te) என்ற சுற்றறிக்கையின் 49-52 பதிவுகளில், திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் நோயுற்றோர் மற்றும் துன்புறுவோர் பற்றிய நான்கு ஆழமான கருத்துகளை முன்வைக்கிறார்:
1. துன்புறும் கிறிஸ்துவின் உடலைத் தொடுதல்
நோயுற்றோரைப் பராமரிப்பதில் கிறித்தவ இரக்கம் வெளிப்படுகிறது. அவர்களைச் சந்தித்து, ஆறுதல் அளித்து, சேவை செய்வது வெறும் தர்மம் அல்ல; அது நம்பிக்கையின் செயல். துன்புறுவோரைப் பராமரிக்கும்போது நாம் கிறிஸ்துவையே தொடுகிறோம்.
2. ‘என் சகோதர சகோதரிகளே,
நன்மை
செய்யுங்கள்’
புனித
இறை யோவான் மற்றும் புனித கமில்லஸ் டி லெல்லிஸ் ஆகியோர்
தங்கள் வாழ்வை நோயுற்றோருக்காக அர்ப்பணித்தனர். புனித கமில்லஸ், ஒரு தாய் தனது ஒரே குழந்தையைப் பேணும் மென்மையுடன் நோயுற்றோருக்குச் சேவை செய்ய அழைத்தார்.
3. இரக்கத்தின் தொடுதல்
பல
மகளிர் சபைகள் மருத்துவப் பணியில் முக்கியப் பங்கு வகித்தன. அவர்கள் நோயுற்ற ஏழைகளுக்கு ஆறுதல், சுகாதாரம், மருந்து மற்றும் மனித மாண்பை வழங்கினர். புனித லூயிஸ் டி மரில்லாக் இந்த
இரக்கமிக்கப் பராமரிப்பை ‘முதல் மருந்து’ என்று அழைத்தார்.
4. இயேசுவின் மிகவும்
மறைந்த
முகம்
இன்றும்
கத்தோலிக்க மருத்துவமனைகள், மருத்துவ நிலையங்கள் மற்றும் பணித்தளங்கள் கிறிஸ்துவின் குணமளிக்கும் பணியைத் தொடர்கின்றன. இயேசு கூறினார்: “நான் நோயுற்றிருந்தேன்; நீங்கள் என்னைச் சந்தித்தீர்கள்” (மத்
25:36). திரு அவை துன்புறுவோரின் அருகில் மண்டியிடும்போது, தனது உண்மையான அழைப்பை நிறைவேற்றுகிறது என்று திருத்தந்தை லியோ நினைவூட்டுகிறார்.
உலக
நோயுற்றோர் நாள் நம்மை ஆழமான இரக்கம், சேவை மற்றும் ஒற்றுமைக்கு அழைக்கிறது. நோயுற்றோரின் மாண்பை இறைவனின் பிள்ளைகளாக மதித்து, அவர்களைப் பிரார்த்தனை, பராமரிப்பு மற்றும் கனிவுடன் அணுக அழைக்கிறது. இறைவாக்கினர் எசேக்கியேல் கூறுகிறார்: “காணாமல் போனதை நான் தேடுவேன்; வழிதவறியதைத் திரும்ப அழைத்து வருவேன்; காயமடைந்ததைக் கட்டுப்போடுவேன்; பலவீனமானதை வலுப்படுத்துவேன்” (எசே
34:15-16). கிறிஸ்துவையும்
நல்ல சமாரியரையும்போல் நாமும் குணமளிப்பு, நம்பிக்கை மற்றும் அன்பின் கருவிகளாக மாறுவோமாக!