news
சிறப்புக்கட்டுரை
நவீன உலகின் மிகப்பெரிய புனிதை!

புனித குழந்தை இயேசுவின் தெரேசா நூற்றாண்டு விழா வாழ்த்துகள்!

புனித குழந்தை தெரேசாவைப் புனிதராக 1925-ஆம் ஆண்டு உயர்த்திய திருத்தந்தை பதினொன்றாம் பயஸ் அவர்கள், அவருடைய மறைபரப்புப் பணி ஆர்வத்தைக் குறிப்பிட்டு, அவருடைய செபம், தியாகம், துன்பம் மற்றும் வேதனை முழுவதையும் மறைபரப்பு நாடுகளுக்காக அர்ப்பணித்தார். ஆகவேதான் மறைபரப்பு நாடுகளுடைய பாதுகாவலியாக இருக்கின்றார் என்றார். புனித குழந்தை இயேசுவின் தெரேசா மறைவல்லுநர் மற்றும் மறைபரப்பு நாடுகளின் பாது காவலியாகத் திரு அவையை இன்று அலங்கரிக்கின்றார்.

சிறு வழி ஆன்மிகத்தின் வழியாக இறைமக்களின் உள்ளங்களை ஆட்கொண்டிருக்கிறார். ஆன்மாக்களை மீட்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் மறைபரப்பை ஆற்ற வேண்டும் என்கிற பேராவல் கொண்டிருந்தார். அவர் லிசியே நகர் கார்மேல் மடத்து நான்கு சுவர்களுக்குள் மறைந்து வாழ்ந்திருந்தாலும், அவரது உள்ளமானது மறைபரப்பு நாடுகளின் மறைப்பணி யாளர்களுடைய பணி வாழ்வுக்காகச் செபிப்பதிலேயே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது.

ஆண்டவர் இயேசுநான் தாகமாய் இருக்கிறேன்என்று கூறினார். அந்தத் தாகம் தண்ணீருக்கான தாகம் அல்ல; மாறாக, ஆன்மாக்கள் மீட்கப்பட வேண்டும் என்பதற்கான தாகம் என்று உணர்ந்து செபித்தார்.

புனித குழந்தை இயேசுவின் தெரேசாவை நவீன உலகின் மிகப்பெரிய புனிதை என்றார் திருத்தந்தை 12-ஆம் பயஸ். அவர் குழந்தை தெரேசாவைப் பற்றிக் கூறும்போது, “கடல் கடந்து சென்று ஆண்டவர் இயேசுவை அவர் போதிக்கவில்லை; மாறாக, அவருடைய மறைபரப்பு ஆர்வத்தால், இறையன்பு தீயால் பற்றியெரிந்து தன்னையே முழுவதுமாக ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக ஒப்புக்கொடுத்தாள்என்கின்றார். புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் அவரைத் திரு அவையின் மறைவல்லுநராக அறிவித்தபோது, புனித குழந்தை இயேசுவின் தெரேசா அகில உலகிற்கும் புனிதத்தைப் போதிக்கின்ற பேராசிரியர் என்றார். அவள் திரு அவையின் மறைபொருளைத் திரு அவையினுடைய ஒற்றுமையையும்  உள்ளுறைதலையும் சிறப்பாக வாழ்ந்தார். அதேபோல மறைபரப்பு நாடுகளில் வாழ்கின்ற மறைபரப்புக் குருக்களுக்குச் சகோதரியாகவும், அவர்களுடைய பணிகளில் தனது செபத்தின் வழியாகத் தனது தியாகத்தின் வழியாகக் காத்தாள் என்றார்.

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித குழந்தை இயேசுவின் தெரேசாவைப் பற்றிக் கூறு கின்றபோது திரு அவையின் மறைபோதகப் பணி என்பது நம்முடைய திட்டங்களாலும் நம்முடைய நிறுவனங்களாலும் அல்ல; மாறாக, நம்முடைய இதயங்கள் இறையன்பால் பற்றியெரிய வேண்டும். அதேபோல் நம்முடைய இதயங்கள் நற்செய்தியின் விழுமியங்களால் பற்றியெரிய வேண்டும் என்று புனித குழந்தை இயேசுவின் தெரேசா நமக்குப் பயிற்றுவிக்கின்றார் என்றார்.

புனித குழந்தை இயேசுவின் தெரேசாவிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை

1. குழந்தை உள்ளம்:குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுஎன்பது முதுமொழி. வாழ்வில் வளர்ந்தாலும், மாற்றங்கள் நிகழ்ந்தாலும் குழந்தை உள்ளத்தை இழக்காமல் இருக்கின்றவனே சிறந்த மனிதன் என்பது சீனப் பழமொழி. குழந்தை உள்ளத்தைக் கொண்டு அசைக்க முடியாத நம்பிக்கையை இறைவன்மீது கொண்டிருந்தவள் புனித குழந்தை இயேசுவின் தெரேசா.

2. சிறுவழி ஆன்மிகம்: புனித குழந்தை இயேசுவின் தெரேசா சிறுவழி ஆன்மிகம் வழியாக இறையன்பைத் தியாகத்தில் வாழ்ந்துகாட்டுவது, சிறு சிறு செயல்பாடுகளில் இறையன்பை வெளிப்படுத்துவது, துன்பத்தின் மத்தியிலும் இறைவன்மீது நிறைவான நம்பிக்கை கொண்டிருப்பது, செபவாழ்வைக் கைவிடாமல் இருப்பது மற்றும் பிறரைக் குறைகளுடன் ஏற்றுக்கொள்வது சிறுவழி ஆன்மிகமாகும்.

3. மறைப்பணியார்வம்: புனித குழந்தை இயேசுவின் தெரேசாவின் மறைப்பணியார்வம் நற்செய்திப் பணியாற்றும் குருக்களுக்காகச் செபிப்பது, நற்செய்தி அறிவிப்புப் பணியில் பேரார்வம் காட்டுவது, நாம் பெற்றுக்கொண்ட ஒப்பற்ற செல்வமாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறியாத ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் அறிவிக்க வேண்டும் என்று பேரார்வம் கொண்டிருந்தார்.

4. புனித வாழ்வு: புனித குழந்தை இயேசுவின் தெரேசாவின் குடும்பம் தந்தை புனித லூயிஸ் மார்ட்டின், தாய் புனித செலிக்கெரின் இருவரும் இறையன்பால், நம்பிக்கையால், செபவாழ்வால், இறைதிருவுளத்தை நிறைவேற்றியவர்கள். ஆகவே, புனித வாழ்வுக்கு இந்தப் புனிதர்கள் முன்மாதிரியாக இருக்கின்றார்கள். இறைவார்த்தையைத் தியானித்து வாழ்வாக்குவதற்குச் சான்றுபகர்கின்றார்கள். புனித குழந்தை இயேசுவின் தெரேசா புனிதராக உயர்த்தப்பட்ட நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடுகின்ற நாம், இக்குடும்பத்தின் முன்மாதிரிகையை நம் குடும்ப வாழ்வில் பின்பற்ற அழைக்கப்படுகிறோம். விண்ணகத்திலிருந்து ரோஜா மலர்களை அருள்மாரியாக புனித குழந்தை இயேசுவின் தெரேசா நம்மீது பொழிவாராக! நாம் அவரது சிறுவழி ஆன்மிகம்வழி தொடர உறுதி ஏற்போம்.

புனிதராக வாழ வயது வரம்பில்லை! நிறைவான வாழ்வுக்குச் சிறுவயதும் தடையில்லை! இறைவார்த்தை வழிநின்று வாழ்ந்தால் போதும், நீங்களும் நல்ல மனிதராகலாம்! பார் போற்றும் புனிதராகலாம்! புனித குழந்தை இயேசுவின் தெரேசா நூற்றாண்டு விழா நல்வாழ்த்துகள்!

news
சிறப்புக்கட்டுரை
யார் இந்தப் புனிதை? (தூய குழந்தை இயேசுவின் தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா)

1873-இல் பிறந்து, 15 வயதில் கார்மேல் துறவற சபையில் நுழைந்து, 9 ஆண்டுகள் மட்டுமே துறவியாக வாழ்ந்து, 24 வயதிலே 1897-இல் இறைவனடி சென்ற இளங்கன்னி, சிறுமலர், சின்ன ராணி! பெற்றோர், உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்கள் பாசமழையில் நனைந்து, அன்பிலே குளித்து, இறை ஒன்றிப்பில் இணைத்துக்கொண்ட குழந்தை இயேசுவின் மற்றும் திருமுகத்தின் தெரேசா!

லூயிஸ்-செலியே இவர்களின் புதல்வியாய் உதித்து, தன் புனிதத்தின் வழியாகத் தன் பெற்றோரையே தூயவர்களாக்கிக் குடும்பத்தையே புனிதமாக்கிய  இதய ராணி! தன் மறைந்த தியான வாழ்வால் உலகிற்கே நற்செய்தி அறிவித்து மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலியாகி, தன் சிறுவழி ஆன்மிகத்தால்திரு அவையின் மறை வல்லுநர்என்று திரு அவையின் இதயமாக உலகம் போற்றும் நாயகி!

இவர் ஒரு கார்மேல் துறவி. பிரான்ஸ் நாட்டிலே லிசியு நகர் கார்மேல் மடத்தில் வாழ்ந்தவர். தூய தெரேசாவின் பிறப்பின் 150-ஆம் ஆண்டு (2023), அருளாளர் பட்ட 100-ஆம் ஆண்டு (2023) மற்றும் புனிதர் பட்ட 100-ஆம் ஆண்டு (2025) என உலகம் முழுவதும் கார்மேல் துறவற சபைகள் இணைந்து அகமகிழ்ந்து கொண்டாடுகின்றன.

பிறப்பு: ஜனவரி 2, 1873

அருளாளர் பட்டம்: ஏப்ரல் 29, 1923

புனிதர் பட்டம்: மே 17, 1925

அகில உலகக் கார்மேல் துறவற சபைகள் கடந்த மூன்று வருடங்களாகக் கொண்டாட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் இதர நிகழ்வுகள் வழியாக, தூய தெரேசாவின் ஆன்மிகத்தைச் சிறப்பான விதத்தில் பறைசாற்றக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.

இந்தியக் கார்மேல் குடும்பமும் நம் இந்திய நாட்டில் பல இடங்களில் கொண்டாடி மகிழ்கின்றது. வடக்கு, தெற்கு என்று இந்தியாவின் இரு பகுதிகளிலும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதன் சிறப்பம்சம் கார்மேலின் துறவற சபைகள் ஒன்றாக இணைந்து ஒரே குடும்பமாகக் கொண்டாடிச் சான்றுபகர்தலாகும்.

தமிழ்நாட்டிலுள்ள கார்மேல் துறவற சபைகள்

Order of Discalced Carmelites (OCD)

Discalced Carmelites Nuns (OCD)

Congregation of Teresian Carmelites (CTC)

Congregation of the Mother of Carmel (CMC)

Carmelites of Mary Immaculate (CMI)

Carmelite Sisters of St. Teresa (CSST)

Apostolic Carmel (AC)

Institute of Our Lady of Carmel, Istituto di Nostra Signora del Carmelo (INSC)

Secular Order of Discalced Carmelites (OCDS)

தமிழ்நாட்டிலும் கார்மேலின் துறவற சபைகள் அனைத்தும் ஒன்றுகூடி, இணைந்து திட்டமிட்டு இந்த நூற்றாண்டு விழாவை, தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சி மாநகரில் கொண்டாடுகிறோம். புனிதம் அனைவருக்கும் சொந்தம். அன்பு ஒன்றே வாழ்வாக வேண்டும், பணியாக வேண்டும். தூயவராகிவிடலாம்; சிறிய செயல்கள் வழியாகப் பெரிய நிலையை அடைந்து விடலாம் என்பதே சிறுமலரின் சிறுவழியின் சிறப்புச் செய்தியாகும்.

குழந்தை இயேசுவின் தூய தெரேசாவைக் கொண்டாடுவோம்! புகழ்வோம்!!

news
சிறப்புக்கட்டுரை
ஒரு100000 அப்பு... ஒரு100000 (கண்டனையோ, கேட்டனையோ! - 37)

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ground-breaking encycli cal’ - ‘Laudato si’ திருமடல் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவுபெறுவதைக் கொண்டாடும் வகையில், நான் தற்போது முதன்மை ஆசிரியராகப் பணிபுரியும் ‘Radio Veritas Asia’ என்கிற ஆசியக் கத்தோலிக்க டிஜிட்டல் தளம், ஒரு மாபெரும் குறும்படப் போட்டியை அறிவித்திருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அவசரத்தை ஆசிய மக்கள் எல்லாரும், குறிப்பாக, ஆசிய இளைஞர்கள் உணரவேண்டும் என்பதே இப்போட்டியின் நோக்கம்.

பருவநிலை ஏற்கெனவே டாஸ்மாக்கின்அன்பான வாடிக்கையாளர் பெருமக்கள்போல தடுமாறுவதைப் பார்க்கிறோம். டிசம்பரில் வெயில் கொளுத்துகிறது. பையன்கள்கிறிஸ்மஸ் தாத்தா டிரஸ் போடமாட்டேன்என்று தகராறு செய்கிறார்கள். மே மாதத்தில் வெள்ளம் வந்து, விவசாயிகளின் திட்டங்களைக் கலைத்துப் போடுகிறது. நான் முன்பு இருந்த பங்கில் ஒரு பாட்டி, “இந்த வானத்துக்குப் புத்தி கெட்டுப்போச்சு. அவ்வளவுதான் நான் சொல்வேன்என்பார். ஒரு காலத்தில் வெறும் கணிப்பாக இருந்த சூழ்நிலைப் பேராபத்துகள் இன்று ஏறக்குறைய நம் வீட்டு வாசற்படிக்கே வந்துவிட்டன.

Time is ticking! நான்கூட நினைத்திருக்கிறேன்எப்படியும் இதுபோல பெரிய விஷயங்கள் நடப்பதற்கு முன், நம் காலம் முடிந்துவிடும்என்று. அதற்கு வாய்ப்பில்லை என்று இப்போது தோன்றுகிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, “We’re the first generation to feel the impact of climate change, and the last generation that can do something about it...” என்று கூறியது மிகப்பெரிய உண்மை! பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளை நேரடியாக உணர்கிற முதல் தலைமுறை நாம். அதே சமயம், அது குறித்து ஏதாவது முயற்சி எடுத்து, சரிசெய்யக்கூடிய கடைசி தலைமுறையும் நாம்தான். Now or never! நாம் ஏதும் செய்யவில்லை என்றால், உலகைக் காப்பாற்ற மற்றொரு தலைமுறை இங்கே இருக்காது. ‘Point of no return’ என்று கூறுவார்கள். அதை நோக்கி உலகம் விரைந்து சென்று கொண்டிருக்கிறது.

சுற்றுச்சூழலைக் குறித்துத் தொடர்ந்து பேசி, எழுதி, அதன் மேல் உலக மக்களின் கவனத்தைக் குவித்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். கடைசிவரை  அவருடைய ஆட்சிக்காலத்தின் முதன்மை அக்கறைகளின் ஒன்றாகச் சுற்றுச்சூழல் இருந்தது.

2015-ஆம் ஆண்டு அவர் எழுதி வெளியிட்ட ‘Laudato si’ ஒரு முக்கியச் சுற்றுச்சூழல் ஆவணம். இந்த அளவிற்கு உலகின்மீது தாக்கம் செலுத்திய அண்மைக்காலத் திருமடல் வேறு எதுவும் இல்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். திருமடல்கள் பொதுவாகக் கத்தோலிக்க நம்பிக்கையாளர்களுக்கு எழுதப்படும். ஆனால், Laudato si’ பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதரை நோக்கியும் உரையாடல் நிகழ்த்தியது. பூமியை ‘Our Common Home’ - அதாவது, நம் எல்லாருக்கும் ஆன பொதுவீடு என்று அழைத்து, அதன் நலத்தின்மீது அக்கறை கொண்ட எல்லாரையும் பிரான்சிஸ் வண்டியில் ஏற்றினார். ஆய்வாளர்கள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் இம்மடலைக் குறித்து விவாதித்தார்கள். 2015-ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த உலகச் சுற்றுச்சூழல் மாநாட்டில் பிரான்சிஸின் மடல் மேற்கோள் காட்டப்பட்டது. பிரதமர்கள், அதிபர்கள், .நா. நிறுவன அதிகாரிகள் இம்மடலின் வார்த்தைகளைத் தங்கள் உரைகளில் குறிப்பிட்டார்கள். துயருறும் கிரகத்திற்காக எழுப்பப்பட்ட ஓர் அறத்தின் குரலாக ‘Laudato si’  ஒலித்தது.

திரு அவை வரலாற்றிலேயே ஒரு திருமடல் இயக்கமாக உருவெடுத்த அதிசயம் இம்மடலில்தான் நிகழ்ந்தது. இன்று உலகம் முழுவதும் தன்னார்வலர்களையும் செயல்பாட்டாளர்களையும் கொண்டு கிளை விரித்துள்ள Laudato si Movement பிரான்சிஸின் கனவுகளைத் திட்டங்களாகவும், சாத்தியமான செயல்பாடுகளாகவும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

‘Laudato si’ மடலின் பத்தாம் ஆண்டு விழா, உலகளாவியத் திரு அவையில் பல வடிவங்களில் கொண்டாடப்படுகிறது. ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் அறிவுறுத்தல்படி ‘Radio Veritas Asia’ நிறுவனம் சார்பாக பல திட்டங்களை இந்த வருடம் முன்னெடுத்துள்ளோம். அதில் ஒன்று இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்ட குறும்படப் போட்டி!

போட்டி குறித்த விவரங்கள் பின்வருமாறு:

தலைப்பு: ‘ஆசியக் கண்டத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு - நம் பொது வீடு பூமியைக் காப்பாற்ற ‘Laudato si’ கற்பிக்கும் பாடங்களை எப்படிச் செயலாக்குவது?’

யார் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்?

யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். சமயம், நாடு, வயது போன்ற எந்தத் தடையும் இல்லை. தனிப்பட்ட நபர்கள், அமைப்புகள் இரண்டிற்கும் அனுமதி உண்டு. மாணவர்கள், சமூகத் தொடர்பு பணிக்குழுக்கள், பங்குகள், மறைமாவட்டங்கள், கன்னியர் இல்லங்கள், துறவற சபைகள், பக்த அமைப்புகள், இயக்கங்கள், பயிற்சி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள்... சுருக்கமாகக் கூற வேண்டுமானால், ஒரு காமிராவும் சுற்றுச்சூழல் குறித்த ஒரு கதையும் உள்ள எவரும் இதில் பங்கேற்கலாம். உங்கள் குறும்படம் ஆசியக் கண்ட சூழலை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

ஆங்கிலத்தில் அனுப்பினால் உத்தமம். பிற மொழிகளுக்கும் அனுமதி உண்டு. உரையாடல் மற்றும் விவரிப்பிற்கு, ஆங்கில subtitle-கள் கொடுக்க வேண்டும்.

நீளம்: 3 இலிருந்து 5 நிமிடங்களுக்கு இருக்க வேண்டும். இது தீவிரமாக அமுல்படுத்தப்படும். (முழுநீள வண்ணக் காவியங்களை அனுப்ப வேண்டாம்).

ஒரு நபர், ஓர் அமைப்பு, ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப வேண்டும்.

படைப்பு எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10 நவம்பர், இரவு மணி 11.59 (பிலிப்பைன்ஸ் நேரம்). இந்தியாவைவிட, பிலிப்பைன்ஸ் இரண்டரை மணி நேரம் முன்னதாகச் செல்லும் என்பதைக் கவனத்தில் கொள்க.

Google Form வழியாகப் போட்டியில் பங்கேற்பைப் பதிவு செய்யவும், படைப்புகளை அனுப்ப...... https://forms.gle/sLkjEKJjkbdwQkZK9 என்ற இந்த இணைப்பைப் பயன்படுத்துங்கள்.

போட்டி பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த விதிகளைத் தெரிந்துகொள்ள https://www.rvasia.org/laudato-si-film-making-contest என்ற கொழுவியை அணுகவும்.

இதில் நான் முக்கியமாகக் குறிப்பிட விரும்புவது பரிசுத் தொகையை!

முதல் பரிசு: USD 1000 அமெரிக்க டாலர்கள். (இந்திய ரூபாயில் இதன் இன்றைய மதிப்பு ரூ. 88,143/- ஏறக்குறைய ஒரு இலட்சம்). ஒரு இலட்சம் அப்பு... ஒரு இலட்சம்!

இரண்டாவது பரிசு: USD 800 அமெரிக்க டாலர்கள்.

மூன்றாவது பரிசு: USD 500 அமெரிக்க டாலர்கள்.

இது தவிர பத்து சிறப்புப் படைப்புகளுக்கு USD 100 அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட பத்து ஆறுதல் பரிசுகள் (மீதம் எல்லாருக்கும் வெறும் ஆறுதல் மட்டும் தரப்படும்).

ஆசியக் கண்ட வரலாற்றிலேயே ஒரு குறும்படப் போட்டிக்கு இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்படுவது இதுதான் முதல் முறை என்று சில நம்ப முடியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிறைய பேர் இப்போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் பாதிப்பு அவசரம் ஆசிய இளைஞர்கள் நடுவில் ஒரு பேசு பொருளாக, அக்கறையாக மாறவேண்டும் என்பதே ‘Radio Veritas Asia’நிறுவனத்தின் ஆசை.

விருப்பமும் திறமையும் உள்ளநம் வாழ்வுவாசகர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மற்றவர்களுக்கும் இது குறித்த செய்தியைப் பகிருங்கள்.

news
சிறப்புக்கட்டுரை
படைப்பைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது கடமை! (செப்டம்பர் 21 இயற்கை ஞாயிறு)

இவ்வுலகில் உள்ள எல்லாவற்றையும் படைத்த இறைவன் அதனைப் பேணிப்பராமரிக்கவே மனிதர்களாகிய நம்மையும் படைத்தார். இயற்கையை நாம் செழிக்கவைத்தால், இயற்கை நம்மைச் செழிக்க வைக்கும். மாறாக, இயற்கையை நாம் அழிக்க நினைத்தால், இயற்கை நம்மை அழித்துவிடும். இவ் வையகம் அறிந்த உண்மை இது. கடவுள் படைத்த இப்பூமி அழகும் அன்பும் அருளும் நிறைந்தது. மரங்கள், காடுகள், மலைகள், ஆறுகள், கடல், விலங்குகள், பறவைகள் என அனைத்தும் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. இவற்றைப் பாதுகாப்பதும் பராமரிப்பதுமே நம் அனைவரின் கடமை.

நாம் வாழும் பூமி நம் பொது இல்லம்என்பது திருத்தந்தை பிரான்சிஸின் அமுத வார்த்தைகள். இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியாலும் புரட்சியாலும் நாம் நம் பொதுவான இல்லமான பூமியை அளவுக்கு அதிகமாக அழித்து வருகின்றோம். காடுகள் கட்டுப்பாடின்றி அழிக்கப்படுகின்றன. நதிகளும் நீர்நிலைகளும் மாசுபடுகின்றன. பல்லுயிரிகள் விரைவாக அழிந்து வருகின்றன. இதனால் காலநிலை மாற்றம், இயற்கைப் பேரிடர்கள், வறட்சி, வெப்பம் போன்ற பல இடர்களை நாம் இன்று சந்திக்கின்றோம்.

இயற்கையை நாம் போற்றிப் பாதுகாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் முதல் நாளைப் படைப்பின் மீதுள்ள அக்கறைக்கான செப நாளாகத் திரு அவை கொண்டாடி மகிழ்கின்றது. திரு அவையும் இயற்கையைப் பாதுகாப்பதற்கான அழைப்பை நமக்குத் தருகிறது. படைப்பைப் பாதுகாப்பது என்பது நீதியின் ஒரு பகுதியும், நம் மனிதாபிமான கடமையுமாகும். திருத்தந்தை லியோ இதற்கான திருப்பலி மன்றாட்டு, வாசகங்களை அங்கீகரித்து அண்மையில் ஆணை வழங்கியுள்ளார். எல்லா இடங்களிலும் இதைப் பயன்படுத்தத் திருவழிபாடு அருளடையாளங்களின் ஒழுங்குமுறைப் பேராயம் நம்மைப் பணிக்கிறது. இது ஜூன் 8, 2025 தூய ஆவியார் பெருவிழா அன்று வெளியிடப்பட்டது.

கடந்த ஜூலை 9 அன்று படைப்பைப் பாதுகாத்தலுக்கான முதல் திருப்பலியைத் திருத்தந்தை லியோ உரோமைக்கு அருகிலுள்ள காஸ்தல் கந்தோல்போ கோடை விடுமுறை இல்லத்தில் நிறைவேற்றினார். அவர் தனது மறையுரையில், இயேசுவே திரு அவையின் படைப்பாளர் மற்றும் தலைவர் என்பதையும், படைப்பைப் பராமரிப்பதும் அமைதியை மேம்படுத்துவதும் ஒரு பகிரப்பட்ட பணி என்பதையும் நமக்கு நினைவூட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சுற்றுச் சூழல் பற்றியக் கரிசனையும் ஆன்மிகமும் அடங்கியஇறைவா உமக்கே புகழ்(Laudato si) என்னும் திருத்தூது மடலின் பத்தாம் ஆண்டிலே படைப்பைப் பாதுகாத்தலுக்கான திருப்பலியை அங்கீகரித் திருப்பது இப்பூமியைப் பேணுகின்ற நம் பணிகளுக்குத் திரு அவை கொடுக்கின்ற முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

இறுதியாக, படைப்புடன் இணக்கமாக வாழ்வதையும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நெருக்கடிகளைச் சரி செய்வதற்கான ஒரு வழியாக நல்லிணக்கத்தை வளர்ப்பதையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நம் தமிழ்நாடு ஆயர் பேரவை ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மூன்றாம் ஞாயிறன்று படைப்பைப் பாதுகாத்தல் திருப்பலியைக் (இயற்கை ஞாயிறைக்) கொண்டாட அழைப்புவிடுக்கின்றது. எனவே, இந்த ஆண்டு செப்டம்பர் 21 அன்று இயற்கை ஞாயிறை நாம் சிறப்பிக்கின்றோம்.

பூமியைப் பாதிக்கும் மனிதர்களின் பேராசை, சுரண்டல், மாசுபாடு ஆகியவை களையப்பட வேண்டும். இயற்கையின் அழுகை கடவுளின் அழுகை என்பதை உணர்வோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளுக்கிணங்க இயற்கையைப் போற்றி வணங்கி, பாதுகாத்து, பராமரித்து வாழ்வோம்.

news
சிறப்புக்கட்டுரை
அன்னையின் உதவி யாருக்கு?

தொங்கும் தோட்டம்

எங்கும் தோட்டம்

ஏதேன் தோட்டம்

ஏமாந்த தோட்டம்

அந்தத் தோட்டத்தின் நடுவே

அழகிய பழமரங்கள்

அந்த மரங்கள் நீரால்

வேர் வாழ்கிறது;

வேரால் மரம் வாழ்கிறது;

மரத்தால் கிளை வாழ்கிறது;

கிளையால் பூ வாழ்கிறது; பூவால் காய் வாழ்கிறது;

காயால் கனி வாழ்கிறது.

அந்தக் கனியால் வாழ்வுபோனது!

போன வாழ்வைப் பெற்று தந்தவர்தான் மரியா என்ற பெண். அவர்தான் இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டு இயேசுவின் தாயாக, ஏன் மனுக்குலத்தின் தாயாக, காலமெல்லாம் காத்து நிற்கும் செபமாலைத் தாயாக, செயம் தரும் தாயாக, வெற்றித் திலகமிட்டு நம்மிடம் வருவோரை வரவேற்கும் செபமாலைத் தாயாக, கருமுத்தான் நகரில் குடி கொண்டுள்ளார். கடைகோடி மக்களையும் கைவிடப்பட்டவர்களையும் கரைசேர்க்கும் தாயாக இருகரம் நீட்டி வாஞ்சையுடன் வரவேற்கும் அந்தத் தாயின் அன்பை, ஆசிரைப் பெற்றிட வாருங்கள்.

ஏதேன் தோட்டத்தில் அறிமுகமான மரியா 1595-இல் கொங்குத் தோட்டத்தில் செபமாலை அன்னையாக வலம்வர, மதுரை மறைப் பணித்தளத்தில் பணி செய்த தெ நோபிலி அடிகளாரின் பெரும் முயற்சியால் தந்தை பல்தசார் வழியாக உருவானது என்பது வரலாறு. அன்று முதல் இன்றுவரை அன்னையின் புகழ் அகிலமெங்கும் பரவியதன் விளைவாக இன்று பசிலிக்காவாக உயர்ந்துள்ளது.

அரசியின் ஆட்சி: அன்னை மரியாவை வீரமாமுனிவர்மழையானவளாய், பேரன்பு பொருந்தியவளாய், வருத்தத்தை ஒழிக்கும் மகிழ்ச்சியானவளாய், ஞானமாகிய நிறை ஒளியானவளாய், மகிழ்ச்சி பொங்கும் தாவீது அரசரின் மாளிகையானவளாய், நீர் வற்றாத கடலானவளாய், துன்ப இருள் போக்கும் பிறை நிலவாய், செபமாலையைச் செங்கரத்தில் ஏந்தி நம் தாய், நம் அனைவரின் அரசியாய் இருந்து ஆட்சி செய்கிறார்என்கிறார்.

மரியாவின் உதவி யாருக்கு? மரியாவின் உதவி மனிதருக்குத்தானே என்று சொல்வார்கள். உண்மையில் சிந்தித்துப் பார்க்கும்போது கடவுளுக்குத்தான் முதலில் தேவைப்பட்டது. “விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவளத்தை நிறைவேற்றுபவரை என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் (மத் 12:50) எனும் இயேசுவின் இறைவார்த்தையை இதயத்தில் சுமந்த என்னை மரியா கடவுளுக்கே முதல் உதவி செய்தார். மேலும், விண்ணகத்திற்கும் உதவி செய்கிறார்கள். “உன் சொற்படியே எனக்கு ஆகட்டும்என்று கூறிய அந்த நிமிடம் முதல் மரியாவின் பணிவாழ்வு தொடங்கியது எனலாம். இந்த நிகழ்வின் வழியாக உலகம் மீட்படையத் தொடங்கியது. மரியாவைப்போல் இறைவிருப்பம் அறிந்து செயல்படும்போது நாமும் மீட்புப் பணியில் பங்குப் பெறுகின்றோம் என்பதை உணர்ந்திடுவோம். தந்தை, மகன், தூய ஆவியின் குடும்பத்திற்குத் துணை நின்று பொறுப்பேற்று வாழ்ந்தவர்தான் மரியா. எனவே, கடவுளுக்கு முதற்பணியாக மரியாவின் வாழ்வு அமைந்தது.

மரியாவின் பிறர்நல பணிகள்: அன்னை மரியாவின் பிறரன்புப் பணிகள் கானாவூர் திருமண நிகழ்வில் காணமுடிகிறது. “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள் (யோவா 2:5)  என்றார்கள். நாமும் அவர் சொல்வதை எல்லாம் செய்யும்போது மரியாவின் பிள்ளைகள் ஆகிறோம், அன்னை மரியா கடவுளுக்கு மட்டுமல்ல, மனிதனுக்கும், இயேசுவின் இறப்பின்போதும் உதவிக்கரம் நீட்டுகிறார். அதனால்தான், மரியாவை நமக்குத் தாயாகத் தந்தார். இறையருளால் மகிழும் அன்பு பொருந்திய பக்தர்களை விண்ணகம் சேர்க்கக் காத்து நிற்கும் செபமாலை அன்னை அவரே. நமக்காகத் தம் மகனிடம் பரிந்து பேசி, விண்ணக வாழ்வைப் பெற்றுத் தருகின்றவராக இருக்கின்றார்.

ஆகவே, அன்னையிடம் செல்வோம்; அவர் வழி நடப்போம்; விண்ணக வாழ்வைப் பரிசாகப் பெறுவோம். மரியே வாழ்க!

news
சிறப்புக்கட்டுரை
செபமாலையின் முக்கியத்துவம்!

தூய ஆவியால் நிரப்பப்பெற்று மரியன்னையின் அனுமதி பெற்ற சாமிநாதர், அது முதல் செபமாலையின் மேன்மை பற்றி மக்கள் மனங்களில் தனது போதனையின் மூலம் ஆழமாக வலியுறுத்தி வந்தார். தினமும் செபமாலை செபித்தார். செபமாலைதான் அவரது போதனையின் முன் ஆயத்தமாகவும், முடிந்தபின் அன்னையுடன் உரையாடுவதாகவும் இருந்தது.

ஒருநாள் அவர் பாரீஸ் பட்டணத்தில் உள்ள மாதாவின் பேராலயத்தில் போதிக்க வேண்டியிருந்தது. அன்று நற்செய்தியாளரான புனித யோவானின் திருநாள். சாமிநாதர் அவ்வாலயத்தில் பெரிய பீடத்தின் பின்னால் உள்ள சிற்றாலயத்தில் உருக்கமுடன் செபமாலை செபித்து ஆயத்தம் செய்துகொண்டு இருந்தார்.

அப்போது அன்னை அவருக்குத் தோன்றி, “மகனே சாமிநாதா! நீ சொல்ல நினைத்திருக்கும் செய்தி நல்லதுதான். ஆயினும், அதைவிட சிறந்த செய்தி ஒன்றை உனக்கு நான் தருகிறேன்என்றார். அப்போது அன்னை கொண்டு வந்திருந்த புத்தகத்தை, சாமிநாதர் கரத்தில் வழங்கினார். சாமிநாதர் அதைக் கவனமுடன் வாசித்தார்; பின் அதைத் தியானித்தார்; அன்னைக்கு நன்றி கூறினார். ஆலயத்தில் வேத சரித்திர வல்லுநர்களும், மேல்நிலைச் சிந்தனையாளர்களும் கூடியிருந்தனர். சாமிநாதர் பிரசங்க மேடையில் ஏறி, “யோவான் விண்ணக அரசியான மரியன்னையின் காப்பாளராக இருக்கும் தகுதி பெற்றார்என்று மட்டுமே கூறினார். மேலும்,  “ஞானமும் அறிவும் மிகுந்த அறிவுரைகளை நான் இப்போது போதிக்க வரவில்லை. தூய ஆவியின் சக்தி கொண்டு அவரது எளிமையில் பேசப்போகிறேன்என்று கூறினார்.

உயர்குல மக்களே, அறிவில் சிறந்தவர்களே, அறிவுமிக்க சிறந்த சொற்பொழிவுகளைக் கேட்டு நீங்கள் பழக்கப்பட்டு இருக்கிறீர்கள். மனித அறிவின்படி மொழிகளில் பேசி வந்த நான், இன்று அப்படிப் பேச விரும்பவில்லை. மாறாக, கடவுளின் தூய ஆவியையும், அவரது பெருமைகளையும் எளிமையான முறையில் பேசவே விரும்புகிறேன்என்று கூறினார். சாமிநாதர் சம்மனசு கூறிய மங்கள வார்த்தை செபத்தை உதாரணங்களுடன் அன்றாட வாழ்வில் காணப்படும் நிகழ்வுகளைக் கொண்டு விளக்கினார்.

பாவிகளையும் மூடநம்பிக்கை கொண்டோரையும் மனம் திருப்பவும், பாவத்தை அழிக்கவும் ஏதுவாக செபமாலையின் மேன்மையை எடுத்துச் சொல்- இப்படி அன்னையும் நமது இறைவனும் சாமிநாதருக்குப் பலமுறை தோன்றிக் கூறியதாக முத் ஆலன் குறிப்பிடுகின்றார்.

சாமிநாதர் தேவ அன்னையின் காட்சியைப் பெற்ற பின் இயேசுவும் அவருக்குக் காட்சியளித்தார். அப்போது இயேசு, சாமிநாதரிடம், “சாமிநாதா, நீ மனிதரின் புகழ்ச்சியைத் தேடாமலும், உன் பலத்தில் செருக்குறாமலும், ஆன்மாக்களின் மீட்புக்காக மிகுந்த தாழ்ச்சியுடன் உழைப்பது குறித்து நான் மகிழ்கிறேன். ஆனால், பல குருக்கள் மனிதர்களின் கனமான பாவங்களை எடுத்து உடனேயே இடித்துப் பேசுகின்றனர். கசப்பு மருந்தை நோயாளிக்குக் கொடுக்கும் முன், அவனுக்கு அதனை ஏற்றுக் கொள்வதற்குரிய மனநிலையை உருவாக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. குறிப்பாக, செபமாலை செபத்தின்மீது மக்களுக்கு விருப்பத்தைக் குருக்கள் ஏற்படுத்த முயல வேண்டும். செபமாலை செபிக்கத் தொடங்கி, தொடர்ந்து செபித்து வருவார்களானால், இரக்கமுள்ள இறைவனாகிய நான் அவர்கள் கேட்கும் வரத்தை மறுக்க மாட்டேன். ஆகவே, நீ செபமாலையின் மேன்மையை எடுத்துரைக்கவேண்டும் என நான் விரும்புகிறேன்என்று கூறினார்.

ஒருமுறை அன்னை சாமிநாதரிடம், “என் அன்பு மகனே, உன் போதனைகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லையே என்று ஆதங்கப்படாதே. நீ மழை பெய்யாத நிலத்தில் விவசாயம் செய்ய முயல்கிறாய். எல்லாம் வல்ல இறைவன் இப்பூமியைப் புதுப்பிக்க திட்டமிட்டபோது முதலில் மோட்சத்திலிருந்து மழையை அனுப்பினார். வானதூதரின் மங்கள வார்த்தைதான் அந்த மழை. அதைக்கொண்டே இறைவன் உலகைப் புதுப்பித்தார். ஆகவே, நீ போதிக்கும்போது, மக்கள் செபமாலை செபம் செபிக்கும்படி தூண்டு. அப்படி நீ செய்தால், உன் வார்த்தைகள் ஆன்மாக்களுக்கு அதிகப்பலனைப் பெற்றுத் தரும்என்று கூறினார்.

அன்னையின் வேண்டுகோளை ஏற்று, உடனே அவர் அதனைச் செயலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். மேற்கண்ட நிகழ்வுகள்செபமாலை புதுமைகள்என்ற இத்தாலிய நூலில் காணப்படுகின்றன. புனித சாமிநாதரின் வழிகாட்டுதலின்படி குருக்கள் செபமாலையின் மேன்மையை எடுத்துரைத்து வந்த காலகட்டத்தில், இறைமக்களின் உள்ளங்களில் பக்தியும் ஆன்மிக எழுச்சியும் செழித்து வளர்ந்தது. இதைக் கைவிட ஆரம்பித்த பின்னர்தான், பாவம் உலகைச் சூழ்ந்து நின்று நெருக்கியது.