news
சிறப்புக்கட்டுரை
உரிமையுடன் உறவாடலே உண்மையான இறைவேண்டல்

உண்மையான இறைவேண்டல் என்பது மனதார இறைவனை நம்பி, அவர்மீது முழுமையான பக்தி கொண்டு, அவரின் வழிகாட்டுதலின்படி நடப்பதாகும். இது வெறும் வார்த்தைகளால் இறைவனை வேண்டுவது மட்டுமல்ல, நம் செயல்களிலும் எண்ணங்களிலும் இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாகும்.

இறைவனோடு உரையாடுவது, உறவாடுவதே இறைவேண்டல். இந்த உரையாடல், உறவாடல் பல்வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தப்பட வேண்டும். மனித ஆளுமையின் தளங்களான உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், மனவலிமை ஆகிய அனைத்துத் தளங்களும் இறைவேண்டலில் இணையும்போதுதான் அது முழுமையானதாக மாறுகிறது. உடலாலும் உள்ளத்தாலும் இறைவனோடு உறவாட வேண்டும் என்பதை எளிதில் புரிந்துகொள்கிற நாம், ஆன்மாவிலும் இறைவேண்டல் செய்யவேண்டும் என்பதையும் உள்வாங்கி அதைச் செயல்படுத்தவேண்டும்.

ஆன்மா என்றால் என்ன? என்னும் கேள்விக்கு நம் கத்தோலிக்கத் திரு அவை விடை தருகிறது...

உடலையும் ஆன்மாவையும் ஒருங்கே கொண்டவரே மனிதர்கள். அவர்களுக்குள் பருப்பொருள் சார்பற்ற, அழிவுறா ஓர் ஆன்மா இருக்கிறது என்கிறது வத்திக்கான் திரு அவையின் இன்றைய உலகில் திருச்சபை (எண் 14). எப்போதெல்லாம் நமக்குள் இறைவன் பற்றிய தேடல் ஆழப்படுகிறதோ, அப்போதெல்லாம் நம் ஆன்மாவின் சலனத்தை நாம் உணரலாம். எப்போதெல்லாம் ஆண்டவரின் சந்நிதியில் இனம் புரியாத அமைதியும் மகிழ்வும் நம்மை ஆட்கொள்கிறதோ, அப்போதெல்லாம் கடவுள் நம் ஆன்மாவைத் தொடுவதை நாம் அனுபவிக்கலாம். “என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது (84:2) என்னும் திருப்பாடல் வரிகள் நமது  இறைவேண்டலில் நம் உடல், மனம்ஆன்மா இவை மூன்றுமே இணைய வேண்டும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு.

இறைவேண்டலின்போது நம் ஆன்மா அகமகிழும் என்பதை  “நான் உமக்குப் புகழ் பாடுகையில் என் நா அக்களிக்கும்; நீர் மீட்டுள்ள என் ஆன்மாவும் அக்களிக்கும்  (திபா 71:23) என்னும் வரிகள் பறைசாற்றுகின்றன. மகிழ்ச்சியின்போது மட்டுமல்ல, துயர வேளைகளிலும் நம் உள்ளத்தோடு நம் ஆன்மாவும் இறைவனை நோக்கி உயர வேண்டும். எனவே தான், “இஸ்ரயேலின் கடவுளே, கடும் துயரில் உழலும் ஆன்மாவும் கலக்கமுறும் உள்ளமும் உம்மை நோக்கி கூக்குரலிடுகின்றன (பாரூ 3:1) என்கிறார் இறையடியார் பாரூக்கு.

உண்மையான இறைவேண்டுதலின் அம்சங்கள்

இறைநம்பிக்கை: கடவுள் இருக்கிறார், அவர் வல்லமை மிக்கவர், அவர்மீது முழுமையான நம்பிக்கை வைக்கவேண்டும்.

 பக்தி: இறைவனை நேசிப்பதும், அவரை எப்போதும் நினைவில் கொள்வதும், அவருடைய கட்டளைகளை மதிப்பதும் பக்தி.

வேண்டுதல்: இறைவனிடம் மனம் திறந்து பேசுவது, நம் குறைகளைச் சொல்வது, அவருடைய ஆசிர்வாதத்தை வேண்டுவது.

நன்றி செலுத்துதல்: இறைவன் நமக்கு அளித்த அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் நன்றி செலுத்துவது. கடவுள் வழிநடத்தல், இறைவனால் போதிக்கப்பட்ட வழியில் நடப்பது, அவருடைய கட்டளைகளைப் பின்பற்றுவது.

உண்மையான இறைவேண்டுதலின் பயன்கள்

மனஅமைதி, துன்பங்களிலிருந்து விடுதலை, சந்தோஷம், சரியான வழிகாட்டுதல். உண்மையான இறைவேண்டுதல் என்பது ஒரு பயணம். அது வாழ்நாள் முழுவதும் இறைவனை நோக்கி நாம் மேற்கொள்ளும் பயணம். இந்தப் பயணத்தில் நாம் சோதனைகளையும் துயர்களையும் சந்திக்க நேரிடலாம்; ஆனால், இறைவனை நம்பி அவருடைய வழிகாட்டுதலின்படி நடந்தால் வெற்றி நிச்சயம்.

குழந்தை தெரேசாவும் இறையனுபவமும்

குழந்தைகளைப்போல தன்னம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் எளிய ஆன்மிகத்தை உருவாக்கினார் குழந்தை தெரசா. அவரது சிறு வழி என்னும் ஆன்மிகம் அசாதாரணமான சிறப்பான செயல்களைச் செய்வதில் அல்ல; ஆனால், வாழ்க்கையில் உள்ள சாதாரண எளிய செயல்களை நன்றாகவும் சிறப்பாகவும் பேரன்புடனும் செய்வதாகும். அவர் செய்யும் ஒவ்வொரு சிறு சிறு செயல்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்தார்.

அவர் நம்பியது, படிப்பித்தது எல்லாமே கடவுளின் அருள்தான் என்பதாகும். உண்மையான அன்போடும் ஆவலோடும் கவனித்தால், கடவுளின் திருமுகத்தையும் அவரது உடனிருப்பையும் எல்லா மனிதரிலும், நமது வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் அனுபவிக்க முடியும் என்கிறார் புனித குழந்தை தெரேசா. இவரது ஆன்மிகம் எளிமையானதுசிறியது, மிகவும் ஆழமானதுமனித நேயம் உடையது.

அன்பான இறைவா! எங்கள் அன்றாட வாழ்வில் ஆழமாக இறைவேண்டல் செய்யக்கூடிய நல்ல மக்களாக எங்களை மாற்றுவீராக! இறைவேண்டல் செய்யும்பொழுது உமது பிள்ளைகளுக்குரிய பண்புகளோடு செய்ய அருளையும் ஆற்றலையும் தாரும்.

news
சிறப்புக்கட்டுரை
அன்றாட வாழ்வில் அன்பின் வெளிப்பாடுகள்

அன்பு என்பது

ஆன்மாவின் மணியோசை!

அதை இசைத்தால் எழுவது அன்பின் வெளிப்பாடு!’

அன்பே எனது அழைப்புஎன்று உணர்ந்தவளாய், தனது 15-வது வயதில் இறைவனின் கரம் பற்றிப்பிடிக்கத் தன்னையே தியாகமாக்கியவள் சிறுமலர் குழந்தை தெரேசா என்ற சின்ன ராணி!

கிறிஸ்துவே என் அன்பு, அவரே என் நிறைவாழ்வு, அன்புக்காக இறப்பதே என் நம்பிக்கை, இறைவனின் அன்பில் நிலைத்திருப்பதே எனது ஆவல், அன்புக்காக வாழ்வதே என் வாழ்வின் இலக்குஎன்று பார்போற்றும் குழந்தை தெரேசாவின்அன்றாட வாழ்வில் அன்பின் வெளிப்பாடுகள்எங்ஙனம் அமைந்திருக்கின்றன என்பது பற்றிய ஒரு பார்வை...

குழந்தை தெரேசா தன்னுடைய ஆன்மிக வழியைஅன்பின் வழிஎன்று தனது நூல்களில் சித்தரிக்கின்றார். தனது அழைத்தலின் திறவுகோலே அன்புதான். திரு அவை இதய அன்பினால் பற்றிக் கொண்டிருக்கின்றது. அந்த அன்புத் தீ அணைந்து விடக்கூடாது; அதற்காக நான் செபிக்க வேண்டுமென்று நற்கருணை முன் முழந்தாளிடவும் அவள் தயங்கவில்லை. அன்பின் வெளிப்பாடாகவே தன் செயல்கள் ஒவ்வொன்றையும் குழந்தை தெரேசா பார்த்தாள். அன்பு என்ற உணர்வு அனைத்து அழைத்தல்களையும் தாங்கி நிற்கின்றது. தெரேசா அன்பைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘மனித அன்பு குறைவுள்ளது, முடிவுடையது, நிரந்தரமற்றது; ஆனால், நம் கடவுள் நம்மிடம் காட்டுகின்ற அன்பானது முடிவில்லாததாகும்; இதனை ஆழம் பார்க்கவோ, எல்லை காணவோ, அளந்து பார்க்கவோ நம்மால் இயலாதுஎன்கிறார்.

குழந்தை தெரேசாவின் மனம் மாசற்ற, கள்ளங்கபடமின்றி அனைவரிடமும் வேற்றுமை பாராட்டாமல் அனைவரையும் அன்பு செய்யும் இதயமாக அமைந்திருந்தது. தன் அன்னை தனது சிறுவயதிலேயே விண்ணகம் நோக்கிச் சென்றபோது தன் அன்னையிடம் காட்டிய அன்பை இயேசுவின் தாய் அன்னை மரியாவிடம் வெளிப்படுத்தினாள். அனுதினமும் மாதாவின் சுரூபத்தின் முன் தன் தோட்டத்து மலர்களால் அலங்கரித்தாள். தனது மூத்த சகோதரி பவுலினைத் தனது அன்னையாக இருக்க வேண்டும் எனக் கேட்டு, சிறு சிறு செயல்களால் அவர்களை மகிழ்விப்பதில் ஆர்வம் காட்டினாள்.

நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் நுழையமாட்டீர்கள்; குழந்தையைப் போல் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுகிறவன் எவனோ, அவனே விண்ணரசில் பெரியவன் (மத் 18:3-4) என்ற இறைவார்த்தை குழந்தை தெரேசாவின் வாழ்விற்கு விதை போன்று அமைந்தது. தனது வாழ்வில் அன்பின் வெளிப்பாடாகக் குடும்ப வாழ்விலும் தன் தந்தையோடும் உறவுகளோடும் சகோதரிகளிடமும் குழந்தை உள்ளம் கொண்டு நடைபயின்றாள். அத னையே தான் வாழ்ந்த கார்மேல் துறவற குழுமத்திலும் கடைப்பிடித்தாள்.

தன்னோடு வாழ்ந்த துறவற சகோதரிகளை மகிழ்விக்க கவிதைகள் பல எழுதினாள். சிறு சிறு துணுக்குகளையும் நகைச்சுவைகளையும் கூறி அனைவரையும் மகிழ்வித்தாள். முதிர்வயதுடைய துறவிகளுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களை மகிழ்வித்தாள். அனைத்தையும் அன்பர் இயேசுவிடம் தான் செய்கின்ற புண்ணிய மலர்களுக்கேற்ப ஆன்மாக்களைத் தரவேண்டும் என்று விண்ணப்பித்தாள்.

ஒருமுறை நாளிதழில் வந்த குற்றவாளி பிரான்சீன் என்ற மனிதன் மனம் மாறுவதற்காகத் தியாகத்துடன் செப மலர்களை அர்ப்பணித்தாள். அது மட்டுமில்லாமல், கடவுளிடம் அவன் மனம் மாறியதற்குரிய அடையாளம் தரவேண்டுமென்று மன்றாடினாள். பிரான்சீன் தனது தண்டனையைப் பெறும் முன், தன் பாவத்திற்கு ஒப்புரவு பெற்று குருவானவர் கரங்களிலிருந்த சிலுவையை முத்தம் செய்தான் என்ற செய்தி கேட்டு குழந்தை தெரேசா ஆனந்தமடைந்து, இயேசுவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு நன்றி கூறினாள். இது இயேசுவின்மீதும் பிறர்மீதும் அவள் கொண்ட அன்பின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.

புனிதர்கள் தங்கள் வாழ்வில் கடவுள்மீது அன்பு செலுத்துவதைத் தங்கள் வாழ்வின் மையமாகக் கருதினர். அந்த அன்பானது, இருளில் மிளிர்கின்ற ஒளி இருளை அகற்றி, தன் கதிர்களால் பிறர் கண்கள் காண வழிவகுப்பதுபோல, கடவுள் மீது வைத்துள்ள அன்பு பிறர்வாழ்விலும் செயல்பட வைத்தது. ‘ஆண்டவர் இயேசுவின் அன்பு என்னை உந்திக் கொண்டேயிருக்கிறதுஎன்று அடிக்கடி தன் இதயத்தில் கூறிக்கொள்வாள். துறவு நாள்களில் துணி துவைத்துக் கொண்டிருக்கும்போது பிற சகோதரிகள் துணி சுத்தம் செய்யும் தண்ணீர் தன் முகத்தில் படுகின்றபோதும் மனங்குமுறாமல் அவர்களுக்கு உதவி செய்து அனைவரின் அன்பையும் பெற்றாள்.

நன்மை இருக்கும் இடத்தில் தீமையும் அலைமோதும்என்பதற்கேற்ப குழந்தை தெரேசா எப்போதும் தன்னைக் குறை கூறிக்கொண்டிருக்கும் ஒரு மூத்த சகோதரியைக் கண்டபோதெல்லாம் மனதினுள் ஒருவித பயஉணர்வு தோன்றுவதை இயேசுவிடம் கூறி, ‘அன்பிற்குப் பதில் அன்பேஎன்ற நுணுக்கமான கருத்தை அந்தச் சகோதரியிடம் தனது அன்புச் செயல் வழியாக எண்பித்து, அவர்களது அன்பையும் பெற்றாள். இயேசுவிடம் கொண்டிருந்த ஆழமான பக்தி, நோயாளிகளிடத்தில் அவர் காட்டிய பரிவு, கருணை போன்ற நற்பண்புகளில் சிறந்து, வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்தாள்.

அன்பு என்பது ஓர் அற்புதமான உணர்வு. இது ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளச் செய்கிறது. குழந்தை தெரேசா கடவுள்மீது அன்பும் ஆழ்ந்த பக்தியும், ஏழை எளியவர், நோயாளிகள், பாவிகள்மீது அன்பும் கருணையும் காட்டினார். அவரது வாழ்வில் அமைதியையும் பொறுமையையும் கடைப்பிடித்தார். 9 ஆண்டுகள் துறவு வாழ்வு வாழ்ந்தார். மொத்தம் 24 ஆண்டுகள் உலகத்தில் வாழ்ந்தார். இன்று உலகம் போற்றும் புனிதையாக, மறைவல்லுநராக, மறைபோதக நாடுகளின் பாதுகாவலியாக விளங்குகின்றாள். அவரது அன்பின் செயல்பாடுகள்சிறு வழி என் இயேசுவின் அன்பின் வழிஎன்ற நோக்கில் விண்ணிலிருந்து மலர்களாகிய வரங்களை நம்மில் பொழிந்துகொண்டிருக்கிறாள்.

நம் அன்றாட வாழ்விலும் பிறரிடம் அன்போடு உரையாடுவதிலும் உறவாடுவதிலும் உதவி செய்வதிலும் பிறர் துன்பங்களில் பங்கேற்பதிலும், பிறரைப் பாராட்டி மகிழ்வித்து இறைச் செயல்களைப் பிறருக்குச் செய்து, அன்பின் வழியில் வாழ்ந்திட நடைபோடுவோம்.

 

news
சிறப்புக்கட்டுரை
இன்றைய நுகர்வு உலகில் தெரேசாவின் எளிமை!

செல்வந்தன் ஒருவன் ஒற்றைக் காலில் நின்று தவம் கிடந்தான். கடவுள் தோன்றி தங்கம் தரவேண்டும் என்பதே அவனது கோரிக்கை. ஏழைகளுக்கு உடனடியாக வரும் கடவுள், அவனுக்குத் தாமதமாகவே வந்திறங்கினார். கடவுள் தமது செங்கோலால் ஒவ்வொரு சிறிய பொருளையும் தொட்டார். தங்கமாக மாறியது. அவனது உள்ளத்தில் பெரிய மகிழ்ச்சி. கடவுளும் தொட்டுக்கொண்டே இருந்தார். பேரானந்தத்தில் திளைத்தான். கடவுள் தம் செயலை நிறுத்தவில்லை. ஆனால், அவனுள் வருத்தம், சோகம், சோர்வு. கடவுளிடம் சற்றுச் சத்தமாகவே கூறினான்: “கடவுளே! அந்தச் செங்கோலை மட்டும் தந்துவிடு, நான் பார்த்துக்கொள்கிறேன்என்று.…

மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள்! ஆசைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்! ஒவ்வொரு நொடியும் அவனது ஆசைகள் மாறுகின்றன. மாறிக்கொண்டே இருக்கின்றன. ‘மனம் ஒரு குரங்குஎன்பதுபோல மாறுகின்றான். தற்கால உலகினில் அவனது ஆசைகள் முரண்பட்டு முட்டிக்கொள்கின்றன. தான் ஆசித்தது கிடைத்துவிட்டது என்றாலும், அவன் ஆசித்தது கரங்களில் கிடைத்தது. அடுத்த கணமே பழையதாய் மாறியதை நினைத்து தன்னிடமே கோபம் கொள்கின்றான். இவ்வாறாக, தாங்கள் பார்ப்பது, கேட்பது, தொடுவது, நுகர்வது, சிந்திப்பது என அனைத்தையும் அபகரித்துக்கொள்வதில் உள்ள வேகம் கூடிக்கொண்டே செல்கிறது.

மனிதச் சிந்தனைகளின் அளவுக்குமேல் வியாபார உலகமும் தனது உற்பத்தித் தந்திரங்களைத் தந்துகொண்டே இருக்கிறது. சந்தைக் கலாச்சாரத்தில் உடனுக்குடன் கலந்து குவிந்துவிடுகின்றன. மானுடருக்குத் தேவையானது என்பதல்ல; மாறாக, சந்தையில் இருப்பது இவரிடத்திலும் வேண்டும் என்ற மனநிலையில் சந்தைக் கலாச்சாரம் மானுடர்களை விழுங்கி பல ஆண்டுகளாகி விட்டன.

கடவுள் அழகிய உலகினைப் படைத்திருக்கிறார். அனைவருக்குமான வாழ்வை உருவாக்கியிருக்கின்றார். இது ஓர் அழகான வட்டம். ஒருவர் சுவாசிக்கும் காற்று எங்கும் வியாபித்திருக்கிறது. ஒருவர் குடிக்கும் தண்ணீர் எங்கும் நிறைந்திருக்கிறது.

ஒருவர் வாழும் பூமி எங்கும் தாங்கிக்கொள்கிறது. சந்தையில் தருவது எனக்கு மட்டுமே! கடவுள் தருவது எல்லாருக்குமே! சந்தை என்னை விற்கிறது! கடவுளின் இயற்கை என்னை வாழ்விக்கிறது! நான் பருகும் தண்ணீரைச் சந்தை எனது வீட்டினுள் தருகிறது. கடவுள் நான் செல்லும் இடமெல்லாம் தண்ணீர் தருகிறார். சந்தை எனது உழைப்பினை உறிஞ்சிக்கொள்கிறது. கடவுள் எனது உழைப்பிற்குப் பலன் தருகிறார். எனக்கு மட்டுமல்ல, வாழும் ஜீவராசிகள் அனைத்திற்கும் தருகிறார்.

ஆம், நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இன்றைய உலகில் ஓர் எளிய வாழ்வினை வாழ்ந்தவராகத் திகழ்கிறார்... இன்று நாம் கொண்டாடும்எழிலரசி, ‘சின்ன ராணிஎன்று பாசமாக அழைக்கப்படும் புனித குழந்தை தெரேசம்மாள். சத்தம் மிகுந்த இவ்வுலகில் சலனமில்லாமல் வாழ்ந்தவர், செபித்தவர், சிந்தித்தவர். உலகெங்கும் அன்பின் நற்செய்தியாய் இன்றளவும் செயலாற்றுகிறார். சூரியனின் வெளிச்சம் பூமியைச் சூழ்வதுபோல், அவரது ஆன்மாக்களின் மீட்புக்கான செபம் இன்றும் நம் உலகைச் சூழ்ந்திருக்கிறது.

குழந்தை தெரேசம்மாள் சந்தைக்குச் சென்றவரல்லர்; வாங்கியவரும் அல்லர்; விற்றவரும் அல்லர்; சந்தைக் கலாச்சாரம் என்பது ஒரு துளியும் இல்லாமல் இவ்வுலகில் வாழ்ந்தவர். அணிகலன்கள் இல்லை, ஆபரணங்கள் இல்லை, முகப்பூச்சுகள் இல்லை, வாசனைத் திரவியங்கள் எதுவுமில்லை. ஆனால், அழகோ அழகு! கொள்ளை அழகு! மல்லிகையும் தோற்கும் அளவுக்கு அழகு! இறையன்பினால் சுடர் வீசுகிறார்! ஆனால், நம்மைச் சூழ்ச்சியால் தந்திரமாய்ப் பிரித்தது சந்தைக் கலாச்சாரம் தானே! இந்தக் கலாச்சாரம் கண்களுக்குப் பளபளவென, கமகமவென, மினுமினுவென, சுடச்சுடவென, வெதுவெதுவென நிற்கும்போது அவனே எனக்குத் தோழன் என்று சொல்லும்போது, ‘நானே தோழன் வேடத்தில் வந்த எமன்என்று சிரிக்கின்றானே சந்தை! என்னவென்று சொல்வது?

ஒரு சூரியன், ஒரு நிலா, கோடி விண்மீன் வெளிச்சமும் அழகும் குறைவுபடுகிறதா? இல்லையே! ஆம், அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரம்தானே நம் பூமி! அது கடவுளிடமிருந்து தோன்றியது அல்லவா! அதேபோன்று, தனது அழைத்தலின் திறவுகோல் அன்பு என்பதை உணர்ந்து, அன்பே என் அழைப்பு, கிறிஸ்துவே என் அன்பு, அவரே எனது இறைவாழ்வு என்று புனித குழந்தை தெரசம்மாள், அன்பை ஆடையாக அணிந்து இறையன்பினால் உந்தப்பட்டு, எளிமையின் அரசியாய், ‘கீழே கிடக்கும் ஒரு குண்டூசியை எடுப்பதன் மூலம் ஓர் ஆன்மாவை மீட்க முடியும்என்று கூறி எளிய வாழ்வு வாழ்ந்தது ஆச்சரியம் அல்லவா! அவளின் நூற்றாண்டைக் கொண்டாடி மகிழும் நாமும், எளிமையான உள்ளம் கொண்டவர்களாய், சின்னஞ் சிறியவற்றையும் பேரன்போடு செய்வோம். இறையன்பினால் ஈர்க்கப்பட்டு, நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் அன்னையவளின் வழி தொடர்வோம்!

news
சிறப்புக்கட்டுரை
புது விடியலின் பூபாளம்: புனிதை தெரேசாவும் நற்செய்தி அறிவிப்புப் பணியும்

அனுபவமும் அனுப்புதலும்!

திருவிவிலியத்திலும் இறைவெளிப்பாட்டிலும் மீட்பின் திட்டத்தின் அச்சாணியாகவும் அடிநாதமாகவும் விளங்குவது இறை-மனித அன்பு. இவ்வன்பின் இரு பரிமாணங்கள்: அனுபவமும் அனுப்பப்படுதலும். மோசேவுக்கு யாவே இறைவன் பற்றி எரியும் முட்புதரில் வழங்கிய காட்சியில் இவ்விரு அம்சங்களும் வெள்ளிடை மலையாகக் காணப்படுகின்றன. அனைத்து நற்செய்திப் பணியாளர் வாழ்விலும் அனுபவமும் அனுப்பப்படுதலுமே இறைஞானமாக மிளிர்கின்றது.

புனித தெரேசாவின் வாழ்வில் அனுபவமும் அனுப்பப்படுதலும்

பிரான்சு நாட்டில்  லிசியு நகர் கார்மேல் மடத்தில் அடைபட்ட அனுபவ வாழ்விலிருந்து எவ்வாறு இத்தகையதொரு செயல்பாட்டு வாழ்வு தெரேசாவுக்கு மலர்ந்தது என்பது இன்றைய பின்நவீனத்துவச் சமூகத்திற்கு ஒரு கேள்விக்குறியாக அமையலாம். ஆனால், ‘சிறு மலர்என்று அழைக்கப்படும் புனித குழந்தை தெரேசா, இயேசுவை அளவுகடந்த விதத்தில் அன்பு செய்து, உலகின் அனைத்து மக்களுக்காகவும் தன்னையே கையளித்து வாழ்ந் தார். இந்தத் தூய அன்பானது அனைவரையும் சமமாகப் பார்க்ககூடிய ஒரு பரந்த, பாகுபாடற்றப் பார்வையைக் கொடுத்தது. இயேசுவை அன்பு செய்யவும், அவரது அன்பை அகிலமெங்கும் பரப்புவதையுமே தனது கார்மேல் வாழ்வின் இலட்சியமாகக் கொண்டார்.

வரைமுறைகளைக் கடந்த புதுப்பார்வை

அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் வாழ்ந்த பூர்வீகக்குடிகளை அழித்து, அவர்களின் நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் ஐரோப்பியர்கள் கைப்பற்றித் தங்கள் காலனி நாடுகளாக மாற்றினர். இத்தகைய பின்புலத்தில் தெரேசா இந்த ஏழை பூர்வீகக்குடிகளை, “கடவுளைக் கவரக்கூடிய காட்டு மலர்கள் இவர்கள்; இவர்களுடைய உள்ளங்களில்தான் கடவுள் இறங்கி வருகிறார்என நேர்மறையாகப் பார்க்கிறார். அன்றைய ஐரோப்பிய வரைமுறையைக் கடந்த புதுப் பார்வையாக அவரது அணுகுமுறை அமைகின்றது.

தெரேசா தன்னையும் ஒரு காட்டுச் சிறுமலர் என அழைத்து, ‘நானும் அந்தப் பூர்வீகக்குடிகளும் ஒன்றேஎனச் சமத்துவம் பேசுகின்றார். பிற சமய கலாச்சார மரபுகளை மதித்து உரையாடுவதே நற்செய்திப் பணி என்ற இரண்டாம் வத்திக்கான் சங்க புதுப்பார்வையன்றோ அவரில் வெளிப்பட்டுள்ளது!

தெரேசாவின் வாழ்வில் நற்செய்திப்பணி ஆர்வங்கள்

1. பிரான்சினியின் மனமாற்றம்

ஆன்மாக்களை இயேசுவிற்காக அறுவடை செய்யும் மீனவராக தெரேசா தன்னைக்  கருதுகின் றார். அவரது இந்த முயற்சியில்இயேசுவே வலைகளை வீசி மீன்களைப் பிடிக்கின்றார்எனக் கூறுவது, இயேசுவோடு எந்த அளவிற்கு ஒன்றித்திருக்கிறார் எனக் காட்டுகிறது. இந்த ஒன்றிப்பானது அவரது உள்ளத்தில் பிறரன்புத் தீயை மூட்டியது.

சிலுவையில் இயேசுதாகமாயிருக்கிறதுஎன்று கூறியதுஆன்மாக்களுக்காகஎன்றே பொருள்படுகிறது. எனவே, பாவத்தாலும் தீமைகளாலும் இயேசுவை விட்டு விலகியிருக்கும் அனைவரையும் இயேசுவிடம் கொண்டு வந்து சேர்க்கத் துடித்தார் தெரேசா.

இத்தகைய பின்புலத்தில் பிரான்சினி என்ற குற்றவாளி ஒருவர் மரண தண்டனைத் தீர்ப்புப் பெற்றார் என்றும், பல அருள்பணியாளர்கள் முயன்றும் மனம் மாற மறுக்கிறார் என்றும் தெரேசா கேள்விப்பட்டார். பிரான்சினியின் மனமாற்றத்திற்காக இடைவிடாது உருக்கமுடனும் உரிமையுடனும் இயேசுவிடம் இறைவேண்டல் செய்தார். ஆச்சரியப்படக்கூடிய விதத்தில் கடைசி நிமிடத்தில் அந்தக் குற்றவாளி மனமாற்றம் பெற்றவராய் அருள்பணியாளரிடமிருந்து சிலுவையைப் பெற்று மூன்று முறை முத்தம் செய்தார்.

இந்தச் செய்தியை வாசித்தபோது  “மனம் மாறிய பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் (லூக் 15:7) என்ற இறைவாக்கின்மீது நம்பிக்கை கொண்டு பல ஆன்மாக்களை மீட்க வேண்டும் என்ற தாகம் பன்மடங்கு தனது உள்ளத்தில் பெருகியதாகக் கூறுகின்றார்.

2. அன்பின் பணியே நற்செய்திப் பணி

சிறுமலர் தெரேசா, பவுலடியாரின் 1கொரி 12:29-31;13:1 ஆகிய இறைவார்த்தைகளின் அடிப்படையில்திரு அவையில் அன்பு செய்யும் இதயமாக இருப்பேன்எனக் கூறி, அன்பே எனது அழைத்தல் என்று குறிப்பிடுகிறார்.

ஓர் அருள்பணியாளராக, போர்வீரராக, திருத்தூதராக, மறைப்போதகராக, மறைச்சாட்சியாக, இறைவாக்கினராக... உலகம் முழுவதும் பயணம் செய்து இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, சிலுவையிலிருந்து வரும் மீட்பை அனைவரும் பெறுவதற்கு என்னை அர்ப்பணிக்கின்றேன்என்ற வரிகள் அவரது நற்செய்திப் பணியின் ஆர்வத்தையும் அவசரத்தன்மையையும் சுட்டிக்காட்டுகின்றன.

இயேசுவின் மீட்பின் செய்தியை ஐந்து கண்டங்களிலும் அறிவிக்க விரும்புகிறேன்எனக் கூறும் அவர், படைப்பின் தொடக்கத்திலிருந்து, உலக முடிவுவரை நான் நற்செய்திப் பணியாளராக விரும்புகிறேன்; அதற்காக என் இறுதிச் சொட்டு இரத்தம் வரை சிந்த ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

3. நடைமுறை வாழ்வில்

அடைபட்ட கார்மேல் வாழ்வு என்பது புனி மானது, அமைதியானது. ஆனால், அந்த அமைதியும் புனிதமும், தியாகத்திலும் தாழ்ச்சியிலும் மன்னிப்பிலும் விளைந்த கனிகள்தாம். துறவு சகோதரிகளாக இருந்தாலும், ஒரே இடத்தில் வாழ்ந்து, செயல்பட்டு, கடமைகளைச் செய்யும்போது உறவுகளில் உரசல் கள், கடமைகளைச் செய்யும்போது ஏற்படும் சவால்கள், ஆழ்நிலைத் தியான இறைவேண்டல் பயணத் தில் வரும் நம்பிக்கைத் தளர்வுகள், உள்மன வறட்சிகள் என்று எத்தனையோ சவால்கள் அவ்வாழ்வில் உள்ளன. இத்தகைய சவால் நிறைந்த வாழ்வைக் கார்மேல் அருள்சகோதரிகள் ஏன் வாழ்கின்றார்கள்? என்ற உலகினரின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில்தான் சிறுமலர் தெரேசாவின் வாழ்வு.

புன்முறுவலோடு ஒவ்வொரு துன்பத்தையும் ஏற்று, கிறிஸ்துவின் அன்புப் பணிகளுக்காக தீமைகளிலும் அறியாமையிலும் கொடிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பவர்களின் மன மனமாற்றத்திற்காக அர்ப்பணித்து அர்த்தம் கொடுத்தார். ஒவ்வொரு சோதனையையும் சவால்களையும் புரிந்துகொள்ளாத் தன்மைகளையும் நற்செய்திப்பணிக்கான அர்ப்பணிப்பு என்ற மனநிலையோடு ஏற்றுக் கொண்டார்.

தான் நோய்வாய்ப்பட்டதை உணர்ந்து தெரேசா, ‘இந்தச் சிறுமலரின் வாழ்வு எவ்வாறு நிறைவடையும்?’ என்ற கேள்வியைக் கேட்கின்றார். ஒருவேளை இளம்வயதிலேயே இயேசுவின் பாதத்தில் உதிர்ந்து விழலாம். ‘உடல் நலத்தை இறைவன் அருளினால் தொலைதூர நாடுகளுக்குச் சென்று நற்செய்திப் பணித்தளங்களில் நிறுவப்பட்டுள்ள கார்மேல் மடங்களுக்குச் சென்று வாழ்வேன்என்று உறுதி கொண்டார். தொலைதூரங்களில் பணிசெய்து வாழும் நற்செய்திப் பணியாளர்களுக்காக நற்செயல்களைச் செய்து இயேசுவின் பாதத்தில் மலர்களாகக் குவித்தார்.

1யோவான் 3:18 - “நம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல; செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்என்று கூறுகின்றது. சிறுமலர் தெரேசா தன் வாழ்வை அன்பின் சக்தியாக மாற்றி, அந்த அன்பின் சக்தியால் இயேசுவோடு ஒன்றித்து, அகிலத்தையும் ஆட்கொண்டார். அன்பின் தூதுவராக எல்லைகளைத் தாண்டி வருகின்ற அவரது வாழ்வு இன்றைய உலகில்புது விடியலுக்குப் பாடப்படும் பூபாளமாகஅமைகின்றது என்பதில் சந்தேகமில்லை.

 

news
சிறப்புக்கட்டுரை
மணம் வீசும் ரோசா மலர்!

இறை இயேசுவில் அன்பிற்குரியவர்களே..

சிறுமலர்என்று செல் லமாக அழைக்கப்படும் குழந்தை இயேசுவின் புனித தெரேசா தன்னையே இறைவனுக்கென அர்ப்பணித்து, பிரான்ஸ் நாட்டில் லிசியே கார்மேலில் மறைந்து வாழ்ந்து, இருபத்து நான்கு வயதிலேயே இறந்தபோதிலும், அவர்களின்சிறிய வழிஉலகமெங்கும் சென்றடைந்து, புனிதத்தின் நறுமணம் அநேக ஆன்மாக்களை கவர்ந்திழுக்கவே, திரு அவை அவர்களை 1925-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் நாள் புனித நிலைக்கு உயர்த்தியது. எனவே, நம் அன்புச் சகோதரி சிறுமலர் தெரேசாவின் நூற்றாண்டினை இவ்வாண்டு மிக மகிழ்ச்சியுடன் சிறப்பிக்கின்றோம்.

புனிதம் என்பது கற்றறிந்த சான்றோர்களுக்கும் வலிமையுடையோர்க்கும் மட்டும் என்பதல்ல; தந்தை இறைவனின் இரக்கமுள்ள அன்பில் நம்பிக்கை கொண்ட அனைவருக்குமே உரியது என்பதை, சிறுமலர் தெரேசா நமக்குக் கற்றுத் தருகிறார்.

நமது அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறிய, சாதாரணமான செயலையும் மிகுந்த அன்புடன் செய்வது புனிதத்தின் மிகச்சிறந்த பாதை (Royal Road) என்றும், இறைவனில் முழு நம்பிக்கை கொண்டு தன்னையே கையளித்து வாழ்வோர்க்கும் எளியோர்க்கும் இப்பாதை மிகச்சிறந்தது என்றும் கூறுகிறார்.

நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் சேரமாட்டீர்கள்என்ற இறைவார்த்தையைத் தனதாக்கிய சிறுமலரின் வாழ்வு, நாமும் சிறு குழந்தையைப் போன்று நம்மை முழுவதும் இறைவனின் கரத்தில் அளித்திட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகின்றது.

கார்மேல் கன்னியர்களாகிய எங்களின் அன்புச் சகோதரி புனித தெரேசா எங்களின் அன்றாட வாழ்வில் எங்களை ஊக்குவிப்பவராகவும் உற்சாகப்படுத்துபவராகவும் இருக்கின்றார்.

சிறுமலரின் பற்றி எரிந்த ஆன்மாக்கள்மீது கொண்ட தாகமும், மறைபரப்புப் பணியாளர்களின் மேல் அதிக அன்பு கொண்ட அவர்களின் அன்பு நிறைந்த இதயமும், எங்களின் செபங்களும், மறைந்த வாழ்வும் தியாகங்களும் திரு அவைக்கும் உலகத்திற்கும் மிக மிகப் பலன் அளிக்கக்கூடியவை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

அமைதியில் வாழ்கின்ற எங்களது வாழ்வின் வழியாக நாங்களும், கிறிஸ்து இயேசுவோடு இணைந்த ஒன்றிப்பில் ஏற்படும் அன்பின் மகிழ்ச்சி, மணம் வீசும் அன்பு, எமது பரிந்துரை செபங்கள் அனைத்தும்ரோசா மலர் மாரியைப் பொழிவிக்கஅழைக்கின்றது.

இந்த இனிய நூற்றாண்டு, புனித சிறுமலரின் அன்பின் செய்தியை நமக்கு ஊக்கமூட்டி உற்சாகப்படுத்துவதாக!

புனிதம் என்பது அன்றாட வாழ்வின் சிறு செயல்களையும் இறைவன் திருமுன்னிலையில் அன்புடன் செய்திட வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக! நாம் சிறுவழியைப் பிரமாணிக்கமாய் பின்பற்றி வாழ்ந்திட புனித தெரேசா நமக்காகப் பரிந்து பேசுவாராக! விண்ணிலிருந்து ரோசா மலர் மாரியைத் திரு அவை மீதும், உலகத்தின் மீதும், நம் ஒவ்வொருவர் மீதும் பொழிவாராக!!

என்றும் செபங்களுடன்

அருள்சகோதரி கரோலின்

President, St. Joseph Federation of South–East India

news
சிறப்புக்கட்டுரை
குழந்தை தெரேசாவின் குடும்பம் ஒரு குட்டித் திரு அவை

கத்தோலிக்கத் திரு அவை வரலாற்றில் முதன் முறையாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்கத் தம்பதியினருக்கு ஒரே நேரத்தில் புனிதப் பட்டம் கொடுக்கப்பட்டது என்றால், அது குழந்தை தெரேசாவின் பெற்றோர்களான லூயிஸ் மார்ட்டினுக்கும்-செலி கெரினுக்கும்தான்.

இவர்களுக்கு ஒன்பது குழந்தைகள். நான்கு குழந்தைகள் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள். மற்ற ஐந்து பெண் குழந்தைகளும் துறவிகளாக வாழ்ந்தனர். ஒன்பதாவது குழந்தையாகிய குழந்தை தெரேசா உள்பட நான்கு குழந்தைகள் கார்மேல் மடத்திலும், லெயோனி, சந்திப்பு மடத்திலும் (visitation) சேர்ந்து துறவிகளாக வாழ்ந்தனர். குழந்தை தெரேசாவுக்கு 1925-இல் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு லெயோனிக்குகடவுளின் ஊழியர் (Servant of God) என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதே ஆண்டில் அக்டோபர் 18-இல் திருத்தந்தை பிரான்சிஸ், இவர்களுடைய பெற்றோர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.

புனித லூயிஸ் மார்ட்டின் ஒரு குருவானவராக வாழ விரும்பினார். அவருக்கு இலத்தீன் மொழி மிகவும் கடினமாக இருந்ததால், அவரால் குருவானவராக முடியவில்லை. செலி கெரினும் ஒரு கன்னியர் சபையில் சேர்ந்து துறவியாக வாழ விரும்பினார். அவருடைய உடல்நலன் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே, திருமணத்திற்குப் பிறகு தனக்கு நிறைய குழந்தைகள் பிறக்க வேண்டும், அவர்கள் அனைவரையும் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று அப்போதே கடவுளிடம் வேண்டினார். லூயிஸ் மார்ட்டினும் செலி கெரினும் சந்தித்துத் திருமணம் செய்துகொள்கின்றனர். பத்து மாதங்களாகத் தாம்பத்திய வாழ்வு வாழாத இவர்கள், ஆன்ம குருவானவரால் அறிவுறுத்தப்பட்டு, தாம்பத்திய வாழ்வு வாழ்ந்து ஒன்பது பிள்ளைகளுக்குப் பெற்றோராகின்றனர்.

இவர்கள் அன்னை மரியாமீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார்கள். அதை வெளிப்படுத்தும் விதமாக அனைத்துக் குழந்தைகளையும் அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கும் வகையில்மரியஎன்ற அன்னை மரியாவின் பெயரை அனைத்துக் குழந்தைகளின் பெயருக்கு முன்பாகச் சேர்த்துப் பெயர் வைத்தார்கள். அவ்வகையில் குழந்தை தெரேசாவின் திருமுழுக்குப் பெயர்மரிய பிரான்சிஸ் தெரஸ்என்பதாகும். கடவுளுக்குப் பணி செய்ய தங்களுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை; தங்களின் பிள்ளைகள் அனைவரும் கடவுளின் அழைப்பைப் பெறவேண்டும் என்பதில் கவனமாய் இருந்தார்கள். அதற்காகத் தினமும் இறைவேண்டல் செய்தார்கள். தங்களுக்கு ஒரு மகன் பிறக்க வேண்டும், அவனை வேதபோதக நாடுகளுக்குப் பணி செய்ய ஆண்டவர் அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அவர்களுக்குப் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகளும் சிறுவயதிலேயே இறந்து விட்டார்கள். எனினும், அவர்களின் விருப்பம் வீண் போகவில்லை. அவர்களின் கடைசிக் குழந்தை தெரஸ் வேதபோதக நாடுகளின் பாதுகாவலியாகும் பேறுபெற்றாள்!

குழந்தை தெரேசாவின் பெற்றோர்கள் துறவியாக வாழ ஆண்டவர் அழைக்காவிட்டாலும், தங்கள் குடும்பத்துக்குள்ளே ஒரு துறவற சூழலை உருவாக்கினர். துறவற சமூகங்களில் மூன்று முக்கிய நிகழ்வுகள் தினமும் நடக்கும். சேர்ந்து இறைவேண்டல் செய்வது, சேர்ந்து உண்பது மற்றும் சேர்ந்து உறவாடுவது. இவை மூன்றும் இவர்களின் குடும்பத்தில் சிறப்பாக நடைபெற்றன.

இந்தப் புனிதத் தம்பதியர் தங்களுடைய வார்த்தைகளால் அல்ல; வாழ்வால் நல்ல தூண்டுதல் தரும் பெற்றோராகத் தங்கள் குழந்தைகளுக்கு முன் வாழ்ந்து காட்டினர். சேர்ந்து திருப்பலிக்குச் செல்வது, திவ்ய நற்கருணை உட்கொள்வது, இறைவேண்டல் செய்வது, ஞானவாசகம் வாசிப்பது, திருவிவிலியம் படிப்பது, தியானிப்பது, மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது போன்றவற்றைச் செய்து, தங்களின் குடும்பத்தை ஒரு குட்டித் திரு அவையாகவே மாற்றினர்.

மிகச் சிறியோராகிய என் சகோதர சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் (மத் 25:40) என்ற இறைவாக்கை தெரேசின் தந்தை புனித லூயிஸ் மார்ட்டின் வாழ்வாக்கினார். தங்களின் வருவாயில் ஒரு பகுதியை நற்செய்தி அறிவிக்கும் ஒரு துறவற சபைக்கு ஆண்டுதோறும் கொடுத்தார்கள். குடிமயக்கத்தால் சாலையோரத்தில் கிடந்த ஓர் ஏழைத் தொழிலாளியைக் கைதூக்கி எழுப்பி, அவரது குடிசையில் கொண்டுபோய் சேர்த்தார். வலிப்பு நோயினால் துன்புற்ற ஓர் ஏழைக்கு உதவி செய்ய தன் தொப்பியைக் கழற்றி பிச்சை எடுத்துக் கிடைத்த போதிய பணத்தை அந்த வலிப்பு நோய்க்காரருக்குக் கொடுத்து உதவினார்.

குழந்தைகள் பொதுவாகத் தாங்கள் கேட்பதைக் காட்டிலும், பார்ப்பதையே பின்பற்றுவர். அந்த வகையில் தங்களின் பெற்றோரிடம் கண்ட இந்த அருமையான கிறித்தவப் பண்புகளைக் குழந்தைகளும் பின்பற்றத் தொடங்கினர். பெற்றோரைப் போலவே அவர்களது குழந்தைகளும் அன்பும் ஆழ்ந்த நம்பிக்கையும், உறுதியான பக்தியும் கொண்டவர்களாய் வாழ்ந்தனர். ‘ஒவ்வொரு குடும்பமும் ஒரு குட்டித் திரு அவைஎன்று கூறுவதற்குக் காரணம், திரு அவை போன்று ஒவ்வொரு குடும்பமும் ஓர் இறைச் சமூகமாக நம்பிக்கையிலும் அன்பிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதிலும் வளரவேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காகவே. குடும்ப உறவுகளில் திரு அவையின் மதிப்பீடுகள் இடம்பெற வேண்டும்; ஒவ்வொரு குடும்பமும் இறைநம்பிக்கையை வளர்த்தெடுக்கும் இடமாக வேண்டும்; ஒவ்வொரு குடும்பத்திலும் அன்பு, மன்னிப்பு, பரஸ்பர ஆதரவு இடம்பெற வேண்டும்; ஒருங்கிணைந்து ஒரே பாதையில் செல்லவேண்டும் என்பதே இன்றைய திரு அவையின் நோக்கமாக இருக்கிறது.

திரு அவையில் காணப்படும்நாம் கத்தோலிக்கர்கள்என்ற சேர்ந்த உணர்வு குடும்பத்தில் இருக்க வேண்டும். நற்செய்திப் பகிர்வு ஒவ்வொரு குடும்பத்திலும் இடம்பெறவேண்டும். நற்செய்தியின் மதிப்பீடுகளுக்குச் சான்றுபகரக் கூடியவர்களாகக் குடும்பத்தினர் இருக்கவேண்டும். குடும்பத்தில் இறைநம்பிக்கை, அன்பு, திரு அவையின் போதனைகள், விழுமியங்கள் வளர்த்தெடுக்கப்படுவதாலும் வாழப்படுவதாலும்குடும்பம் ஒரு குட்டித் திரு அவைஎன்று அழைக்கப்படுகின்றது. குழந்தை தெரேசாவின் குடும்பத்தில் மேலே கூறப்பட்ட அனைத்துமே காணப்பட்டன என்பதற்கு தெரேசா எழுதியஓர் ஆன்மாவின் வரலாறுசான்றாகும்.

குழந்தை தெரேசா கடைசிக் குழந்தை என்பதனாலேசின்ன ராணிஎன்று அவரது தந்தை அன்பொழுக அழைத்தார். அனைவருமே இவர்மீது பாசமழை பொழிந்தார்கள். குழந்தைக்குரிய தன்னன்பு, பிடிவாதம் போன்ற குறும்புத்தனங்கள் இருந்தாலும், தன் தவறுக்காக மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தைத் தன் சிறுவயதிலிருந்தே தெரேசா வளர்த்துக்கொண்டார்.

குடும்பத்தில்தான் மானுட ஆன்மா, வாழ்வின் பொருள் பற்றிய பார்வை எல்லாம் முளைத்தெழுகிறதுஎன்று திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் கூறுகிறார். பெற்றோர் வாழ்வின் உரிமையாளர்கள் இல்லையென்றாலும், அவர்கள் மூலம்தான் இறைநம்பிக்கை, எதற்காக வாழவேண்டும் என்ற வாழ்வின் பொருள் போன்றவை பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்குப் பரவுகிறது மற்றும் தங்களின் எடுத்துக்காட்டான வாழ்வால் பகிரப்படுகிறதுதெரேசாவின் பெற்றோர் இதற்கு ஒரு சான்று என்று கூறினால் அது மிகையாகாது.

தெரேசாவின் பெற்றோர் ஒருபோதும் குழந்தைகளைச் செபிக்கச் சொல்லிவிட்டு வேறு வேலை செய்ததில்லை. தெரேசாவே தன் சுயசரிதையில் இதைப் பதிவு செய்திருக்கிறார். பெற்றோர் பிள்ளைகளோடு சேர்ந்து செபிப்பது குழந்தைகள் அருள்வாழ்வில் வளர மிகவும் தேவை என்பதை இச்செயல் உணர்த்துகிறது. தன்னுடைய நான்காவது வயதிலேயே தெரேசா தன் தாயை இழந்தாலும், தன் அப்பாவின் அன்புள்ளத்தில் அன்னைக்குரிய அன்பை அனுபவித்தார். தன் அக்காமார்கள் அனைவரும் தன்னலம் கருதாத அன்பும், தாய்க்குரிய கனிவும் தன்மீது காட்டி வந்தார்கள் என்பதையும் தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு தெரேசாவின் பெற்றோர் ஆழமான இறைநம்பிக்கையிலும் நற்கருணை சந்திப்பிலும் இறைவேண்டலிலும், இறைவனை நோக்கிய பயணத்தில் இணைந்து செயல்படுவதிலும் ஈடுபாடு கொண்டு வாழ்ந்து, தங்கள் பிள்ளைகளுக்குப் பகிர்ந்து வாழவைத்ததால் அவர்களின் குடும்பம் ஒரு குட்டித் திரு அவையாக, நம் அனைவரின் குடும்பத்திற்கும் வழிகாட்டியாக அன்றும் இன்றும் என்றும் திகழ்கிறது.