போரில் முதல் 24 மணி நேரத்தில் மற்றொரு நாட்டின் 1000 இலக்குகளைப் பாரம்பரிய உத்திகளால் துல்லியமாகத் தாக்க முடியும் என்பது இயலாத காரியம்; ஆனால், இது அமெரிக்கா-ஈரான் போரில் சாத்தியமானது. கடந்த நூறு ஆண்டுகளாகவே தானியங்கி ஆயுதங்கள் குறிப்பிட்ட அளவில் உதாரணமாக, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி நாட்டின் ‘பஸ் குண்டுகள்’ (Buzz bombs), கடல் கண்ணி (mines) வெடிகள், ஏவுகணைகள், இஸ்ரேல் நாட்டின் தற்காப்பு இரும்புக் கலசம் (Iron Dome) அமெரிக்காவின் பேட்ரியாட் (Patriot) வான் ஏவுகணை என்று பல வடிவங்களில் பயனிலிருந்து வருகின்றன.
உலக
வரலாற்றில் பல போர்கள் நடந்தாலும்,
2026-ஆம் ஆண்டின் வளைகுடா போர் வேறுபட்டிருந்ததை மக்கள் கண்டு வியந்து கலக்கமுற்றதை அறிவோம். இதன் வேகமும் துல்லியமும் பின்னணியில் ஏதோ ஒரு கருவியின் செயலாற்றல் இருப்பதைப் பார்க்கவும் முடிந்தது. இலக்குகளைத் தீர்மானித்தல், குறிவைத்தல், உளவாற்றல் (intelligence) மற்றும் உடனுக்குடன் போர் அழிவுகளைக் கணித்தல், தொடர்ச்சியாக இயங்கும் ஆற்றல், போரை நடத்தும் தலைமைக்கு இலக்குகளுக்கேற்ப ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்தல் என்பவைகளில் ஏ.ஐ. கருவிகள்
பங்காற்றின என்பதே இதன் இரகசியம்.
இலக்குகளை அறிய
மனிதன்
தேவையில்லை
2024-26 உக்ரைன்-இரஷ்யப்
போரில் ட்ரோன்களின் பயன்பாட்டிற்குப் பஞ்சமில்லையென்பதைப் பார்த்தோம். ஆயிரம் கி.மீ. தூரத்திலுள்ள
இரஷ்ய எண்ணெய் கிணறுகள், எரிவாயுக் கட்டமைப்புகளை உக்ரைன் ட்ரோன்கள் ஏ.ஐ. மூலம்
மனிதத் துணையில்லாமல் தானாகவே பயணித்துத் தாக்கியது இதற்குச் சான்றாகக் கூறப்படுகிறது.
இன்றைய
இராணுவத் தொழில்நுட்ப வளர்ச்சியை 2003-இன் ஈராக் போருக்கு ஒப்பிட்டும் பேசப்படுகிறது. அன்று ஓர் இலக்கைத் தாக்குவதற்கு 2000 உளவு அமைப்புகளின் வேலையை இன்றைய ஈரான் போர் முனையில் அமெரிக்காவின் ‘எபிக்ஃயூரி’ (Epic FUR) ஏ.ஐ.
துணையோடு இருபது இராணுவ வீரர்களைக் கொண்டு செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஏ.ஐ.
கருவிகளின்
அபார
வேகம்
‘கண்ணிமைக்கும் நேரத்தில்’
என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். பாரம்பரியப் போர் முறையில் பல வாரங்களெடுப்பதை ஏ.ஐ.
செயலாற்றல் தரவுகள் அடிப்படையில், மனிதர் நினைக்கும் (speed of thought) வேகத்தை மிஞ்சும்
அளவிற்கு உள்ளதாகவும், இயந்திரங்களின் இயக்கத்தை மனிதர் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படியாக இரப்பர்
ஸ்டாம்ப் (Rubber stamp)
செய்வது போன்று கூடயிருக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.
ஈரான்
போரில் அமெரிக்காவின் கை மேலோங்கியிருப்பதற்கு இராணுவத்தில் ஏ.ஐ.யின் பயன்பாடே
முக்கியக் காரணமென்று கூறப்படுகிறது. மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஈரான்-அமெரிக்கப் போரின் வீடியோக்கள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தினால்
(AI - Generated Fake Contents) போலியான ஒரு
வருட பழைய போட்டோக்களையும் தயாரித்து, சில நிமிடங்களில் சமூக ஊடகங்களில் பணமாக்கப்படுவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமன்றி, மக்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகக்
கூறப்படுகிறது. இதனை ‘டிஜிட்டல் உளவியல் பயங்கரவாதம்’ (Digital psychological terrorism)
என்கின்றனர்.
போரில் சைபர்-ஏ.ஐ.
நேரடிப்
போர் மோதலுக்கு முன் (Kinetic operations)
களநிலவரத்தை நிதானிப்பதில் இன்றைய சைபர் தொழில்நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. சைபர் என்பது ஓர் ஆயுதமல்ல; சூழலைப் பற்றிய தகவல்களை வடிவமைத்து, போரை முன்னெடுத்துச் செல்ல உதவும் தொழில்நுட்பம்.
அண்மைக்காலப்
போர்களில், போர் தொடங்குமுன் எடுக்கும் முக்கிய யூகங்களுக்கு ஏ.ஐ. சைபர்
உளவு, ஹேக்கிங் (espionage and hacking) நுட்பங்கள் உதவின
என்றும் கூறப்படுகிறது. போக்குவரத்து சந்துமுனை கேமிராக்கள் முதல் கணினி இணையதளம் மற்றும் கைப்பேசி கோபுரங்கள் வரை சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் துல்லியமான தாக்குதல், அச்சுறுத்தல்களைத் தவிர்த்தல் என்ற போரின் போக்கிற்கு சைபர் ஏ.ஐ. தொழில்நுட்பத்
திறனே காரணம் என்கின்றனர்.
முழுமையான செயல்பாட்டை
இயந்திரங்களிடம்
விடலாமா?
ஏ.ஐ. ஒரு தொழில்நுட்ப
அமைப்பாக மனிதர் முடிவுகளை எடுக்க உதவும் கருவி. இது மனிதத் திறனுக்கு மாற்று அல்ல என்பதுதான் அனுபவம். ஏ.ஐ. மூலம்
கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் புதிய தரவுகளை உருவாக்கி முன்கணிப்பை மேம்படுத்தும் திறன்பெற்றது. இதில் ‘கணித்தல்’
என்பது முடிவுகளை எடுக்க உதவும் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. இவ்வாறு எடுக்கும் முடிவுகளால் ஏற்படும் விளைவுகளைச் சந்தித்தல், அதற்கான தீர்வுகளை அறிதல் என்பவைகளுக்கு ஏ.ஐ. பொறுப்பேற்க
இயலாத நிலையில், மனிதரின் முக்கியத்துவம் ஈடு செய்ய முடியாததாகப் பார்க்கப்படுகிறது.
ஏ.ஐ.
அழைத்துச்
செல்லும்
பாதை
இன்று
ஏ.ஐ.யின் ஒவ்வொரு
மேம்பட்டத் திறனும் ஏதோ ஒருவகையில் இராணுவத் தேவைக்கென்பதாகவே பார்க்கப்படுகிறது. ஏ.ஐ. தொழில்நுட்பம்
என்பது தரவுகள் சேமிப்பு முதல் சோதனை வரை மக்களின் நடைமுறைத் தேவைக்கு மட்டுமின்றி, இராணுவப் பயன்பாட்டிற்கும் என்றாகி விட்டது.
தொடக்கக்
காலத்தில் வணிகத் தேவைக்கென்று அன்றாடத் தரவுகள் அடிப்படையில் உருவெடுத்தவையே நாம் பயன்படுத்தும் உலகப் புகழ்பெற்ற மாடல்களான சேட்ஜிபிடி (openAI), க்ளாட் (Anthropic), லாமா
(Meta) என்பவை.
ஆனால், இன்று இவை இராணுவத் தேவைகளுக்கு மாற்றியமைக்கப்பட்டு வருவது நமக்குத் தெரிவதில்லை. உலகளவில் பயனில் உள்ள கணினிப் பார்வை (computer vision) தொழில்நுட்பம் ஒவ்வொரு
நாளும் மேம்படுத்தப்பட்டு, இராணுவத் தேவைக்கேற்ப மேலும் உயர்தர வடிவில் விஞ்ஞானம் மாற்றியமைத்துத் தருகிறது.
இன்று
நடக்கும் அமெரிக்கா - ஈரான் போர் செயலாற்றலில் பன்மடங்கு வேறுபட்டிருப்பதன் காரணம் ஏ.ஐ. தொழில்நுட்பமே
என்கின்றனர். நிமிடத்திற்கு நிமிடம் தரையின் நிகழ்வுகள் அனைத்தும் செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மூலம் துல்லியமாகப் படம்பிடித்துப் போரை நடத்த உதவியதன் விளைவுகளை நாமே காண முடிந்தது. இதே தொழில்நுட்பம் மீண்டும் மக்களைக் கண்காணிக்கப் (surveillance) பயனில் வருவதும், இதின் பின்னிருப்பது இலாபமீட்டும் பெரும் நிறுவனங்கள் என்பதும் நடைமுறை.
இவ்வாறு
ஏ.ஐ. தொழில்நுட்பம் உலகளவில்
மேலோங்கி வளர்வது, ஒட்டுமொத்த உலகச் சமுதாயத்திற்கும், தனிமனிதச் சுதந்திரத்திற்கும் ஆபத்தை விளைவிக்குமா என்ற அச்சம் எழுகிறது.
முனைவர் மி. நோயல் அவர்கள் காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வு நிறுவனத்தில் (CECRI) முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். மின்வேதியியல் துறையில் ஒரு நூலையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் உலக அளவில் வழங்கியதோடு, பல மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். மேலும், இவர் அறிவியல் செய்திகளையும், அறிவியல் சிந்தனைகளையும் தமிழ் மக்களிடையே கொண்டு செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழில் 20-க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் வழிகாட்டுதல் நூல்களை எழுதி, தமிழ் அறிவியல் இலக்கிய உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். தற்போது நமது ‘நம் வாழ்வு’ இதழில், இளையோருக்காக ‘இளமை ஒரு சவால்’ எனும் புதிய தொடர் கட்டுரையை எழுத முன்வந்துள்ளார். பன்முகத் திறமை கொண்ட முனைவர் மி. நோயல் அவர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறோம்.
முதன்மை ஆசிரியர்
இன்றைய
இளமை ஓர் அருமையான வாய்ப்பா? சவால்கள் நிறைந்த ஒரு வாழ்க்கைப் போராட்டமா? இந்தக் கேள்விகளுக்கான விடை - அதை நாம் யாரிடம் கேட்கிறோம்? என்பதைப் பொறுத்தது.
பழைய
தலைமுறை, ‘அந்தக் காலத்தில் எங்களுக்கெல்லாம் என்ன வாய்ப்பு வசதி இருந்தது? பள்ளிக்கூடமா? போக்குவரத்தா? மின்சாரமா? தொலைக்காட்சியா? கைப்பேசியா? எங்களுக்கெல்லாம் கிடைக்காத எத்தனையோ வசதி வாய்ப்புகள் இன்று கிடைக்கின்றன. இன்றைய இளையோருக்கு என்ன? அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் அவர்கள் எவ்வளவோ சாதிக்கலாம்?’ என்று அலுத்துக்கொள்ளும்.
இதில்
உண்மை இல்லாமல் இல்லை; அவர்களது எதிர்பார்ப்புகளும் நியாயமானவைதான். இன்றைய இளைய தலைமுறையினரும்கூட இன்றைய நல்வாய்ப்புகளை உணர்ந்துதான் இருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையோடும் வளர்கிறார்கள். புதுப்புது உடையலங்காரம், சொகுசான
வாகனங்கள், கைப்பேசிகள், அவற்றில் இடைவிடாமல் தொடரும் கலகலப்பான உரையாடல்கள், நாலுபேர் கூடுமிடத்தில் நடக்கும் ஆட்டம்பாட்டம், கொண்டாட்டம், விருந்து, வாணவேடிக்கை...!
இன்றைய
இளைய தலைமுறையினரின் குதூகலத்திற்குக் கொஞ்சமும் தடை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால், இந்த வாய்ப்புகளைத் தாண்டி அவர்கள் சந்திக்கப்போகிற சவால்கள் அவர்களுடைய கவனத்தைத் தேவையான அளவு ஈர்த்திருக்கிறதா? அவற்றை எப்படி நாம் எதிர்கொள்ளப்போகிறோம்? அந்தச் சவால்களைச் சந்திக்க இன்று நாம் என்ன செய்யவேண்டும்? நம்மை நாமே எப்படித் தயாரித்துக்கொள்ளவேண்டும்?
இன்றைய
வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால், நம் வருங்காலம் என்ன ஆகும்? முழுச் சந்தைமயமாகிவிட்ட உலகம் எப்படி நம்மை ஓரங்கட்டிவிட்டுப் போகும்?
பலர்
தேய, சிலர் மட்டும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறும் உலகம் இது. இன்றைய போட்டிச்சூழலில் தள்ளாடும் பலரை நாம் தினமும் பார்க்கிறோம். வருங்காலத்தில் நாமும் இவர்களைப் போல் பரிதவிக்கப் போகிறோம். இல்லை... இல்லை... இன்றே நம் வருங்காலச் சவால்களைச் சந்திப்பதைப் பற்றிச் சிந்திக்கப் போகிறோமா?
இன்றைய
இளமை சந்திக்கும் சில சவால்களைப் பட்டியலிட்டுக்கொள்வோமா?
எல்லாவற்றையும்
அவசரகதியில் அனுபவித்து விடவேண்டும் என்று முட்டிமோதிக்கொள்கிறோமா? நிதானம் காட்டுகிறோமா?
பெற்றோரின்
துணையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு நம் காலில் நிற்கப் பழகுகிறோமா? பெற்றோருக்குச் செல்லமான சுமையாக மாறிப்போகிறோமா?
பணம்,
வெற்றி என்ற நோக்கங்களை மட்டும் குறிவைத்து ஓடும் பந்தயக் குதிரைகளாக வளர்கிறோமா? மனித உறவுகளை மதிக்கும் வாழ்க்கைப் போட்டிக்கு நம்மைத் தயாரித்துக் கொள்கிறோமா?
நம்
பருவப் பயணத்தில் எல்லைகளையும் கட்டுப்பாடுகளையும் மதிக்கப் பழகுகிறோமா? வெம்பிப் பழுத்து வீணாகும் கூட்டத்தில் கலந்து கரைந்து போகிறோமா?
கிடைக்கின்ற
வேலைகளையும் வாய்ப்புகளையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, படிப்படியாக முன்னேற முயல்கிறோமா? அது சரியில்லை, இது சரியில்லை என்று புலம்பியே காலந்தள்ளப் போகிறோமா?
பணம்,
பதவி, உல்லாசம், உயரம் என்று ஓயாமல் உச்சாணிக் கொம்பை எட்டிப்பிடிக்க முயன்று வாழ்வைத் தொலைக்கப் போகிறோமா? உறவையும் வாழ்வையும் மதிக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொள்ளப் போகிறோமா?
நம்முடைய
வருங்கால வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து மற்றவர்களுக்குச் சுமையாக இருக்கப் போகிறதா? சுமைதாங்கியாக இருக்கப் போகிறதா?
நாளைய
இலக்கை நோக்கி இன்றே நம் வாழ்க்கைப் பாதையைச் சீரமைக்க நம்மால் முடியும். நம்மால்
மட்டும்தான் முடியும்! நாம் மாறப் போகிறோமா? பிடிவாதமாகச் சரிவுப் பாதையில் பயணிக்கப் போகிறோமா?
இந்த
நம்முடைய இளமைச் சவால்களைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்திப்போம். தொடர்ந்து சிந்திப்போம்; வாழ்க்கை ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய சவால்களையும் கொண்டுவரும், வாய்ப்புகளையும் கொண்டுவரும். என் சவால்களைச் சந்திப்பேன்; வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவேன்.
மல்லிகா பேகம் சாலையோர இட்லிக்கடை ஒன்றை நடத்தி வந்தாள். இளம் வயதிலேயே காதல் திருமணம் செய்துகொண்டதால், அவளை அவளுடைய குடும்பத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே ஊரில் இருந்தபோதும் இன்றுவரை அக்குடும்பத்திலிருந்த யாரும் அவளோடு பேசுவதில்லை.
பள்ளத்தில்
உருண்டோடும் சக்கரத்தைப்போல ஆண்டுகள் பல வேகமாகத் தலைதெறிக்க
ஓடிவிட்டன. ஆனாலும், இரு குடும்பத்தாருக்கும் இடையே இருந்த கோபம் மட்டும் தீரவில்லை.
மல்லிகாவிற்கு
இப்போது நாற்பது வயதிருக்கும். பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்திருந்தாள். ஆனாலும், தனக்கும் தன் குடும்பத்திற்கும் சோறுபோட்ட இந்தச் சாலையோர இட்லிக்கடையை மட்டும் விட்டுச்செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.
காலையிலும்
மாலையிலும் மட்டும் இட்லிக் கடை திறந்திருக்கும். மாவாட்டுவது, இட்லி சுடுவது, சந்தைக்குச் சென்று பொருள்கள் வாங்குவது என்று அவளுடைய வாழ்க்கை எப்போதும் ஆவியாய் பறந்து கொண்டிருந்தது. அவளுடைய கணவரும் பிள்ளைகளும் மாமியாரும் அவ்வப்போது உதவி செய்வதுமுண்டு.
மல்லிகா
பேகத்தின் அண்ணன், அவர் மகள் பாத்திமாவைத் தேர்வு நாள்களில் பள்ளிக்குத் தன் பைக்கில் வைத்து அழைத்துச்செல்வார். சீக்கிரம் செல்லவேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் மல்லிகாவின் கடையில்தான் இட்லி வாங்கிச்செல்வார்கள். ஆனால், அவர்களுக்குள் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்பதுபோல இருப்பார்கள். அந்த ஊரில் வேறுகடை இல்லையென்பதால், மல்லிகாவிடமே இட்லி வாங்கவேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது. ஆனாலும், மல்லிகா தன் அண்ணன் மகளுக்கு இட்லி பொட்டலத்தில் கூடுதலாக இட்லி ஒன்றையோ அல்லது வடை ஒன்றையோ வைக்காமல் இருந்ததே இல்லை.
ஒருநாள்
தன் போனில் கியூ.ஆர். கோடு வழியாகப் பணம் செலுத்திக்கொண்டிருந்த பாத்திமா ‘கியூ.ஆர். கோடுல காசு போகல, அப்பா! உங்ககிட்ட இருபது ரூபாய் சில்லறை இருக்குமா?’ என்று பக்கத்துப் பெட்டிக்கடையில் நின்றுகொண்டு பீடி பிடித்துக்கொண்டிருந்த தன் அப்பா மன்சூரிடம் கேட்டாள் பாத்திமா.
தன்
சட்டைப் பாக்கெட்டைப் பார்த்துக்கொண்டே ‘இல்லையேமா’
என்றார் மன்சூர். தான் விரோதம் பாராட்டும் தன் தங்கையிடமிருந்து எப்படி ஓசிக்கு இட்லி வாங்குவது? மன்சூருக்கு ஏதோபோல் இருந்தது.
‘காசில்லனா பிரச்சினையில்ல, நாளைக்கு வரும்போது கொடுமா’ என்று இட்லிப் பொட்டலத்தை எடுத்து பாத்திமாவின் கைகளில் திணித்தாள் மல்லிகா பேகம்.
பாத்திமாவிற்கு
என்ன செய்வது என்று தெரியவில்லை. இட்லிப் பொட்டலத்தை வாங்கவா? அல்லது வேண்டாமா? என்று எண்ணிக் கொண்டிருந்தபோதே, ‘ஓடிப்போனவ கையிலிருந்து பிச்சையெடுக்கவா உன்ன பெத்தேன்?’ என்று சொல்லிக்கொண்டே பாத்திமாவின் கையிலிருந்த இட்லிப் பொட்டலத்தை வாங்கி கீழே வீசியெறிந்தார் மன்சூர்.
தரையில்
விழுந்து கட்டவிழ்ந்து சிதறிக்கிடந்த இட்லிப் பொட்டலத்தைப்போல எத்தனையோ ஆண்டுகளாகக் கட்டிவைக்கப்பட்டிருந்த அவர்களின் கோபம் பெரும் சண்டையாக வெடித்தது.
சண்டையைப்
பலரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வார்த்தைப் போர் எப்போது முடியும் என்பது யாருக்கும் தெரியவில்லை. பாத்திமாவிற்குக் கடைசித் தேர்வு எழுதச் செல்ல நேரமாகிறது. என்ன செய்வதென்று அறியாமல் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பசியில் நின்றுகொண்டிருந்தாள் பாத்திமா.
பேசாமலிருப்பது
எவ்வளவிற்குப் பிரச்சினையை வருவிக்குமோ, அதேபோல அதிகமாகத் தேவையற்றதைப் பேசுவதும் பல்வேறு இக்கட்டுகளையும் பிளவுகளையும் கொண்டுவரும். பேச்சுரிமை என்பது இந்திய நாட்டினுடைய அரசமைப்புச் சட்டம் அதன் குடிமக்களுக்குத் தரும் சட்டப் பாதுகாப்பு எனலாம். இந்திய அரசமைப்பின் 19(1)(a) பிரிவானது,
அனைத்துக் குடிமக்களுக்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையை உறுதி செய்கிறது. இதன் மூலம் அவர்கள் பேச்சு, எழுத்து, அச்சு அல்லது ஊடகங்கள் மூலம் தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய அரசமைப்பின் பிரிவு 19(2)-இன் அடிப்படையில் சில வரம்புகளும் உள்ளன. இதன் அடிப்படையில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு (Sovereignty and integrity
of India), மாநிலத்தின்
பாதுகாப்பு (Security of the State), வெளிநாடுகளுடனான
நட்புறவு (Friendly Relations with Foreign Nations), பொது ஒழுங்கு (Public Order), கண்ணியம்
அல்லது ஒழுக்கம் (Decency or Morality), நீதிமன்ற
அவமதிப்பு (Contempt of Court), அவதூறு
(Defamation), ஒரு
குற்றத்திற்குத் தூண்டுதல் (Incitement to an offense) போன்றவைகளுக்குக்
குந்தகம் அல்லது விதிமீறல் ஏற்படாதவாறு பேச்சுரிமை மற்றும் கருத்துச்சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை இச்சட்ட வரம்பு எடுத்துரைக்கிறது. எனினும், ‘தி பியூச்சர் ஆப்
ப்ரீ ஸ்பீச்’
(The Future of Free Speech) அமைப்பின்
2025-ஆம் ஆண்டுக்கான பேச்சுரிமைக் குறியீட்டில் இந்தியா 62.6 புள்ளிகளைப் பெற்று 33 நாடுகளில் 24-வது இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு
வலுசேர்க்கும் விதத்தில் மார்ச் 23, 2026 அன்று ‘தி இந்து’ பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில், 2014 முதல் 2021 வரை முடக்கப்பட்ட URL மற்றும்
இணையதளக் கணக்குகளின் எண்ணிக்கை 470-லிருந்து 9,800-ஆக உயர்ந் துள்ளது
என்கிறது. அதிலும் குறிப்பாக, மத்திய அரசுக்கு எதிராகக் கருத்து கூறுபவர்களின் இணையதளக் கணக்குகள் முடக்கப்படுவதாக அக்கட்டுரை செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல்
தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் பிரிவு 69A-படி,
அரசு ஒரு கணக்கை முடக்க வேண்டுமெனில், அதற்கான சரியான காரணங்களை வழங்கவேண்டும்; ஆனால், 2009-ஆம் ஆண்டின் விதி 16-ஐப் பயன்படுத்தி இணைய தளத்தை முடக்கும் நடவடிக்கைகளை அரசு இரகசியமாக வைக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தங்கள் கணக்கு ஏன் முடக்கப்பட்டது என்ற காரணம் தெரியாததால், அவர்களால் நீதிமன்றத்தை நாட முடிவதில்லை.
ஒரு
நபரின் முழு சமூக ஊடகக் கணக்கை அல்லது இணைய தளத்தை முடக்குவது என்பது அவரை டிஜிட்டல் முறையில் அந்நியப்படுத்துவதற்குச் (Digital Exile) சமம்.
இது கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதோடு, ஒரு நல்ல சனநாயகத்திற்குப் பதிலாக அதிகாரத்துவ ஆட்சிக்கே வழிவகுக்கும் என்று இக்கட்டுரை எச்சரிக்கிறது.
திரையில் ஆயிரம் கதைகள் ஓடுகின்றன; ஆனால், சொல்லப்படாத ஒரு கதை மட்டும் இதயத்தின் உள்ளே அமைதியாக வாழ்கிறது.
இன்று
உலகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த வேகத்தில் அதிகமாக ஓடிக்கொண்டிருப்பது மனிதன் அல்ல; அவனது விரல்கள்.
ஒரு
திரையை ‘ஸ்க்ரோல்’
செய்யும் அந்தச் சில விநாடிகளில் நாம் சிரிக்கிறோம், ஆச்சரியப்படுகிறோம், பொழுதைக் கழிக்கிறோம். ஆனால், ஒரு நிமிடம் அமைதியாகச் சிந்தித்துப் பார்த்தால், நாம் உண்மையில் வாழ்கிறோமா? அல்லது திரையில் காட்டப்படும் வாழ்க்கையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கிறோமா?
இன்றைய
இளையோரின் வாழ்க்கையில் ‘ரீல்ஸ்’ என்பது ஒரு பொழுதுபோக்கு மட்டுமல்ல; அது ஒரு பழக்கமாகவும், சிலருக்கு அது ஒரு தப்பிக்கும் உலகமாகவும் மாறிவிட்டது. ஒரு நிமிட வீடியோ நமக்குச் சிரிப்பைக் கொடுக்கலாம். ஆனால், அந்த வீடியோ முடிந்தபின் நம் இதயத்தில் இருக்கும் வெறுமையை அது நிரப்புகிறதா? நேரத்தைச் செலவிடுகிறோம் என்று நினைக்கிறோம்; ஆனால், பல நேரங்களில் நேரம்தான்
நம்மை மெதுவாக எடுத்துச் செல்கிறது.
இன்று
உண்மை முகத்தைவிட ‘பில்டர்’ போட்ட முகமே அதிகமாகப் பார்க்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் எல்லாரும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் இருப்பது போலத் தெரிகிறார்கள். ஆனால், உண்மை வாழ்க்கை அப்படி இருக்கிறதா?
சில
இளையோர் மன அழுத்தத்துடன் போராடுகிறார்கள்.
சிலர் தனிமையில் வாழ்கிறார்கள். சிலருக்குப் பேசவதற்குக்கூட யாரும் இல்லை. ஆனால், சமூக வலைதளத்தில் ஒரு ‘ஸ்மைல்’ போதும் - எல்லாமே சரியாக இருப்பதுபோலத் தெரிகிறது.
ஒரு
புகைப்படத்திற்குப் பலமுறை போஸ் கொடுக்கிறோம். ஆனால், நம்முடைய உண்மையான உணர்ச்சிகளுக்கு ஒருபோதும் நேரம் கொடுக்கிறோமா? திரையில் புன்னகை இருக்கலாம்; ஆனால், இதயத்தில் அமைதி இருக்கவேண்டும். சமூக வலைதளம் நம்மை இணைக்கிறது. ஆனால், சில நேரங்களில் அது நம்மை நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது.
இன்று
ஓர் உணவகத்திற்குச் சென்றால், உணவைச் சாப்பிடுவதற்கு முன் அதைப் படம் எடுப்பது வழக்கமாகிவிட்டது. உணவை இரசிப்பதற்கு முன், அது ‘ஸ்டோரி’ ஆகப் போகிறதா? என்று பார்க்கிறோம். ஒரு
காலத்தில் உணவு என்பது குடும்பத்தோடு பகிர்ந்த தருணம். இன்று அது புகைப்படமாக மாறிவிட்டது. நாம் உணவை உண்பதைவிட, வாழ்க்கையைக் காட்டிக்கொள்வதில் அதிக நேரம் செலவிடுகிறோம்.
இது
இணைப்பைப்போலத் தோன்றலாம். ஆனால், உண்மையில் இது ஒரு தனிமையின் ஆரம்பமாக இருக்கலாம். நம்மைச் சுற்றி மக்கள் அதிகமாக இருக்கலாம்; ஆனால், நம்மைப் புரிந்துகொள்ளும் ஒருவர் இல்லாதபோதுதான் தனிமை உணரப்படுகிறது. இன்றைய இளையோரின் மிகப்பெரிய போராட்டங்களில் ஒன்று ஒப்பீடு. மற்றொருவரின் வாழ்க்கையைப் பார்த்து, நம்முடைய வாழ்க்கையைக் குறைவாக நினைப்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. யாரோ ஒருவர் வெளிநாடு செல்கிறார். யாரோ ஒருவர் புதிய சாதனையை அடைகிறார். யாரோ ஒருவர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது போலத் தெரிகிறார். அதைப் பார்த்து நம்முள் எழும் கேள்வி: ‘என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி?’
ஆனால்,
நாம் மறந்துவிடுவது ஒன்று: சமூக வலைதளங்களில் யாரும் தங்களது கண்ணீரைப் பகிர்வதில்லை. அவர்கள் காட்டுவது அவர்களின் சிறந்த தருணங்கள் மட்டுமே. நம்முடைய உண்மையான வாழ்க்கையைப் பிறரின் ‘ஹைலைட்’ வீடியோவுடன் ஒப்பிட ஆரம்பித்தால், நம் மன அமைதி மெதுவாக
மறைந்துவிடும். பிறரின் வாழ்க்கையைப் பார்த்து உங்கள் மதிப்பைத் தீர்மானிக்காதீர்கள்; கடவுள் உங்களுக்காகத் தனித்த பாதையை உருவாக்கியிருக்கிறார்.
இன்றைய
தலைமுறை மிகவும் திறமையானது. அவர்கள் கனவுகள் கொண்டவர்கள், மிக வேகமாகக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களுக்குள் ஓர் அமைதியான தேடலும் இருக்கிறது. அது அன்புக்கான தேடல். அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தேடல்.
அது
யாராவது ‘நீ முக்கியமானவன்’ என்று சொல்லவேண்டும் என்ற தேடல். சில நேரங்களில் ‘லைக்’ எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மனத்தில் வெறுமை இருக்கலாம். ஏனெனில், மனித இதயம் தொழில்நுட்பத்தால் நிரம்பாது. அது உறவுகளாலும் அன்பாலும் இறைநம்பிக்கையாலும்தான் நிரம்பும்.
இளையோருக்கு
இன்று தேவைப்படுவது வெறும் பொழுதுபோக்கு அல்ல; ஒரு திசை, ஒரு நம்பிக்கை, ஓர் உள்ளார்ந்த அமைதி. மனிதன் வெளியில் வெற்றியைத் தேடுகிறான்; ஆனால், அமைதி உள்ளத்தில் மட்டுமே கிடைக்கும்.
எவ்வளவு
டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்தாலும், மனித இதயம் தேடுவது உண்மையான உறவுகளையும், நேர்மையான உரையாடல்களையும்தான். ஒரு முறை போனை விட்டு விலகி அமர்ந்து பாருங்கள். மழை பெய்யும் சத்தத்தைக் கேளுங்கள். அம்மாவுடன் பேசுங்கள். நண்பரிடம் உண்மையாக ‘நீ எப்படி இருக்கிறாய்?’
என்று கேளுங்கள். அந்தத் தருணங்களில்தான் வாழ்க்கை நம்மைத் தொடுகிறது.
சில
நேரங்களில் நாம் தேடும் அமைதி, இணையத்தில் கிடைக்காது; அது அமைதியான வேண்டுதலில் கிடைக்கும். இன்றைய இளையோருக்கு ஒரு நிமிட அமைதியும், ஒரு சிறிய இறைநேரமும் மிகவும் அவசியம். திரையை அணைக்கும்போதுதான், இதயம் பேசத் தொடங்குகிறது.
இறைவன்
மனிதனை உருவாக்கியது ஒரு திரைக்காக அல்ல; ஓர் உறவுக்காக! நாம் உலகத்தோடு இணைந்திருக்கலாம்; ஆனால், இறைவனோடு இணைந்திருக்கிறோமா? திருவிவிலியம் கூறுகிறது: “அமைதியை உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் தருவது போல அல்ல”
(யோவா 14:27). இந்த வசனம் இன்று இளையோருக்கான ஒரு பதில். உலகம் பொழுதுபோக்கைத் தரலாம், புகழைத் தரலாம், கவனத்தைத் தரலாம். ஆனால், உண்மையான அமைதியை இறைவன் மட்டுமே தர முடியும்.
‘ரீல்ஸ்’ வாழ்க்கையை அலங்கரிக்கலாம்; ஆனால், அவை வாழ்க்கையை முழுமையாக மாற்றி விடக்கூடாது. நாம் பார்க்கும் ஒவ்வொரு திரைக்கும் அப்பால், ஓர் உண்மையான உலகம் இருக்கிறது. அங்கு உறவுகள் இருக்கின்றன, அங்கு உணர்ச்சிகள் இருக்கின்றன, அங்கு இறைவனின் அமைதி இருக்கிறது. நம் வாழ்க்கையின் மதிப்பு எத்தனை ‘லைக்குகள்’
கிடைத்தது என்பதில் இல்லை; மனத்தில் எவ்வளவு அமைதி இருக்கிறது என்பதில்தான் இருக்கிறது. திரையை அணைத்துவிட்டு, இதயத்தைத் திறந்து பாருங்கள்;… உலகம் இன்னும் அழகாகத் தெரியும்.
நாஜி ஹிட்லரின் அமைச்சர் கோயபல்ஸ், “ஒரு பொய்யைத் மீண்டும் மீண்டும் சொல்; அதை உண்மை என நம்ப வை; கேட்பவரின் மூளையைச் சலவை செய்; மனிதரின் ஆழ்மனதைப் பாழ்படுத்தி, அவர்களின் எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் நடத்தைகளை மாற்றும் புதிய மனித உளவியலை உருவாக்கு” என்றார். அப்படி மாறுபவர்கள் திரைப்படங்களில் காட்டப்படும் பிணவுரு (ஜோம்பி) போன்றவர்கள். சிந்திக்கும் திறனற்ற இவர்கள் எக்காரணமுமின்றி மனிதர்களைத் தாக்கிக்கொல்லும் இறக்காத, அழிக்க முடியாத அரக்கர்களாக இருப்பார்கள்.
1978 - அமெரிக்காவின் கயானா
பகுதியில், ஜிம் ஜோன்ஸ் என்பவர் ‘மக்கள் ஆலயம்’ எனும் பெயரில் புரட்சிகர சபை ஒன்றை நடத்தி வந்தார். பின் சித்தப்பிரமை பிடித்து, சர்வாதிகாரத் தலைவராக மாறினார். தன் சபை மக்களை ஒரு தொலைதூரக் காட்டுச் சமூகத்திற்குள் உட்படுத்தி, முழுமையான நம்பிக்கை வேண்டினார். உச்சகட்டமாக ‘அனைவரும் சயனைடு அருந்தி மரிக்கலாம்’ என்றார்.
மறுத்தவர்களை, தப்பிக்க முயன்றவர்களை அவரது ஆதரவாளர்கள் கட்டாயப்படுத்தி சயனைடு கொடுத்தனர். 300 குழந்தைகள் உள்பட 918 பேர் மரித்துப் போயினர். இது உலகிலேயே தனிமனித வழிபாட்டுக் குழுக்களின் அவர்களின் நடத்தையில் உள்ள ஆபத்தைப் பேசும் வரலாற்று நிகழ்வாகப் பதிந்துள்ளது.
இதுபோன்றே
1997 - கலிபோர்னியாவில்
ரென்சோ சாண்டோஃபேவில், ‘சொர்க்கத்தைக் காட்டுகிறேன், சொர்க்க வாசல்’ என்ற பெயரில் ஒரு நிகழ்வும் நடந்தது. இதன் தலைவர் மார்சல் ஆப்பிள் வைட் உள்பட 39 பேரும் ஹேல்-பாப் வால்மீனைப்
பின்தொடர்வதாக, தாங்கள் நம்பிய விண்கலத் தில் பயணம் செய்ய விஷம் அருந்தியும், பிளாஸ்டிக் பைகளில் மூச்சுமுட்ட வைத்தும் தற்கொலை செய்தனர். குழுத் தலைவன் என்ற பெயரில் குழு உளவியலை உருவாக்குவதில் இவர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஒரு தலைவரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுதலில் உள்ள அபாயம் புவிப்பந்தின் எல்லாத் திசைகளிலும் வியாபித்திருக்கிறது.
நம்
சமூக அமைப்பிலும் இதுபோன்ற மனிதர்களைக் காண்கிறோம். அவர்கள் சிந்திக்கும் திறனின்றி இருக்கிறார்கள். குறைந்த கல்வி அறிவே அடையாளமாக உள்ளது. அவர்கள் உலகில் அவர்கள் மட்டுமே இயந்திரத்தனமாக வாழ்கிறார்கள். மிரட்டி காரியம் சாதிப்பதில் வல்லவர்களாக வலம் வருகின்றார்கள். சமூகம் குறித்து, சட்டதிட்டங்கள் குறித்துக் கவலை கொள்வதில்லை. கூட்டுப் புழுக்களாக அடைந்துகொள்கிறார்கள். எடுப்பார் கை பிள்ளைகளாக நடுங்குகிறார்கள்.
ஆனால், ‘தான்’ என்ற அகந்தையில் தலைவனாக அடம் பிடிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதர்களாக
இருந்த அவர்கள் குழுவாகி, தலைவன் என்ற அடையாளமும் கொண்டு, பொது அமைதியைக் கெடுக்கிறார்கள். சமூக ஊடகங்களில் அடாவடி, குழாயடி யுத்தத்தில் அட்டைக்கத்தி வீசுகிறார்கள். அதற்குத் தேவையான ‘ரீல்ஸ்’ திட்டமிட்டு எடுக்கப்படுகிறது.
ஒரு
பொதுக் கூட்டம் கூட்டப்படுகிறது. ஆயிரம் துணை நடிகர்கள் நிற்கிறார்கள். சிலருக்கு மட்டும் கேமிரா ஆங்கிளில் நிற்க, நடிக்க வழிவகை கூறப்பட்டுள்ளது. ஓர் இரசிகை என்ற போர்வையில் அவர் தன் பிம்ப நாயகனைப் பார்த்துக் கதறுகிறார்.
நடிப்பு
பிரமாதமாக அமைகிறது. இயக்குநருக்கு அவரைவிட மனமில்லை. உடை, சிகை அலங்காரம், கண்ணாடி, நிறம், முக அமைப்பு மாற்றப்படுகிறது. அடுத்தக் கூட்ட காட்சியிலும் அவர் அற்புதமாக நடிக்கிறார். ஆனால், அவர் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை மாற்ற மறந்துவிட்டார். அனைத்தும் நாடகம் என, பின் அடையாளம் காணப்பட்டார்.
தேர்தல்
விளம்பரம் ஒன்று இவர்களிடமிருந்து வருகிறது. அதில் அய்யங்காராக நடித்தவரின் ‘வந்துக்கின்னு, போய்க்கின்னு’ சென்னை
தமிழ் இவர் யாரென அடையாளம் காட்டியது. இவர்களது திட்டக் குழு, சில மாதிரி விடியோக்களை வெளியிடும். இரசிக, இரசிகைகள் ‘கப்’பெனப் பிடித்து, பின்தொடர வேண்டியதுதான். சில சின்னக் குழந்தைகளின்
வீடியோக்களும் இதே இரகம்தான். மறு வடிவாக இவர்களது தலைவரின்
ஓடாத படத்தைப் ‘பில்டப்’ செய்து ஓடவைத்ததும், பிற போட்டி நடிகர்களைத் தாக்குவதும் காலங்காலமாக இவர்கள் செய்யும் வெறிச்செயலாகும்.
குறிப்பாக,
‘சனநாயகனுக்கு’ போட்டியாக
‘பராசக்தி’ படம்
எனப் பொங்கிய பொங்கல், அப்படக் கதாநாயகன் சிவகார்த்திகேயன்மீது நடந்த இரசிக, இரசிகைகளின் ஆபாசத் தாக்குதல்கள் இவர்களின் கேவலத்தின் உச்சம்.
தமிழ்நாட்டுத்
தலைவர்களான பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர்
கருணாநிதி போன்றோர் பல வேளைகளில் கல்லூரி
மாணவர்களைச் சந்திக்கும் போது கூறுவார்கள்: “நீங்கள் முதலில் நன்றாகப் படியுங்கள்; நல்ல வேலைக்குச் செல்லுங்கள்; உங்கள் பெற்றோர், குடும்பத்தைக் கவனியுங்கள்; நல்ல நிலைக்கு வந்தபின்பு அரசியலுக்கு வாருங்கள்.”
இந்தப்
புதிய தலைவர் பொறுப்பற்றுக் கூறுகிறார்: “குழந்தைகளே, நீங்கள் சாக்லேட், கிண்டர் ஜாய்க்கு அடம்பிடிப்பதுபோல அடம்பிடித்து, எனக்கு வாக்களிக்கச்
சொல்லவேண்டும்.” இது தேர்தல்களில் சிறுவர்-சிறுமிகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கான
அப்பட்டமான விதிமுறை மீறல் என்பதாம். எத்தனை சின்னக் குழந்தைகள் அடம்பிடிக்கும் ரீல்ஸ் பெற்றோரை வாக்களிக்கத் தூண்டும் மிரட்டல்கள், எந்த விதியும் கடைப்பிடிக்காத ஜோம்பிகளின் அலப்பறைகளாகவும் அட்ராசிட்டியாகவும் அமைந்தது.
உலகிலே
எந்தக் கட்சிக்கும் சிறு குழந்தைகளுக்கான அணி இல்லை. ஏனெனில், குழந்தைகள் பகுத்தறியும் பண்பு குறைந்தவர்கள். அவர்களை அரசியலுக்கு இழுத்து ‘குட்டி நண்பா, நண்பிகளுக்கு நன்றி’ எனும் சினிமா நாடகம் அருவருப்பானது. இதனால் தன் குழந்தையிடம் பொய் பேசி, மன உளைச்சலுக்கான தந்தை
ஒருவர் கோவை மாநகர ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். புகார்மீது நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றம் செல்லவும் முன்வந்துள்ளார்.
நாம்
சிறு வயதில் இருந்தபோது, நாம் சாப்பிட மறுத்தால் நிலா, ஆடு, மாடு, கோழி, சைக்கிள் என வேடிக்கை காட்டுவார்கள்.
இன்று ஒரே மாற்று அலைப்பேசிதான். மூன்று வயதில் குழந்தை அலைப்பேசிக்கு அடிமையாகி விடுகிறது. அதில் உள்ள
‘அல்காரிதம்’ தொழில்நுட்பம்
ஸ்வைப், ஸ்கோரல், ரிப்பிட் எனக் குழந்தைகளைக் கூட ‘ரீல்’ பைத்தியமாக்கி விடுகிறது. அதன் அடிப்படையில் நடிகரின் பிம்ப அரசியல் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டது.
12 முதல்
16-வது வயது வரையிலான மற்றும் 16 முதல் 18 வயது வரை குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாடு
குறித்தும், ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் கடுமையாகச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் விரைவில் கர்நாடகா அரசு இது போன்ற சட்டத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இணையவழிக் குற்றங்களில், பொறுப்பற்ற பதிவுகளும் சேர்க்கவேண்டும். வேற்றுக் கிரகவாசிகள்போல் செயல்படும் சமூகப் பொறுப்பற்றவர்களின் இரசிக மனப்பான்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
இணையம்
மட்டுமல்ல, தமிழ்நாட்டின் நான்கு செய்தி தொலைக்காட்சிகள் பொய் செய்தி, வீண் புரளி கிளப்பி, பொது அமைதியைக் கெடுத்தன. இவர்களது பிம்ப அரசியல் நனவானால் நாடு இரசிகக் கூட்டத்தால் கம்போடியாபோல் மாறிவிடும் என மலேசியாவைச் சார்ந்த
ஒருவர் எச்சரிக்கிறார். அங்கு நடைபெற்ற இது போன்ற சுயசிந்தனையற்ற பிம்ப வெறியர்களால் ஒரு மில்லியன் (10 இலட்சம்) பேர் கொல்லப்பட்டார்கள் என்பது
வரலாறு. காரணம், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் படித்தவர்கள், அறிவாளிகள் என்பதே. இங்கு சினிமா என்பது சினிமாதான். அது சினிமா அரசியல் அல்ல; மேலும், அது பிம்ப அரசியலும் அல்ல!
கோவை புனித பிரான்சிஸ்கன் காணிக்கை அன்னை சபையைச் (FSPM) சார்ந்த அருள்சகோதரி ஜெசிந்தா ஜான்சன் அவர்கள், குன்னூர் புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைத் தாவரவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். புனித பிரான்சிஸ்குவின் ஆன்மிகத்தில் உரோமையில் பட்டயப் படிப்பு முடித்தவர். விவிலியம் மற்றும் இறையியலில் சிறப்புப் பயிற்சிகள் பெற்றவர். அறிவியல் ஆசிரியராகப் பணிபுரிந்தாலும், எழுத்துப் பணியில் பேரார்வம் கொண்ட இவர் இதுவரை நான்கு பயனுள்ள நூல்களைப் படைத்துள்ளார். திருக்குறள் காட்டும் வாழ்வியல் விழுமியங்களை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப விளக்கும் வகையில், நமது ‘நம் வாழ்வு’ இதழில் ‘குறளும் வாழ்வும்’ எனும் தலைப்பில் புதிய தொடரை எழுத முன் வந்துள்ளார். பன்முகத் திறனும் ஆன்மிகப் பின்புலமும் கொண்ட அருள்சகோதரியை வாழ்த்தி வரவேற்கிறோம்.
முதன்மை ஆசிரியர்
அகர
முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு (குறள் 1)
குறள் விளக்கம்:
எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
சிந்தனை:
கடவுள் நம்பிக்கை உடையவர் ஆத்திகர்! கடவுள் நம்பிக்கை அற்றவர் நாத்திகர்! இந்த இரு குழுவினருக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பவரை எப்படி அழைப்பது? சிலர் கடவுள் நம்பிக்கை அற்றவர் எனச் கூறிக்கொண்டாலும் வேதங்கள் சொல்லும் நற்செயல்கள் அனைத்தையும் வாழ்வில் கடைப்பிடிக்கின்றனர். ஆனால், கடவுள் நம்பிக்கை உடையவர்கள் பலர் சமயக் கொள்கைகளுக்கு மாறான வாழ்க்கை நடத்துகின்றனர். அதிலும் உச்சமாக ‘நானே கடவுள்’ என்ற நிலைக்குத் தன்னை உயர்த்துவோரும் உண்டு. குறள் ஒன்றில் திருவள்ளுவர் ‘இந்த உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது’ என்கிறார்.
இக்கருத்து, இந்தப் பூமியில் கடவுள் நம்பிக்கை உடையோர் பெரும்பான்மையாக இருப்பதால் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
“நம் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நம் நடத்தை அமையாவிடில் நமது நடத்தைக்கு ஏற்றவாறு நம் நம்பிக்கை மாறிவிடும்” என்றார்
பேராயர் ஃபுல்டன் ஜான் ஃஷீன். ஆயரின் கூற்றுப்படி, கடவுள் நம்பிக்கை கொண்டவர் கடவுளின் வார்த்தைப்படி வாழாமல், தனது விருப்பப்படி வாழ்வாரெனில்
அவர் கடவுளை அடிப்படையாகக் கொண்டவரல்லர்; அவர் தன்னை முன்னிலைப்படுத்தி வாழ்பவராகிறார். கடவுளை அடிப்படையாகக் கொண்டவர் எச்சூழலிலும் கடவுளை முன்னிலைப்படுத்துவார்.
அண்மையில்
‘The chariots
of fire’ என்ற திரைப்படத்தைக் குறித்துக் கேள்விப்பட்டேன். பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வாங்கிய எரிக் லிட்டல் என்ற விளையாட்டு வீரரைப் பற்றியதுதான் அந்தத் திரைப்படம். அவர் எந்த அளவுக்குக் கடவுளைத் தன் வாழ்வில் அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தார் என்பதைத்தான் அப்படத்தின் இயக்குநர் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார். இவர்
ஓர் ஓட்டப்பந்தய வீரர். இரசிகர்களுக்காக அல்ல; நாட்டுக்காக அல்ல; புகழுக்காக அல்ல; சொந்த மகிமைக்காகவும் அல்ல;… கடவுளுக்காக ஓடினார். ஏனெனில், கடவுளை இவர் அடிப்படையாகக் கொண்டிருந்தார். 1924-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இவர் ஓடுவதாக இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தது. கிறித்தவ மிஷனரியான வீரர் எரிக் லிட்டலுக்கு இது பெரும் சோதனையாக அமைந்தது. ஓய்வுநாளில் கடவுளை மகிமைப்படுத்துவதா? அல்லது போட்டியில் கலந்துகொள்வதா? எனக் குழம்பினார். பின்னர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலிருந்து விலகினார். இதனைக் கேள்விப்பட்டவர்கள் அவரை 100 மீட்டர் போட்டியில் கலந்துகொள்ள வைக்க வெகுவாக முயன்றனர். வீரரோ தனது முடிவில் தெளிவாக இருந்தார். ‘கடவுள்தான் முக்கியம், அவரே என் அடிப்படை’
என உறுதியாக இறுதிவரை நின்றார். பின்
வேறொரு நாளில் நடைபெற இருந்த 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்வதாக அறிவித்தார். 100 மீட்டர் ஓடப் பயிற்சி பெற்ற இவர் 400 மீட்டர் ஓட்டத்தில் வெல்வாரா? என்ற ஐயம் கொண்டிருந்தவர்கள் முன், இறையாசிரோடு ஓடி வெற்றிக் கனியைப் பறித்தார். எனவே, இறைவனை அடிப்படையாகக் கொள்வோம், அடி சறுக்காமல் வாழ்வோம்.