ஒரு நபர்!
“எல்லா மனிதர்களும் யாராவது ஒருவரால் செதுக்கப்பட்ட உயிருள்ள சிற்பங்களே.”
தாய்-தந்தையரின் பாரம்பரியக் குணங்கள் இயற்கையிலேயே நம்மிடம் அமைந்திருப்பவை. ஆனால், பல பண்புகள், நம் ஆளுமையைத் தீர்மானிக்கும் குணங்கள் மற்றவர்கள் நம்மீது ஏற்படுத்திய தாக்கமாக இருக்கலாம்.
என் வாழ்வில் நான் தற்போது அடைந்திருக்கும் நிலைக்கு யார் காரணம்? ஆங்கிலத்தில் ஒரு வினைச்சொல்லை வைத்து 12 Tense (காலங்களையும்) தினமும் படிக்க வைத்து ஒப்பிக்க வைத்தவர்; காலை 5 மணிக்கு எழுந்து பூசைக்கு நடந்தே அழைத்துச் சென்றவர்; பெரியவர்கள் யாரைப் பார்த்தாலும் முழங்காலிட்டு சிலுவை வாங்க வைத்துப் பணிவைக் கற்றுத் தந்தவரான என் தந்தையைச் சொல்லவா?
நான் ஈனக்குரலில் பாடியதையும் நடித்ததையும் பேசியதையும் கைதட்டி இரசித்த என் முதல் இரசிகை என் தாயைச் சொல்லவா?
சங்கீத வாசனையே இல்லாத குடும்பத்தில் அருள்தந்தை ஆரோக்கியம் அவர்களின் கர்நாடகச் சங்கீதக் கிறித்தவப் பாடல்களைத் தன் ஆர்மோனியத்தால் வாசித்து, இசைஞானம் ஊட்டிய என் தாய் மாமா அமரர் பேராசிரியர் S.F.N. அவர்களைச் சொல்லவா?
யாரைச் சொல்வது?
எனக்கு அடிப்படையில் இந்த மாற்றத்திற்குக் காரணமானவர் என் தந்தை அமரர் Y. இன்னாசி ஆசிரியர். இவர்தான் என் வாழ்வில் புதுப்பாதைக் காண அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வந்தவர்.
ஒரு நிகழ்வு
1963-ஆம் ஆண்டு திண்டுக்கலில் எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள இரவுண்ட் ரோடு மைதானத்தில் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பெருந்தலைவர் காமராசர் பங்கேற்ற விழா நடந்தது. அதற்கு ஐந்து வயது நிரம்பிய என்னைத் தோளில் தூக்கி வைத்து மேடையில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் விளக்கிக் கூறியவர் என் தந்தை.
அப்போது நேரு அவர்கள் ஒரு வாகனத்திலிருந்து தனக்குக் கொண்டு வந்த மாலைகளை இருப்பவர்களின்மீது வீசி, கூட்டத்தில் அவரின் மகிழ்வை வெளிப்படுத்தினார். அதில் ஒரு மாலையை என் கழுத்தில் விழவைப்பதற்காக என் தந்தை எடுத்த முயற்சியும், அது கிடைத்தவுடன் அடைந்த மகிழ்ச்சியும் என் கண்களில் இன்னும் நிழலாடுகிறது.
நான் திண்டுக்கல் G.T.N. கலைக் கல்லூரியில் B.Sc., இயற்பியல் பட்டம் பெற்றபின் தேர்வு முடிவுகள் தாமதமாக வந்தன. என் தந்தை என்னைப் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்வியியல் கல்லூரியில் B.Ed., சேர்க்க ஆசைப்பட்டார். அப்போது ஜூன் மாதம் - கல்லூரியில் சேர்க்கை அனைத்தும் முடிந்துவிட்டது என்று அறிவித்துவிட்டனர்.
அப்போது திண்டுக்கல் இயேசு சபை மதுரை மறைமாநிலத் தலைவரைப் பார்க்க புனித சவேரியார் கல்வியியல் கல்லூரி முதல்வர் அருள்தந்தை ஜோசப் சீனிவாசன் வந்திருந்தார். என் தந்தையும் நானும் எனக்கு இடம் கேட்பதற்காக அவரைச் சந்திக்க சென்றோம். ஆனால், அவர் சேர்க்கை மே மாதமே முடிந்துவிட்டது என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.
என் தந்தை ஓய்வுபெறும் வருடம் அது, ஆகையால் அடுத்து குடும்பத்தைக் கவனிக்க ஒருவரின் வருமானம் தேவை. எனவே, இந்த ஆண்டு B.Ed-இல் எனக்கு இடம் வேண்டும் என்று மீண்டும் கேட்டார். அவரோ “என்னை மன்னித்து விடுங்கள்; இடமில்லை. இருந்தாலும் வாங்க, பார்ப்போம்” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
என் தந்தை வீட்டுக்கு வந்தவுடன் விடுதியில் தங்கிப் படிப்பதற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் கடைக்குச் சென்று வாங்கி வந்துவிட்டார். ‘ஃபாதர் சேர்க்கை எல்லாம் முடிந்துவிட்டது, வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டாரே? இவர் இப்படிச் செய்கிறாரே...?’ என்று என் தந்தையிடம் கேட்டேன். ‘நம்பிக்கையுடன் புறப்படு’ என்று பேருந்தில் இரவோடு இரவாகப் பயணம் செய்து பாளையங்கோட்டைக் கல்லூரியைச் சென்றடைந்தோம். ஏற்கெனவே இடம் உறுதியானவர்களுக்கு விடுதி அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பெற்றோரிடம் பிரியாவிடைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நானும் என் தந்தையும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தோம். என் தந்தையின் நம்பிக்கையைக் கண்டு வியந்து கொண்டிருந்தேன்.
இறுதியாக, ஃபாதர் வந்து எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்கெனவே இடம் உறுதியானவர்களுக்கு எப்படி இடம் கொடுத்தாரோ அப்படியே விடுதி அறையை எனக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.
“கல்லூரிக் கட்டணம் இப்போது கட்ட வேண்டாம்; உங்களால் முடியும்போது வந்து செலுத்துங்கள்” என்று கூறிவிட்டு, ஜெர்மன் நாட்டு Scholarship படிவத்தைக் கொடுத்துப் பூர்த்தி செய்து தரச்சொன்னார். குறைந்த கட்டணத்தில் எனக்கு இடம் கிடைத்தது. 33 ஆண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்து இன்று அரசியலில் தி.மு.க.வில் கொள்கை பரப்புச் செயலாளராகவும் மற்றும் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் தலைவராகவும் பொறுப்பேற்க வைத்தது என் தந்தையின் ஆழமான நம்பிக்கை.
ஒரு வார்த்தை
படித்துக் கொண்டிருந்தபோது கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து சனவரி மாதம் கல்லூரிக்குச் சென்றோம். விடுதியில் இடமில்லை என்று ஃபாதர் அனுப்பிவிட்டார். என்ன காரணம்? என்று தெரியவில்லை. எவ்வளவோ கேட்டுப் பார்த்தோம்; மறுத்து விட்டார். என் நண்பர் ஜோசப் சேவியரின் அறையில் தங்கிப் படித்தேன். அப்போது என் தந்தை ஆறுதல் கடிதம் எழுதினார். அதில் நற்செய்தியில் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம்: “கட்டுவோர் விலக்கிய கல்லே இறுதியில் மூலைக்கல்லாக அமைந்தது.”
இந்த வாசகம் என் மனத்தில் ஆழமாகப் பதிந்து, எனக்கு மேலும் நம்பிக்கையூட்டியது. வேலை கிடைத்து என் குடும்பத்தைக் கவனித்து, என் திறமைகளை வளர்த்துக் கொண்டு பட்டிமன்ற நடுவராக, பாடநூல் கழகத்தின் தலைவராக உருவாகக் காரணமாக அமைந்த நபர் என் தந்தை Y. இன்னாசி ஆசிரியர் அவர்கள்.
அவர் கடிதத்தில் எழுதிய நற்செய்தி வாசகம், எனக்கு இடம் கிடைக்க நடந்த என் தந்தையின் இறைநம்பிக்கையுடன் கூடிய அந்த நிகழ்வு... இவைகளால்தான் நான் சிற்பமாகச் செதுக்கப்பட்டேன்.
தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் ‘ஆட்சி மாற்றம்வேண்டும்’ என்கிறார்கள். மக்களோ ‘ஆட்சி மாற்றங்களால் எம் வாழ்வில் மாறப்போவது எதுவுமில்லை’ எனத் திருப்பிக் கூறுகிறார்கள். ‘அரசியல் மாற்றம்வேண்டும்; அந்த மாற்று அரசியல் மக்களுக்கான அரசியலாக இருக்கவேண்டும்’ என்கிற குரல்கள் உயர்கின்றன.
விழிப்புணர்வு
பெற்ற மக்கள் கேட்கிறார்கள்: ‘எங்களுக்கு மண்ணுரிமையைப் பேணி,
மாநில உரிமைகளைக்
காக்க வேண்டும்; மதவாதத்தைப் புறந்தள்ளி, சிறுபான்மையோர் நலன், அடிப்படை அரசியல் சாசன உரிமைகள் பேணப்படுதல் கட்டாயமானது; மதவாதம் மறுக்கப்படவேண்டும்; மக்களின் முன்னுரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாநிலத் தாய்மொழிகள், நதிநீர்ப் பிரச்சினை, பொது நுழைவுத் தேர்வுகள், மையப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.
போன்ற எல்லாப் பொருள்களுக்கும் சேவை வரி விதிப்புகள்...’ எனக் கோரிக்கைகள் விரிகின்றன.
ஒன்றிய
அரசு பா.ச.க.
அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கிறது. மாநில அரசுகளை, உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகள் போல் மாற்றிவிட்டது. மாநில அரசுகளின் அபயக்குரல்கள் தேசமெங்கும் தீயாய்ப் பற்றுகிறது, எல்லா நிலைகளிலும் எதிரும் புதிருமாக இரு துருவ அரசியல் நடத்தும் தி.மு.க.
மற்றும் அ.தி.மு.க. பங்காளிகள் ஒருமித்தக்
குரலில் சொல்கிறார்கள்: “மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு போதிய நிதி ஒதுக்குவதில்லை.” ஆம், இதுதான் நடப்பு அரசியல். தமிழ்நாட்டு வாக்காளர்கள் விழிப்புணர்வு பெறுகிற இடமும் இதுதான்.
தமிழ்நாட்டு
அரசியல் கட்சிகள் இருவகை கூட்டணிகளால் வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்று, கொள்கைக் கூட்டணி; மற்றொன்று, அரசியல் இலாபங்களை மையப்படுத்திய தேர்தல் கூட்டணி. அது மதவாதக் கூட்டணி. ஆளும் தி.மு.க.-வைத் தோற்கடிக்க வேண்டும், தாங்கள் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற அதிகார வெறி. அங்குக் கூட்டணி ஆட்சி என்ற மயக்கமும், அதிகாரப் பகிர்வு என்ற பசப்பும் கூடுதலாகக் கூறப்படுகிறது. இது குறித்த ஆசைகள் சிறு கட்சிகளுக்கு விரிக்கப்படும் வலை.
கூட்டணி
ஆட்சி குறித்து தமிழ்நாட்டு மக்கள் தெளிவான முடிவுகளைக் கடந்த காலங்களில் வழங்கியுள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் தொங்கு சட்ட சபையையோ, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு
வாங்கும் பா.ச.க.வின் குதிரைப் பேரங்களையோ விரும்புவதில்லை.
பா.ச.க.வின்
கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., பா.ம.க.
போன்ற கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை உணர்வதில்லை. பா.ச.க.வின் மக்கள் விரோதச் சட்டங்களுக்குத் தொடர்ந்து முட்டுக்கொடுக்கிறார்கள். பொதுச்சிவில் சட்டம், குடியுரிமைச் சட்டம், ‘லவ் ஜிகாத்’ சட்டம், புதிய கல்விக்கொள்கை என்பவைகளில் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ‘தி.மு.க.
ஆட்சி எதிர்ப்பு’
என்ற ஒற்றைக் குரலில் ஒன்று சேர்கிறார்கள்.
தமிழ்நாட் டில் என்.டி.ஏ. கூட்டணி
ஆட்சி எனப்
பிரகடனம் செய்கிறார்கள். தி.மு.க.
எதிர்ப்பு என்ற ஒற்றைப் புள்ளியில், புதிய கூட்டணியைக் கட்டமைக்கிறார்கள். அன்புமணி உட்பட இவர்கள், தங்கள் கட்சிகளின் சமூக ஊடகப் பிரிவிற்குத் தி.மு.க.
எதிர்ப்பு என்ற வெறியை மக்களிடம் தீவிரப்படுத்தக் கட்டளை போடுகிறார்கள். கூட்டணி ஆட்சி அதிகாரம் என்ற போதை இவ்வாறு செய்ய பணிக்கிறது.
கடந்த
கால வரலாறு கூறுகிறது. 1980-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் சரிபாதி இடங்கள், ஆட்சியில் பங்கு என்ற தி.மு.க.வுடன் காங்கிரஸ் அமைத்த கூட்டணி தோற்றது.
2016-இல் மாற்று
அரசியலென நடிகர் விஜயகாந்த் முதல்வர் என்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் மூன்றாவது அணி படுதோல்வியைத் தழுவியது. பா.ச.க.
மற்ற மாநிலங்களைப்போல கூட்டணி ஆட்சி என்ற பெயரில் அ.தி.மு.க.-வைக் கபளிகரம்
செய்து முடித்து கட்ட முயல்கிறது.
அ.தி.மு.க.
எனும் கட்சி பா.ச.க.வின் கள்ளத்தனம் அறிந்தும்
உணர மறுக்கிறது. தேர்தல் முடிவுகளில் அ.தி.மு.க. இதற்காகப் பெரும்
விலை தரவேண்டும் என்ற உண்மை கசக்கிறது. மோடி ஆட்சி குறித்து விளம்பரப்படுத்த விவேகானந்தர் விழிப்புணர்வுக் குழுவை ஆர்.எஸ்.எஸ். அமைத்துள்ளது. அ.தி.மு.க.-வில் எடப்பாடிக்கு
அடுத்த நிலை
உள்ள எஸ்.பி. வேலுமணியின் சகோதரர் எஸ். அன்பரசன் அக்குழு உறுப்பினர் எழுவரில் ஒருவர். நயினார் நாகேந்திரனின் மகன் ஸ்ரீநயினார் பாலாஜி, மற்றொருவர் துணைக் குடியரசுத் தலைவராகும் சி.பி. இராதாகிருஷ்ணன்
மகள் ஹரி இராதாகிருஷ்ணன், எஸ்.பி அன்பரசன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கோயம்புத்தூர் வருகையில் உடன் இருந்தார் என்பதும் கூடுதல் தகவல். இவ்வாறாக அ.தி.மு.க. தனது பா.ச.க நிலையில்
இருந்து மேலேறி, ஆர்.எஸ்.எஸ். வரை உறுதியாகப் பற்றிக்கொண்டது.
ஜூன்
22-இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 37 பிரிவுகள் நடத்திய மதுரை முருகன் மாநாட்டில், அ.தி.மு.க.-வின் நான்கு
முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மதுரை முருகன் மாநாட்டில் 4,000 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள், நுண் மேலாண்மை முறையில் செயல்பட்டார்கள். 1,200 ஆர்.எஸ்.எஸ். சாகா பயிற்சி பெற்றவர்கள் காவல்துறையில் வேலை பார்த்தனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘யூடியூப்பர்கள்’ 179 பேர்
மாநாட்டை நேரடியாக ஒலி-ஒளி பரப்பினர். 2026, தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவாத முதல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க. வும் அதிகாரப்பூர்வமாக
இணைந்தது.
தமிழ்நாட்டு
மக்கள் தங்கள் அடையாளமாக பொது அமைதி, மத மற்றும் சமூக
நல்லிணக்கத்தைக் கொண்டவர்கள். தமது அரசியல்,
பொருளாதாரம், கல்வி, பண்பாடு, கலாச்சாரம். வரலாற்றுப் பண்புகளை மேன்மை கொள்வதில் மிளிர்பவர்கள். சமீபத்தில் தமிழரின் மொழி மற்றும் கலாச்சாரத் தொன்மையை உலகிற்குக் கூறிய கீழடி ஆய்வைக் கேள்விக்குறியாக்கிய ஒன்றிய அரசுமீது பெருங்கோபம் கொண்டவர்கள். வாக்களிக்கும் முறையில் தெளிவும் விழிப்புணர்வும் பெற்று ஓரணியில் திரள்பவர்கள். தேர்தல் கள நிலவரங்கள், கருத்துக்
கணிப்புகள், ‘இந்தியா’ கூட்டணி 40 முதல் 45 சதவிகித வாக்குகளைப் பெறும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டுத்
தேர்தல் முடிவுகளை வெற்றிவாக்குகளைச் சிறுபான்மையினக் கிறித்தவ, இஸ்லாமிய மக்களே அளிப்பவர்கள். சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்ட அவர்களின் பிரதிநிதிகளைச் சட்டமன்றத் தேர்தல்களில் ‘இந்தியா’ கூட்டணி நிறுத்த வேண்டும். கடந்த 2024 தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவளித்த
எஸ்.டி.பி.ஐ.
இஸ்லாமிய அமைப்பும், அ.தி.மு.க.வைத் தள்ளி
வைத்துவிட்டது. சமீபத்தில் புகழ்பெற்ற கேரள பாப் பாடகர் தமிழர் வேடன் கூறுவதுபோல “தம்புரான் என்றால் எனக்கு ஓர் இதுவும் இல்லை” என்பதே பா.ச.க.
குறித்து தமிழ்நாட்டு மக்களின் பார்வையாக உள்ளது.
மதவாதம்
தமிழ்நாட்டில் தலையெடுக்காமல் இருக்க தமிழர்கள் தங்கள் வாக்குச் சக்தியை எதிர்நிலையில் ஓரணியாகக் காட்டுவார்கள். மதவாதிகளையும், அவர்களுக்குத்
துணை செல்பவர்களையும் அடையாளம் காண்பர். இதுவே 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும். எதிரொலிக்கும்.
எனது பேனாமுனை முதலில் எந்த அறிவுரைகளுக்குள்ளேயும் செல்ல மறுக்கிறது. கரூர் துயரத்தில் உயிர்களை இழந்து தவிக்கும் அன்பர்களுக்கு ஒரு சகோதர இரங்கலை, ஆழ்ந்த வருத்தத்தை ஊடக நண்பர்களோடு இணைந்து பகிர்ந்துகொள்ள விழைகிறேன். 41 உயிர்களை இழந்த குடும்பங்களோடு நெஞ்சார உடனிருக்க விழைகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலமடைந்து இல்லம் திரும்ப இறைவனை மன்றாடுகிறேன். இவ்வேளையில், கரூர் துயரம் சார்ந்த எந்தத் தரவுகளுக்கும் செல்லாமல், எவ்வித அரசியல் உள்நோக்கங்களையும் மனத்தில் ஏற்காமல் உங்களுடன் பயணிக்கும் சகோதரனாக எனது கருத்துகளைப் பதிவிடுகிறேன்.
பாடம் 1: உயிர்களைப்
பேணுவோம்
நமது
பரந்துபட்ட இந்திய நாட்டில், உலகிலேயே மக்கள்தொகையில் முதல் நிலையில் இருக்கும் வேளையில் இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், நோய்வாய்ப்பட்டு இறத்தல் தவிர மற்றெங்கிலும் நடக்கும் இறப்புகளுக்கு அதிகபட்ச மக்கள்தொகையைக் காரணம் காட்டிவிட்டுச் சென்றுவிட முடியாது. இதில் தனிமனிதத் தவறு (Human error)
மட்டுமே உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டால், பின்னாளில் ஏற்பட இருக்கும் உயிரிழப்புகளைத் தடுக்க முடியாது. மனித உயிர் விலைமதிப்பற்றது. ஈடு இணை செய்ய முடியாதது. எனவே, உயிர்களைப் பேண வேண்டியது நமது கடமை எனக் கருதுவோம். மக்கள் ஒன்றுகூடும் இடங்களை முதலில் ஆய்வு செய்வோம். பெருமளவு மக்கள் அடர்த்திப் பெருகிடும் இடங்களை, நேரத்தை, சூழல்களை முன்கூட்டியே கணித்தல் சால்பு. இந்திய நாட்டில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 492 மக்கள் இருப்பதாக அளவிடப்படுகிறது. அச்சூழலில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 50 மடங்கிற்கு மக்கள் கூடும் இடங்களை அரசு இயந்திரங்களான ஆட்சியர் தொடங்கி காவல்துறைவரை மீளாய்வு செய்ய வேண்டிய கடமையினை உதறித்தள்ளிவிட முடியாது.
அரசியல்,
மதம், தன்னார்வ அமைப்புகள், போராட்டக் குழுக்கள் - இவ்வாறு யாருடைய கூடுகையையும் இயல்பான ஒன்றாக எடுத்துக்கொண்டு செல்ல முடியாது என்றெண்ணும்போது, எத்துணை பொறுப்பு மிக்க பணியை அரசு இயந்திரங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள முடியும். ஆகையால், பாரபட்சமின்றி எல்லாக் கூடுகைகளையும் ஒழுங்கு செய்யும் பொறுப்பினைக் காவல்துறைக்கு முழுமையான அதிகாரத்தோடு மக்கள் நலன் கருதி வழங்கிடல் வேண்டும்.
கூட்டம்
நடக்க இருக்கும் பகுதியைச் சிறப்பு கவனிப்புப் பகுதியாகக் கருதிடல் வேண்டும். மக்கள் உள்நுழையும் வழி, வெளியேறும் வழி, உள்ளே புழங்கும் இடம் போன்றவை பாதுகாப்பானதாகவும் சாதகமானதாகவும் உள்ளதா? என்பதை அவ்வப்போது கண்காணித்திடல் வேண்டும். புழங்குவதற்கும் அதிகப்படியான உள்நுழைதலும் இரும்புக் கரம் கொண்டு மக்கள் பாதுகாப்புக் கருதியே தடுக்கப்படல் வேண்டும். மக்கள் கூடிடும் இடங்களில் அவர்கள் அமர்வதற்கும், இயற்கைத் தேவைகளைச் சந்திப்பதற்கும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும், நீண்டநேரக் காத்திருப்புகள் இருப்பின் உணவு, குடிநீர்த் தேவைகள் எவ்வாறு சந்திக்கப்படுகின்றன என்பதையும் உறுதி செய்திடல் வேண்டும். ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டால் கூட்டப் பொறுப்பாளர்கள் களமிறங்கி உடனடியாக அத்தேவைகளை மக்கள் சந்தித்திட ஆவன செய்தல் முறையே.
மக்கள்
கூடிடும் இடங்களில் வழிப்போக்கர்கள், வாகனங்கள், கடைகள் மற்றும் அங்கு வசிப்போர் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் இயங்கிட உரிமை உண்டு என்ற நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பும் வழங்க வேண்டியதையும் நாம் மேலோட்டமாகக் கருதிட முடியாது. கூட்டம் நிறைவுற்ற பின் மக்கள் வெளியேறும் பகுதிகள் தொகுதி தொகுதியாகப் பிரிக்கப்பட்டு வேகமும் அழுத்தமும் இல்லாத நிலையில் வெளியேற்றப்படுவதை உறுதி செய்திடல் மிக மிக அவசியமானது.
யாரும்
அசம்பாவிதங்களையோ விபத்துகளையோ உண்டாக்கிடவோ அல்லது அதை நோக்கியோ நகர்வதில்லை என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இவை யாவும் தவிர்க்கப்பட முடியும், பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் அரசின், தலைவர்களின் முதற்கடன் என்பதை இவ்வேளையில் நினைவூட்டல் அவசியம்.
பாடம் 2: பாதிக்கப்பட்டோரை
இழித்துரைத்தல்
(Victim blaming) மோசமான அணுகுமுறை
ஒரு
கூட்டம் கூட்டப்படுவதென்பது பொதுவெளியில் நிகழ்கிறபோது, பெருவாரியான மக்கள் தன்னெழுந்த நிலையில் ஒன்று கூடுவதென்பது இயல்பு. இவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்களுக்கு அறிவு இருக்கிறதா? இருந்திருந்தால் இவற்றையெல்லாம் செய்திருப்பார்களா? என்பதெல்லாம் தெருவோர விவாதங்களுக்கும் பழித்துரைத்தலுக்கு மட்டுமே பொருத்தமானதே ஒழிய ஊடகங்களும், பொறுப்பில் இருப்போரும் இத்தகைய மனநிலையை ஊக்கப்படுத்துவதைத் தவிர்த்திடல் வேண்டும். எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இழந்த சொந்தங்களை நாம் திருப்பித் தந்துவிட முடியாது என்ற நிலையில், உறவுகளை இழந்து தவிப்போரின் ஆறுதலாக நாம் பதிவிடும் சொற்கள் இல்லாவிட்டால், ‘எங்கே தொலைந்தது நமது மனித நேயம்?’ எனக் கேட்கத் தோன்றுகிறது.
ஒரு
கூட்டத்தின் அடர்த்தி பெருகிக்கொண்டே வரும்போது அதைத் தடுத்தாட்கொள்ளும் சூழல் இல்லாத நிலையில் தன்னெழுச்சியாக ஒவ்வொருவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முனையும் வேளையில், எதிர்பாராதவிதமாக ஒருவர் மேல் ஒருவர் விழுந்து காயங்கள் மற்றும் பாதிப்புகள் ஏற்படுவதென்பது தவிர்க்க முடியாதது. இதில் எங்கே வந்தது அவர்களுடைய அறிவற்ற செயல், முட்டாள்தனம், வெறிகொண்ட நிலை என்பதெல்லாம்?
பொதுமக்களை
அறிவற்றவர்கள், உணர்ச்சிகளைக் கையாளத் தெரியாதவர்கள், பொறுப்பற்றவர்கள் என்றெல்லாம் விமர்சிப்பது என்பது சாமானியர்களை அசிங்கப்படுத்தும் செயல் மட்டுமே ஒழிய, உண்மையான காரணம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது என்பதனை இவ்வேளையில் உணர்தல் அவசியம். 90%-க்கும் மேலாகப்
பாதிக்கப்பட்டோர் பொதுவாக வறுமையின் பிடியில் இருப்பவர்கள்தான் என்றெண்ணும்போது, ஏறெடுக்கப்படும் கூட்டங்களின் பொதுமாந்தர் யார் என்பதும், அதன் பயனாளிகள் உள்ளபடியே யார் என்பதும் நம் அனைவருக்கும் கண்கூடாகவே தெரிகின்றது.
சாதாரண
மக்களின் குரலொலியாக, வாய்ச் சொல்லாக அமைப்புகளும் தலைவர்களும் செயல்பட வேண்டுமே ஒழிய, அவர்களைத் துச்சமெனக் கருதி அவர்களைக் காய்களாகப் பயன்படுத்தித் தங்கள் தனிப்பட்ட நன்மைகளை வெற்றியாகப் பெறுவதென்பது மக்கள் துரோகச் செயல். பொதுமக்கள்,
காவல்துறையினர் மற்றும் பொறுப்பு அமைப்புகளோடு ஒத்துழைப்பு நல்கிட ஊக்கப்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, அவர்களைப் பழித்துரைத்தல் எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பாடம் 3: பொதுவெளியில்
உணர்ச்சிகளைக்
கையாளப்
பழகுதல்
யாவருக்கும்
நலம்
ஊடக
யுகத்தில் நாம் வாழும் வேளையில் இந்த நேரம், இந்தச் சூழலில் மக்களின் தேவைகளை நிறைவு செய்து பணம் சம்பாதிக்கும் சித்து விளையாட்டுகளை ஊடக வியாபாரிகள் கையில் எடுத்துள்ளனர். ஒரு தனிநபரின் ஒவ்வோர் அசைவையும் பதிவிட்டு காசு பார்க்கமுடியும் என்பதை ஊடகங்கள் நிரூபித்து வருகின்றன. தனிநபர் வாழ்க்கையையும் கூட தகவலாக்கி, செய்தியாக்கிப்பதிவிட முடியும் என்ற நிலையில் அதைக் கண்டு இரசிக்க இலட்சக்கணக்கானோர் வெட்டியாக வெளியே திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தானே இவ்வேளையில் நாம் உணர வேண்டியிருக்கிறது.
தனிப்பட்ட
ஒரு பெரும்புள்ளியின் வாழ்க்கையே ஊடக முதன்மைத்துவம் (Media value)
பெறும் நிலையில் இவ்வாறு இருக்க, பொதுவெளியில் பெரும்புள்ளிகளின் (VIP) சார்பாக
நடைபெறும் கூட்ட நிகழ்வுகளைப் பதிவிடுவது, அதற்கு எதிர்வினை ஆற்றுவது என்பதும் தராசின் சமநிலை தவறாமல் பார்க்கப்பட வேண்டும் என்பதும், அதை அதிகமாகப் பேசி ஊக்கப்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டியது என்பதும் இவ்வேளையில் உணர வேண்டும்.
பெரும்பான்மை ஊடகங்கள் மட்டுமே கோலோச்சிய காலகட்டங்கள் மறைந்து திறன்பேசி (Smartphone) வைத்திருக்கும் யாவரும் ஊடகவியலாளரே என்ற நிலை உருவாகி உள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், சமூகத்தளத்தில் அதைப் பதிவிடுவது குறித்தப் பொறுப்பும் அக்கறையும் எப்போதும் இருந்திடல் வேண்டும்.
ஊடகங்கள்
வாயிலாக உறவுகளுக்கு வாழ்த்து அனுப்பும் பழக்கம் கொண்டவரை நாம் ஊடகவியலாளராகக் கருதவில்லை; மாறாக, கருத்தை உரக்கக்கூற சமூகத்தில் நிகழும் பல
விசயங்களை ஏற்றியும் இறக்கியும், தன் பார்வை, தன் கொள்கை, ஒரு கட்சியின் சார்பு என்பதையெல்லாம் அதிகப்படியாகப் பகிர்ந்துகொண்டு மக்கள் மத்தியில் பரப்பும் நபர்கள் தங்கள் உரிமைகளைத் தாண்டிப் பயணிக்கக்கூடாது என்பதே முதலில் கற்க வேண்டியது.
அடுத்தபடியாக
நடிகர்கள், தலைவர்கள், தனி நபர்கள் போன்றோரின் பல்வேறு தேடல்களில் முதல் நிலையில் இருப்பவர்கள்தான் அன்றாடங் காய்ச்சிகள், இழுத்த இழுப்புக்கெல்லாம் பணிவார்கள் என்ற தவறான நோக்கில் அவர்களை வைத்து தங்கள் பயன்களை அடைய நினைப்பதென்பது இழிவான செயலும் அணுகுமுறையும் என்பதும், அவர்களின் சார்பாக நிற்காமல் அவர்களது துயரங்களில் ஓடி ஒளிந்து கொண்டு, தன் சார்பை ஊடகங்கள் வாயிலாக நியாயப்படுத்துவது என்பதும் எவ்விதத்தில் ஏற்புடையது?
ஊடகப்
பதிவுகள் மிக வேகமாகப் பகிரப்படும் இச்சூழலில் நட்பை, அன்பை, மனிதநேயத்தை, நாடாளும் நல்ல கொள்கைகளை, தனிப்பட்ட வெற்றிகளை, குடும்ப/சமூகக் கொண்டாட்டங்களைப் பகிர்தல் எல்லாருக்கும் பொருத்தமான ஒன்று. துயரச் சம்பவங்களைக் காட்டிலும் அதை மீண்டும் மீண்டும் பதிவிட்டு மக்கள் மனத்தில் வெறுப்பை, வன்மத்தை விளைவிக்கும் நபர்களை தீநுண்மிகளைப் (virus) போலவே கருதித் தள்ளி நிற்க நினைப்பதும், பதிவுகள் எல்லை மீறும் வேளையில் தேவைப்பட்டால் இவர்கள் சட்டத்தின் முன் கொணரப்பட வேண்டியவர்கள் என்பதும் சமூக அமைதியைப் பாதுகாக்கும்.
இறுதியாக,
கரூர் துயர் நிகழ்வு இனியும் தொடரக்கூடாது என்பதை உறுதியாக மனத்தில் ஏற்போம். பொறுப்புள்ள குடிமக்களாக வாழப் பழகுவோம்.
நமக்கு மிகவும் நெருக்கமானதாகவும், நம் பணிக்கு மிக முக்கியமானதாகவும் இருப்பது அச்சு ஊடகம். இன்றைய டிஜிட்டல் உலகில் அச்சு ஊடகத்தின் தொடர்பை நிலைநிறுத்துவதும், அவை எதிர்கொள்ளும் சவால்களைக் குறித்து நாம் சிந்திப்பதும் காலத்தின் தேவையாகும்.
இன்று
ஒரு கருத்து நம் சிந்தைக்குள் செல்வதற்கு முன்னதாகவே அவை வேகமாகப் பரவும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செய்திகள் பத்திரிகை அலுவலகங்களை வந்தடைவதற்கு முன்னதாகவே சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. செய்திகள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஊடகம் வழியாகப் பரவிவிடுகின்றன. நிமிடத்திற்கு எண்ணிலடங்காத வகையில் செய்திகள் பெருகுகின்றன. பெரும்பாலும் பொய்யான செய்திகள் ‘முக்கியச் செய்தியாக’
மாற்றப்படுகின்றன.
இதனால் உண்மைச் செய்திகள் வெளி உலகத்திற்குத் தெரியாமலேயே போய்விடுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் கூட நம் கத்தோலிக்க அச்சு ஊடகம் உண்மையை உரைக்கும் ஊடகமாக, மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஓர் ஊடகமாகத் திகழ்கிறது என்பதில் ஐயமில்லை.
ஆன்மிகம்,
கல்வி, சமூகப்பணி வாயிலாக உலகை வடிவமைக்கும் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் திரு அவை, இந்த வியத்தகு மாற்றங்களை அமைதியாகப் பார்க்கத் துணியுமோ? “இந்த நிகழ்வுகளின் பிரதான ஓட்டத்திலிருந்து திரு அவை தனியாக விலகி நிற்கவேண்டும் அல்லது தன்னைத் தனிமைப்படுத்த முயற்சிக்கவேண்டும்” என்று
கூறுவதற்குப் பதிலாக, மனித முன்னேற்றத்தின் மையத்தில்தான் திரு அவை இருக்க முடியும். பிற மனிதர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதும், அவற்றைப் புரிந்துகொண்டு, நம்பிக்கையின் ஒளியில் அவற்றை விளக்குவதும் அவசியம்.
“மனிதகுலத்தின் நன்மைக்காகவும், உலகத்திற்கான கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவது கடவுளின் உண்மையுள்ள மக்களின் கடமையாகும். ஒவ்வொரு நபரின் மனித மற்றும் உன்னதமான வாழ்வுக்குப் பணிபுரிய கணினி யுகத்தின் முழுத் திறனையும் பயன்படுத்துவதன் வாயிலாக, அனைத்து நன்மைகளின் ஊற்றான தந்தைக்குப் புகழ் சேர்க்கவேண்டும்” என்கிறார்
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் (1990).
1. அச்சு ஊடகத்துறையில் முன்னணியிலிருந்த
கிறித்தவச் சமூகம்
ஒரு
காலத்தில் இந்தியாவில் அச்சு ஊடகத்துறையில் திரு அவை முன்னணியில் இருந்தது. வட்டார மற்றும் உள்ளூர் மொழி வெளியீடுகளுக்குப் பணி செய்வதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் அச்சகங்களைத்
தொடங்கியது கிறித்தவச் சமூகமே. கிறித்தவ மறைப்பணியாளர்கள் உள்ளூர் மொழிகளில் பல இதழ்களைத் தொடங்கினர்
என்பது குறிப்பிடத்தக்கது.
2. அச்சின் நீடித்த மதிப்பு
அச்சு
என்பது வெறும் காகிதத்தில் உள்ள மை அல்ல; அது
நிலைத்தத்தன்மை, நம்பிக்கையூட்டும் தன்மை மற்றும் கருத்துச் செறிவுமிக்க உள்ளடக்கத்தைக் குறிக்கிறது. ஓர் அச்சுப்பக்கம் நம்மை எளிதாகப் படிக்க வைக்கவும் சிந்திக்கவும் அழைக்கிறது. திரைச்சுற்றல்மீது (Scrolling) அடிமையாகிவிட்ட
உலகில், அச்சிடப்பட்ட வார்த்தைகள் சிந்தனையின் செயலாக மாறுகிறது. அச்சிடப்பட்டவை நம்பிக்கைக்குரியதாக, தேர்வு செய்யப்பட்டதாக மற்றும் சரிபார்க்கப்பட்டதும் பொறுப்புள்ளதுமாக இருக்கிறது. நமது கத்தோலிக்க நிறுவனங்கள் திரு அவைச் செய்தி மடல்கள், மறைப்பணி இதழ்கள் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றுவது இந்த அச்சு ஊடகமே. எனவே, இவை வெறும் வெளியீடுகள் அல்ல, அவை உயிருள்ள வரலாறுகள்.
3. நாம் எதிர்கொள்கின்ற சவால்கள்
இன்று
அச்சு ஊடகம் எதிர்கொள்கின்ற சவால்களை மறுக்க இயலாது. குறைந்து வரும் சந்தாதாரர்கள், அச்சுக்கான அதிகச் செலவுகள், கவன நேரம் குறைந்து வருதல், மேலும் பெருகி வரும் டிஜிட்டல் தளங்கள் இவற்றால் அச்சு ஊடகம் பெரும் சவால்களைச் சந்திப்பது உண்மைதான். இளைய தலைமுறையினர் அடிக்கடி நம்மிடம் கேட்பது: ‘என் கைப்பேசியில் எல்லாம் இருக்கிறபோது அச்சு எதற்கு?’ விளம்பரதாரர்களும் இன்று எளிதான சேவைகளுக்காக டிஜிட்டல் தளங்களை நோக்கியே நகர்ந்து வருகின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. இவை யாவும் உண்மையான சவால்களே. இருப்பினும், இந்தச் சவால்கள் மீண்டும் நாம் புதிய முயற்சிகளில் முன்னோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்புகளாகும்.
அச்சு
மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் இரண்டுமே சந்தை சக்திகளின் பிடியில் இருக்கின்றன. இன்று ஊடகங்கள் சந்திக்கும் போராட்டங்கள் இவை. ஆனால், சவால்கள் என்பது எப்போதுமே சுயமாற்றத்திற்கான வாய்ப்புகளே. ஊடகங்கள் மெருகூட்டப்பட்ட கவர்ச்சி உலகம் மற்றும் புகழ் வேட்டையின் பின்செல்கின்றன. மேலும், அவை தங்களைக் காத்துக்கொள்வதற்காக ஆதிக்கச் சக்தியினர்களின் கட்டுப்பாட்டுக்குள் அடிமையாகிவிட்டன. தேசிய விடுதலைப் போராட்டத்தில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற அரசமைப்பு விழுமியங்களை முன்னெடுத்ததில் அச்சு ஊடகம் வகித்த பெருமைக்குரிய பங்கை நாம் மறந்துவிட்டாலும், இன்று அவை சக்திவாய்ந்தவர்களால் ‘வாங்கப்பட்டு’ கட்டுப்படுத்தப்படும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுபோல் தோன்றுகிறது. மாபியா தலைவர்களைப் புகழ்ந்துரைத்து, அவர்களுக்கு அரசியல் மரியாதை அளிக்க முயலும் போக்கை யாராலும் மன்னிக்க இயலாது. குற்றவாளிகள் மகிமைப்படுத்தப்பட்டு கதாநாயகர்களாக எடுத்துக்காட்டப்படுகின்றனர்.
வணிக நலன்களால் வழிநடத்தப்படும் சில அச்சு ஊடகங்கள், முன்பு பளபளப்பான பத்திரிகைகளின் பாதுகாப்பிற்காகக் கருதப்பட்ட கவர்ச்சி, வதந்திகள் மற்றும் பாலியல் ஆகியவற்றை மட்டுமே விற்பனை செய்கின்றன.
கடந்த
காலத்தின் அடையாளமாக இருந்த அச்சு ஊடகங்களில் தொழில்முறைத் தலைமை பலவீனமடைந்து வருவதாகவும் மறைந்து வருவதாகவும் தெரிகிறது. தொழில்முறை பத்திரிகையாளர்களின் ஒருங்கிணைந்த மனசாட்சியைப் பலவீனப்படுத்தும் வகையில், குறுகிய பல்வேறு சுயநல அடிப்படையிலான பத்திரிகையாளர்கள் சங்கங்கள் உருவாகிவிட்டன. இதன் விளைவாக, நீதிமன்றங்களின் கண்டனங்களும், இந்தியப் பத்திரிகைக் கவுன்சிலின் எச்சரிக்கைகளும்கூட ஊடகங்கள் தங்கள் பாதையைத் திருத்துவதை உறுதிசெய்ய முடியாத நிலையில்தான் உள்ளன.
4. செயல்பாட்டிற்கான பாதைகள்
இன்று
சவால்களை நாம் எவ்வாறு முறியடிப்பது? நாம் எடுக்கவேண்டிய பாதைகள் என்ன?
•
அச்சு ஊடகம் சிறந்ததாகச் செய்யக்கூடியவற்றை நம்பிக்கையுடன் செய்யவேண்டும். நம்முடைய பதிப்புகள் ஆழமான சிந்தனைகளுக்குரிய இடமாக இருக்கட்டும். நமது வெளியீடுகள் நம்பிக்கையின் சாட்சியங்களாகவும், மனித உணர்வுகள் மற்றும் மனித உரிமைகள் அரசமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்துவதாகவும் அமையவேண்டும். இவை அனைத்தும் ஒரு குறுஞ்செய்திக்குள் குறைக்க முடியாத கலையாக இருக்கவேண்டும்.
•
இவை மிகுந்த கவனத்துடன் சேவை புரிவதாக இருக்கவேண்டும். கத்தோலிக்க அச்சு ஊடகம் முக்கியமான நம் சமூகங்கள், பங்குகள், மறைமாவட்டங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில், இங்கு நிகழும் நம் செய்திகள் பிற ஊடகங்களில் எதிரொலிக்கப்படுவதில்லை. சாதாரண நம்பிக்கையாளர்கள், முன்னோடிகள், திருநிலை-பொதுநிலைப் பணியாளர்கள், சமூகப் பணியாளர்கள் ஆகியோரின் செய்திகளை நாம்தாம் எடுத்துரைக்கவேண்டும்.
•
அச்சுக்கலை ஒரு சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட வேண்டும். அச்சுக்கலையும் எண்ணிமக்கலையும் ஒன்றோடொன்று தொடர்புடையதே. டிஜிட்டலுடன் அச்சு போட்டியிடவில்லை; மாறாக, இது அதை நிறைவு செய்கிறது. ஓர் இதழில் ‘QR’ குறியீடுகள்
மூலம் வீடியோக்கள், அலைவரிசைகள் அல்லது பங்கு நிகழ்வுகளுடன் இணைக்கலாம். அச்சு என்பது அடிப்படையில் அடித்தளம்; டிஜிட்டல் என்பது விரிவாக்கம். அச்சு என்பது அமைப்பு; டிஜிட்டல் என்பது அதன் செயல்.
5. நிலைத்தன்மை மற்றும் படைப்பாற்றல்
நிலைத்தன்மை
குறித்து நாம் வேறுபாடாகச் சிந்திக்கவேண்டும்:
• சந்தாக்கள்
மற்றும் உறுப்பினர் சேர்க்கைகள் பரிவர்த்தனைகளாக அல்ல, உறவுகளாக வளர்க்கப்படவேண்டும்.
• சிறப்பு பதிப்புகள், சேகரிப்பாளர் இதழ்கள், பக்தி வழிகாட்டிகள், மேய்ப்புப்பணி கடிதங்களின் தொகுப்புகள் இவை பணிகள் மற்றும் வருவாய் வழிகளாக இருக்கலாம்.
• நிகழ்வுகள், கருத்தரங்குகள், இளைஞர் போட்டிகள், குழந்தைகளுக்கான பக்கம் மேலும் உந்துதல் தரும் அறிவுத் துணுக்குகள் போன்றவற்றை நம் அச்சு முயற்சிகளுடன் இணைத்தால், அவை பத்திரிகையை மக்களின் வாழ்க்கையில் ஓர் உயிருள்ள இருப்பாக மாற்றும்.
6. அச்சுப்பணி - ஒரு சமூகத்
தொண்டு
முக்கியமாக
நாம் நினைவில்கொள்ள வேண்டியது: நம் அச்சு ஊடகம் ஒரு வணிக முயற்சி மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தொண்டு. அது ஒரு சமயப் போதனை; அது ஓர் உருவாக்கம்; அது ஓர் உண்மைக்கான பணி. ஒரு கத்தோலிக்க நாளிதழ் அல்லது இதழ் என்பது வெறும் தகவல்களுக்காக மட்டுமல்ல, ஊக்கமளிக்க, உயிரளிக்க, மாற்றத்தைக் கொண்டுவர அமைந்தது. அது வெறும் நிகழ்வுகளை உள்ளடக்குவதில்லை; மாறாக, அது நம்பிக்கையின் ஒளியில் அவற்றை விளக்குகிறது. இது சிக்கல்களை மட்டும் தெரிவிக்காது, நம்பிக்கையின் பக்கம் வழிகாட்டுகிறது.
7. மீண்டும் கண்டுபிடிப்பதற்கும்
பிறரை
ஒளிர்விப்பதற்குமான
ஓர்
அழைப்பு
டிஜிட்டல்
புயல் உண்மையாகவே உள்ளது. அது அனைத்தையும் கவர்ந்திழுக்கும் சக்தியாக மாறியுள்ளது என்பதில் ஐயமில்லை. நம் பதில் என்ன? அச்சை விலக்குவது அல்ல; அதன் அழைப்பை மீண்டும் காணப்படச் செய்தல். அதாவது, தவறான தகவல்களால் நிரம்பிய காலத்தில் நம்பிக்கைக்குரிய சாட்சியாக, திசைதிருப்பும் உலகில் சிந்தனையைத் தூண்டும் வெளிப்பாடாக, முழக்கங்களுக்கு மத்தியில் ஒரு மென்மையான குரலாக அச்சு ஊடகம் அமையவேண்டும். நம் அச்சு ஊடகம் மறைப்பணியின் ஆழம், அதன் அழகு, நம்பகத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு தொண்டுப் பணியாக மாறக்கூடும் எனில், அது டிஜிட்டல் யுகத்தில் மூழ்கிவிடாது, தனித்து ஒளி கொடுக்கும் பேரொளியாக அச்சு ஊடகம் அமையும்.
வத்திக்கானில்
நடைபெற்ற நோபல் பரிசு பெற்றவர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் விடுத்த அழைப்பு எண்ணிப்பார்க்கத்தக்கதே: “இது மனிதகுலத்தின் நலனுக்காகச் செயல்படும் முறைகளை வடிவமைக்க வேண்டிய பொறுப்பை மனிதர்கள் ஏற்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இது சமூகத்தின் மேம்பாட்டிற்கும் சமூக ஒற்றுமைக்குமான முறைகளையும் கட்டமைக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.”
எனவே,
நம் இதயங்களில் அச்சிடப்பட்ட வார்த்தை “என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு; என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திபா 119:105) எனும் தூய வார்த்தையை நம் உள்ளங்களில் ஏற்று, கத்தோலிக்கத் தொடர்பாளர்களாகத் துணிவுடனும் படைப்பாற்றலுடனும் நம்பிக்கையுடனும் முன்னே செல்வோம்.
- மொழியாக்கம்:
அருள்பணி. ஜெ. ஞானசேகரன்
ஒருமுறை நண்பன் ஒருவனோடு உரையாடிக் கொண்டிருக்கும்போது, “உனக்கு உடல் நிலை சரியில்லை என்றால் என்ன செய்வாய்?” என்று கேட்டேன். “மருத்துவரைச் சந்திப்பேன்” எனப் பதிலளித்தான். “சரி, மனம் சரியில்லை என்றால்?” என்றேன்.
அமைதியாய்
என்னை வெறித்துப் பார்த்தான்.
உடல்நிலை
சரியில்லை என்றால், மருந்து கொடுத்து, மருத்துவரிடம் அழைத்துச் சென்று நம்மை வளர்த்தவர்கள், மனம் சரியில்லை என்றால், என்ன செய்வது என நமக்குச் சொல்லித்
தரவே இல்லை. அத்தகைய சூழல்களில், நம்மில் பலர் நண்பர்களிடம் பகிர்வோம் அல்லது அமைதியை விரும்புவோம் அல்லது வாழ்வின் ஓட்டத்தில் நம் மனம் இருக்கும் நிலையைக் கூட பொருள்படுத்தும் சொகுசு நம்மில் பலருக்கு அமைவதில்லை. ஆனால், மீண்டும் அதே மனநிலை என்றோ உருவாகும்; மீண்டும் அதே சுழற்சி. நாம் தொடர்ந்த அதே ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருப்போம். பல நேரங்களில் நிம்மதியின்றி
வாழ்வதுதான் மனித வாழ்வின் இயல்பு என நம்மை நாமே
தேற்றிக் கொண்டு மனசஞ்சலங்களோடு வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.
மனிதர்: பன்முகப்
பார்வை
ஒரு
தனிமனிதரை மூன்று முக்கியக் கூறுகளாகப் பிரிக்கலாம்: 1. உடல், 2. மனம், 3. ஆன்மா. உடல்நலனில் ஏதேனும் மாற்றம் ஏற்படும்போது, அதைக் கவனிக்க சிறுவயது முதலே நாம் பயிற்றுவிக்கப்படுகின்றோம்.
மருத்துவம் அதற்கு உதவுகிறது. ஆன்ம நலனைப் பேண, பல நேரங்களில் நாம்
பின்பற்றும் மதங்கள் நமக்கு வழி கூறுகின்றன. சமய நம்பிக்கையற்றவர்களுக்கும் கூட அவர்கள் தாங்கி நிற்கும் கொள்கைகள் உதவுகின்றன. ஆனால், மனநலனைப் பற்றி மிக அரிதாகவே நாம் அறிந்திருக்கின்றோம். இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் கூட மன அழுத்தத்தைப் (Stress)
பற்றிப் பேசுகின்றனர். மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
பல நேரங்களில் மன நலனை, நாம் மனநலம் குன்றியவர்களோடு மட்டும் தொடர்புபடுத்தத் தொடங்கிவிடுகின்றோம். ஆனால், மனநலம் என்பது, மனிதனாய் பிறந்த எவருக்கும் உரியது.
வாழ்வுமுறை மாற்றமும்
மனநலமும்
மனநலம்
பற்றிய நமது புரிதல் மிகவும் குறைவுதான். முந்தைய தலைமுறைக்கு அதைப் பற்றிய அறிவு ஒரு தேவையாகவே இருந்ததில்லை. ஆனால், இன்று அது ஓர் அவசியத் தேவை. அன்றைய வாழ்வுமுறை மனநலனைப் பேணுவதற்கான அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கியிருந்தது. பள்ளி முடித்து வீடு திரும்பும் குழந்தைகள் பெரும்பாலும் நடந்தோ, மிதிவண்டியிலோ பயணித்தனர். நண்பர்களோடு இணைந்த அந்தப் பயணம், மாலை நேர விளையாட்டு எனப் பல்வேறு காரணிகள் குழந்தைகளின் மன அழுத்தத்தைப் போக்கும்
இயற்கைக் காரணிகளாய் அமைந்திருந்தன. பெரியவர்களும், தங்கள் நிலம் சார்ந்த, இயற்கை சார்ந்த பணிகளையே செய்து வந்தனர். குடும்பங்கள், கூட்டுக் குடும்பங்களாக, குறைந்தது தாத்தா, பாட்டியுடன் கூடிய குடும்பங்களாக இருந்தன. அங்குப் பணிப்பகிர்வு அதிகம் இருந்தது. அதோடு அன்றைய கிராம அமைப்பு, உறவுப் பரிமாற்றம், முறையான உறக்கச் சுழற்சி (Sleep Cycle), விழாக்கள்,
வழிபாடுகள் எனப் பல கூறுகள் ஒரு
மனிதனின் மனநலனைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றின. ஆனால், இன்றைய காட்சி அதிலிருந்து முற்றும் மாறுபட்டது.
மன
அழுத்தம் மனிதருக்குத் தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ஆனால், அன்றைய வாழ்வியல், அந்த மன அழுத்தத்தை இயல்பாக
வெளியேற்றும் வாய்ப்புகளைக் கொண்டிருந்தது. காலை எழுந்தவுடனேயே அன்றைய நாளுக்கான தயாரிப்பு, நாள் முழுவதும் கல்வி அல்லது பணி, மீண்டும் வீட்டிற்கு வந்தபின் பகல் முழுவதும் செய்த பணியின் தொடர்ச்சி... இந்த ஓட்டத்தில் நம்மில் இருக்கும் மன அழுத்தத்தை வெளியேற்ற
வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போகின்றது. பணி செய்யும் பெண்களின் நிலை இன்னும் கவலைக்கிடம். அவர்களின் அன்றாடப் பணிச்சுமையோடு, குடும்பப் பொறுப்பு அவர்களை மேலும் மன அழுத்தத்திற்கு உட்படுத்துகிறது.
ஆழ்மனத்தில் சேரும் அழுத்தம் எல்லாம் ஒன்று சேர்ந்து நம் இயக்க ஆற்றலை முடக்குகின்றது.
காலத்தின் அறிகுறி
மீண்டும்
பழைய வாழ்க்கைமுறைக்குத் திரும்புவது மட்டுமே, நல்ல மனநலத்துடன் கூடிய வாழ்வுக்கு ஒரே வழியா? “நாங்க அந்தக் காலத்தில...” எனப் பழைய காலத்தை வளமைப்படுத்தி, துக்கம் கொண்டாடுவது எந்த விதத்திலும் நமக்குப் பயன்தரப் போவதில்லை. ஆனால், காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்வதில் மனிதனுக்கு இணை மனிதன் மட்டுமே. அறிவியல் வளர்ச்சியும் விஞ்ஞான சாதனைகளும் அதற்குச் சான்று பகரும். ஏன், ஆன்மிகத்தில் கூட காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப தங்கள் சித்தாந்தங்களை மாற்ற மனித இனம் தயாராகவே இருக்கின்றது.
உடல்நலனில்
தொய்வு ஏற்படும்போது மருத்துவரைச் சந்திப்பதில் அக்கறை காட்டும் நாம், மனநலனில் தொய்வு ஏற்படும்போது மனநல மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ சந்திப்பது நம்மிடையே அதிகம் விரும்பப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. ‘ஆண் அழக்கூடாது’ எனக்
கூறியே வளர்த்த நாம், அவன் அழுவதற்கான காரணம் என்ன எனக் கேட்கத் தயாராகவே இல்லை. அதைப்போன்றே, ஒரு மனிதனின் மன அழுத்தத்திற்குக் காரணமும் நமக்குத்
தெரிவதில்லை.
மனநலத்திற்கான
கசாயம்
தலைவலிக்கு
ஒரு குவளை கசாயமோ, தேநீரோ உதவுவது போல, உளவியலாளர் வில்லியம் கிளாசர் விவரித்த ஒரு வழியைச் சுருக்கமாகக் கூற விழைகின்றேன். கிளாசரின் புரிதலின்படி, எல்லா மனநலன் சார்ந்த பிரச்சினைகளும் அடிப்படையில் உறவுச் சிக்கல்களே! மனிதன் ஐந்து முக்கியத் தேவைகளால் உந்தப்படுகின்றான்: 1. இருப்பு (Survival), 2. அன்பு
மற்றும் சார்ந்திருப்பது (Love & belonging),
3. சக்தி (Power), 4. சுதந்திரம்
(Freedom), 5. மகிழ்ச்சி
(Fun). இவற்றுள்
அன்பு மற்றும் சார்ந்திருப்பதை முதன்மையாகக் கருதுகிறார். ஒருவருக்கு ஓர் ஆழம் மற்றும் அடர்த்தி நிறைந்த உறவு இருக்குமாயின், மற்ற எல்லாச் சவால்களையும் அவரால் எதிர்கொள்ள முடியும். நமக்கு அப்படிப்பட்ட உறவுகள் அல்லது உறவு உண்டா?
இந்தத்
தேவைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகின்றன. இந்தத் தேவைகள் நிறைவு பெறாதபோது ஒரு மனிதன் சலனமடைகிறான். இதற்கு அவர் பரிந்துரைக்கும் கசாயம், தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் (Choice).
மனிதனுக்கு
எல்லாச் சூழலிலும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்கிறது. அவன் எத்தகைய வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கின்றான் என்பதைப் பொறுத்தே அவனது செயல்பாடு அமைகிறது. கோபத்தில் கத்தித் தீர்ப்போரைப் பார்த்திருப்போம். அதேநேரத்தில் நிதானமாய் பதிலிருப்புத் தருவோரையும் பார்த்திருப்போம். இருவருமே கோபத்தில் இருந்தாலும், அந்தச் சூழலுக்கு அவர்கள் தரும் பதில் வெவ்வேறு. அவர்களைக் கோபமூட்டிய சூழலை அவர்களால் மாற்ற முடியாவிட்டாலும், அந்தச் சூழலுக்கான அவர்களின் பதிலிருப்பு அவர்களின் விருப்பமே!
அக்கறையோடு பயணிப்போம்
வேகமாய்
இயங்கிக் கொண்டிருக்கும் நம் அன்றாட வாழ்வில், நம்மை அழுத்தத்திற்கு உட்படுத்தும் சூழலை மாற்ற முடியவில்லை என்றாலும், அந்தச் சூழலுக்கான நமது பதிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் நமது கைகளில் மட்டுமே!
மனநலனின்
முக்கியத்துவத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை அக்டோபர் 10-ஆம் தேதியை அகில உலக மனநல நாளாக அறிவித்திருக்கின்றது. இந்த நாளைச் சிறப்பிக்கின்ற இந்தத் தருணத்தில், நமது மனநலனில் அக்கறை கொள்வதோடு, பிறர் மனநலனிலும் அக்கறை கொள்ள உறுதி ஏற்போம்! உள்மன அமைதி நிறைந்த சமூகத்தைக் கட்டமைப்போம்.
உலகப் பார்வையில் பிரான்சிஸ்-பிறைடா தம்பதியினர் பணக்காரர்கள்தான். அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை, சொகுசுக்கார், ஆடம்பர உடை, ஆபரணங்கள் எல்லாம் அவர்களைப் பணக்காரர்கள் என்றுதான் எல்லாருக்கும் காட்டியது. தெளிந்த குட்டையின் ஆழத்தில் சகதியும் நெகிழியுமாகக் காணப்படுவதுபோல, இந்தப் பணக்கார அடையாளத்தின் ஆழத்தில் வறுமையும் வெறுமையும் மிகுந்து கிடந்தது யாருக்கும் தெரியாது.
அடுத்தவேளை
உணவிற்குக்கூட கஷ்டப்பட வேண்டிய சூழல். திடீரெனப் பறிபோன ஐ.டி. வேலை,
வீட்டு வாடகைப் பாக்கி, நகைகளையும் சொகுசுக் காரையும் விற்றுவிட்ட போதிலும், கழுத்தை நெரிக்கும் இ.எம்.ஐ.
பிரச்சினைகள், வெளியே தலைகாட்ட முடியாத அவல நிலை... என்று பிரான்சிஸ்-பிறைடா குடும்பம் கோடைக்கால சுழல்காற்றில் சிக்கிச்சுழலும் சருகைப் போலானது.
வீட்டிலிருந்த
அனைத்தையும் விற்றாகி விட்டது. கொஞ்ச நாளாகவே ஆன்லைன் ‘சொமாட்டோ’
சாப்பாடுதான்.
அதற்கும் இனி வழியில்லை என்ற நிலை வரும்போது தற்கொலைதான் ஒரே வழி என்ற முடிவை எடுத்தது அந்தக் குடும்பம்.
இன்று
மாலை சாவதற்கான நல்ல நேரம். விஷம் அருந்திச் சாகத்திட்டம் ஒன்று உருவானது.
திருமணமாகி
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள் பிறைடா. சாக முடிவெடுத்த நிலையில் ஒரு புதிய உயிர்! நல்ல செய்திதான். ஆனால், ‘இரண்டு வயிற்றுக்குச் சாப்பாடு போதாதபோது, மூன்றாவது வயிறு தேவைதானா?’ என்ற கேள்வி அவளைப் பசி என்னும் ஆயுதம் கொண்டு தாக்கியது.
மதிய
வேளையாகப் போகிறது. இன்னும் படுக்கையிலிருந்து எழும்பாத தன் கணவன் பிரான்சிசின் அருகில் படுத்துக்கொண்டாள் அவள். தான் கருவுற்றிருப்பதைக் கூறமுடியாமல் முண்டியடித்து வந்த தன் கண்ணீரை அடக்கிக்கொண்டாள். யாரும் இன்னும் காலை உணவு உண்ணவில்லை. காரணம், வீட்டில் உணவு இல்லை. இருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் காலியானது. யாரிடமும் தன் வறுமையைக் கூறி யாசிக்க அவர்கள் மனம் விரும்பவில்லை.
கண்களைக்
கசக்கிக்கொண்டே புரண்டு படுத்த பிரான்சிஸ் ‘இன்னைக்கு நீ ரொம்ப அழகா
இருக்க’ என்று
கூறிக்கொண்டே பிறைடாவின் நெற்றியிலே முத்தமிட்டான். இருவரும் ஒருவர் மற்றவர் அணைப்பில் படுத்திருந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து பிரியாணி வாசம் அவர்களைத் தாலாட்டியது.
தங்கள்
வீட்டில் சாப்பிட ஒரு பாட்டில் விஷம் மட்டும்தான் இருக்கிறது என்ற நிலையில், பிரான்சிஸ்-பிறைடா தம்பதியினர் தங்கள் தற்கொலை முடிவு என்னவாகப் போகிறது என்பதைத் தங்கள் பார்வையினாலேயே பேசிக்கொண்டனர்.
பிறைடா
கனத்த உள்ளத்தோடு ‘நான் பிரெக்னன்ட்டா இருக்கேன்’
என்று பிரான்சிஸின் காதிலே மெதுவாகக் கூறினாள். பிரான்சிஸ் என்ன சொல்வது என்று தெரியாமல், அவள் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பக்கத்து வீட்டுப் பிரியாணி வாசம் அதிகமாக அதிகமாக அவர்களுக்கு அன்று என்றுமில்லாத வகையில் அதிகமாகவே பசித்தது. ‘காலிங்’ பெல் சத்தம் கேட்டது. பிறைடா கதவைத் திறக்க எழுந்து சென்றாள். “புதுசா பக்கத்து வீட்டுல குடிவந்திருக்கோம். அதான் பிரியாணி கொடுத்துட்டுப் போகலாமுணு வந்தேன்” என்று நடுத்தர வயதுகொண்ட பெண் ஒருவர் சிரித்த முகத்துடன் சில பிரியாணி பார்சல்களைக் கொடுத்துவிட்டுச் சென்றாள். அந்தப் பிரியாணி பொட்டலங்கள் அன்றைய நாளுக்கான அவர்களின் பசியை ஆற்றியது.
மாலை
தற்கொலை செய்துகொள்வதற்கான நேரம் வந்தது. ‘காலிங்’ பெல் சத்தம் மீண்டும் கேட்டது. கதவைத் திறக்க எழுந்து சென்றாள் பிறைடா. ஒவ்வோர் அலையும் ஏதாவது ஒன்றை நமக்காகவே கரைசேர்க்கிறது.
மனிதகுலம்
எவ்வளவுதான் துயரப்பட்டாலும் எல்லாக் காலகட்டத்திலும் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பு அத்துயரத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது. அப்படியான மனிதகுலத்தின் அதி நவீனக் கண்டுபிடிப்பை இக்காலகட்டத்தில் ‘செயற்கை நுண்ணறிவு’
என்கிறோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பல்வேறு வகைகளும் பயன்களும் உண்டு. பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவை உரை (text), இசை
(music), காணொளி
(video), குறியீட்டு
மொழி (codes) மற்றும் பட (images) உருவாக்கத்திற்குப்
பயன்படுத்துகின்றனர்.
இவ்வகை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ.’ (Generative
AI) என்று அழைக்கிறோம். இத்தகைய தொழில்நுட்பப் படைப்புகளே இன்று இணையதள உலகில் குவிந்து மலிந்து கிடக்கின்றன.
‘ஜெனரேட்டிவ் ஏ.ஐ.’ தன்
ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டுவதற்கு முன்பாகவே செயற்கை நுண்ணறிவின் அடுத்தகட்டப் பரிணாமம் நம் கண்முன்பாக உலா வருகிறது. இதனை ‘ஏஜென்டிக் ஏ.ஐ.’ (Agentic A.I)
என்று அழைக்கின்றனர். ஒரு நிறுவனத்தின் இலக்கை அடைவதற்கு அந்நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் வேலை செய்யும் அனைத்து முகவர்களும் (Agents) இணைந்து
உழைக்க வேண்டியுள்ளதை நாம் அறிவோம். அதேபோல ஒரு நிறுவனத்தின் வெற்றிக்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, அந்நிறுவனத்தின் பணிகளைச் சரியாகச் செய்து முடிக்க உதவும் தொழில்நுட்பத்தையே ‘ஏஜென்டிக் ஏ.ஐ.’ என்கிறோம்.
இன்று இவ்வகை தொழில்நுட்பம் மருத்துவம், கல்வி, வியாபாரம், பொருளாதாரம், கட்டுமானம் என்று எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
‘ஏஜென்டிக் ஏ.ஐ.’ செயற்கை
முகவர்களைப் (Agentic A.I) பணியமர்த்தி,
சரியான நேரத்தில் சரியான முடிவைத் தன்னிச்சையாக (autonomous) எடுத்துச் செயல்படும் ஆற்றல் கொண்டது. ஜெனரேட்டிவ் ஏ.ஐ. எதிர்வினை
(reactive) ஆற்றும் பண்புகொண்டது. கேட்பதைக் கொடுப்பதோடு தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும். ஆனால், ஏஜென்டிக் ஏ.ஐ. எதிர்வினை
ஆற்றாமல் (pro active) சிந்தித்துச் சரியான
முடிவை எடுக்கவல்லது. இவ்வாறு தன்னிச்சையாகச் செயல்படும் ஏ.ஐ. முகவர்
(Agentic Automation) குறிப்பிட்ட
அலுவலின் நோக்கத்தை ஆய்ந்து அறிந்துகொண்டு அதற்கேற்றார் போன்ற பாணியைக் கையாண்டு நோக்கத்தைத் துல்லியமாக நிறைவேற்றித் தருகின்றது.
எடுத்துக்காட்டாக,
ஒரு மனிதர் வெளிநாட்டிற்குப் பயணம் செல்லவேண்டுமெனில், அவர் சில முகவர்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ஏஜென்டிக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில்
அமெரிக்கா செல்லவேண்டும் என்ற கட்டளைப் பிறப்பிக்கப்பட்டவுடன், ஏ.ஐ. அந்தக்
கட்டளையைப் புரிந்துகொண்டு பிளைட் டிக்கெட் புக் செய்வதிலிருந்து மின்னஞ்சலுக்கு ஒவ்வோர் அப்டேட்டையும் அனுப்புவதுவரை எல்லா வேலைகளையும் ஏ.ஐ. முகவர்களே
பார்த்துக்கொள்கின்றனர்.
இதனால் நேர விரயம் தவிர்க்கப்படுவதோடு, மிக நேர்த்தியாக வேலையும் செய்து முடிக்கப்படுகிறது என்கின்றனர் ஏ.ஐ. நிபுணர்கள்.
மனிதர்களின்
வேலையை ஏ.ஐ. முகவர்கள்
செய்து முடிக்கின்றார்கள் எனில், மனிதர்கள் இனி என்னதான் செய்வார்கள்?